Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

ஒளவை துரைசாமி



ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்
ஒளவை துரைசாமி



 

  ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  1.ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  2.பதிப்புரை

  3.நுழைவாயில்

  4.தண்டமிழாசான் உரைவேந்தர்

  5.திருச்சிற்றம்பலம்

  6.முன்னுரை

  7.ஞானாமிர்த ஆசிரியரும் உரைகாரரும்

  8.ஞானாமிர்தச் செம்பொருள்

  9.நூலாராய்ச்சிக்குத் துணைசெய்த நூல்கள்

  10.அருளியஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  11.ஞான பாதம்

  12.சம்மிய தரிசனம்

  13.பாசபந்தம்

  14.தேகாந்தரம்

  15.பாசச் சேதவியல்

  16.பதி நிச்சயம்

  17.பாச மோசனம்1

 

  நூற் குறிப்பு

  நூற்பெயர் : ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 1

  ஆசிரியர் : ஒளவை துரைசாமி

  பதிப்பாளர் : இ. தமிழமுது

  பதிப்பு : 2009

  தாள் : 16 கி வெள்ளைத்தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 24 + 480 + = 504

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 315/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி

  தி.நகர், சென்னை - 17.

  அட்டை ஓவியம்: ஓவியர் மருது

  அட்டை வடிவமைப்பு: வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா

  ஆப்செட் பிரிண்டர்சு

  இராயப்பேட்டை, சென்னை - 14.

  பதிப்புரை

  ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

  தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

  வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

  இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும்,புலமையிலும்பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்துவிளங்கிய இப்பெருந்தமிழா சானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

  “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

  “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து

  வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்

  தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே

  முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

  என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

  அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

  இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

  தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்

  107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

  நன்றி

  பதிப்பாளர்

  பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!

  பொற்புதையல் – மணிக்குவியல்

  “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்

  மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்

  உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்

  அள்ளக் குறையாத ஆறு”

  என்று பாவேந்தரும்,

  “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே

  பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு

  நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே

  நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்

  கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்

  காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்

  தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே

  தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

  என்று புகழ்ந்ததோடு,

  “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்

  அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே

  புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

  எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

  பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து

  வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

  உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

  பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

  கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

  “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்

  பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,

  கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த

  பெரும்புலமைக் கல்வி யாளர்!

  விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,

  வடமொழிநூல், மேற்பால் நூல்கள்

  நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய

  நற்றமிழ் தழைக்க வந்தார்!”

  என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

  கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

  ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

  ஒளவை நடராசன்

  நுழைவாயில்

  செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

  எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

  எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

  சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இருப்புக் கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

  பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

  சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப் படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

  தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

  ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

  ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை

  நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

  ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

  ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

  அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

  ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

  ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

  “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

  ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

  ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  முனைவர் இரா.குமரவேலன்

  தண்டமிழாசான் உரைவேந்தர்

  உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

  ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

  நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு

  தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

  எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

  “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை

  கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

  நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

  அமைபவன் நூலுரை ஆசிரியன்”

  எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

  உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

  தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.

  எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

  “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவண பெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

  “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்

  ஓதி வெல்ல லுறுவார்களை என்கை

  கோதுகொண்ட வடிவின் தடியாலே

  மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

  என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

  சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்தி களை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

  நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்

  அறிவளித்தான்; சான்றோ னாகி

  ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்

  அவ்வப் போ தயர்ந்த காலை

  ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;

  இனியாரை யுறுவேம்; அந்தோ

  தேயாத புகழான்தன் செயல் நினைந்து

  உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

  எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

  இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

  உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

  “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்

  கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்

  பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை

  வாயார வாழ்த்தாத வாய்”

  எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!

  வாழிய தமிழ் நலம்!

  முனைவர் வேனிலா ஸ்டாலின்

  உரைவேந்தர் தமிழ்த்தொகை

  தொகுதி - 1

  ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  தொகுதி - 2

  சிவஞானபோத மூலமும்சிற்றுரை

  தொகுதி - 3

  சிலப்பதிகாரம் சுருக்கம்

  மணிமேகலைச் சுருக்கம்

  தொகுதி - 4

  சீவக சிந்தாமணி - சுருக்கம்

  தொகுதி - 5

  சூளாமணி சுருக்கம்

  தொகுதி - 6

  பெருங்கதைச் சுருக்கம்

  தொகுதி - 7

  சிலப்பதிகார ஆராய்ச்சி

  மணிமேகலை ஆராய்ச்சி

  சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

  தொகுதி - 8

  யசோதர காவியம்

  தொகுதி - 9

  தமிழ் நாவலர் சரிதை

  தொகுதி - 10

  சைவ இலக்கிய வரலாறு

  தொகுதி - 11

  மாவை யமக அந்தாதி

  தொகுதி - 12

  பரணர்

  தெய்வப்புலவர்

  The study of thiruvalluvar

  தொகுதி - 13

  சேரமன்னர் வரலாறு

  தொகுதி - 14

  நற்றிணை -1

  தொகுதி - 15

  நற்றிணை -2

  தொகுதி - 16

  நற்றிணை -3

  தொகுதி - 17

  நற்றிணை -4

  தொகுதி - 18

  ஐங்குறுநூறு -1

  தொகுதி - 19

  ஐங்குறுநூறு -2

  தொகுதி - 20

  பதிற்றுப்பத்து

  தொகுதி - 21

  புறநானூறு -1

  தொகுதி - 22

  புறநானூறு -2

  தொகுதி - 23

  திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்

  தொகுதி - 24

  செந்தமிழ் வளம் - 1

  தொகுதி - 25

  செந்தமிழ் வளம் - 2

  தொகுதி - 26

  வரலாற்று வாயில்

  தொகுதி - 27

  சிவநெறிச் சிந்தனை -1

  தொகுதி - 28

  சிவநெறிச் சிந்தனை -2

  கிடைக்கப்பெறாத நூல்கள்

  1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

  2.  தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு

  3.  புதுநெறித் தமிழ் இலக்கணம்

  4.  மருள்நீக்கியார் (நாடகம்)

  5.  மத்தவிலாசம் (மொழியாக்கம்)

  திருச்சிற்றம்பலம்

  பதிப்புரை

  வாகீச முனிவர் எழுதிய ஞானாமிர்தம் எனப்படும் இந்த நூல் பழைய உரையுடன் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வெளிவந்தது, அக் காலத்தில் இந்த நூலை ஆராய்ந்து வெளியிடும் பணியை மேற்கொண்டிருந்த சான்றோர் சைவத்திரு. சேற்றூர் சுப்பிர மணியக் கவிராயர் அவர்கள் ஆவர். கிடைத்த சில ஏடுகளைக் கொண்டு, அவர்கள் அரும்பாடுபட்டு அந்நாளில் அதனை வெளியிட்டது மிகவும் பெருமைக்குரிய தொண்டாகும். சங்க நூல் வெளியீடுகளும், கல்வெட்டிலாகா வெளியீடுகளும் போதிய அளவு வெளிவராதிருந்த காரணத்தால்; அவர்கள் இந்நூற் பதிப்புக்கெனச் செய்திருக்கும் உழைப்பின் சிறப்பு இன்று நினைக்கும் போது மிக்க இறும்பூது தருகிறது.

  அந்நாளில் சித்தாந்த சைவத்துக்குரிய பழந் தமிழ் நூல்களுள் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்துக்குக் காலத் தால் முற்பட்டதாகிய இதனைச் சைவர்களில் பலர் பயிலுவதும் அருகியிருந்தது. சித்தாந்த சாத்திரம் பதினான்கினும் இது பழமையான தேயன்றி நடையிலும் சிறிது கடினமுடைய தாதலால் பயில்வோர் பெருக இல்லாமையில் வியப்பில்லை. சிவஞான போதத்துக்கு உரைகண்ட பாண்டிப்பெருமாளும் சிவஞான யோகிகளும் இந்நூலைப் பெரிதும் மேற்கொண்டு உள்ளனர். சிவஞான சித்தியார்க்குள்ள அறுவகையுரையினும், சிவப்பிர காசத்துக்கு மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த நல்லுரை யினும் ஞானாமிர்தப் பகுதிகள் மேற்கோளாக வருவதை நாம் பார்க்கி றோம். அப் பெரியோர்கள் காலத்தில் இந்நூல் நன்கு பயிலப் பெற்றுவந்தது என்றற்குப் பிறிதொரு சான்று, சிவப் பிரகாசப் பெருத்திரட்டு என்னும் தொகை நூலின் கண், இந்த ஞானாமிர்தத் திருவகவல்கள் பல கோத்துத் தொகுக்கப்பட்டுள்ளமையாகும். பெருந்திரட்டைத் தொகுத்த ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகட்கு முன்னிருந்தவரென அதன்முகவுரை ஒருவாறு கூறுமாயினும், அதன் காலம் முந்நூறு ஆண்டுகட்குக் குறையாதென்று கொள்வது பொருந்தும். அத்தொகுப்பில் ஞானாமிர்தப்பாட்டுக்கள் உரை யுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்டிருப்பதே இம் முடிபுக்குத் துணை செய்கிறது. இனி முத்தி முடிவு என்னும் பழைய நூலொன் றினும் ஞானாமிர்தத்தின் பகுதிகள் சில காட்டப்படுகின்றன. இவ்வாற்றால் ஞானமிர்தம் என்னும் இந்த நூல் முந்நூறு ஆண்டு கட்குமுன், சமய தத்துவ ஆராய்ச்சி யுலகில் மிக்க நன்மதிப்பும் பயிற்சியும் பெற்று நிலவிவந்தது என்பது தெளிவாம்.

  சித்தாந்த நூற்பயிற்சி எனக்கு வாய்த்தபோது ஞானாமிர்தக் குறிப்புக்கள் சில சிவஞானபாடியத்தில் வரக்கண்டு. நூலை முழுவடிவில் படிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டாவ தாயிற்று. ஆகவே அதனை வாங்கிப் படித்தபோது, அதன் நலம் முற்றும் துய்ப்பதற்கு உரிய தமிழறிவு என்பால் இல்லாமை மிக்க இடரை விளைத்தது. அதனால் சங்க நூற்பயிற்சியில் என்கருத்துப் படர்ந்தது. ஒரு சில நூல்களைப் பயின்றபின் ஞானாமிர்தத்தின் தமிழ் நலம் எனக்கு இன்பம் செய்வதாயிற்று.

  1932- ஆம் ஆண்டுக் கோடைவிடுமுறைக்கு யான் என் ஊராகிய ஒளவையார்குப்பம் சென்றிருந்த போது, வீட்டில் ஒருமூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன். அவற்றுள் ஒரு ஏட்டின்மேல் “பெருமண்டூர்ச் சீபாலன் எழுதியது” என்ற குறிப்பு இருக்கக் கண்டு அதனைப் பிரித்துப் பார்த்தேன். ஏடு ஒன்றை எடுத்துப் படிக்கவும், அதன்கண், “இன்னிசை எழுவர்ப் பயந்தோள்- சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்” என்ற உரை இருக்கக்கண்டு, இது ஞானாமிர்தம் என்று அறிந்து அதனைப் படி எடுத்து அச்சுப் பிரதியோடு ஒப்பு நோக்கினேனாக, வேறுபாடுகள் பல இருப்பது புலனாயிற்று அதுகொண்டு ஞானாமிர்தத்துக்கு விளக்கவுரையொன்று எழுதுவது எனத் துணிந்து, முதற்கண் சில பாட்டுக்கட்கு உரை எழுதிச் சென்னைச் சைவசித்தாந்த சமாசத்தின் வெளியீடான சித்தாந்தம் என்னும் திங்கள் இதழில் வெளியிட்டேன். அதனைப் பாராட்டி இன்புறுத்திய அப்போதைய சமாச அமைச்சரும் அதன் வளர்ச்சிக்கெனத் தமது வாழ்வு முற்றும் உரிமை செய்தொழுகிய பெருஞ் சைவப் புரவலருமாகிய திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் B.A., B.L., அவர்கள், முதன் முதலாகக் குன்றக்குடியில் திரு. C.K. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ஞானாமிர்தம் என்பது பொருளாக என்னைச் சொற்பொழிவு செய்யுமாறு வற்புறுத்தினார்கள். அச்சொற் பொழிவைக் கேட்டிருந்த சித்தாந்த சபரம். பழனி. ஈசான சிவாசாரியார் அவர்கள் என்னை அன்போடு நோக்கி, “இரும்புக் கடலையைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள். திரு. பண்டித மணியவர்களும் திரு. சிவக்கவி மணியவர்களும் இந்த ஞானாமிர்தத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு பணித்தார்கள். அக்காலை அங்கே வந்திருந்த தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர் ந. சிவகுருநாதப் பிள்ளையவர்கள் திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள இராசவல்லி புரத்துச் செப்பறை மடத்தில் ஒரு ஞானாமிர்த ஏடு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

  திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு அப்போது அமைச்சராக இருந்த திரு. திருவரங்கம் பிள்ளை யவர்கள் துணை செய்யச் செப்பறைக்குச் சென்று அங்கே செப்பறை மடத்து அதிபராக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ அழகிய கூத்த தேசிகரைக் கண்ட போது அவர்கள் உரையுடன் கூடிய ஞானா மிர்த ஏடு ஒன்றினைத் தந்தார்கள். அதுபெற்றதும், புத்துரை எழுதக் கருதிய எண்ணத்தை விடுத்துப் பழைய வுரையினையே நன்கு ஆராய்ந்து வெளியிடுவது எனக் கருதி மேலும் ஏடுகள் தேடத் தொடங்கினேன். ஏடு தேடிச் சேர்க்கும் முயற்சி வீண் போகவில்லை. மேலும் இரண்டு ஏடுகள் கிடைத்தன. அவை வருமாறு.

  1. பெருமண்டூர்ச் சீபாலன் எழுதிய ஏடு. இது நூல் முழுவதும் உரையுடன் கூடியது; ஆயினும் 67- ஆம் அகவல் முதல் 75- ஆம் அகவல் முடியச் சில அடிகட்குக் குறிப்புரையும், சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கொண்டிருந்தது. பல இடங் களில் உரை செந்தமிழ் நடையில் இயன்று ஏனை உரைகளிலும் சில பல இடங்களில் வேறுபட்டிருந்தது.

  2.

  3. திருவெண்ணெய்நல்லூர் ஏடு : திருவெண்ணெய் நல்லூர்க்கு அண்மையில் சிறுமதுரை என்ற ஊரில் கிராமக் கணக்கராயிருந்த என் மாமன் திரு சொக்கலிங்கம் பிள்ளைய வர்கள் வீட்டிற்கு யான் ஒருகால் சென்றிருந்த போது. “திருவெண்ணெய்நல்லூர் மடத்துக் குருசாமியார் ஏட்டிலிருந்து எழுதியது” என்ற குறிப்புடன் இவ்வேடு எனக்குக் கிடைத்தது. இதன்கண் இருந்த உரை பெரும்பாலும் கண்ணழித் துரையே யாகும். “கால் கொடுத்து” என்று தொடங்கும் அகவல் முதல் “கழிபெருந் துன்பம் ” என்னும் அகவல் முடிய இதன்கண் இருந்தன. சில அகவல்களின் உரைமுடிவில் ஏனை ஏடுகளில் காணப்படாத இலக்கணக் குறிப்புக்களும், உரையிடையே கிரந்தச் சொற்களும் சொற்றொடர்களும் இதிற் காணப்பட்டன.

  3.  ஏனாதிவாடி ஏடு. ஒருகால் விழுப்புரத்தில் யான் என் தமையன் மனைக்குச் சென்றிருந்தபோது ஏனாதிவாடி யென்னும் ஊரைச் சேர்ந்த திரு. இராமச்சந்திரராவ் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரோடு நட்புற்று அளவளாவி அவர் மனையில் இருந்து இந்த ஏட்டினைப் பெற்றேன். இதன்கண் முதல் மூன்று அகவல்களும் இறுதியில் இரண்டு அகவல்களும் எழுதிய ஏடுகள் சிதைந்து மறைந்து போயின. “அறப்பயன் தீரின்” எனத் தொடங்கும் அகவலும் அதனை அடுத்து முன்னும் பின்னும் உள்ள அகவல் களும் இராமபாணப்பூச்சிக்கு இரையாகிச் சிதைவுற்றிருந்தன. உரையிடையே கிரந்தத் தொடர்கள் ஆங்காங்கு அருகிக் காணப் பட்டன.

  4.  செப்பறை ஏடு. இது நூல் முழுதும் உரையுடன் கூடியது. “அறப்பயன் தீரின்” என்று தொடங்கும் அகவலும் அதன் உரையும் எழுதிய ஏடுகள் இதன்கண் காணப்படவே இல்லை. கிரந்தச் சொற்களால் காணப்பட்டவை இந்த ஏட்டில் தூய தமிழிலே எழுதப்பட்டிருந்தன.

  செப்பறை ஏடு கிடைப்பதற்கு முன்பே கிடைத்த ஏடுகளைப் பெருந்திரட்டும் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடும் ஆகிய இரண்டனோடும் ஒப்பிட்டு ஒழுங்கு செய்து முடிந்த காலையில், யான் திருப்பதி திருவேங்கட முடையான் கீழ்க்கலைக் கல்லூரியிலிருந்து விடுதலை பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சித்துறை விரிவுரையாளனாகப் பணிமேற் கொண்டு வந்துசேர்ந்தேன். அந்நிலையில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக விளங்கிய சைவத் திரு. கா. சுப்பிரமணியம் பிள்ளையவர்கள் செப்பறை யேட்டோடு ஒப்பு நோக்கி வேண்டிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளியிட வேண்டு மெனப் பணித்து இதற்குத் துணையாக என் நண்பர் வித்துவான் திரு. க. வெள்ளை வாரணம் அவர்களை உதவினர். அவருடைய கூர்த்த அறிவும் சீர்த்த புலமையும் உண்மைப் பாடங்களைக் கண்டறிதற்குப் பெருந்துணை செய்தன. ஞானாமிர்த ஆசிரியரைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது கல்வெட்டுக் களைப் படித்தறிதற்கும் இடையிடையே எழும் ஐயங்களை அகற்றுதற்கும் உடன் பிறந்தார் போல உறுதுணைசெய்த சைவத் திரு T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களை நினைக்குந் தோறும் என் மனம் இன்பத்தால் ஏற்றம் பெறுகிறது.

  தமிழகத்தின் மனத்தாமரையாக விளங்கும் தில்லைப் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கில் வரும் இள மாணவர் கட்குப் பல துறைப்பட்ட கலை நலங்களை வழங்கிப் பண்புமேம் பட்டுத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறை என்னும் பெருங்கிளையிற் பழுத்த நறுங்கனியாக இந்த ஞானாமிர்தம் உரையும் ஆராய்ச்சிக் குறிப்பும் பிறவும்கொண்டு வெளிவருகின்றது இந்த அருஞ்செயற்குச் செல்வச் செவிலியாய் வேண்டும் பொருள் தந்து புகழ் பரவி விளங்கும் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் காசி வாசி ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் வழி வந்து சிறக்கும் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருள்புரிந்த வண்ணம் உள்ளார்கள். அவர்களது அருட்செயற்கு அறிவு வளம்படைத்த நம் தமிழகம் தன் நன்றியினை என்றும் மறவாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து செய்த இத்தமிழ்ச்சைவப் பணியினை, இன்றுயான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இருந்துகொண்டே ஆற்றுமாறு வேண்டும் உதவிகளைச் செய்து ஊக்கிவரும் கல்லூரி நிறுவிய முதல்வரும், கலைவளர்க்கும் பெருஞ்செல்வரும் தமிழ் வள்ளலுமாகிய சைவப் பெருந் திரு. கருமுத்து, தியாகராசன் செட்டியார் அவர்களது பெருநன்றியினை என் உள்ளம் உவந்து பரவுகின்றது.

  இன்றைய தமிழ் நன்மக்கட்குத் தவச்செல்வமாய்த் தோன்றிச்சமயவாழ்வு தழைத்தற்குரிய செம்பொருள் ஞானத்தைச் செந்தமிழ் நெறியில் சிறக்க வழங்கி உய்திதந்து உலாவும் சிவஞான போதம் தமிழரிடையே நூல்வடிவில் தோன்றுதற்கு முன்பே தோன்றிச் சிவாகமங்களின் துணி பொருளைத் திரட்டித் தீவிய இனிய செந்தமிழ் அகவற்பா வடிவில் மக்கட்கு வழங்குமுகத்தால் தமிழாகமம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கிய ஞானாமிர்தம் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வருகின்றது. வருக ஞானாமிர்தம். வாழ்க தமிழ். வளர்க சைவம். வாழியர் தமிழர்.

  “ஞாலம் நின்புக ழேமிக வேண்டும் தென்

  ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

  மதுரை,

  12.02.1954.

  ஒளவை சு. துரைசாமி.

  முன்னுரை

  நமது நாட்டில் நிலவும் சமயங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்தது சைவம். சமய நூலாராய்ச்சியும் புதைபொருளா ராய்ச்சியும் சைவம் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னையது என்று குறிக்கின்றன. எனினும், நிலவுலகில் ஏனைப்பகுதிகளில் வாழும் பழங்குடிமக்களிடையே கடவுட்கொள்கை தோன்றி நிலவத் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் சைவம் நிலைபெற்றிருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். தொல் காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களில் கடவுள் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் சிவபரம்பொருளே யாதலின், சிவத்தை முழு முதற் கடவுளாகக் கொண்டொழுகும் சைவம் தமிழ் மக்களின் உரிமைச் சமயம் என்பது தெளிந்த முடிபு.

  முழு முதற்கடவுளைக் குறிக்கும் சிவம் என்னும் சொல் சங்ககால இலக்கியங்களில் காணப்படாமையால் சிவநெறி பிற்காலத்தே தோன்றியதாம் எனச் சிலர் கருதுவர்; வேறு சிலர், சிவம் என்பது வடசொல்லெனவும், எனவே, சிவ நெறியாகிய சைவம் வடவர் வழி வந்ததெனவும் கருதுகின்றனர். சங்ககாலத்துச் சமய நூல்களோ, சமயநூற்கருத்துக்களைக் காட்டும் பேரிலக்கியங் களோ இதுகாறும் நமக்குக் கிடைத்தில. ஒரு சில புலவர்கள் ஓரொருகாலத்தில் பாடிய பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட பாட்டுக்களின் தொகுதிகளே இன்று சங்க இலக்கியம் என்ற பெயரால் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளிலக் கணத் துறைகட்குரிய இலக்கியமாகும் தகுதியுடைய பாட்டுக்களே இத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருத்தலால், இவற்றையே முழுத்த இலக்கியங்களாகக் கொண்டு தமிழ் மக்களின் பழைய சமய வாழ்வு தேர்ந்து முடிபு காணமுயல்வது நிரம்பாது. ஆதலால், சங்கத்தொகை நூல்களில் சிவம் என்னும் சொல் காணப்படாமை பற்றி அது தமிழ்ச் சமயமன்று எனத் தள்ளக் கருதுவது அறமாகாது.

  மக்கள் பிறந்து மொழிபயிலத் தொடங்கும்போதே தம் தாய் தந்தையரைக் குறித்து மொழியும் அம்மா, அப்பா என்ற சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள் என்பதை யாவரும் நன்கு அறிவர்; இச் சொற்களை அறிந்த பன்னாட்குப் பின்பே சிவம் என்னும் சொல் மக்கள் பேச்சு வழக்கில் வந்துசேரும். இந்த அம்மா அப்பா என்ற சொற்கள் இன்று நாம் பெற்று மகிழும் சங்கவிலக்கியங்களில் காணப்படவில்லையே, அதனால் பெற்றோர்களை அம்மா அப்பா என வழங்கும் வழக்காறு தமிழரிடையே கிடையாது என்று கூறுவது பொருந்தாதன்றே! மேனாட்டு ஆங்கிலமக்கள் தாயை மம்மா என்றும், தந்தையைப் பப்பா என்றும் வழங்கும் வழக்காறு உளது. அதைக்கண்டு, அம்மா அப்பா என்பது மம்மா பப்பா என்பவைகளின் திரிபுபோலக் கருதி, தமிழ் வழக்கன்று எனத் தள்ளிவிடக் கூடுமா? ஸ்பீச்சு என்னும் ஆங்கிலச் சொல்லோடு பேச்சு என்னும் தமிழ்ச்சொல் ஒத்திருப்பது பற்றி அது தமிழன்று என்று கருதமுடியுமா? ஆகவே பழந்தமிழ்த் தொகை நூல்களில் சிவம் என்னும் சொல் காணப்படாமைபற்றிச் சிவநெறியைத் தமிழ் நெறியன்று எனப் புறக்கணிக்கக் கருதுவது நேர்மையன்று என்பது தெளிவாம்.

  சிவம் என்னும் சொல்பற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியில், வட மொழியில் மிகத் தொன்மை வாய்ந்த சமய நூல்களான வேதங்களில் சிவம் என்னும் சொல் இல்லையென்பது விளங்கிவிட்டது வேதங்கள். இந்திரன், அக்கினி, உருத்திரன் முதலிய பல தெய்வங் களைக் குறித்து வழிபடும் தன்மை உடையவை; சிவநெறி முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றே எனத் துணிந்து வழிபடும் சிறப்புடையது. எனவே, அது வேதங்களில் காணப்படுதற்கு இடமில்லை. பரம்பொருள் ஒன்றே எனத் தெளிந்துரைக்கும் வேதாந்த நூல்களான உபநிடதங்களுள் பழமையான நூல் களுள்ளும் சிவம் என்னும் சொல் வழக்கு இல்லை. எனவே, சிவம் என்பது வடசொல்லன்று என்பது தேற்றம். மொழிநூல் துறையில் பெருமுயற்சி செய்து சொற்களின் உண்மை வடிவு காண்பான் பேராராய்ச்சி செய்த கிரையர்சன் என்ற மேனாட்டறிஞர், சிவம் என்பது வட சொல்லன்று என முடித்து அது தூய தமிழ்ச் சொல்லாம் எனத்தெளியவுரைத்துள்ளார். ஆதலால், சிவம் என்பது தமிழ்ச் சொல்லென்றும், அதனை மேற் கொண்டொழுகும் சிவநெறியாகிய சைவம் தமிழ் நெறி யென்றும் இனிது விளங்கு கின்றன. இடைக்காலத்தே முத்து, முகம், பவழம், மணி, தோகை முதலிய தூய தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் ஏறி அம்மொழிக் கேற்ப இலக்கண முடிவு பெற்றது போல, இச் சிவமென்னும் சொல்லும் வடநூல்களில் ஏறிச் சைவம், சிவானுபவம், சிவோகம் என்றாற்போலும் வடநூல் முடிபு பெற்றுள்ளமை நினைவு கொள்ளத்தக்கது.

  ஏனை எந்நாட்டுமக்களாலும் இறைவன் என்னும் முழுமுதற் கடவுள் என்றும் கருதப்படுவது எதுவோ, அதுவே தென்னாடுடைய மக்களால் சிவம் என்று கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாணிக்கவாசகர் முதலிய சான்றோர்கள் கூறுகின்றனர். இதனாலும், சிவநெறி தென்னாட்டவர்க்கே சிறப்பாக உரிய கடவுள் நெறி யென்பது தெளிவாகத் தோன்றுகிறது.

  சிவமென்னும் சொல்பற்றிய ஆராய்ச்சி இவ்வாறு இடம் பற்றியும் காலம்பற்றியும் வேறுபடத் தோன்றினும், சிவபரம் பொருள் எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் ஒப்ப உரிய ராதலின், பொருளாகாத இவ்வாராய்ச்சியை இவ்வளவில் நிறுத்திக்கொள்வாம். இவ்வாறும் சில தடைகளை எழுப்பி மக்கள் உள்ளத்தைச் சிவநெறிக்கண் செல்லாதவாறு செய்யும் வட மொழியாளரும் தமிழரும் சிலர் இருப்பதனால் இத்துணையும் முதற்கண் எடுத்தோத வேண்டிய இன்றியமையாமை பிறந்தது.

  தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய், தன்னை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் ஏனை உயிர்ப் பொருளோடு உடனாயும், உயிரில் பொருளிடை ஒன்றாயும் கலந்து எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய் இலங்கும் செம்பொருள் ஒன்றே; அதுவே சிவம்; உயிர்களும் நித்தமே எனினும் அவை எண்ணிறந்த பலவாகும். அவை, சிவத்தை நோக்கச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையன; அனாதியே மலக்கலப்புற்று இருத்தலின், அவை அறியாமை இருள் சூழ்ந்து கிடப்பன; மலநீக்கம் குறித்து உடம்பொடு கூடி இவ்வுலகில் தோன்றி வினைகளைச்செய்து பிறப்பிறப்புக்களை எய்துவன. இவ்வுலகும், இங்கே உயிர்கள் நிற்றற்குரிய உடம்புகளும் மாயையென்ற முதற்பொருளிலிருந்து சிவத்தால் படைக்கப்படுகின்றன. மாயையென்ற முதற்பொருளும் அனாதி நித்தமாயினும், சிவமும் உயிரும்போல அறிவுடைய பொருளன்று, மாயையினின்றும் தோன்றி அதன் கண்ணே ஒடுங்குவது பற்றி, மாயாகாரியமான உலகும் உடம்பும் மனமும் பிறவுமாகிய பொருள்கள் தோற்றக்கேடு உடைமையால் அநித்த மாகும். இங்கே கூறிய மலம், வினை, மாயை என்ற மூன்றுமாகிய அறிவில் பொருள்கள் உயிர்களோடு தொடர் புற்றிருப்பதால் அவை கட்டு என்று வழங்கும். எனவே, சிவம், உயிர், கட்டு என்ற மூன்றும் சிவநெறியின் அடிப்படையான பொருள்களாம். இவற்றை வட நூல்கள் முறையே பதி, பசு, பாசம் என்று குறிக்கின்றன. இக்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்வுக்குரிய அரசியல் நெறி முறைகள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டி ருப்பது போல, மக்களுடைய அரசியல் சமயவாழ்வுகளில் வடமொழிச் செல் வாக்கு மிக்கிருந்த காலத்தில் இவை வடமொழியில் எழுதப் பட்டனவே தவிர வேறில்லை. வட மொழியில் இருப்பது கொண்டு விலக்கக் கருதுவதும், வடவர்க்கே உரியவென்பதும் அறிவுடைமையாகா என்பது இவ்வாற்றால் இனிது விளங்கும்.

  இறை, உயிர், கட்டு என்ற மூன்றையும் சமய அடிப் படைப் பொருளாக வரையறுத்துக் கொண்டு நிலவும் சிவநெறி வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இறையாகிய சிவபரம் பொருள் இன்னவுரு இன்னநிறம் என்று கண்டுரைக்க முடியாத ஒன்றாதலின், அதனைக் கந்து வடிவில் வைத்து வழிபடுவது சங்ககால வழக்கு. கந்தும் நிலையமும் கொண்டு நிற்கும் கந்துடை நிலை சிவத்தை அறிவிக்கும் அடையாளம் குறி என்ற பொருள்படும் வடமொழி யால் சிவலிங்கம் எனக் கூறப்படுகிறது. இன்று சிவன் கோயில்களில் திருவுண்ணாழியில் காணப்படும் சிவலிங்கம் யாவும் பண்டைச் சங்க காலக் கந்துடை நிலைகளேயாகும். ஏனைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலங் கட்குரிய தெய்வமெனத் தமிழ்நூல் கூறும் சேயோன், மாயோன் முதலிய தெய்வங்கள் பிற்காலத்தே சிவன்கோயில்களில் பரிவார தேவதைகளாக வகுக்கப் பெற்றன. ஆதலால், சங்க காலத்துக் காணப்படும் கடவுள் நெறியே படிப்படியாக வளர்ந்து இன்று பெரிய பெரிய சிவத்தலங்களாகக் காட்சியளிக்கின்றனவே தவிர வேறில்லை. இவற்றைக் கூறுபடுத்தி விளக்கிக்கூறும் சமய நூல்கள் ஆகமங்கள் எனப்படும்.

  ஒருகாலத்தே வேதம், வேதாந்தம், ஆகமம் என்ற இவை சமயத்துறையில் சிறந்த வடநூல்களாக விளங்கின. இன்றும் அவற்றை விலக்குவோர் இல்லை. அவற்றுள் இருக்கு முதலிய வேதங்கள் மந்திரம் பிராமணம் என இருவகையாக இயலு கின்றன. மந்திரங்கட்குப் பொருளுரைக்கும் உரை போலப் பிராமணங்கள் உள்ளன. மந்திரங்கள் செய்யுள்போல உள்ளன. அவை பலவும், வருணன், இந்திரன், அக்கினி, சவிதா முதலிய பல தெய்வங்களைக் குறித்தும் அவற்றை வழிபடுவது குறித்துமே கூறுவனவாம். அவற்றால் முடிந்த பொருளாகக் காணப்படுவது பல தெய்வ வழிபாடு ஒன்றே. வேதங்களையும் அவற்றிற்குரிய ஐதரேயம் முதலிய பிராமணங்களையும் சேரக்கொண்டு அவற்றை வேதநூலின் கர்ம காண்டம் என வழங்குவது முண்டு.

  வேதங்கட்குப் பின்னர் நிற்பன உபநிடதங்கள். இவ்வுப நிடதங்களை ஆராய்ந்த அறிஞர்கள், “ஈண்டு உணர்த்தப்படும் பொருள்கள் கர்ம காண்டத்தில் உணர்த்தப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டன; அவை முத்தியின் தன்மையும் முத்திய டையும் ஸாதனமுமாம்; முதன் முதலில் நிஷ்காம கர்மாக்களைச் செய்து சித்த சுத்தியையடைய வேண்டும்; பின்னர் ஆசிரியனை அடைந்து ஆத்ம விஷயமாகச் சிரவணம் செய்ய வேண்டும்; சிரவணம் செய்தவற்றை யுக்தியோடு கலந்து மனனம் செய்து அவற்றைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர்க் கடவுளைத் தியானம் செய்ய வேண்டும். அவற்றால் அபரப்ரம்ம ப்ராப்தி அடையலாம். அதன் பின்னர்க் கடவுளருளால் ஞானம் அடைந்து கடவுளோடு கடவுளாய் ஒன்றாக வேண்டும். ஒன்றான பிறகு பிறப்பிறப்பு இல்லை; இவ்வுடலோடு இருக்கும்போதே ஒன்றாய் விட்டால் ஒருவனுக்கு இறப்பு இல்லை; அந்நிலையை ஜீவன் முத்தி என்பர். ஒன்றாக ஆவதற்கு முன்னரே அவன் இறப்பின், அஜ்ஜீவன், பித்ருயாணம் தேவயாணம் என்ற இரண்டு மார்க்கத்துள் ஒன்றின் வழியாகப் பித்ருலோகத்திற்கோ பிரும்மலோகத்திற்கோ கொண்டுபோகப்படுகிறான்; கடவுளைத் தியானித்தல் பல்வகைப் பட்ட தாகலின், உபாஸனங்கள் பல வகைப்படும்1” என்று கூறுகின்றனர். இவ்வண்ணம் உபநிடதங்கள் பிரமம் ஒன்றே எனத்துணிந்து பிரமஞானம் பெறுதற்குரிய நெறிகளை உரைப்பது பற்றி வேதத்தின் ஞானகாண்டம் என்றும், வேதத்தின் முடிவில் நிற்பது பற்றி வேதாந்தம் என்றும் வழங்கும்.

  வேத வேதாந்த நூல்களின் செயல் முறைகளிலும், கருத்து வகைகளிலும் நாளடைவில் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் தோன்றின. அதனால், பௌத்தம் முதலிய சமயங்கள் பிறந்து வளர்ந்தன. வேத வேதாந்த நூல்கட்குப் புத்துரை காணும் அறிஞர் பலர் உளராயினர். அவரும் பலரும் தத்தம் கலைப்புலமை கருவியாகப் பெரிய பெரிய விரிவுரைகள் கண்டனர். பின்னர் எழுந்த பிரமசூத்திரத்துக்கு இவ்வாறே பேருரைகள் பல உண்டாயின. சங்கரர், இராமானுசர், மாத்துவர், சீதண்டர் முதலியோர் வகுத்துரைத்த பேருரைகள் பலரைத் தம்தம் வழியில் ஈர்த்தன. இவ் வாற்றால் சமயத்துறையில் கருத்து வேற்றுமைகளும் தெளிவின்மையும் சிறந்து நின்றன.

  வேத வேதாந்த நூற்றுறையில் கலக்கம் பெருகி வருங்கால் ஆகமங்களின் பொருளாராய்ச்சியும் செயற்றிறங்களும் ஆராயப் பட்டன. பண்டை நாள் முதல் இருந்துவரும் ஆகமங்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவாகமம் தேர்ந்து கொள்ளப்பட்டன. அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். இவற்றின் விளக்கம் குறித்து உபாகமங்கள் பல உண்டாயின. இவற்றின் பொருளி யல்பு கண்ட அறிஞர், சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு பாதங்களாக இவற்றைப் பாகுபாடு செய்தனர். இவற்றைத் தனித்தனி எடுத்துரைப்பனவும், ஒரு சிலவற்றை வரைந்து கொண்டு உரைப்பனவும் என ஆகமங்கள் பலதிறப்படுகின்றன. இச்சிவாகமங்கள், பதி, பசு, பாசம் என முன்னர்க்கூறிய பொருள் மூன்றையும் அறுதி யிட்டு முடிவு கட்டிக் கூறுவது பற்றி, சித்தாந்தமென்று வழங்கின. “வேதாந்தத் தெளி வாம் சைவசித்தாந்தம்” என்றும், “வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம்” என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  வேதாந்த நூல்கள் உயரிய நடையில் பிரமஞானத்தையும் அதற்குரிய சாதன வகையினையும் உணர்த்தி வந்தன; அதனால் அவை வடமொழிவல்ல பெரும் புலவர்களிடையே இருந்து ஞானப் பணி புரிந்து வந்தன. ஆயினும் அவை கருத்து வேற்றுமை மிகுந்தனவேயன்றி யாவரும் உணரத்தக்க எளிய நிலையை அடையவில்லை. அவற்றால் பெரிதும் உயர்த்துக் கூறப்பட்ட வேள்வி முதலிய செயல்வகைகள் மாறுபட்டெழுந்த பௌத்த சயின சமயங்களின் வளர்ச்சியால் நாட்டில் செல்வாக்கிழந்து மறைந்தன. சிவாகமங்கள் வடமொழி பயின்றோர் இனிது உணரத் தக்க நிலையில் எளிய நடையில் அமைந்து விளங்கின. அதனால் அவற்றின் செல் வாக்கு ஓரளவு குறையாமலே இருந்து வந்தது. ஆங்காங்கே மக்களிடையே தொன்று தொட்டு வந்துகொண்டிருந்த கோயில் வழிபாட்டுச் சைவ நெறி குன்றாமலே இருந்து வந்தது.

  இந்நிலையில் களப்பிரர் என்னும் ஒருவகைக் கூட்டத்தார் தமிழகத்தில் புகுந்து தமிழ் வாழ்வைச் சீரழித்தனர். தமிழிசையும் தமிழ் நாடகமும் ஒளி குன்றின. தமிழ் இலக்கியங்கள் பல இறந்தொழிந்தன. தமிழ்ச் சைவநெறி தலைதடுமாறிற்று. பின்னர்த் தமிழகத்தின் வடபகுதியான தொண்டைநாட்டில் பல்லவருடைய ஆட்சி நிலைபெற்று நடக்கத் தொடங்கிற்று. அவர்கள் தமிழ் நாட்டவரல்லர்; அதனால் அவர்கள் காலத்தில் வடமொழியே மிக்க செல்வாக்குப் பெற்றது. வடமொழி பயிற்றும் கல்லூரிகள் பல காஞ்சிமா நகரத்திலும்1 பிறவிடங்களிலும் உண்டாயின. பல்லவ வேந்தர் பலர், வடமொழி வாணர்களுக்கு சிறப்புச்செய்து ஆதரித்தனர். முதல் மகேந்திரவன்மன் முதலி யோர் வட மொழியில் நாடகங்கள் எழுதினர். இவ்வகையில் தமிழகத்தில் தமிழ் மொழியின் இடத்தே வட மொழி தங்கிச் சமயத் துறையிலும் ஆட்சி வகையிலும் சிறந்து விளங்கிற்று. நாட்டு மக்களுடைய தாய்மொழியில் சமயவுணர்வு நல்கும் நூல்கள் அருகினபடியால், அவர்களுடைய பொதுவாழ்வில் சமயவுணர்வும் ஒழுக்கமும் குன்றின.

  இதற்கிடையே பௌத்தத் துறவிகளும் சயினசமயத் துறவிகளும் ஆங்காங்கே மடங்களும் பள்ளிகளும் அமைத்து மக்களிடையே தங்கள் சமயக் கருத்துக் களைப் பரப்பினர். சயினப் பள்ளிகளினும் பௌத்தப்பள்ளிகள் பல்லவர் காலத்தில் தொடக்க நிலையில் பெருகியிருந்தன. நூற்றுக்கு மேற்பட்ட பௌத்தப்பள்ளிகளையும், பத்தாயிர வர்க்குக் குறையாத பௌத்தத் துறவிகளையும் இப் பகுதியில் காணலாம் என ஹியூன்சாங் குறிக்கின்றார்.2 பின்னர், பௌத்த மடங்களில் பெரும்பொருள் சேர்ந்தது; அதன் இயற்கை விளைவாக அம்மடங்களின் செயல் முறைகளில் பொய்யும் வழுவும் புகுந்தன. வேற்றுச் சமயங்களும் படிப்படியாக வளர்ச்சி பெற்றன; மக்களுடைய ஆதரவு குன்றிற்று. இதன் பயனாகப் பௌத்த சமயம் தமிழகத்திலிருந்து மறைவ தாயிற்று. ஆயினும் அதனிடத்தே சயின சமயம் வளர்ந்து அரசர் பலரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது. பல்லவ வேந்தனான மகேந்திரவன் மனும், பாண்டிய மன்னனான நெடுமாறனும் சயின சமயத்தை மேற்கொண்டனர். “அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள்” என்ற மொழிப்படி நாட்டில் மக்கள் பலர் சயினர்களாயினர். சயின சமயத்தை மக்கட்கு எடுத்துரைக்கும் சயினச் சான்றோர் சமணர் களாதலின், சயின சமயமும் சமண சமயம் என்றே தமிழகத்தில் வழங்கப் பட்டது.

  பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சியால் செயற் சிறப்புக் குன்றியிருந்த வைதிக சமயம், பொதுமக்கள் வழங்கும் தமிழ் மொழியில் தனது சமயப் பணியைச் செய்யாது சிவவழி பாட்டையும் சிவாலய வழிபாட்டையும் வற்புறுத்தி ஒழுகிய சிவாகமமாகிய சித்தாந்த நெறியோடும் இகலிப் பூசலிடத் தலைப்பட்டது. சிவாகமங்களை ஞானநெறிக்குப் பிரணமாண மாகக் கொள்ள மறுத்துத் தன் வாழ்வுக்குக் கேடு செய்து கொண்டது. ஆகம வழிநின்ற அறிஞர்கள் அக்கால நிலையை நன்கு உணர்ந்தனர். அவர்கள் ஆங்காங்கு ஞானநிலையங்களாகத் திருமடங்கள் நிறுவி அவற்றின் வாயிலாக நாட்டு மக்கட்கு நற்பணி புரியலுற்றனர். இம்மடங்கள், அறிவு வேண்டுவோர்க்குக் கல்வியும், நோயுற்றோர்க்கு மருத்துவமும், பசித்து வந்தோர்க்கு உணவும் நல்கிப் பணிபுரிந்து வந்தனர்.

  கடவுட்கொள்கையும் வினையுணர்வும் மறுபிறப்பும் சமயவாழ்வின் உயிர்நாடியாக இருந்தன. பௌத்த சமண சமய நூல்கள் கடவுட்கொள்கையை மிகுதியும் வற்புறுத்தாது வினை யுணர்வையும் மறுபிறப்பையும் பெரிதெடுத்துப் பேசின. கடவுள் வழிபாட்டை நன்கு வற்புறுத்தாமல், பொய், கொலை, களவு, கள், காமம் என்ற இவற்றைக் கடிவதாகிய நல்லற மொன்றையே சமயப் பேருணர்வும் பேரொழுக்கமுமாகப் பேணியுரைத்தன. அவரவர் செய்யும் வினைப் பயன்களை அவரவரும் நுகர்ந்து கழிக்க வேண்டுமேயன்றி, வினைத் தொடக்கினின்று உயிர்களை விடுவிக்கும் ஆற்றல் இறைப்பொருட்கும் இல்லையென ஏதுக் களாலும் எடுத்த மொழிகளாலும் வற்புறுத்துவதிலேயே சமயச் சொற்போர்கள் வழங்கி வந்தன.

  இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றினர். அவர்கள் காலத்தே ஆகம வழிவந்த சிவநெறி நாடெங்கும் பரவியிருந்தது; ஆங்காங்கே சிவன்கோயில்களும் இருந்து வந்தன; கோயில்களில் நாள்வழிபாடும் ஆண்டுவிழாக்களும் நடைபெற்று வந்தன. என்றாலும் மேலே காட்டிய காரணங்களால் மக்களிடையே கடவுட்கொள்கையில் அழுந்திய உள்ளமும், கடவுள் வழி பாட்டால் வினையினின்றும் வீடுபெறலாம் என்ற நம்பிக்கையும் குன்றியிருந்தன. இவற்றை வற்புறுத்தி யுரைக்கும் நல்லாசிரியன் மார்களின் வருகையை அக்காலம் எதிர்நோக்கியிருந்தது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றி, நாடு முழுவதும் சுற்றி, சிவன் கோயில் இருக்கும் ஊர்தொறும் சென்று நாட்டுக்கு உரிய சிவ நெறிக்கருத்துக்களை மக்கட்கு அறிவுறுத்து வாராயினர்.

  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவர் வரலாறுகளையும் நோக்கின், ஞானசம்பந்தர் தமிழகத்தின் தெற்கிலும், நாவரசர் வடக்கிலும், நம்பியாரூரர் மேற்கிலும் சுற்றிச் சமயத் தொண்டு சிறப்புறச் செய்திருப்பது புலனாகிறது. அவர்கள் காலத்தில், தமிழகத்தில், காளாமுகம். பாசுபதம், மாவிரதம் முதலிய அகச் சமயங்கள் இருந்தி ருக்கின்றன. ஆயினும், அச் சமயத்தவர்கள் ஆங்காங்கு இருந்து கொண்டு தங்கள் சமயக் கொள்கைகளைச்சிற்சிலருக்கு அறிவுறுத்தி வந்தனரேயன்றி இப்பெருமக்களைப் போல நாடுமுழுதும் பரந்துசென்று பணிபுரியவில்லை. அவர்களில் காளாமுக சைவத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர் என்பதைக் கீழைச் சளுக்கவேந்தர் கல்வெட்டுக் களேயன்றி, கும்பகோணத்துக்கு அண்மையிலுள்ள தாராசுரத்துத் கல்வெட்டும்1 கொடும்பாளூர்க் கல்வெட்டும்2 கோயில்தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டும்3 குறிக்கின்றன. இவ்வாறே காபால சமயத்தவரும்4 பாசுபதரும்5 மாவிரதரும்6 இருந்தனர் என்பதை அரசியற்கல்வெட்டறிக்கைகள் எடுத் துரைப்பதனால் அறியலாம்.

  இங்ஙனம் பல்வேறு சமயத்தவர் இருப்பினும், இவர்களது சமயக் கருத்துகளை விரித்தோதும் நூல்களுள் ஒன்றேனும் தமிழில் கிடைக்காமையால் இவர்கள் தமது சமயவுணர்வு பெருகுதற்கு மேற்கொண்டிருந்த மொழி தமிழன்று என்பதும் தெரிகிறது. இச்சமயங்களின் இடையே திருஞான சம்பந்தர் முதலியோர் ஆகம வழிவந்த சைவ நெறியே இனிய வழிபாட்டுத் திருப்பாட்டுக்களாக இசைத் தமிழில் பாடி திருப்பாட்டுக்கள் பலவும் இன்று சைவத்திருமுறைகளாக நின்று பயன்செய்து வருகின்றன.

  இப்பெருமக்கள் காலத்துக்குப் பின் , சைவநெறியில் புதுமலர்ச்சியுண்டாயிற்று. நாட்டுமக்கள் அறிந்த மொழியாகிய தமிழில் பல்லாயிரக்கணக்கான திருப்பாட்டுக்கள் தோன்றி சமயவுணர்வும் ஒழுக்கமும் பெறுவித்தன. அனைவரும் பேரார் வத்தோடு பேணிப்பயின்று பயன் பெறுவாராயினர். அவர்கள் காலத்தேயே பல்லவரும் பாண்டியரும் வேற்றுச் சமயத்தைக் கைவிட்டுத் தமிழகத்தில் தமிழகத்துக்கேயுரிய சைவத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் சிவன்கோயில்கள் கல்லாலும் பிறவற்றாலும் எடுக்கப் பெற்றன. வானளாவயுயர்ந்த கோபுரங்களும் விமானங்களும் பெருக உண்டாயின.

  சைவநெறிக்கண் தோன்றிய புதுமலர்ச்சியால் வேந்தர் களும் பொதுமக்களும் சிவவழி பாட்டிலும் சிவன்கோயில் திருப்பணியிலும் பேரீடுபாடு கொண்டனர். திருக்கோயில் அமைப்பும், வழிபாட்டு முறையும் தெளித்துரைக்கும் ஆகமப் பயிற்சியால் மக்கட்கு நாட்டமுண்டாயிற்று. சிவாகமங்களை விரும்பிப்பேணிய சிறப்பால் பல்லவ வேந்தன் ஒருவன் ஆகமானுசாரி என்று சிறப்புப் பெயரும் பெற்றுள்ளான். இச் சிவாகமங்களைப் போற்றியுரைக்கும் சான்றோர் சிவாசாரிய ரென்றும் சைவாசிரியர் என்றும் கூறப்படுவர். இச்சைவாசிரியன் மார் ஆங்காங்கே தனித்தனி இடம் அமைத்துக் கொண்டு சைவாகமக் கருத்துக்களையும் ஒழுக்கங்களையும் மக்கட்கு அறிவுறுத்தி வந்தனர். அவ் விடங்கட்கு மடம் என்றும் குகை யென்றும் பெயர்கள் வழங்கின. இவைகள் சிறப்பு வகையில் சமய அறிவும் சமய வொழுக்கங்களும் கற்பித்தனவாயினும் பொதுவகையில் மக்களது பசிப்பிணிக்கு உணவும், உடற்பிணிக்கு மருந்தும் உதவின. இவ்வாற்றால், இம்மடங்கட்கு மக்களது நல்லாதரவு பெருகியிருந்தது வேந்தர்களும் மிக்க பொருளும் நிலங்களும் தந்து இம்மடங்களை நன்கு பேணினர். இச்சைவாசிரியர்களைத் தங்கட்கு அருட்குருவாகவும் அரசகுரு வாகவும் கொண்டு பரவினர். இவர்கள் பால் சிவதீக்கைபெற்றுச் சைவ வொழுக்கம் தலைநின்ற வேந்தர் பலர்.

  சைவாசிரியன்மார் வகுத்துக்கொண்டிருந்த மடங்களும் குகைகளும் நமது நாடு முழுதும் பரவியிருந்தன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் காலத்திலும் இவைகள் திருப்புகலூர், திருவீழிமிழலை திருமறைக்காடு, மதுரை முதலிய இடங்களில் இருந்தன என்பதைத் திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது, பின்னர்த் தோன்றிய கல்வெட்டு களும், செப்பேடுகளும் இவற்றின் இருப்பை அவ்வவ் விடங் களில் குறிக்கின்றன. திருஞானசம்பந்தன் குகை, திருநாவுக்கரசர் மடம், திருத்தொண்டத் தொகையான் திருமடம் எனப் பலமடங்களும், குகைகளும் சோழ பாண்டியர் கல்வெட்டுக் களில் இடம் பெறுகின்றன.

  சமயத் தொண்டு புரிந்த இம்மடங்கட்குத் தலைவர்களாகச் சைவாசிரியர் விளங்கினர். அவர்பால் அருளுரை கேட்டு அவர் விதித்த ஒழுக்கத்தை மேற்கொண்டு மாணவர் பலர் இருந்தனர். தலைமை தாங்கும் சைவாசிரியர் இறந்தால் அவர் மாணவருள் ஒருவர் தலைவராகி மடத்தின் திருப்பணியைச்செய்வர்; அவர்க்குப் பின் அவருடைய மாணவர் தலைவராவர். இவ்வாறு ஆசிரியர் மாணவர் என்ற முறையில் வழிவழியாக இம்மடங்கள் நின்று நிலவின. இது சந்தானம் என்றும் வழங்கும்.

  திருஞானசம்பந்தர் முதலிய சிவஞான ஞாயிறுகள் தமிழகத்துச் சைவவானத்தில் தோன்றிச் சிவஞானப் பேரொளியைச் செந் தமிழால் பரப்பிய காலத்தில், வடநாட்டில், மத்த மயூர சந்தானம் என்றொரு சைவாசிரியர் மரபு விளங்கிற்று. தேரம்பிபாலர், ஆமர்த்தக தீர்த்த நாதர், புரந்தரர், கவச சிவர், சதாசிவர், இருதய சிவர், வியோம சிவர் எனச் சைவாசிரியர் பலர் வழிவழியாக விளங்கி வந்தனர். இவருள், கடம்ப குகாதிவாசி கடம்பகுகை யென்னுமிடத்திலும், சங்கமாதிகாதிபதி சங்க மாதிகையிலும், தேரம்பிபாலர் தேரம்பியிலும், ஆமர்த்தக தீர்த்தநாதர் ஆமர்த்த கத்திலும் இருந்து சமயப்பணி புரிந்தனர், புரந்தரர் உபேந்திரபுரம் என்னும் இடத்தே இருந்தார். அவந்தி வன்மன் என்னும் வேந்தன் புரந்தரர்பால் சிவ தீக்கை பெற்றுத் தன்னாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே சமயப் பணி புரியுமாறு செய்தான். அவர் அங்கே ஓர் ஊரில் மடம் ஒன்றை நிறுவி அவ்வூர்க்கு மத்த மயூரபுரி எனப் பெயரிட்டுத் தமது மரபின் பெயரை நிலைபெறுவித்தார்; இராணி பத்திரம் (Ranod) என்னுமிடத்தே ஒரு மடத்தையும் அவர் ஏற்படுத்தினார். அவர் வழி வந்த வியோம சிவர் அம்மடங்களை வளம்படுத்திச் சமயப்பணியை விரிவு செய்தார். மத்த மயூர தடாகத்தைக் கட்டியவரும் அவரே என்பர். ஆமர்த்தகதீர்த்த நாதர் இருந்த ஆமர்த்தகத்திலிருந்து ஒரு கிளை தோன்றிச் சிவபுரி சந்தானம் என்ற பெயருடன் வட நாட்டில் சமயத் தொண்டு புரிந்தது.1

  மேலே கூறிய ஆசிரியருள் இருதய சிவர் என்பார்பால் சேதி நாட்டு வேந்தன் இலக்குமணராசன் சிவதீக்கை பெற்று அவரைத் தன் நாட்டிற்கு அழைத்துச்சென்று சிறப்பித்தான். அவன், தன் நாட்டிலுள்ள வைத்தியநாதமடம், நகுலேசுரமடம் என்ற இரண்டுக்கும் அவரையே தலைவராக இருந்து நடத்துமாறு ஏற்பாடு செய்தான். அதற்கு இசைந்த இருதய சிவர் தம்முடைய மாணவரான அகோரசிவர் என்பவரை நகுலேசுர மடத்துக்குத் தலைவராக நியமித்தார்.

  மத்தமயூர சந்தானத்தின் ஒரு கிளையினர் களச்சூரி வேந்தர் காலத்தில் அவர்கட்கு அரசகுருவாக இருந்துள்ளனர். அவர் வரிசையுள் விமல சிவர் தலைவராக நிற்கின்றார். அவர் மாணவருள் சாந்த சிவரென்பார் விசயசிம்மனுக்கும், பின்பு சேதி

  நாட்டைவென்று கொண்ட திரைலோக்கியமல்லனுக்கும் அரசகுருவாய் விளங்கினார். புருடசிவர் என்பார் யசகரணனுக்கும், சத்திசிவரென்பார் கயகரணனுக்கும், கீர்த்திசிவர் நரசிம்மனுக்கும், விமலசிவர் சயசிம்மனுக்கும் அரசகுரவர் களாய் இருந்தனர்.

  இந்த மத்தமயூர சந்தானத்தின் மற்றொரு கிளையினர் களச்சூரி வேந்தரது தலைநகரான திரிபுரிக்கு அண்மையில் வீர கட்டம் (Bheraghat) என்னுமிடத்தே ஒரு மடத்தை நிறுவினர். அங்கே நருமதையாற்றங்கரையிலுள்ள கோகழி1 என்ற சிறுகுன்று ஒன்றின் மேல் அறுபத்துநான்கு யோகினிகளை நிறுவினர். அக் கோகழிக்குன்று கோளகிரி யென்னும் புண்ணியத்தலமென்றும் அது பண்டு தொட்டே வழங்கி வருவதென்றும் கூறுப. அக் குன்றிடத்தே நிறுவப்பட்ட மடம் பிற்காலத்தே கோளகிரி மடம் எனப் பெயர் மாறியது. அதுவே பின்பு நாளடைவில் மருவிக் கோளகி மடம் என வழங்குவதாயிற்று. மால்காபுரம் கல்வெட்டு “இக் கோளகி மடம் நருமதைக்கும் பாகீரதிக்கும் இடையிலுள்ள தவள மண்டலத்தில் உளது என்று கூறுகிறது.2 சபல்பூருக்கு அருகில் இருக்கும் தேவார் என்பது பண்டைநாளில் களச்சூரி வேந்தர்க்குத் தலைநகரமாக இருந்த திரிபுரி என்பதாகும்; அதனை நடுவே கொண்ட பகுதி தவளமண்டலம்; வீர கட்டமும் அவ்விடத் தேயுளது; ஆதலால் ஆங்குள்ள கோளகிரியே கோளகி யாதல் வேண்டும்”3 என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

  இனி, இக் கோளகி மடத்தை நிறுவிய மத்தமயூர சந்தானத் தவருள். முதல்வர் துருவாசர் என்போராவர். அவர் வழிவந்தவர் சற்பவ சம்பு என்ற சைவாசிரியர். அவருக்குப் பிட்சா விருத்தியாகக் களச்சூரி வேந்தனான முதல் யுவராஜ தேவன். மூன்று லஷம் என்ற பகுதியைக் கொடுத்தான். அவர்பால் சைவாசிரியர் பலர் இருந்து சைவப்பணி புரிந்தனர். அவர் வழியில் சோம சம்பு சிவாசாரியார் தோன்றினார். சோமசம்புபத்ததி என்ற நூலை எழுதியவர் அவரேயாவர். அவர்க்குப் பின் வாம சம்பு என்பார் கோளகி மடத்துத் தலைவராக விளங்கினார் அவர்க்கு ஆயிரக் கணக்கில் மாணவருண்டென்றும், அவர் தமது பார்வையினாலே உலகாளும் வேந்தரை ஆக்கவும் அழிக்கவும் வல்லவரென்றும் வரலாறு கூறுகிறது. அவர் வழியில் வந்து சிறந்தோருள் விமலசிவர் என்பார் கேரள நாட்டினர். விமல சிவரைக் களச்சூரி வேந்தர்கள் சிவனெனவே தேறி வழிபட்டனர். இவர் வழியில் வந்தோருள் விசுவேசுர சம்பு கௌட தேசத்து ராதை நாட்டுப் பூருவ கிராமம் எனும் பகுதியில் இருந்தவர். கணபதிவேந்தனுக்குத் தீக்கை செய்தவர் இவரே. இவர்பால் களச்சூரி வேந்தர்களே யன்றி, மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் சிவதீக்கை பெற்றார்கள்4 இவ்வேந்தருள் களச்சூரி கணபதி வேந்தன் தன்னை விசுவேசுர சம்புவின் புதல்வனென்றே கூறிக்கொள்ளுகின்றன. அவரது ஆணை வழிநின்று, பற்பல சைவாசிரியர்களையும் புலவர் களையும் வருவித்து அவ்வேந்தன் சிறந்த பரிசில் நல்கினான். “காதிற் குண்டலம் இலங்க, முடியில் சடை கிடந்து தாழ, ஒளிதிகழும் முகமும், மணிமாலை கிடந்தசையும் மார்பும் கொண்ட விசுவேசுர சம்பு. கணபதி வேந்தன் அரண்மனையில் வித்தியா மண்டபத்தில் வீற்றிருக்கும் காட்சி காண்பார் கண்களுக்கு நல் விருந்தாகும்” என்ற பொருளமைந்த வடமொழிச் செய்யு ளொன்று காணப்படுகிறது.1

  கணபதி தேவ மகாராயர் விசுவேசுரர் செய்யும் சமயப் பணியின் பொருட்டு மந்தரம் என்னும் ஊரைக் கொடுக்க வேண்டுமென விரும்பியிருந்தார். அவர் இறந்தபின் அவர் புதல்வியான இராணி உருத்திராதேவி அரசு கட்டிலேறினாள், அவட்கும் அவ்விசுவேசுரர் ஞானாசிரியராக இருந்தார். கி.பி. 1261-ல் அவருக்கு உருத்திராதேவி தன் தந்தையார் விரும்பிய வாறே மந்தரம் என்ற ஊரையும் அதன் அருகில் உள்ள தீவு களையும் (இலங்கைகள்) வழங்கினாள்; தனியாகத் தனது பெய ரால் விசுவேசுரர்க்கு விளங்காப்பூண்டி (வெலக பூடி) என்ற ஊரையும் கொடுத்தாள்.

  மந்தரம் என்னும் ஊர் இப்போது மண்டடம் என வழங்கு கிறது. இவ்வூரில் விசுவேசுரர், கோயில் ஒன்றும் மடம் ஒன்றும் அறவுணவுச் சாலையொன்றும் கட்டினார். பின்பு, தமிழ் நாட்டி லிருந்து அறுபது பிராமணக் குடும்பங்களை வருவித்து, மந்தரம் விளங்காப்பூண்டி என்ற இரண்டு ஊர்களிலும் குடியேற்றி அவ்வூர்க்குக் கோளகி யென்று பெயரும் இட்டார். ஒவ்வொரு குடும்பத்தார்க்கும் வேண்டுமளவு நிலம் விட்டு விற்கவும் ஒற்றி வைக்கவும் வேண்டிய முழுவுரிமை யும் நல்கினார். எஞ்சிய நிலங்களை மூன்று கூறு செய்து ஒன்றைக் கோயிலுக்கும் ஒன்றைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மடத்திலிருக்கும் சைவர்களுக்கும் மூன்றாம் கூற்றை மருத்துவச் சாலைக்கும் அறவுணவுச் சாலைக்குமாகப் பங்கீடு செய்தார். கோளகி சந்தானத்தார் வடமொழி வாயிலாகவே சமயப்பணி, செய்த வராதலால், இருக்கு முதலிய வேதங்களைக் கற்பிக்க மூவர் ஆசிரியர்களும், தருக்கம், சாகித்தியம், ஆகமம் என்ற இவற்றைக் கற்பிக்க ஆசிரியர் ஐவரும் மருத்துவர் ஒருவரும் கணக்கர் ஒருவருமாகப் பதின்மூன்று பேர் நிறுவப் பெற்றனர். ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. கோயில்களில் இசைவாணர் முதல் ஊர்ப்பணி செய்யும் நாவிதர், ஊர்காக்கும் வயிராகியர் ஈறாக எழுபத்து மூவர் இருந்தனர். இவர்களும் தலைக்கொரு புட்டி நிலம் தரப் பெற்றனர், புட்டி என்பது அக்காலத்தே அப்பகுதியில் வழங்கிய நிலவளவை. உணவுச் சாலையில் சாதி வேறுபாடு கருதாமல் பிராமணர் முதல் சண்டாளர் ஈறாக யாவர்க்கும் உணவு நல்குமாறு விசுவேசுரர் ஏற்பாடு செய்தார் அவர் குடியேற்றிய தமிழ்ப் பிராமணர்களைத் திராவிடப் பிராமணர் என இப்போதும் அங்குள்ள மக்கள் வழங்குகின்றனர்.

  அவர் செய்த செயல்வகைகளில் , காளீஸ்வரத்தில் உபல மடம் என்றொரு மடத்தை நிறுவி அதற்குத் தான் ஏற்படுத்திய பொன்ன காமம் என்னும் அக்கிரகாரத்தை அளித்ததும், மந்தர கூடத்தில் விசுவேசுரலிங்கம் என்ற கோயிலை நிறுவி அதன் நிருவாகத்துக்கும், தான் அங்கே ஏற்படுத்திய உணவுச் சாலையின் பொருட்டு மானப்பள்ளி, ஊட்டுப்பள்ளி என்ற ஊர்கள் இரண்டி னைக் கொடுத்ததும், சந்திரவல்லி நகரத்தில் சிவன் கோயிலொன்றைக் கட்டிக் கம்பம் பள்ளியேரியின் கரையை விரிவு படுத்தி அதன் வருவாயில் செம்பாதியை அக்கோயிலுக்கு உரிமை செய்ததும். அனந்தபாத நகரத்தில் சிவன்கோயிலொன்றை எடுத்து அந்நகரத்துக்கு விசுவேசுர நகரம் என்று பெயரிட்டு, அக்கோயிலுக்கு அனந்தபுரம் முனிகூடம் என் ற ஊர்களைத் தேவதானமாக வழங்கியதும், கொம்மு கிராமம் ஏலீசுரபுரம். நிவிருத்தி முதலியவூர்களில் சிவன் கோயிலும் அறவுணவுச் சாலையும் ஏற்படுத்தியதும் உணவுச் சாலையில் சாதி சமுதாய வேற்றுமை சிறிதும் இன்றிப் பிராமணர் முதல் சண்டாளர் ஈறாக எல்லார்க்கும் ஒப்ப உணவும் கல்வியும் ஒழுக்கமும் நல்கியதும் பிறவும் சிறந்தனவாகும்1

  உணவால் உயிர்களின் பசிப்பிணியும், மருத்துவத்தால் உடற்பிணியும், சிவஞானத்தால் பிறவிப்பிணியும் நீக்கும் இனிய தொண்டுகளைச் செய்தமையால் இக்கோளகி சந்தானம் நாட்டில் நல்ல செல்வாக்கினைப் பெற்றது. இச் சந்தானத்தில் விளங்கியோர் சிறந்த சிவஞானிகளாதலால் சாதி சமயவேற்றுமை கருதாது தங்கள் தொண்டினை ஆற்றி வந்தனர். அவருள் உருத்திரசிவர் என்பார் சைவசித்தாந்தமே யன்றிப் பௌத்த சமயத்துத் திக்கநாகர் முதலியோர் எழுதியநூல்களில் 1வல்லுநராய் இருந்தனர். பிரசண்ட சிவர் என்பார் பஞ்சார்த்தக சித்தாந்தம் (பாசுபதம்) வல்லுநர்2; வியோமசிவர் பிரசத்த பாதருடைய வைசேடிய பாடியத்துக்கு 3வியோமவதி என்னும் விளக்கவுரை கண்டார். அதனால், விசுவேசுரருடைய கல்விச்சாலையில் பாசுபதர் முதலிய பிற சமயத்தவரும் கல்வி பயின்றனர். புறச்சமயங்கள் சைவத்துக்குப் படிமுறையில் அமைந்தன வாதலின், அவற்றை இகழ்ந்து புறக் கணித்தல் சைவத்துக்கு மாறானது என்ற சைவவொழுக்கம்பற்றி, இச் சான்றோர்கள் சாதி வேற்றுமையும் சமயவேற்றுமையும், கருதாராயினர் என அறிக. பிற்காலச் சைவர்கள் சாதி சமய வேற்றுமைக்குழியில் வீழ்ந்து, நீறுபூசும் தம் திருமேனியில் சேறுபூசிக் கொண்ட மையின், இன்று கண்டார் இகழ்ந்து பழிக்கும் சிறுமையுற்றது மேலேகூறிய சைவநெறியைக் கை விட்டமையாலாகும்.

  அஃது அவர்கள் பொதுவாக மேற்கொண்டிருந்த அற மாயினும், சைவசித்தாந்தக் கருத்துக்களை மக்கட்கு அறிவுறுத்து வதை சிறந்த அறமாகக்கொண்டிருந்தனர். தங்கள் காலத்திலும் தங்களது முன்னோர் காலத்திலும் வாழ்ந்த வேத நூல் வழிநின்ற வைதிகர்களும் பிறராகிய பௌத்த சமணச் சான்றோர்களும் வடமொழிகளையே சமயப்பணியில் மேற்கொண்டிருந்தமையின் கோளகி சந்தானத்துச் சான்றோர்களும் வடமொழியினையே மேற்கொண்டு சைவநூல்கள் பல செய்து உள்ளனர். சோமசம்பு பத்ததி யென்று இக்காலத்துச் சைவ நன்மக்களிடையே சிறப்பாகக் கொள்ளப்பட்டிருக்கும் நூலை எழுதிய சோமசம்பு சிவாசாரியார் இக்கோளகி மடத்தைச் சேர்ந்தவர். இவருள் ஈசான சிவயோகீந்திரர் என்பார் 1சித்தாந்த பத்ததி யென்ற இனிய நூலையெழுதினார். ஸ்நபன சாராவளி எழுதிய பஞ்சாட்சர குருவும் சித்தாந்த சாரம் எழுதிய ஈசான சிவரும் சித்தாந்த ரத்னாகரம் எழுதிய சோமேசுரரும் ஆத்மார்த்த பூஜாவிதி எழுதிய வேத ஞான சிவரும் இச்சந்தானத்தில் வந்த சான்றோராவர். சித்தாந்தசார ஆசிரியரான ஈசான சிவரே ரத்னாகரம் எழுதியவரென்றும், சோமேசுரரென்பது அவரது சிறப்புப் பெயரென்றும் கூறுவர். அவர் சைவதரிசனம் வல்லுந ரென்றும். பதினெண் வித்தைகளும் பயின்றவரென்றும். வேதாந்த நூல்களாகிய உபநிடதங்களைக் கொண்டே சிவபரத்துவத்தை நிலையிட்டுக் காட்டினரென்றும் கிரணா கிரமத் ஜ்யோதிகா எழுதிய ஈசான சிவர் ஆமர்த்தக சந்தானத்தைச் சேர்ந்தவ ராதலின் அவர் வேறு என்றும் 2சென்னைக் கல்வெட்டுத்துறை ஆண்டறிக்கை கூறுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிப் பதினெண்பத்ததிகளையும் மிருகேந்திர விருத்திக்குத் தீபிகையையும் தத்துவ தீபிகை தத்துவசங் கிரகம் முதலிய நூல்கட்கு உரையையும் எழுதிய அகோர சிவாசாரியாரும் இந்தக் 3கோளகி சந்தானத்தவரே யெனக் கல்வெட்டுக் கூறுகிறது.

  மத்தமயூர சந்தானத்தின் கிளையாய்த் தோன்றி இங்ஙனம் சிவஞானத்தாலும் சிவப்பணியாலும் மேன்மேலுயர்ந்த இம்மடங்கள் நாளடைவில் தனித்தனியாக நின்று தொடங்கின. அதனால் இவற்றின் தொன்மை காட்டும் கல்வெட்டுக்கள். “ஆமர்த்தக ரணபத்திர கோளகிரி புஷ்பகிரி சந்தானம்”4 என்று குறிக்கின்றன. கோளகி மடத்தின் கிளைகள் பல தெலுங்கு நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பரவிய காலத்தில் கோளகிமடம் கோளகிசந்தானம் என்றும் கோளகிதன்மம் என்றும் பெயர் கொண்டது. இவற்றினி ன்றும் பிரிந்த கிளைகள் பிஷாமடசந்தான மென்றும், லஷாத்யாயி மடம் என்றும் பிற்காலத்தே தமிழகத்தில் இருந்துள்ளன. கோளகி சந்தானம் தொடக்கத்தில் தெலுங்கு நாட்டில் வேரூன்றிச் சிறந்த பணி புரிந்தது. அப்பகுதியில் இருந்து அரசுபுரிந்த நுளம்ப வேந்தரும் கடம்பவேந்தரும் கோளகி தன்மத்தின் மாண்புகண்டு அப்பகுதியைக்கோகழியெனப் பெயரிட்டுச் சிறப்பித்தனர், 1பெல்லாரி மாவட்டத்துக் கல் வெட்டுக்கள் கோகழி ஐஞ்ஞூறு, நுளம்ப பாடி நாட்டுக் கோகழி ஐஞ்ஞூறு என்று கூறுவது இன்றும் காணலாம். அங்கே கோட்டூரி லிருந்து அரசு புரிந்த கடம்ப குல வேந்தனான கட்டியராசன், அமிர்தராசி பண்டித ரென்னும் தன் ஞானாசிரியர்க்கு நிலம் விட்டதைக் கல்வெட்டொன்று2 குறிக்கிறது. அமிருதராசி பண்டிதர் முதலியோர் வீற்றிருந்து சமயப் பணிபுரிந்த கோகழி சந்தானமே திருவாசகத்தில் மணிவாசகப்பெருமானால் குறிக்கப் படுகிறது போலும் எனச்சிலர் கருதுகின்றனர். இது நிற்க.

  கோளகி சந்தானத்தில் சிறந்து நின்ற விசுவேசுரர் காலத்தில் இதன் சிறப்புத் தெலுங்குநாடு கடந்து தமிழ் நாட்டிலும் பரவிற்று. தமிழகத்திலிருந்து சில பிராமணக் குடும்பங்களைத் தெலுங்கு நாட்டில் அவர் குடியேற்றிய தொன்றே இதற்குத் தக்க சான்றாகும். இன்னும் நெல்லூர், கிருஷ்ணா முதலிய பகுதிகளில் திராவிட பிராமணர் என்ற பெயரால் சில பிராமணக் குடும்பங்கள் இருந்துவருகின்றன. இத்தகைய செயல்வகையால் கோளகி சந்தானத்தார்க்கு மடங்கள் பல தமிழகமெங்கும் தோன்றின. திருக்காளத்தி, திருப்பாலைவனம், திருவொற்றியூர் முதல் திருநெல்வேலி திருவாலீஸ்வரம் வரை ஆங்காங்குக் கோளகி மடங்கள் இருந்திருக்கின்றன. இடையிலுள்ள காஞ்சிபுரம், தேவிகாபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்கா, திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பத்தூர், திருப்பரங்குன்றம் முதலிய இடங்களிலிருந்த கோளகி மடங்கள் வேந்தர் களின் நல்லாதரவுபெற்றுக் கல்வெட்டுக்களில் சிறந்த சாட்சி வழங்குகின்றன. இம்மடங்களின் சிறப்புக்கள் கி.பி. 11-ம் நூற்றாண்டிலிருந்து3 16-ம் நூற்றாண்டுவரை நன்னிலையில்4 இருந்துள்ளன. தென்னாட்டிற் புகுந்து சிற்சில இடங்களில் பெருங்கலக்கத்தைச் செய்த கன்னட வேந்தர்களும் இம் மடங் கட்கு ஆதரவு நல்கியிருப்பதொன்றே இவற்றின் செயற் செம்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அந்நாளில் திருவானைக்காவில் இருந்த கோளகி மடத்துத் தற்புருஷ சிவம் என்பாருக்குக் கன்னட வேந்தன் மடம் கட்டித் தந்த செய்தியைக் 1கல்வெட்டுக் கூறுகிறது.

  முதல் மாறவன்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருக் கொடுங்குன்றத்தில் (பிரான்மலை) இருந்த ஈசானசிவ ராவலர் மடம் கோளகி சந்தானத்துக்கு உரியது; அம் மடத்துக்குத் தலைவராய் இருந்த ஈசான சிவாசாரியார் செய்த தொண்டுகளை வியந்த வேந்தன் அவர்க்குப் பாண்டி மண்டலாதிபதி யென்றும், 2பாண்டிநாட்டு முதலியார் என்றும் சிறப்புக்களை நல்கினான்.

  அந்நாளில் தெலுங்கு நாட்டில் விசுவேசுரர் சிறப்புறுதற்கு முன்பே தமிழகத்தில் இருந்த கோளகி சந்தானத்தார் உயர்ந்த பணிகளால் வேந்தர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் கோளகி மடம் சிறந்து விளங்கிற்று. அதன்கண் வாகீசுர பண்டிதர் என்பார் இருந்து சோமசம்பு முதலியோர் அறிவுறுத்திய சித்தாந்தங்களை மக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர். அதனால் அவர் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுர பண்டிதர் என வழங்கப்பட்டனர். திருவொற்றியுர் இறைவனை, மகிழ மரத்தின்கீழ் இருத்திக் கண்டு வழிபடும் விழா நடைபெறுவது வழக்கம்; இன்றும் அது மகிழடி சேவையென்ற பெயரால் நடந்துவருகிறது. அந்நாளில் இவ்விழாக் காலத்தே சோழ வேந்தனான இரண்டாம் இராசாதிராசன் வந்திருந்து திருவொற்றியூர் இறைவனை வழிபட்டான்; அப்போது கோளகி மடத்து வாகீசுர பண்டிதர் ஆளுடைய நம்பிகளின் புராணத்தை விரிவுரை செய்தார் என்பர். அதனை வேந்தனும் பிற செல்வர்களும் இருந்து கேட்டு இன்புற்றனர் என்று 3அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.

  கோயில்களின் அமைப்பும் நடைமுறையும் சைவாகம முறை வழுவாது நடத்தற்கு இம்மடங்கள் பெருந்துணையாய் இருந்தன. சிலகோயில்களின் நடைமுறைகளைக் கண்காணிக்கும் பணியையும் இம்மடத்தவர் மேற்கொண்டிருந்தனர். திருமடங் களிலுள்ள சைவாசிரியன்மார்கள் பெரிதும் வடமொழியே பயின்று சைவாகமக் கருத்துக்களை எடுத்துரைப்பதில் கருத்துக் கொண்டிருந்தனரேயன்றி அவற்றை மக்கள் வழங்கும் மொழியில் எழுதினார்களில்லை. சிவாகமங்களுட் பலவும் சைவ சமயத்துக் குரிய பொருள்களை அளவைகளால் நிறுவுவதும் அவற்றிற்கு இலக்கணம் கூறுவதும். சிவஞான சாதனமாகிய தீக்கைகளையும் பிறவற்றையும் விளக்கி நித்திய நைமித்திக நெறிகளை வகுப்பதும் செய்தனவேயன்றி, சிவன்பால் அன்பு மிகுந்து சிவ வழிபாடு செய்தற்குரிய மனப்பண்புகளையும் பயன்களையும் விளக்கிக் கூறும் வாய்ப்புப் பெறவில்லை. இதனால் சிவாகம ஞானம் ஒரு சிலரிடத்தே இருந்துவருவதாயிற்று.

  பல்லவ வேந்தர் காலமுதல் தமிழகத்தையாண்ட வேந்தர் பலரும் திருக்கோயில் களில் பேரன்புகொண்டு அவற்றிற்குப் பொன்னும் பொருளும் ஊரும் நிலமும் வழங்கி வந்ததனால் கோயில்களே மக்கள் வாழ்வில் முதலிடம் பெற்றன. வழக்கறிந்து நீதி வழங்கலும். 1அல்லற்காலத்து மக்கட்கு உணவும் மருத்து வமும் உறையுளும் நல்குதலும், 2போர்க்காலத்துப் பாதுகாப்பளித்தலும் இக்கோயில்களே செய்து வந்தமை யின், கோயில் நடை முறைகளில் நாட்டு மக்கட்கு நெருங்கிய தொடர்புண்டாகி யிருந்தது. சில கோயில்கள் மருத்துவ நிலையமாகவும், சில கோயில்கள் 3கல்விநிலைய மாகவும் அக்காலத்தே விளங்கின. திருக்கோயில் களில் திருப்பதிகங்களைத் தமிழில் ஓதி வழிபடும் முறைவளம் மிக்கிருந்தது. இதனால் நாட்டு மக்களுக்கு இக்கோயில்களின் அமைப் புக்குரிய ஆகம நூல்களை அறிதற்கு ஒருவகையான வேட்கையுண்டாகியிருந்தது, சைவாசிரியன்மார் வட மொழியே பயின்றிருந்தமை யாலும், வடமொழியும் யாவரும் நெருங்கிப் பயிலுதற்கேற்ற எளிய நிலையில் இல்லாதிருந்தமையாலும் அவ்வேட்கை நிரம்புதற்கு இடமில்லாது போயிற்று.

  இந்நிலையில், திருஞானசம்பந்தர் முதலியோர் வழங்கியருளிய சிவஞானத் திருப்பதிகங்கள் திருக்கோயில்களில் எங்கும் ஓதப்படலாயின. பாலியாற்றின் வடகரையிலுள்ள தீக்காலி வல்லம் முதல் தென்குமரி ஈறாகவுள்ள திருக்கோயில்களில் திருப்பதிகங்கள் ஓதுதற்கு வேந்தர்களாலும் செல்வர்களாலும் நிவந்தங்ள் பல ஏற்படுத்தப்பட்டன. நாடெங்கும் திருப்பதிகங்கள் பரவின. மக்கள் வழக்கில் திருப்பதிகங்களின் தொடர்கள் பல பெரிதும் கையாளப்பட்டன. சிந்துபூந்துறையெனத் திருவீதிகளும், 1திருஞான வாய்க்கால் என வயல் வாய்க்கால்களும், திருந்துமா மறைப் பிலாறு என்றாற் போலப் பிறவும் திருப்பதிகச் சொற் றொடர்களாலே பெயர் வழங்கப்பட்டன. வேயன தோளிநாச்சி2, ஒளிவளர் விளக்கு3 சீருடைக்கழல், மறையணி நாவினான்4 ஆணைநமதென்ற பெருமான்5 என்பன முதலிய திருப்பதிகச் சொற்பெயர் தாங்கிய ஆடவரும் மகளிரும் உளராயினர். இவ்வாற்றால் சிவாகம ஞானத்தினும் திருப்பதிகப் பயிற்சிக்கண் மக்களுக்குப் பேரார்வம் உண்டா யிற்று. திருக்கோயிற் சுவர்களில் திருப்பதிகங்களைப் பொறிப்பதும்6 அவற்றைச் செப்பேட்டில் எழுதி இன்புறுவதும் மக்களிடையில் சிறப்புடைச் செயல் களாயின. செப்பேட்டில் எழுதியோர் புகழைத் திருமுறை செப்பேடு கண்ட பெருமாள் என்றும்,

  “ முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா

  றொத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி - இத்தலத்தில்

  எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூத்தன்

  தில்லைச் சிற்றம்பலத்தே சென்று”

  என்றும், திருப்பதிகம் ஓதுவதை இருந்து கேட்டற்கென மண்டபம் அமைத்த சிறப்பை

  “ நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த

  சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக்

  கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான் தெவ்வேந்தர்கெட

  வாட்டிக்கும் தொண்டையர்கோன் மன்”1

  என்றும், திருமுறை செப்பேடு கண்ட பெருமான் திருவீதி2 என்றும் மக்கள் பாராட்டியிருக்கின்றனர்.

  திருமுறைகண்ட வரலாறும் நாட்டில் உண்டான இச் சூழ்நிலை காரணமாக எழுந்ததென்றால் அது தவறாகாது, சேக்கிழார் பெருமான் திருமுறை வழங்கிய பெருமக்கள் வரலாற்றையும் திருத்தொண்டர் வரலாற்றையும் ஆராய்ந் தெழுதுதற்கு இந்நிலைமையும் ஒரு காரணமாக இருந்த தென்று இனிது கூறலாம். திருவொற்றியூர் விழாவில் ஆளுடைய நம்பிகளின் புராணத்தை விரிவுரை செய்ததும் இதுபற்றியே என்று கூறுவது பொருந்தும். இவ்வுண்மை உணராத மடவோர் இன்று திருப்பதிகங்களை ஓதிச் சிவன்கோயில்களில் வழிபாடு செய்வது முறையன்று என்று கூறுவதும், அதற்கு இடையூறு செய்வதும், வழக்குத் தொடுப்பதும் பிறவும் நிகழ்த்திச் சைவ வாழ்வுக்குப் பெருங்கேடு விளைவிக் கின்றனர்: கோயில் வழி பாட்டில் இளைஞர் உள்ளம் ஈடுபடாமல் வெறுப்புணர்வு கொண்டு மாறுபடுதற்கும் மேலே கூறியவை சீரிய காரணங்களாக இருக்கின்றன. நாட்டுத் தலைவர்கள் இதனை மனங்கொண்டு வேண்டுவன செய்தல் கடன்.

  தமிழ்த் திருமுறைகளில் மக்கட்கு இருந்த நன்மதிப்பையும் ஆர்வத்தையும் கோளகி மடத்துச் சான்றோர் உணராமல் இல்லை அவர்கள் சிவாகமத்தையும் சைவத் திருமுறைகளையும் ஒன்று படுத்தினாலன்றிச் சிவநெறியின் முழுத்த பயனை எய்தமுடியா தெனக் கண்டனர். அவரிடையே விளங்கிய வாகீச பண்டிதர் வடமொழியும் செந்தமிழும் சிறப்புறக் கற்ற பெரும்புலவராய் விளங்கினமையின், தாம்பெற்ற புலமையை நாட்டுமக்கட்குப் பயன்படுத்தக் கருதிச் சிவாகமங்களை ஆராய்ந்து அவற்றின் கருத்துக்களை இனிய அகவற் பாக்களால் பாடியருளினார். அது இந்த ஞானாமிர்தமாகும்.

  வேதாந்தமாகிய உபநிடதப் புலமைக்கும் சித்தாந்தமாகிய சிவாகமப் புலமைக்கும் இடையே நடந்த பூசல் காரணமாகச் சிவாகமங்கள் பல இறந்தன. மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் இப்பூசலின் தொன்மைக்கு ஓரளவு சான்று வழங்குகிறது. அச்சிவாகமங்களைப் பின்பற்றிவந்த இந்த ஞானாமிர்தமாகிய தமிழாகமத்திற்கும் அந்த இடையூறு வாராமலில்லை. இந்த ஞானாமிர்தம், ஞானம், யோகம், கிரியை, சரியை என்ற நான்கு பாதமாக இருந்தது. இப்போது ஞானபாதம் ஒன்றே கிடைத் துள்ளது; ஏனைப்பாதங்கள் இறந்து போயின. கிரியாபாதத்தின் ஒரு செய்யுள் மட்டில் சிவஞான பாடியத்தில் சிவஞான முனிவரால் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது ஒரு செய்யுளின் தலைப்பு மட்டில் இந்த ஞானாமிர்த உரையில் காட்டப்படுகிறது. எஞ்சிய அனைத்தும் இறந்தேபோயின.

  ஞானாமிர்த ஆசிரியரும் உரைகாரரும்

  ஞானாமிர்தத்தை எழுதிய ஆசிரியர் வாகீச முனிவர் என ஏடுகள் கூறுகின்றன. இவருடைய பெற்றோர் பெயர் தெரிந்திலது; ஆயினும், இவர்க்கு ஞானமருளிய குரவர் பெயர் மட்டில் இந்நூலின் ஆசிரியர் துதியில் பரமானந்த முனிவர் என்று காணப்படுகிறது. “சைவசிகாமணி, பரமானந்தத் திருமா முனிவன்” என்பது அப்பகுதி. இதற்கு உரைகண்ட சான்றோர், “பரமானந்த முனிவன் என்னும் தீஷாநாமத்தை யுடைய மகா முனிவன்” என்று கூறுவதனால், இவரது இயற்பெயர் வேறு உண்டு என்பது விளங்கும். இந்நூலின்கண் ஞானம் அருளிய குரவனை.

  “பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ

  வாடாத் துப்பின் கோட லாதி

  அருளா பரணன் அறத்தின் வேலி

  பொருண்மொழி யோகம் கிரியையிற் புணர்த்த

  அருண்மொழி திருமொழி போலவும்1”

  என்று இந்நூலாசிரியர் பாராட்டுதலால், ஞானசிரியராகிய பரமானந்த முனிவர்க்கு அருண்மொழித்தேவர் என்பது இயற் பெயராதல் இனிது விளங்குகிறது.

  இனி, கோடலாதி என்பதற்குப் பழையவுரைகாரர், “கோடலம்பர் கிழான்” என்று உரை கூறினாராக, வேறோர் உரை வேறுபாடு, “கோடல் என்பது கோடலம்பாகையென்னும் ஊர்; அருண் மொழி யென்பது ஸ்ரீபரமானந்த முனிகளின் பிள்ளைத் திருநாமம்; குடிப்பெயர் அம்பர் கிழான்” என்று கூறுகிறது பாகையென்பது பாக்கம் என்பதன் மரூஉவாதலின், கோடலம்பாகை கோடலம் பாக்கம் என்பதாம். அதுவே இப்போது கோடம்பாக்கம் என்ற பெயருடன் சென்னைக்கு அருகில் உளது. காவிரிபாயும் கல்லாடனா ரென்றும் சான்றோரால் புகழப்பட்ட அம்பர்கிழான் அருவந்தையைப்போல இவரும் அம்பரென்னும் ஊர்க்குக் கிழமைபூண்ட குடியில் தோன்றினவராதலால் அம்பர்கிழான் என்று குறிக்கப் படுகின்றார். இவர் பின்னர்க் கோடலம்பாகையில் தங்கிச் சிவஞானப்பணி புரிந்தமையின் கோடல் அம்பர்கிழான் என்றும்கோடலாதி யென்னும் குறிக்கப்பெறுகின்றார். இக் கருத்தனைத்தும்,

  “இருணெறி மாற்றித்தன் தாணிழ

  லின்பம் எனக் களித்தான்

  அருண்மொழித் தேவன்நற் கோடலம்

  பாகை யதிபன் எங்கோன்

  திருநெறி காவலன் சைவ சிகாமணி

  சில் சமய

  மருணெறி மாற்ற வரும் பரமானந்த

  மாமுனியே”

  என இவர் பாடியதாக வழங்கும் தனிப்பாட்டாலும் இனிது விளங்கும்.

  வாகீசர் இங்ஙனம் பரமானந்த முனிவர்பால் சைவ சித்தாந்த நூல்களாகிய சைவாகமங்களைப் பயின்று புலமை நிறைந்து விளங்கிய காலத்தில். சென்னைக்கு வடக்கில் அதற்கண்மையில் உள்ள திருவொற்றியூரில் கோளகி சந்தானத்தின் சைவமட மொன்று இருந்து சிவாகம ஞானப்பணி புரிந்து வந்தது. அங்கே கி.பி. பத்துப்பதினோராம் நூற்றாண்டில் நிரஞ்சன தேவர் என்பார் இருந்து சிவாகம ஞானமாகிய சிவதன்மத்தை ஓதிக் கொண்டு வந்தார். பல்லவவேந்தருள் மூன்றாம் நந்தி வன்மன் மகனான கோவிசய கம்பவன்மன் காலத்தில் அவனது 19-ஆம் ஆட்சி யாண்டில் நிரஞ்சன தேவர் திருவொற்றியூரில் சிவன் கோயில் ஒன்றையெடுத்து அதற்கு நிரஞ்சனதேவேச்சுரம் எனப்பெயரிட்டு வேண்டும் நிலங்களையும் நிவந்தமாக விட்டார்.1 அவர்பால் சதுரானன பண்டிதர் என்ற சான்றோர் ஒருவர் மாணவராய்ச் சிறந்து விளங்கினார்.

  இச்சதுரானனர் கேரளநாட்டினர்; இளமையில் இவர் இராட்டிரகூட வேந்தனான வல்லபனுக்கு நண்பராய் இருந்து, பின்பு சோழ நாட்டிற்குவந்து சோழன் இராசாதித்தனுக்குத் துணைவராய் இருந்துவந்தார் என்றும், இராட்டிர கூட வேந்தனால் சோழன் இறந்தானாக, அவனுடன் தன் உயிரும் போகாமைக்காக வருந்தி வாழ்க்கையில் வெறுப்புற்று நிரஞ்சன குரவரை அடைந்து துறவு பூண்டார் என்றும்; இராட்டிரகூட கன்னரதேவனான மூன்றாம் கிருஷ்ண தேவருடைய இருபதாம் ஆட்சியாண்டில் தோன்றிய 1கல்வெட்டொன்று கூறுகிறது. கேரளநாட்டு வழக் காறுகள் சில திருவொற்றியூர்க் கோயிலில் காணப்படுதற்குக் காரணம் இச்சதுரானன பண்டிதரே என்றும் கருதுகின்றனர்.

  நிரஞ்சனதேவர்க்குப்பின் சதுரானன பண்டிதரே அத் திருமடத்துக்குத் தலைவரானார். அவர் வழிவந்தோரும் தம்மைச் சதுரானன பண்டிதரென்றே கூறிக்கொண்டனர். அதனால் தான் பத்தாம் நூற்றாண்டுமுதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் பல சதுரானன பண்டிதர்கள் காணப் படுவாராயினர். அவர்கள் இருந்தமடமும் சதுரானன பண்டிதர் மடம் என்றே மக்களால் வழங்கப்பட்டு வந்தது; “தடக்கையான் சதுரானன பண்டிதன் மடத்துளாள் என் மனத்துறை வல்லியே”2 என்று கம்பர் பாடியதாக நிலவும் பாட்டும் இதனை வற்புறுத்துகின்றது. சதுரான பண்டிதர் தமது ஞான குரவரான நிரஞ்சன தேவர் பெயரால் திருவொற்றி யூர்க் கோயிலில் நிவந்தங்கள் ஏற்படுத்தியிருப்பதை அவ்வூர்க் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.3

  முதல் இராசேந்திரன். முதற் குலோத்துங்கன் முதலிய சோழ வேந்தர்கள் காலத்தில் சதுரானனபண்டிதர்கள் சிறந்து விளங்கினர், முதல் இராசேந்திரன் திருநாளாகிய மார்கழித் திருநாளன்று திருவொற்றியூர் இறைவன் நெய்யாடி யருளுதற்கு நிவந்தமாக சதுரானனார் நானூற்றைம்பது காசு வைத்ததாக ஒரு கல்வெட்டு4 கூறுகிறது. அதன்கண். அவர், “திருவொற்றியூர் திருமயானமும் மடமுமுடைய சதுரானன பண்டிதன்” என்று குறிக்கப்படு கின்றார். வேறு கல்வெட்டுக்களும் அவரை, மடமுடைய சதுரானன பண்டிதன்5 என்றே குறிக்கின்றன.

  சதுரானனபண்டிதர் காலத்தில் வாகீசர், கோடலம் பாகையி லிருந்து திருவொற்றியூர் போந்து அங்கே தாம் இருந்து சித்தாந்த ஞானத்தை மக்களுக்கு அறிவுறுத்திவந்தார். கோளகிசந்தானத்துச் சோமசம்பு முதலியோர் வகுத்துரைத்த பத்ததிகளையும் அவற்றிற்குரிய சிவாகமங்களையும் அறிவுறுத்தி யதனால் வாகீசரைச் “சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுர பண்டிதர்” என்று அந்நாளையோர் வழங்கினர். இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் திருவொற்றி யூரில் பங்குனி யுத்தரப்பெருவிழா நடைபெற்றது. அதற்குச் சோழவேந்தனும் வந்திருந்தான். ஆறாம் திருநாளன்று திரு வொற்றியூர் இறைவனான படம் பக்க நாயகதேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கம் செய்தருளினார். அக்காலை “ஆளுடைநம்பி ஸ்ரீபுராணம்” விரிவுரை செய்யப்பட்டது. அதனை அங்கிருந்து வேந்தனுடன் ஒருங்கு கேட்டு இன்புற்றோருள் சதுரானன பண்டிதரும் வாகீச பண்டிதரும் சிறந்து விளங்கினர். வாகீச பண்டிதரே அப்புராணத்தை விரிவுரை செய்தார் எனக்கருது பவரும் உண்டு. அப்பொழுது பிறந்த கல்வெட்டொன்றில் கையெழுத்திட்டோரில் முதல்வராக “இப்படிக்கு இவை மடமுடைய சதுரானன பண்டிதன் எழுத்து” என்றும் இவர்கள் கையொழுத்திட்டுள்ளார். இதனால் அக்காலத்தே மடத்துக்குத் தலைமை சதுரானன பண்டிதர்பால் இருந்தமை புலனாம்.

  இவ்வண்ணம் அரசர் மதிக்கும் சிறப்புற்றிருந்த வாகீச பண்டிதர் பின்பு கோளகி சந்தானத்தின் கிளையாகத் திருநெல் வேலி மாவட்டத்துத் திருவாலீச்சுரத்தில் இருந்த மடத்துக்குத் தலைவராய்ச் சென்று சேர்ந்தார்.

  திருவொற்றியூரில் இருந்தபோது திருப்பதிகங்களின் சிறப் பையும், சிவாகம ஞானமாகிய சிவதன்மத்தை அறிவதில் மக்கட் கிருந்த விருப்பையும் வாகீசபண்டிதர் நன்கு கண்டு சிவாகமக் கருத்துக்களைத் தமிழில் இனிய அகவற்பா வடிவில் செய்தார். அதற்கு நாட்டில் மிக்க வரவேற்புக் கிடைத்தது.

  வாகீசர் என்ற பெயரினும் ஞானாமிர்தாசிரியர் என்ற சிறப்புப் பெயரே நாட்டில் பெரிதும் பயில வழங்குவதாயிற்று. அவரும் பின்பு வாகீச முனிவரானார்.

  வாகீச முனிவர் திருவாலீச்சுரம் அடைந்து அங்கிருந்த கோளகி மடத்துக்குத் தலைமைதாங்கி இருந்தாராயினும், அவர்க்கு ஞானாமிர்த ஆசிரியர் என்ற பெயரே அங்கும் பெருஞ் செல்வாக்குப் பெற்றது. அவர்க்குப்பின் அவரது மடத்தினர் தம்மை ஞானாமிர்த ஆசிரியர் சந்தானம் என்றே கூறிக் கொண்டனர். திருவாலீச்சுரத்தில் “கோளகிமடத்து ஞானாமிர்தாசிரியர் சந்தானத்தில் வந்த புகலிப் பெருமாள் என்பவரே திருக்கோயிலில் சிவதன்மத்தை ஓதவேண்டும் என அங்குக் கோயில் காரியம் பார்த்துவந்த சிவப்பிராமணர் எண்மரிடை உடன்படிக்கையுண் டாயிற்று என்று அங்கே உள்ள ஒரு கல்வெட்டுக்1 கூறுகிறது.

  பிறிதொருகால் பாண்டியதரையன் என்ற தலைவ னொருவன் நந்தவனம் ஒன்றை அவ்விடத்தே நிறுவி அதற்குத் தன்பெயரால் பாண்டியதரையன் திருநந்தவனம் எனப் பெயரிட்டு நிவந்தங்கள் ஏற்படுத்தியிருந்தான். அங்கே கிடைக்கும் பூக்களையெடுத்துத் திருவாலீச்சுரத்து இறைவனுக்கு மாலைதொடுத்துத் தரும் திருப் பணிபற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியில் அப்பணி செய்தற்குரியார் அக்காலத்தே கோளகிமடத்த வரான அகோரதேவர் என்று முடிபு கண்டனர்; அது செய்தற்கென அவர்க்கு நிலமும் விட்டனர். அதுபற்றிப் பிறந்த கல்வெட்டு, “கோளகிமடத்து ஞானாமிர் தாசிரியர் சந்தானத்து அகோரதேவரே பாண்டியதரையன் திரு நந்தவனத்தைப் பாதுகாப்பதும், பூக்கொய்து மாலை தொடுத்துத் தருவதும் செய்ய வேண்டும்” எனக்கூறுகிறது.2 இவ்வாற்றால் ஞானா மிர்தாசிரியரான வாகீச முனிவருக்குப்பின் அவரது வழிமுறை ஞானாமிர்தாசிரியர் சந்தானம் எனச் சிறப்புற்று விளங்கினமை பெறப்படும்.

  இஃது இங்ஙனமிருக்க, பிற்காலத்தே நிரஞ்சன தேவர் வழி வந்த கோளகி சந்தானம், நிறைந்த நாயனார் சந்தானமென மருவி வேறுவகையான வரலாறும் பெறுவதாயிற்று. அது வருமாறு:-

  “இனி, சந்தானகுரவர் கன்மசித்தாந்த குரவர், ஞான சித்தாந்த குரவர் என இருவகையர்….. இவருள் கன்மாவரண சிந்தாத்த குரவரியல்பு வருமாறு: … கன்மாவரண சித்தாந்த குரவருள் இக்காலம் அடுத்து நின்றோர் யாரெனில் உக்கிரச் சோதி, சத்தியோசோதி, ஞான சிவாசாரியர், சோமசம்பு சிவாசாரியர், திரிலோசன சிவாசாரியர், அகோர சிவா சாரியர் நாராயண கண்டர். இராம கண்டர். போசராசர் முதலியோ ரென்க. இவர்களாற் பண்ணப்பட்டன அஷ்டப் பிரகரணமும் கிரியாக்கிரமமும் சித்தாந்த சாராவளியும் பிறவு மாம். இனி ஞானவரான சித்தாந்த குரவர் இயல்பு வருமாறு……….. இந்நந்திகேசுர சந்தான வரலாறு:

  “சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்

  உவமா மகேசர் உருத்திர தேவர்

  தவமால் பிரமீசர் தம்மிற்றாம்பெற்ற

  நவமெழு நான்குடன் நந்திபெற்றானே

  பவமாம் பரிசு பலபல காட்டும்

  தவமா நெறியில் தலைவரு மான

  நவநாத சித்தரும் நந்தி யருளால்

  சிவமாம் பரிசு திகழ்ந்து நின்றாரே எனவும்,

  “நந்நி யருள்பெற்ற நாதரை எண்ணுறின்

  நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

  மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரன்

  என்றிவர் என்னுடன் எண்மரு மாமே”

  எனவும் வருதலான் உணர்ந்துகொள்க. இவருள் நந்திகள் நால்வராவார்: சனகர், சனற்குமாரர், சனந்தனர், சனாதனர் என்போராவார். திருமூலதேவர்க்குச் சதாசிவ முனிகள் என்றும் பெயர். இச்சந்தானம் விரிந்தவாறு: ஆதியில் சனகரால் சம்பு சந்தானமும் மலையமான் சந்தானமுமாக இரண்டாய்ப் பின் பலவாகப் பரம்பிற்று. சனற்குமாரரால் விஞ்ஞான தேவர் மெய்கண்ட தேவர் சந்தானம் என இரண்டாய்ப் பின் பலவாயின; …..இனி சனந்தனரால் உபமன்னிய தேவர், பரம தேவர். சிவானந்த போதர் என மூன்றாய்ப் பின் பலவாயின; சனாதனரால் பிரம தேவர் சிங்கநாத தேவர் என இரண்டாய்ப்பின் பலவாயின; சிவயோக மாமுனிகளால் வாமதேவர் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின. பதஞ்சலி களால் நிறைந்த நாயனார் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின; ஞானாமிர்தம் இவர் செய்த நூல் போலும். வியாக்கிரபாதரால் சத்தியோ சாதர் சந்தானம் ஒன்றாய்ப் பின் பலவாயின; திருமூலதேவரால் எழுவகைச் சந்தானமாகிப் பரம்பின. அது திருமந்திரமாலையுள்,

  “ மந்திரம் வந்த வழிமுறை மாலாங்கன்

  இந்திர னோடு பிரமன் உருத்திரன்

  கந்துருக் காலாங்கன் கஞ்ச மலையமான்

  இந்த வெழுவரும் என்வழி யாமே”

  என்பதனால், பிரமதேவர். இந்திர தேவர், விட்டுணு தேவர், உருத்திர தேவர், கந்துரு மகாவிருடிகள், காலாக்கினியுருத்திரர், கஞ்சனூர் மலையமான் என எழுவரையும் அறிக. இவர் வழி அளவின்றிப் பரம்பிற்றாதலின் ஈண்டு எழுதிற் பெருகும்; அது சந்தான வரலாற்றிற் காண்க”1 என்பது முத்தி நிச்சயப்பேருரை.

  இனி, ஞானாமிர்த ஆசிரியரான வாகீச முனிவர் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் இருந்தவர் என்பது மேலே காட்டிய கல்வெட்டுக்களால் தெரிகிறது, அவ்வேந்தன் கி.பி. 1163-ல் இளவரசனாகி, கி.பி 1166-ல் சோழப் பேரரசுக்கு முடி மன்னனா னான் என்றும். 1178 வரை அரசு செலுத்தினான் என்றும் சோழர் வரலாறு கூறுகிறது. அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் எழுந்த கல்வெட்டிலேயே இவரது பெயர் இடம் பெறுவதால். இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டி லேயே தோன்றி நிலவியிருக்க வேண்டுமென்பது தெள்ளிது. அக்கல்வெட்டின் காலம் கி.பி.1175; அப்போது இவர் வாகீசபண்டிதர் என்றே வழங்கப்பெற்றிருத்தலால், பின்னர் ஞானாமிர்த ஆசிரியர் என்றும், வாகீச முனிவ ரென்றும் சிறப்புற்றிருப்பது நோக்கி. இவருக்கு அப்போது வயது முப்பதாகக் கொள்வோமாயின் , இவர் கி.பி. 1145 அளவில் பிறந்திருக்கலாம். ஞானாமிர்தம் என்ற இந்நூலின் நடை யினையும் கருத்தோட்டத்தையும் கருதுவோ மாயின், இந்நூல் தோன்றிய போது வாகீசருக்கு வயது நாற்பதுக்குக் குறையாது. ஆகவே இவர் இதனைக் கி.பி. 1185 அளவில் எழுதியிருக்கலாம். பின்னர் அவர் ஞானாமிர்த ஆசிரியராகவும் வாகீசமுனிவராகவும் கோளகி மடத்துத் தலைவராகவும் பல்லாண்டுகள் இருந்திருக்கின்ற மையின், இவர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகாறும் வாழ்ந்திருந்தார் எனக் கொள்வது மிகையாகாது.

  இனி, சிவாகமங்கள் பலவும் ஞானம் யோகம் கிரியை சரியை என நான்கு வகையாகச் சிவஞான தன்மங்களை வகுத்துக் கூறுவன; அம்முறையே சொல்லக் கேள் என்ற கருத்துப்பட,

  “அருமறை யெவையும் திருமிகு ஞானம்

  இலங்கொளி யோகம் நலங்கிளர் கிரியை

  சரியை யென்ற விரிதரு பாதம்

  கறையறு மறைமுறை நெறியின்

  அறைய மற்றரோ அறிகதில் அமர்ந்தே”2

  என்றும், ஞானபாதப் பொருளைக் கூறலுற்று,

  “பிறழா நிலைமைப் பெரும்பெயர் ஞானக்

  கறையறு பாதம் முறையுறக் கழறின்”3

  என்றும் கூறுவதை நோக்கும்போது இவர் ஞான முதலிய நான்கு பாதங்களையும் இந்த நூலின்கண் கூறுகின்றார் என்ற உணர்வு தோன்றுகிறது. சிவஞான பாடியப் பேருரையாலும் இந் நூலின் உரையாலும் இந்நூலின் கிரியாபாதப் பகுதி இருந்த தென்பது தெளிவாகி அவ்வுணர்வை உறுதிசெய்கின்றது. ஆனால் அப்பகுதிகள் முற்றும் காலக் கேட்டால் இறந்தன எனக் கொள்வ தன்றி வேறில்லை. அறிவுடையோர் அரும்பாடு பட்டு அறிந்து உரைத்தருளிய அறிவுச் செல்வங்களைப் பெற்றும் அவர் வழிவந்த தமிழ்ச் சைவவுலகம் அதனைப் பேணிக் காக்கும் மனமாண் பின்றிக் கெட்டதை நினைப்பின் நம்மனோர் நெஞ்சு வருந்தத்தான் செய்கிறது. தமிழ் இலக்கியவுலகில் செல்லும் தமிழ்நெஞ்சம் அடிக்கடி இத்தகைய வருத்தங்களை எய்துவது இயல்பா கவுளது. இறந்தது நினைந்து இனி இரங்குவதை விடுத்து இந்நூற்கண் செல்வாம்.

  சிவதன்மம் உரைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் என்பது “பசுபாசத்தொடு பதியாய் பெற்றி”4; பசு என்பது ஆன்மா; பதி, சிவம், ஆன்மாவும் சிவமும் சித்துப் பொருள்கள்; ஆன்மா அனாதியே மலக்கலப்புற்றுத் தன்னறிவு மறைப்புண்டு பிணிப் புற்றமையின் பசுவாயிற்று. ஆதலால் பசுவின் கண் அறிவும் அறியாமையும் விரவிநிற்கின்றன. இதனை, ஆசிரியர்,

  “ஒல்லா வல்லழல் போல நல்லோய்!

  ஞானமும் இன்மையும் நலம்மிக்கு

  ஆனா வுயர்கட்கு உணர்வு அனைவகையே”

  என்று விளக்குகின்றார். சிவமாகிய பதிப்பொருட்கு மலத் தொடர்பே கிடையாது; அஃது எஞ் ஞான்றும் ஒரு தன்மைத்தாய் அனாதி நின் மலப்பெருஞானமே வடிவாய் இருக்கும். ஆன்மா மலனாதலும், பதி நின்மலனாதலும், அனாதி;

  “அம்ம சீருணம்,

  திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்

  இறை புற்கலனுக்கு என்றனன் குறைவின்று

  அறைகழல் அருளொலி பரந்த

  பொறைவளர் சாரற் கயிலை யோனே”1

  எனக்காட்டி, செம்பிற்குக் களிம்பும் பளிங்குக்கு ஒளியும் போல ஆன்மாவுக்கு மலமும், சிவத்துக்கு மலமின்மையும் அமைந்தன என்பர். அனாதிமலத் தொடர்பால் அறிவு மறைப் புண்டு சிற்றறிவே விளங்கப் பெறும் பசுவின்பால் அருள் நிறைந்த பதிப்பொருள், தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி உடல் கருவி உலக நுகர்ச்சிகளைப் படைத்து அப் பசுவுக்களித்து அவற்றின் துணையால் மலமறைப்பினின்றும் வீடு பெறச் செய் கின்றான்.

  இம் மாயை, ஏனைப் பதியும் பசுவும் போல அனாதி நித்தப்பொருளாயினும், சித்துப்பொருள் அன்று; அசித்தாகிய அசேதனம் எனப்படும். “வாலிய சேதனம் அன்று இது; தீதறு செயல்கள் கோதுக அசேதனமாகலின்” என்பது காண்க. மாயை யானது, ஆன்மா மலத்தொடக்கினின்றும் விடு பெறுங்காறும் உடல் கருவி முதலியவற்றை உதவி நின்று பின்னர்ப் பதிப் பொருளின் சத்தியில் ஒடுங்கும். அசேதனமாகிய மலமறைப்புற்று வருந்தும் ஆன்மாவுக்கு மேலும் மாயாகாரியமான உடல் கருவியுலகுகளும் வினையுமாகிய அசேதனங்களை இறைவன் வழங்கியது அந்த மலத்தைக் கெடுத்தற்காகவேயாம்;

  “உடையுறு

  கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த

  பெற்றியின் இவனுக்கு உற்ற பிணி”

  என்பர். உலகப்படைப்பே ஆன்மாவின் பொருட்டு; உலகியற் பொருள்களோடு தொடர்புற்றா லன்றி ஆன்மாவுக்கு உய்தியில்லை. இதனை,

  “விரவிய பந்தம்

  கூடா தோடின் குலவிய போகம்

  துய்த்தல் செல்லான், செல்லானாக

  எய்த்த லின்றாம் இருவினையாக

  அபவர்க்கமும் மற்று அடையான்” என்பர்.

  இங்ஙனம், இறைவனது பேரருள்காரணமாக மாயா காரியங்களில் போக்குவரவு புரியும் ஆன்மா, போக நுகர்ச்சிக் காக உடல் கருவி முதலியவற்றிலும் அவற்றின் பயனாக வரும் வினைகளிலும் கருத்தைச் செலுத்தாமல், அவற்றின் தொடக்கறு தலையே விரும்பி அதற்குரிய முயற்சியில் இறங்கி, வினைத் தொடர்பைக் கெடுக்கு முகத்தால் மாயாமலத் தொடர்பும் ஆனவமலத் தொடர்பும் போக்கி, மெய்யுணர்வு விளங்கப் பெற்று ஆணமவூதியமாகிய இறவாத இன்ப அன்பு நிலையமாகும் சிவபோகப் பெரும் பொருளை எய்துதற்குரியனாகின்றான். இதனை இந்நூல்.

  “ஆனா முன்வினைப்

  பயன்பல மாந்தி வியந்துறை காலை

  வல்வினை யெல்லை செல்லாக் காலத்து

  ஒல்லென ஒப்ப உயர்பெருஞ் சிவனது

  சத்தி நிபாதம் தழைப்ப மெய்த்தகு

  குருபரம் பரனது அருளின் செவ்வி

  வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்

  உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

  தேயாது யாவுமாய் அறிவகன்ற

  ஆயாச் சிவனது அணிகிளர் சீர்த்தி

  நின்மலத்தியையும், பின்மலத் தியையான்

  அந்தமில் பந்தம் மற்று இவ்வணம்

  சிந்துதல் சிந்தல் தெரியுங்காலே”

  என்று கூறுகின்றது.

  இவ்வாறு சிவஞானச் செந்நெறிக்கண் நிகழும் ஆன்ம வாழ்வைத் தொகுத்துக் காட்டிப் பின் அறுபத்தேழு அகவற்பாக்களால் ஒவ்வொருபகுதியினையும் விளக்கிச் செல்வது இந்நூலாசிரியரது பொது வியல்பும், பசு பாசங்களின் உண்மை காட்டு தற்கும், சற்காரியவாத முதலிய கொள்கைகளை விளக்குதற்கும், அளவை களாலும் கடா விடைகளாலும் பொருளுணர்த்தும் நெறியை மேற்கொண்டொழுகுவது இவரது சிறப்பியல்புமாகும்.

  இந்நூலை ஆராய்ந்த பண்டையோர், பாயிரமொழிந்த ஏனைப் பகுதிகளைச் சம்மிய ஞானம், சம்மிய தரிசனம், பாச பந்தம், தேகாந்தரம், பாசவனாதி, பாசச் சேதம், பதியுண்மை, பாச மோசனம் என்ற தலைப்புக்களின் கீழ் வகுத்து, ஒவ்வோரக வலுக்கும் கருத்துரை வகுத்துத் தந்துள்ளனர். இவ் வகுப்பும் கருத்துரையும் உரையில்லாத ஏடுகளிலும் இருத்தலின், இவை உரைகாரரால் வகுக்கப்பட்டவையல்ல வென்பது தெரிகிறது. உரைகாரரும் அவ்வப்பகுதிக்குரிய உரை முடிந்ததும், அதனை முடித்துக்காட்டி மேல்வரும் பகுதிக்குத் தொடர்பு காட்டும் மரபினை மேற்கொள்ளவில்லை. இதனால் இந்நூலின் பொருள் வகுப்பும், கருத்துரையும், உரையும் ஆகிய யாவும் தனித்தனி நின்று பொருள்காட்டி நிற்குமளவில் அமைந்துவிடுகின்றன; இவற்றிற்கும் நூலாசிரியர்க்கும் தொடர்பில்லையென்பது தெளியவிளங்கு கிறது.

  ஒவ்வொரு பாட்டின் உரையிறுதியிலும் இலக்கணக் குறிப்பை எழுதுவது இவ்வுரைகாரரின் முறையாகவுளது. இக் குறிப்புக்கள் சில ஏடுகளில் சிறிது மிகுதியாகவும் சிலவற்றில் குறைவாகவும் உள்ளன. இவற்றை நோக்கும்போது இலக்கணக் குறிப்புகளுட் சில பிற்காலத்தவர்களால் கூட்டவும், குறைக்கவும் பட்டுள்ளன என்று கருத இடமேற்படுகிறது. இக்குறிப்புக்களும் பெரும்பான்மை அசைநிலைகளை எடுத்துக் காட்டுவதிலே நின்று விடுகின்றன. ஒரோவிடத்தில் அருஞ்சொல்லுக்குப் பொரு ளெழுதிக் காட்டுவதும் உண்டு. ஆயினும். இவ்வுரைப்பகுதியைச் சுட்டிக்காட்டிமறுக்கும் மறுப்பும் நம் சிவமாதவச் சிவஞான முனிவரால் நிகழ்த்தப் படுகிறது; அதனை இந்நூலுள்ளே காணலாம். இதனால், இந்த ஞானாமிருத உரைகாரர் மாதவச் சிவஞான முனிவர்க்கு காலத்தால் முற்பட்டவர் என்பது தெளிவாகத் தோன்றுகிறது.

  உரைகாரரது உரைநடை, ஏனைத் தமிழ்நூல் உரைகாரர் களது நடைபோல் இலக்கியவளம் செறிந்ததன்று; பாட்டின் பொருளைச் சிறிது கற்றவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தக்கவகையில் அமைந்திருக்கிறது. ஞானாமிர்த மூலத்தின் நடை

  சங்க இலக்கியப் பாட்டுக்களைப்போல் சொற்கோப்பும் பொருட் செறிவும் கொண்டு நிமிர்ந்து நிலவுவதுகண்டு, அதன் பொருளை எளிய நடையில் காட்ட வேண்டுமென்ற எண்ணத் தால் இவ்வாறு எழுதப்பட்டதோ என நினைக்கவும் இடமுண்டாகிறது. உரைக்கப்படும் உரைப் பொருளை வற்புறுத்தவும், ஒத்த கருத்துக்களை ஏனை நூல்களிலிருந்து எடுத்துக்காட்டவும் இவ்வுரைகாரர் முற்படவில்லை. ஞானாமிர்தப் பாட்டுக்கு மூலமாகவுள்ள ஆகமங்களையோ ஆகமக் கருத்துக்களையோ எடுத்துக் காட்டுவதிலும் அவர் எண்ணம் செல்லவில்லை. இவ்வாற் றால், இவ்வுரைகாரர், ஞானாமிர்தாசிரியர் சந்தானத்துக்குரிய மடம் ஒன்றில் இருந்து. அங்கே இந்நூற் பொருளை அறிந்தோர் சொல்லக் கேட்டவாறே எழுதியவராதல் கூடும் என்பது தெரிகிறது. வேறே இவ்வுரைகாரரைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதை நினைக்கும்போது தக்கயாகப் பரணி உரைகாரர் நினைவு நெஞ்சில் எழுகிறது. அவரைப் போல் அத்துணைப் பரந்த நூற்கேள்வியும் விரிந்த புலமையும் இவ்வுரை காரர் பால் உண்டென்பதற்கேற்ற சான்றுகள் உரையகத்தே காணப்பட்டிலவாயினும், பாட்டின் முறுக்கை அவிழ்த்துக் கண்ணழித்துப் பொருள்காட்டும் திட்பமும் தெளிவும் நம் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கின்றன. இந் நிலையில், இந்த ஞானாமிர்தமென்னும் தமிழாகமத்தின்கண்,

  “ஆருஞ் சுவைபல யாரும் தெளிய

  அணியுரை செய்

  சீரும் சிறப்பும் உடையோய் இரு

  மொழிச் செல்வ நின்றன்

  பேரும் தெரிந்திலன், என் செய்குவேன்

  இந்தப் பேதையனே”

  என்று டாக்டர். திரு. உ. வே. சாமிநாரையதவர்கள் தமது உளமுருகி வருந்தியுரைத்த உரையினையே நாமும் இங்கே உரைத்துக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

  ஞானாமிர்தச் செம்பொருள்

  ஞானாமிர்தம் என்பது ஞானமாகிய அமுதம் என விரியும். ஞானமாவது சிவநெறிபற்றிய அறிவு; சிவம், உயிர், உலகு என்ற முப்பொருளின் உண்மையும் ஒவ்வொன்றிற்கும் உள்ள இயல்பும் தொடர்பும் அறிந்துகொள்ளும் அறிவு. அமுதம் தன்னை உண்டாரை உலகில் நெடிதுவாழச் செய்யும் இயல்புடையது; அது போலவே, சிவநெறிபற்றிய அறிவாகிய ஞானம், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து சிவபரம்பொருளின் திருவருள் இன்ப வாழ்வில் என்றும் பொன்றாது நின்று நிலவச் செய்யும் செயல் நலம் உடையது.

  இதனை உரைக்கப் புகுந்த ஆசிரியர், பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, விநாயகர் துதி, கலைவாணி துதி, ஆசிரியர் துதி என வணக்கம் கூறியபின் அவையடக்கம் முதலியன கூறுகின்றார். கடவுள் வாழ்த்து என்ற அகவலில் முழுமுதற் கடவுள் சிவபரம் பொருளே என்றும், அவன் “அறவோள் அமர்ந்த பாகன்”, என்றும், “துறவோர்க்கு எல்லையாகிய தொல்லோன்” என்றும் குறிக்கின்றார். விநாயகர் துதியில், அவரது யானைமுகத்தைச் சிறப்பித்துக்கூறி, “யாண்டு பல நிரம்பினும் இளமையொடு கெழீஇ, ஞானமாமதம் தருக்கி, ஆனா வினையுகச் சீறும் நனை கவுள் வேழம்” என மிக்க நயப்புற மொழிந்து வணங்குகின்றார். கலைமகளை வெள்ளிதழ்த் தாமரை மேல், “தீதற இருந்த ஆதிநாயகி” என்றும் அவளுடைய “கழலிணை” கருதுதற்குரிய தென்றும் கட்டுரைக்கின்றார். ஆசிரியர் துதியின்கண், தம் ஆசிரியருடைய அருளும் அறிவும் பொறையும் பிறவுமாகிய குணநலங்களைக் கற்பனை வளம் பொருந்தச் சிறப்பித்துப் பாராட்டி, புலன் அழுக்கற்ற அவருடைய பொற்பும் பெயரும் விளங்க.

  “ஐம்புல வேழத்து வெந்தொழில் அவியக்

  கருணை வீணை காமுறத் தழீஇச்

  சாந்தக் கூர்முள் ஏந்தினன் நிறீஇத்

  தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி

  பரமா னந்தத் திருமா முனிவன்”

  என்று பாடி அவர் திருவடியைப் பரவிப்பணிகின்றார்.

  பாயிரத்தின் இறுதிப்பகுதியாக நிற்பது அவையடக்கம், இதன்கண் ஞானாமிருத ஆசிரியர், இதனைத் தாம் பாடுதற்குரிய காரணம், இதனை உரைத்தல் வேண்டும் என்று எழுந்த விருப்பமே யன்றி வேறில்லை என்று குறிக்கின்றார். நூல் வரலாறு கூறு மிடத்து, முன்பொருகால் தேவரும் அவுணரும் கூடி உவர்க்கடல் கடையப் பிறந்த அமிழ்தத்தின் வரலாறு கூறி, அதுபோலவே இறைவன் அருளிய ஆகமத்தை மத்தாகவும் ஞானாசிரியனது அருளுரையை நாணாகவும் இயற்கையறிவைக் கையாகவும் கொண்டு அஞ்ஞானம் என்னும் கடலைக் கடைய இந்த ஞானா மிருதம் பிறந்தது என்று கூறுகின்றார். இதுபற்றியே இந்நூல் ஞானாமிருதம் என்று பெயர் பெறுவதாயிற்று. இந்நூல் வரலாற்றுக்குத் துணைசெய்த சிவாகமங்களை இந் நூலாசிரியர் மறை என்றும், பிறவிப் பேரிடர்க்கு அஞ்சிமுறையிட்ட தேவர் முனிவர்கட்கு அவற்றை இறைவன் அருளினன் என்றும், இம் மறைகள் நான்காக இயலுமென்றும், அவை ஞானம், யோகம், கிரியை, சரியை என்பனவாம் என்றும் தோற்றுவாய்செய்கின்றார்.

  1 சம்மிய ஞானம்

  பாயிரத்தில் காட்டிய ஞானபாதம் பசுபாசங்களையும் பதியையும் ஆராய்ந்துரைக்கும் முறைமையுடையது. பசு என்பது உயிர்; இது பாசத்தால் கட்டுண்டிருப்பது பற்றிப் பசு எனப்படும், பசு கட்டப்படுவது. பாசம் என்பது கட்டுவது. பாசம் பொது வகையில் மலம் மாயை வினை என மூன்று. மலம் ஆணவமலம் என்றும் வழங்கும். மாயையால் உடம்பும் உலகும் உலகியற் பொருள் இன்பங்களும் ஆகியவை. அதனால் மாயையை உலகு என்றும் உடம்பு என்றும் ஏற்றவாறு வழங்குவதும் உண்டு. அதுபற்றியே பசு முதலிய மூன்றையும் உயிர், உலகு, இறை என முறையே மொழிவதும் வழக்கம். உயிர்க்குக் கேவலம் சகலம் சுத்தம் என மூவகை நிலையுண்டு. உயிர் மலமாகிய கட்டோடு மட்டில் இருப்பது கேவலம் (தன்னிலை) எனவும், உடம்பொடு கூடி நிற்பது சகலம் (உடனிலை) எனவும், மல முதலிய மூன்றின் தொடர்பிலிருந்து நீங்கித் தூய்தாய்த் தனித்து விளங்கும் நிலை சுத்தம் எனவும் வழங்கும். தன்னிலையில் உள்ள உயிர் உடனி லையை எய்தி வினைகளைச் செய்து அவற்றில் இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து சத்திநிபாதம் தழைக்கத் திருவருள் ஞானம் பெற்று அருட்செயல்செய்து சுத்த நிலை எய்தும். தன்னிலையில் உயிர்க்கு மலத்தொடக்க அனாதியே ஆகிய தொடர்பு. அனாதி எனின் அத்தொடர்பு எக்காலத்தில் உண்டாயிற்று என வினவுதற்கு இடமில்லை என்பது பொருள். மலத்தொடர்பு காரணமாக உயிர் மாயையின் காரியமாகிய உடம்பொடு கலந்து உலகில் தொடர்புறுகிறது. மாயையோடு மருவாதாயின். உயிர், வினைத் தொடர்பு கொண்டு மலம் நீங்கி வீடு பேறு எய்துதல் இல்லையாம். மலத்தோடுகூடிய உயிர்க்கு மாயையும், வினையும் தொடர் புறுவது நாம் உடுக்கும் உடையில் பற்றிய கறையை; உவர் மண்ணும், சாணமுமாகிய அழுக்குகளைச் சேர்த்துப்பின் மூன்றையும் போக்கிவெளுக்கச் செய்வது போல்வது; இதனை ‘உடையுறுகறை கடிதகற்றப் பறி கறைபிடித்த பெற்றி” என்பர். உயிர் அழிவில் லாத அனாதி நித்தப்பொருள். அஃது அறிவு வடிவினது, வடமொழியில் உயிரை ஆன்மா என்றும் அறிவுவடிவத்தைச் சேதனம். சைதன்னியம் என்றும் கூறுவர். மலம், மாயை, கன்மம் ஆகிய மூன்றும் அறிவில்லாதவை யாதலால் அசேதனம் எனப்படும். மாயையிலிருந்து உலகும் உடம்பும் இறைவனால் படைக்கப்படுகின்றன. கேவலத்திலுள்ள உயிர் சுத்தமாய் வீடுபெறும் பொருட்டே இறைவன் உலகைப் படைக்கின்றான். படைக்கப்பட்ட உடம்பும் உலகும் அசேதனம். சேதனமாகிய உயிர் உடம்பின்கண் நின்று இயக்க உடம்பு இயங்கும்; உயிர்க்கு உடம்பு ஓர் ஊர்தி (வாகனம்) போல்வது. உயிர்வழி நின்று உடம்பு இயங்கும் திறத்தை,

  “ஆடிப்பாவை யோடு அலர்நிழற் பாவை

  கைகால் மெய்பிறிது எவையும் பைப்பத்

  தூக்கின் தூங்கி மேக்குயர்பு உயர்தல்

  பொறியோடு சிவணல் என்ன

  அறிவொடு செறியும் நெறிவரும் உடலே”

  என்று குறிப்பர்.

  2. சம்மிய தரிசனம்

  உலகில் உயிர்க்கு இடமாகிய உடம்பு தேகம் என்றும் வழங்கும். தேகம், தூலம் (உருவுடம்பு) சூக்குமம் (அருவுடம்பு) என இருவகை; தேகம் எனப்படும் வகைகள் அத்தனையும் அசேதனம்; உயிரையின்றித் தானாக இயங்குவன அல்ல. தேகத்தில் உள்ள உயிர் புருவ நடு முதல் உந்தியின் கீழுள்ள ஆதாரம் வரை கீழும் மேலுமாக உலவிக்கொண்டிருக்கும்; உடம்பில் கீழும் மேலுமாக சென்று தங்கும் வகையில் உயிர்க்கு ஐவகை நிலையம் (ஐவகை அவத்தை) உண்டு. அவை சாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்). துரியம் (பேருறக்கம்). அதீதம் (கழி பேருறக்கம்) எனப்படும். துரியத்தில் ஆன்மா மலத் தொடர்பும் இன்றிச் சுத்தமாயிருக்கும் எனச் சிலர் சொல்வது உண்டு; அவரை மறுத்துத் துரியத்திலும் அதீதத்திலும் ஆன்மாச் சுத்தன் அல்லன் என்று சைவநூல் வற்புறுத்துகிறது.

  3. பாசபந்தம்

  மலம்போல மாயை வினைகளும் உயிரைப் பிணித்து மயக்குவதுபற்றி மலம் எனப்படும்; படவே மலம் ஆணவம், மாயை, வினை (கன்மம்) என மூன்றாம், ஆணவமலம் (மலம்) “செம்பிற்பெருகு இருந்துகள் (களிம்பு) என அறிவினை மறைத்தல்” செய்யும் ஆன்ம தத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என மூன்றாய்ப் பின் முப்பத்தாறாக விரியும் தத்துவம் மாயை; கன்மம், நல்வினை தீவினை என இரண்டாம்.

  ஆணவ மலம் ஒன்றாயினும், தனித்தனிப் பல்வேறு இயல்பு களால் பலவாகிய உயிர்களின் தன்மைக்கேற்ப மறைக்கும் சத்தி பலவாய்க்கொண்டுள்ளது. மனம், வாய், உடம்பு ஆகிய மூன்றின் செயல்கள் வினையாகும். மாயை ஒருவகை ஒளியாற்றல் (சத்தி). இம்மாயை, உலகு உடம்புகளாய் விரிவதும் மாயையாய் ஒடுங்குவதும் செய்வது தோற்றமும் ஒடுக்கமுமாகும்; மாயை யாகிய சத்தி அசேதனமாதலால், இறைவன் தோற்றுவித்தலும் ஒடுக்குதலும் செய்கின்றான். அவன் அது செய்வது உயிர்கள் வினைசெய்து போகம் நுகர்தற்பொருட்டே; இதனை,

  “மாயா

  காரியம் நிற்பது முடிவில் சீரிய

  சத்தி வடிவில் பொற்பொடுபுணரும்

  தொடங்கற் காலை இடம்பட விளங்கும்

  ஆருயிர் ஏரிசைப் போகம்

  சீரிதன் அருந்தத் திகழ்தனு முதலே’’3

  என்று ஆசிரியர் உரைப்பது காண்க.

  மாயைகாரியமாகிய உடம்பும் உலகும் உள் பொருளாகிய மாயையிலிருந்து தோன்றிநின்று மீண்டும் அம்மாயையிலேயே ஒடுங்கும். வேறு சமயத்தவர் மாயையை இல்பொருள் என்றும் சூனியம் என்றும், இன்னதன்மைத் தென்று சொல்ல வொண்ணாத அநிர்வசனம் என்றும் கூறுவர். சைவநூல்கள் மாயை இல்பொருள் அன்று; ஆற்றல் வடிவாய் என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள் என்று கட்டுரைப்பர். அதனால் உலகு சற்காரியப் பொருளே யன்றி அசற்காரிய மன்று என்பது கொள்கை. ஒன்று மில்லாத சூனியத்திலிருந்து உலகு படைக்கப்பட்டது என்பதும், இவ்வுலகு இறைவனிடத்திலிருந்தே படைக்கப்பட்ட தென்பதும் சிவநெறிக்குப் புறம்பானவை. சேதனம் அசேதனம் எனப்படும் உயிரும் உலகும் எல்லாம் பிரமப்பொருளிலிருந்து தோன்றி அப்பிரமத்தினிடத்தே ஒடுங்கும் என்பது சைவம் அன்று.

  வினை, உயிர்கள் மனத்தாலும், வாயாலும், உடம்பாலும் செய்யப்படும் நல்வினை, தீவினை இரண்டுமாகும். மனத்தால் உண்டாகும் நல்வினை அருளொடு புணர்தல் முதலியன; வாயால் தோன்றுவன அறம் பெரிது மொழிதல் முதலியன. உடம்பால் தோன்றும் நல்வினை தவம் முதலியன. அருள் அறம், தவம் முதலிய வற்றுக்கு மாறானவை தீவினையாகும். இருவகை வினைகளுள் நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் உயிர்களை அடையும். வினையால் விளையும் துக்கம் மூவகை யாம்; அவை ஆதிதைவிகம், ஆதிபௌதிகம், ஆதி ஆத்தியான் மிகம் எனக் கூறப்படும். ஒவ்வொன்றும் இந்நூற் கண் நன்கு விரித்துக்கூறப்படுகிறது.

  4. தேகாந்தரம்

  உயிர், உடம்பொடுகூடி உலகில் வாழ்க்கை நடத்துங்கால், முன்னை வினைப்பயன்களை நுகர்வதும், நுகரும்போதே வேறு வினைகளைச் செய்வதும் நிகழ்வதால் அவ்வினை காரணமாகப் பிறப்பிறப்புக்கள் உண்டாகின்றன.

  “கருங்கயல் இரியப் பெரும்பகடு துரந்து ஆங்கு

  உழவ ராக்கிய விளைவயற் செந்நெல்

  பிற்பயன் தந்தாங்கு இச்செயல் உதவப்”1

  பல புவனங்களிலும் பலவகைப் பிறப்புக்களிலும் உயிர்கள் வினை காரணத்தால் பிறந்தும் இறந்தும் வருகின்றன. இறைவனுக்கோ எனின் பிறப்பும் இறப்பும் ஒருபோதும் இல்லை.

  5. பாசானாதித்துவம்

  பிறப்பிறப்புக்களுக்குக் காரணமாகிய வினையும், மாயையும் மலம் போல அனாதி நித்தப் பொருள்கள். மாயையால் கருவியும் வினையால் செயலும் நிகழ்தலால் இவை இரண்டன் தொடர்பு இல்வழி உயிர் மலத்தொடர் பினின்றும் நீங்காது. மாயையும் வினையும் ஒன்றையொன்று இன்றியமையா; ஆதலால் இவற்றுக்கு முற்பிற்பாடு கூறல் முடியாது. அன்றியும்,. மாயாகாரியமாகிய உடம்பு கொண்டே வினை நிகழ்கிறது; வினையால் மேன்மேலும் உடம்போடு கூடுதலாகிய பிறப்பு உண்டாகிறது. இவ்வாறு மாறிமாறிக் காரண காரியமாய்வந்து கொண்டிருக்கும் இவற்றின் தொடர்பு அற முயல்வதுதான் மலத்தொடர்பினின்று நீங்கிச் சுத்த நிலை எய்துதற்கு ஏதுவாகும்.

  6. பாசச்சேதவியல்

  பாசமாகிய மாயை வினைகளில் தொடர்பு அற முயல்வதே மலத்தின் தொடர்பு நீங்கும் நன்னெறியாம். அது ஞானநெறி எனப்படும். அந்த ஞானத்தின் சிறப்பு இஃது என விளக்கு வாராய்,

  “மறக்குறும் பறுப்ப” அறத்தின் வேலிய,

  தனக்கு நிகர் இல்லாத் தன்மைய, மனத்தின்

  மாசு அறக்களைவ, தேசொடு நிவந்த

  துன்னிய வினையுகும் நன்னெறி2”

  என்று பாராட்டியுரைப்பர். மலமாசு கழுவி மாண்புற வந்த உயிர்க்குத் துணையாய்ப் புணர்ந்த மாயையும் வினையும் தம்பால் பிறக்கும் அழுக்காறு, அவா, வெகுளி முதலியவற்றைக் காட்ட ஆங்கே பிறக்கும் சிற்றின்பத்தில் உயிர் மயங்கும்; அது போது அஞ்ஞானம் எழுந்து உயிரை ஐம்புலன்களின் இன்பத்தில் அழுத்தி ஞானநெறி உணராது தடுமாறச் செய்யும். அஞ்ஞானமாகிய வேந்தன் ஆட்சியில் அமைந்திருக்கும் உயிரை ஞானமாகிய வேந்தன் அறிந்து நன் ஞானத்துக்குரிய கருவிகளாகிய படை யொடு சென்று’

  “அடுமிளை பொடிபட எறிந்து நெடுமதில்

  அகழியொடு இடிய நூறிக் கொடுநகர்

  எரிவிருந் தூட்டி அரிது பெறு சிறப்பின்

  தன்னுடை நாசம் மன்னன் எய்தப்

  பரமானந்தப் பைதிரம்”1

  எய்துவிப்பன்.

  வினைத்தொடர்பு கெடுதற்கு வாயில் காணவேண்டின், அது போந்து தொடரும் இடம் அறிதல் வேண்டும். அவ்விடம் கரு, பிறப்பு, இறப்பு ஆகிய மூன்றுமாகும். ஆங்கு வந்து தொடரும் வினையினை நுகரும்போது, இவ்வினைகள் முன்பே தேடிக் கொண்டனவாதலால் இவற்றை நுகர்ந்து கழித்தல் வேண்டுமேயன்றிப் பிறரை நோதல்கூடாது எனத் தெளிவது முதல் வாயிலாகும். இருவகை வினைகளையும் ஒரு தன்மையாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி நுகர்பவரே ஞானவான்கள். அவர்கட்குப் பகையும் ஒன்று; நட்பும் ஒன்று; உடம்புகொடுத்த பெற்றோரே அவர்கட்கு ஒரு வகையில் பகைவர்; அவர்கள் தம்மைக் கொன்று ஒழிப்பவரை உடம்பாகிய சிறையிலிருந்து விடுதலை செய்யும் நலத்தகையாளரெனக் கருதுவர். “உருவில் ஓர் உயிர்க்கு உடலுநர் உழையர் என்று இரு வேறு உரைப்பதை எவனோ”?2 என்பது அவரது கொள்கை. தமக்கு வரும் துன்பங் கட்குத் தாம்தாம் செய்த வினை காரணமாதலை அறியாது பிறரை நோவது இழித்தக்க தாம். அவர்க்கு இரங்கி,

  “இளையோன் துரந்த குணில்வாய்ச் செல்லாது

  இளையோர்ச் சினவும் வளைவாய் ஞமலியின்

  அளியரோ அளியர் என்னை

  ஒளிகொள் காரணம் உன்னா தோரே”3

  என்று கூறுவர். வினைத்தொடர்பு கெடுத்து ஞானத்தால் வீடு பெறக் கருதும் மேலோர் தமக்குத் தீமை செய்தோரிடத் தும் நன்மை செய்தோரிடத்தும் ஒத்த அன்பே கொண்டு; “பிறவிப் பிணிதணி அறவணர் இவர்” என்று பேரின்பம் கொள்வதேயன்றி வருத்தம் எய்துவது இலர். பிறர் எவரேனும் அவரை நெருங்கித் துன்பம் செய்வராயின், அவர்பொருட்டு அருள் கூர்ந்து மனம் கரைந்து, இவர்கள் “நீங்கா நிரயத்து அழுந்துதற்கு ஏதுவாயினம்” என நினைந்து வருந்துவர்.

  ஞானிகளாயினும் யாவராயினும் தாம் செய்த வினைப் பயனை நுகர்ந்தே தீர்தல்வேண்டும். அதனால் ஒவ்வொரு வர்க்கும் நல்வினைக்காலம் தீவினைக்காலம் என இருவகைக் காலம் அவரை அறியாமே வந்துநின்று தன் பயனை நுகர்விக்கும் நல்வினைக் காலத்தே ஒருவன் அறியாமல் நஞ்சுண்டானாயினும் அந்நஞ்சு அமுதமாய் அவனுக்கு நன்மை எய்துவிக்கும், வீமன் நஞ்சுண்டும் இறவாமல் நாககன்னியை மணந்துகொண்டு போந்ததும், கன்னனை அவன் தாயாகிய குந்திதேவி ஆற்றில் இட்டாளா யினும், அவன் பின்னர் அங்கர்கோனாய் அரசாண்டதும் இதற்குச் சான்று கூறுகின்றன. தீவினைக் காலத்தில் ஒருவன் அமிழ்த முண்டானாயினும், அது தன்னை உண்ட அவனுக்கு நஞ்சாய்க் கேடுசெய்யும். இதற்குத் தக்க யாகமும், யாளிதத்தன் வரருசி முதலியோர் வரலாறும், நகுடன் கதையும் காட்டப்படுகின்றன. இருவகை வினைகளையும் அமைதியுடன் நுகர்ந்து கழிப்பதை விட வேறுவழியில்லை. இதனை வற்புறுத்தற்குப் “போகாது அம்ம புராதனம்”1 என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

  ஞானிகளும் அஞ்ஞானிகளும் ஆகிய இருவரும் உண்டல், உறங்கல், அஞ்சுதல், இன்பநுகர்தல் முதலிய செயல்வகைகளில் ஒரு தன்மையராகவே இருப்பர். இவற்றில் சிறு வேறுபாடும் இல்லையாம். ஆயினும் ஞானிகனின் உள்ளம் ஏனையோர் உள்ளத்தினும் வேறுபட்டே இருக்கும். அவர்கள் உலக வாழ்வில் ஆழ்ந்து கிடந்தாராயினும், அவரது உள்ளம் தூய்மைகெடாது துலங்குகின்றது.

  “ஞான மாக்கழல் மாணுற வீக்குநர்

  விடைய வேலைத் தடையின்று படியினும்

  தீ தொடு படியுநர் அல்லர்

  மாதுயர் கழியுநர் நீதி யானே”2

  என்று ஆசிரியர் அறிவிப்பது காண்க. அஃது அவர்கட்கு எவ்வாறு இயலுகிறது எனின், நன்னீரையுண்ணும் ஞாயிற்றின் கதிர் இழந்த நீரையுண்ணினும் தன் தூய்மை கெடுவதில்லை; நன் பொருளை எரித்த தீ, தீண்டத்தகாத பொருளை எரித்த போதும் தன் தூய்மை மாசுபடுவதில்லை. அதுபோலவே, ஞானிகள் “இருவினைவிடயத்

  தழுந்தியும் சுடர்ப”1 என விடை கூறு கின்றார்.

  உடம்பும் உலகவாழ்வுமாகிய இரண்டன் தொடர்பைக் கருவியாகக்கொண்டு மலத்தொடர்பு நீங்குதலை மறந்து, அவை இரண்டும் பயக்கும் இன்பத்துக்கு அடிமையாகி மேன்மேலும் வினைகளைப் பெருக்குதல் பந்த காரணம்; அவற்றை வெறும் கருவியேயென ஞானத்தால் தெளிந்து அவற்றால் ஆகும் பயனாகிய வீடுபேறு நோக்குவது மோட்ச காரணம் என்றும் கொள்வது ஞானிகள் வாழ்க்கை. அவர்கட்கு இவ்வுடம்பு பெருஞ்சுமையாக இருக்கும்; அதுபற்றியே அவர்கள் தம் உடம்பின்பால் கொண் டிருக்கும் மதிப்பைப் பிணமொன்றைச் சுமந்து செல்லும்,

  “ஆடவன் உள்ளம் கடுப்ப நீடிய

  மலப்பொதி இரிய நூறி உரைத் தொடக்கு

  உணர்வொடு கழிந்த இணையில் இன்பத்து

  என்றுகொல் எய்துஞான்று என்றே நன்றும்

  நெடிது நினைகுவர் மாதோ”2

  என்று தெரிவிக்கின்றார்.

  இப்பெரியோர்களான ஞானிகள் உடம்பொடுகூடி வாழ்தலால் இவர்கள் பால் குற்றம் யாதும் நிகழாதோ என்னும் ஐயத்தை எழுப்பி, குற்றம் நிகழ்தலும் உண்டு என்று குறிப்பர். ஆயினும் அவர் அக் குற்றத்திற்குக் காரணம் ஆகார் என்று விளக்கத் தொடங்கி, குயவன் சுற்றிவிட்ட சக்கரம், அவன் செயல் நீங்கிய விடத்தும சுற்றுவதுபோல, வினை செய்து வந்த உடம்பு, உள்ளி ருக்கும் உயிர் வினையின் நீங்கியபோதும் வினைவழி இயங்கும் என்று விளக்கி இதனால் அவர்கள் வினைக்குக் காரணர் ஆகாமை காண்க என்பர்.

  இந்நிலையில் ஞானவுணர்வு சிலர்க்கு அளித்த போதினும் அவர்க்கு அது பயன்தாராதுபோவதும், சிலர்க்குப் பயன்படுவதும் கண்கூடாகக்கண்டு. இதுபற்றி நிகழ்ந்த ஆராய்ச்சியால், பக்குவமுடைய நல்லோர்க்கு எய்திய ஞானம் நற்பயனும், அல்லாதவர்க்கு எய்தியது வேறுபயனும் விளைத்தல் காணப்பட்டது. பாம்புண்ட நீர் நஞ்சாதலும் பசுவுண்ட அந்த நீரே பாலாதலும்போல இந்த ஞானம் நற்பயனும் வேறு பயனுமாய் முடியும் என்று விளக்கு கின்றார். மாயையின் தொடர்பு உடம்பின் புன்மையைக் காண நீங்குகிறது. அதுபற்றியே யாக்கை நிலையாமையும், அதன் ஒவ்வொரு பகுதிக் கண்ணும் உள்ள தீமைகளும் விரித்துக் காட்டப்

  படுகின்றன. வினைகளின் இயல்பும் அவற்றின் காரணமும் பயனும் நோக்க வினைத் தொடர்பு நீங்குகிறது. இவற்றால் சிவஞானம் விளங்கித் தோன்றுதலால் மலத்தின் தொடர்பும் கெடுகிறது. மலம், மாயை, வினை என்ற மூன்றும் அனாதிநித்தப் பொருள் என்றபின், உயிர்க்கு அவற்றோடு உண்டாகும் தொடர்பு கெடும் என்பது முன்பின் மலைவு பேலத் தோன்றும். மல முதலிய மூன்றும் அனாதிநித்தமேயன்றி அவற்றிற்கும் உயிர்க்கும் உளதாகும் தொடர்பு நித்தம் அன்று; மலத்துக்கும் உயிர்க்கும் உளதாகிய தொடர்பு அனாதியேயன்றி நித்தம் அன்று; ஏனை மாயை கன்மங்களின் தொடர்பு மலத் தொடர்பு காரணமாக பின்னே வந்த தொடர்பு. மலமாயை கன்மங்கள் தனித்தனி பொருட்டன்மையில் அனாதிநித்தம் என்பது கருத்து. மலத் தொடர்பு காரண மாக மறைப்புண்டிருந்த உயிர் மலத்தொடர் பின் நீங்குவதென்பது மலத்தால் மறைக்கப்படும் தன்மை நீங்குதல் எனவும் பொருள் கொள்ளப்படும். மல முதலிய பாசங்களின் தொடர்பு, குளிகையால் செம்பு களிம்பின் மறைப்பு நீங்குதல் போலவும், மந்திர மொழியால் விடத்தின் ஆற்றல் நீங்குதல் போலவும் நீங்கும் என மொழிந்து இவ்வாறு,

  “பாசப்பெருவலி தடுத்தனர்,

  மாசில் ஞான மன் பெருந்தகையே’’1

  என்று தெளிவிக்கின்றார்.

  பதி நிச்சயம்

  இவ்வண்ணம் மலம், மாயை, கன்மம் என்ற பாசப் பொருள்களின் இயல்பும் தொடர்பும் தொடர்பின் நீக்கமும் காட்டியவர் இறுதியில் பதியின் இயல்பைக் கூறுகின்றார். மலமுதலியவற் றோடு தொடர்புற்று மாயாகாரியமான உலகைப் பற்றுக்கோ டாகக் கொண்டு வாழும் உயிர்க்கு மாயையின் தொடர்பு நீங்குமாயின் அதற்குப் புகலிடம் இல்லாமல் இல்லை; அப் புகலிடம் பதிப்பொருளாகிய இறைவன் திருவடியே.

  “ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை,

  ஒருவன் பாதமல்லதை. பிறிதும் உண்டோ

  பெரும்புகல் நமக்கே”1

  என்று அறிவுறுத்துவர்.

  சிவபரம்பொருளின் இயல்பை, “காட்சி முதலிய அளவை யும் அளவறச் சேட்பட அகன்றனன் சிவன்” என்றும்,

  “நிலம்நீர் தீகால் வெளி உயிர் யாவும்

  அவையே தான் அவை தானேயாகி

  விரவியும் விரவா வீரம்”

  என்றும் எடுத்தோதி, சிவனாகிய அப்பதிப்பொருள் இல்பொருள் அன்று; உள்ளதொன்று என்பதைக் கருதல் அளவை வகையால் நிறுவுவர். அம்முதல்வன் தனக்கென ஓர் உருவம் இன்றியே எல்லாம் செய்ய வல்லவன். உருவம் இல்லாத உயிர் நம் உடம்பை இயக்குவதுபோல, அவன் அருவமாயிருந்தே உலகம் தோன்றி நின்று ஒடுங்குமாறு செய்வன். உலக முதலியவற்றைப் படைத்தலில் அவனுக்குக் கருவியொன்றும் வேண்டா; அவன் நினைவு ஒன்றாலேயே எல்லாம் இனிது செய்யும் இயல்பினன். ஞாயிறும் ஒளியும். போல தானும் தன் அருட்சத்தியும் கூடிநின்று படைத்தல் முதலிய எல்லாவற்றையும் செய்வன். அப்பெற்றியனாகிய முதல்வனை ஞானக்கண் உடையோரன்றி வேறு எவரும் காண்டல் கூடாது; ஆயினும் அவன் எல்லாவுயிர்களையும் உயிரில் பொருள் களையும் தெளிவாகக் கண்டு செய்வன செய்கின்றான். விரிந்த உலகில் நிகழ்தற்குரிய செயல்கள் பலவும் அவன் சத்திகளாலே நடைபெறுகின்றன. சகளம், நிட்களம், சகள நிட்களம் என நின்று; படைப்பு முதலிய ஐவகைத் தொழில்புரியினும் இறைவன் விகாரம் அடையான். உயிர்கள் உய்தி பெறுதற்குரிய வழிகளாகிய அத்துவாக்கள் சுத்தம் அசுத்தம் என இருவகையவாகலின், சுத்தாத்துவாவுக்கு இறைவனும், அசுத்தாத்துவாவுக்கு அனந்தரும் கருத்தாக்களாவர்; அனந்தர் முதலியோரை அதிட்டித்து நின்று முதல்வன் எல்லாத் தொழில்களும் நடைபெறச் செய்கின்றான்.

  முதல்வனாகிய சிவனை உயிர்கள் ஞானத்தால் கண்டு அனுபவிக்கின்றன. ஞானானுபவம் வாயால் உரைக்கலாகாதது.

  “உள்ளமொடு உணர்வு சூழ்ஒடுக்கி

  உள்ளுநர் உணர்வது உணர்வின்பாலே”

  என்று உரைப்பது காண்க. முதல்வனுடைய சகளவடிவம் கண் முதலிய கருவிகளால் கண்டு அனுபவிக்கத்தக்கதே; அவ் வாறன்றி நிட்களம் தியானத்துக்கு அகப்படாதா கலால், தியான பாவனைக் குத்துணையாக நின்று தன்னைத் தரிசிக்க விரும்பும் ஆன்மாவுக்குப் பக்குவம் வினைவிப்பது கருதியது. சகளம் பக்குவம் எய்திய வழி நிட்களம் தியானப் பொருளாம்.

  சகளநிட்களத் திருமேனிகள் முதல்வன் சத்தியாகும்; அச்சத்தி எங்கும் ஓரொப்பப் பரந்து நிற்கும் பண்புடையது; ஆயினும், எல்லார்க்கும் மெய்யுணர்வு ஒருசேர உண்டா காமைக்குக் காரணம் இருவினையொப்பும் சத்திநிபாதமும் எல்லார்க்கும் ஒருபடியாக நிகழ்வதில்லை.

  “சத்திநிபாதம் என்றது யாவன் ஒருவன்

  இடைக்கடிது ஒருபொருள் அடுத்துற வீழின

  லெரீஇ அந்நிலை ஒரீஇ வேறிடம்

  மருவும்; அற்றென நிருமலன் பெருவலி

  பதிப்ப அறிவன் பவபயம் கதுவ

  மதித்தனன் தேசிகன் மலரடி அடையும்”

  என்பர். ஞானகுரவன் சிவானுபவத்துக்குரிய அறிவை அந்நிலையில் அவனுக்கு அருளுவன். முத்திப் பேற்றுக்குரிய ஞானமும், பிறவிக்கேதுவாகிய அஞ்ஞானமும்; ஆன்மாவின் பால் இருப்பது விறகினிடத்தே தீ இருத்தல்போல என்பார்;

  “இந்தனக் குழுவை அடூஉம் செந்தழல்

  கூட நின்றும் பீடுதரு பாயம்

  செல்லாக் காலை மெல்லென விளங்கல்

  ஒல்லா, வல்லழல் போல; நல்லோய்

  ஞானமும் இன்மையும் நலம் மிக்கு

  ஆனா வுயிர்கட்கு உணர்வு அனைவகையே”

  என்று உரைத்து, விறகைக் கடையத் தீப்பிறத்தல்போலத் தீக்கை யால் ஞானம் வெளிப்படும் எனத் தெளிவிக்கின்றனர்.

  பாசமோசனம்

  இவ்வண்ணம் சிவஞானத்தால் சிறப்புறும் ஞானவான்கள். உப்பளத்திற்பட்ட துரும்பும் பிறவும் உப்புப்பற்றி உப்பாதல் போலவும், கடலகம் புகுந்த நன்னீர் உவர்நீராதல் போலவும். புழு வேட்டுவனாதல் போலவும் சிவமாந்தன்மை எய்துவர். அஃதாவது , பசுத்துவம் இன்றிப் பதித்துவம் எய்துவர் என்பதாம். இங்கே பதித்துவம் எய்துவது, பசுத்துவம் கெட்ட பின்போ, பசுத்துவம் கெடுவது பதித்துவம் எய்தியபின்போ என எழும் ஐயங்களை இருள் நீக்கமும் ஒளிவிளக்கமும்போல ஒரு காலத்தே நிகழும் எனத் தெளித்துரைப்பர். இத்தகைய ஞானநலம் எய்துதற்குரிய நெறிகள் எனப்படும் அத்துவாக்கள் உயிர்கட்கே வேண்டுவன; அவற்றைச் செம்மை நெறியில் அமையச் செய்யும் திறம் தீக்கை யாம். தீக்கை வாயிலாகஅத்துவா நலம் பெறுவித்த உயிர் ஞானத்தால் சிவபோகத்தைப் பெற்றுச் “சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச்சென்று அங்கு இறுமாந்திருக்கின்றது.”

  அத்துவா வழி, உயிர்கள் வினைசெய்யும் வழியை அத்துவா என்பது வடமொழிச் சமயநெறி வழக்கு. உயிர் களாகிய நாம் மனம், வாய், உடல் மூன்றாலும் செய்வது வினை. வினைக்குரிய செயலும், இடமும், கருவியும், சொல்நெறி பொருள்நெறி என இருவகையாம்; சொல், எழுத்து, சொற்றொடர் என மூன்றாம்; இவை வடமொழியில் முறையே வன்னம், பதம், மந்திரம் எனப்படும். பொருள்நெறி, உடல், கருவி, உலகம் என மூன்றாம்; இவை வடமொழியில் முறையே கலை, தத்துவம், புவனம் எனப்படும். அதனால், இந்த ஆறும், வன்னாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா, கலாத்துவா, தத்துவாத்துவா, புவனாத்துவா என வழங்கும். இறைவன் திருப்பெயரை உன்னுதல், ஓதுதல், அவனை வணங்குதல், தொழுதல் முதலியன செய்யுங் கால் இவ்வத்துவாக்கள் நெறியாதலின் இவற்றைத் தூய்மை காண்டலும் தூய்மை செய்தலும் தீக்கையின் சிறப்புடைச் செயல்களாகின்றன.

  “சிந்தனைசெய்ய மனம் அமைத்தேன்

  செப்ப நா அமைத்தேன்

  பந்தனை செய்வதற்கு அன்பு

  அமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்

  வந்தனை செய்யத் தலை யமைத்தேன்

  தொழக்கை யமைத்தேன்

  வெந்த வெண்ணீறணி ஈசற்கு

  இவையான் விதித்தனவே.

  எனச் சேரமான் பெருமான் காட்டியருளுதல் காண்க.

  நூலாராய்ச்சிக்குத் துணைசெய்த நூல்கள்

  அகநானூறு (அகம்)

  அறநெறிச்சாரம் (அறநெறி)

  அறம்வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ்

  அனுபவ மாலை

  அனுபோக வெண்பா

  ஆசிரிய மாலை

  ஆத்தி சூடி

  ஆளுடையபிள்ளையார் திரு மும்மணிக்கோவை

  ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

  இசை நுணுக்கம்

  இதோ பதேசம் (வடமொழி)

  இரத்தினத் திரயம்

  இருபாவிருபஃது

  இலக்கணக் கொத்து

  உண்மைநெறி விளக்கம்

  உண்மை விளக்கம்

  உபாய நிட்டை

  ஐங்குறு நூறு (ஐங்.)

  ஒழிவிலொடுக்கம்

  கதாசரிச் சாகரம் (வட)

  கதோப நிடதம் (வட)

  கந்த புராணம்

  கந்தர் கலிவெண்பா

  கம்ப ராமாயணம்; மிதிலைக்காட்சிப்படலம் (கம்ப. மிதிலை)

  கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

  கல்லாடம்

  கலித்தொகை

  களவழி நாற்பது

  காஞ்சிப் புராணம்

  காமிகாகமம் (வட)

  கிரணாகமம் (வட)

  குறுந்திரட்டு

  குறுந்தொகை

  கொடிக்கவி

  கொன்றை வேந்தன்

  கோயில் நான்மணிமாலை

  சங்கற்ப நிராகரணம் (சங்க. நிரா.)

  சசிவன்ன போதம்

  சதமணிக் கோவை

  சதமணி மாலை

  சதுர்த்த சங்கிரகம்

  சருவஞ் ஞானோத்தரம் (வட)

  சித்தாந்த சிகாமணி

  சித்தாந்த தீபிகை

  சித்தாந்தப் பஃறொடை

  சித்தாந்தப் பிரகாசிகை

  சித்தாந்த மரபு கண்டன கண்டனம்

  சிதம்பரச் செய்யுட்கோவை

  சிதம்பர மும்மணிக்கோவை

  சிலப்பதிகாரம்

  சிவஞானசித்தியார் சுபக்கம்

  சிவஞாசித்தியார் பரபக்கம்

  சிவஞான பாடியம்

  சிவஞானபோதம்

  சிவதத்துவ விவேகம்

  சிவதருமோத்தரம்

  சிவநெறிப்பிரகாசம்

  சிவப்பிரகாசம்

  சிவப்பிரகாச விகாசம்

  சிவபோகசாரம்

  சிவாக்கிரபாடியம் (வட)

  சிவார்ச்சனா போதம்

  சீவக சிந்தாமணி

  சுந்தரர் தேவாரம்

  சுப்பிரபேதம் (வட)

  சுவாயம்புவாகமம் (வட)

  சுவேதாசுவதரம் (வட)

  சூளாமணி

  சேந்தன் திவாகரம்

  சொரூபானந்த சித்தி

  ஞானாமிர்தம்

  தக்கயாகப் பரணி

  தட்சிணாமூர்த்தி தசகாரியம்

  தணிகைப் புராணம்

  தத்துவ சங்கிரகம்

  தத்துவ சித்தி

  தத்துவத் திரய நிர்ணயம்

  தத்துவ தீபிகை

  தத்துவப் பிரகாசிகை

  தத்துவ விளக்கம்

  தாயுமானவர் பாடல்

  திருக்கழுமல மும்மணிக்கோவை

  திருக்களிற்றுப்படியார்

  திருக்குற்றாலத் தலபுராணம்

  திருக்குறள்

  திருக்கோவையார்

  திருஞானசம்பந்தர் தேவாரம்

  திருப்புகழ்

  திருமந்திரம்

  திருவருட்பயன்

  திருவருட்பா

  திருவள்ளுவமாலை

  திருவாசகம்: திருச்சதகம்

  திருவாசகம் : திருவண்டப்பகுதி

  திருவாசகம் : திருவெம்பாவை

  திருவாய் மொழி

  திருவானைக்காப் புராணம்

  திருவிசைப்பா

  திருவிளையாடற் புராணம் (பரஞ்சோதியார்)

  திருவுந்தியார்

  துகளறு போதம்

  தேவிகாலோத்தரம் (வட)

  தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்

  தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

  தொல்காப்பியம் - பொருளதிகாரம்

  நம்பியாண்டார் நம்பி இரட்டைமணிமாலை

  நம்பியாண்டார் நம்பி திருக்கலம்பகம்

  நற்றிணை

  நன்னூல்

  நாலடியார்

  நியாயப்பிரவேசம் (வட)

  நெஞ்சுவிடுதூது

  நேமிநாதம்

  பட்டினத்தடிகள் பிரபந்தம்

  பண்டார மும்மணிக்கோவை

  பதிற்றுப்பத்து

  பராக்கியம் (வட)

  பரிபாடல்

  பழமொழி நானூறு

  பாகவத புராணம்

  பிங்கல நிகண்டு

  பிரசூத்திர நீலகண்டபாடியம்

  புறத்திரட்டு

  புறநானூறு

  புறப்பொருள் வெண்பாமலை

  பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்

  பெருங்கதை

  பெருந்திரட்டு

  பெரும்பாணாற்றுப்படை

  பேரூர்ப் புராணம்

  பொருநராற்றுப்படை

  போக காரிகை

  போதரத்னாகரம்

  போதாமிர்தம்

  போற்றிப்பஃறொடை

  பௌட்கர சங்கிதை (வட)

  மகுடாகமம் (வட)

  மணிமேகலை

  மதங்காகமம் (வட)

  மதுரைக்காஞ்சி

  மலைபடுகடாம்

  மான விசயம்

  மிருகேந்திரவிருத்தி தீபிகை (வட)

  முண்டகோபநிடதம் (வட)

  முருகாற்றுப்படை

  முல்லைப்பாட்டு

  மூத்தநாயனார் இரட்டைமணிமாலை

  மூலசித்தி

  மெய்ஞ்ஞான விளக்கம்

  மெய்ம்மொழி

  மேருமந்தர புராணம்

  மோட்ச காரிகை

  யசுர்வேத தைத்திரிய சங்கிதை (வட)

  வியாச பாரதம்

  வில்லிபுத்தூரார் பாரதம்

  வீட்டுநெறி

  Ancient India - by K. De. BI Codrington

  Annual Reports of the Madras Epigraphy

  Epugraphica Indica

  Inscriptions of south India. vol. i. to. viii

  Salem District Gazetter

  திருச்சிற்றம்பலம்

  வாகீச முனிவர்

  அருளியஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  காப்பு – வெண்பா

  *முக்கட்டிருகவுட்டு நால்வாய்த் துரகத்துச்

  செக்கர்த் தடித்திடித்த செஞ்சடைத்துப் - பக்கத்துப்

  பூதத் தருநடத்துப் பொற்பிற்றென் னுள்ளத்து

  நாதத்து நின்ற நலம்† 1

  *மதிபாய் சடைமடித்து 1மாசுணப் பைம்பூட்டுச்

  2சதியாய் 3குறுந்தாட்டுத் தான- நதிபாய்

  இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தென் னுள்ளம்

  4உருகவிட்டு நின்ற வொளி 2

  5காமிகாதி சைவாகமங்களுள் ஞானபாதத்துப் பதி பசு பாசவுண்மை யறிவுறுத்துவான் போந்த ஆசிரியர், ஆன்றோ ராசாரம் பாது காத்தற்பொருட்டும் மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்துவாராயினார்.

  #பாயிரம்

  கடவுள் வாழ்த்து

  அகவல்1

  வெண்டிரைக் 1கருங்கட லேழும் விண்டொட

  2ஓங்கிய சென்னிச் சிமையமும் வீங்கிய

  3ஏழிரும் பொழிலு 4மெண்ணீங் குயிரும்

  5அளவி லண்டமு 6முளையின்றி 7விளைத்தம்

  5.  8மலரோன் றாதையை வகுத்துந் தளரா

  9முன்னோ ரில்லா முன்னோன் பின்னும்

  இளமையு மஃதா வியைந்தோன் வளமலி

  10தோற்ற மீறொன் றில்லோன் கூற்றுக்

  11கிளியே முற்ற 12வொளிமாண் டிருநகை

  6.  அருளி னங்குழை பரப்பி யிருடீர்

  கருணை மாநனை யுயிர்ஞிமி றருந்த

  மலர்ந்த மாதர் 1மரகத வல்லி

  அந்தி வானத் தணிநிறங் கவர்ந்து

  சிந்தை செல்லாச் செழுங்கிரி யொருபால்

  7.  வளங்கொளப் படர்ந்த வண்ணம் போல

  அறவோ ளமர்ந்த பாகன் றுறவோர்க்

  கெல்லை யாகிய தொல்லோன் றனாஅது

  பாமாண் சேவடி பரவ

  நாமாண் புளதா நலங்கொளச் சிறந்தே

  2உரை: 1-3 (வெண்டிரை…………… பொழிலும்) வெண் திரைக் கருங்கடலேழும்- வெள்ளிய திரையை யுடையனவாகிய 3பெரிய சமுத்திரமேழையும்; விண்தொட ஓங்கிய சென்னிச் சிமையமும்- 4சுவர்க்கத்தைக் கிட்ட வோங்கிய உச்சியையுடைய மகா மேருவையும் வீங்கிய 5ஏழிரும் பொழிலும்6 அந்த மேருவைச் சூழ்ந்த7 அட்டகுல பருவதங்களையும் மிகுந்தெழப்பட்ட பெரிய 8இரு நூற்றிருபத்து நான்கு புவனங்களையும்;

  3-6 (எண்நீங்குயிரும்……………. முன்னோன்) எண்நீங்கு 1உயிரும்- எண்ணிறந்த ஆன்ம தேகங்களையும்; அளவில் அண்டமும் - அளவில்லாத அண்டங்களையும்;

  முளையின்றி விளைத்து2 வித்தும் அங்குரமுமாகிய சொரூபமான காரணப் பொருளின்றியே அரூபமான மாயையிலே 3சிருட்டி காலத்திலே சிருட்டித்தும், திதி காலத்திலே திதிப்பித்தும், சங்கார காலத்திலே இம்மாயை யிலே ஒடுங்கு வித்தும்;

  4அம்மலரோன் தாதையை வகுத்தும் - அந்தப் பிரமாவுக்குத் தாதையாகிய விட்டுணுவைத் தோற்று வித்தும்; 5தளரா முன்னோரில்லா முன்னோன்- தனக்கோ ரசை வின்றியே யிருக்கும் தன்னிற் பழையோ ரில்லாத பழையோன்;

  5-7 (பின்னும்………….இயைந்தோன்) பின்னும்- பின்னும்; இளமையும் அஃதா 6இயைந்தோன்- இளமையும் அத்தன்மைத் தாகப் பொருந்தினோன்;

  7-8 (வளமலி……………இல்லோன்) வளம்மலி- 7பாரம்பரிய மாய் வரும் வளப்பமுடைத் தாகிய; தோற்றம் ஈறு ஒன்று இல்லோன்- 8செனன மரண மில்லாதோன்;

  8-16 (கூற்றுக்கு……. பாகன்) அருளின் அம்குழை பரப்பி- 9கிருபையாகிய அழகிய தளிரைப் பரப்பி; இருள் தீர் கருணை மாநனை - குற்றமற்ற 10கருணையாகிய பெரிய அரும்பிற்றேனை- உயிர்ஞிமிறு அருந்த மலர்ந்த - பக்குவான் மாக்களாகிய வண்டுகள் புசிக்கும்படிக் கீடாக மலர்ந்த; 1மாதர் மரகத வல்லி- காதலிக்கப் பட்ட ஒரு மரகதக்கொடி; அந்தி வானத்து அணிநிறம் கவர்ந்து- செக்கர் வானத்தின் அழகிய நிறத்தைக் கவர்ந்து கொண்டு; 2சிந்தை செல்லாச் செழுங்கிரி ஒருபால்- 3மனாதி கரணங் களாலும் அறிந்தோதற்கரிய வளப்பமுடைத்தாகிய பருவத்தின் ஒரு பக்கத்திலே;

  வளம் கொளப் படர்ந்த வண்ணம்போல - 4அலங்காரமுடைத்தாகப் படர்ந்தவாறு போல; கூற்றுக்கு இளி ஏமுற்ற ஒளிமாண் திருநகை- வசனத்துக்கு இளியென்னும் 5இசை யாசைப் படாநின்ற 6ஒளியால் மாட்சிமைப்பட்ட திருநகையும்; 7அறவோள் அமர்ந்த பாகன் 8காருணியமாகிய தற்சொரூபமு முடைய உமாதேவியுடன் கூடின பாகன்;

  16-17 (துறவோர்க்கு………….சிறந்தே) 9துறவோர்க்கு எல்லையாகிய தொல்லோன்- 10பற்றற்றோர்க்குத் தன் பரமானந்த மருளித்தானாக்கித் தன்றன் மையைக் கொடுக்கும் முன்னோன்; பா மாண்தனா அது சேவடி பரவ - 1பாக்களுக்கு அழகைக் கொடுக்கும் தன்னுடைய சிவந்த சீர்பாதங்களை வாழ்த்தவே; நலங்கொளச் சிறந்து- அழகு கொள்ள மிக்கு; நா மாண்புள தாம்- என்னுடைய வாக்கானது மாட்சிமையுடைத்தாம், எ-று.

  அ என்பது பண்டறிசுட்டு.

  2விநாயகர் துதி

  அகவல் 2

  3திங்கட் கொழுந்தி னன்ன 4வொண்கேழ்

  ஒருமருப் பிருமதக் கடவு 5ளெண்கழி

  6யாண்டுபல நிரம்பினு மிளமையொடு கெழீஇ

  ஞான மாமதந் தருக்கி யானா

  5.  வினையுகச் சீறு நனைகவுள் வேழத்

  தடியிணை யொழிவின்று பழிச்ச

  முடிவிலா தெவன் முன்னிய நெறித்தே

  உரை: 1-2 (திங்கள் ………….. கடவுள்) திங்கட் கொழுந்தின் அன்ன -பிறைச்சந்திரனையொத்த; ஒண்கேழ் ஒரு மருப்பு- ஒளியும்7 வடிவுமுடையதொரு கொம்பையுடையவனாய்; இருமதக் கடவுள்- 8பிரமசாரியான படியால் இந்திரிய மத மொழிந்த இரண்டு மதத்தினையுடைய கருத்தாவாய்;

  2-3 (எண்கழி………..கெழீஇ) எண்கழி யாண்டு பல நிரம்பினும்- தேவர்களெண்ணும் எண்ணளவிறந்த வயது பல வுண்டாயினும்; இளமையொடு கெழீஇ - இளமையோடு கூடி;

  4-5 (ஞானமாமதம்…………..வேழத்து) ஞானமாமதம் தருக்கி- ஞானமாகிய மகத்தான மதத்தாலே கருவித்து; ஆனா வினையுகச் சீறும்-1 ஆன்மாக்களின் அளவிறந்த 2கன்மங்கள் 3பற்றற வொழியும் படி சீறும்; நனைகவுள் வேழத்து- மதத்தாலே நனைந்த 4கதுப்பையுடையனாகிய முகத்து விநாயகனுடைய;

  6-7 (அடியிணை…………… நெறித்தே) அடியிணை- உபய பாதங்களை; ஒழிவின்று பழிச்ச - ஒழியாதே தோத்திரம்பண்ண; முன்னிய முடிவிலாதெவன்- அபேக்ஷையான போக மோக்கங் களில் சித்தியாதது யாது; 5நெறித்து- 6முறையாலே நடந்து சித்தி விளைக்கும் என்பதில் ஐயமில்லை எ-று.

  முடிவிலாததென்பது முடிவிலாதென வந்தது.

  கலைவாணி துதி

  அகவல் 3

  <div style="margin-left: 3em;">

  விரிகதிர் மதியிற் கதிர்விரி பொகுட்டுத்

  7தாதுகு படுத்த மேதகு வெண்மடற்

  8புழற்காற் சரோருகத் தளிக்குல மொலிப்ப

  விழைவற வெகுண்டோர் விழைய9 விழைபென

  5.  அருட்கதிர் பரப்பி மருட்டுய ரகற்றி

  வண்ண மாத்தவி சேறிப் பண்வரக்

  கின்ன ராதிக டம்முறை தொடங்கப்

  பொழுதொடு விப்பிரர் தொழுதனர் நுவல

  இமையா மங்கைய ரமையாது பழிச்சத்

  6.  தீதற விருந்த வாதி நாயகி

  கலைமகள் கழலிணை கருத

  நிலைமை நீடுத றலைமையோ 1வன்றே

  உரை: 1-3 (விரிகதிர்………..சரோருகத்து) விரிகதிர் மதியின் -2பூரண சந்திரனை யொத்த; 3கதிர் விரி பொகுட்டு -மிக்க ஒளியுடைத்தாகிய பொகுட்டை யும்; தாதுகுபு அடுத்த மேதகு வெண் மடல்- 4தேன் சொரிந்து நின்ற அழகிய வெண்மடலையும்; புழற்கால் சரோருகத்து- புழையுண்டான தாளையுமுடைய வெண்டாமரைப் பூவாகிய;

  3-10 (அளிக்குலம்……….ஆதிநாயகி)5 வண்ணமாத்தவி சேறி - அழகையும் பெருமையுமுடைத் தாகிய பீடத்தின்மீதே யேறி; அளிக்குலம் ஒலிப்ப - 6வண்டு வர்க்கமெல்லாஞ் சத்திக்க; விழைவற வெகுண்டோர் விழைய-7 அபேக்ஷிக்கத்தக்க சுவர்க்க போகத்தையும் ஆசை யேதுவாக வரும் காம சுகாதிகளையும் திரஸ்கரித்துச் சர்வசங்க நிவர்த்தி வந்தோர் ஆசிரயிக்க; விழை பென - அப்படியே தன்னை யாசிரயிப்பதை 8வேண்டினாற் போல; அருட்கதிர் பரப்பி மருள் துயர் அகற்றி-9தன் கிருபை யாகிய பிரகாசத்தை விரித்துத் தன்னை யாசி ரயித்தோருடைய

  1அஞ்ஞானத்தால் வரும் துக்கங்களை நீக்கி; கின்னராதிகள் தம்முறை தொடங்க - கின்னரர் கிம்புருடர் முதலாயினோர் தத்தம் முறையிலே 2பண்படத் தொடங்கிப் பாடித் தோத்திரம் பண்ண; 3விப்பிரர் பொழுதொடு தொழுதனர் நுவல- வேதியர் காலந் தோறும் தொழுது துதிக்க; இமையா மங்கையர் அமையாது பழிச்ச- தெய்வமகளிர் 4பன்முறை வணங்கியும் 5தமது காதல் ஆராமையால் மேலும் மேலும் துதிக்க; தீதற இருந்த ஆதிநாயகி-6குற்றமற எழுந்தருளியிருந்த ஆதி நாயகியான;

  11-12 (கலைமகள் …………… அன்றே) கலைமகள் 7கழல் இணை கருத - வாகீசுவரியுடைய உபயபாதங்களை நினைத்துத் தியானம் பண்ண; நிலைமை நீடுதல்-8 அனந்த நித்திய பரமானந்த சைதந்நியத்தில் நிலைபெற இருக்குமது; தலைமையன்று - ஒரு பொருளன்று, 9எல்லார்க்கும் எளிதாம் எ.று.

  ஓகாரம், எதிர்மறை.

  ஆசிரியர் துதி

  அகவல் 4

  அருளு மறிவு மிருடீர் பொறையும்

  வாய்மையுந் தவமுந் தான மாட்சியும்

  மன்னுயிர்க் கின்பந் தன்மீக் கூர்தலும்

  ஒழுக்கமும் விழுப்பமு மழுக்கா றின்மையும்

  5.  கண்கான் முதலிய பொறியும் பண்பார்

  பூணுந் துகிலும் பாண்விரி பிணையலும்

  புண்ணியம் படைத்து மண்மிசை வந்த

  தோற்றத் தன்ன வாற்றலெங் குரிசில்

  குணப்பொற் குன்றம் வணக்க வாரா

  6.  1ஐம்புல வேழத்து வெந்தொழி லவியக்

  கருணை வீணை காமுறத் தழீஇச்

  சாந்தக் கூர்முள் ளேந்தின 2னிறீஇத்

  தன்வழிக் கொண்ட சைவ சிகாமணி

  பரமா னந்தத் திருமா முனிவன்

  7.  வளமலி சேவடி வழுத்தி

  உளமலி யுவகை யுற்றனம் பெரிதே

  உரை: 1-4 (அருளும்…………. அழுக்காறின்மையும்) அருளும்- 3சருவ பிராணிகளுடைய இதாகிதங்களும் தனக்கு வந்தாலொத் திருக்கும் கிருபையும்; அறிவும்-4 கல்வியினாலாகிய பொருள் நீதிகளையறியும் ஞானமும்; 5இருள் தீர் பொறையும்-சகித்தற் கரிய வெகுளியும் துன்பமும் வந்தவிடத்துக் குற்றமற்ற பொறையுடைமையும்; வாய்மையும்- 6பிறர்க்குத் தீங்கில்லையாகச் சொல்லும் மெய் வசனமும்; தவமும்- இராகத் துவேஷத் தினாலே பிராணிகளுக்கு வருத்தஞ் செய்யாமையான தவமும்; தானமாட்சியும்- பக்குவான்மாக்களுக்கு உபகரிக்கும் ஞானக் கொடையும்; மன் உயிர்க்கு இன்பம் தன்மீக் கூர்தலும்- 1நித்திய மான ஆன்மாக்களுக்குப் போகமோக்கங்கள் தன்னினும் மிகவுண்டாக வேண்டுமென்னும் திருவுள்ளமும்; ஒழுக்கமும்-சமயாசாரம் வர்த்தித்தலும்; விழுப்பமும்- 2சீர்மையுடை மையும் அழுக்காறின்மையும்-3 மனச்சழக் கில்லாமையுமாகிய தசகுணங்களையும்;

  5-8 (கண்கால்…….குரிசில்) கண்கால் முதலிய பொறியும் 4கண் முதலிய புத்தியிந்திரியங்களாகவும், 5கால் முதலிய கன்மேந் திரியங்களாகவும்; பண்பார் பூணும் துகிலும்- மக்கட்பண் பென்னும் சீவகாருணியத்தாலுண்டான பாச வைராக்கியமும் குருபத்தியும் ஞானசமாதியுமே ஆபரணமாகவும் ஆடையாகவும்; பாண்விரி பிணையலும் - வண்டுகளாலே சுத்திக்கப் பட்ட மாலையாகவும்; புண்ணியம் படைத்து -6புண்ணிய மானது இவையிற்றை அவயவமும் அலங்காரமுமாகக் கொண்டு; மண்மிசை வந்த தோற்றத்தன்ன- பூகதமான 7திருமேனியுடன் வந்தாற்போன்ற; ஆற்றல்- நிலைமையையுடைய; எம் குரிசில் -எம் கருத்தாவும்;

  9-13 (குணப் பொற்குன்றம்…………சைவசிகாமணி) குணப் பொற் குன்றம்-8 பெருமையாலும் சுத்தியாலும் பிறழா நிலைமை யாலும் குணத்துக்கு மகாமேருவையொப்போனும்; வணக்க வாரா ஐம்புல வேழத்து வெந்தொழில் அவிய - அந்தக்கரணங்களென்னும் பாகரால் வணக்குதற் கரியவாகிய பஞ்சேந்திரியங் களாகிய யானையின் வெவ்விய தொழிலான ஆசை யழிய; கருணை வீணை 1காமுறத் தழீஇ - கருணையாகிய வீணையை 2விருப்பமுண்டாக இசைத்து 3வணங்கி மேற்கொண்டு; சாந்தக் கூர்முள் ஏந்தினன் நிறீஇ -சாந்தமென்னும் கூரிய தோட்டியைக் கைக்கொண்டு நிறுத்தி; தன்வழிக்கொண்ட - தன்வச மாக்கிக் கொண்ட; 4சைவசிகாமணி- சைவத்துக்குச் சிகாமணியு மாயினோன்;

  14-16 (பரமானந்த…..பெரிதே) பரமானந்தத் திருமா முனிவன் -5பரமானந்த முனிவனென்னுற் 6தீக்ஷாநாமத்தை யுடைய மகாமுனிவனுடைய; வளமலி சேவடி வழுத்தி - அழகுடைய வாகிய சீர்பாதங்களைத் தோத்திரம் பண்ணி; 7உளமலி யுவகை பெரிது உற்றனம் - ஆன்ம சிற்சத்தியின்கண்ணே விளங்கும் 8பூரணமான மகிழ்ச்சியை மிகவும் பெற்றேம் எ-று.

  1மனச்சழக்காவது, பிறர் செல்வம் வித்தை முதலியவற்றைக் கண்டு பொறாமை.

  அவையடக்கம்

  அகவல் 5

  <div style="margin-left: 3em;">

  உரைசால் பகுதிப் புரையோர் போலத்

  தமிழ்த்துறை நிரம்பாத் தன்மை யேனை

  அறத்தின் விருப்புச் சிறப்பொடு நூக்கப்

  பாப்புனை பான்மை 2நோக்கினென் வலித்துழி

  5. எழுதாக் கேள்வியுங் கேள்வி பழிவாழ்

  ஏனோர் கேள்வியுங் கேள்வி மாண

  3வருதார் தாங்கிய கிளர்தா ரகலத்

  தெறிவே விளைஞர் போலப் பொறிவாழ்

  புலப்பகை தாங்கிப் பிறப்பற வெறியும்

  10. அறப்பேர் வாழ்க்கையும் வாழ்க்கை திறப்பட

  இம்மையும் பயவா தம்மையு முதவாது

  4செச்சைக் கண்டத் தொத்தூன் போல

  வாழ்வோர் வாழ்க்கையும் வாழ்க்கை தாவா

  ஒருமைத் தன்றே யாயினுஞ் சான்றோர்க்

  15. கெம்முடைப் புன்சொற் றம்முடைச் சிறப்பே

  அதனால்

  அவரினு மளியமற் றியாமே கவரா

  ஏனோ ரளிக்குந் தானீ றின்றே

  அவரே

  20. தம்பா டெய்த றம்பா லோர்க்கே

  5எம்பா டெய்த லிருமையு முடைத்தே

  இவ்விரு பகுதியு மெழுத்துச் சொல்யாப்

  பவ்வயி 6னுடத்தே பொருட்பா டின்றே

  உரை: 1-4 (உரைசால்…….வலித்துழி) தமிழ்த்துறை நிரம்பாத் தன்மையேனை- 1தமிழிலக்கண வியல்பு நிரம்ப வறியாத என்னை; அறத்தின் விருப்பு சிறப்பொடு நூக்க- 2“ஞானக் கறையறு பாத” மென்று சொல்லப்பட்ட ஞான பாதத்தின் மேற் பிரியம் மிகவும் செலுத்துதலாலே; 3உரைசால் பகுதிப் புரையோர் போல- 4கீர்த்தி நிறைந்த வேதாகமங்களை மிகவுணர்ந்த பெரி யோரைப்போல; பாப்புனை பான்மை நோக்கினென்- 5ஆசிரியப் பாவால் ஒரு சாத்திரம் பண்ணு முறையைப் பார்த்தேன்; வலித்துழி- 6பார்த்தவாறே திகைத்த விடத்து;

  5-6 (எழுதா…………………… கேள்வி) 7எழுதாக் கேள்வியும் கேள்வி - 8பரமேசுவரன் உபதேசித்தருளப் பரிசுத்தரான சனகாதி முனிவர் கேட்ட வேதவாக்கியமும் ஒரு சத்தம்; பழிவாழ் ஏனோர் கேள்வியும் கேள்வி - பழியுண்டாக வாழும் ஏனைப் 9பாவ காரிகள் வசனமும் ஒரு சத்தமாதலானும்;

  6-13 (மாண……………….. வாழ்க்கை) 10வருதார் மாணத் தாங்கிய -11சத்துரு பக்கத்திலிருந்து வருகிற தூசிப்படையை வஞ்சியாது தாங்கிய; கிளர்தார் அகலத்து எறிவேல் இளைஞர் போல - வண்டு கிளரப்படா நின்ற 1மாலையணிந்த மார்பையும் சமரில் எதிரிட்டார் மேல் 2எறியும் வேலையுமுடைய வீர புருடரைப் போல; பொறிவாழ் புலப்பகை தாங்கி- சோத்திரம் துவக்கு சட்சு சிகுவை ஆக்கிராணம் என்று சொல்லப் பட்ட இந்திரியங்களிலே வாழும் சத்தாதி புலனாகிய பகைகளைத் தாங்கி; பிறப்பு அற எறியும் அறப்போர் வாழ்க்கையும் வாழ்க்கை - உற்பிசம் அண்டசம் சராயுசம் சுவேதசம் என்னும் நான்கு வருக்கத்துப் பிறப்பையும் அற எறியும் ஞானவான்கள் திருவுலாச் 3செய்தருளும்4 வாழ்க்கையும் வாழ்க்கை; திறப்பட - நன்மை யுண்டாக; இம்மையும் பயவாது- இம்மையிலும் தமக்கும் பிறர்க்கும் பிரயோசனமின்றியே; அம்மையும் உதவாது - மறுமை யினும் சுவர்க்க மோக்கங்களுக்கு இடமின்றியே; செச்சைக் கண்டத் 5தொத்தூன் போல-ஆட்டின் கழுத்தில் தொங்குகின்ற 6அசகளத்தம் போல; வாழ்வோர் வாழ்க்கையும் வாழ்க்கை- உயிர் வாழ்வோர் வாழ்க்கையு மொரு வாழ்க்கை யாதலானும்;

  13-14 (தாவா……………அன்றே) 7தாவா- கேடுபடாது; ஒருமைத்து அன்றே- ஒருபடித்தல்லாத 8நன்மை தீமையாயிருந்த பொருள்களிரண்டும் பிரபஞ்சத்தில் ஒக்க வியாபித்திருக்கும்; 1ஆதலால் பெரியோர் அருளிய நூல்களே சாத்திரமாக, யானும் புல்லிய சொற்களால் இந்தச் சாத்திரம் பண்ண விசைந்தேன்;

  14-15 (ஆயினும்…………சிறப்பே) ஆயினும்- அங்ஙன மாயினும்; சான்றோர்க்கு - ஞானவான்களுக்கு; எம்முடைப் புன் சொல்- 2எம்முடைய புல்லிய சொல்லும்; 3தம்முடைச் சிறப்பே- தாம் அருளிச்செய்த நூலுக்குச் 4சிறப்பையே கொடுக்கும்.

  16-18 (அதனால் ……………..இன்றே) அதனால் - 5ஆதலால்; யாம் அவரினும் அளியம் - யாம் அவரிடத்தும் 6அனுக்கிரகம் பெறுதலுடையேம்; கவரா- எம்மின் வேறல்லாத; ஏனோர் அளிக்கும் ஈறு இன்று - 7அஞ்ஞானிகளிடத்தும் தமக்கு யாம் இனமாத லால் அங்கீகாரம் பெறுதற்கு 8முடிவில்லை;

  19-21 (அவரே………………….உடைத்தே) அவர் - அந்த நல்லோரும் தீயோரும்; பாடு எய்தல் 9தம்பாலோர்க்கு- பெருமை பெறுவது தமக்கு இனமாயினாரிடத்தேயாம்; எம்பாடு எய்தல் இருமையும் உடைத்து- யாம் இருதிறத்தாரிடத்தும் அனுக்கிரகம் பெறுதலுடையேம்;

  22-23 (இவ்விரு……….இன்றே) இவ்விருபகுதியும் - இவ்விரு திறத்தாருடைய 10அனுக்கிரகத்துக்குரிய குணதோட மிரண்டும்;

  எழுத்து சொல் யாப்பு அவ்வயின் உடைத்து - இந்நூலி லுள்ள எழுத்து சொல் யாப்பு அலங்காரமென்ற 11நான்கு வருக்கத் திடத்து மேயன்றி; பொருட்பாடு இன்று- 1நூற்பொருள் 2பரமசிவனருளிச் செய்த திவ்வியாகமப் பொருளாதலால் அதனிடத்தொரு குற்றமு மில்லை எ-று.

  அன்று, எ, மற்று- அசைநிலை.

  நூற்பெயர்

  **cஅகவல் 6

  3மந்தர மத்தென நிறுவி நாணென

  ஐந்தலை யரவு சுற்றி நஞ்சொடு

  பணாமணி பிதுங்கப் பற்றி யவுணரொ

  டமரரு மியக்க 4வாற்றா நாட்செல

  5.  முகுந்தன் றனா அது முழுவலி யெறுழ்த்தோள்

  வருந்த வாங்குபு வாய்விட் டலறி

  நுரைத்தலை விரித்துத் திரைப்பெருங் கையெடுத்

  தின்றுங் 5கூப்பிட  வன்றுவந் தெழுந்த

  துவரி யமிழ்த மென்ப தமிழ்வளர்

  10. குமுதச் செவ்வாய்க் கோமள வல்லி

  இமைய வல்லி யமைவுற1 விளங்கிய

  நுதல்விழி நாட்டத் தொருதனிக் கடவுள்

  அருளின் கொம்பரொ டமரரு முனிவரும்

  வெருளின் பிறவி வேர்தனி விமலவென்

  11. றானா தரற்றத் தானினி தருளிய

  ஆகம மத்தினருளின் கோலத்

  தாசிரி யமலன் பாத பங்கயப்

  போதொளி யிலகப் புனைந்து மாதவன்

  அருளுப தேச வரும்பெற னோன்ஞாண்

  12. மதிபாத் தடக்கை கதுமெனப் பூட்டி

  2முறுக வாங்க மறுகுபு கலுழ்ந்து

  வல்வினைத் திண்கை மேலெடுத் தொய்யென

  அறுவகைப் பித்தை சிறுபுறத் தலையப்

  பிறவிப் பேரிட ரலமந் தோலமிட்

  13. 3டிரியல் போக வரும்புல மடிய

  4அச்சா னாழி யெற்பட வெழுதலின்

  ஞானா மிருத மென்ப

  ஆனாச் செவ்வி மாநூற் பெயரே

  உரை: 1-4 (மந்தரம்…………..நாட்செல) மந்தரம் மத்தென நிறுவி- மந்தர பருவத்தை மத்தாக நாட்டி; ஐந்தலை அரவுநாண் எனச்சுற்றி - ஐந்தலை மாநாகத்தை நாணாகப் பூட்டி; நஞ்சொடு பணாமணி பிதுங்க- நஞ்சொடுகூடப் படத்திலுண்டாகிய மாணிக் கமணி பிதுங்க; பற்றி - பற்றிக்கொண்டு; 5அவுணரொடு அமரரும் இயக்க- 6அசுரர்களோடு தேவர்களும் கூடிக் 7கடையப்புக்கு; ஆற்றா- 1 அவ்விடத்து மாட்டாமையாலே; நாள் செல - நெடுங் காலஞ்செல்ல;

  5-9 (முகுந்தன் …………என்ப) முகுந்தன் 2தனாஅது முழுவலி எறுழ்த்தோள்3 வருந்த வாங்குபு - 4விட்டுணு தனது மிகவும் வலியுடைத்தாகிய தோளானது வருந்தும்படி கடைதலாலே; வாய்விட்டலறி -வாய்விட்டுக் கதறி; நுரைத்தலை விரித்து- நுரை யென்னும் தலையை விரித்து; திரைப்பெருங்கை எடுத்து -திரையென்னும் பெரிய கையை யெடுத்து; இன்றும் 5கூப்பிட- அன்று கலங்கின அதிர்ச்சியாலே இன்றும் கூப்பிட; அன்று- அந்த நாளிலே; அமிழ்தம் 6உவரி வந்து எழுந்தது- அமிர்தமானது கடலிலே வந்து எழுந்தது; என்ப - என்று சொல்லுவார்கள்;

  9-15 (தமிழ்வளர்……….அரற்ற) 7தமிழ்வளர் குமுதச் செவ்வாய் கோமள வல்லி- தமிழுக்குப் பெருமை கொடுக்கிற குமுதம் போன்ற சிவந்த வாயையுடையவளான 8கோமளக் கொடிபோன்று இருக்கப்படாநின்ற; இமையவல்லி- இமைய பருவதத்தில் அவதரித்த உமாதேவியுடனே; அமைவுற விளங்கிய- அழகுண்டாக விளங்கிய; நுதல் விழிநாட்டத்து 1ஒருதனிக் கடவுள் - நெற்றியிலே விழித்த திருநயனத்தையுடையனாய் ஏகனாய்த் தனக்குவமையில்லாத கருத்தாவான பரமாசாரி யானை; அருளின் கொம்பரொடு- அருளே சொருபமாகவுடைய 2உமாதேவியுடன் வணங்கி; அமரரும் முனிவரும்- தேவர்களும் இருடிகளும்; வெருளின் பிறவி 3வேர்தணி விமல- 4மயக்கத்தைத் தருகிற 5பிறவியை வேரோடே கெடுக்க வேண்டும் நின்மலனே; என்று ஆனாது அரற்ற- என்று அமையாத படி தோத்திரம் 6பண்ணினதாலே;

  15-21 (தான்………..வாங்க) தான் இனிது அருளிய ஆகம மத்தின்-7 அவன்தான் பக்குவான்மாக்கள் உய்தற்பொருட்டு இனிதாக அருளிச் செய்த திவ்வியாகமத்தை மத்தாக நாட்டி; அருளின் கோலத்து - அருளே திருமேனியாகவுடைய8 ஆசிரி யமலன்-9 அஞ்ஞானமாகிய அந்தகாரத்தை நீக்குகின்ற

  நின்மலன்; பாதபங்கயப் போது- சீர்பாதமாகிய தாமரைப் பூவை ஒளி யிலகப் புனைந்து 10சிவஞான வொளியுண்டாகச் சூடிக்கொண்டு; மாதவன் அருள் 1உபதேச அரும்பெறல் நோன் ஞாண் -இம்மகா தவசிபிரசாரித்த உபதேசமென்னும் பெறுதற் கரிய வலிய நாணை; மதி மாத்தடக்கை கதுமெனப் பூட்டி- மதியென்னும் மகத்தான கையாலே விரையப் பூட்டி; 2முறுக வாங்க- முறுகக் கடலனதாலே;

  21-26 (மறுகுபு…………. எழுதலின்) மறுகுபு கலுழ்ந்து; கலங்கித் துக்கப்பட்டு; வல்வினைத் திண்கை மேலெடுத்து- புண்ணிய பாவமாகிய வலிய திண்ணிய இரண்டு கையையும் மேலேயுயர்த்தி; ஒய்யென -விரைய; அறுவகைப் பித்தை சிறுபுறத் தலைய- காமாதி பகையாறுமாகிய மயிர் முதுகிலே யலைய; பிறவிப் பேரிடர் -பிறவி யென்னும் பெரிய துக்க மானது; அலமந்து ஓலமிட்டு இரியல்போக - சுழன்று கூப்பிட்டு நீங்க; அரும்புலம் மடிய - கெடுத்தற்கரிய இந்திரியங்களின் 3சேட்டை கெட; அச்சான ஆழி- 4என்னுடத்துள்ளதான அஞ்ஞான மென்னும் சமுத்திரத்தினின்றும்; எல்பட எழுதலின் -5ஒளியுண்டாக ஞானம் தோற்றியதனாலே;

  27-28 (ஞானாமிர்தம் ……………..பெயரே) ஆனாச் செவ்வி மாநூற் பெயர்- அமையாத அழகினையுடைய மகத்தான இந்தச் சாத்திரத் துக்குப் பெயர்; 6ஞானாமிருதம் - ஞானாமிர்தம் எ-று.

  மறுகுபு, செய்பென்னும் வினையெச்சம். என்ப, அசைநிலை, அஞ்ஞானமாகிய சமுத்திரத்திலேயிருந்து இந்த ஞானம் வந்த வாறு எங்ஙனே யென்னில், விறகில் தீப்போல; 1ஞானமுமின்மையு நலமிக், கானா வுயிர்கட் குணர்வனை வகையே” என்பாராகலின் வரும் என அறிக.2

  மறை முறை நான் கெனல்

  அகவல் 7

  கண்ணுத லண்ணல் விண்ணவர் பணியக்

  காள மாண்ட வாளவிரங்களத்

  3தெரிமரு ளீர்ஞ்சடை 4மதிமுகி ழணிந்த

  உம்ப ரீசரும்பன் வெம்புறு

  5.  பிறவிப் பேரிடர்க் கறையுறு பகுவாய்

  உரகத் தாரெயி றுறவீழ்ந் தறவ

  அஞ்சின மளியமென வமரரு முனிவரும்

  வெஞ்சினைப் பிறவி 5நஞ்சுக விரித்த

  அருமறை யெவையுந் திருமிகு ஞானம்

  6.  இலங்கொளி யோக நலங்கிளர் கிரியை

  6சரியை யெனவுரை விரிதரு பாதம்

  கறையறு மறைமுறை நெறியின்

  அறைய மற்றரோ வறிகதி லமர்ந்தே.

  7இது சிவபிரான் அருளிச்செய்த திவ்வியாகமங்கள் சதுர்ப் பாதமாயிருக்கும்; இவையிற்றைச் சொல்ல அறிக என்றது.

  1-4 (கண்ணுதல்…..உம்பன்) நுதல்கண் அண்ணல்- நெற்றி யிலே விழித்த திரு நயனத்தையுடைய தலைவனும்; விண்ணவர் பணிய -வானவர் வந்து தெண்டம் பண்ணுதலினாலே; காளம் ஆண்ட வாள் அவிர் அங்களத்து - நஞ்சைத் தரித்த ஒளிவிளங்கப் படாநின்ற திருக் கழுத்தையுடையோனும்; எரிமருள் ஈர்ஞ்சடை-8அக்கினியின் நிறத்தையும் மங்கச் செய்கிற சிவப்பையும் நீர்மையு முடைய திருச்சடா பாரத்திலே; மதிமுகிழ் அணிந்த- இளம் பிறையைச் சாத்தியருளிய; உம்பர்1ஈசர்

  உம்பன்- தேவர்களுக்கு மேலாகிய 2பிரமவிட்டுணுக் களுக்கும் கருத்தாவுமாகிய பரமசிவன்;3

  4-7 (வெம்புறு……………..முனிவரும்) வெம்புறு பிறவிப் பேரிடர்க்கறையுறு பகுவாய் உரகத்து- 4தபிக்கின்ற பிறவி யென்னும் மகா துக்கமாகிய நஞ்சுண்டான பெரிய வாயை யுடைய சர்ப்பத்தின்; ஆர் எயிறு உறவீழ்ந்து - கூறிய தந்தம் உருவக் கடித்தலாலே; அறவ அஞ்சினம் அளியம் என அமரரும் முனி வரும் - தருமவானே, பயப்படா நின்றோம், நின்னாலே அனுக் கிரகிக்கப்பட்ட நாங்கள் என்று 5தேவர்களும் இருடிகளும் விண்ணப்பம் செய்தலாலே;

  8-11 (வெஞ்சினப் பிறவி….பாதம்) வெஞ்சினப் பிறவி நஞ்சுக- வெவ்விய சினத்தையுடைய இந்தச் சர்ப்பத்தின் நஞ்சுகெட; 6விரித்த அருமறை எவையும் அருளிச் செய்த அரியனவாகிய 1மூல சிவாகமங்களிலும் உபாகமங்கள் பலவற்றினும் சொல்லப் படுவனவாகிய; திருமிகு ஞானம்- செல்வம் மிகுந்த ஞானம்; இலங்கொளி யோகம்- 2மேதாதி யுன்மனாந்த தரிசனமாகிய பேரொளியையுடைத்தாகிய யோகம்; நலம் கிரியை சரியை- நன்மை கிளர்ந்த கிரியை சரியை; என - என்று; உரை விரிதரு பாதம்-3உபதேச பூருவமாகப் பேசப்படுகின்ற 4நான்கு பாதங்களும்:

  12-13 (கறையறு…….. அமர்ந்தே) கறையறு மறை முறை- குற்றமற்ற உப தேசத்தின் முறைமையே; அறைய- நெறியாகச் சொல்ல;3 அமர்ந்து அறிக- புத்திபண்ணி யறிவாயாக எ-று.

  பிறவிக்கு வெஞ்சினம், இலக்கணை, மற்று, அரோ, தில், அசை

  பாயிரம் முடிந்தது

  நூல்

  ஞான பாதம்

  1. சம்மிய ஞானம்*

  அகவல் 8

  பசுவின் மூவகையவத்தை

  பிறழா நிலைமைப் பெரும்பெயர் ஞானக்

  கறையறு பாத முறையுறக் கழறிற்

  பசுபா சத்தோடு பதியாய் பெற்றி

  மதியோர் பசுமூ வகையென மதிப்பர்

  5.  பன்னிற் கேவலற் சகல னின்னியற்

  சுத்தன் கேவலற் சொற்றிடி னித்தன்

  மெய்த்தகு குணமிலி வியாபி மொய்த்து

  மலநனி புணர மறைவோ னில1னெனைச்

  செய்தியு மறியோன் மையில மூர்த்தன்

  6.  வலியில னசேதன னொளியிலி யிறையலன்;

  மாயா வுதர மரீஇத் தேயாப்

  போக நினைந்த சகலற் கெய்திய

  முரண்மிகு கூற்றை முரித்த வரன

  2திருங்கலை யமர விரிந் 3திரிஞ் சேதனம்

  7.  அடையா விச்சை யடையத் தடையில்

  விடயப் பகுதி விரவிப் புடையே

  பொங்கி யராகம் புணரத் தங்கா

  ஆசை யெங்கணு மாசற நிமிர

  எற்பிர தான மொற்கமில் குணத்தொடு

  8.  புத்தி முதலிய தொத்தினி துறழப்

  பிணித்தலிற் பிணிப்பினன் பசுமற் றிணைத்த

  நியதி முன்ன ரியலிரு வினையிற்

  பிறழா துறழப் பின்னர்க் குறையாக்

  காலங் காலத் தளவைப் பாலிற்

  9.  காட்டத் தொழிலொடு போகத் தாட்டுண்

  டிரியாத் தத்துவ கலையினி லிவ்வணம்

  பரியாப் பந்தம் பந்தித் தொருவழி

  அறிவு சிறிதமர்ந் தாக மாய

  பிரியா மோகினிப் 1பெரும் போகத்தைத்

  10. தானென வெண்ணி யானா முன்வினைப்

  பயன்பல மாந்தி வியந்துறை காலை

  வல்வினை யெல்லை செல்லாக் காலத்

  தொல்லென வொப்ப வுயர்பெருஞ் சிவனது

  சத்திநி பாதந் தழைப்ப மெய்த்தகு

  11. குருபரம் பரன தருளின் செவ்வி

  வம்பறு 2சம்பிர தாயத் தஞ்சுடர்

  உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

  தேயாதி யாவு மாயறி வகன்ற

  ஆயாச் சிவன தணிகிளர் சீர்த்தி

  12. நின்மலத் தியையும் பின்மலத் தியையான்

  அந்தமில் பந்தமற் றிவணஞ்

  சிந்துதல் சிந்த றெரியுங் காலே.

  இது, பரமசிவன் ஆகமத்தில் அருளிச்செய்த சதுர்ப் பாதங் களில் ஞான பாதமாவது பசு பாச பதி என்ற மூன்றையும் ஆராய்ந் தறிதலா மென்று கூறி, இவையிற்றிற் 1பசுவினது கேவல சகல சுத்தாவத்தையிலக்கணம் கூறியது.

  2இது முதல் ஏழு செய்யுட்களில் சம்மிய ஞானத்தின் இயல்பு கூறுகின்றார்.

  உரை: - 1-3 (பிறழா………பெற்றி) 3பிறழா நிலைமை ஞானப் பெரும் பெயர்க் கறையறு பாதம்-4 அனாதி நித்திய மாகையால் எக் காலத்தும் திரியாத ஒரு படித்தான ஞான மென்னும் பெரிய பெயரையுடைத்தாய குற்றமற்ற பாதத்தின்; முறை 5உறக் கழறின்- முறைமையை யறியச் சொல்லின்; பசு பாசத்தொடு பதி 6ஆய் பெற்றி- (அது பசுவும், பாசமும், பதியு மென்று மூன்றையும் ஆராயுமுறைமை யுடைத்து;

  4(மதியோர்…..மதிப்பர்) மதியோர்- 7ஞானவான்கள்; பசு மூவகை யென மதிப்பர்-8பசுவென்று சொல்லப்பட்ட ஆன்மா திரிவித அவத்தையுடைத்தாதலால் அது மூன்று வகைப்படு மென்று அறியச் சொல்லுவார்கள்;

  5-6 (பன்னில் ………சுத்தன்) பன்னில் - அவை யிற்றைச் சொல்லின்; கேவலன் சகலன் இன்னியல் சுத்தன் -1கேவலனென்றும் சகலனென்றும் இனிய இயல்பையுடைய சுத்தனென்றுமாம்;

  6-10(கேவலற் ………….இறையலன்) கேவலன் சொற்றிடின்- இவையிற்றிற் கேவலாவத்தையுடையனாய் நிற்கும்2 முறைமை யைச் சொல்லின்; நித்தன்- அநித்தியப்படான்; மெய்த்தகு குணமிலி- 3தேகத்துடன் தக்கிருக்கின்ற 4புத்திகுண மெட்டும் இல்லாதோன்; வியாபி- சருவ வியாபியா யிருப்போன்; மலம்நனி புணர மொய்த்து- ஆணவ மலம் மிகவும் செறிந்திருத்தலாலே; மறைவோன்- தற் சொரூபம் அறியா திருப்போன்; எனைச் செய்தியும் இலன்-5சுதந்தர வீனனாதலின் தனக்கென எத்தகைய செயலும் இல்லாதோன்; அறியோன்- அறிவில்லாதோன்; மைபில் அமூர்த்தன்-6தேக சம்பந்த மில்லாமையால் குற்றமற்ற அரூபி; வலியிலன்-7 போகத்தில் வலியில்லாதோன்; அசேதனன்-8அசேதனம் போன்று இச்சை முன்னில்லா திருப்போன்; ஒளி இலி- பிரகாசமுடையனல்லன்; இறையலன்- ஒன்றுக்கும் 9கருத்தாவு மல்லன்;

  11-21 (மாயாவுதரம்…………………பசு) (1இனிச் சகலாவத்தை யுடையனாய் நிற்கும் முறைமை கூறின்) மாயா உதரம் மரீஇ- மாயா காரியமான தேகத்திலே கெழுமி; 2தேயாப்போகம் நினைந்த சகலற்கு - அளவிறந்த போகத்தைத் துய்க்க நினைந்த சகலனை; எய்திய-சகாலவத்தை யெய்துமாறு கூடின; முரண்மிகு கூற்றை முரித்த; 3அரனது இருங்கலை4-வலிமிக்கிருக்கப்படா நின்ற கூற்றின் வலியையழித்த 5பரமசிவனது சத்தியினாலே பெரிய கலாதத்துவமானது; அமர-சிறிது ஞானமுண்டாம்படி ஆணவத்தை நீக்க; இருஞ்சேதனம் விரிந்து- மகத்தான சைதந் நியம் விரிந்து; அடையா விச்சை அடைய-6 பெறுதற்கரிதாகிய வித்தியாதத்துவம் வந்தடைதலாலே; தடையில் விடயப்பகுதி விரவி- 7தடுத்தற்கில்லாத சத்தாதி விடயங்களைந்தினும் விரவி; புடையே பொங்கி-8பக்கமெல்லாம் மிக்குச் சென்று; அராகம் புணர- அரரக தத்துவங் கூடுதலால்; தங்கா- தடையில்லாத; ஆசை எங்கணும் மாசு அற நிமிர-ஆசை யெவ்விடத்தும் குற்றமற நிமிர; எல் பிரதானம் ஒற்கம் இல் குணத்தோடு -9ஒளியுடைத் தாகிய பிரகிருதியினின்றும் பிறந்த ஒடுக்கமில்லாத 1குண தத்துவத் தோடு; புத்தி முதலிய தொத்து இனிது உறழப் பிணித்த லின்-புத்தி தத்துவ முதல் பிருதுவி அந்தமான 2தத்துவ வருக்கம் இனிதாகக் கூடிப் பந்தித் தலாலே; பிணிப்பினன் பசு- பந்திப்புடையனாகிய பசுவானவன்;3

  21-31 (மற்று………………………வியந்துறைகாலை) இணைத்த நியதி- பரமசிவன் இணைத்த 4நியதி தத்துவம்; முன்னர் இயல் இருவினையின்- முற்பவத்திற் செய்து பக்குவப்பட்ட 5புண்ணிய பாவங்களால் வரும் போகங்களை; பிறழாது உறழ- 6தப்பாதே நியமித்துக் கொடுக்க; பின்னர்- பின்பே; குறையாக் காலம்- 7அந்தத்தை யில்லாத காலதத்துவம்; காலத்து அளவைப் பாலின் காட்ட -புசிக்கக் கடவனவாய காலவெல்லைகளை1 முறைப்படி பகிர்ந்து கொடுக்க; தொழிலொடு போகத்து ஆட்டுண்டு-2கன்மத்தோடு போக விச்சையாலே யலைப் புண்டு; இரியாத் தத்துவ கலையினில்- நீங்கா தத்துவாங்கி

  சத்திலே; இவ்வணம்- இவ்வண்ணமே; பரியாப் பந்தம் பந்தித்து- 3கெடாத பந்தம் பந்தித்து; ஒரு வழி அறிவு சிறிதமர்ந்து - ஒரு வழித்தான கரணவறிவு சிறிது கூடி; பிரியா மோகினி- 4வியாபியா

  யிருக்கிற மாயையினுடைய; ஆகமாய பெரும் போகத்தை- 5காரியமாய் வந்த தேகமாகிய பெரிய போகத்தை; தான் என எண்ணி-6தானென்று 7அவிவேகித்தெண்ணி; ஆனா முன்வினைப்

  பயன் பல மாந்தி- அளவில்லாத பூருவ கன்மபலங்களைப் புசித்து; வியந்துறைகாலை- பிரியப் பட்டு இங்ஙனம் வாழுங்காலத்து8;

  32-37 (வல்வினை……காலை) எல்லை செல்லாக் காலத்து வல்வினை ஒல்லென ஒப்ப-9 எண்ணிறந்த காலத்திலே 10மல பரிபாகப்பட்டு வலிற 11கன்மமானது விரையச் சமத்துவப் பட்டபோது; உயர் பெருஞ்சிவனது-12தத்துவாதீதனாகிய பெரிய பரமசிவனுடைய 1சத்திநிபாதமுண்டாவதால்; 2மெய்த்தகு குருபரம்பரனது அருளின்செவ்வி - திருக்கயிலாய பரம்பரையாக வந்த திருமேனிச் சட்டையோடே கூடியிருக்கிற ஞானாசாரிய னென்னும் மேலான பரமசிவனுடைய கிருபைக்குப் பக்குவ மாய்; வம்பறு 3சம்பிரதாயத்து அஞ்சுடர் உற்றகாலை- அநாதி யாய்க் கிட்டுதற் கரிதாகிய 4ஞானாவதியான தீக்கையென்னும் அழகிய ஒளி பிரகாசமாகுங் காலத்திலே;

  37-40 (சொற்றொடர்………..இயையான்) சொல் தொடர்பு

  அற்று- இன்னபடி யிருப்பனென்று 5சொல்லுதற்கரியனாய்; தேயாது அழிவின்றி; யாவுமாய் சிவதத்துவாதி பிருதுவியந் 6தமாகிய 7தத்துவங்களை அணுப்புதைக்கவும் இடமின்றி வியாபித்து; அறிவு 1அகன்ற ஆயாச்சிவனது- 2எல்லாவற்றையும் சம்பூரணமாக அறியும் சர்வஞ்ஞனான பரமசிவனது; அணிகிளர் சீர்த்தி நின்மலத்து இயையும்- அழகுண்டான கீர்த்தி யையுடைய நின்மல 3சிவானந்த பரம போகத்தில் இசைந்து போவான்;4 பின்மலத்து இயையான் -5பின்னை ஆணவமலத்திற் கூடான்;

  41-42 (அந்தமில்……………. தெரியுங்காலே) அந்தம் இல் பந்தம் சிந்துதல் (எவ்வணம்) தெரியுங்கால் இவணம் சிந்தல் - அளவில்லாதபாசச் சேதம் பண்ணும் இயல்பு எப்படியென்று விசாரிக்குமிடத்து இப்படிச் சிந்துதலாம்.

  6மற்று, முன்னது வினைமாற்று, பின்னது அசை. (1)

  அகவல் 9

  அனாதிமல சம்பந்தம்

  7காரணங் கழறல் வேண்டுவ லாரணம்

  அறியோ னமல னாதற் கத்த

  பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்

  கற்றே சொற்ற தனாதி; மற்றவர்க்

  4. கெற்றெனி லாதி யியையின் குற்றமில்

  காரணங் கழறுவல் அம்ம 8சீருணம்

  திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்

  இறைபுற் கலனுக் கென்றனன் குறைவின்

  றறைகழ லருளொலி பரந்த

  10. பொறைவளர் 1சாரற் கயிலை யோனே.

  இது, சுத்தாவத்தையிற் பசு மல க்ஷயம் வந்து நின்மலத்தைப் பெறுமென்றதனாற் பதி நின்மலனாதற்கும், 2பசு மலனாதற்கும் காரணம் வினவ, இவர்கட்கு நின்மலமும் மலமும் அனாதி சாதகமெனக் கூறியது.

  உரை: 1-3 (காரணம்………….புணர்தற்கு) அத்த- கர்த்தாவே; ஆரணம் அறியோன்- வேதாகம சாத்திரங்களால் அறிதற்கரிய பரமசிவன்; அமலன் ஆதற்கு- நின்மலனாதற்கும்; 3பொறிதீர் புற்கலன் 4விழுமலம் புணர்தற்கு- 5ஞானச்செல்வ மில்லாத ஆன்மா வருத்தஞ் செய்யும் மலபந்தனாதற்கும்; காரணம் 6கழறல் வேண்டுவல் - காரணம் அருளிச்செய்ய வேண்டுவேன் என்று சீடன் விண்ணப்பம் செய்ய;

  5. அற்றே சொற்றது அனாதி- நீ அங்ஙனமாகக் கேட்கிற பொருளதுதான் சொல்லின் 7அநாதிகாண்;

  4-6. (மற்று………..அம்ம) அவர்க்கு எற்று எனில்- அவர்கள் அநாதியாக இப்படியிருக்க வேண்டுவானேன் எனில்; ஆதி இயையின்- 8இவர்களுக்கு முறையே நின்மலமும் மலமும் ஒரு நாளிலே கூடினவெனின்; குற்றமில் காரணம் கழறுவல்- கூடினமைக்குக்குற்றமற்ற காரணஞ் சொல்லலாம்; 1அம்ம- அஃது இருந்தபடி 2உரைப்போம், கேளாய்;

  6-10. (சீருணம்………கயிலையோனே) 3சீருணம் திகழ் ஒளிப் பளிங்குபோல- செம்புக்குக் காளிதமும் விளங்குமொளி யுடைத்தாகிய பளிங்குக்குச் சுத்தமும் முற்பிற்பாடு இல்லாதவாறு போல; புகழ் அரும் 4இறை புற்கலனுக்கு என்றனன் - புகழ்தற் கரிய பரமசிவனுக்கும் ஆன்மாவுக்கும் 5நின்மலமும் மலமும் அநாதியென்று அருளிச் செய்தனன்; 6அறைகழல் அருள் ஒலி குறைவின்று பரந்த -சத்திக்கின்ற தன் திருவடிச் சிலம்பின் அருளொலியானது குறைவின்றிப் பரவுதலால்; பொறைவளர் சாரல் கயிலையோன்- 7எல்லாச் சீவராசிகளும்

  பொறுமையாகிய தவத்தை மேற்கொண்டிருக்கும் பக்க மலையையுடைத்தாகிய கயிலாசபதியாகிய எங்கள் பரமாசாரியன் எ-று.

  ஏ, சாரியை, மற்று, வினைமாற்று. (2)

  அகவல் 10

  ஆன்மா மாயா வுதரம் மருவுதல்

  கலை முதலாய நிலைமலி தத்துவத்

  துலைவில் கட்டிவ னுறலென் பின்னர்

  மாயா வுதர மரீஇயோ னெங்கணும்

  வீயா னாதலென் வினவின் மற்றிஃ

  5.  தாய்வின் வாரா வளவைத் தேயெனின்

  வீடுறப் பின்னர் விரவிய பந்தம்

  கூடா தோடிற் குலவிய போகம்

  துய்த்தல் செல்லான் செல்லா னாக

  எய்த்த லின்றா மிருவினை யாக

  6.  அபவர்க் கமுமற் றடையா னுடையுறு

  கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த

  1பெற்றியி னிவனுக் குற்ற 2வன்பிணி

  மற்றதும்3 அறிகலை முதலாச் சொற்றரும்

  படிகடை யாயவற் றொடியா துலாவலின்

  7.  நுணங்கிய வாக னாகி யிணங்கிரி

  மாயையின் வயினிவள் என்ற

  தாயாச் சீர்த்தி யருந்தவ4 அறியே.

  இது 5மலபந்தமுடைய ஆன்மா மாயா வுதரத்தின னாதற்கும் யாண்டும் போக்குவரவுடைய னாதற்கும் காரணமென்னெனக் காரணம் கூறியது.

  உரை; 1-4 (கலைமலி……….வினவின்) இவன்- முன்பே ஆணவ மலத்தாலே பந்திக்கப்பட்ட இந்த ஆன்மாவானவன்; 6நிலை மலி கலை முதலாய தத்துவத்து உலைவில் கட்டு உறல் என் - நித்தியத்தை மருவியிருக்கின்ற காலதத்துவ முதலாக வுள்ள தத்துவங்களில் 1ஒழிவில்லாத பந்திப்பு உற வேண்டுவானேன் என்றும்; பின்னர் 2மாயா உதரம் மரீஇயோன்- பின் 3மாயா காரியமான தேகத்திலே 4வர்த்திக்கிற இவன்; எங்கணும் வீயானாதல் என் (என்று) வினவின்- எவ்விடத்தும் 5போக்கு வரவுடையனாதல் எவ்வண்ணமென்றும் ஆராயுமிடத்து;

  4-5 (மற்று……………..எனின்) இஃது ஆய்வின் வாரா அளவைத்து எனின்- 6இப்பொருள் என் ஆராய்ச்சியால் அறிய வொண்ணாத அளவினதாயுள்ளதென விண்ணப்பித் தாயெனின்;

  6-10. (வீடு……………….. அடையான்) வீடுற -முத்தி

  பெறுவான் காரணமாக; பின்னர் விரவிய பந்தம் கூடாது ஓடின்- பின்பு கலை முதலாகவுள்ள7 தத்துவங்களாலாகிய உடம்பெடா விடில்; குலவிய போகம் துய்த்தல் செல்லான்- 8பரமசிவனது கிருபையால் தூண்டப்பட்டு வரும் கன்ம பல போகாதிகளைப்புசிப்பது இலனாவான்; செல்லானாக- 9இல்லாமையாலே; இருவினை எய்த்தல் இன்றாம்- 10கன்ம சமத்துவமும் மலபரிபாகமும் பிறந்து சிவப் பிரகாசத்தாலே கன்மம் 11நாசமாவ தில்லையாம்; ஆக -ஆதலாலே; அபவர்க்கமும் அடையான்- 12முத்தியையும் இவன் 13அடைதற்கு உபாயம் இல்லையாம்14

  10-12. (உடையுறு………….வன்பிணி) உடை உறு கறை கடிது அகற்ற- புடைவையிலே யேறின மாசு கடிதாகப் 1போக்க; பிற கறை பிடித்த 2பெற்றியின்- வேறும் உவர்ப் பிடித்த தன்மை யைப்போல; இவனுக்கு வன்பிணி உற்ற-3 இவனுக்கு வலிய சரீராதி சம்பந்தங்கள் உண்டாயின;4.

  13-17. (மற்றதும்…………அறி) மற்றதும் அறி- மற்றைப் பொருளையும் கேட்பாயாக; 5கலைமுதல் சொல்தரும் படி கடையாயவற்று- கலா தத்துவ முதலாகச் சொல்லப்பட்ட பிருதுவி தத்துவம் அந்தமாகவுடைய தத்துவங்களோடு கூடி;

  நுணங்கியஆகனாகி -6நுண்ணிய தேகமுடையனாய்; ஒடியாது உலாவலின்- ஒழியாதே போக்குவரவு புரிவதால்; இணங்கு இரி மாயையின் வயின் இவன் என்றது- ஒப்பில்லாத 7மாயையி னிடத்தன் இவன் என்று முன்பு சொற்றது என்று; 8ஆயாச் சீர்த்தி அருந்தவ- 9அழியாத கீர்த்தியையுடைய அரிய தவத்தையுடை யோனே; அறி - அறிவாயாக. எ-று.

  மற்று, வினைமாற்று. 10இணங்கு- ஒப்பு. (3)

  அகவல் 11

  அனுமானத்தாற் பசுவுண்மை துணிதல்

  உழிதர லியைந்த பழித ராகத்

  தழியா வறிவன் கழியா னொழியாச்

  சேதன மன்மையிற் கடம்போ லாகலின்

  எய்யா தியற்றியா னெவனவன் பொய்யாப்

  5.  புற்கல 1னென்க வொற்கமில் சேதனம்

  அறிவு வறித சேதன மென்ன

  நெறியறி புலவ ரறிவறிவகையே.

  2இது பசு உள னென்கைக்குப் பிரமாண மென்னென அந்நுவய வேதிரேகி யநுமானத்தாற் பசு 3வுண்மை கூறியது.

  உரை: 1-2 (உழிதரல்………..கழியான் ) உழிதரல் இயைந்த - 4போக்கு வரவு செய்தற்கென வந்த; பழிதரு ஆகத்து - 5பழிப்பைத் தருகின்ற தேகத்திலே; அழியா அறிவன் கழியான் -6நீங்காது ஓர் ஆன்மா உளன்;

  இது பிரதிஞ்ஞை;

  2-3 (ஒழியா ……….. அண்மையின்) ஒழியாச் சேதன மன்மையின் - அதற்கு ஏது வென்னெனில் தேகம் கெடாத சைதன்னிய மல்லாமையால்;

  இஃது ஏது;

  3. கடம்போல்- எதுபோல வென்னில் 7கடத்தைப்போல

  இது திட்டாந்தம்;

  3. ஆகலின்- ஆதலாற் கடமும் ஒருவன் கொடுபோகிற் போம், அல்லாவிடில் இருக்கும், அதுப்போலத் தேகமும் தானே போக்கு வரவு பண்ணமாட்டாதாதலான்;

  இது உபநயம்;

  4-5. (எய்யாது………….என்க) எய்யாது இயற்றியான் எவன் - தான் வேறு தேகம் வேறு என விவேகித்து அறியாது இத் தேகத்தைப் போக்குவரவு பண்ணுகின்றவன் யாவன்; 1அவன் பொய்யாப் புற்கலன் என்க- 2அவன் அழிவில்லாத ஆன்மா என்று கொள்க;

  3இது நிகமனம்;

  இவ் வைந்தும் அவ்நுவய வேதிரேகி யனுமானம்.

  5-7. (ஒற்கமில்……….. வகையே) ஒற்கமில் சேதனம்- ஒதுக்கம் இல்லாத சைதன்னியமாவது; 4அறிவு என்ன - அறிவு என்றும்; 5வறிது அசேதனம் என்ன - இந்த அறிவில்லாதது

  அசேதனம் என்றும்; நெறியறி புலவர்- முத்திநெறி யறியும் ஞானவான்கள்; அறிவு அறிவகை-6 ஆன்ம தரிசனம் பண்ணும் இயல்பு 7இதுவென்று அறிவாயாக. எ-று.

  அகவல் 12

  **cபாரிசேடத்தாற் பசுவுண்மை துணிதல்

  காரியங் காசினி யாதி 1யேரியல்

  ஈசன் கத்தா விவற்கிது போகம்

  ஆதல் செல்லா தகன்றுயர் கருமம்

  தானோ நுகர்தல் செல்லா தானா

  5.  தென்னை செய்த தென்னி/ னன்னோ

  கொன்னே செய்யான் தன்னே ரில்லான்/

  பாரிசேட மதனிற் பரனுக்

  கேரியல் பரன்பசு வென்றறி யினிதே.2

  இது, பிரபஞ்சம் காரியமாதலின் பாரிசேடத்தால் ஆன்மாவின் பொருட்டெனப் பசுவுண்மை பின்னுங் கூறியது.

  உரை: 1-5. (காசினி………என்னின்) காசினி ஆதி காரியம் - பிருதுவி முதலாக நாதமீறாகத் தேகாதி பிரபஞ்சம் 3செயப்படு பொருளாயிருந்தன; ஏர் இயல் ஈசன் கத்தா -4சுத்த சைதந்திய மாகிய அழகிய இயல்பையுடைய பரமசிவன் கருத்தாவாதலால்; இவற்கு- இவனுக்கு; இது போகமாதல் செல்லாது- 5இது போக மாகப் பொருந்தமாட்டாது; அகன்று உயர் கருமம் -6விரிந்துயர்ந்த 7காரியமாயிருக்கிற தத்துவத் தொகுதி; தானோ நுகர்தல் செல்லாது- தானே தனக்குப் போக மாகமாட்டாது; ஆனாது- அமையாது; செய்தது என்னை என்னின்- 1இந்தத் தத்துவங்களைச் செய்யவேண்டு வானேன் என்பாயாகில்;

  5-6. (அன்னோ………….இல்லான்) அன்னோ - ஐயோ; கொன்னே செய்யான் - இந்த 2நெடும் பிழையை விருதாவாகச் செய்யான் பரமசிவன்; தன்நேர் இல்லான்- தனக்கு உவமை யில்லாத முதல்வனாதலின்;

  7-8. (பாரிசேமம்…………இனிதே) பாரிசேடமதனில்- 3பாரிசேட அனுமானத்தால்: 4பரனுக்கு என்று - இச்செயல்கள்

  பசு, பாச, பதியென்ற மூன்றில் வைத்துப் பதிக்கும் சடமாகிய பிரபஞ்சத்திற்கும் இயையாமையால் பரனாகிய 5ஆன்மாவின் பொருட்டென்றும்; ஏர் இயல் பரன் பசு என்று-6சைதந்நிய மாகிய அழகிய இயல்பையுடைய பரன் என்றது பசுவாகிய 7ஆன்மாவை யென்றம்; இனிது அறி- இனிதாக அறிவாயாக எ-று.

  1பாரிசேடமாவது, மூவரிருந்த விடத்திலே ஒரு பொருளைச் சிலர் இஃது யார் பொருளென வினாவினால், நாங்களிருவரும் அறியோம் என்று சொன்னால் ஒழிந்தவன் அறிந்தானாம் தன்மை யாகிய அளவை, பாரிசேடமெனினும் ஒழிபெனினும் ஒக்கும் (4)

  அகவல் 13

  சேதனா சேதனம் கூறுதல்

  பொன்னினு மணியினுங் குயிற்றி 2மின்னகும்

  அங்கத மகுடங் கடிப்பிணை யென்ற

  பாரமென் றறியா தாரமென் றணியும்

  மம்மர் மாந்தரின் மயங்கா தம்ம

  5.  பூட்சிய தலை நீ கேட்டி 3மோட்ட

  தவனற் றந்த குவைநெற் கொண்ட

  முல்லை 4மூகையென மெல்லென் மூரல்

  அங்கை தாங்கா தாற்றுபு மிசைவுழி

  அங்கத் தியாவு மழியா திங்குயிர்

  6.  விட்ட தென்று சட்டகம் புகழாக்

  கட்டி லேற்றிக் கைதொழூஉப் பரவி

  இட்டிடை மகளி 5ரெருக்கச் சட்டென

  அழல்வாய்ப் பல்பிண மருந்தீ மத்து

  முருட்டணைப் பாயற் குரூஉப் புகை மிளிரப்

  7.  பாவகற் றழீஇக் கொன்னே வேஎம்

  இந்தனத் தியற்கை யாக்கை யென்றினி

  விழித்தனை காணிஃ தொழிப்பரும் பெரும்பொறை

  எரிவிருந் தாய வீங்கும் நீண்ட

  வரிதரு கண்ணியர் மதனனென் றாங்கும்

  8.  வேற்றுமை யுளதேற் சாற்றுக 1மாற்றிரி

  ஆடிப் பாவையோ டலர் நிழற் பாவை

  கைகான் மெய்பிறி தெவையும் பைப்பயத்

  தூக்கிற் றூங்கி மேக்குயர் புயர்தல்

  பொறியொடு சிவண லென்ன

  9.  அறிவொடு செறியு நெறிவரு முடலே.

  இது பின்னரும் அக்கினி சம்பந்தமாகிய அனுமானத்திற் சேதனா சேதனம் கூறியது.

  உரை; 1-5. (பொன்னினும்……….கேட்டி) பொன்னினும் மணியினும் குயிற்றி- பொன்னினாலும் நவரத்தினங்களினாலும் செய்யப்பட்டு; மின் நகும் அங்கதம் மகுடம் கடிப் பிணை என்ற - மின்னைக்கெடுக்கும் ஒளியையுடைய 2வாகு வலயமும் மோலியும் காதணியும் என்ற இவையிற்றை; பாரம் என்று அறியாது- சுமையென்று 3விவேகித்தறியாது; ஆரம் என்று அணியும்- ஆரமென்று அணிந்து மகிழும்; 4மம்மர் மாந்தரின் - மயக்கத்தை யுடைய 5அஞ்ஞானிகளைப்போல; மயங்காது - பித்தேறாதே; நீ புட்சியது அலை- தேகத்தின்கண்ணே வர்த்திக்கின்ற நீ 6அத்தேக மல்லை யென்று அறிவாயாக, எங்ஙன மெனில்; அம்ம கேட்டி- அதனைச்சொல்லக் கேட்பாயாக;

  5-17. (மோட்ட……………விழித்தனைகாண்) குவை நெல் கொண்ட -7விளைத்துக் குவித்த நெல்லி லுண்டாகிய; 8மோட்டு தவனன் தந்த -மிக்க நெருப்பால் ஆக்கப்பட்ட; முல்லை முகை என- முல்லை மொட்டுப் போன்ற; மெல்லென் 1மூரல்- மெல்லிய சோறும்; அங்கை தாங்காது -அழகிய கைக்குப் பொறாதே; ஆற்றுபு மிசைவுழி - ஆற்றியுண்ணும் பக்குவத்திலே; அங்கத்து யாவும் அழியாது- அவயவங்களில் ஒன்றும் குறைவின்றி- இருக்கவே; இங்கு உயிர் விட்டது என்று - இப்பொழுதுதானே உயிர்போயிற்றென்று; சட்டகம்- 2தேகத்தை; புகழாக் கட்டில் ஏற்றி-3 பாடையிலேற்றி; 4இட்டிடை மகளிர்- நுண்ணிய இடையையுடைய மாதர்; கைதொமூஉப் பரவி - கையாலே தொழுது துதித்து; எருக்க- தம்முடைய மார்பிலும் தலையிலும் மோதிக்கொள்ள; 5சட்டென- அப்பிணத்தை விரையக்கொண்டு போய்; அழல்வாய்ப் பல்பிணம் அருந்து ஈமத்து- நெருப்பாகிய வாயால் பல பிணங்களையும் புசிக்கிற சுடலையிலே; முருட்டு அணைப்பாயால்- முருட்டு விறகுகளால் அணையும் பாயலுமாக 6அடுக்கிய அடுக்கில்; பாவகன் தழீஇ - நெருப்பினைப் பரிசித்துக் கொண்டு; குரூஉ புகை மிளிர- 7ஒள்ளிய நிறத்தை யுடைய புகையெழுந்து விளங்க; கொன்னே வேஎம்-8விறகும் தேகமும் வேறென்ற விகற்பமற வேகும்; இந்தனத்து இயற்கை என்று- 9விறகின் இயல்பையுடையது இந்தச் சரீரமென்று; இனி விழித்தனை காண்- இனி ஞான திட்டியை விழித்துப்பாராய்;10

  17-20. (இஃது……………சாற்றுக) ஒழிப்பரும் பெரும் பொறை இஃது -1ஒழித்தற்கரிய பெருஞ்சுமையாகவுள்ள இந்தச் சரீரமானது; எரி விருந்தாய் ஈங்கும்- அக்கினிக்கு விருந்தாகிய இப்பொழுதும்; நீண்ட வரிதரு கண்ணியர்- 2நீண்ட செவ்வரி பரந்த கண்ணையுடைய மாதர்கள்; 3மதனன் என்ற ஆங்கும்- காமதேவன் என்று கொண்டாடிய அப்பொழுதும்; வேற்றுமை யுளதேல் சாற்றுக - வேறுபாடு உண்டாயிற் சொல்லுக;

  20-25. (மாற்றிரி…………. உடலே) மாற்று இரி ஆடிப் பாவையோடு – உவமை யில்லாத கண்ணாடியில் தோன்றும் பாவையுடனே; அலர் நிழற் பாவை- சந்திராதித்த கிரணங்களின் ஒளியால் தோன்றும் விரிந்த நிழற்பாவை; கைகால் மெய்பிறிது எவையும்- கைகளையும் கால்களையும் சரீரத்தின் மற்று முள்ள அவயவங்களையும்; பைப்பயத் தூக்கின் தூங்கி-4மெல்ல மெல்ல கீழே தூக்கின் தூங்கலும்; மேக்கு உயர்பு உயர்தல்- மேலே யெடுக்கில் உயர்தலும் போலவும்; பொறியொடு சிவணல் என்ன - கயிற்றுப் பொறியில் இயக்குவான் செயலிலே எந்திரம் வருமாறு போலவும்; நெறி வரும் உடல்- 5கன்மம் புசித்தற்கு நெறியாகவரும் இந்தச் சரீரமும்; அறிவொடு செறியும்- ஆன்மாவாகிய அறிவன் 6செயலாயே யிருக்கும், எ-று.7 (5)

  அகவல் 14

  தேராதி வாகனங்களின் வைத்துத் தேகியுண்மை கூறல்

  தமனியந் தரளந் 8தான யானை

  மருமம் பாணி வதன நோக்கம்

  பதமுத றமவென விசைத்தோ ரயமற

  ஒருபுடை யன்மை நோக்கி யொரு புடைத்

  5.  தாமென மயங்கி யேமுற்றோர் மற்

  றறுசுவை யமைந்த வைவகை யுண்டி

  1மூவகை முற்றி யதனி னிருவகை

  தாவா துறப்பிற் றங்க மேவா

  2இழித்தகு மலமா வொழித்தன ரொன்றன்

  6.  றிம்மல நீமற் றம்மல நீ யேல்

  ஆக மாதி மற்றன்று போக

  அறிவோர்க் கறிவ வந்நிய மென்ப

  தறிவோ யறிதி யங்கம் பிறிதுமற்

  3றிருகா லாழிக் 4கொளுவிடை வீணா

  7.  தண்டென் னாரின் விண்டு வன்ன

  மருமத் தட்டின் மயிர்த்தோற் கிடுகின்

  சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன்

  கொய்யுளைக் கொடிஞ்சி குஞ்சரம்

  மையுக வூருநர் செய்தியின் மதியே.

  இஃது இன்னுங்கேள் என்று அறிவோர்க்கறிவ அந்நிய மாதலால் தேராதி வாகனங்கள் போலத் தேகத்தைப் பிரவர்த்திப்பான் ஒரு தேகி யுளன் எனக் கூறியது.

  உரை: 1-5. (தமனியம்………….ஏமுற்றோர்) தமனியம் தரளம் தான யானை- பொன்னும் முத்தும் 5மதத்தையுடைய யானையும் முதலாகவுள்ள நானாவித பதார்த்தங்களும்; மருமம் பாணிவதனம் நோக்கம் பதமுதல்- மார்பும் கையும் முகமும் கண்ணும்

  காலும் முதலாகவுள்ளனவும் ஆகிய இரண்டு வர்க்கமும்; தம என இசைத்தோர்- தம்முடையனவென்று சொல்லினோர்; ஒரு புடை அன்மை அய மற நோக்கி- 1தமனியாதி ஒரு பக்கத்தைத் தாமல்லவென்பதைச் சந்தேகமறப் பார்த்தும்; ஒரு புடைத் தாம் என மயங்கி ஏமுற்றோர்- 2மார்பாதி யவயவங்களாகிய ஒரு பக்கத்தைத் தாமே யெனப் பார்த்து மயங்கியும் பித்தேறினார்;3

  5-11. (மற்று……………………ஆதி) அறுசுவை அமைந்த ஐவகை உண்டி- கைத்தல் கார்த்தல் புளித்தல் உவர்த்தல் துவர்த்தல் தித்தித்தல் என்று சொல்லப்பட்ட வறுவகை யிரதமும் அமைந்த கடித்துப் பருகி விழுங்கி நக்கிச் 4சுவைத்துக்கொள்வனவாய் ஐவகையுணவாகப் புசித்த இவை; மூவகை முற்றியதனின்- 5மூன்று கூறாகிப் பிரிந்ததினில்; இருவகை தாவாது உறுப்பில் தங்க - சாரமான இரு கூறு ஒழியாதே சரீரத்திலே தங்கிவர்த்திக்க; மேவா6-விரும்பத்தகாத ஒரு கூறு; இழித்தகு மலமா ஒழித்தனர்- நோக்கவொண்ணாததாய்ப் பழிக்கத்தக்க மலமாகக் கழித் தனர், ஆதலால்; நீ இம்மலம் ஒன்றன்று- 7நீ இவ்வாறு கழித்த மலங்களில் ஒன்றுமல்லையாவாய்; அம்மலம் நீயோல்- அந்த ஒரு கூறாகிய மலம் நீயாகில்; ஆகம் ஆகி- இருகூறாகிய சரீரமலமும் நிச்சயமாக நீ யாகிறாய்;8

  11-13. (மற்று…………..போக) அன்று போக- 9அல்லக்காண் போகடு; அறிவோய்- புத்திமானே; அறிவோர்க்கு அறிவு அந்நியம் என்பது அறிதி- அறியக்கடவோர்க்கு அறியப்படும் பொருள்கள் அந்நியமாம் என்னுமிதுநீ 10அறிவாய்காண்; அங்கம் பிறிது- ஆதலால் நீ யறியப்பட்ட தேகமும் அந்நியமாம்;

  13-19. (மற்று………..மதியே) மற்று - மற்றும் சரீரமிருக்கும் படி; இருகால் ஆழி- இரண்டு காலாகிய உருளையையும்; கொளு இடை- பழுவெலும்பு இடையே செறிந்த; வீணா தண்டென் ஆரின் - வீணா தண்டென்னும் 1அச்சுமரத்தையும்; விண்டு அன்ன மருமத் தட்டின் - மலைபோன்ற மார்பென்னும் தட்டையும்; மயிர்த் தோற் கிடுகின்- மயிரையுடைத்தாகிய தோலென்னும் கிடுகையும்; சேகரக் கூவிரத் திகிரியூர்வோன்- 2சென்னி யாகிய தலையலங்காரத்தையு முடையதாகிய சரீரமென்னும் தேரையூர் வோனாகிய ஆன்மாவானவன்; கொய்யுளை கொடிஞ்சி குஞ்சுரம் மையுக ஊருநர் செய்தியின் மதி- குதிரை தேர் யானை யென்றும் சொல்லப்பட்டவற்றைக் குற்றமறச் செலுத்து வோர் 3தன்மையன் என்று மதித்துக்கொள்வாயாக, எ-று4

  மற்று, முன்னது வினைமாற்று; பின்னது அசை. 5பழுவெலும்பு - விலா எலும்பு; கிடுகு - தேரின் மரச்சுற்று; கூவிரம் - தலையலங் காரம், விண்டு -6மலை. (6)

  சம்மியஞானம் முடிந்தது.

  சம்மிய தரிசனம்

  அகவல் 15

  பசுதரிசனம்

  மாதவ நுனித்த 1கோதறு குணத்தர்

  மெய்யுணர் பக்கம் நாடிற் பொய்தப

  இருவகைப் படிவ மாவ பொருவில்

  சூக்க தூலமு 2மவற்றது தொடர்பாம்

  5.  இருவகைப் பஞ்ச விஞ்சதி தெரியின்

  உண்ணிலை புறநிலை யெண்ணுத் தருபவோ

  டின்னுங் கேண்மதி பன்னுவ மன்னிய

  3மூவகைக் குற்ற முக்குண மும்மல

  மூவகை மண்டில முப்பொறி தாவா

  6.  ஐவகை நிறனோ டைவகைக் கோசமும்

  ஐந்தா சயமு மாறா தாரமும்

  மைந்தரு மகளிரு மலியும் வாதமும்

  சீலமு நோன்பு ஞானமும் பிறவுங்

  காண்டகு திறத்த தெய்ய வீண்டிய

  7.  அறியா நீயே 4யறிவனை செறியிதழ்க்

  கந்தங் கொண்டதுகளைந்ததைக் கடுப்ப

  முந்து கிளந்தெவையு முறைகழித் தொளிபோல்

  அறிவொடு வினையிற் பிறவகை யொரீஇ

  நின்றதை யுணர நின்னொடு

  8.  மன்ற கண்டனை மறையது துணிவே

  இது 1தூல சூக்குமமான தேகத்தை அசேதனமென்றுரைத்துப் பசுதரிசனம் கூறியது.

  இது முதல் மூன்று செய்யுட்களில் சம்மிய தரிசன வியல்பு கூறுகின்றார்.

  உரை: 1-4 (மாதவம்……………தூலமும்) மாதவம் நுனித்த கோதறு குணத்தர்-2 மகத்தான சரியையாதி தவத்தாலே சூக்ஷிக்கின்ற குற்றமற்ற ஞானகுணத்தையுடையோர்; மெய்யுணர் பக்கம் நாடின்- 3தேகாத்தும விசாரம் செய்யும் முறைமையை விசாரிக்கில்; பொய்தப இருவகைப் படிவம் ஆவ- மெய்யாகச் சரீரம் இரண்டு வகைப்பட்டிருக்கும்; பொருவில் சூக்கதூலமும் - ஒப்பில்லாத சூக்கும சரீரமும் தூல சரீரமுமென

  4-6 (அவற்றது…………..புறநிலை) அவற்றது தொடர்பாம்- அவற்றின் தொடர்ச்சியாகிய; 4இருவகை தெரியின்- அந்த இருவகைத் தேகத்தின் கூறுகளை ஆராயுங்கால்; 5உண்ணிலைப் புறநிலை- உண்ணிலைக்கூறு புறநிலைக்கூறு என்று ஆகும்; உண்ணிலைப் பஞ்சவிஞ்சதி - சூக்கும சரீரக்கூறு 6இரு பத்தைந்தாவன: சோத்திரம் துவக்கு சட்சு சிகுவை ஆக்கிராணம் ஆகிய புத்தியிந்திரியமும், வாக்கு பாதம் பாணி பாயுருஉபத்தம் ஆகிய கன்மேந்திரியமும், சத்த பரிச ரூப ரச கந்த வசன கமன தான விசர்க்க ஆனந்தமென்னும் விடயமும், மனம் புத்தி ஆங்காரம் சித்தமாகிய அந்தக்கரணங்கள் நான்கும், இவற்றைக் கொண்டு முயறற் கிடமாகிய போது 1புருடன் எனப் பெயர் பெறும் தத்துவம் ஒன்றுமாம்; 2புறநிலை பஞ்சவிஞ்சதி- 3தூல சரீரக்கூறு இருபத்தைந்தாவன; என்பு தோல் உரோமம் நரம்பு இறைச்சியாகிய 4பிருதிவியின் கூறு ஐந்தும், 5உவர்நீர் சேத்துமம் இரத்தம் சுக்கிலம் நிணமாகிய அப்புவின் கூறு ஐந்தும், பசி தண்ணீர்த் தாகம் உறக்கம் சோம்பல் மைதுனம் இச்சையாகிய 6அக்கினியின் கூறு ஐந்தும். சிரிப்பு அழலுதல் நிற்றல் இருத்தல் போதல் ஆகிய 7வாயுவின் கூறு ஐந்தும், காமம் குரோதம் லோபம் சங்கற்பம் விகற்பம் ஆகிய 8ஆகாயத்தின் கூறு ஐந்துமாம்.

  9அவற்றின் தொடர்பாம் என்பது அவையிற்றின் தொடர் பாய் அவை போல இருப்பன என்றவாறு.

  6-7. (எண்ணு……………பன்னுவம்) எண்ணுத் தருபவொடு இன்னும் பன்னுவம் கேண்மதி -என்று எண்ணப்பட்ட இவை யிற்றோடே இன்னமும் சொல்லுவோம் கேட்பாயாக;

  7-15. (மன்னிய………அறிவனை) மன்னிய மூவகைக் குற்றம்- தேகத்திலே நிலைபெற்ற காமம் வெகுளி மயக்க மென்ற 1முக்குற்றமும்; முக்குணம்- சாத்துவிதம் இராசாதம் தாமதம் என்ற 2முக்குணமும்; மும்மலம்- ஆணவம், மாயை கன்மம் என்ற 3மூன்று மலமும்; மூவகை மண்டிலம்- சூரியன் சோமன் அக்கினி என்ற மூன்று ஒளி மண்டிலமும்: முப்பொறி- 4மனம் வாக்கு காய மென்ற மூன்று கரணங்களும்; தாவா ஐவகை நிறனோடு-5 கருமை நீலம்6 செம்மை 7வெண்மை பொன்மை என்னும்8 ஐந்து நிறமும், ஐவகைக் கோசமும்- 9அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசமும், ஐந்து ஆசயமும்- ஆமாசயம் பக்குவாசயம் மலாசயம் மூத்திராசயம் கருப்பாசயம் என்ற ஐந்தா சயமும்; ஆறு ஆதாரமும் - மூலாதாரம் கவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆஞ்ஞை யென்ற 10ஆறு ஆதாரமும்; மைந்தரும் மகளிரும் அலியும்- ஆண் பெண் அலியென்று சொல்லப்பட்ட வேறுபாடு களும்; வாதமும்- தச வாயுக்களும்; சீலமும்- நல்லொழுக்கமும்; நோன்பும்- தவமும்; ஞானமும்- கிரியா யோகங்களை அறியும் கரணவறியும்; 1பிறவும் காண்தகு திறத்த - மற்றும் இவையிற்றைப் போலக் காணப்பட்ட வேறுபாடுகளுமாக; ஈண்டிய - கூடின வெல்லாம்; அறியா- அசேதனங்களாம்! நீயே அறிவனை- 2இவற்றைக் கூறிட்டுக் கண்டறிகிற நீயே சைந்நியனாவாய்;

  15-29. (செறியிதழ்………..துணிவே) செறி இதழ்க் கந்தம் கொண்டு- செறிந்த இதழ்களையுடைய பூவிற் கந்தத்தைக் கொண்டு; அது களைந்ததைக் கடுப்ப- அப்பூவைப் போகட்டா லொப்ப; முந்து கிளந்த எவையும் முறை கழித்து- முன்னே எண்ணப்பட்ட அசேதன பதார்த்தங்களை யெல்லாம் அறிந்து முறைமையிலே 3கழித்து; ஒளி போல்- அந்நிய பதார்த்தங்களை யறிவிக்கும் விளக்குப் போல; அறிவொடு வினையின்- 4இச்சா ஞானக்கிரியாரூ பியென்னும் இஃ தொழிய; பிறவகைஒரீஇ- மற்றுள்ள கிரியை வகைகளை யொழித்த; நின்றதை- எஞ்சி நின்றதனை; உணர- அறியவே; மறையது துணிவு நின்னொடு கண்டனை- திவ்வியாகமத்தின் முடிவிற் பொருளும் நின்னையறி யும்முறைமையும் அறிந்தா யாகுவை. எ-று.

  மதி, தெய்ய, ஒடு, அசைகள், கிளந்தவென்னும் பெயரெச்ச வீறு தொக்கது. (1)

  அகவல் 16

  பஞ்சாவத்தையியல்

  1கால்கொடுத் திருகை மூட்டி வாழிய

  2வெந்நிற் றண்டென் விடங்கத் தின்னியற்

  3பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயி றசைத்து

  மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ

  5.  ஐம்புலச் சாளரத் தரும்பெறன் மாடத்

  தும்பர் மணிக்குடச் சென்னிப் பொங்கிய

  கூந்தற் பதாகை 4நான்குநிலை தழீஇய

  ஆங்கினி தமர்திற னறையி னான்ற

  சாக்கிரஞ் 5சொப்பனஞ் சுழுத்தி துரியம்

  6.  பிருகுடி நாப்ப ணொருபெருங் கந்தரம்

  மருமத் தாதி வலஞ்சுழி யுந்தி

  6ஒருநான் கங்குலி யும்பர் வரன்முறை

  செவிமெய் கண்வாய் மூக்கெனப் பெயரிய

  வாயின் மிலேச்சர் சாரணர் தூதர்

  7.  சூத மாகதர் புரோகித ரென்ற

  மேதகு 7புத்தீந் தியமுந் தீதறு

  வாக்கொடு பதங்கை பாயு ருபத்தமென்

  இவுளி மறவரும் யானை வீரரும்

  திகிரி தூண்டிய தறுக ணாளரும்

  8.  வன்கண் மள்ளருந் தந்திரத் தலைவரும்

  என்கரு மேந்தியத் திறனு மெஞ்சிய

  ஓசை பரிச முருவ மிரதங்

  கந்த முரைநடை கொடைபோக் கின்பமென்

  விடயப் பல்பரி சனமு மிடையாப்

  9.  1பிராண வபான வுதான வியான

  சமான நாக கூர்ம கிருகர

  தேவ தத்த தனஞ்சய னென்ற

  ஈரைந் துறுதிச் சுற்றமு 2நியதி

  சிந்தித் தாய்ந்து துணிந்து 3செயற்படும்

  10. அந்தக் கரண வமைச்சருந் தந்தம்

  முறையுளி வழா அது துறைதோ 4றீண்டிய

  சாதுரங் கத்து நீதி யாகிப்

  பேரத் தாணிச் சீர்பெறத் துன்னி

  வீசுவ வீசி விரும்புவ விரும்பி

  11. மாசில் காட்சி மன்ன 5னீங்கிப்

  பல்பரி வாரமும் விள்ளாச் சுற்றமும்

  தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்

  பலர்புக லறியா வவைபுகு மரங்கின்

  நினைந்தாய்ந்து துணிந்து செயன்மணந் தினி துணர்ந்து

  12. நனவெனக் கனவி6 னன்னடை வழாஅது

  உரைத்தனன் சொப்பனத் தகத்தினி திறந்து

  மந்திரத் தலைவனும் வன்கடும் பதிபனும்

  மந்திர பூமி மருங்கு போகிச்

  சிந்தை மாத்திரங் கனவலி னனவின்

  13. தந்துரை சுழுத்தி யின்றே மந்திரத்

  தலைவற் றணந்து விலைவரம் பில்லாச்

  சிங்கஞ் சுமந்த வைம்பே ரமளிப்

  பள்ளி மண்டபத் தானுந் தனாது

  திகிரி யுருண்ட பெருவனப் பேய்ப்ப

  14. உறுதிச் சுற்றத் துறுவளி யெடுப்ப

  ஏற்ற மிழிவு சீற்ற மாற்றல்

  இழிச்சல் பழிச்ச லின்பத் துன்பம்

  ஒழித்தனன் துரியத் தழித்தினி ததீதத்

  தொருவகை யெங்கணு மாகி யிருளிரி

  15. சுடர்த்தொழிற் சாக்கிரத் தாங்க ணான்கின்

  1இடைத்தகை தெரிதனிற் றெரியு மாறே2

  3இது பஞ்சாவத்தை சாதகத்தாற் பசு தரிசனம் கூறியது.

  1-8. உரை: (கால் கொடுத்து…..அறையின்) கால் கொடுத்து இரு கை மூட்டி - இரண்டு காலையும் நாட்டி இரண்டு கையையும் வைத்து; 4வெந்நில் தண்டு என் விடங்கத்து- முதுகெலும் பாகிய வீணாதண்டென்னும் அழகிய முகட்டிலே; இன்னியல் பழுக்கழி நிரைத்து- இனிய 5இயல்பையுடைய பழுவெலும்புகளென்னும் கழியைச் சுவராக 6நிரைத்து; சிரைக் கயிறு அசைத்து - நரம்பென்னும் கயிற்றாலே கட்டி; சுகர்த் தசை நிறீஇ- இந்தக் கழிச் சுவரிலே 7மாமிச மென்னும் மண்ணாலே மேவி; மயிர்த்தோல் வேய்ந்து - மயிரை யுடைத் தாகிய தோலைக் கூரையாக வேய்ந்து - 8ஐம்புலச் சாளரத்து- ஐந்தாகிய இந்திரியங்களைச் சாளரங்களாகவுடைய; அரும் பெறல் மாடத்து உம்பர்- இந்தப் பெறுதற்கரிய மாடத்தின் மேலே; மணிக்குடச் சென்னி- 9பூரணப் பொற்குடமாகிய தலையையும் பெற்று; பொங்கிய கூந்தற் பதாகை- மிக்கிருக்கப் படாநின்ற கூந்தற் கொடியையும்; நான்கு நிலை தழீஇய -10நான்கு நிலையையும் பொருந்திய; ஆங்கு- 1அவ்விடமாகிய தேகத்தில்; இனிது அமர் திறன் அறையின் - இனிதாக இருந்து ஆன்மா வாகிய அரச குமாரன் வர்த்திக்கும் முறைமையைச் சொல்லின்;

  8-12. (ஆன்ற………….உம்பர்) பிருகுடி நாப்பண் -2ஆன்மா வானவன் புருவமத்தி யிலே நின்றபோது; ஆன்ற சாக்கிரம்- விசாலமுடைத்தாகிய சாக்கிராவத்தை யென்றும்; ஒருபெருங் கந்தரம் சொப்பனம்- ஒப்பில்லாத பெரிய கழுத்தடியிலே நின்ற போது சொப்பனாவத்தை யென்றும்; 3மருமத் தாதி சுழுத்தி - நெஞ்சடியிலே நின்றபோது சுழுத்தியவத்தை யென்றும்; வலஞ்சுழி 4உந்தி யும்பர் ஒருநான் கங்குலி துரியம்- வலமாய்ச் சுழித் திருக்கின்ற நாபித்தானத்துக்கு மேலே நாலங்குலமும் கீழே நாலங்குலமுமாக எட்டங்குலத்து நின்றபோது துரியாவத்தை யென்றும் சொல்லப்படும்.5

  12-16. (1வரன் முறை………..புத்தீந்தியமும்) வரல் முறை- சாக்கிராவத்தை தொடங்கிவரும் முறையாவது; செவி எனப் பெரிய வாயில் மிலேச்சர்- செவியெனப் பெயருடைத் தாகிய 2பொறி வாயிலே நின்று போகங்கொள்ளும் 3ஆரிய மெய்காப்பரும்; மெய்சாரணர்- மெய்யிலே நின்று போகங்கொள்ளும் சாரண ராகிய ஒற்றர்களும்; கண் தூதர்- கண்ணிலே நின்று போகங் கொள்ளும் 4தூதிடை போவாரும்; வாய் சூத மாகதர் - வாயிலே நின்று போகங்கொள்ளும் சூத மாகதராகிய ஏத்தாளரும்; மூக்கு புரோகிதர்- மூக்கிலே நின்று போகங்கொள்ளும் புரோகிதரும்; என்று மேதகு புத்தீந்தியமும்- என்று 5சொல்லப்பட்ட மேன்மை தக்கிருக்கப்படா நின்ற ஞானேந்திரிய வர்க்கமும்;

  16-21. (தீதறு……………திறனும்) தீதறு வாக்கொடு இவுளி மறவரும்- குற்றமற்ற வாக்காகிய குதிரைச் சேவகரும்; பதம் யானை வீரரும்- கால்களாகிய யானைமேல் யுத்த வீரரும்; கை திகிரி தூண்டிய தறுகணாளரும்- கைகளாகிய 6தேர் செலுத்தும்

  அச்சமிலராகிய தேர்மேல் யுத்த வீரரும், பாயுரு வன்கண் மள்ளரும் - பாயுருவாகிய வன்கண்ணரான காலாட்களும்; உபத்தம் என் தந்திரத் தலைவரும்- உபத்தமென்று சொல்லப் பட்ட சேனாபதியரும்; என் கருமேந்தியத் திறனும்-என்று 1சொல்லப்பட்ட கன்மேந்திரியமும்;

  21-24. (எஞ்சிய……..பரிசனமும்) எஞ்சிய- இவ்விந்திரியங் களுடனே கூடிய; ஓசை பரிசம் உருவம் இரதம் கந்தம் -சத்த பரிச ரூப ரச கந்தமும்; உரை நடை கொடை போக்கு இன்பம் என விடயப் 2பல்பரிசனமும்- வசன கமன தான விசர்க்க ஆனந்தம் என்று சொல்லப்பட்ட விடயமாகிய பல3 பரிவாரத் தாரும்;

  24-28. (இடையா …………….சுற்றமும்) இடையா- கெடாதே; பிராண அபான உதான வியான சமான நாக கூர்ம கிருகர தேவதத்த தனஞ்சயன் என்ற - 4பிராணவாயுவும், அபான வாயுவும், உதானவாயுவும், வியானவாயுவும், சமான வாயுவும், நாகவாயுவும், கூர்மவாயுவும், கிருகரவாயுவும், தேவதத்த வாயுவும், தனஞ்சயவாயுவும் என்று சொல்லப்பட்ட 1தசவாயுக் களாகிய உறுதிச் சுற்றமும்; 2உறுதிச் சுற்றமாவார், “அடுத்த நட்பாளரும், அந்தணாளரும், 3படைத் தொழிலாளரும், மருத்துவக் கலைஞரும், நிமித்த காரரும் நீணில வேந்தர்க், குரைத்த வைம்பே ருறுதிச் சுற்றம்” என்பத னாலறிக.

  28-30. (நியதி…..அமைச்சரும்) நியதி சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும் -ஒன்றை முறையாகச் சித்தம் சிந்தித்துப் புத்தி விசாரித்து ஆங்காரம் துணிந்து 4மனம் அதனைச் செய்யத் தொழிற்பட்டுவருகின்ற; 5அந்தக்கரண அமைச்சரும் -6அந்தக் கரண சதுட்டயமான மந்திரிகளும்

  30-35. (தந்தம்……………..மன்னன்) தம்தம்முறையுளி வழா அது- தங்கள் தங்களுக்குரிய முறைமையில் குற்றப்படாதே;

  துறைதோறும் ஈண்டிய -7துறை தோறும் கூடிய; சாதுரங் கத்து நீதியாகி- சதுரங்க மத்தியிலே நீதிமானாய்; 8பேரத்தாணி- (அசேதனமான கருவிகளைச் சேதனமாகக்கூறினாற்போல) பெரிய அத்தாணி மண்டபமாகிய 9அந்தப் புருவ மத்தியிலே; மாசில் காட்சி மன்னவன்- குற்றமற்ற காட்சியையுடைய ஆன்மா வாகிய மன்னவன்; சீர்பெறத் துள்ளி- சிறப்பாகப் பொருந்தி; 1விரும்புவ விரும்பி- ஞானேந்திரியங்களால் அறிவனவற்றை யறிந்து; வீசுவ வீசி -கன்மேந்திரியங்களாலே செய்வனவற்றைச் செய்து;

  2இத்துணையும் சாக்கிராவத்தை கூறிற்று3.

  35-41. (நீங்கி…………….உரைத்தனன்) நீங்கி- இந்தச் சாக்கிராவத்தையிலே இந்திரியம் நீங்கி; பல் பரிவாரமும்- 4சத்தாதி தன் மாத்திரைகள் வசனாதிகளாகிய பரிவாரங்கள் பத்தும்; விள்ளாச் சுற்றமும்- நீங்காத வாயுக்கள் பத்தாகிய சுற்றத்தாரும்; தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும்- விடயத்திற் கூடும் அந்தக் கரண சதுட்டயங்களாகிய மந்திரிகளும்; பலர் புகல் அறியா- மற்றைத் தத்துவங்களாகிய பலரும் புகுவதன்றி; அவைபுகும் - அங்ஙனம் சொல்லப்பட்ட 5இருபத்துநான்கு தத்துவங்களாகிய அவர்களே புகுதத்தக்க அரங்கின் - கண்டத்தானமாகிய அரங்கிலே; நினைந்து -1சித்தம் சிந்தித்து; ஆய்ந்து - புத்தி ஆராய்ந்து; துணிந்து- ஆங்காரம் துணிந்து; செயல் மணந்து- மனம் அதனைச் செய்வித்து; இனிது உணர்ந்து - இத்தனையும் கூடி இனிதாக அறிந்து; நனவு என - நனவென்று மயங்கி; கனவின்- சொப் பனாவத்தையில் கண்டு; நன்னடை வழா அது- அந்தச் சாக்கிரா வத்தையிலே ஒன்றும் தப்பாத வாறு; உரைத்தனன்- 2சொன்னான்;

  41-45. (சொப்பனத்து…………இன்றே) சொப்பனத்தகத்து இனிது இறந்து- 3சொப்பனாவத்தையினின்றும் இனிதாகப் போந்து; மந்திரத் தலைவனும்- மந்திரத் தலைவனாகிய சித்தமும்; 4வன்கடும்பதிபனும் -உறுதிச் சுற்றத்தானாகிய பிராணவாயுவும்; மந்திரபூமி மருங்கு போகி- கழுத்தியவத்தைத் தானமாகிய இதயத்திடத்திலே புகுந்து; சிந்தை மாத்திரம் கனவலின்- சிந்தித்தலுடைய சிந்தை மாத்திரமாய் 5மயங்குதலாலே; நனவில் தந்துரை கழுத்தி இன்று- சுழுத்தி யவத்தையிற் கண்டபடி சாக்கிரா வத்தையிற் சொல்லுந்தன்மையில்லை;

  45-53 (மந்திரத் தலைவன்……………………துரியத்து) மந்திரத் தலைவன் தணந்து- சுழுத்தியவத்தையிலே மந்திரத் தலைவனாகிய சித்தத்தை யொழித்து; விலை வரம்பில்லா- விலை அளவிடுதற் கரிதாகிய; சிங்கம் சுமந்த ஐம்பே ரமளி- சிங்கா தனத்துப் பஞ்ச சயனமாகிய படுக்கையிலே; பள்ளிமண்டபத் தானும் - சயனக் கிரகமாகிய தனது 1உவளகத்தே பள்ளி கொள்ளுகிற காலத்தினும்; தனாது திகிரி யுருண்ட பெருவனப்பு ஏய்ப்ப- அரசனுடைய சக்கரம் சென்ற 2பெரிய செய்தியைப் 3போல; உறுதிச் சுற்றத்து உறுவளி எடுப்ப-4 உறுதிச் சுற்றமான தசவாயுக்களில் விளங்குகின்ற 5பிராணவாயு இயங்க; ஏற்றம் - 6உயர்ச்சி யுடையேனென்றும்; இழிவு- தாழ்வு பட்டே னென்றும்; சீற்றம்- கோபமடை யேனென்றும்; ஆற்றல் - 7பொறையுடையேனென்றும்; இழிச்சல் பழிச்சல்- என்னை வைதார் வாழ்த் தினாரென்றும்; இன்பம் துன்பம்- சுகதுக்க முடையேனென்றும் அறியும் இவையிற்றை; துரியத்து ஒழித் தனன் -8ஒழிந்து நாபித் தானத்திலே தேகத்துக்குக் காவலாகிய ஆக்கினை குன்றாது துரியா வத்தையிலே நின்றான்;

  53-56. (அழித்தினிது……………தெரியுமாறே) அழித்து- 9துரியத் தானத்திலே பிராணவாயு நிற்க அந்த அவத்தையை யொழித்து; இனிது அதீதத்து - மூலத்தில் இனிதான10 அதோமுக துரியாதீதத்திலே; ஒருவகை- ஒருபடித்தாகிய 1ஆணவமலம் மறைப்ப; எங்கணும் ஆகி- எங்கும் வியாபியாக இருப்பவன்; நான்கின் இடை- ஆன்மா அவத்தைப்படும் நான்கிடத்தும்;

  இருள் இரி சுடர்த்தொழில் தகை- 2பெரியமலமாகிய இருளைக் கெடுக்கும் இக் கருவிகளாகிய விளக்கின் தொழிலைப் பயன் கொள்ளுதலையுடைய பெருந்தகையாகிய நின்னை; சாக்கிரத்து ஆங்கண் தெரிதல் 3சாக்கிரமாகிய அவ்விடத்தில் அறிகை; நின் தெரியுமாறு- 4நின்னையறியும் வழி5 எ-று.

  6பஞ்ச சயனமாவன, “மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாந் தூவி, பயிர்ப்பின் மயிற்பீலி வீப்பாய்” என்பத னாலறிக. ஏகாரம், அசை. (2)

  அகவல் 17

  ஆன்மசமாதி

  இந்தியப் பந்தனை யிரியக் கண்டிசின்

  கடவுட் டன்மை யிடைவரு துரியமென்

  மடவோர் காட்சி வாயன் றுடலுநர்

  ஓம்பரண் 7கடந்து வீங்குசெலற் றானை

  5. நாப்ப ணன்றியும் 1பூக்கே ழோதி

  மடவோர் மருட்டு மாவீழ் பள்ளி

  இடனுடை வரைப்பு மிறையோ னிறையோன்

  பொன்செய் புலவன் புகர்முகக் களிறும்

  வெஞ்சின வேங்கையு மெண்கும் யாளியும்

  10. கண்கவர் 2பெய்தி மன்பதை மருள

  ஐயமின் றியற்றிய வாடகத் தசும்பினும்

  வளைவா யமையா மணிமருள் குடத்தும்

  அவிரொளி விளக்கொன் றல்க லல்லதை

  திரிபு முண்டோ தெரிந்திசி னோர்க்கே

  15. துரியத் தல்க விரிபுல னெவையும்

  3வறிய வென்று மருட்கை மருட்டின்

  4என்னையிவ் விடத்திவற் கிரண்டே மன்னெனத்

  தரியா னாகிச் சாக்கிரத் தானும்

  துரியத் தன்மைய னென்னிற் றரியா

  16. ஐம்புல மசேதன மறிவ னநாகுலன்

  நொந்திவை நுகர்பவர் யாரே யென்றணர்

  அறிவறி சமாதி யென்ப பொறிவளர்

  5ஐம்புலத் தரசட் டார்த்தவ்

  வும்ப ருயர்நிலை யுலகுய்த் தோரே

  இது, 6மாயாவதி துரியத்தில் ஆன்மாச் சுத்தன் என்ன அவனை நிராகரணம் பண்ணுதல் கூறியது.

  1-3. உரை: (இந்தியப்பந்தனை………….வாயன்று) இடை வரு துரியம் -7இடையிடையே வருகிற துரியாவத்தையை; இந்தியப் பந்தனை இரியக் 1கண்டிசின்- இந்திரியங்களின் விநியோகம் கழியக் காணுதலாலே; கடவுள் தன்மை என மடவோர் காட்சி - ஆன்மா பதியினுடைய தன்மைய னென்று 2மாயாவாதிகளாகிய அறிவில்லாதோர்; ஆராய்ந்து 3சொல்லுமது வாயன்று - 4பொருளன்று;

  3-7. (உடலுநர்…………..இறையோன்) உடலுநர் ஓம்பு அரண் கடந்து - சத்துருக்களாலே காக்கப்படாநின்ற அரணை யழித்து; 5வீங்குசெலல் தானை நாப்பண்- 6மிக்குச் செல்லா நின்ற தந்திரத்தின் நடுவே யிருப்பினும்; அன்றியும்- அதுவல்லாமலும்; பூக்கேழ் ஓதி- புட்பங்களால் விளங்கப்படாநின்ற கூந்தலை யுடைய; மடவோர் மருட்டும் மாவீழ் பள்ளி- மகளிர் மயக்கும் வண்டு விரும்பும் புட்ப சயனமாகிய; இடனுடை வரைப்பும்- 7விசாலித்த சயனக் கிருகத் திருப்பினும்;

  இறையோன் இறை யோன் - 8அரசனுக்குத் தன்னாணை குன்றாமையால் 9அரசன் அரசன்றான்; ஆதலாலும்,

  8-14. (பொன்செய்…….தெரிந்திசினோர்க்கே) பொன்செய் புலவன் - 10பொற்றொழிலில் வல்ல புலவனொருவன்; புகர்முகக் களிறும்- முகத்திலே புகரையுடைத்தாகிய யானையாகவும்; வெஞ்சின வேங்கையும்- வெவ்விய சினத்தையுடைய புலி யாகவும்; எண்கும்- கரடியாகவும்; யாளியும்- 1யாளியாகவும்; மன்பதை மருள - மக்கட்டொகுதி மயங்க; 2கண்கவர்பெய்தி- கண்களைக் கவர்ந்துகொள்ளும் படி; ஐயம் இன்று இயற்றிய- 3குற்றமறச் செய்யப்பட்ட; ஆடகத் தசும்பினும் -4குடவிளக்கிடும் 5பொற்குடத்திலும்; மணிமருள் வளைவாய் அமையா குடத்தும்- இரத்தினங்களின் ஒளியை மழுங்கச் செய்யும் வளைந்த வாயை யில்லாத 6ஊமைக்குடத்தும்; அவிர் ஒளிவிளக்கு ஒன்று அல்கல் அல்லதை- விட்டு விளங்கப்படா நின்ற ஒளியையுடைய ஒரு விளக்கையிட்டால் அவ்விளக்கு ஒன்றன்றி” தெரிந்திசி னோர்க்குத் திரிபும் உண்டோ - ஆராய்ந் தோர்க்கு ஈரிடத்தும் வேறுபாடுண் டாய்த் தோன்றாது, ஆதலாலும்;

  15-17. (துரியத்து……….மன்னென) 7துரியத்து அல்க - துரியாவத்தையிலே அடைந்தபொழுது; விரிபுலன் எவையும்- சாக்கிராவத்தையிலே 8விரிந்த கருவி களெல்லாம்; வறிய என்று- அசேதனமானமை தோற்றரவுபட்டபடியினாலே அவை யிற்றை அசேதனமென்று நிச்சயித்து; மருட்கை மருட்டின் - இவ் வவத்தை யிலுண்டாகிய1 அஞ்ஞானநிலையை ஒழித்துப் பார்க்கில்; இவ்விடத்து - இவ்விடத்தில்; இவற்கு- இந்த ஆன்மாவிற்கு; இரண்டு என்னைமன் என - இரண்டு தன்மை இன்றே 2யாது பற்றி நீ இவ் வான்மாவை 3இரண்டுபடியாகச் சொல்லவேண்டிற்று என்று அம் மாயாவதியை நிராகரித்தபோது;

  18-19. (தரியானாகி………….. என்னில்) தரியானாகி - 4மாயாவாதி சகிக்காதவனாய்; சாக்கிரத்தானும் - சாக்கிராவத்தை யிலும்; துரியத்தன்மையன் என்னில் ஆன்மாவானவன் துரியாவத் தையிற் போலச் சுத்தன் என்றான் என்று கூறுவாயாயின்;

  19-24. (திரியா………உலகுய்த்தோரே); திரியா ஐம்புலம் அசேதனம் - 5கெடாத இந்திரியங்கள் அசேதனமாத லாலும் அறிவன் அநாகுலவன்- 6பரமசிவன் நின்மலனாதலால் கலக்கமில்லா தோனாதலாலும்; இவை 7நொந்து- இவையிற்றால் வரும் சுகதுக் கங்கட்குவருந்தி; நுகர்பவர் யார் - இவையிற்றை ஆன்மாவை யொழியப் புசிப்பவர் யார்தான்; என்று உணர் அறிவு- 8என்று அறியும் அறிவு; அறி சமாதி என்ப - 9ஆன்மாவை யறியும் ஆன்மசமாதி என்று சொல்லுவர்; பொறிவளர் ஐம்புலத்து அரசு அட்டு - 1இந்திரியங்களிலே வருகிற விடயங்களுக்கு அரசனான அஞ்ஞான வேந்தனையழித்து; ஆர்த்து ஆர்த்துக் கொண்டு; 2உம்பர் உயர்நிலையுலகு உய்த்தோர்- 3இருநூற்றிரு பத்து நான்கு புவனவர்க்கத்துக்கு மேலாகவுயர்ந்த அம் மோஷ தானத்திலே 4தம்மைச் செலுத்தினோர் எ.று.

  5எனவே, மாயாவாதி மலநோய் காரணமாக இதாகிதங்கள் புசித்தலையறியாது ஆன்மாவைத் துரியத்தில் சுத்தன் என்றமை பொருந்தா தெனக் கொள்க.

  இசின், மன், கொல், ஏ என்பன அசை.

  சம்மிய தரிசனம் முடிந்தது

  பாசபந்தம்

  அகவல் 18

  மலம் மூவகை எனல்

  யானே யின்ன 1னாயினே னெற்சேர்

  ஆனாப் பாச மறியல் விரும்பினென்

  அறவ வென்ன வருளோ னறையின்

  குறையா மும்மலக் கொத்தே முறைதேர்

  5. ஆணவ மாயை கரும மாங்கவை

  பேணிற் செம்பிற் 2பெருகிருந் துகளென

  அறிவினை மறைத்த லணிமல மாயை

  நெறிதேர் 3பெய்திய நீணில மந்த

  4முற்சொன் மாக்கலைக் குற்ற காரணங்

  10. கரும மிருவினை தருமா தருமம்

  பெரும மலமும் பிறழா மாயையும்

  மற்றவற் பிணிப்பே யாயி னெற்றிவை

  இரண்டென விசைத்த லெனினே தெருண்டிசின்

  யாண்டு மொருவா தொளிர்வது மீண்டுப்

  15. பிரிந்து புணர்ந் துறையும் பெற்றியி ருந்ததும்

  ஒன்றே போலு நன்று 5நனியுணர்

  மறைத்தற் றொழில்பூண் பதுவு மதனைக்

  குறைத்தற் கெய்திக் குலவுவ தோரிடை

  இரண்டல வென்பதே 1னிருளிரு ளிரிசுடர்

  20. முரண்டா நின்ற முழுமல மாயை

  அன்ன தாக வறிவனோ டாணவந்

  துன்னிய தனாதித் தொடர்பிற் றென்னின்

  என்னை புற்கலற் றரும மிஃதெனப்

  பன்னா மரபெனின் பகர்வ னன்னோ

  25. ஞானமு மதற்கெதி ராய வூனமும்

  2பாரினிப் பலவோ வொன்றோ தானப்

  புற்கலற் றருமந் தரும மின்மை

  சொற்றரிற் 3சித்தா மற்றவற் றருமம்

  4அவணன் றெனினவன் பரிணா மத்தொடு

  30. சிவனுஞ் சேதனா சேதன மாதல்

  ஒன்றுக் கொன்றா தாகலி னென்றும்

  பரிணாமத் திறம் படிவது 5வறிதுகாண்

  அருணே ரறிவுக் கல்கா தொல்கா

  ஆங்கம் மூன்று மலமு நீங்கா

  35. ஈங்கிவற் கியைந்த விகலா வீங்கிருள்

  இறுத்த காலை மறுப்பிரித் தகன்ற

  தீதறு நெடுங்க 6ணாத னாட்டத்து

  அயலொன் றின்மை போலவு முயல்வுழி

  நுண்ணூற் பேரி லிழைத்தகப் படுபு

  40. தன்முதல் கெடூஉ மெண்ணாக் கீடத்

  திறும்பூதி யரரஃ தறிந்திசி 7னோரக்

  களியிடைக் கலித்த தென்ப

  விளிவருங் 8குரையவவ் விருவினைத் திறனே.

  இது, பசுவின் உண்மை கேட்டறிந்து மேற் சீடன் பாசவிகாரம் கேட்க அவற்கு மும்மலங்களும் தொகுத்துக் கூறியது; 1இனி, சம்மிய தரிசனத்தின் இயல்பு கேட்டறிந்த சீடனுக்குப் பாச பந்தத்தின் இயல்பு கூறலுற்று இதனால் மும்மலங்களையும் தொகுத்துக் கூறுகிறா ரென்றது.

  1-5. உரை: (யாதே……………கருமம்) அறவ- தருமவானே; யான் இன்னென் ஆயினேன்- 2நான் இப்படி 3இச்சா ஞானக்கிரியா சொரூபி யாயினேன் எற்சேர் ஆனாப் பாசம் அறியல் விரும்பினென் என்ன - 4என்னைச் சேர்ந்து பிரியாதிருக்கும் 5பாசத்தையறிதற்கு விரும்பினேன் என்று சீடன் விண்ணப்பம் செய்ய; 6அருளோன் - அருளே திருமேனியாக வுடைய ஆசாரியன் அருளிச்செய்வான்; அறையின்- நீ கேட்கிற பாசத்தைச் 7சொல்லின்; குறையா மும்மலக் கொத்து- 8அழிவில்லாத மும்மல வர்க்கமாய்க் காண நிற்குமது என அறிக; முறைதேர் ஆணவம் மாயை கருமம்- அவையிற்றை9 முறையே விசாரிக்கின் ஆணவ மலமென்றும் மாயாமல 10மென்றும் கன்ம மலமென்றுமாம்.

  5-7. (ஆங்கவை……..மலம்) ஆங்கு அவை 1பேணின் - அவ்விடத்து 2அவையிற்றை யறிய விரும்பினா யாயின்; செம்பிற் பெருகு இருந் துகள் என - செம்புடன் கூடிய மிக்க பெரிய காளிதம் போல; அறிவினை மறைத்தல்- 3சகசமாய்க் கூடிக் கிடந்து பதார்த்தங்களின் உண்மையை அறியவொட்டாது ஆன்ம ஞானத்தை மறைக்கை; மலம் அணி- ஆணவமலத்துக்கு 4இலக்கணமாம்;

  7-9. (மாயை…………காரணம்) மாயை நெறி தேர்பு- மாயா மலத்தின் 5இயல்பை விசாரிக்கின் அது; முற்சொல்- 6முன்னாகச் சொல்லப்பட்ட; மாக்கலை நீள் நிலம் அந்தம் உற்ற- 7மகத்தாகிய கலாதத்துவ முதல் நீண்ட பிருதிவியந்தமாகப் பொருந்தியன வாகிய தத்துவங்களுக்கு; எய்திய காரணம்- உண்டாகிய 1உபா தானகாரணமாயிருப்பது;2

  10. (கருமம்…………….அதருமம்) கருமம் இருவினை- கன்ம மலமாவது 3இருவினை; தருமம் அதருமம்- அஃது புண்ணியம் பாவம் என இரண்டாயிருக்கும் 4என அறிக என்று இவ்வாறு அருளிச்செய்ய;

  11-13. (பெரும …………….தெருண்டிசின்) பெரும- பெரியோனே; மலமும்- ஆணவமலமும்; 5பிறழா மாயையும்- கெடாத மாயா மலமும்; அவற் பிணிப்பு ஆயின் - அந்த ஆன்மாவைப் பந்தித் திருக்கும் 6பந்தனையாயின்; 7இவை இரண்டு என இசைத்தல் எற்று எனின்- இவையிற்றை இரண் டென்று சொல்ல வேண்டிற்று ஏனோ என்று வினவுகிருயாகில்; தெருண்டிசின்- சொல்ல அறிவாயாக.

  14-16. (யாண்டும்………….நனியுணர்) யாண்டும் ஒருவாது ஒளிர் வதும்- 8ஒருநாளும் விட்டு நீங்காதே விளங்கி நிற்பதாகிய ஆணவமலமும்; ஈண்டுப் பிரிந்து புணர்ந்து உறையும்

  பெற்றி இருந்ததும்- 1ஈண்டைக் கன்மத்துக்கீடாகத் தனு கரண புவன போகங்களுக்கு 2உபாதானமாய் 3விடுவதும் பற்றுவது மான முறைமையை யுடைய தாகிய மாயாமலமும்; ஒன்றே போலும்- ஒன்றாய் 4இருந்தவோதான்; 5நன்று நனி உணர் - நன்றாக மிகவும் விசாரித்துப் பாராய்;

  17-20. (மறைத்தல்…………மாயை) மறைத்தல் தொழில் பூண்பதும்- மறைத்தலையே செய்தியாகவுடைத்தான ஆணவ மலமும்; அதனைக் குறைத்தற்கு ஓர் இடை எய்திக் குலவுவதும் - 6ஒருகாலத்திலே அம்மலத்தைக் கெடுத்தற்கென வந்து பொருந்து வதாகிய மாயாமலமும்; இரண்டல என்பது என்- இரண்டல்ல வென்று சொல்லுவது என்னை; இருள் இருள் இரி சுடர் - 7இருளைம் கெடுக்கும் விளக்கும் போல; முழுமலம் மாயை- 8முதன்மையான ஆணவமலமும் மாயாமலமும்; முரண்தர நின்ற- 9மாறுபாட்டோடு கூடி நின்றன காண் என்று அருளிச் செய்ய;

  21-24. (அன்னதாக …………..எனின்) அன்னது ஆக - அஃது அப்படியாக; ஆணவம் அறிவனோடு துன்னியது- ஆணவமலம் 10ஆன்மாவோடே கூடியது; அநாதி தொடர்பிற்று என்னில்- 1அனாதி சம்பத்தத்தால் செறிந்துளது என்னில்; இஃது புற்கலன் தருமம் எனப் பன்னாமரபு என்னை எனில்- இந்த ஆணவமலம்2 ஆன்மாவுக்குத் தருமம் என்று சொல்லாத முறைமை என்னையோ என்று வினவினால்;

  24-28. (பகர்வன்…..சித்தாம்) அன்னோ- ஐயோ; பகர்வன்- சொல்லுவேன், கேட்பாயாக; ஞானமும் அதற்கு எதிராய ஊனமும் - அறிவையும் அதற்கு மாறுபாடான 3அறியாமை யைப் பண்ணுவதான ஒன்றையும்; ஒன்றோ பலவோதான்- ஒன்றென்பேமோ பலவென்பேமொ; 4இனி பார்- இப்பொழுது விசாரித்துப் பாராய்; அப்புற்கலன் தருமம் தருமமின்மை சொல்தரின்- 5ஆன்மாவினுடைய குணமும் குணமில்லாமையும் விசாரித்துச் சொல்லின்; சித்தாம்- 6ஆன்மா 7சித்தாயிருக்கும்.

  28-30. (மற்று……………சிவணும்) அவன் தருமம் அவண் அன்று எனின்- அந்த அறிவனாகிய ஆன்மாவுக்குக் 8குணம் அப்படியன்று என்று சொல்லுவாயாகில்; அவன் பரிணாமத் தோடு சிவணும்- அவனுக்கு வளர்தல் சுருங்குதல் கூடும்;

  30-33. (சேதனா…………………அல்காது) சேதனா சேதனம் ஆதல்- தான் சைதன்னியமாயிருக்க அசேதனத்துக்குள்ள குணம் உண்டாதல்; ஒன்றுக்கு ஒன்றாது-9ஒரு பொருளுக்குக் கூடாது; ஆகலின்- 1ஆதலால்; என்றும் பரிணாமத்திறம் படிவது வறிது காண்- எப்பொழுதும் பரிணாம வர்க்கம் கூடுவது அசேதனத் துக்குக் காண்; 2அருள்நேர் அறிவுக்கு- 3திருவருள்போல இச்சா ஞானக் கிரியா சொரூபியாயிருக்கிற ஆன்மாவுக்கு; அல்காது- இந்தப் பரிணாமத்திறம் கூடாது4;

  33-35. (ஒல்காது…………….இயைந்த) ஆங்கு- அவ்விடத்து; ஒல்காது- ஒதுக்கமற வந்த; அம்மூன்று மலமும்- அந்த மும் மலமும்; நீங்கா- 5ஒழியாதே; 6ஈங்கு இவற்கு இயைந்த- இச் சகலாவத்தையில் ஆன்மாவுக்குக் கூடின;

  35-38. (இகலா……………போலவும்) இகலா வீங்கு இருள் இறுத்த காலை- 7மாறுபாடில்லாத மிக்க பூதவிருள் கூடின விடத்து; மறுப் பிரிந்து அகன்ற தீதறு நெடுங்கண்- படலமின்றி விரிந்த 8குற்றமின்றிக் காணும் நீண்ட பார்வையையுடைய கண்ணுக்கும்; 1ஆதன் நாட்டத்து- அந்தகன் கண்ணுக்கும்; அயல் ஒன்று இன்மை போலவும்- வேறுபாடு ஒன்று இல்லாதவாறு 2போலாம்.3

  இஃது ஆணவமலமிருக்கும் முறைமை கூறியது.

  38-41. (முயல்வுழி………….இறும்பூது) நுண் நூல் பேரில் இழைத்து- நுண்ணிய நூலாலே பெரிய கூட்டை யெடுத்து; அகப்படுபு- அதற்குள்ளே யகப்பட்டு; தன்முதல் கெடூஉம் - தானே கெடும்; எண்ணாக் கீடத்து- 4கிரியா பல விசாரமில்லாத உலண்டுப் புழுவைப்போல; முயல்வுழி- ஆன்மா இந்தச் சரீரத்திலே நின்று முயலுமிடத்து; இறும்பூது-வேறொரு சரீரமெடுத் தற்கேது வாகிய வியப்பினையுடைத்தாம்;

  இஃது மாயாமலம் இருக்கும் முறைமை கூறியது.

  41-43. (யாரஃது……..திறனே) விளிவரும் அவ் விருவினை5 திறன்-6 கெடுத்தற்கரிய அந்தக் கன்மபலமான புண்ணிய பாவக் கூறுபாடு; அக் களியிடைக் கலித்தது என்ப- அந்த மலமாயை மயக்கத்திலேவந்த தென்று சொல்லுவர்; அஃது- அவையிற்றின் தன்மையை; யார் அறிந்திசினோர்-1 யார்தான் அறிந்தோர் எ-று.

  மற்று, வினைமாற்று, அ, ஆம், குரை, அசை.

  அகவல் 19

  ஆணவமலம்

  ஆருயிர் யாதொன் றகலின் மாசிரி

  பதியது தன்மை படர்ப மதிதர

  அன்னது பாச மறியஃ தின்றெனின்

  என்னை பரதந் திரிய மியல்பெனின்

  5.  முன்னோ ரோதிய முத்தி மன்னா

  தாகும் பந்த மகன்றோர் போகிய

  ஈசத் தன்மை 2யியைந்தோ ராசமல்

  பந்தத் தொன்றின ரைம்புல னேவலின்

  நின்றனர் வீடுங் கட்டு மீங்கிது

  6.  பரதந் திரியங் கரைகழி பந்தம்

  சித்தென நித்த மாயின் மற்றது

  முத்தி கூடுதன் முடியா தித்தகை

  பசுநெறி நின்றோர் மதிநனி படரார்

  ஏக மெவ்வுயிர்க் கண்ணுந் தீதில்

  7.  அநாதி நிபிட மளவொடு படாஅது

  3உயிர்தொறு நின்றக் கண்ணும் விளிதரு

  தன்னுடைக் காலந் துன்னிற்4பின்னிடும்

  வலியின்5றகுதித் தொளிதிக ழனாதி

  அன்றெனி னதற்கு நின்றது வேறோர்

  8.  ஏது வேண்டுமற் 1பின்னு மாசிரி

  முத்தரைத் தடுக்கு மாகலிற் பித்தாம்

  மற்றது வேண்டுந2ரொப்பிரி வருத்தம்

  ஏக மெனவறி பலவா யோவாத்

  தோற்ற முண்மை யின்மையின் மாற்றரும்

  9.  வலிபல வென்பதை யறியுயிர்க்

  கொலிகெழு வீடொருங் குணரா மையினே.

  இது,3 மேல் மலம் உண்டென்கைக்குப் பிரமாணம் என்னென ஆணவமல வுண்மை சாதித்து அதன் குணம் சொல்லா நின்றது.

  1-3. (ஆருயிர்………….அறி) யாது ஒன்று அகலின்- ஆன்மாவைப் போலத் தானும் முதலாயிருந்து 4அனாதியே முப்பொருளுந் தோன்றாமல் ஆன்மாவினுடைய இச்சா ஞானக் கிரியைகளை5 மறைத்தது யாது அது பரிபாககாலத்திலே நீங்கின்; 6ஆர் உயிர்- அதிலே முன்பு பொருந்தின ஆன்மா; மாசு இரிபதியது தன்மை படர்ப- 7குற்றமற்ற 8சிவனுடைய சுயம்பிரகாச ஞானா னந்த பரிபூரணத்தைப் பெறும்; அன்னது பாசம் - அத்தன்மையை யுடையது ஆணவமலம் என்று; மதிதர அறி-9விசிட்ட புத்தி மானே நீ அறிவாயாக;

  3-4. (அஃது…………..பரதந்திரியம்) அஃது இன்றெனின்- அப்படி ஆணவமலம் என்பதொன்று இல்லையென்று சொல்வா யாயின்; பரதந்திரியம் என்னை- 1சைதந்நியமாயிருக்கிற அறிவன் இந்திரியங்கட்கு ஏவல் செய்ய வேண்டுவானேன்;

  4-6. (இயல்பெனின்………..ஆகும்) இயல்பு எனின்- ஆன்மா இந்திரியங்கட்கு ஏவல் செய்தல் அதற்குச் 2சகல தருமம் என்பா

  யாகில்; முன்னோர் ஓதிய முத்தி மன்னா தாகும்-3 அனாதியாக முன்புள்ளோர் சொல்லிவருகிற 4முத்தியுண்டாகமாட்டாது.

  6-9. (பந்தம்……………..நீங்கியது) பந்தம் அகன்றோர்- இந்த ஆணவமல பந்தம் நீங்கினோர்; போகிய ஈசத் தன்மை இயைந் தோர்- மகத்தாகிய5சிவானந்த பூரணானுபவம் 6பெற்றோராவர்; ஆசு அமல் பந்தத்து 7ஒன்றினர்- குற்றமுடைத்தாகிய மூலமலத்துடனே கூடினோர்; ஐம்புலன் ஏவலின் நின்றனர்- ஐந்தாகிய இந்திரியங்

  கட்கு ஏவல் செய்வோராவர்; வீடும் கட்டும ஈங்கு இது- முத்தி

  யாவதும் 8பெத்தமாவதும் முறையே இப்படியென அறிவாயாக;

  10-12. (பரதந்திரியம்- முடியாது) 9பரதந்திரியம் கரைகழி பந்தம்- இந்தச் சேதனனை இந்திரியங்கட்கு ஏவல் செய்விக்கும் அளவில்லாத மல பந்தம்; சித்தென நித்தமாயின் - சித்துப்போல நித்தமாய் ஒரு படித்தாயிருக்குமாயின்; அது முத்தி கூடுதல் முடியாது- அவ்வான்மாவுக்கு முத்தியுண்டாதல் இல்லையாம்;

  12-13. (இத்தகை………….படரார்) இத்தகை பசுநெறி நின்றோர்- இப்படிப் பசுத்துவமுடையரான சகலர்; மதி நனி படரார்- 1மிகப் போதித்தாலும் 2ஞானமெய்தமாட்டார்;

  14-15. (ஏகம்…..படா அது) எவ்வுயிர்க்கண்ணும்- சருவான் மாக்களிடத்தும்; ஏகம்- இந்த ஆணவ மலபந்தம் தான் 3ஒன்றாய்; 4தீதில் அநாதிநிபிடம் அளவொடுபடா அது- குற்றமற அநாதியாக 5எவ்வுயிரிடத்தும் செறிந்திருக்கும் அதன் வியாபகம் ஓர் எல்லைக்குள் அகப்படாது, இது தான் ஒரு தன்மைத்தாய் வியாபித்திருக்கும்;

  16-18. (உயிர்…..தகுதித்து) உயிர்தொறும் நின்றக் கண்ணும் 6சர்வான்மாக்களிடத்தும் நின்றதேயாயினும்; விளிதரு தன்னுடைக்

  காலம் துன்னில்- அந்த ஆன்மாக்களில் ஓர் ஆன்மாவுக்குப் 7 பாசச்சேதம்பண்ணும் பக்குவகாலம் வருமானால்; 8பின்னிடும் வலியின் தகுதித்து- 1தன்னுடைய சத்திகெடும் (வலியில்லாத) முறைமையினையுடைத்து;

  18-20. (ஒளி………..வேண்டும்) ஒளி திகழ் அநாதியன் றெனின் - இதனைப் பிரகாசமாகிய அநாதியன்றெனில்; அதற்கு நின்றது- 2அந்த மலம் இடையிலே வந்து நின்றதற்கு; வேறு ஓர் ஏது வேண்டும்- வேறே ஓர் ஏதுவைச் சொல்லவேண்டும்.

  20-22. (பின்னும்…………வருத்தம்) ஆசு இரி முத்தரை- அதுவு மன்றியே பாசச் சேதம் வந்த முத்தான்மாக்களை; பின்னும் தடுக்கு மாதலின்- 3பின்னும் பந்திக்குமாதலாலே; அது வேண்டுநர்- அந்த முத்தி 4வேண்டினோர் செய்யும்; ஒப்பு இரி வருத்தம்- 5உவமையில்லாத வருத்தமாகிய தவம்; பித்தாம்- 6பித்தாய் முடியும்;

  23- 24. (ஏகம்……………..இன்மையின்) பலவாய் ஓவாத் தோற்றம் உண்மை - பலவாய்க் கெடாத தோற்றமுண்மை; 7இன்மையின்- இதற்கு இல்லாதபடியாலே; 8ஏகம் என அறி - 9இதுதான் ஒன்றேயென் றறிவாயாக;

  24-26. (மாற்றரும்……………உணராமையினே) உயிர்க்கு- ஆன்மாக்களுக்கெல்லாம்; 1ஒலிகெழு வீடு - பிரகாசம் மிக வுண்டாகிய முத்திக்கு வேண்டும் ஞானம்; ஒருங்கு உணரா மையின்- 2ஒரு பக்குவ காலத்திலே கூடாமையின்; மாற்று அரும்வலி பல- இந்த மலத்திற்கு உவமையில்லாத சத்திகள் பல; என்பதை அறி- 3என்று ஞானவான்கள் சொல்வதை அறிவாயாக எ-று.

  மற்று இரண்டும் வினைமாற்று. மன், அசை, நிபிடம், செறிவு.

  அகவல் 20

  கன்ம மலம்

  4கலைநவில் கரும நிலைமலி பெய்தக்

  5கேட்டிசி னின்பம் வேட்டிசி னோரே

  1நிரைய  2மெய்தினர் பலரே பலரே

  புரைதீர் போக பூமி 3மேவினர்

  6. செய்வினை யொத்தக் கண்ணு 4மையறு

  சாலி மேவினர் பலரே பலரதன்

  வாலிய விந்துவு மருவா தோரே

  ஆயிடைக் 5கருமங் காரணம்

  6மாசுடைத் துயர்ந்த மதியி னோயே7

  உரை: 1-2. (கலைநவில் ………..கேட்டிசின்) கலைநவில் கரும நிலை மலிபு எய்தக் கேட்டிசின்- 8வேதாகமங்களிற் சொல்லப்பட்ட கன்ம மலத்தின் 9இயல்பினைப் புத்திபூர்வமாகக் கேட்பாயாக;

  2-4 (இன்பம் வேட்டிசினோரே………….பூமி மேவினர்) இன்பம் வேட்டிசினோர்- சருவான்மாக்களும் சுகத்தை 10வேண்டி னோராயிருக்க; நிரையம் எய்தினர் பலர் - இவர்களில் நரகத்திலே சென்று விதனம் புசித்தோரும் பலர்; புரைதீர் போகபூமி மேவினர் பலர் -1தனக்கு மேலேயும் உயர்ந்ததில்லாத சுவர்க்க லோகத்திலே சென்று போகம் 2புசித்தோரும் பலர், 3இதனைத் திட்டாந்தத்திலும் காண்பாயாக.

  5-7. (செய்வினை…………மருவாதோரே) செய்வினை ஒத்தக் கண்ணும்- பலரு மொக்க ஒரு முயற்சியைச் செய்த விடத்தும்: மையறு சாலிமேவினர் பலர் - குற்றமற்ற செந் நெல்லைப் பெற்றோரும் பலர்; அதன் வாலிய விந்துவும் மருவா தோர் பலர்- 4அதனுடைய வெளுத்த ஒரு நெல் மூக்கும் பெறாதவரும் பலர்;5

  8-9. (ஆயிடை……………..மதியினோயே) ஆயிடை- அவ்விடத்து; கருமம் காரணம்- இதற்கு அவர்களுடைய 6கன்மங் காரணமாக வேண்டுமென்று 7அறிவாயாக; மாசு உடைத்து- அஞ்ஞானத்தை கெடுத்து: 8உயர்ந்த மதியினோய்- 9மேலாக வுயர்ந்த ஞானத் தையுடையோனே எ-று.

  சின், அசை. முற்பட்ட ஏகாரம் ஐந்தும் தேற்றம். பிற்பட்ட ஏகாரம், ஈற்றிசை.

  அகவல் 21

  மாயா மலம்

  ஆதி யோதிய மேதகு மாயை

  கோதின் றேக நாசம தணையா

  தளவில் 1வலியிற் றுலகவை பிறக்கும்

  யோனி யெங்கணுந் தானினி தமலும்

  5.  கருமத் ததிகா ராந்தத் தளவும்

  விதிமுறை கொடுக்கும் வியப்பிற் றஃதறி

  2சகக்கரு மத்தின் மிகத்திக ழிறையை

  ஆராய் பென்ன வணிகிள ருலகம்

  ஏருபா தான மின்றெனி னின்றுடை

  6.  நூலின் றாயி னின்றென வாலிய

  சேதன மன்றிது தீதறு செயல்கள்

  கோதில சேதன மாகலி னலதேல்

  காரண நியம மென்னும் பேரிசை

  எல்லா முடைக்கும் பொல்லாத் தோடம்

  7.  வல்லே யெய்து மநித்தமு நல்ல

  காரிய மாவது மாயி னீரில்

  தோற்றுவ தியாதின் மாற்றரும் வியாபி

  அன்றெனின் வினைமற்றெங்கணு மார்தல்

  கூறுதி யாது பலவாய்ச் சேதனம்

  8.  அன்றது தோற்றத் தொன்று மன்றிது

  தோற்ற மாகலி னேக மாப்பட

  நூலின் றொகுதிக் காண்டலி னேகம்

  அநேகத் தெழுமென வறியப் பலவும்

  ஒருதனி வித்தின் வருவகை யறிதி

  9.  சித்தி லசித்தின் குற்றமில் தேற்றம்

  என்பவர் புனலை வன்புகை யதனின்

  மான வளவைத் தாமள வின்மை

  1பூத மாதியா முலக மெவைக்கும்

  காரணம் பார்க்கி லோர்பர மாணு

  10. 2என்பவ ரறிவி ணுண்மை யின்புற

  நாடினம் நிற்க வோருரு வதனின்

  ஓருரு வுதித்த லல்லதை யாவும்

  நாச மில்லை யென்னி னாசற

  ஒன்றுக் கோரிடத் தெய்திய தெங்கணும்

  11. 3நின்றிடி னதனை நீக்கும் வென்றியர்

  யாரே கோடிக் கீறு மாற்றக்

  4கண்டா லெவைக்கும் பொன்றுங் காலம்

  உண்டே மன்ற வோது மாயா

  காரிய நிற்பது முடிவிற் சீரிய

  12. சத்தி வடிவிற் பொற்பொடு 5புணரும்

  6தொடங்கற் காலை யிடம்பட விளங்கும்

  ஆருயி 7ரேரிசைப் போகஞ்

  சீரிதி னருந்தத் திகழ்தனு முதலே

  இது மாயாமல சாதகம் கூறியது.

  உரை: 1-6. (ஆதி………….அறி) ஆதி ஓதிய 1மேதகு மாயை- பரமசிவனாலே வேதாகமங்களிலே அருளிச் செய்யப்பட்ட 2மேம்பாடு தக்கிருக்கின்ற மாயையானது; 3கோதின்று ஏகம்- குற்ற மின்றி 4ஏகவத்துவாயிருக்கும்; நாசமது அணையாது -5ஒருகாலும் அழிவுபடாது; -6அளவில் வலியிற்று- அளவிறந்த சத்திகளையுடைத்து; -7உலகவை பிறக்கும் யோனி- பிரபஞ்ச மடங்கலும் தோற்றுகைக்கு உற்பத்தித்தானமா யிருக்கும்; தான் இனிது 8எங்கணும் அமலும்- இதுதான் எவ்விடத்தும் இனிதாக வியாபித்திருக்கும்; கருமத்து அதிகாராந்தத்தளவும்- 9பூருவ கன்மபலம் புசித்தறுமளவும்; விதி முறை கொடுக்கும் வியப்பிற்று- பிராரத்துவமான 10தேகத்தை நியதிப்படி முறை யாகக் கொடுக்கும் 11ஆச்சரியத்தையுடைத்து; அஃது அறி - அதனை நீ அறிவாயாக.

  7-10. (சகக்கருமத்தின்…………இன்றென) சகக் கருமத்தின் - 1பிரபஞ்சமாகிய காரியத்தைக் கொண்டு; மிகத்திகழ் இறையை ஆராய்பு என்ன- மிகவும் 2பிரகாசிக்கின்ற பரமசிவனை நிச்சயித் தாற்போல; அணிகிளர் உலகம்-3அழகு பொருந்திய காரியப் பிரபஞ்சம் காரியப் பொருளாயிருத்தலால்; ஓர் உபாதானம் இன்று எனின் இன்று- விசேடமான ஓர் 4உபாதானமில்லையா யின் இப்பிரபஞ்சம் இல்லையென்று கொள்க: நூல் இன்றாயின் - இஃது என்போல வென்னின், நூல் இல்லையாயின்; உடையின்று என -புடவை இல்லாதவாறுபோல 5என்க.

  10-12. (வாலிய…………………ஆகலின்) இது வாலிய சேதனமன்று - இதுதான் வாலிதாகிய 6சைதந்நியமன்று, என்னை; தீதறு செயல்கள் கோதில் அசேதனமாகலின்- குற்றமற்ற 7இதனுடைய காரியங்கள் ஐயமற அசேதனமாகலின்;

  12-15. (அலதேல்……………..எய்தும்) அலதேல்- அப்படி யன்று, அசேதனமாயிருப்பது சைதன்னியத்திலே தோன்றும் என்னில்; காரணம் நியமம் என்னும் பேரிசை எல்லாம் உடைக்கும் - இன்ன காரணத்தினால் இன்ன காரியம் நியமமாய்த் தோன்றும் என்னும் பெரிய8நியாய மெல்லாவற்றையும் கெடுக்கும்; பொல்லாத் தோடம் வல்லே எய்தும்- 9நியமமில்லாமை யென்னும் பொல்லாத குற்றம் கடிதாக வந்துகூடும்;

  15-17. (அநித்தமும்…………யாதின்) 1அநித்தமும்- நித்திய உபாதானமாயிருக்கிற மாயையை அநித்தமென்றும்; நல்ல காரியமாவதும் ஆயின்- ஒன்றினுடைய நல்ல காரியமென்றும் சொல்லின்; நீரின் தோற்றுவது யாதின்- 2நீர்மைப்படத் தோற்றப் படுதல் அதற்கு உடனே கூடுமாதலால் அதுதான் தோற்றுவது 3யாதின் பாலோ, சொல்லாய்;

  17-19. (மாற்றரும்………..கூறுதி) மாற்று அரும் வியாபி அன்று எனின்- இம்மாயைதான் உவமையில்லாத 4வியாபியன்று என்னில்; வினை எங்கணும் ஆர்தல் கூறுதி- 5கன்மபக்கு வத்துக் கேற்றபடி ஆன்மாக்கள் எவ்விடத்து வேண்டினும் போகம் புசிப்பதற்கு ஓர் உபாயம் சொல்லாய்6;

  19-21. (யாது…..ஏகம்) யாது பலவாய்ச் சேதனம் அன்று- யாதொரு பொருள் பலவாய்ச் சேதனமல்லதோ அது தோற்றத்து ஒன்றும்- அஃது ஒரு 7தோற்றரவைக் காட்டும்; இது தோற்றம் அன்று ஆகலின் ஏகம்- 8இது தோன்றுவதன்று ஆதலால் ஏகமாம், ஆகவே ஒன்றாயிருப்பது பல பொருளில் தோன்றாது என்றவாறு, 9இங்ஙனம் ஒன்றாயிருப்பது பல பொருளில் தோன்றாது என்று அருளிச்செய்ய21-23. (மாப்படம்………………என) மாப்படம் - மகத்தாகிய புடவை; 1நூலின் தொகுதிக் காணடலின்- 2நூற்கழி பலவற்றாலே ஆயின்மை காண்டலால்; ஏகம் அநேகத்து எழும் என - அநேக பதார்த்தத்தாலே ஏகமாயிருப்பதொன்று ஆமென்றறியக் கூடாதோ 3 என்று விண்ணப்பஞ் செய்ய;

  23-24. (அறி………………அறிதி) 4அறி அப்பலவும்- நீ அறிந்த அந் நூற்கழி பலவும்; ஒரு தனி வித்தின் வருகை - ஒரு தனிவித்தாலே வந்தன 5வென்னும் இவ்வகையினை; அறிதி- நீ அறியாயோ6;

  25-27. (சித்தில்……………….அளவின்மை) குற்றமில் சித்தில்- குற்றமற்ற சித்திலே; அசித்தின் தோற்றம் என்பவர்- அசித்துத் தோன்றுமென்று 7சொல்லுவோர்; வன்புகை யதனின் புனலைமான அளவைத்தாம் - மிகுந்த புகையைக் கண்டு கீழே நீர் உண்டென்று அனுமானம் கொண்டபடியாகிய; அளவின்மை- 8பிரமாணமின்மை யென்னும் குற்றமாம்.

  28-31. (பூதமாதி……………நிற்க) பூதமாதி உலகம் எவைக்கும்- மகாபூத முதலாகவுள்ள உலகமெவையிற்றுக்கும்; காரணம் பார்க்கில்- காரணம் விசாரித்துப் பார்க்கில்; ஓர் பரமாணு என்பவர் - புடவைக்குப் பல நூற்கழி காரணமாதல்போல 1உவமையில்லாத பரமாணுவே காரணமென்று சொல்லுவோராகிய தார்க்கிகரது; அறிவின் நுண்மை- நுண்ணியவறிவும்; இன்புற நாடினம்-2 இனிதாக அறிந்தோம்; நிற்க- அவர்நிற்க 31-36. (ஓருரு………………யாரே) ஓர் உருவதனில் ஒர் உருஉதித்தல் அல்லதை- ஒரு பொருளிலே யொருபொருள் 3தோன்று வதல்லது; யாவும் நாசம் இல்லை யென்னின்- சருவபதார்த்தமும் 4ஒரு காலத்திலே ஒருபடித்தாக அழிந்து மீளத்தோன்றும் மகா சங்காரம் 5இல்லை யென்பாயாயின்; ஆசற- குற்றமற,

  6ஓரிடத்து ஒன்றுக் கெய்தியது- ஓரிடத்து ஒரு பொருளுக்கு வந்த சங்காரம்; எங்கணும் நின்றிடின்- எல்லாப் பதார்த்தமும் 7ஒரு காலத்திலே ஒன்றாய் அழியப் பக்குவப்பட்டு வந்து நிற்கு மாயின்; அதனை நீக்கும் வென்றியர் யாரே- 8அந்தப் பக்குவத்தை நீக்கும் வன்மை யுடையார் யாரோதான்:

  36-38. (கோடிக்கு…………….மன்ற) கோடிக்கு ஈறும் ஆற்றக் கண்டால்- கோடி சரீரங்கள் ஒரு முகூர்த்தத்திலே முடிவாக அழியக் கண்டால்; எவைக்கும் பொன்றும் காலம் உண்டே மன்ற- 1எல்லாச் சரீரங்கட்கும் 2ஒரு நாளிலே சங்காரம் உண்டு எனத் தெனியக்காண்;

  38-43. (ஓதும்……………..முதலே) ஓதும் மாயாகாரியம் முடிவில் நிற்பது- சொல்லப் பட்ட மாயா காரியம் சங்கார காலத்து நிற்கும் முறைமை யாங்ஙனமெனில்; சீரிய சத்திவடிவில்- சீரிதாகிய தத்தம் சத்திவடிவிலே 3பொற்பொடு புணரும் அழகிதாக- உபாதானத்திலே யொடுங்கும்; 4தொடங்கற் காலை - 5அவ்வாறு ஒடுங்கியவை மீளத் தோன்றுவதாகிய புனருற்பவ காலத்திலே; ஆருயிர் ஏர் இசைப் போகம்- நிறைந்த ஆன்மாக்கள் கீர்த்தி யுடைத்தாகிய போகத்தை; சீரிதின் அருந்தத் திகழ்தனு முதல் - 1நன்றாகப் புசித்ததற்கு ஏது வாய் விளங்கும் தனு கரண புவன போகங்கள்; இடம்படத் தோன்றும்- 2இடமுண்டாகத் தோன்றும் எ-று.

  ஏகாரம் முன்னையவை தேற்றம்; பின்னையவை அசை. மன்ற, தெளிவாக.

  அகவல் 22

  சற்காரிய வாதம்

  3தந்து முதல காரக மைந்துறக்

  கோட லாடையின்4 மையி னாடை

  உளதேற் காரக மென்னை யென்ன

  5வளையாக் காரக மசத்துற் பத்திக்

  5.  குண்டே யாக வாயிடை 6யாவினும்

  தண்டாதி யாவருந் தாம்வேண் 7டியமன்

  கண்டோ ராயின் மன்ற கண்டிலம்

  அன்ன தாயி னதினஃ துண்டென

  என்னை நியம 8மிதினுள திவ்வலி

  6.  என்னிற் சித்த சாதன 9மன்னோ

  அன்றெனிற் காரகக் குழுவும் வென்றி

  தாரா தோடு 10மோட வேரிசை

  எல்லா முடையு 11முடைய நல்லோய்

  சொல்லே யாகு நிற்க வல்லே

  7.  உற்பா திக்கும் வலியுண் டில்லைச்

  சத்தி ரூப மாகிக் கருமம்

  என்றிடின் விசேட நின்ற தொன்றிடைக்

  கண்டில மொன்றும் வென்றியோ டொன்றைக்

  காரக மதற்குப் பேரிசை நியமம்

  8.  ஆகத் தோற்று விக்குஞ் சீரிசை

  வலியந் நுவய வெதி ரேகத்துக்கும்

  ஒலிகெழு முரூடி யானுங் கலிகொள

  அறிய லாகு மவ்வெளிப் படுதல்

  ஒலிகெழு தோற்ற மதனாற் கலிகெழு

  9.  தந்து முதல காரகம் வந்திலா மையிற்

  புடமடி மறைத்த தடமலிந் தகன்ற

  வேம முதல தாமினி 1துஞற்றத்

  தூமடி விளங்குமி 2யாங்கெனின் மாமரு

  கடமிக மறைத்த படங்கட மகற்ற

  10. இடமிக விளங்கி யாங்கு வடிவுற

  எல்லாக் காரக முறினு முயற்கோ

  டில்ல தில்ல தாகலின் வல்லே

  கலைமுதன் மாயையி னிவணம்

  3நிலைநலி யுடைய நினையுங்காலே.

  இஃது ஆருயிர் “ஏரியல் போகஞ் சீரிதி னருந்தத் திகழ் தனுமுத” லாயபிரபஞ்சம் - அசற்காரிய மென்னச் சற்காரிய சாதகம் கூறியது.

  1-3. உரை (தந்து…………..என்ன) தந்து முதல காரகம் முந்து றக்கோடல்- நூலை உபாதானமாகக் கொண்ட புடவையை உண்டாக்கும் கருவிகளைக் குறைவறக் கொள்ளவேண்டிற்று; ஆடை இன்மையின்- நூலினிடத்துப் புடவை 4இல்லையென்ப தனாலல்ல வோ; ஆடை உளதேல்- அதனிடத்துப் புடவை யுளதாயின; காரகம் என்னை- இக்கருவிகளைக்கொண்டு 5செய்ய வேண்டுவது எற்றுக்கு; 6என்ன- என்று விணைப்பஞ்செய்ய; இங்ஙனம் கூறுவாயாகில்,4-6. (1வளையா……………கண்டிலம்) அசத்து உற்பத்திக்கு-அசற்காரியத்துக்கு; 2வளையாக் காரகாம் உண்டே - ஆராய்ந்து கொண்ட கருவிகள் 3வேண்டு மல்லவோ; ஆக - அங்ஙனமாக; ஆயிடை- அவ்விடத்து; யாவினும் யாவரும் தாம் வேண்டிய - எக்கருவிகளைக் கொண்டும் எத்தகைய விவேவிகளும் தாம் வேண்டின பொருள்களை; 4தண்டாது கண்டோர் - குறை வின்றியே உண்டாக்கிக்கொள்ளுவரல்லவோ, அங்ஙனம் உண்டாக்கிக்கொண்டோரை; ஆயின்- ஆராயின்; மன்ற கண்டிலம்- நிச்சயமாகக் கண்டிலோம், (என்று இவ்வாறு ஆசிரியர் அருளிச் செய்ய.)

  7-10. (அன்னது…………..சாதனமன்னோ) அன்னது ஆயின் - 5அஃது அப்படி யாயின்; அதில் அஃது 6உண்டென- அந்நூலி னிடத்துப் புடவையுளதாய்த் தோன்றவில்லையாயினும் கருவி களாலே நூலினிடத்தே புடவை யுண்டாக்கலாமே என்று விண்ணப் பஞ் செய்ய; என்னை நியமம்- உனக்கு இஃது என்ன நியமம் 7சொல்லாய்; இதின் உளது இவ்வலி என்னின்- 8புடவை யுண்டாகும் சத்தி மற்றொன்றில் பிறவாது இந்நூலிலே தான் உண்டு என்று சொல்லுவாயேல்; சித்த சாதனம்- அது நாம் சாதிக்கிற பொருளாகியன்றோ முடிந்ததாம்.

  மன்னும் ஓவும் அசை1.

  11-14. (அன்றெனில்……….நிற்க) அன்றெனில் காரகக் குழுவும் வென்றி தாராது ஓடும்- நூலிற் புடவை கிடந்ததில்லை2 யென்னின் கருவித் திரட்சியெல்லாம் கூடிச் சற்காரியத்தை யுண்டாக்க மாட்டாவாதலால் கருவியும் வெற்றி தரமாட்டாவா யொழியும்; ஓட- ஒழியவே; பேரிசை யெல்லாம் உடையும்- நீ பெரிதாகப் பேசின3வெல்லாம் கெட்டுப்போம், 4அஃதாவது நீ சொல்லியது அபசயப் பட்டுப்போம் என்றவாறு; உடைய - போகவே; நல்லோய்- நல்லோனே; சொல்லேயாகும் -நின்வார்த்தை சத்த வேறுபாடல்லது பொருள் வேறுபாடு இன்றாம்; நிற்க- ஆதலின் இனி அசற்காரியம் ஒழிக.

  14-18. (5வல்லே…………….ஒன்ற) வல்லே உற்பாதிக்கும் வலியுண்டு- விரைய நூலிலே புடவையைத் தோற்றுவிக்கலாம் சத்தியுண்டு; சத்தி ரூபமாகிக் கருமம் இல்லை என்றிடின் - சத்தி வடிவாய்ப் புடவை கிடந்ததில்லை யென்று நீ சொல்வாயேல் இடை- இவ்விடத்திலே; நின்றது ஒன்று- உனக்கு நின்றதாகிய; ஒன்றும்; வென்றியொடு ஒன்ற- வெற்றியொடு பொருந்தவரும்; விசேடம் ஒன்றும் கண்டிலம்- 6விசேட மெய்துவதாகச் சிறிதும் காண்கிலோம், காண்;

  19-20. (காரகம்……………தோற்றுவிக்கும்) காரகம்- கருவிகள்; அதற்குப் பேரிசை நியமமாகத் தோற்றுவிக்கும் - நூலிலே கிடந்த அப்புடவையைப் பெரிய கீர்த்தியையுடைய நியமமா முறைமையாலே உண்டாக்கும்;

  20-24. (சீரிசை………………..அதனால்) சீரிசை வலி- நூலிற் கிடந்த புடவையின் மிக்க புகழுடைத்தாகிய சத்தியை; அந்நு வய வெதிரேகத்தும்- 1அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும்; ஒலி கெழும் உரூடியானும் - விளங்கக் காணப்படுவதாகிய உரூடி யாலும்; ஒலி கெழு தோற்றமதனால்- 2பிரகாசமாய்த் தோன்றுகிற புடவையிற் 3கண்டு: அவ்வெளிப்படுதல் கலிகொள அறிய லாகும்- அது தோற்றினது நூலிலே 4என்னுமது விளங்க அறியலாகும்5;

  அந்நுவய வனுமானமாவது உள்ளது தோற்றுமென்கை; அஃதாவது நூலைக்கண்டு புடவை யுண்டென்று நிச்சயிக்கை. வெதிரேக வனுமானமாவது இல்லாதது தேர்ற்றா தென்கை; அஃதாவது நூலைக்கண்டு இதிற்கடமில்லை யென்று நிச்சயிக்கை. உரூடியாவது புடவையைக்கண்டு இது நூலிலன்றித் தோன்றா தென்று நிச்சயிக்கை.

  24-26. (கலிகெழு………………..மறைத்த) கலிகெழு தந்து முதல காரகம் வந்திலாமையின்- சொல்லப் பட்ட நூலை உபா தானமாக வுடைய கருவிகள் வராமையாலே; 6புடமடி மறைத்த- 7இந்த நூல்கள் தம்மிற் கிடந்த சுத்தமான புடவை தோன்றா வண்ணம் மறைத்தன:

  26-28. (தடம் மலிந்து………………விளங்கும்) தடம்மலிந்து- பெருமை மிகுந்து; அகன்ற வேமம் முதல- 1விரிந்தனவாகிய 2வேமம் முதலான கருவிகளை; தாம் இனிது உஞற்ற3 - நெய்வார் நூலிலே அழகிதாகத் தொழிற் படுத்த; தூமடி விளங்கும்- 4தூயதாகிய புடவை விளங்கித் தோன்றும்;

  28-30. (யாங்கு…………….யாங்கு) யாங்கு எனின்- என் போல வென்னில்; மாமரு கடம்மிக மறைத்த படம்- அழகு பொருந்திய பாண்டத்துள்ளே மறைந்து கிடந்து புடவை; கடம் அகற்ற- பாண்டத்தினின்றும் வாங்கி விரிக்க; இடம் மிக விளங்கி யாங்கு- இடமுண்டாக விளங்கியது போல வென்க.5

  இஃது 6அந்நிய வியபதேசம்.

  30-34. (வடிவுற……….நினையுங்காலே) வடிவுற எல்லாக் காரகம் உறினும் - வடிவுண்டாகுவதற்கு வேண்டும் எல்லாக் கருவிகளையும் கொண்டு புகினும்; முயற்கோடு இல்லது இல்ல தாகலின்- இல்லாத கொம்பை முயலுக்கு உண்டாக்க

  வொண்ணாத படியால்; நினையுங்கால்- விசாரிக்கு மிடத்து 7இவ்வணம் - இவ்வண்ணமே; கலைமுதல்- கலை முதலாகவுள்ள தத்துவங்கள்; மாயையின்- 8-நித்தியமாகவுள்ள மாயையிலே; வல்லே நிலை நலிபு உடைய- சற்காரியமாய் விரைய விரிவதும் ஒடுங்குவதும் உடையவாகும். காண்1 எ-று.

  மன், அசை.

  அகவல் 23

  இருவினை யாக்கம்

  வெருவரும் பூட்சி யிருவினை வெறுப்ப

  யாங்குப் பட்டதை யெனினே வீங்கிய

  இந்தியப் போகி லிரும்பறைத் தொழுதி

  தன்மாத் திரைத்தாய்ப் பன்முறைக் கொழுத

  5.  முப்பொறி யாண்டுச் 2செப்புற நிறீஇத்

  துன்பப் பண்ணைத் 3துயர்ப்பிணி யொரீஇ

  இன்பப் பண்ணைத் தங்கி யாங்கது

  பொறியி னல்லதைப் புணர்திறம் படாதென

  அறிவின ராக்கத் தறுதொழின் மரீஇ

  6.  முயற்சி தழீஇ யியற்றுங் காலை

  ஊழூ ழன்றித் தாழ்திற மில்லென்

  4றொப்பின் றுயர்ந்தவிம் மெய்ப்படு பேருணர்

  வெய்யா ராகிக் 5கைதூ வாமே

  என்னை செய்யி னென்னை யாமென

  7.  ஆசைப் பௌவத் தளறுபட வழுந்தி

  உள்ள முரைசெயற் கல்லோ லத்தின்

  உந்திட 1வெழுபு மூழ்கி

  நொந்துழி யீண்டு 2நுவறுஞ்சிறிதே.

  இது மேற் “களியிடைக் கலித்3” தெழுந்த இருவினை யுண்டானபடி யெங்ஙனே, 4அவை வந்தவாறு கூறியது.

  1-2. உரை: (வெருவரும்…………எனினே) 5வெருவரும் பூட்சி- 6துக்க வேது வாதலால் பயப்படத்தக்க சரீரம்; இருவினை வெறுப்ப யாங்குப் பட்டதை எனின்- புண்ணிய பாவம் மிக வுண்டாக அமைந்தது எவ்வண்ணம் என்று வினவின்;

  2-4. (வீங்கிய……………கொழுத) வீங்கிய- பரந்த; 7இந்தியப் போகில் இரும்பறைத் தொழுதி- இந்திரிய மென்னும் பெரிய இறகையுடைய பறவைக் கூட்டம்; தன்மாத்திரைத் தாய்ப் பன்முறைக் கொழுத- 8தன மாத்திரைக ளென்கிற 9பலாதி விடயங்களிலே தாவிப் பல முறையாலே சென்று கோத;

  5-7. (முப்பொறி………தங்கி) ஆண்டு- அவ்வப் பொருளிலே; முப்பொறி செப்புற நிறீஇ- 10மள வாக்குக் காயங்களைச் 1செப்பமாக நிறுத்தி; துன்பப் பண்ணை துயர்ப்பிணி2 ஒரீஇ- துன்பத் திரட்சியிலுண்டாகிய விதனத்தாலே ஆசை யொழிந்து; இன்பப் பண்ணை தங்கி- இன்பத் திரட்சியிலே3ஆசை யுண்டாக அதன் கண்ணே 4தாழ்ந்து;

  7-10. (ஆங்கு…………இயற்றுங் காலை) ஆங்கு- அவ்விடத்து; அது- அவ்வின்பந்தானும்; 5பொறியின் அல்லதை புணர் திறம் படாது என- திரவியத்தாலல்லது கூடும்வகை உண்டாகாதென்று நினைந்து; அறிவினர்- அறிவுடையோர்; ஆக்கத்து அறு தொழில் மரீஇ - திரவிய முண்டாகைக்குச் சொல்லிய உழவே, தொழிலே, வரைவே, வாணிகமே, வித்தையே, 6சிற்ப மென்று எண்ணப்படா நின்ற 7ஆறு கருமங்களிலே பொருந்தி; முயற்சி தழீஇ இயற்றுல் காலை- முயற்சியை மேற்கொண்டு செய்யுங் கால்;

  11-13. (ஊழூழ்………..கைதூவாமே) ஊழ் ஊழ் அன்றி- இந்தச் சுகமும் துக்கமும் ஊழ் முறையானல்லது; தாழ்திறம் இல்8 என்ற - மேவும் மார்க்கம் 9இல்லை யென்கின்ற; ஒப்பின்று உயர்ந்த இம்மெய்ப்படு பேருணர்வு- உவமையின்றி யுயர்ந்த இந்த உண்மை பொருந்திய பெரிய ஞானத்தை; 10எய்யாராகி - அறியாராகி; கை தூவாமே11 - கை யொழியாதே;

  14-18. (என்னை செய்யின்………….சிறிதே) 1என்னை செய்யின் என்னையாம் என- என் செய்தால் 2எத்துணையாம் என்ற; ஆசைப் பௌவத்து அளறுபட அழுந்தி- ஆசையாகிய சமுத்திரத்திலே சேறுபட மூழ்கி; உள்ளம் உரை செயல் கல்லோலத் தின் உந்திட- மனம் வாக்கு காயம் என்ற திரையாலே தள்ளப் பட்டு; எழுபு மூழ்கி 3நொந்துழி- மேலே எழுவதும் மூழ்குவது மாகி விதனப்படுமிடத்து; ஈண்டு- இவ்விடத்து 4இதிப்போதல்; சிறிது நுவறும்- புண்ணிய பாவத்தை ஆர்ச்சித்துக் கொள்ளும் முறைமையைச் சிறிது சொல்லப் புகுகின்றோம், கேட்பாயாக எ-று.

  அகவல் 24

  வினை வகை

  பொய்ப்பொறி புணர்க்கு முப்பொறி யுள்ளும்

  உள்ளச் செய்தி தெள்ளிதிற் கிளப்பின்

  இருடீர் காட்சி யருளொடு புணர்தல்

  அரும்பொறை தாங்கல் பிறன்பொருள் விழையாமை

  5.  செய்தநன் றறிதல் கைதவங் கடிதல்

  பால்கோ டாது பகலிற் றோன்றல்

  மான மதாணி யாணிற் றாங்கல்

  அழுக்கா றின்மை யவாவிற் றீர்தல்

  அருந்துய ருயிர்கட் கிருந்த காலை

  6.  அழறோய் வன்ன ராகி யானாக்

  5கழலு நெஞ்சிற் கையற் றினைதல்

  பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்

  கறிவும் பொறியுங் கழிபெருங் கவினும்

  பெறற்கருந் துறக்கந் 6தம்மி னூஉங்கு

  7.  இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்

  வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள

  1அறம்பெரிது கரைதல் புறங்கூ றாமை

  வாய்மை கல்வி தீமையிற் றிறம்பல்

  இன்மொழி யிசைத்தல் வன்மொழி மறத்தல்

  8.  2அறிவுநூல் விரித்த லருமறை 3யோதுதல்

  அடங்கிய மொழிதல் கடுஞ்சொல் 4லொழிதல்

  பயனின்ற படித்தல் படிற்றுரை 5விடுத்தல்

  காயத் தியைந்த வீயா வினையுள்

  அருந்தவந் தொடங்கல் திருந்திய 6தானம்

  9.  கொடைமடம் படுதல் 7படைமடம் படாமை

  அமரர்ப் பேண லாகுதி யருத்தல்

  ஒழுக்க 8மோம்பும் விழுப்பெருங் கிழமை

  உடம்பிடி யேந்தி யுடறடிந் திடுமார்

  அடைந்த காலை யவணிய றுயரந்

  10. தேரா ரல்லர் 9தெரிந்து மாருயிர்

  பெரும்பிறி தாக விரும்பிண மிசைஞரின்

  ஓராங்குப் படாஅ மாசில் காட்சி

  ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல்

  இந்தியப் பெரும்படை யிரிய நூறும்

  11. வன்றறு கண்மை வாளிட் டா அங்கு

  நோவன செய்யினு மேவன 10விழைத்தல்

  தவச்சிறி தாயினு மிகப்பல விருந்து

  பாத்தூண் 1மரீஇய திருவு மிரும்பொழில்

  தன்மனைக் கிழத்தி 2யல்லதைப் பிறர்மனை

  12. அன்னையிற் றீரா நன்ன ராண்மை

  கார்கோ ளன்ன கயம்பல 3கிளைத்தல்

  கூவறொட்ட 4லாதுலர் சாலை

  அறங்கரை நாவி 5னான்றோர் பள்ளி

  கடவு 6ணண்ணிய தடவுநிலைக் கோட்டம்

  13. இனையவை முதல நினைவருந் திறத்த

  புரத்தல் அறத்துறை; மறத்துறை யிவற்றின்

  வழிப்படா தெதிர்வன கெழீஇ

  7உஞற்ற லென்ப வுணர்ந்திசி னோரே

  இது 8மேற்கூறிய மன வாக்குக் காய கன்மங்களை விரித்துக் கூறியது.

  1-2. உரை: (பொய்……….கிளப்பின்) பொய்ப்9 பொறி புணர்க்கும் – அநித்திய மாகிய சரீரத்திலே கூடின; முப்பொறி யுள்ளும் - மனவாக்குக் காயகன்மங்களில் வைத்து; உள்ளச் செய்தி- மனத்தால் ஆர்ச்சிக்கும் கன்மத்தை; தெள்ளிதின் கிளப்பின்- தெளியச் சொல்லின்;

  3.  இருள்தீர் 10காட்சி- குற்றமற்ற 11மெய்யுணர்வு; அருளொடு புணர்தல் -12எக்காலமும் அருளோடிசைந்து 13சாக்கிரத் தானத்தில் அதீதாவத்தையுளதாதல், உயிர்கள் அனைத்தினுக்கும் தன்னுயிர் போலக் கருணையுடையனாதலுமாம்.

  4.  1அரும் பொறை தாங்கல்- பொறுத்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்தால் பொறுத்தல்; 2பிறன் பொருள் விழையாமை - சரீரசுகத்தை வேண்டிப் பிறர் பொருளை விரும்பாமை.

  5.  3செய்த நன்றறிதல்- பிறர் இலாபம் கருதாதே செய்த நன்றியை மறவாதிருத்தல்; கைதவம் கடிதல்- மனத்தில்4 கிருத்திரமத்தை யொழிதல்.

  6.  பால் கோடாது பகலில் தோன்றல்- சத்துருக்களும் மித்து ருக்களும் உதாசீனருமாகிய 5மூவருக்கும் ஒக்க 6ஒரு பக்கத்தும் சாயாதே நுகத்திற் பகலாணி போன்றிருத்தல்.

  7.  7மான மதாணி ஆணின் தாங்கல்- மானமாகிய பேரணி கலத்தைத் தரிக்கும் வீரியம். 8ஆண்- வீரியம்.

  8.  9.  அழுக்காறின்மை- பிறர் ஐசுவரிய விசேடாதிகளைக் கண்டு பொறாமை யில்லாமை. அவாவின் தீர்தல்- 9பிறப்புக்குக் காரண மாகிய 10அவாவை யறுத்தல்.

  10. 9-11. (அருந்துயர்…………..இனைதல்11) அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை- பொறுத்தற்கரிய விதனமானது பிராணிகட்கு உண்டான காலத்து; அழல் தோய்வன்ன ராகி- தம்மை நெருப்பிலே தோய்த்தாற் போல விதனப்பட்டு; ஆனா- அமையாதே; கழலும் நெஞ்சின் கையற்றினைதல்- 1உருகி யொழுகும் நெஞ்சினராய்க் கையற வாகிய 2துக்கப்படுதல்.

  12-15. (பன்னரும்- பெருங்குணம்) 3பன்னரும் சிறப்பின்- சொல்லுதற்கரிதான சிறப்பையுடைய; 4மன்னுயிர்த் தொகை கட்கு- நித்தியமான ஆன்ம வர்க்கத்துக்கு; அறிவும் பொறியும் 5கழி பெருங்கவினும்- ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும்; பெறற்கருந் துறக்கமும்- பெறுதற்கரிய சுவர்க்க பலமும்; தம்மினும் இறப்ப ஊங்கு வேண்டும் என்னும்- தம்மினும் மிகப் பெருக வுண்டாக வேண்டுமென்று நினைத்திருக்கும்; 6எண்ணரும் பெருங்குணம்- எண்ணுதற்கரிய பெரிய குணமாம்.

  16. வாக்கொடு சிவணிய நோக்கின்- இனி வாக்கின் கன்மமாய்க் கூடின புண்ணியத்தைச் சொல்லின்;

  16-17. மீக்கொள 7அறம் பெரிது கரைதல்- மிகுதியுடைத் தாகத் தருமங்களை8 அனவரதமும் வசனித்தல்;

  17. 9புறங்கூறாமை - பிறர் புறம் பார்த்துப் பொல்லாங்குச் சொல்லாமை;

  18. வாய்மை- 1ஒரு வசனத்தாலும் பிறர்க்கு அகிதம் வாராதபடி 2மெய் சொல்லுதல்; கல்வி -3 உயர்ந்த சாத்திரங்களை ஐயந்தீரக் 4கற்ற கல்வி ஞான முடையராதல்; தீமையின் திறம்பல்- கேட்பதற்கு நன்றாயிருந்து பிறர்க்கு விதனமான பொருள் பயக்கும் 5தீயவாகிய வசனங்களைச் சொல்லாமை;

  19. இன்மொழி இசைத்தல்- 6இனியவை கூறல்; வன்மொழி மறத்தல்- 7மாற்றமாயிருக்கும் வார்த்தைகளைச் சொல்லாமை;

  20. 8அறிவு நூல் விரித்தல் - 9திவ்வியாகமங்களை விரித்துரைத்துக் கொண்டாடுதல்; அருமறை யோதுதல்- அரிய வேதாக மங்களை யோதுதல்;

  21. 10அடங்கிய மொழிதல்- 11அரிய மறைகளில் அடங்கிய12 மந்திரங்களைச் செபித்தல்; கடுஞ்சொல் ஒழித்தல்- ஒரு வசனமும்13 கடிதாகச் சொல்லாமை;

  22. 1பயனின்ற படித்தல்- 2புருஷார்த்தங்களைப் பெறு விக்கும் நூல்களையே படித்துச் சொல்லுதல்; படிற்றுரை விடுத்தல்- 3பொய் சொல்லாமை.

  23. காயத் தியைந்த வீயா வினையுள்- இனிக் காயத்தால் ஆர்ச்சிக்கப்படும் கெடாத கன்மங்களுள் சில சொல்லின்:

  24. அருந்தவம் தொடங்கல்- அரிய தவங்களைத் தொடங்கிச் செய்தல்; திருந்திய தானம்- “நல்லோர்க் குவந்த பல் சுவைப்போனகம், மாகதி ரணிமணி வண்காலேகம், செம்பொன் மென்றுகில்” முதலாக வுள்ளவற்றைத் தானம் செய்தல்;4

  25. 5கொடை மடம் படுதல்- அகாரணத்தாற் கொடை வழங்குதல்; 6படை மடம் படாமை-7படையழிந்தார் மேல் ஆய்த மெடேனென்று வரைந்து கொள்ளுதல்;

  26. அமரர்ப் பேணல்- திருமால் முதல் ஐயனாரந்தமான தேவர்களை அருச்சித்தல்; ஆவுதி அருத்தல்- யாகாதி கன்மங் களைத் தொடங்கி ஓமம் பண்ணுதல்8;

  27. ஒழுக்கம் ஓம்பும் 9விழுப் பெருங் கிழமை- தான் நின்ற நிலைக்குப் பொருந்தின ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் சிறப்பாகிய பெரிய தலைமை;

  28- 32. (உடம்பிடி…………..காட்சி) உடம்பிடி எந்தி- 1வாளை யேந்திக் கொண்டு; உடல் தடிந்திடுமார் அடைந்த காலை- தம் உடம்பைத் துணித்தற்குப்பிறர் 2கூடிவந்து வருத்துகிற போது; அவண் இயல் துயரம் - அவ்விடத்தே தாம் படும் துக்கம்3; தேரார் அல்லர் தெரிந்தும்- அறியாரல்லர் அறிந்து வைத்தும்; ஆருயிர் பெரும் பிறிதாக- நிறைந்த உயிரை ஒன்றன் உடலினின்றும் பிரியச் செய்து; 4இரும் பிணம் மிசைஞரின் - பெரிய அவ்வுடம்பாகிய பிணத்தைத் தின்பாருடனே; ஓராங்குப் படாஅ -5ஒரு பெற்றிப் படக் கூடாத; 6மாசில் காட்சி- குற்றமற்ற அறிவுடைமை; 7கொல்வாரோடு கூடுதலே குற்றமென்றவழிக் கொலைக் குற்றத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ என்றவாறு.

  33. ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்- கொலை, கள், களவு, 8குரு நிந்தை, பொய் மொழிதல், அவை செய்பவருடன் பயிறல் என்று சொல்லப்பட்ட 9பஞ்சமா பாதகமாகிய சமுத்திரத்திலே அழுந்தாதே தப்புதல்.

  34-5 (இந்திய…. வன்றது கண்மை) இந்தியப் பெரும் படை இரிய நூறும் - இந்திரிய மாகிய பெரிய யானைப் படையைக் 1கெடுத்து ஓட்டவல்ல; வன்தறு கண்மை - 2வலிய தறுகண்மை;

  35-6 (வாளிட்டு… இழைத்தல்)3வாள் இட்டு நோவன செய்யினும் - வாளால் அறுத்து நோய் தருவனவற்றை ஒருவர் செய்தாராயினும்; 4மேவன ஆங்கு இழைத்தல் - சுகமாய் இருப்பன வற்றை அவர்க்கு அப்பொழுதே விரும்பிச் செய்தல்;

  37-8. (தவச் சிறிது…. திருவும்) மரீஇய திரு -5 தான் உடையதாகிய செல்வம்; 6தவச் சிறிதாயினும்; மிகப்பல விருந்து - மிகவும் பல விருந்தினருக்கு; பாத்தூண் - பகுத்துண்டல்.

  38. இரும்பொழில்- பெரிய நந்தவனம் செய்தல்;

  39-40. (தன்மனைக் கிழத்தி………………ஆண்மை) தன்மனை கிழத்தியல்லதைப் பிறர்தனை- தன்னுடைய தாரமல்லாது பிறருடைய தாரத்தை; 7அன்னையின் தீரா நன்னர் ஆண்மை- மாதாவைப் போலப் பார்ப்பதில் நீங்காத நல்ல ஆண்டன்மை;

  41. 8கார் கோள் அன்ன கயம்பல நேர்தல்- சமுத்திரத்தை யொத்த ஏரி குளம் பலவும் கல்லுதல்;

  42. கூவல் தொட்டல்- கிணறுகள் அகழுதல்;

  43. 1ஆதுலர் சாலை- 2வழிக்கரை மடம் கட்டுதல்;

  44. 3அறம் கரை நாவின் ஆன்றோர் பள்ளி- தருமத்தைச் சொல்லும் நாவையுடைய 4தவத்தினர்க்கு மடமெடுத்துக் கொடுத்தல்;

  45. கடவுள்5 நண்ணிய 6தடவுநிலைக் கோட்டம்- தேவர்கள் எழுந்தருளிப் பூசைகொண்டருளுகைக்காக உயர்ந் திராநின்ற தேவாலயங்களை யெடுத்தல்;

  45-6.(இனையவை………….அறத்துறை) இனையவை முதல- இத்தன்மை யனவாகிய இவை முதலாக; 7நினைவரும் திறத்த புரத்தல்- 8நினைத்தற்கரிய கூறுபாடான புண்ணியங் களைச் செய்தல்; அறத்துறை- புண்ணியகன்மமாம்;

  46-48. (மறத்துறை…………..உணர்ந்திசினாரே) மறத்துறை- பாவ கன்மமாவது; இவற்றின் வழிப்படாது- இப்படிச் சொல்லப் பட்ட புண்ணிய கன்மங்கனைச் செய்யாது; 9எதிர்வன கெழீஇ உஞற்றல்- இவையிற்றுக்கு மாறுபாடாயவற்றைக் கெழுமிச் செய்தல்; என்ப உணர்ந்திசினோர்- என்று சொல்லுவர் ஞானவான்கள் எ-று.

  மாதும் ஓவும் அசை.

  அகவல் 25

  கன்மபந்த நிலை

  இசைத்த மூன்றி னசைப்புற விறந்த

  ஆருயிர்க் கின்பத் துன்ப நேரிய

  துடியிடைப் படாது கடிகொள வியற்றி

  எற்பிறர் பிறர்க்கியான் றப்பறத் தந்தென

  5.  மனப்பசை யிம்மைய வம்மை வினைத்திறன்

  ஆண்டுப் பூட்சி யீண்டுப்பட வியற்றல்

  சார்ந்தவை 1வதிதல் யாங்கு வீங்காது

  ஆடிப் படர்ந்த பேரிருள் புடமடி

  கூடிய குற்றங் கோடேந் தல்குல்

  6.  மாதோர் பாகற் சேர்வோ ரின்பம்

  பாதவக் 2கண்ணிழல் பனுவல் கோளிப்

  பெரும்பணை பொதிந்த சிறுநுண் வித்தின்

  இருந்தவை விரியு மிருவினைக் கியைந்த

  3நாற்கதி யார்த்தவிழ் நரலைப் புணரி

  7.  மூவகைத் துக்கத்து முடியும்

  மாவகை வீழ்த்த மன்னுயிர்ப் பரப்பே

  இது, மேற்கூறிய மன வாக்குக் காய கன்மங்களால் புண்ணியமும், பாவமும் பந்தமானபடி எங்ஙனம் என்னக் கன்ம பந்தமும் நிலையும் விரியுங் கூறியது.

  1-3. உரை; (இசைத்த…………இயற்றி) ஆருயிர்க்கு இசைத்த மூன்றின்- நின்றந்த ஆன்மாக்களுக்கு முற்பாட்டிலே சொல்லப் பட்ட 4மன வாக்குக் காய கன்மங்களின்: அசைப்புற விறந்த இன்பத் துன்பம்- 5அசைவு அசைவில்லாமைகளால் செறிந்த

  சுகதுக்கங்களை; நேரிய துடி இடைப்படாது கடிகொள இயற்றி- நுண்ணிய துடியென்னும் தகியா அவ்வளவு காலமேலும் இடைவிடாது 1விரையச்செய்து;

  4-5. (எற்பிறர்………….இம்மைய) எற்பிறர் பிறர்க்கு யான் தப்பறத் தந்தென- எனக்குப் பிறர் நன்மை செய்தா ரென்றும் பிறர்க்கு யான் நன்மை செய்தே னென்றும்; மனப்பசை- எப்பொழுதும் 2சித்தத்திலே மமதை பண்ணிக் கொள்ளுமவை; இம்மைய- சுயங்கன்மமாவன;

  5-6. (அம்மை…………இயற்றல்) அம்மை வினைத்திறன்- பூருவ கன்மமாவது; 3ஆண்டுப் பூட்சி ஈண்டுப்பட இயற்றல்- முன்பெடுத்த தேகங்களிலே இப்போதில் எடுக்கும் தேகத்தில் அனுபவித்துக் கொள்கைக் கேதுவாக ஆர்ச்சித்து அகங்கரித்துக் கொண்ட கன்மம்;

  7-10. (சார்ந்தவை………..இன்பம்) அவை சார்ந்து வதிதல் யாங்கு- அக்கன்மங்கள் ஒருவனிடத்திலே ஆர்ச்சிதமானவாறும் கிடந்து பக்குவப் படுமாறும் எங்ஙனே யென்னில்; வீங்காது- 4ஒரு காலத்தே ஒரு முறையிற் 5பெருகாது; ஆடிப்படர்ந்த1பேரிருள் - கண்ணாடியில் படிப்படியாக ஏறிப் பெரிய மாசு கூடினாற் போலவும், புடம் மடி கூடிய குற்றம்- சுத்தமான கூறை மாசேறினாற் போலவும்; கோடு ஏந்து அல்குல் மாது ஓர் பாகன் சேர்வோர் இன்பம்- பக்கம் உயர்ந்து அகலிய நிதம்பப் பிரதேசத்தையுடைய மாதை ஒரு பாகமாகவுடையனான பரமசிவனை யோகம் பண்ணுவார்க்கு மேன்மேல் பரமானந்த சுகம் கூடினாற் போலவுமாம்.2

  3இது கன்மம் ஆர்ச்சித மானவாறு கூறியது.

  11-13. (பாதவக் கண்ணிழல் ………………விரியும்)4 பாதவக் கண் நிழல்- விருக்கத்தில் உச்சிப் பொழுதில் அடங்கின நிழல் விரியுமாறு போலவும்; பனுவல்-5தான் கற்ற கல்விப் பரப்பானது தன்னிடத்திலே அடங்கிக் கிடந்து பரிணமித்தாற் போலவும்; 6கோளிப் பெரும் பணை பொதிந்த சிறு நுண் வித்தின்- ஆலினுடைய பெரிய கிளை முதலிய பரிணாமமெல்லாம் அடங்கிய சிறிய நுண்ணிய அவ்வாலம் வித்திற் கிடந்து பரிணமித் தாற் போலவும்; இருந்து அவை விரியும்- 7காரணமான கன்மத்திலே புண்ணிய பாவங்களாகிய கன்மங்கள் 8காரிய ரூபமாய்க் கிடந்து பக்குவப்

  பட்டபோது கன்ம பலங்களாகிய சுகமும் துக்கமுமாய் விளையும்;9

  1இது கன்மம் அனுபவிக்குமாறு கூறியது.

  13-16. (இருவினைக்கு………….பரப்பே) 2மாவகை வீழ்த்தமன் உயிர்ப் பரப்பு- 3மகத்தாயிருக்கின்ற தன்னுண்மையும் வினையுண்மையும் உணராமல் மறந்துவிட்ட நித்தியமான ஆன்ம வர்க்கங்கள்; இருவினைக்கு இயைந்த நாற்கதி- பக்குவப் பட்ட கன்மபலம் அனுபவிக்கைக்குப் 4பொருந்தின 5நான்கு வர்க்கத்துச் சரீரங்களை; ஆர்த்து அவிழ் 6நாலைப்புணரி- எடுத்தும் விட்டும் ஆரவாரித்துத் திரிகிற பிறப்பாகிய சமுத்திரத்தில்; மூவகைத் துக்கத்து முடியும்- ஆதிதைவிகம் ஆதிபௌதிகம் ஆதியாத்தி யான்மிகம் என்று சொல்லப்பட்ட மூவியல்பின வாகிய துக்கத்துக்குள்ளே முடிவனவாம் எ-று.

  அகவல் 26

  மூவகைத் துக்கங்கள்

  7ஆதி தைவிக மாதி பௌதிகம்

  ஆதி யாத்தியான் மிகமென வோதிய

  துக்க மூன்றினு ளாத்தி யான்மிகம்

  மெய்யின் மனத்தி னையமி லிரண்டே

  5.  வளியிற் பித்தின் விளியா வீளையின்

  ஊனுகு தொழுனையி னுதகக் கொட்டின்

  வெப்பிற் சூலையின் மக்களின் விலங்கின்

  அலகையிற் கள்வரின் பறவையி னிருதரின்

  மைந்தர் மகளிர் மணந்திடை தணப்பிற்

  6.  பேரறம் வளர்ப்பிற் பெருந்திரு நுகர்வின்

  சீரிய யாக்கை மாதுயர் மாசு

  மனத்துறு துயர நினைப்பருஞ் சோகம்

  அறிவுரு வாக்க மடையுநர்ப் பொறாமை

  மானமாக் கலம் பூணாது மறுத்தல்

  7.  இச்சையி னிசைத லிருஞ்சின மிகுத்தல்

  இனையவை முதல நினைவருந் திறந்த

  ஆதி பௌதிகஞ் சீதமா மழை

  உருப்பவிர் வேனி லுட்குவரு கடுங்கால்

  இருள் 1கடி மின்னுப் பெருவிற லசனி

  8.  2ஒலிகட லுலகி னிலைமலி புடைய

  மன்னுயிர்க் குறுகண் 3டுன்னியாங் கருத்தல்

  ஆதி யாய வீவருந் திறத்த

  ஆதி தைவிகம் பேதையார் வயினக்

  கருக்குழி யழுங்கல் பிறப்பிறும் பூது

  9.  திரை வருந்தீமை 4வரைவில் பேதைமை

  மடங்க லாருயிர் 5தொடங்கினன் வவ்வல்

  யாவரும் விழையாக் கோள்வாய் நிரயத்து

  வீழ்ந்தன ரெழாஅ வான்கழி துன்பம்

  இனைய மாலைய துயர்மிடை வினைநகர்

  10. கருங்கைக் கயமைக் களிறுகைத் திரும்புலப்

  பெரும்படை விரிந்து சூழத் திருந்தா

  நாற்கதிப் பவனி யுலாஅய்

  ஆர்த்தவிழ் திறம்பிற போற்றுமதி புரிந்தே.

  இது “மூவகைத் துக்கம்” (ஞானா. 25 : 15) என் னென அவற்றின் இலக்கணம் கூறியது.

  1-3. உரை:- (ஆதி …………..மூன்றினுள்) ஆதி ஆத்தியான் மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என ஓதிய துக்கம் மூன்றினுள்- “மூவகைத் துக்கத்து முடியும்”1 என்று சூசித்து ஓதிய ஆத்தியான்மிகம் என்றும் ஆதி பௌதிக மென்றும் ஆதிதைவிக மென்றும் 2சொல்லப்பட்ட துக்கத் திரயங்களிலே;

  3-4. (ஆத்தியான்மிகம்………….இரண்டே) ஆத்தியான் மிகம்- ஆத்தியான்மிகமாவது; ஐயமில மனத்தின் மெய்யில் இரண்டு- சந்தேகமில்லாத மனத்தைப்பற்றிவரும் விதனமும் தேகத்தைப் பற்றிவரும் விதனமுமாக இருதிறப்படும்;

  5-11. (வளியின்……………மாதுயர்) வளியின் பித்தின் விளியா விளையின்- 3வாதத்தால், பித்தத்தால், நீங்காத சிலேட்டு மத்தால்; ஊன் உகு தொழுனையில்- 4சரீரத்திலே சதையை அழுகி விழப்பண்ணும் குட்டவியாதியால்; உதகக் கொட்டின் -5நீரிழி வால்; 6வெப்பின்- வெதுப்பு நோயால் 7சூலையின்- சூலை வியாதியால்; 1மக்களின் - சத்துருக்களாகிய மானிடரால்; விலங்கின்- விலங்குச் சாதியால்; பறவையின் - கொதுகு ஈ முதலான பறவைகளால் அலகையின்- பேய்களால்; 2கள்வரின் - களவு காண்பவரால்; 3நிருதரின் - இராக்கதர்களால்; 4மைந்தர் மகளிர் மணந்து இடை தணப்பின் - ஆண் பெண்கள் கூடி இடையே பிரிதலால்; பேரறம் வளர்ப்பின்- 5குருலிங்க சங்கம மாதி தேவதா காரிய பரிபாலனம் 6தவசு என்றிவற்றால்; பெருந் திரு- சம்பத்து மிகுதியால்; நுகர்வின் - 7தேடல் காத்தல் அனுபவித்தலால் உண்டான இவை பதினான்கும்; சீரிய யாக்கை -சீரிதாகிய சரீரத்தைப் பற்றி வரும்; மாதுயர்- மிக்க விதனமாம்;

  11-16. (மாசு……….திறத்த) 8மாசுறு மனத்ததுறு துயரம்- மாசுடைத்தாகிய மனத்தைப் பற்றி வரும் துக்கமாவன; நினைப் பருஞ்சோகம்- பெண்டிர் மைந்தர் பிரிதலாலும் திரவிய முதலாகக் கூடியவை தம்மைப் பிரிதலாலும் ஆற்றாமையால் வரும் நினைத்தற்கரிய சோக மாகிய விதனம்; அறிவு உரு ஆக்கம் அடையுநர்ப் பொறாமை- 9ஞானம் சரீர சௌந்தரியம் ஐசுவரிய மென்ற இவையிற்றையுடை யோரைக் கண்டும் கேட்டும் அழுக்காறு பொருந்திய மனத்திலே வரும் விதனம்; மான மாக் கலம் பூணாது மறுத்தல்- மான மாகிய பெரிய அணிகலத்திற்கு ஆனிவந்த காலத்து உண்டாகிவரும் விதனம்; இச்சையின் இசைதல்- பஞ்சேந்திரியங்களுக்குப் போகமான பதார்த்தங்களில் வைத்த இச்சையால் வரும் விதனம்; இருஞ்சினம் மிகுத்தல்- பெரிய சினமிகுதியால் வரும் விதனம்; இனையவை 1முதல்- இவை யைந்து 2முதலாக; நினைவரும் திறத்த - 3நினைப்பதற்கரிய வேறு பாடுகள் பலவுமாம்.

  17-22. (ஆதி பௌதிகம்…..திறந்த) ஆதி பௌதிகம்- ஆதி பௌதிகம் உண்டாகும்படி சொல்லின்; சீதம் மாமழை உருப்பு அவிர் வேனில்- குளிரால் வரும் துக்கம், மிகுதியாய 4வருடத்தால் வரும் நடுக்கம், உட்டினம் விளங்கிய கோடையால் வரும் 5விதனம்; இருள்படி மின்னு- இருளைக் கெடுக்கும் மின்னினால் வரும் விதனம்; பெருவிறல் அசனி- 6மிக்கவலியை யுடைய இடியால் வரும் விதனம்; ஒலி கடல் உலகில்- ஓதக்கடல் சூழ்ந்த உலகில்; நிலைமலிபு உடைய - நிலைபெற்றுடைய; மன் உயிர்க்கு- பிராணிகளுக்கு; உறுகண்துன்னி- ஒவ்வொன்றைக் கட்டிவைத்தும், ஒவ்வொன்றைக் கொன்றும், ஒவ்வொன்றை வாதைப்படுத்தியும்; ஆங்கு அருந்தல் - 7இவ்வண்ணமே இவைகளினால் தாம் நுகர்கை: ஆதியாயவீவரும் திறத்த - 8இவை ஏழும் முதலாகவுள்ள 1கெடுத்தற்கரிய வேறு பாட்டை யுடைய விதனமாம்;

  22-28. (ஆதிதைவிகம்…………….கழிதுன்பம்) 2ஆதிதை விகம்- ஆதிதைவிகம் இருக்கும்படி சொல்லின்; பேதையர் வயின அக்கருக்குழி அழுங்கல்- 3மாதாவின் வயிற்றில் அந்தக் கருப்பாச யத்தில் இருக்கும் 4கருப்பவேதனை; இறும்பூது பிறப்பு - ஆச்சரிய மாகிய 5பிரசவ வேதனை; திரைவரும் தீமை- திரையுறு 6மூப்பால் வரும் விதனம்; வரைவில் பேதைமை- அளவில்லாத 7அஞ்ஞானத் தால் வரும் சங்கற்ப வேதனை; 8மடங்கல் ஆருயிர் தொடங்கின் வௌவல் - இமயன் அரிய உயிரைப் பிணித்துக் கொண்டு போகும்போது உண்டாகும் 9மரண வேதனை; யாவரும் விழையாக் கோள்வாய் 10நிரயத்து வீழ்ந்தனர் எழாஅ வான்கழி துன்பம்- யாவராலும் விரும்பப்படாத கோட்பாட்டையுடைய நரகத்திலே யழுந்தி ஏறுதற் கரிதாகிய மிகப் பெரிய துக்கமாகிய ஆறும் பிறவுமாம்.

  29-33. (இனைய ……………புரிந்தே) இனைய மாலைய துயர் விளைநகர் இடை- 1இத்தன்மையவாகிய துக்கத்திரயங்களை - தன்னிடத்தே கொண்டு பல்வேறு 2விதனங்கட்கு இலக்காகிப் பூர்வகன் மபலத்தைப் புசிப்புக்குரிய சரீரமாகிய நகரிலே; 3கருங்கைக் கயமைக் களிறு உகைத்து- பெரிய கையையுடைய 4அஞ்ஞானத் தாலுண்டாகிய கீழ்மையென்னும் யானையின் பிடரியிலே ஏறிச் செலுத்தி: இரும்புலப் பெரும்படை விரிந்து சூழ- பரந்து இந்திரியமாகிய பெரிய 5தந்திரம் விரிந்து சூழ்ந்துவர; திருந்தா 6நாற்கதிப் பவனி உலாய்- ஒரு காலத்தும் திருத்த வாராத உற்பிசம், அண்டசம், சராயுகம், சுவேதசம் என்று சொல்லப்படா நின்ற நால்வகைப் பிறப்பிலே பவனியாகி; 7ஆர்த்தவிழ் திறம்- 8ஓருடலைக் கூடியும் பின்பு வேறோருடலைக் கூடுதற்குப் பிரிந்தும் செல்லும் வகையினைச் 9சொல்ல; புரிந்து போற்றுமதி- அவையிற்றை விரும்பிக் கேட்பாயாக எ-று.

  பிற, மதி- அசை நிலை.

  பாசபந்தம் முடிந்தது

  தேகாந்தரம்

  அகவல் 27

  ஆர்த்தவிழ் திறம்

  இருந்துயர் கெழீஇ வருந்தி யாப்புற்ற

  முற்பய னீண்டுத் துய்த்தனர் கழிப்பின்

  கருங்கய 1லிரியப் பெரும்பகடு துரந்தாங்

  குழவ ராக்கிய விளைவயற் 2செந்நெல்

  5.  பிற்பயன் றந்தாங் 3கிச்செய லுதவ

  எய்திய குகையின் மையறப் படர்தல்

  இருங்கழன் மள்ளர் பதம்படர் திருந்தடி

  சாபவான் 4புழுவிற் காழக மடியக்

  கடிபடு புட்டக 5மடிவிடுபு புனைதல்

  6.  கண்படைக் 6கனவிற் கடிமதில் பாய்ந்த

  தும்பி வன்பிடர்த் தோன்றன் மேலதை

  உள்ளமு நுழையா 7வூங்குங் கீழதை

  ஏழ்தல மிறந்த கீழும் புடையதை

  நேமி மால்வரைப் புறனுந் தாடோய்

  7.  தடக்கை மாவீழ் மணியினு மடுக்கிய

  சிறுநணித் தானும் பெருஞ் சேய்த்தானும்

  வினைமாண் டுப்பின் மனமாண் டேரின்

  துடிபல வகுத்த 1விசையிற் சேறல்

  கார்முகங் கான் பூமுக விசிகம்

  8.  உள்ளியது 2கிழித்தலின் பள்ளி நீங்கி

  ஒருபெருந் தமியன் விரிபுல னுடுத்த

  பேரத் தாணிப் பெயரினுந் துணையின்

  றறிவருந் துரியத் தல்கினுந் தெரிபொன்

  றிசையா தேகி யாங்கு வசைதபு

  9.  கடிகலை முதறர வந்த

  படியென வறிநெடி தொடிவுடனுகவே.

  3இது தேகி தேகங்களை “அர்த்தவிழ்திறம்” (ஞானா 26: 33) எங்ஙனே யென்ன அவ்வியல்பு கூறியது.

  1-2. உரை: (இருந்துயர்……………….கழிப்பின்) இருந்துயர் கெழீஇ வருந்தி- 4இங்ஙனம் சொல்லப்பட்ட மிக்க துக்கத் 5திரயங்களுடனே கெழுமி வருந்தி; யாப்புற்ற முற்பயன் ஈண்டுத் துய்த்தனர் கழிப்பின்- ஆர்ச்சிக்கப்பட்ட பூருவகன்ம பலத்தை இத்தேகத்திலே நின்று 6புசித்துக் கழித்த பின்பு;

  3-6. (கருங்கயல்………………படர்தல்) கருங்கயல் இரியப் பெரும் பகடு துரந்து- பெரிய கயல்மீன்க ளெல்லாம் 7நீங்கிப்போக மகத்தாகிய 8கடாவை ஏரிற் பூட்டிச் செலுத்தி; ஆங்கு 9உழவர் ஆக்கிய விளைவயல்- அவ்விடத்துப் 10பயிர் செய்வோராலே உழுது விளைதற்குப் பண்படுத்தப்பட்ட 1விளைவயலில்; செந்நெல் பிற்பயன் தந்தாங்கு- செந்நெற்பயிர் பின்பு புசிக்கைக்குரிய பயனை விளைத்தாற் போல; 2இச்செயல் உதவ- இத் தேகத்திலே 3நின்று பூர்வகன்ம பலத்தைப் புசிக்கு மிடத்து ஆர்ச்சித்த 4கன்மம் தன்பலனை அனுபவிக்கைக்குப் 5பக்குவப்பட; எய்திய 6குசையின் மையறப் படர்தல்- போதரும் தேகத்தைக் குற்றமறப் 7பற்றும் இயல்பு இருக்கும்படி சொல்லின்;

  7-11. (இருங்கழல்…………..தோன்றல்) 8இருங்கழல் மள்ளர் பதம் படர் திருந்தடி- பெரிய வீரக்கழலையுடைய வீரபுருடர் வழியிலே 9செல்லுமிடத்துத் திருந்த அடியிட்டு அடியெடுத்து வைத்தாற் போலவும்; சாபவான் புழுவின்- வெள்ளிய 10 வில்லூன்றிப் புழுப் போலவும்; காழகம் மடிய- உடுத்த 11கூறை பீறிக் கெட்டமையால் பெயர்த்து; 12கடிபடு புட்டகம் மடி விடுபு புனைதல்- 13புதியதோர் கூறையை 14மடிவைத்துடுப் பது போலவும்: கண்படை- நித்திரையிலே; கடிமதில் பாய்ந்த தும்பி வன்பிடர் தோன்றல் கனவின்- சத்துருக்களது காவலையுடைத்தாகிய மதிலையிடித்த யானையின் வலிய கழுத்தின் மேல் இருந்ததாகக் கனவு கண்டாற் போலவும்;

  11-18. (மேலதை…………….சேறல்) மேலதை 1உள்ளமும் நுழையா ஊங்கும் - மேலெல்லாவற்றுக்கும் மேலாய மனத் தாலும் நினைத்தற்கரிய மேலிடத்தும்; 2கீழிதை ஏழ்தலம் இறந்த கீழும் - கீழேழு பாதலங்கட்கும் அப்புறமான கீழிடத்தும்; புடையதை 3நேமிமால் வரைப்புறனும்- பக்கத்தே 4சக்கரவாள கிரிக்கு அப்பாலும்; தாள்தோய் தடக்கை மாவீழ் மணியினும்- முழந்தாளிலே தோயும் படியான நெடிய கையிலே 5தாங்கிய அழகிய விருப்பமுள்ள மாணிக்கத்தினும்; அடுக்கிய சிறு நணித் தானும்- 6அடுத்த அண்மையினுங் காட்டில் 7அண்மையினும்; பெருஞ்சேய்த்தானும்- முன்பு சொன்ன இடங்களின் மிக்க பெருந் தூரத்திலும்; மாண்வினை துப்பின் மன மாண்தேரின்- 8மாட்சி மையுடைய வினையாகிய வலியினையுடைய மனமென்னும் அழகிய தேரிலே நினைவு ஏறி; துடி. பல வகுத்த விசையின் சேறல் -1துடியென்னும் காலத்தைப் பல கூறிட்ட கடுமையிலே 2பொருள் கெடாது சென்றாற் போலவும்:

  19-20. (கார்முகம்………….கிழித்தலின்) கார்முகம் கான்ற பூமுக விசிகம்- வில்லினின்றும் விடுக்கப்பட்டட 3கூரிய முகத்தை யுடைய அம்பு; உள்ளியது கிழித்தலின்- நினைத்த 4பதார்த்தத்திலே பட்டு உருவிச்சென்றாற் போலவும்;5

  20-24 (பள்ளி…………………………..ஏகியாங்கு) ஒரு பெருந்தமியன்6 பள்ளி நீங்கி- அதீத துரியத்திலே நின்ற ஒப்பற்ற பெரிய ஆன்மா உறக்கத்திலே நின்று நீங்கி; விரிபுலன் உடுத்த பேரத் தாணி பெயரினும்- பரந்து 7இந்திரியங்களாலே போகம் புசிக்கும் பெரிய அத்தாணியாகிய 8சாக்கிராவவத்தையிலே வந்தாலும்; 9துணையின்று அறிவரும் துரியத்து அல்கினும்- சாக்கிரத்திலே நின்ற இவன் இந்திரியங்களின் சகாயமின்றி அறியமாட்டாத 10துரியாவத்தையிலே வந்து தங்கினாலும்; தெரிபு ஒன்று இசையாது ஏகியாங்கு- இவையிரண்டு பெற்றியும் ஒன்றும் பிறர்க்குத் தெரியாமல் போந்தாற்போலவும்; 1இப்படிச்சொல்லிற்று. ஆன்மா ஒர் தேகத்தைவிட்டு மற்றோர் தேகத்தையெடுக்கும் விதம்;

  24-26. (வசைதபு ………………உசவே) வசைதபு 2கடிகலை முதல்தர வந்தபடி என - குற்றமற்ற விளக்கமுடைய கலைமுதலாக

  வுள்ள தத்துவங்கள் பக்குவப்பட்ட கன்மம் புசித்தற்கு3 ஆன்மா ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தையெடுத்தலாம் என்று; நெடிது உடன் 4ஒடிவு உக அறி- 5உன்னை நெடிதாக உடன் கூடியுள்ள தோடமெல்லாம் கெட அறிவாயாக எ-று.

  ஐ, ஏ அசை.

  அகவல் 28

  அச்சுமாறிப் பிறத்தல்

  இலங்கு குங்கும மார்பரும் வலம்புரி

  ஒருமணி யனன் திருநல மாதரும்

  முயக்கிடை யறியா மயக்கின் வயக்குறு

  துப்புருக் கன்ன பழனத் தானா

  5.  முத்துருக் கன்ன வித்தார் காலை

  6யாப்போ னின்றெனி னீக்குவ ருறையின் அஃதான்று

  முயங்குந் தோறு முயங்குந் தோறும்

  பிறங்கடை பெரிதே யன்றே யாகம்

  ஆருயி ராயின் வீவோ வின்றே

  6.  தன்னை யன்னை தம்மிடைப் பகுப்பிற்

  பின்னர்க் கான்முறை 1மன்னுத லிலரே

  கனங்குழை மாதர் 2கணங்கொள் பீண்டி

  அனங்க னெனாஅ மனங்குழை பிரங்க

  இற்றோர்க் காண்டிகு முற்றவுங் காண்டிகும்

  7.  இவண மன்றெனி 3னதீதா நாகதம்

  ஐயமின் றுணர்ந்தோர் மையறு பனுவலின்

  வருபிறப்புணர்ந்த மதியோர்த்தோன்றும்

  முதனடு விறுதி யிளமை மூப்பின்

  ஒழிவற நிறைந்தோ னுதழிதந் 4தொடுங்கும்

  8.  5ஆதி யின்மையின் பூத மாநகர்

  ஈரிரண் டெய்தித் தீதற வொரீஇக்

  கோபுரங் கூட மாட மாளிகை

  விளிம்பு பளிங்கார்த்த பசும்பொன் வேதிகை

  அரமிய முதல விரவும் பெயர் பெறீஇக்

  9.  கலங்கியுங் கலங்காக் 6காரணத் திலங்கியும்

  பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ

  வாடாத் துப்பிற் கோட லாதி

  அருளா பரண னறத்தின் வேலி

  7பொருண்மொழி யோகங் கிரியையிற் புணர்த்த

  10. அருண்மொழி திருமொழி போலவும்

  என்று நிலீஇயர் நன்றுமன் பெரிதே.

  இஃது அசேதனப் பிரவிருத்தி சொல்லுகிற சமயங் களை நிராகரித்துத் 1தேகதேகாந்தம் ஆன்மாவுக்கே எனச் சாதித்தது.

  1-6. உரை:- (இலங்கு…………….உறையின்) 2குங்குமம் இலங்கு மார்பரும்-குங்குமம் விளங்கும் மார்பையுடைய புருடரும்; 3வலம்புரி ஒரு மணியன்ன திருநல மாதரும்- வலம் புரிச்சங்கிலே தோன்றிய 4தனிமுத்தையொத்த செல்வத்தையும் அழகையுமுடைய மாதரும்; 5முயக்கு இடைஅறியா மயக்கின்- கூடுகிற பருவத்தே இரண்டு சரீரமென்னுமிது தோற்றாத 6போக மயக்கத்திலே; வயக்குறு 7துப்பு உருக்கன்ன பழனத்து- ஒளி பொருந்திய பவளத்தையுருக்கினாற் போன்ற 8சுரோணிதப் பிரதேசத்திலே; ஆனா முத்து உருக்கன்ன வித்து ஆர் காலை - நிறைந்த முத்தையுருக்கினாற் போன்ற 9சுக்கில மென்னும் 10வித்துப் பொருந்துங்காலத்து; 1யாப்போன் இன்றெனின் - அவ்விடத்தே போகம் புசிக்கப் பக்குவப்பட்ட ஆன்மா பந்தியாதாயின்; உறையின் நீக்குவர்- 2சுத்திபண்ணும் நீரோடே கழிப்பர்;

  6-9. (அஃதான்று…………..இன்றே) அஃது அன்று- அற்றன்று, சுக்கிலசுரோணிதமே பிள்ளையா மென்னில்; முயங்குந் தோறும் முயங்குந்தோறும் பிறங்கடை பெரிது- போகஞ் செய்யுந் தோறும் போகஞ்செய்யுந்தோறும் பிள்ளைகள் பலர் உண்டாக வேண்டும்; 3அன்று - அங்ஙனமன்று; 4ஆகமே ஆருயிராயின் - சரீரமே உயிராமென்னின்; வீவோ இன்று- மரண மில்லையாக வேண்டும்;

  இஃது உலகாயதமத நிராகரணம் பண்ணியது.

  10-11. (தன்னை……………..இலரே) தன்னை அன்னை தம்மிடை பகுப்பின்- பிதாமாதாக்கள் உயிரிலே5 பகுந்தது உயிர் என்று சொல்லின்; பின்னர் கான்முளை மன்னுதல் இலர்- ஒரு பிள்ளைக்குப் பின்பு மற்றொரு பிள்ளை 6யுண்டாத லில்லையாம்.

  இது 7மீமாஞ்சைமத நிராகரணம் பண்ணியது.

  12-14. (கனங்குழை………….காண்டிகும்) கனங்குழை மாதர் கணம் கொள்பு ஈண்டி- கனவிய மகரக் குழையையுடைய பெண்டு களெல்லாம் கூட்டமாகக் கூடி; 8அனங்கன் எனாஅ மனம் குழைபு இரங்க- காமதேவனே என்று மனமழிந்து கூப்பிட்டு அலற; இற்றோர்க் காண்டிகும்- மரித்தோரையும் 9காணா நின்றாய்; 1முற்றவும் காண்டிகும்- 2பிறந்த பிள்ளை நாடோறும் வளரவும் காணாநின்றாய்;

  15-20. (இவணம்…………..இன்மையின்) இவணம் அன்று எனின்- இவ்வண்ணம் தேகத்துக்கு ஆன்மாவென்று கருத்தா ஒருவன் இல்லையென்பாயாகில்; அதீகாநாகதம் ஐயமின்று உணர்ந்தோர்- 3அதீத அநாகதமான பூதபவிஷியங்களை ஐயமறஅறிந்து சொல்லு வோராலும்; மையறு பனுவலின் வருபிறப் புணர்ந்த மதியோர்-குற்ற மற்ற சாத்திரங்களாலே இனியெடுக்கும் சரீரங்களை அறிந்து சொல்லுவோராலும்; தோன்றும் -4ஆன்மாவாகிய கருத்தா ஒருவன் உளன் என்று அறியவரு மல்லவோ;

  5முதல் நடு இறுதி இளமை மூப்பு இல்- முதலும் நடுவும் இறுதியும் இளமையும் மூப்புமில்லாத; 6ஒழிவற நிறைந்தோன்- அணுப்புதைக்கவும் இடமின்றி எங்கும் நிறைந்த பரமசிவன்; உழி தந்து ஒடுங்கும்7ஆதியின்மையின்- விரிவும் 8ஒடுக்கமுடைய ஆதியாக ஒரு சரீரத்தையும் 9வேண்டான்.

  1இது 2மாயாவாத நிராகரணம் பண்ணியது.

  20-25. (பூத மாநகர்…………..இலங்கியும்) பூதமாநகர் ஈர்இரண்டெய்தியும்- மகா பூதத்தாலாகிய 3சரீரநகரங்களான நால்வகைத் தோற்றத்திற் பிறப்பாகிய தேகங்களையெடுத்தும்; தீது அற ஒரீயும்-குற்றமற்ற அவையிற்றை விட்டும் சொல்லுமாறு யாங்ஙனமெனின்; கோபுரம் கூடம் மாடம் மாளிகை- கோபுர மென்றும் கூடமென்றும் மாளிகையென்றும்; விளிம்பு பளிங் கார்த்த பசும்பொன் வேதிகை- விளிம்பு பளிங்காலே சமைத்த செம்பொன் மேடையென்றும்; அரமியம்- நிலாமுற்ற மென்றும்; முதல- இவை முதலாகவுள்ளன; 4விரவுப் பெயர் பெறீஇக் கலங்கியும்- இடிந்தனவென்று பெயர் பெற்று நிலை குலைந்தாலும்; கலங்காக் கரணத்து இலங்கியும்- அழியாத 5கரணமாகிய பிருதிவி

  போல விளங்கியும்;

  26-31 (பாடல்………….பெரிதே) பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ- பாடுவோர் பாடும் பாட்டுக்களால் அமைந்த 6பல புகழை நிலைபெறக் கொண்டு; வாடாத்துப் பின் - கெடாத வலியையும் பெற்று; அருளாபரணன்- அருளையா பரணமாகவுடையனு மாய்; அறத்தின் வேலி- தருமத்துக்கு வேலியானவனுமாய்; 7பொருள் மொழி யோகம் கிரியையில் புணர்த்த- சத்தியவசனத்தால் 8யோகபாதத்தையும் கிரியா பாதத்தையும் அடியேனுக்கனுக்கிர கித்த; கோடல் ஆதி அருள்மொழி திருமொழி போலவும்- 9கோடலம்பர் கிழானுமாகிய முதன்மையமைந்த அருண்மொழித் தேவருடைய ஞானச் செல்வத்தைக் கெடுக்கும் உபதேசவசனம் போலவும்; பெரிது நன்று என்றும் நிலீஇயர்- ஆன்மா நாற்கதியிலும் உடம்புவிட்டும் உடம்பு எடுத்தும் 1மிகவும் அழகிதாக என்றும் நித்தியமாயிருக்கும் எ-று.

  இகும். மன், ஏ; - அசை.

  தேகாந்தரம் முடிந்தது

  பாசானாதித்துவம்

  அகவல் 29

  பாசானாதித்துவம்

  கன்ம மாயை அனாதியெனல்

  கருமம் போகந் தருமென வருளினை

  நிருமல விருவினை யாக்க றிருமலி

  ஆகத் தல்லதை யாகா ததுமுதல்

  வேகத் தொடுவரல் வினவிற் றாயின்

  5.  2ஆணவ முதலன் றதுபோற் கருமமுங்

  காணல 3தெனினக் கரைகழி நானா

  விதமினி துயிர்கட் குதவுவ தெதனால்

  அற்றது மாயையு மற்றறி யவணே

  ஓதுவ துளதினு மொருவனை தீதுக

  6.  ஆகம் போகா தாக வல்வினை

  ஏகா திருவினை யாகப் போகா

  தாக மாயிடை முனாதியாது

  பாகி னின்றது பன்னுங் காலே

  இது 1விடுதலும் பற்றுதலும் கேட்டறிந்த சீடன் முற்பிற் பாடு அருளவேண்டும் என்று விண்ணப்பஞ் செய்யக் கன்மமும் மாயையும் ஆணவம் போல் அநாதி யெனச் சாதித்தது.

  1-3. உரை: (கருமம் ……………….ஆகாது) நிருமல- நின்மலனே கருமம் 2போகம் தரும் என அருளினை- கன்மத் தாலே தேகம் எடுத்தது என்று அருளிச் செய்தாய்; இருவினை ஆக்கல் திருமலி ஆகத்தல்லதை ஆகாது என- 3அந்தப் புண்ணிய பாவங்களையும் 4அழகு நிறைந்த தேகத்தில் கூடியிருந்தல்லது ஆர்ச்சிக்கும் 5உபாயமில்லையேயென்று 6விண்ணப்பம் செய்ய:

  3-6. (அது முதல்………….காண்) அது முதல் வேகத்தோடு வரல் வினவிற்றாயின்- அக்கன்மம் முதலில் விரைவுடன் வருதலைக் கேட்கின்றா யாயின்; ஆணவம் முதல் அன்று- ஆணவமலம் அநாதி; அதுபோல் 7கருமமும் காண்- அது போலக் கன்ம மலமும் அநாதியே காண்;

  6-7. (அலதெனின்………..எதனால்) அலது எனின்- அப்படி யன்று இக்கன்மமலம் 8ஆதியென்னில்; உயிர்கட்கு அக் கரை கழி நானாவிதம் இனிது உதவுவது எதனால்- ஆனமாக்கட்கு அந்த எல்லையில்லாத நானாவிதமான போகம் 1இனிதாகப் புசிக்கக் கொடுப்பது எதனாலே என்று கொள்வோம்.

  8.  (அற்று……………..அவணே) மற்று அது அவண் அற்று அறி- 2மற்றை மாயாமலமும் அங்ஙனமே அநாதி யென்று அறிவாயாக;

  9-12. (ஓதுவது………….போகா தாகம்) இனும் ஒருவகை ஓதுவது உளது3- இன்னமும் ஒரு முறையாலே சொல்லுவதுண்டு: தீது உக ஆகம் போகா தாக- குற்றமற உடல் கெடாது அங்குரித்துண்டாக: வல்வினை ஏகாது- வலிதான கன்மம் ஒழியாது; இருவினையாக ஆகம் போகாது- புண்ணியபாவ கன்மம் உண்டாதலினின்றும் ஒழியாது;

  4என்றது, உடலுண்டாகக் கன்மம் ஒழியாது என்றவாறாம்.

  12-13. (ஆயிடை………….பன்னுங்காலே) ஆயிடை- இங்ஙன மாயினவிடத்து; பாகின் நின்றது பன்னுங்கால்- பகுத்து இனிதாக நின்ற அதனைச் சொல்லுமிடத்து; முனாது யாது- 5முற்பிற்பாடாவது யாதென்று சொல்லுவது; 6முற்பிற்பாடு சொல்லலாவதில்லை என்றவாறு.

  மற்று, அசை.

  அகவல் 30

  பாசச்சேத வேட்கை

  ஐம்புல வரசன் வன்கண் வரூஉதினி

  பொறையருந் தானையி னிரிய நூறி

  வாடா வாகை சூடிய தாபதப்

  பேராண் பக்கப் பெரியோய் வாழிய

  5.  1முடைமலி யாக்கையின் வினைபிணிப் பானா

  வினைப்பொதி 2யெறுழ்த்தோ றணிப்போ வின்றே

  மல்ல லாகம் புல்ல வெல்லையில்

  3துன்பம் பகுவா யானாது பருகும்

  வண்டுறை மன்ற மாதோ 4வுண்டனென்

  6.  மயலோ மற்றது செயலோ வாதே

  5என்னை செய்குவென் கொல்லோ வன்னோ

  ஆதி நூலு மோதும் வீடே

  6மாரி யிரவி னார்கலி யழுந்தும்

  ஆரிய வூமன் போல

  7.  அளியென் காமதி முனிவர் கோவே.

  இது முற்பிற்பாடு இல்லாமைகேட்டு 7துக்கமிக்கு அச்ச மிகுதியால் சீடன் பாசச்சேதத்தை அபேக்ஷித்து ஆசாரி யரைத் துதிபண்ணியது.

  1-4. உரை: (ஐம்புல……வாழிய) ஐம்புல அரசன் வன்கண் வரூஉதினி- பஞ்சவிந்திரியங்கட்கும் அரசனான அஞ்ஞான வேந்தனுடைய தறுகண்மையையுடைத்தான 8தூசிப்படையை; பொறை அரும் தானையின் இரிய நூறி-9அந்தப் பஞ்சவிட யத்தின் வழியொழு காதே 10சகித்த லென்னும் கெடுத்தற்கரிய தத்திரத்தாலே கெட அழித்து; 11வாடாத் தாபத 12வாகை சூடிய - கெடாத தவவொழுக்க மாகிய மாலையைச் சூடின; பேராண்

  பக்கப் பெரியோய்- மிக்க 1ஆண்டகைமை கொண்டிரா நின்ற பெரியோனே; வாழிய- வாழ்வாயாக;

  5-9 (முடைமலி……………….மாதோ) 2முடைமலி யாக்கையின் வினைப்பிணிப்பு 3ஆனா- புலால் நாற்றமுடைத்தாகிய தேகமுண்டாகக் கன்மபந்தம் ஒழியாது; வினைப்பொதி 4எறுழ்த் 5தோல் தணிப்போ இன்று- இக்கன்மபந்தம் உண்டாக வலிய உடம்பை ஒழிக்க வொண்ணாது; மல்லல் ஆகம் 6புல்ல -வளப்ப முடைத்தாகிய சரீரமெடுத்தால் அஃது அதனாலுண்டாகும்; எல்லையில் துன்பம் - அளவிறந்த துக்கத்தை; பகுவாய் ஆனாது மன்ற பருகும்- இந்திரியமென்னும் பெரிய வாயாலே அமையாது நிச்சயமாக எடுத்துப் பருகும்; 7வண்டுறை- 8வளப்ப முடைத் தாகிய துறையாதலால்;

  9-12. (உண்டெனல்……………..வீடே) அது உண்டு எனல் மயல்- இனி அந்த முத்தியென்பது ஒன்று உண்டென்று சொல்லுமது 9பித்தாமன்றோ; 10செயல் ஓவாது- கன்மபந்தம் ஓழியாதாதலால்; 11ஆதி நூலும் வீடு ஓதும்- பரமசிவன் அருளிச் செய்த திவ்வியாகமமும் முத்தியுண்டென்று சொல்லாநின்றது; அன்னோ என்னை செய்குவென்- ஐயோ, யான் என் செய்வேன்;

  13-15. (மாரி……………கோவே) மாரி இரவின்- 1மாரிக் காலத்து இரவிலே; ஆர்கலி அழுந்தும் 2ஆரிய வூமன் போல- 3ஆழியிலழுந்தும் ஆரிய நாட்டு ஊமனைப் போல; அளியென்- அனுக்கிரக மார்க்கமில்லாது விதனப்படாநின்றேன்; முனிவர் கோவே- தவசியர்க்குக் கர்த்தாவாயுள்ளோனே; காமதி- அனுக்கிரகித்தருள வேண்டும் எ-று.

  மாது, ஓ. கொல், மதி- அசை, ஏகாரம், தேற்றம்.

  பாசானாதி முடிந்தது.

  பாசச் சேதவியல்

  அகவல் 31

  பாசச்சேத வுபாயவுண்மை

  நெஞ்சு புண்ணுற் றஞ்ச லோம்பென

  ஆரிய னருளு மறிவின் கொண்க

  சேதகம் பயந்த செழுநீர் சேதகம்

  மாசுக மண்ணிய தென்ன வாசுக

  5.  அயந்தீர் பெய்த வறிமதி

  பயந்தோன் வினைவிடல் வியந்தோ வன்றே.

  இஃது 1அஞ்சாதே கொள் என்று பாசச்சேத வுபாய முண்டென்று ஆசாரியன் அருளிச்செய்த பிரசாதத்தைக் கூறியது.

  1-2. உரை: (நெஞ்சு…………கொண்க) அறிவின் கொண்க- 2ஞானத்தை யாளுதலால் அந்த 3ஞானமாகிய மகட்குத் தலைவனா யுள்ளோனே; 4நெஞ்சு புண்ணுற்று 5அஞ்சல் ஒம்பு என ஆரியன் அருளும்- 6இதயமானது புண்ணாம்படி அஞ்சுதலையொழிக வென்று ஆசாரியன் அருளிச் செய்வான்;

  3-6. (சேதகம்…………வன்றே) சேதகம் பயந்த செழுநீர் - 1சேற்றை யுண்டாக்கின 2மிக்க நீராலே; சேதக மாசு மண்ணிய தென்ன- அச்சேறாகிய மாசு போம்படி கழுவினாற்போல வினை பயந்தோன்- பூருவத்திலே கன்மத்தை ஆர்ச்சித்து இந்தச் சரீரத்தாலே அந்தக் கன்மத்தைப் பந்தித்துக்கொண்டோன்; விடல்- அக்கன்மத் தைச் 3சரீரத்தால் நீக்குதல்; வியந்தோ அன்று- ஆச்சரியமன்று என்று; அயம் தீர்பு எய்த- 4ஐயம் நீங்குதல் பொருந்த; ஆசுக அறிமதி- 5பிறவித் துன்பம் கெட அறிவாயாக எ-று.

  வினை, மத்திம தீபகம். 6“வினைப்பொதி யெறுழ்த்தோல் தணிப்போ வின்றே”(அகவல்.30) என்று சொல்லியதனை ஞாபகப் படுத்தியவாறு. மதி, ஓ,அசை.

  அகவல்32

  கன்மச்சேத வுபாயத்தைப் பாராட்டல்

  தேனுட னழிழ்து கலந்தன்ன சுவைய

  அமிழ்தூ ணண்டரும் பெறற்கருந் தகைய

  தண்டாப் பிறவிப் பேரிட ரெறிப

  7உரையுணர்வு கூடா வரகதி யுய்ப்ப

  5.  மதியோ ரானாது பருகுவ பருகியும்

  அமையாது நுவலு மமைதிய பாச

  வல்லி வேரற நிமிர்ப வெல்லையின்

  மறக்குறும் பறுப்ப வறத்தின் வேலிய

  தனக்குநிக ரில்லாத் தகைமைய மனத்தின்

  6.  மாசறக் களைவ தேசொடு நிவந்த

  1துன்னிய வினையுகு நன்னெறி யறிகென

  உரைத்தன னென்ப மாதோ

  பொறைக்கு வரம்பாகிய வறத்தின் கோவே2

  இது 3மேற் பரமாசாரியார் தமக்கு அனுக்கிரகம் பண்ணின கருமச் சேதவுபாயத்தினாலே விளைந்த பரமானந்த அனுபோக மிகுதியால் சீடன் முன்னே, இந்த ஞானாமிர்த மென்னும் தமிழாகமம் உரைத்த தம்முடைய சற்குருவின் பரமோபதேசத்தை வியந்து கூறியது.

  1. தேனுடன் 4அமிழ்து கலந்தன்ன சுவைய- தேனும் அமுதமும் கலந்தாற்போன்ற இரதத்தையுடையன;

  2.

  3.

  2.  5அமிழ்தூண் அண்டரும் பெறற்கருந் தகைய-6அமிழ்த போனகம் பண்ணும் புண்ணியவான்களான தேவர்களுக்கும் கிட்டுதற்கரியன;

  4.  7தண்டாப் பிறவிப் பேரிடர் எறிப- ஓர் எல்லைப் படாத செனனமாதிய பெரிய துக்கத்தைக் 8கெடுப்பன;

  5.  1உரை உணர்வு கூடா வரகதி உய்ப்ப- 2மனவாசகங் கட்கு எட்டாத மேன்மையாகிய முத்தியிலே செலுத்துவன;

  6.  5-6. (மதியோர் …………….அமைதிய) 3மதியோர் ஆனாது பருகுவ- ஞானவான்கள் அளவறப் புசிப்பன; பருகியும்- இங்ஙனம் புசித்தும்;

  4அமையாது நுவலும் அமைதிய- ஆராமையாற் பின்பும் விரும்பப்படும் தன்மையன;

  6-7. (பாசவல்லி…………நிமிர்ப) 5பாசவல்லி- 6பாசமாகிய பசியகொடி மறுபடியும் கிளைத்துப் பந்தியாதபடி; வேரற நிமிர்ப- வேரோடே அதனைப் போக்குவன;

  7-8. (எல்லையின்……..அறுப்ப) எல்லையில் 7மறக்குறும்பு அறுப்ப- அளவில்லாத பாவமாகிய குறும்பை அறுப்பன;

  8.8அறத்தின் வேலிய- புண்ணியத்துக்குக் காவலாயுள்ளன;

  9. தனக்கு நிகரிலாத் 9தகைமைய - தனக்கு உவமையில்லாத 10மேம்பாட்டை யுடையன;

  9-10. 1மனத்தின் மாசு அறக் களைவ- மனோதோடமாகிய இராக துவேஷங் களைச் 2சேடமற ஒழிப்பன;

  11. தேசொடு நிவந்த- பிரகாசமுடையவாய் ஓங்குவன வாகிய;

  11-13. (துன்னிய…………கோவே) நன்மை துன்னிய 3வினை உகுநெறி - இத்தனை நன்மை யமைந்த கன்மச்சேத வுபாயத்தை; அறி என - அறிவாயாக வென்று; பொறைக்கு வரம்பாகிய அறத்தின்கோ- பொறுமைக் கெல்லை யாகிய தருமத்துக்குக் கர்த்தாவாயுள்ள பரமாசாரியன்; உரைத்தனன்- பிரசாதித்தனன். எ-று.

  4என்ப, மாது, ஓ, அசை.

  அகவல் 33

  பாசச்சேதம்

  அழுக்கா றவாவென் னிழுக்கிக லிரிமிளை

  மைந்தன் மருமான் மனையோண் மாதுலன்

  என்பே ரகழி யெழில்பெற நிவந்த

  கற்பனை யெழுவினி லியானெனும் போகியப்

  5.  பொற்புடைப் பருமுள் விலங்கிக் கைப்புடைச்

  சீற்றம் வெகுளி மயக்கொடு சிவணிய

  கூற்றத் தானை யாற்றல் சான்ற

  ஐம்புலத் தறுகண் வெந்தொழில் வேழம்

  விடயப் பஃறேர் கடவித் தடையின்

  6.  மனப்பே 1ரத்திரி யுகைத்துப் பேதைமை

  அமைச்சன் சூழும் வினைப்பெருஞ் செழுநகர்

  வேந்தன் காத்த பூந்தண் 2டேஎம்

  3பிறவா யாக்கைப் பெரியோன் பாதக்

  கடவுண்மாமணி சுடர்விடப் புனைந்த

  7.  ஞான மாமுடி சுமந்த கோமகன்

  வல்வினை மறவன் 4வலையிற் சேரா

  நல்லோ ரியாரென நலங்கிளர் சூழ்ச்சியன்

  கற்பனை யிஃதெனக் கடாங்கமழ் பதாகினிப்

  பொறைமா ணிரதச் 5செயறீர் குரகதத்

  8.  தவாவறு சுளிமுகத் துவாவின் முற்றி

  அடுமிளை பொடிபட வெறிந்து நெடுமதில்

  அகழியொ டிடிய நூறிக் கொடுநகர்

  எரிவிருந் தூட்டி யரிதுபெறு சிறப்பின்

  தன்னுடை நாசமன்னன் னெய்தப்

  9.  பரமா னந்தப் பைதிரம்

  வளையாச் செங்கே லோச்சின னெடிதே.

  இது பாசபந்தமாகிய அஞ்ஞானவேந்தனைப் பாசச் சேதமாகிய ஞானவேந்தன் வென்ற ஞான வெற்றிவியப்புக் கூறியது.

  1-8. உரை: (அழுக்காறு. …………வேழம்) அழுக்காறு அவா என் இழுக்கு இகல் இரி 6மிளை - 7மனச்சழக்காகிய பொறாமை யையும் அவாவாகிய பொல்லாங்கையும் 8நிகரில்லாத காவற் காடாகவும்; மைந்தன் மருமான் மனையோள் மாதுலன் என்1பேரகழி- இக் காட்டுக்குள்ளே புத்திரனென்றும் மருமக னென்றும் தாரமென்றும் மாமனென்றும் சொல்லப்பட்ட 2பந்தத்தினரைப் பெரிய அகழியாகவும்; 3கற்பனை எழில்பெற நிவந்த எழுவினில்- நான் 4பெரியன் நேரியன் இன்ன வூரன் இன்ன சாதியன் என்று சொல்லும் 5சங்கற்பனையாகிய அழகு பெற வோங்கிய 6புரிசையோடே; 7போகியம் யான் எனும் பொற்புடைப் பருமுள் 8விலங்கி- 9போகத்துக் கேதுவாகிய மாயாகாரியமான தேகம் நானென்னும் 10தன்மையை மிக்க அழகுடைத்தாகிய பருத்த முள்ளாகக் கொண்டு தெற்றப்பட்ட வேலியாகவும்; கைப்புடைச் சீற்றம் வெகுளி மயக்கொடு சிவணிய- பிறரோடு மாறுபாட்டைப் பண்ணும் மாற்சரியம் கோபம் அறியாமையென்று சொல்லப்பட்டவை யிற்றோடே கூடிய செயல்களை; 11கூற்றத் தானை- யமதூதுவரை யொத்த 12சேனாவீர ராகவும்; ஆற்றல் சான்ற- வலி யமைந்த; ஐம்புலத் தறுகண் வெந்தொழில் வேழம்- 13அஞ்சாமையையும் கொடி தாகிய செயலையுமுடைய பஞ்சேந்திரியங்களை யானையாகவும்;

  9-12. (விடய…………..தேயம்) 1விடயப் பல்தேர் கடவி-2வசன கமன தான விசர்க்க ஆனந்தங்களைப் பலதேராகவும் செலுத்தி; தடையில் மனப்பேர் அத்திரி உகைத்து- 3தடுத்தற் கரியமனமென்னும் பெரிய 4வாகனத்தையும் செலுத்தி; 5பேதை அமைச்சன் சூழும் 6வினைப்பெருஞ் செழுநகர்- அறியாமை யாகிய மந்திரியாலே 7அலங்கரித்து உரைக்கப்படாநின்ற புண்ணிய பாவமான பெரிய சிறப்பையுடைய 8நாரிலே யிருந்து; வேந்தன் காத்த பூந்தண் தேஎம்- அஞ்ஞானவேந்தனாலே காக்கப்பட்ட பொலிவையும் குளிர்ச்சியையுமுடைய 9நான்கு வர்க்கத்து எண்பத்து நான்கு நூறாயிரயோனிபேதப் பிறப் பாகிய தேயத்தை;

  13-15. (பிறவா…………..கோமகன்) பிறவா யாக்கைப் பெரியோன் 10பாதக் கடவுள் மாமணி- சுலேச்சா விக்கிரக வானான பரமாசாரியன் சீர்பாதமாகிய தெய்விகமான 11பெரிய மணியை; சுடர் விடப்புனைந்த- ஒளி விளங்க அழுத்தின ஞான மாமுடி சுமந்த கோமகன்- ஞானமாகிய அழகிய 12முடியைத் தரித்த ஞானவேந்தனானவன்;

  16-17. (வல்வினை………………..சூழ்ச்சியன்) வல்வினை மறவன்- 1பூருவசென்மங்கனில் பண்ணப்பட்ட வல்வினையாகிய மறவன் வைத்த; 2வலையில் 3சேரா நல்லோர் யார் என - வலையில் அகப்படாத நல்லோராகிய வீரர் யார்தானென்னும்; 4நலங்கிளர் சூழ்ச்சியன்- 5நன்மை விளங்கிய புத்தியை மந்திரிப்பிரதானி யாகவு முடையனாய்;

  18-20 (கற்பனை…….முற்றி) கற்பனை இஃது என- 6ஈடணை மூன்றாகிய இது சங்கற்பனை என்னும் கொடியை7 எடுத்துக் கொண்டு கடாம் கமழ் பதாகினீ- சர்வசங்க நிவிர்த்தி பண்ணும் 8விரத்தி என்னும் மதநாற்றுமுடைய தானை சூழ்ந்து வர; பொறைமாண் இரதம்- பொறுமை யென்னும் அழகிய தேரிலே; செயல்தீர் குரகதத்து- ஒருவர்க்கொருவர் 9சுகதுக்கம் செய்வ தில்லை யென்னும் 10உபதேசத்தைக் குதிரையாகப் பூட்டி; அவா அறு சுளிமுகத்து உவாவின் முற்றி- அவாவறுதியாகிய 11பரிக் கோலுக்குச் சுளிந்த முகத்தையுடையதாகிய 12யானையின் மேற்கொண்டு முற்பட வளைத்து;

  21-26. (அடுமிளை………..நெடிதே) அடுமிளை பொடிபட எறிந்து- கேட்டுக்குக் காரணமாகிய மனச்சழக்கும் அவாவுமான முற்கூறிய அழிக்கத் தக்க 1காவற்காட்டைப் பொடியாக வெட்டி; அகழி இடிய நெடுமதில் நூறி- சமுசார பந்தமாகிய அகழியை இடித்துச் சங்கற்பனையும் அகங்காரமுமாகிய நெடிய மதிலை யிடித்துப் பொடியாக்கி; கொடுநகர் எரி விருந்தூட்டி- 2கொடிய இருவினை யாகிய நகரியை 3அக்கினிக்கு விருந்தாக வூட்டி; அரிதுபெறு சிறப்பின் தன்னுடை நாசம்- அநாதியாகக் கிட்டுதற் கரிதாகப் பெற்ற சிறப்பையுடைத்தாகிய தன் நாசத்தை; மன்னன் எய்த- 4ஆன்மாவினிடத்தேயிருந்த 5அஞ்ஞான வேந்தன் பெற்றானாக; பரமானந்தப் 6பைதிரம்- பரமானந்த நாடாகிய முத்திநிலத்திலேயிருந்து; வளையாச் செங்கோல் நெடிது ஒச்சினன்- ஒருநாளும் அழிவில்லாத 7செங் கோலை ஞானவேந்தன் நெடிதாகச் செலுத்தினான் எ-று.

  8மிளை யெறிந்து அகழி யிடித்து மதிலை நூறி நகர் எரி விருந்தூட்டினான் என்க. அகழியொடு என்பதில், ஓடு அசை. இடியவென்னும் எச்சத்தை இடித்தெனச் செய்தெனச்ச மாக்கி யுரைக்க.

  அகவல் 34

  கன்மச்சேத வுபாயம்

  ஒருவன் றொடுத்த விருவினை மூன்றிடத்

  துறத 9லாரண மறையுமற் றவையே

  கருப்பா சயமெனு மிருட்சிறைப் பள்ளி

  அச்சிறைக் குறும்புழை யரிது நீங்கி

  5.  யாக்கை சுமந்து நோக்குங் காலை

  புலம்பல கலங்க வலந்தலை யெய்தித்

  தென்றிசைச் சேற லென்றிவை மூன்றினுங்

  1காரணத் தன்றிப் பாரண மின்றே

  அந்தக் காரணஞ் சேதனா சேதனம்

  6.  நன்றும் பேதை யாகலிற் சேதனத்

  தொன்றிய வின்பத் துவகையு மன்ற

  துன்பத் தரந்தையிற் கன்றுபு 2கனலும்

  அசேதனத் திடையின் றிடர்நனி படரினும்

  அடையா வின்பந் தடையின் றெய்தினும்

  7.  தொல்லைக் கென்னைகொ லல்லலே யென்னும்

  உள்ளத் துணர்ச்சி விள்ளா ராகிச்

  சேதனத் தியைத லென்ப

  மாதவத் 3திறைவர் மாமுது நிதியே

  இது, மேற் “பயந்தோன் வினை விடல் வியந்தோ வன்றே4” என்று அருளிச் செய்தது எங்ஙனே யென்று சீடன் விண்ணப்பம் செய்யக் கன்மச்சேத வுபாயம் கூறியது.

  1-2. உரை: (ஒருவன்………..அறையும்) ஒருவன் தொடுத்த இருவினை பூருவத்தில் ஓர் ஆன்மாவானவன் செய்ய வந்து பந்தித்த புண்ணிய பாவங்களை; 5மூன்றிடத்து உறுதல்- மூன்று தானத்தால் புசிக்கவேண்டு மென்று; ஆரணம் அறையும்- வே தங்கள் சொல்லா நின்றன;

  2-8. (மற்று…………இன்றே) அவையே - அந்த 6மூன்று மாவன; கருப்பாசயம் எனும் இருள் சிறைப் பள்ளி- கருப்பாசய மென்னும் 1அந்தகாரம் நிரம்பியகாராகிருகத்தினிடத்தில் வரும் 2விதனமும்; அச் சிறைக் குறும்புழை அரிது நீங்கி-அந்த இருட்டறையாகிய காராகிருகத்தின் 3சிறிய துவாரத்தை மகத்தாகிய சிரமத்

  தோடு அரிதாக 4நீங்கி; யாக்கை சுமந்து நோக்குங்காலை - சரீர மெடுத்துப் பின்பு 5நிலம் தலைப்பட்டு வந்து விழுமளவில் வரும் 6விதனமும்; புலம் பல கலங்க- இந்திரியங்கள் யாவும் நிலை

  கலங்க; அலந்தலை எய்தித் தென்திசைச் சேறல்- அலந்தலைப்

  பட்டுத் தேகம்விடும் பொழுதில் வரும் 7விதனமும்; சொல்லப்பட்ட 8இம் மூவகையினும் அனுபவிக்கும் பொழுது; காரணத்தன்றிப் 9பாரணம் இன்று - ஓர் ஏது முன்னிலையாக வல்லது 10புசிக்கும் உபாயம் இல்லை.

  9.  அந்தக் காரணம் சேதனா சேதனம்- அந்த ஏதுத்தான் சைதந்நியவேது வாதல் அசேதனவேதுவாதல் அல்லது கூடாது;

  10-12. (நன்றும்…………கனலும்) 11நன்றும் பேதையாகலின்- மிகவும் 12அறிவிலி யாதலாலே; சேதனத்து ஒன்றிய இன்பத்து உவகையும்- சைதந்நியவேதுவாக வந்த சுகத்துக்குப் பிரியப் படவும்; துன்பத்து அரந்தையின் கன்றுபு கனலும் மன்ற- 1துக்கமாகிய விதனத்திற்குப் 2பிறரைக் கன்றிக் கனலவும் அது நிச்சயமாகச் செலுத்தும்.

  3ஒருசொல் வருவித்துக் கொள்க.

  13-16. (அசேதனத்து- விள்ளார்) அசேதனத்து- அசேதன வேதுவாக; இடையின்று இடர் நனிபடரினும்- இடைவிடாதே துக்கம் மிகவுண்டாயினும்; அடையா இன்பம் தடை 4யின்று எய்தினும்- கிட்டுதற்கரிதாகிய சுகம் தடுக்கவொண்ணாத படி உண்டாயினும் தொல்லைக்கு எல்லை என்னை கொல்-5 பூருவ வினைக்கு ஈடாக வந்த இந்தச் சுகத்துக்கும் துக்கத்துக்கும் பிரியாப்பிரியங் கொள்ள என்ன இருக்கிறதென்று; உள்ளத் துணர்ச்சி விள்ளாராகி6- உள்ளத்தில் அறிவை யொழியாராய்;

  17-18. (சேதனத்து……………நிதியே) சேதனத்து இயைதல்- அங்ஙனம் சைதந்நிய ஏதுவாக வந்தவற்றையும் இப்படியே7 காண்டல்;

  1மாமுது நிதி- மகத்தான பரமானந்த போகமாகிய 2மூல பண்டாரப் பொருள்; என்ப மாதவத்து இறைவர்-என்று சொல்லுவர் தவசுக்குக் கர்த்தராகிய ஞானவான்கள் எ-று.

  3தொல்லைக்கு அல்லல் என்னை கொல் என்றும், சேதனத்து இயைதல் நிதி யென்ப இறைவர் என்றும் இயையும். மற்று, ஏ, கொல், அசை.

  அகவல் 35

  ஞானசித்தாந்த 4வரிட்டம்

  <div style="margin-left: 3em;">

  பனுவ லாட்டி தனிமனைக் கிழவர்

  நட்பும் பகையு மெய்ப்பட நாடின்

  யாவது மில்லைத் தானே யாயினும்

  ஆய்விடை5யுடைய துளதே 6யஃதே

  5 ஈன்றோர் பகைஞர் கீண்டோர் நட்பே

  அருஞ்சிறை யிடுநரி னிருஞ்சிறை விடுநரின்

  யார்கொ லுறுதி யோரே கீறி

  7உடற்சிறை தவிர்த்த நலத்தகை யாளர்

  கொடுத்தது நிலமிசை யிவர்க்கே துயக்கெனை

  10 உருவி லோருயிர்க் குடலுந ருழையரென்

  றிருவே றுரைப்பதை யெவனோ தெரிதரிற்

  கோடை தூற்றக் கூடிய வூழிலை

  வாடையின் வீற்றுவீற் றாகி யாங்குச்

  செய்தியிற் றிரண்டு கையற வொரீஇயர்

  15 ஒக்க லல்லதை மற்றுங் கேண்மதி

  தன்னணி யாகமு மஃதெனின்

  என்னை யோபிற பன்னுங் காலே.

  இது, மாதவத் திறைவர் மாமுது நிதியாகிய கன்மச் சேதவுபாய முடையார்க்கு நட்பும் பகையும் இல்லை யென்று ஞான சித்தாந்த வரிட்டம் கூறியது.

  1-3. உரை:- (பனுவலாட்டி……..தானே) பனுவலாட்டி தனி மனைக் கிழவர்- 1கலைமகளை நாவாகிய ஒப்பற்ற வீட்டிலே குடியேற்றி வைத்த ஞானவான்களுக்கு; மெய்ப்பட நாடின்- மெய்யாக விசாரிக்கில்; நட்பும் பகையும் யாவதும் இல்லை- மித்துருக்களும் சத்துருக்களு மென்று ஒருத்தரும் இல்லை;

  3-4. (ஆயினும்……………உளதே) ஆயினும்- ஆனாலும்; ஆய் விடை உடையது, உளது- விசாரிக்குமிடத்து இவர் உடையது எனற்கு ஒன்று சிறிது உண்டாதலுமாம்;

  4-5. (அஃதே……நட்பே) அஃது - 2அஃது யாதென்னில்; ஈன்றோர் பகைஞர்- 3இவரைப் பயந்த மாதாபி தாக்கள் சத்துருக்

  களும்; கீண்டோர் நட்பு- இவர் உடலைப் பிளந்தோர் மித்துருக்

  களுமாயி ருப்பர்; அஃது என்னென்னில்;

  6-7. (அருஞ்சிறை……………..உறுதியோரே) அருஞ்சிறை இடுநரின் இருஞ்சிறை விடுநரின்- 4நீங்கு தற்கரிய சிறையிலே இட்டோரினும் அப்பெரிய சிறையினின்றும் மீட்டோரினும்; யார் உறுதியோர்- யாரை மித்துருவாகக் கொள்வோம்:5

  7-9. (கீறி………………….துயக்கெனை) 1உடற்சிறை கீறி தவிர்த்த நலத்தகையாளர்- இத்தேகத்தைப் பிளந்து தேகமாகிய சிறை வாசத்தை யொழித்த நல்ல அழகையுடையோ ராகிய ஆசாரியர்; இவர்க்கு- இந்த ஞானவான்களுக்கு; கொடுத்தது மிசை நிலம்- 2கொடுத்தது நிலங்கட்கு மேலாகிய முத்தியன்றோ; துயக்கு எனை- அதற்காகத் துக்கப்படுவது என்னை;

  10-11. (உருவில்…………எவனோ) உருவில் ஓர் உயிர்க்கு- அருவமாயுள்ள 3ஓர் ஆன்மாவுக்கு; உடலுநர் உழைய ரென்று- சத்துருவும் மித்துருவுமென்று; இருவேறு உரைப்பதை எவனோ- இரண்டு வேறுபாடாகச் சொல்லவேண்டுவானேன்;

  11-15. (தெரிதரின்…………அல்லதை) தெரிதரின்- விசாரிக்கில்; கோடை தூற்றக் கூடிய 4ஊழிலை- மேற்காற் றடிக்கத் திரண்ட சருகிலை; வாடை- வாடைக்காற்றால்; வீற்று வீற்றாகி யாங்கு-5 சிதறினவாறு போல; செய்தியின் திரண்டு- பக்குவப்பட்ட கன்மபலத்தைப் 6புசித்தற்குற்ற காலத்து வேண்டு வாராகத் திரண்டு கூடிப் புசித்து; கையற- அக்கன்மபலம்7 அற்ற காலத்து; ஓரீஇயர் ஒக்கல் அல்லதை- பிரிந்து போனவர்கள் 8சுற்றத்தாரே யன்றோ; அல்லதூஉம்,15. மற்றும் கேண்மதி- இன்னமும் கேட்பாயாக;

  16-17. (தன்னணி………………பன்னுங்காலே) பன்னுங்கால்- சொல்லுமிடத்து; தன்அணி ஆகமும் அஃது எனின்- தன்னுடைய அழகிய தேகமும் கன்மபலம் புசித்தற் கேதுவாகக் 1கூடினதே யாகலான்; பிற என்னை- வேறு சிலரைச் சத்துருவும் மித்துருவு

  மென்று சொல்ல வேண்டுவது என்னை, எ-று.

  தான், ஏ, ஓ, மதி- அசை, 2ஓரீஇயர், வினைப்பெயர்.

  அகவல் 36

  ஞானவுபாயம் அறியாதாரின் தாழ்வு

  தொல்லை ஞாலத் தெல்லை நீங்கிய

  இருவகைத் தோற்றத் தொருவா வுயிர்கட்

  கிருவினை 3யொருவ மருவின் றாயிடை

  நொதுமலர் கவிகை நொதுமலர்க் கவிகை

  5 விதிமுறை மதிமலர் பெய்திக் கதுமென

  4யாமுடைத் தவருடைத் தாம னென்றினி

  தாமுறை யறியார் மாமதி பிறழ்ந்து

  செயலறு பறியார் மயலுற் றோரே

  அளியரோ வளியர் தாமே தெளியா

  10. இளையோன் 5றுரந்த குணில்வாய்ச் செல்லா

  திளையோற் சினவும் வளைவாய் ஞமலியின்

  அளியரோ வளிய ரென்னை

  ஒளிகொள் காரண முன்னா தோரே.

  இது, மேல், “ஒருவன் தொடுத்த இருவினையால்6” “தன்னணி யாகமும் அஃதெனல்7” குறித்துச் செயலறுதி யானமையின் ஞானவுபாயம் அறியாதாரைத் தாழ்த்திக் கூறியது.

  1-3. உரை: (தொல்லை……………ஆயிடை) தொல்லை ஞாலத்து இருவகைத் தோற்றத்து ஒருவர்- பழையதாய் வருகின்ற பிரபஞ்சத்திலே 1தாவரசங்கமமான இருவகைத் தோற்றத்தையும் விடாத; எல்லை நீங்கிய உயிர்கட்கு- அளவிறந்த ஆன்மாக்கட்கு; இருவினை ஒருவ- புண்ணியபாவ பலம் ஒருவ; 2மருவின்று ஆயிடை- புசிக்க வருவது இல்லையாகியவிடத்து;

  4-9. 3(நொதுமலர்…….தாமே) நொதுமலர்4 கவிகை- பிறர் தமக்குச் செய்த 5நன்மையும்; நொதுமலர்க்கவிகை- தாம் செய்த நன்மையும்; மதி மலர்பு எய்தி விதிமுறை- 6அறிவை 7விரித்துப் பார்த்துஊழ்முறையென்று புத்திபண்ணி; கதுமென- விரைவாக; யாமுடைத்து அவருடைத்தாம் மனஎன்று - 8நம்முடையது அவர்9 தந்தாரென்றும் அவருடையது நாம் 10கொடுத்தோமென்றும்; இனிது ஆம் முறை அறியார்- இனிதாக ஆகிற முறைமையை 11அறியாராய்; மாமதி பிறழ்ந்து- மகத்தாகிய 12அறிவு கெட்டு; மயலுற்றோர் - மயக்கத்திலே பொருந்தினோ ராதலால்; செயல் அறுபு அறியார் -13பிரபஞ்சத்திலே ஒருவர்க் கொருவர் செய்யும் 14சுக

  துக்கமில்லாமை 1அறியாதார்; அளியரோ அளியர்- 2அறிவில்லார் அறிவில்லார்;3

  9-13. (தெளியாது……………….உன்னாதோரே) தெளியா இளையோன் துரந்த குணில்வாய்ச் செல்லாது அறிவில்லாத பாலனொருத்தன் எறிந்த 4குறுந்தடியிடத்துச் செல்லாது; இளையோற் சினவும்- எறிந்த காரணத்தவனான அப்பாலனைக் 5கறுவி வெகுளும்; வளைவாய் ஞமலியின் அளியரோ அளியர்6-வளைந்த வாயையுடைய நாய்க்குள்ள அறிவுதானும் இல்லா மையின் அறிவில்லாதவர் அளிக்கத் தக்கார்; என்னை- என்னை யெனில்; ஒளிகொள் காரணம்- 7விசாரித்தவிடத்து மறைதலை யின்றிப் பிரகாசித்தலைக் கொண்ட பூருவ கன்ம பலமாகிய காரணத்தை; உன்னாதோர்- 8நினைத்தறியாதாராதலான் எ-று.

  அடுக்கு இழித்தற்பொருட்டு, மன்னும் ஓவும் அசை, ஏகாரம் தேற்றம்.

  அகவல்37

  ஞானசித்தாந்தவரிட்டப் பிரமாணம்

  அயிலரி யரலை விழுப்புண் ணெரிபழுத்

  தனல்கால் கோலிற் பன்முறை யடினும்

  பேரிடர் நீத்த பெருந்தகை யோனென்

  றார்வ நெஞ்ச மல்லதை யாரே

  5.  வேரங் கொண்டோர் 1வேறொ மாறெழுந்

  துடம்பிடி யுடறுணிப் படுப்பினும் விரையொடு

  மலைய சந்தும் வழுத்துங் கொண்டு

  தலையிற் பாதந் தாங்கினு முலையாப்

  பிறவிப் பிணிதணி 2யறவண ரிவரென

  6.  விளைவா வின்பம் விளைவி னல்லதை

  உளைவதை யுடையரோ விளைவுணர்ந் தோரே.

  இது “தொல்லைக் கென்னைகொல் அல்ல லென்னும் உள்ளத் துணர்ச்சியான்3” அசேதனவேது வன்றிச் சேதன வேதுவிலும் வரும் துக்கத்தைப் பார்த்துச் செற்றமும் சிநேகமும் கொள்ளா தொழிவதும் உண்டு என்று ஞான சித்தாந்த வரிட்டம் பிரமாண சாதகத்தாற் சொல்லியது.

  1-5. உரை: (அயிலரி………….வேறோ) அயில் அரி அரலை விழுப்புண்-4சத்திரத்தாலே அரியத் தகுந்த வருத்தத்தைச் செய்யும் 5பெரியபுண்ணை; எரி பழுத்து அனல் கால் கோலின்- நெருப்புப் பழுத்தாற் போலக் காய்ந்து அக்கினியைக் காலுகின்ற கோலாலே; 6பன்முறை அடினும்- பலகாற் சுடினும்; பேரிடர் நீத்த பெருந்தகையோன் என்று - இப்படிச் சுட்ட 7வைத்தியனை ‘என் மிக்க துக்கத்தைக் கெடுத்த பெருந்தகைமையுடையோன்’ என்று; நெஞ்சம் ஆர்வம் அல்லதை வேரங் கொண்டார் யார்- 8உள்ளத்தில் சிநேகங்கொள்ளுவதல்லது அவன்மீது செற்றங் கொண்டார் உண்டோ? வேறோ- இவனின் வேறோ தேகமாகிய கிரந்தியைச் சேதித்தவன்?

  5-8. (மாறெழுந்து…………தாக்கினும்) மாறு எழுந்து உடம்பிடி உடல் துணி படுப்பினும்- எதிரியாய் வந்து 1வாள் கொண்டு தேகத்தை இருதுணி யாக்கிவிடினும்; விரையொடு மலைய சந்தும் வழுத்தும் கொண்டு தலையில் பாதம் தாங்கினும் புட்டமுதலிய வாசனைத்திரவியங்களோடு 2மலையிலுண்டாகிய சந்தனத்தைச் சாத்தித் தோத்திரித்து தலையிற் பாதம் பொருந்த வணங்கினும் 3இவர் பிராரத்த கன்மம் தொலைத்தற் கேது வானோ ராதலால்;4

  8-11. (உலையா…………உணர்ந்தோரே) உலையாப் பிறவிப் பிணி தணி அறவணர் இவர் என- கெடாத பிறவித் துக்கத்தை ஒழித்த தருமவான்கள் இவர்கள் என்று; 5விளையா இன்பம் விளையினல்லதை- பெறுதற்கரிதாகிய 6பிரியத்தை இவர் களிடத்து கொள்வதல்லது; உளைவதை உடையகோ- செயற்றங் கொள்ளுவதை யுடையராவரோ? 7விளைவு உணர்ந்தோர்- மேல் வருவது முத்தி யென்று உணர்ந்தோர் எ-று.

  ஏ, அசை; ஒகாரம் இரண்டும் எதிர்மறை.

  அகவல் 38

  ஞானசித்தர் வரிட்டம்

  வையு ணீங்கப் பயன்பல 1பெருக்கக்

  கைதூ வாத செய்தி யோர்க்கும்

  பருவரல் 2வருவது துருவ மல்லதை

  வருவது நன்னய மற்றோ வறிவழிந்

  5.  தவல மாக்கட லழுந்தல் 3செயலிலென்

  றாசற வுணர்ந்த தீதி லாளர்

  மான்மதம் பளிதம் வார்நறுஞ் சாந்தந்

  தாண்முதற் பழிச்சுநர் தைவந் திடினும்

  செவிசுடூஉத் தகைய மொழிபல 4பயிற்றி

  6.  மயிரிற் 5றகைத்து வறுத்தெரித் திடிப்பினும்

  ஞான மாத்துலை சீர்புகுத் தாநா

  முனைப்பாற் செய்தி நகைப்பாற் பட்டென

  மூரன் முறுவ லல்லதை தேரின்

  உவகைக் கலுழ்ச்சியோ விலரே யிவரே

  7.  உரையிடை மறந்தனென் மாதோ வுவகை

  6இவர்க்கிட ரிலமென மனக்களி யோரே

  கலுழ்ச்சி தீங்கு செய்தியோர் நீங்கா

  நிரயத் தழுந்துதற் கேது வாயினம்

  எனவே யழிந்த நெஞ்சமொ டினைபாங்

  8.  கானார் பெயர்த்துமொன் றயர்த்தனென் 7யானே

  தொடுத்த வெவ்வினை யெவ்வள வுடைத்தெனக்

  கையற் றின்ன லெய்தலு முரியர்

  அன்னோ வீடித னூங்குமற்

  8றென்னோ நாடருங் கேள்விநெடி யோர்க்கே.

  இது, 1விளைவுணர்ந்தோர் செயலறுதியாலே யாவை யாவரால் தமக்கு வரும் நன்மைதீமைகள் அவையிற்றை 2ஊழால் வருவன வென்று அறிந்து பிரியாப்பிரியங் 3கொள்ளாதொழியும் ஞானசித்தர் வரிட்டம் கூறியது.

  1-4. உரை: (பையுள் ………..மற்றோ) பையுள் நீங்கப் பயன் பெருக்கக் 4கைதூவாத செய்தியோர்க்கும்- வறுமைத் துன்பம் நீங்குதற்காகப் பல பிரயோசனங் களும் உண்டாகவேண்டு மென்று கை யொழியாத 5முயற்சியுடையோர்க்கும்; பருவரல் வருவது 6துருவம் அல்லதை- மிடியாகிய துன்பமே வருவது ஊழ்முறைமையா னானால்; நன்னயம் வருவது மற்றோ- நல்ல இன்பம் வருவதும் அந்த ஊழானல்லது வேறொன்றாலாமோ?

  4-5. (அறிவழிந்து…………..அழுந்தல்) அறிவு அழிந்து அவல மாக்கடல் 7அழுந்தல்- அறிவுகெட்டுப்பெரிய துக்கமாகிய சாகரத்தில் அழுந்தாதே கொள்.

  5-6. (செயலில்………………தீதிலாளர்) செயல் இல் என்று 8ஆசற உணர்ந்த தீதிலாளர்- முன்செய்த கருமமல்லது ஒருவர்க் கொருவர் செயல் இல்லை யென்று குற்றமற அறிந்த நல்லோர்;

  7-10. (மான்மதம்………..இடிப்பினும்) மான்மதம் 9பளிதம் வார்நறுஞ் சாந்தம் தாள்முதல் பழிச்சுநர் தைவந்திடினும்- கத்தூரியும் கற்பூரமும் கொழுவிதாய நறுநாற்றத்தையுடைய சந்தனக் குழம்பும் பாதாதி கேசம் வரைத் தோத்திரம் பண்ணி னராகிச் சாத்தினாலும்; செவி கடூஉத் தகைய மொழி பல பயிற்றி- செவியிலே நாராசத்தைக் காய்ச்சி ஏற்றினாற் போன்ற இகழ்ச்சி வசனங்கள் பல சொல்லி; மயிரின் தகைத்து வறுத்து எரித்து இடிப் பினும்- மயிர்போல நுண்ணிதாக அரிந்து நெருப் பிலே யிட்டுச் சுட்டுப் பொரித்து அரிந்த புண்ணிலே வேல்கொண்டு குத்தினாலும்1;

  11-14. (ஞானமாத்துலை……………இலரே) ஞான மாத்துலை சீர் புகுத்து- இவ்விரண்டும் ஒக்க ஞானமென்னும் மகத்தாகிய தராசிலே2 சீர்தூக்கி; ஆநாம் முனைப்பாற் செய்தி நகைப்பாற்3பட்டென- என்னே என்னே! நாம் முற்பவர்த்திற் செய்த கன்மபலம் இப்பொழுது சிரிக்கும் பகுதியாயது என்று; மூரல் முறுவல் அல்லதை- சிறுமுறுவல் கொள்ளுவ தல்லது; 4தேரின்- ஆராயுமிடத்து; உவகை கலுழ்ச்சியோ இலர்-5 பிரியாப்பிரியம் கொள்ளுவதிலர்6;

  14-15. (உரையிடை……மாதோ) 7உரையிடை மறந்த னென்- ஆயினும் சொல்லுமிடத்தே நான் கூற மறந்தன சிலவுள;

  15-20. (உவகை……….ஆனாரே) இவர்க்கு உவகை- இவர்க்குப் பிரியமாவது; இடர் இலம் என மனக்களியோர்-8இவ் விரண்டுக்கும் விருப்பு வெறுப்பாகிய விதனமில்லோம் என மனக்களிப்பையுடை யோராதலும்; கலுழ்ச்சி- இவர்க்குத் துக்கமாவது தீங்குசெய்தியோர் நீங்கா நிரயத்து அழுந்துதற்கு ஏதுவாயினம் என- 1நமக்கு விதனம் பண்ணீனோர் 2சின்னாளில் ஒழியாத நரகத்தில் அழுந்துதற்கு ஏது வாயிருந்தோமென்னும் 3இத்தால்; அழிந்த நெஞ்சமொடு இனைபு ஆனார் இவர்- அழிந்த மனத்தோடே துயருடையராதலும் இவர் உரியர்4;

  20. (பெயர்த்தும்…………..யானே) பெயர்த்தும் யான் ஒன்று அயர்த்தனென்5- மற்றும் யான் ஒரு பொருளைக் கூற மறந்தேன்.

  21-22. (தொடுத்த…………..உரியர்) தொடுத்த வெவ்வினை எவ்வளவு உடைத்தெனக் கையற்று- அஃதாவது பந்திக்கப்பட்ட வெவ்விதாகிய பிராரத்த கன்மம் இன்னும் 6எவ்வளவு காலம் உடையதோ என்று மனமழிந்து; இன்னல் எய்தலும் உரியர்- துக்கப் படுதலும் உரியர்; ஆதலால்,23-24. (அன்னோ……….நெடியோர்க்கே) அன்னோ- ஐயோ; நாடரும் கேள்வி நெடியோர்க்கு- அறிதற்கரிதாகிய 7முத்தியுபாய விசாரத்தால் உயர்ந்தோர்க்கு; வீடு இதன் ஊங்கு மற்று எவன்- இவ்வனுபோகத்தின் மேற்பட்ட முத்தி8நெறி மற்றுயாதோ? எ.று.

  ஏகாரம் தேற்றம், ஓகாரம் முன்னது எதிர்மறை,ஓ, ஏ, மாது, ஆங்கு அசை.

  அகவல் 39

  நல்வினை நிகழ்ச்சி

  நஞ்சினி தருத்தினு நல்வினை மாட்சி

  வஞ்சமில் லோர்க் கமிழ்தா கற்றே

  நஞ்சம லயினி நாக முயர்த்தோன்

  வெஞ்சின வீமன் வீடிட வருத்தி

  5.  நாக நூக்க நாகரும் பெறாஅ

  ஆரமிழ் தன்றி 1யணங்குகொடு நடந்த

  பேரிசை யோனே 2பாரத மிசைக்கும்

  அன்னோ னவ்வை யருமுனி பணியிற்

  கன்னனைப் பயந்து நன்னதி யியக்க

  6.  அங்கர் கோனா யரசுதலை 3பணித்துப்

  பொங்குதிரை யாடப் புரவுப்பூண்டிசினே

  இது, “முனைப்பாற் செய்தி4” ஊழ்வலியால் நல்வினை நிகழுங்காலத்து வந்த தீமையும் நன்மையாம் என்று சொல்லியது

  1-2. உரை: (நஞ்சு……….அற்றே) நல்வினை மாட்சி 5வஞ்சம் இல்லோர்க்கு- 6நல்வினை மாட்சிமைப்படுதலால் அழிவில்லாதோர்க்கு; நஞ்சு இனிது அருத்தினும்- நஞ்சை இனிதாகப் புசிப்பிக்கினும்; அமிழ்தாகற்றே- அமிழ்தாகின்ற அத்தன்மை யாகவே முடியும், 7அஃது எவ்வாறென்னில்:-

  3-7. (நஞ்சமல்…….இசைக்கும்) வெஞ்சின வீமன் வீடிட- வெவ்விய சினத்தையுடைய வீமன் மரிக்கவேண்டுமென்று; நாகம் உயர்த்தோன்- நாகத்தைக் கொடியிலே யெழுதி யுயர்த்திய துரியோதனன்; நஞ்சு அமல் அயினி அருந்தி- 1நஞ்சு கலந்து சோற்றைப் புசிப்பித்து; நாகம்2 நூக்க - நாகலோகமாகிய பாதாள லோகத்திலே செல்லத் தள்ள; 3நாகரும் பெறாஅ அமிழ்தன்றி- நாகலோகத்திலுள்ள தேவரும் பெறுதற்கரிதாகிய நிறைந்த அமுதத்தைப் 4புசித்ததுவேயன்றி; அணங்கு கொடு நடந்த பேரிசையோன்- அவர் 5விவாகபூருவமாகக் கொடுத்த நாககன்னியையும் பாணிக்கிரகணம் பண்ணிக் கொண்டுவந்த 6பெரிய கீர்த்திமானானான்; பாரதம் இசைக்கும்- இது 7மகா பாரதத்திலே சொல்லியிருக்கிறது, காண்;

  8-11.(அன்னோன்………..பூண்டிசினே) அன்னோன் அவ்வை- அத்தன்மையனான வீமன் மாதாவாகிய குந்திதேவி; அருமுனி பணியின் சன்னனைப் பயந்து- அரிய தவத்தையுடைய துருவாசமாமுனிகள்8 பிரசாதித்த 9மந்திரத்தாலே கன்னனைப் பெற்று நன்னதி-10இயக்க வரநதியாகிய கங்கையாற்றிலே மிதவற்பேழையிலே வைத்துச்11 செல்லவிட; அங்கர் கோனாய -1துரியோதனனுக்குத் தோழனாய் அங்கதேச மென்னும் இராச்சியத்துக்குக் கர்த்தாவாய்2அங்கராசனென்று மகுடா பிஷேகம் பண்ணப்பட்டு; அரசு தலைபணிந்து 3பகையரசர் தன் பாதத் தில் வீழ்ந்து திறை செலுத்தப்பண்ணி; பொங்குதிரை யாடைப் புரவும் பூண்டிசின்- பெரிய சமுத்திரஞ் சூழ்ந்த 4வையகத்துக்கு 5உபாகரியென்னும் பெயரைப் பூண்டனன். எ-று.

  ஏ, முன்னது தேற்றம், பின்னது தெரிநிலை. இசின், அசை

  அகவல் 40

  தீவினை நிகழ்ச்சி

  அறப்பயன் றீனி னமிந்தே யானுங்

  கடுப்பா டெய்தல் விடுத்தோ வின்றே

  தக்க னெடுத்த முத்தீ முற்றத்

  தொக்க வானோ ருற்றதை பெரிதே

  5.  எயிறுந் துண்டமு முகனுங் கையும்

  அந்தியும் வாணியு மிந்துவு மெரியும்

  இடிப்பத் தக்கனி ருஞ்சிர மிழந்து

  தகர்ச்சிர மெடுத்துப் 6பிழைத்ததை யரிதே

  வாசவன் கோகில மாயினன் கேசவன்

  6.  1பேயா யகன்று தாயினன் கடிதே

  2இந்திர சித்தோ டியாளி வரருசி

  தத்திரம் 3பயின்றோர் தலைமையின் வழாஅர்

  வினைப்பய னுணர்ந்து வெல்வகை4 நாடித்

  தவத்திறம் படருங்காலை 5முகைத்தபு

  7.  கொம்மை வெம்முலை யிளையோட் கூடும்

  தன்மைய 6னன்றியு மருந்தினன் றணியல்

  அயில்புரை நெடுங்க ணம்பணைத் திரடோள்

  மயிலியற் சாயற் குயிலியற் கிளவிக்

  கலங்கழி மகளி ரையிரு றூற்றுவர்

  8.  மணந்தோன் மன்ன னுணங்க யாளி

  கூவற் றூண்டிய 7காதற் காசனி

  8ஆதிப் புலைச்சி யாகி மேதினி

  இன்னிசை யெழுவர்ப் பயந்தோ 9னீண்டே

  சிந்து நாடன் செயத்திர தன்முடி

  9.  இலங்கிலை வாளியி னிறுத்தோ னிற்ப

  நிலம்புக வெறிந்த 10தன்றலை தவம்புரி

  தந்தை தரைசே ரந்தரம் பெரிதே

  பாண்டவர் மரபி னாண்டகைக் குரிசில்

  சனமயன் வேள்விக் 11குருமுனி யுற்ற

  10. தன்மையு நன்மைய வன்றே விண்ணோர்

  மகுடம் புனைந்த நகுடன் பாந்தட்

  படிவங் கொண்டு படிசேர்ந் தனனே

  திருமணி வள்ளத் துயிர்மருந் 1துதவிற்

  றடப்படு தெண்ணீ ரானும்

  11. உடற்பகை யற்றா லுணருங் காலே.

  இஃது ஊழ்வலியால் தீவினை நிகழுங்காலத்து வந்த நன்மையும் தீமையாம் என்பது கூறியது.

  1-2. உரை: (அறப்பயன்………..இன்றே) அறப்பயன் தீரின் - பூருவ புண்ணிய கன்மம் புசித்தற்ற காலத்து; அமிழ்தே யானும் கடுப்பாடு எய்தல்- 2அமுதமே யாயினும் நஞ்சின் றன்மைத்தாதல்; விடுத்தோ இன்று- விட்டொழியுமதில்லை, அஃது எவ்வண்ண மென்னில்;

  3-4. (தக்கன்……….பெரிதே) தக்கன் எடுத்த முத்தீ முற்ற- 3தக்ஷப் பிரஜாபதியானவன் எடுத்துக்கொண்ட யாகம் முடித்தற் பொருட்டு; தொக்க வானோர் உற்றது பெரிது- கூடிய தேவர்கள் பட்ட அபசயம் பெரிதாகும்;

  5-8. (எயிறும்…………..அரிதே) 4அந்தி எயிறும் வாணி துண்டமும் இந்து முகனும் எரி கையும் இழப்ப-5ஆதித்தர் பன்னிருவருள் ஒருவன் பல்லும் 6வாணி மூக்கும் சந்திரன் முகமும் 7அக்கினி கையும் இழப்ப; தக்கன் இருஞ்சிரம் இழந்து தக்கன் தனது 8பெரிய தலை அறுப்புண்டிழந்த; தகர்ச் சிரம் எடுத்துப் பிழைத்தது அரிது- பின்பு சிவபெருமான் அனுக்கிரகத்தால் 1ஆட்டின் தலையைப் பெற்றுப் 2பிழைத்ததே அரிதாயிற்றுக் காண்;

  9-10.(வாசவன்…………கடிதே) 3வாசவன் கோகிலம் ஆகினன்- இந்திரன் குயிலாய்ப் பறந்து திரிந்தனன்; கேசவன் பேயாய் அகன்று கடிது தாயினன்- 4விட்டுணு பேயாய் நீங்கி கடிதாகத்தாவிச் சென்றான்;

  11-16. (இந்திரசித்தோடு…………….தணியல்) இந்திரசித் தோடு யாளி வரருசி -5இந்திரசித்தும் யாளியும் வரருசியுமாகிய இருடிகள் மூவரும்; 6தந்திரம் பயின்றோர் தலைமையின் வழா அர்- சாத்திரங்களெல்லாம் பயின்று தங்கள் முதன்மைத் தன்மையில் வழுவாதவராகி; 7வினைப்பயன் உணர்ந்து- தங்கட்குப் பூருவ கன்மபலம் வருவதை 8முன்பே அறிந்து; வெல்வகை நாடி -அதனை வெல்லும் உபாயம் காண்பாராய்; தவத்திறம் படருங் காலை- தவத்தைப்பூண்டு தேசரந்தரம் சஞ்சரிக்கிற காலத்திலே; 9முகைத்தபு கொம்மை வெம்முலை இளையோன் கூடும் தன்மையன அன்றியும் - (வரருசி) 10கோங் கரும்பை 11வீழ்த்திய திரட்சியும் விருப்பமுமுள்ள தனங்களை யுடைய 12இளையாளைக் கூடுதலாகிய தன்மையுடையனானதே யல்லாமலும்; தணியல் அருந்தினன்- சுராபானமும் பண்ணினான்;

  17-20. (அயில் ……………உணங்க) மன்னன் உணங்க - ஓர் அரசன் தேகம் விட்ட காலத்திலே; அயில்புரை நெடுங்கண்- வேலையொத்த நெடிய கண்ணையும்;அம்பணைத் திரள்தோள்- அழகிய மூங்கிலைப் போன்ற திரட்சியையுடைய தோளையும்; மயிலின் சாயல்- மயிலையொத்த சாயலையும்; குயில் இயல் கிளவி - குயில் போன்ற வசனத்தையுமுடைய அவன் மனைவியர் களாகிய; 1கலங்கழி மகளிர் ஐயிருநூற்றுவா- மங்கலவணியைக் கழித்த விதவைகள் ஆயிரவரை; 2மணந்தோன்- 3இந்திரசித்து முனிவன் 4பரகாயப் பிரவேசம் பண்ண வல்லவ னாதலாலே அவனுடைய தேகத்திற் புகுந்து கூடிக் காமவின்பம் கொண்டான்.

  20-23. (யாளி…………ஈண்டே) ஈண்டே- இவ்வண்ணமே; யாளி- யாளியென்பவனும்; காகற் காசனி- தன் சிநேகத்துக்கு இருப்பிடமானவளான; கூவல் தூண்டிய - தன்னாலே கிணற்றிலே தள்ளப்பட்ட; ஆதிப் புலைச்சி யாகி- பழைய சண்டாளப் பெண்ணாதலாலே அவளோடேகூடி; மேதினி இன்னிசை யெழுவர்ப் பயந்தோன்- இவ்வுலகத்திலே இனிய கீர்த்தியை யுடைய 5யோகநந்தன் முதலிய பிள்ளைகள் 6எழுவரைப் பெற்றான்7.

  24-27. (சிந்துநாடன்………..பெரிதே) சிந்து நாடன் செயத்திரதன் முடி இலங்கிலை வாளியின் இறுத்தோன் நிற்ப- சிந்து விஷயத்திற்குக் 8கர்த்தாவான செயத்திரதனுடைய தலையை விளங்கா நின்ற இலைபோன்ற அம்பாலே அறுத்த அருச்சுனன் இறவாதுநிற்க; தவம்புரி தந்தை நிலம்புக எறிந்த தன்தலை- இச்செயத்திரதன் பிதா வாகிய விருத்தக்ஷத்திரன் “என் மகன் தலையைத் தரையில் விழவிட்டார். தலை சின்ன பின்னப்பட்டுப் போகவேண்டு” மென்று 1சமந்த பஞ்சக மடுவின்கண்ணே நின்று தவசுபண்ண, அவ்வருச்சுனன் தனது அம்புச்சரத்தாலே அச்செயத்திரதன் தலையைத் தரையில் விழாதே கொடுசென்று அவன் (விருத்தக்ஷத்திரன்) கையிலேயிட, அந்தத் தலையைக் கண்டு அருவருத்துப் பூமியிலே விழ எறிந்த அவ்விருத் தக்ஷத்திரன் தலை; தரைசேர் 2அந்தரம் யாது- சின்ன மாய்த் தரையில் வீழ்ந்த அந்தரமாகிய தீமை பிரகாசமாய்ப் பெரிதானதன்றோ;

  28-30. (பாண்டவர் …………………அன்றே) பாண்டவர் மரபின் ஆண்டகைக் குரிசில் சனமயன் - பாண்டவர்மரபிலே ஆண்டகை மைக்குத் தலைமையான சனமேசய னென்னும் பெயரையுடைய இராசன்; வேள்விக் குருமுனி உற்ற தன்மையும் நன்மையது அன்றே- செய்கின்ற யாகத்திலே ஆசாரியாகினாய முனிவனைச் செய்த 3பிரமாதத் தாலே குருத்துரோகமான தன்மையும் நன்கு தெரிந்தனவல்லவோ;

  30-32. (விண்ணோர்………….சேர்ந்தனனே) விண்ணோர் மகுடம் புனைந்த 4நகுடன் - தேவர்கள் வணங்கும் இந்திரனாய் முடிசூட்டப்பட்ட நகுடன் என்னும் வேந்தன்; பாந்தள் படிவம்கொண்டு படிசேர்ந்தனன்- சத்த முனிவர்களைச் செய்த அவமதிப்பாலே 1பெரும்பாம்பின் வடிவுகொண்டு பூமியிலே வீழ்ந்தானன்றோ;233-35. (திருமணி………………..உணருங்காலே) திருமணி வள்ளத்து- அழகிய இரத்தினம் இழைத்த வட்டிலிலே; உயிர் மருந்து உதவிற்று -பிராணனுக்குக் காப்பாக அமிர்த சஞ்சீவியான மருந்து கூட்டித்தந்தாயினும்; அடப்படு தெண்ணீ ரானும்- காய்ச்சித் தெளிந்த குடிநீரேயாயினும்; உணருங்கால்- அறிவுடை யோர் விசாரிக்கு மிடத்து; 3உடற் பகை அற்று- உட லுக்குப் பகையாகும் 4அத்தன்மையை யுடைத்தன்றோ; எ-று.

  5ஆல், அசை, ஏகாரம், தேற்றம்.

  அகவல் 41

  பிராரத்த கன்ம சேதம்

  பழவினை 6பயின்ற பழுதின் றயின்று

  வருவினை தரூஉம் வாயி லறிவென்

  கபாடச் செந்தாழ் கடாஅவ விடாஅ

  துடைவ 7தாயி னொழியாப் பாசத்

  5.  தொல்லை வல்வினை துகடபு காட்சி

  செல்லா 8துறுமதற் கெல்லை யாதெனின்

  படைப்புப் பூண்ட வொருவர்க் கவையே

  துடைப்புப் பூணா வெனைப்பல திறத்த

  மண்ணை நல்லான் வயிறுதர வந்த

  6.  வெண்ணெ யொண்பால் புண்ணியக் குழம்பு

  மலைய சந்தின் கலைநவி லின்றுணி

  நறுநெய் வெண்டயிர் நலங்கே ழொண்படி

  மைந்தம னறுவிரைச் சந்தி னின்சே

  றாசா வாறு போல 1வாங்குப்

  7.  போகா தம்ம புராதன மாகந்

  தொடநனி நிவந்த கொடிநுடங் காரெயிய்

  வைவேன் முதல மண்ணிரும் பாதற்

  கைய மில்லாச் செய்தி யேய்ப்ப

  உள்ளத் துள்ளிய வுகுதற்

  குள்ளத் துள்ள றள்ளாமதி விரைந்தே.

  இது பிராரத்த கன்மம் 2ஞானவுபாயத்தாற் கழியாது, அதை அனுபவித்தே கழிக்கவேண்டுமென்று கூறியது.

  1-4. உரை: (பழவினை…………….உடைவது) பழவினை பயின்ற- பூருவகன்ம பலத்திற் பக்குவப்பட்டவற்றை; 3பழு தின்று அயின்று - குற்றமறப் புசித்தற 4வேண்டுமவையிற்றைக் குற்றமறப் புசித்து; 5வருவினை தரூஉம் வாயில்- 6சுயங்கன்மம் 7வரும் வழிக்குப் பரிகாரம்; கபாடம் 1அறிவு என் செந்தாழ் கடாவ விடாஅது உடைவது-2 நிறை யென்னுங் கதவைச் சிவ ஞான மென்னும் அழகிய தாழாலே 3யடைக்க அஃது4 ஐயமறக்கெடும் என்று ஆசாரியன் அருளிச்செய்ய:

  4-6. (ஆயின்…………யாதெனின்) ஆயின்- அங்ஙனமாயின்; ஒழியாப் பாசத் தொல்லை வல்வினை- விடாத பாசமாய்ப் பந்தித்துக் கிடந்த பழையவாகிய வல்வினைகள்; துகள்தபு 5காட்சி செல்லாது உறும்- 6குற்றமற்ற ஞானமில்லாததினாலே நீங்காத கன்மமாய் எண்பத்துநான்கு நூருயிர யோனிகளிலே செனித்தற்கு நிச்சயமுண்டாதலாலே; அதற்கு எல்லை யாது எனில்- 7அவையிற்றை யான் புசித்தறும் எல்லை யாது? இதற்குப் பரிகாரமில்லையோ என்றுநீ வினவில்;

  7-8. (படைப்பு………….திறத்த) படைப்புப் பூண்ட ஒருவர்க்கு- பூருவகன்மபலம் புசித்தற வேண்டுமென்ற இதற்கு இளைக்கவேண்டா, காண், 1புசிக்கைக்காக முன்பே செய்து கொண்ட கன்மத்தையுடைய 2ஒருவருக்கு; அவையே துடைப்புப் பூணா- 3அவையிற்றில் அவரால் அழிக்கப்படாதனவாய்; ஏனைப் பல திறத்த - எத்துணையோ வர்க்கம் உள; ஆதலால், பூருவ கன்மபலம் உள்ள துணையும் புசித்தே தீரவேண்டும் என்று அறிவாயாக;4 அஃது எங்ஙனமென்னில் அதற்குத் திட்டாந்தம்:-

  9-15. (மண்ணை…….புராதனம்) 5மண்ணை நல்லான்வயிறு தர வந்த- அழகையும் குணத்தையுமுடைய பசுவினிடத்6 துண்டாகி வந்த; 7நறுநெய் வெண்ணெய் வெண்தயிர் ஒண்பால் நலங்கேழ் ஒண்பொடி புண்ணியக் குழம்பு ஆகாவாறு போல- நறுநெய் 8வெண்ணெயாகாதவாறு போலவும், வெண்மையை யுடைய தயிர் இனிய பாலாகாதவாறு போலவும், அழகிய ஒளியையுடைய திருநீறு 9சாணிக் குழம்பாகாதவாறு போலவும்; மைந்து அமல் நறு விரைச் சந்தின் இன்சேறு- 10அழகு நிறைந்த நறுநாற்றத்தையுடைய இனிய சந்தனக்குழம்பு; கலை நவில் மலைய சந்தின் இன்துணி- 1சாத்திரங்களிலே புகழ்ந்தோதப் பட்ட பொதிகைமலையில் உண்டான நறிய சந்தனக் குறடு; ஆகாவாறு போல- ஆகாதவாறு போலவும்; ஆங்கு புராதனம் போகாது- அச்சரீரத்தில் பிராரத்தமாகி வந்த பூருவகன்மம் 2புசித்தல்லது தீராது3.

  15-20 (மாகம்…………..விரைந்தே) மாகம் தொடநனி நிவந்த கொடிநுடங்கு 4ஆரெயில் முதல்- சுவர்க்கத்தைக் கிட்ட மிகவுயர்ந்த கொடியசையும் சிறந்த மதில் முதலாக வுள்ளன; மண் ஆதற்கு - மண்ணாதற்கும் 5வைவேல் முதல் இரும்பாதற்கும்- கூர்மையுடைய வேல் முதலாகவுள்ளன இரும்பாதற்கும்; ஐயமில்லாச் செய்தி யேய்ப்ப- 6ஐயமில்லையாம், அச்செய்தியை யொப்ப; 7உள்ளத்து உள்ளிய உகுதற்கு- முற்ப வங்களிலும் 8இப்பவத்தில் 9சற்குருகடாக்ஷிப்பதற்கு முன்பும் யான் எனதென்று அகங்கரித்துக் கொண்டு 1புத்திதத்துவத் திலே பந்தித்துக் கிடந்த கன்மம் நீங்குவதற்கு; உள்ளத்து உள்ளல் விரைந்து தள்ளுமதி- 2மனத்தால் ஆர்ச்சித்து அகங்கரித்துக் கொள்ளுமதை உபதேசத்தாலே விரைய அறிந்து விரத்தி கொண்டு கன்மச்சேதம் பண்ணிக்கொள்க3 எ-று.

  இது 4பக்குவப்படாதே கிடந்து கன்மச்சேத வுபாயத்தாலே நீங்கும் கன்மத்திற்குத் திட்டாந்தம்.

  5ஆகாவாறு போல என்பதை எங்குங் கூட்டிக்கொள்க அம்ம, மதி- அசை.

  அகவல் 42

  ஞானசித்தரின் அந்தரங்க வேறுபாடு.

  மறைமுறை யுணர்ந்த வறிவின் கிழவரும்

  மம்ம ரெய்திய மடவ மாந்தருங்

  கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயங்

  களிபடு காமத் தளிதலை மயங்கிய

  5.  தகுதியல்லது பகுதி யின்றெனிற்

  கேளினி வாழி கெடுகநின் னவலங்

  கொய்தளி ரன்ன குலக்கோ மளத்தை

  மெய்யுற முயங்கி விடனா யினனே

  கொம்மை வெம்முலைத் தன்மகட் டழீஇ

  6.  1அம்முலை நல்கிய யாயென வுவந்தனன்

  மற்றுங் கேண்மதி முட்டாட் டாமரை

  நுண்டாது பொதிந்த 2செந்தோ டன்ன

  செங்கை கொங்கைக் கருங்கண் டைவர

  மைந்த னென்ன மனமகிழ் புருகிப்

  7.  பெருவரை கான்ற சிறு வெள்ளருவியிற்

  சொரித லானா பாலே யவையே

  ஆடவன் வருட வறிவுபிறழ் வெய்தி

  3மெய்புகு வன்ன கைகவர் முயக்கமொடு

  இன்ப வெள்ளத் தன்பியைந் தாஅங்

  8.  4கறங்கரை நாவி னான்றோ ருள்ளஞ்

  சிறந்தன்று மன்னோ தெரியுங் காலே.

  இது ஞானசித்தர்க்குப் பாகிய வேறுபாடில்லை யாயினும் 5அபியந்தர வேறுபாடு உண்டென்று சொல்லியது.

  1-5. உரை: 6மறைமுறை அறிந்த அறிவின் கிழவரும் - ஆகமத்திற் சொல்லுகிற முறைமையை யறிந்த 7ஞானவான்களும்; 8மம்ம ரெய்திய மடவமாந்தரும்- மயக்கமுறுகிற அஞ்ஞானிகளும்; கைதொடல் கண்படை வெய்துறு பெரும் பயம் களிபடு காமத்தளி- ஆகாரம் நித்திரை நடுக்கம் பொருந்திய பெரிய பயம் ஸ்திரீபோக 1மயக்கத்தைத் தரும் மைதுனமென்ற இவையிற்றில் அளியராய்; தலைமயங்கிய தகுதி அல்லது பகுதி இன்று எனில்- தலைத்தலை மயங்கும் முறைமை அல்லது அவ்விருவருக்கும் வேறுபாடு கண்டதில்லை யென்னில்;

  7. (கேள்............அவலம்) கேள்- கேட்பாயாக; இனி  நின் அவலம் கெடுக- இனி நின் அஞ்ஞானம் கெடக் கடவதாக;

  7-8. (கொய்தளிர் ………….விடனாயினனே) கொய்தளிர் அன்ன குலக் 2கோமளத்தை- கொய்யப்பட்ட மாந்தளிரை யொத்த நல்ல வங்கிசத்திலே பிறந்த இளமையையுடைய மனைவியை; 3மெய்யுற முயங்கி விடனாயினனே- சரீரத்திலே பொருந்தப் பரிசித்து விடய பரனாயினா னொருபுருடன்;

  9-10. (கொம்மை………….உவந்தனன்) 4கொம்மை வெம்முலை தன்மகள் தழீஇ- திரட்சியையுடைய விரும்பப்பட்ட முலையையுடைய தன் மகளைத் தழுவி; அம்முலை நல்கிய யாய் என- 5அழகிய தனங்களாலே பாலைத் தந்து வளர்த்த தாயே என்று; உவந்தனன்- 6பிரியமானவாறு போலவும்;7

  12. மற்றும் கேண்மதி - இன்னமும் கேட்பாயாக;

  11-16. (முட்டாள்………பாலே) முள்தாள் தாமரை நுண்தாது பொதிந்த செந்தோடு அன்ன 8செங்கை- முள்ளுண்டான தண்டினையுடைய தாமரையின் நுண்ணிய தாது பரந்த செவ்விதழைத் தன்மகனான குழவியின் 9செங்கை; கொங்கைக் கருங்கண் தைவர- முலையின் கரிதாகிய கண்ணைத் தடவ; மைந்தன என்ன மனம் நெகிழ்பு உருகி- தாய் தன் மகனென்று மனம் நெக்குருகுதலால்; பெருவரை கான்ற சிறுவெள்னருவியின்- பெரிய மலையினின்றும் விழப்பட்ட நுண்ணிய வெள்ளருவி போலே; பால் சொரிதல் 1ஆனா - அம்முலைகள் பால் சொரிதலை அமையாதனவாயிருந்தன;

  16-19; (அவையே …………இயைந்தாங்கு) அவையே- அத் தன்மைய வான முலைகளையே; ஆடவன் வருட- அவள் நாயகனான புருடன் வருடிய வழி; அறிவுபிறழ் வெய்தி- 2அறிவுமயங்குதலின்; மெல்புகுவன்ன கைகவர் முயக்கமொடு- 3இருவரும் ஒருவர் சரீரத்துள் ஒருவர் சரீரம் புகுந்து ஒன்றாயின் தன்மை போலக் 4கையாற் கவர்ந்து இறுகத் தழுவிக் கொள்ளும் முயக்கத்தோடே; 5இன்பவெள்ளத்து அன்பு இயைந் தாஅங்கு காமவின்பமாகிய போக சமுத்திரத்திலே அன்பால் கலந்து அழுந்தின 6தன்மைபோலவும்;

  20-21. (அறங்கரை………தெரியுங்காலே) 7அறங்கரை நாவின் ஆன்றோர்- 8தருமத்தையே வசனிக்கின்ற நாவையுடைய ஞானவான்கள்; உள்ளம் தெரியுங்கால்- உள்ளத்தேயிருக்கும் படியை விசாரிக்குமிடத்து; சிறந்தன்று- 9அந்தக் கரண சுத்தியால் வேறுபட்டிருக்கும், எ-று.

  என்றது, 1ஞானவான்களின் உள்ளமானது விசாரிக்கு மிடத்து அவரது அந்தக் கரண சுத்தி பிறர்க்குத் 2தெரிய வாராது வேறுபட்டுக் காண இருப்பது என்றவாறு.

  வாழி, ஏ, மதி, மன், ஓ, அசை,

  அகவல் 43

  ஞானவான்களின் அந்தரங்க சுத்தி

  அரும்பவிழ் கழுநீ ராயித ழன்ன

  கருங்கய னெடுங்கண் விடங்கிளர் வாளியர்

  முடங்குமதி யணிந்த முழுநீர் முத்தின்

  நுடங்குநுத லிளவே ரிடங்கெட வணிய

  5.  ஒடுங்குநிமிர் புருவக் கொடுஞ்சிலை துரப்பினும்

  சுரும்புதுரந் தமைத்த திருந்து மலரமளிப்

  பருந்துபசி தணிக்குந் திருந்திலை நெடுவேல்

  மைந்துடை மைந்தன் சிந்தை கனற்றக்

  கன்றிய தின்றெனிற் காம மின்றே

  6.  3அதனால், அகாம னன்றே நாம வேலோன்

  முட்புற முதிர்கனிப் பொற்சுளை மைக்கொள்

  கதலித் தீங்கனி யிதலூன் பொரியல்

  வாளைப் பீலி 4மீளிக் கயற்றுணி

  கறிச்சேறு கமழு மறிக்கோ ழூன்றுவை

  7.  பீலி முருந்தி னிவந்த சாலி

  வெண்சோறு குவைஇய குன்றிற் றண்டா

  நறுநெய் யருவியி 5 னிரிய வெள்ளயிர்க்

  குறுமுறி 1யடுக்கிய நெடுமாக் கோட்டினும்

  மண்ட மரட்ட 2வலிகெழு திணிதோள்

  8.  உண்டி விருப்பி 3லொருவ னின்றும்

  கண்டன னேனுங் கொண்ட தெனுளத்தே

  உள்ளந் 4தெள்ளாத் தெள்ளிய காட்சியொ

  டுள்ளவும் படுவ துளதோ வள்ளிய

  கங்கைப் பேரியாற்றுப் பொங்குதிரைத் தீநீர்

  9.  ஒன்றொழி பின்றிச் சென்றளப் பரிய

  தேருக் குன்றச் சிகர நீர

  மண்கொடு மறலி வடிவாய்க் கணிச்சிக்

  குண்பய னுதவு காறும் பண்பட

  மாசற 5மண்ணினு மாசற நிவந்த

  10. உள்ளமு முளதுகொ லுரவ வொள்ளிய

  ஞானப் பாணி வானத் துறைஞரும்

  விழையும் 6விழைவிலென் றுகடீர் மாமண்

  7அறிவர லவா அச் செறிமல வுவர் நீர்

  மன்றன் மாசற மண்ணல்

  11. என்றன ரம்மல மொன்றி லோரே.

  இஃது இன்னும் ஞானவான்களுக்கு அந்தரங்க வேறுபாடும் அந்தரங்க சுத்தியும் உண்டென்று சொல்லியது.

  1-2. உரை: (அரும்பு …………..வாளியர்) அரும்பவிழ் கழுநீர் 8ஆயிதழ் அன்ன- 9அரும்பி யலர்ந்த செங்கழுநீர்ப் பூவின்1மெல்லிய இதழ் போன்ற நிறத்தையும்; 2கயல் கரு நெடுங் கண்- கயல் மீன் போன்ற பிறழ்ச்சியையுடைய கரிய நெடிதாகிய 3கண்ணென்னும்; விடம்கிளர் 4வாளியர்- 5விடம் தீற்றப்பட்ட 6அம்பையுடைய மாதர்கள்;

  3-4. (முடங்கு………..அனிய) முடங்குமதி அணிந்த- முடங்கியிருக்கப்படாநின்ற இளம் பிறையிலே; முழுநீர் முத்தின்- 7முழுத்த நீர்மையையுடையமுத்தை நெருங்க அணிந்தாற்போல; நுடங்கு நுதல் இளவேர்- நுடங்கிய நெற்றியிலே வேர்வைத் துளியானது; இடம் கெட அணிய- 8இனி இடமில்லை என்னும் படிக்கு நெருங்கப் பொடிப்ப;

  5.  (ஒருங்கு……….துரப்பினும்) ஒடுங்கு நிமிர்புருவம் - பக்கத்தே ஒடுங்கி உயர்ந்த புருவமாகிய; கொடுஞ்சிலை 9துரப்பினும்-வளைந்த சிலையிலே இந்தக் கண்ணென்னும் அம்பை ஏறிட்டெய்தாலும்;

  6-10. (சுரும்பு ………..அன்றே) சுரும்பு துரந்தமைத்த- வண்டுகளைத் துரந்து அமைக்கப்பட்ட; 10திருந்துமலர் அமளி- திருத்தமாகிய புட்ப சயனத்திலே; 11பருந்து பசி தணிக்கும் திருந்து இலை நெடுவேல்- பருந்து முதலாகிய பறவைகளினுடைய பசியைக் கெடுக்கும் திருந்திய இலைவடிவாகிய நெடிய வேலையுடைய; மைந்துடை மைந்தன்- 1அதிபலம் பொருந்திய இராசகுமாரன்; 2சிந்தை - முன்போகம் கொண்டதனாலே காமவிகாரம் தீர்ந்த மனதானது; கனற்றக் கன்றியது இன்றெனில் -3காமாக்கினியினாலே வெந்து கன்றியதில்லை யாயின்; காமம் இன்று- அவனுக்குக் காமவிதனமில்லை; அதனால்- ஆதலால்; அவன் 4அகாமன் அன்றே- அவன் அகாதனல்லவோ? அது வன்றியும்.

  10-21. (நாமவேலோன்………..உளத்தே) நாமவேலோன்- அச்சத்தைச் செய்யும் வேலையுடைய புருடன்-; 5முட்புற முதிர் கனிப் பொற்சுளை -6முள்ளைப் புறத்தேயுடைத்தாய் முதிரப் பழுத்த பொன்னிற முடைத்தாகிய பலாச்சுளையும்; மைக்கொள் கதலித் தீங்கனி- 7கருவாழையின் இனிய 8பழமும்; 9இதலூன் பெரியல் -கவுதாரி மாங்கிசப் பொரியலும்; வாளைப் பீலி- வாளைமீனின் 10உட்பீலியும்; மீளிக் கயல் துணி- இளங்கயல் மீன் துண்டமும்; கறிச்சேறு கமழும் மறிக்கோழ் ஊன்துவை- மிளகின் குழம்பு மணங்கமழும் 11செம்மறிப் புருவையின் கொழுத்த மாங்கிசத்தின் 12ஆணமும் ஆகிய இவை கறியாக; கறியாக; 13பீலி முருந்தின் நிவந்த சாலி வெண்சோறு குவைஇய குன்றின்- பீலியடியை ஒத்த உயர்ந்த செந்நெல்லினாலான வெண்சோறு குவித்த 1குவையிலே; தண்டா நறுநெய் அருவியின் இரிய- குறையாதே சொரியப்பட்ட நறு 2நெய்யானது அருவி போலே இழிந்தோட; 3வெள்ளயிர்க் குறுமுறி அடுக்கிய நெடு மாக் கோட்டினும்- 4அந்த நெய்யைத் தடுக்க வெள்ளிய கண்ட சருக்கரைக் கட்டியை அடுக்கிய உயர்ந்த பெரிய கரைசெய்த விடத்து முன்பே 5திருத்திவரவுண்டு; உண்டி விருப்பு இல்- புசிப்பிலே விருப்பமில்லாத; மண்டு அமர்அட்ட வலிகெழு திணிதோற் 6ஒருவன்- மண்டுகிற 7போரிலே வென்ற வலி பொருந்திய திணிந்த தோளையுடைய ஒருவனாகிய புருடன்; இன்னும் கண்டனனேனும்- இவை யன்றியே யின்னும் இரசவர்க்கங்கள் 8பல கண்டானாயினும்; உளத்தே கொண்டது 9என் -ஏதேனும் ஆசை கொளவருமோ, சொல்;

  22-23. (உள்ளம் - உளதோ) உள்ளம் தெள்ளா- 10இவ்விரு திறத்தாரையும் போல ஞானவான்கள் கரணவறிவு காணாத; தெள்ளிய காட்சியொடு- 11சிவபோகத்தைப் புசித்திருக்கிற தெளிந்த சிவஞானக் காட்சியால்; 12உள்ளமும் படுவது உளதோ -விடயபோகங்களைச் சிறிதும் சிந்திப்பதுண்டோ?

  ஆகவே, அவர்களுக்கு 1அந்தரங்கத்திலே வேறுபாடு உண்டு காண்.

  23-30. (வள்ளிய…..உரவ) வள்ளிய கங்கைப் 2பேரியாற்றுப் பொங்குதிரைத் தீநீர்- வளப்பமுடைய 3பெரிய ஆகாய கங்கையாற்றைப்போல மிகுந்த திரையையுடைத்தாகிய இனிய 4சுத்த சலசமுத்திர நீரிலே; சென்று அளப்பரிய மேருக்குன்றச் சிகர நீர மண்கொடு- மனத்தாலும் நோக்கி அளவிடுதற்கரிய மகா மேருமலைச் சிகரவுயரத்தின் 5நீர்மையையுடைய 6மண்ணை யிட்டு; 7ஒன்று ஒழிபின்றி- சிறிதும் ஒழியாதே கொண்டு; மறலி வடிவாய்க் கணிச்சிக்கு உண்பயன் உதவுகாறும் -காலன் போந்து வடித்த வாயையுடைய மழுவுக்கு இரையாகத் தங்கள் பிராணனைக் 8கொண்டு கொடுக்கு மளவும்; 9பண்பட மாசற மண்ணினும்- 10அமைய விருந்து புறம்பே அழுக்குப்போகச் சுத்தி பண்ணினாலும்; 11ஆசற நிவந்த உள்ளமும் - குற்றமறவோங்கிய உள்ளந்தானும்; உளதுகொல்- அஞ்ஞானிகட்கு உண்டாகவற்றோ; உரவ- அறிவுடையோனே 12கூறுவாயாக;

  30-35. (ஒள்ளிய…………..ஒன்றிலோரே) ஒள்ளிய ஞானப் பாணி- அழகிய ஞானமாகிய நீரைக் கொண்டு; 13வானத் துறைஞரும் விழையும் விழைவில் என் - தேவர்களும் விரும்பு கின்ற அவா வின்மையென்னும்;1துகள்தீர் மாமண்-குற்ற மற்ற மகத்தாகிய மண்ணையிட்டு;2 அறிவு அறல் 3செறிமலம் - அஞ்ஞான மாகிய திணிந்த நிபிடமலமும்; 4அவாஅ உவர்நீர்- அவாவாகிய மூத்திரமும் என்னும் இரண்டு நாற்றத்தையும்; மாசற மண்ணல் 5மன்றல் என்றனர்- மாசறச் கழுவுதலே பரிமள மாகிய ஆன்மசுத்தியாவதென்று அருளிச்செய்தனர்; அம்மலம் ஒன்றிலோர்- அந்த மலம் 6ஒன்றுதல் இல்லாத பெரியோர்கள். எ-று.

  இதில், சுத்தசல சமுத்திரத்திற்கு ஆகாய கங்கையைத் திட்டாந்தங் கூறுதலென்னெனில், அறுபத்து நான்கு நூறாயிரம் யோசனை அகலத்துடனே ஏழுதீவையும் சுற்றியிருக்கும் 7சுத்த சல சமுத்திரத்தினும் ஆகாய கங்கை மிகுதியான படியா லென்க. இதனை “எண்டரு மண்ட மென்னும் 8கிரியாபாதத் திருவகவலுட் காண்க.

  அம்மலம், அ, பண்டறிசுட்டு , கொல், ஐயம்.

  அகவல் 44

  ஞானயோகியரின் போகநிலை

  கறையணற் கட்செவிப் பகுவாய்ப் பாந்தட்

  கடுவொடுங் கெயிற்றின் வடுவுறக் கிழித்துங்

  கிழியாப் பண்பிற் றன்றே யுறையுடன்

  மதியொடு புணர்ந்த மறையி னோர்க்கே

  5.  செழும்பெரும் பொய்கைக் கொழுந்துவிடு புயரிய

  முட்டாட் டாமரைக் கொழுமட லகலிலை

  அப்புன றொத்தாத் 1துப்பு மெய்ப்படு

  மந்திர மருந்தின் மைந்தின் வெந்திறற்

  காரிகை தொடினும் பேரிட ரின்றே

  6.  கரைபாய்ந்து கலித்த பெருநீ ருவரித்

  தோன்றிவாழ் தொழில வாயினு மயிலை

  தீஞ்சிவை யுப்பிற் சிவணா தாங்கு

  ஞான மாக்கழல் 2மாணுற வீக்குநர்

  விடய வேலைத் தடையின்று படியினும்

  7.  தீதொடு படியுந ரல்லர்

  மாதுயர் கழியுநர் நீதியானே.

  இது ஞானவான்கள் எல்லாப் போகங்களுடனே கூடியிருந்தாராயினும் ஞானவிசேடத்தானே அந்தரங்க வேறு பாடுடைய ரென்றும், அறையிற்றிற் பற்றிலரென்றும் கூறியது.

  1-4 உரை: (கறையணல்……………மறையினோர்க்கே) மதியொடு புணர்ந்த 3உறையுடன் மறையினோர்க்கு- அறிவோடே கூடிய ஒளடத்ததாலும் மந்திரத்தாலும் பரிகாரமுடையோர்க்கு; 4கட் சவி - கண்ணாற் காணுந் தூரம் கேட்கவற்றான செவியையும்; 5கறையணல்- அணரியிலே கறையையும்; பகுவாய்ப் பாந்தள்- பெரிய வாயையு முடைய பாம்பின்; 6கடு ஒடுங்கு எயிற்றின் வடுவுறக் கிழித்தும்- 1நஞ்சு அடங்கப் படாநின்ற பல்லாலே வடுவுண்டாகக் 2கடித்தாலும்; 3கிழியாப் பண்பிற்று ஆங்கு- தீண்டாத இயல்பான இத்தன்மை போலவும்;4

  5-7 (செழும்பெரும் ………………..துப்பும்) செழும்பெரும் பொய்கை- 5செழுமையும் பெருமையுமுடைய பொய்கையிலே; 6உயரிய கொழுந்து விடுபு- உயரக் கொழுந்துவிட்டு; முள்தாள் தாரமரைக் 7கொழுமடல் அகல் இலை- 8முள்ளைத் தாளிலே யுடைத்தாகிய தாமரையின் 9செழுமையாய் அகன்ற மடலிலையில்; அப்புனல் 10தொத்தாத் துப்பும் ஆங்கு- அந்த நீர் 11தொத்தாத பொலிவு போலவும்;

  7-9. (மெய்ப்படு…….இன்றே ) மெய்ப்படு மந்திரம் மருந்தின்- உண்மையாகி மந்திர சத்தியாலும் ஒளடத சத்தியாலும்; மைந்தின் வெந்திறல் 12காரி கைதொடினும்- மிக்க வெவ்விய வலியையுடைய நஞ்சினை 13யருந்தினாலும்; பேரிடர் இன்று ஆங்கு- பெரிய துக்கமில்லாதவாறு போலவும்;

  10-12. (கரை ……………ஆங்கு) கரைபாய்ந்து கலித்த பெரு நீர் உவரி- கரையைப் பொருது சந்திக்கின்ற பெரு 1நீராகிய லவண சமுத்திரத்திலே; தோன்றி வாழ்தொழில் வாயினும்- செனித்து அதிலே வளரும் தொழிலையுடையவாயினும்; மயிலை 2தீஞ்சுவை உப்பின் சிவணாதாங்கு- மீன்கணம் இனிய 3ரசத்தைச் செய்கின்ற உப்போடு கூடாதவாறு போலவும்;

  13-16. (ஞானமாக்கழல்………….நீதியானே) ஞானமாக் கழல் மாணுற 4வீக்குநர்- ஞானமாகிய மகத்தாகிய வீரக்கழலை 5அழகுண்டாகக் கட்டினோர்; 6விடய வேலை தடையின்று படியினும்- 7கரையில்லாத விடயபோகமாகிய சமுத்திரத்திலே மூழ்கினும்; தீதொடு படியுந ரல்லர்- தமக்குக் குற்றமாகிய பந்தபாசத் தொடக்குறுவாரல்லர்; நீதியான் மாதுயர் கழியுநர் - முறைமையினாலே 8நித்திய நோயைப் புசித்துக் கழித்தலை யுடையோராவர், இத்துணையே எ-று.

  நித்தியநோய், பிரார்த்த கன்மம், ஆங்கு என்பது எல்லா விடத்தும் கூட்டப்பட்டது. ஒடு, அன்றே, அசை.

  அகவல் 45

  ஞானவான்களின் ஞானப்பிரகாசம்

  பூக்கமழ் பாணி நோக்கரு நாரங்

  கதிர்வா யருந்தியுங் கறையொடு படாஅ

  அருணன் போலவு மிருணிறம் புரையும்

  அகரு மாரமு நுகருத ருலர்பவும்

  5.  தீண்டத் தகா அக் காண்டகு 1திறத்தவும்

  புகைக்கொடி யெடுத்து வளைத்துடன் பருகித்

  துகள்படக் கடந்துந் துகளற் றோங்கும்

  அவிரொளி யுதாசனற் பொருவியு மிருவினை

  விடயத் தழுந்தியுஞ் 2சுடர்ப

  6.  அறிவனற் 3கெழீஇய நெறியி னோரே.

  இஃது ஆதித்தனும் அங்கியும் நல்லவையிற்றையும் தீயவையிற்றையும் புசித்தும் குற்றமில்லாதவாறு போல, ஞானவான்கள் செயலறுதி யுணர்ந்தபடியாலே பந்த வேதுவாய பதார்த்தங் களுடனே கூடி நிற்பினும், அவர் அவையிற்றை ஞானவனலாலே 4தகித்துப் பிரகாசிப்பர் என்று கூறியது.

  1-3. உரை: (பூக்கமழ்……..போலவும்) பூக்கமழ் பாணி- பூக்களால் வாசனையுடைத்தான நீரையும்; 5நோக்கரு நாரம்- நோக்கு தற்கரிதாகிய 6அசுத்தப் பள்ளத்தின் நீரையும்; கதிர்வாய் அருந்தியும்- கதிரென்னும் வாயாலே மாந்தியும்; 7கறையொடு படாஅ அருணன் போலும்-தனக்கு ஒரு தோடமுமில்லாத ஆதித்தனைப் போலவும்;

  3-8. (இருள்…………..பொருவியும்) இருள் நிறம்புரையும் 1அகருவும் ஆரமும்- இருளின் நிறத்தையுடைய அகிலும் சந்தனமும்; நுகருநர் உலர்பவும்- 2உண்டாரை மரிக்கப் பண்ணும் நஞ்சு வர்க்கமும்; காண்தகு தீண்டத் தகாத் திறத்தவும்- கண்ணாலே தரிசிக்கும் வர்க்க மாவதல்லது தீண்டு தற்காகாத 3காஞ்சொறி முதலான பதார்த்தமும்; 4புகைக் கொடி எடுத்து உடன் வளைத்துப்பருகித் துகள்படக் கடந்தும்- புகையென்னும் கொடியை எடுத்துக் கூடவளைத்துப் பருகிக் கொண்டு துகளாக ஆகருஷித்தும்; துகள் அற்று ஒங்கும் அவிர் ஒளி 5உதாசனற் பொருவியும்- தனக்கொரு குற்றமற்று ஒங்கும் விட்டு விளங்கா நின்ற ஒளியையுடைய அக்கினியைப் போலவும்;

  8-10. (இருவினை………..நெறியினோரே) இருவினை விடயத் தழுந்தியும்- பாவபுண்ணிய கன்மங்கட் கேதுவாகிய விடயங்களிலே மூழ்கினும்; 6அறிவனல் கெழீஇய நெறியினோர்- 7ஞான வனலாலே கன்மச்சேதம் பண்ணின முறைமையை யுடையோர்; 8சுடர்ப- அவையிற்றிற் பந்திக்கப்படாத ஒளிக்கிட மாக விளங்குவர், எ-று.

  9பொருவியும், எச்சத்திரிபு, ஏ, அசை,

  அகவல் 46

  பந்த மோக்ஷ காரணம்

  கரைகாண் கல்லாக் கற்பனை யளக்கர்

  வரைபொரு திரையின் மடிந்தோர் தகுதியும்

  மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும்

  நொடியக் கேண்மோ வொடியா வாய்மைப்

  5.  பார்ப்பன வாகை சூடித் தீத்தொழில்

  ஒரு மூன்று வளர்த்த வருமறை நாவின்

  வேள்வி யெடுத்த கேள்வி யாளன்

  மனத்தின் மாண்டன்று மாதோ 1பிறந்தை

  இனத்தின் மாண்டோ ரீடே வேள்வி

  6.  ஆசான் முதலிய வத்தொழின் முடிமார்

  தேசொடு நிவந்திசிற் பெரிதே யுள்ள

  மாசறக் களைவோர் மாண்பே வேறு

  2தினகரற் றொழிலுமுண் டவனே தனாஅது

  விரிகதிர் பரப்பி விசும்பு 3செலற் காலைப்

  7.  பெரிதுவந் திசினோர் பலரே யுவவாது

  துனிகூர்த் திசினோர் நனிமிகப் பலரே

  அவரே, இன்ன ராயினுந் தம்முறை யிதுவென

  உன்னா தேகு மன்னோன் போன்றும்

  அரும்பா வியரே மன்ற கரும்பின்

  8.  சிலைபொழி கணைபல தைப்ப

  நிலைதொலை பெய்தினுங் கலைவல் லோரே

  இஃது அஞ்ஞானத்தாற் கூடிய மமதை பந்த காரண மென்றும், ஞானத்தால் மமதை யொழிதல் மோக்ஷ காரண மென்றும் பாவனா விசேடங் கூறியது.

  1-4. உரை: (கரைகாண்கல்லா………..கேண்மோ) கரை காண்கல்லாக் கற்பனை அளக்கர்- 4எல்லை காணுதற்கரிதாகிய சங்கற்ப மான சமுத்திரத்திலே எழும்; வரைபொரு திரையின் மடிந்தோர் தகுதியும்- மலைபோன்ற திரையில் அழுந்துவோர் 1தகைமையும்; மடியாது உயர்ந்த நெடியோர் பகுதியும்- அதில் அழுந்தாதே நீங்கின பெரியோர் இயல்பும்; நொடியக் கேண்மோ - 2சொல்லக் கேட்பாயாக;

  4-9. (ஒடியா…………ஈடே) 3பிறந்தை இனத்தின் மாண் டோர் ஈடு- பிறப்புக்குக் காரணமாகிய 4ஈடணாத் திரயங்களிலே 5நிரந்தரமாய் மூழ்கினாரது சங்கற்பமாகிய செய்தியானது; கேள்வி எடுத்த ஒடியா வாய்மைப் பார்ப்பன வாகை சூடி- யாகம் பண்ணுவதற்காகச் 6சங்கற்பித்துக் கொண்ட கெடாத மெய்ம்மையாகிய 7பார்ப்பன வாகையை யணிந்து; தொழில் தீ ஒரு மூன்று வளர்த்த- ஒன்றுக்கொன்று தொழில் வேறு பாடான 8அக்கினி மூன்றையும் வளர்த்த; அருமறை நாவின் கேள்வி யாளன்- அரிய வேதங்களை யோதும் நாவையும் 9உபதேசத்தையு முடைய வைதிக வேதியன்; மனத்தின் மாண்டன்று- மனத்தாலே இந்த வைதீகக் கிரியையை யியற்று தலால் வரும் 10பலத்தைப் புசிப்பானாக என்று சங்கற்பித்துக் கொண்டு இருந்த அழகு போன்றிருக்கும்;

  9-12. (கேள்வி……………மாண்பே) உள்ளம் மாசறக் களைவோர் மாண்பு- 1சித்தத்தினுண்டாகிய கன்மத்தை க்ஷயம் பண்ணின பெரியோர்களது மாண்பாகிய செய்தி யெங்ஙன மெனில்; வேள்வி யாசான் முதலிய அத்தொழில் முடிமார் - வேள்வி வேட்பிக்கும் ஆசாரியன் முதலாக அந்தயாகக் கிரியையை முடிக்க ஏவல் செய்வோரனைவரும்; தேசொடு பெரிது நிவந்திசின்- 2அகங்கரியாது செய்வதினாலே அதிற் பலம் போல யாவருமறிய ஒளியுண்டாக வோங்கிய 3பெருமை யுடைத்தாயிருக்கும்;

  12-13. (வேறு ………………உண்டு) தினகரன் தொழிலும் வேறு உண்டு- இஃதொழிய ஆதித்தன் செயலினும் உளதாகிய வேறொன்றினைக் காட்டலாம்;

  13-16. (அவனே………மிகப்பலரே) அவன் தனாது விரிகதிர் பரப்பி விசும்பு செலற்காலை- அந்த ஆதித்தன் தன்னுடைய விரிந்த கதிரைப் பரப்பி ஆகாயத்திலே இயங்கு மிடத்து; பெரிது 4உவந்திசினோர் பலர் - அவனைக் கண்டு மிகவும் பிரியப்பட் டோர் பலர்; உவவாது 5துனிகூர்ந்திசினோர் நனிமிகப் பலர்- அங்ஙனமன்றி விதனப்பட்டோர் அவரினும் மிகப்பலர்;6

  17-19. (அவரே ………..போன்றும்) அவர் இன்னராயினும்- இவ்விருதிறத்தவரும் இத்தன்மையரான விடத்தும்; தம்முறை இதுவென உன்னாது ஏகும் அன்னோன் போன்றும்- அவர்கள் 1ஊழ் முறைமையதுவே யென்று 2நினையாதே யியங்கும் அத்தன்மையனான ஆதித்தனைப் போன்றும்;

  19-21. (அரும்பாவியரே…………கலைவல்லோரே) கலைவல்லோர் - 3சாத்திரங்களைக் கற்றுவல்லவரான ஞானவான்கள்; 4கரும்பின் சிலை பொழி கணை பல தைப்ப- காமதேவனுடைய கரும்பு வில்லினின்றும் பொழியப்பட்ட புட்பபாணங்கள் பலவும் தைக்கப்பட்டு; 5நிலைதொலைவு எய்தினும்- நிலை கலங்குதல் உண்டாயினும்; மன்ற 6அரும்பாவியர்- நிச்சயமாக அரிய ஞானபாவத்தை யுடையராயிருப்பர் எ-று.

  மோ, மாது, ஓ, ஏ, அசை, நிவந்திசின் என்பதில் இசின், அசை.

  அகவல் 47

  ஞான சித்தர்க்குத் தேகம் பாரம்

  வாகை 7வெண்ணெற் றொலிப்பக் கூகை

  குழறுகுரல் பல்லியந் துவைப்ப வோரி

  8தழங்குகுரன் முரசந் ததும்ப விளிந்தோர்

  பிணத்தின் கைவிளக் கெடுப்பக் கூளிக்

  5.  கணங்கொள் பேரவை யணங்குநட நவிற்றுங்

  காடுபதி கொண்ட வொருவற் றரூஉம்

  ஆடவ னுள்ளங் கடுப்ப நீடிய

  மலப்பொதி யிரிய நூறி யுரைத்தொடக்

  குணர்வொடு கழிந்த விணையி லின்பத்

  தென்றுகொ லெய்துஞான் றென்றே நன்று

  1நெடிது நினைகுவர் மாதோ

  வடுநீங்கு சிறப்பின் வயங்கி யோரே.

  இஃது அரும்பாவிய ரென்றது குறித்துக்கொண்டு தேகபார மொழித்தலால் 2ஞானசித்தர்க்குத் தேகபாரம் தாங்குதற் கரி தாயிருக்கு மென்று சொல்லியது.

  1-7. உரை: வாகை வெண்ணெற்று ஒலிப்ப- வாகை மரத்தின் வெள்ளிய 3நெற்றுப் பறையாகச் சத்திக்க; கூகை குழறு குரல் பல்லியம் துவைப்ப- கூகைகள் குழறுகின்ற குரல் 4பல்லியமாக முழங்க; ஓரி 5தழங்கு குரல் முரசம் ததும்ப- 6ஓரிகள் கூப்பிடுங் குரல் முரசாகி அறைய; விளிந்தோர் பிணத்தின் கை விளக்கு எடுப்ப- இறந்தோர் உடலாகிய வேகிற பிணத்தின் கையைச் சில பேய்கள் கவ்வியாடுவதனால் அது 7விளக்காக எடுத்துக்காட்ட; கூளிக் கணம் கொள் பேரவை8 அணங்கு நடம் நவிற்றும் காடு- பேய்க் கூட்டங்கள் கூடின பெரிய ஒலக்கத்திலே ஒரு பெண் பேய் கூத்தாடுதலைச் செய்யும் மயானத்தை; 9பதிகொண்ட உருவன் தரூஉம் ஆடவன் உள்ளம் கடுப்ப- முடி விடமாகவுடைய ஒருவனது சவத்தைக் கூலிக்காகச் சுமந்து வருகிற புருடன் இதயத்திலே விரைய அப்பிணச் சுமையைப் போகட விரும்பின தன்மைபோல;10

  7-12. (நீடிய …….வயங்கியோரோ) நீடிய மலப்பொதி இரிய நூறி - சுமந்து வருகிற மும்மலங்களாலான தேக பாரத்தைக் கழியப் போகட்டு; உணர்வு உரை தொடக்கு கழிந்த - 1மன வாசகங்களில் தொடக்கினைக் கடக்கப்பட்ட; இணையில் இன்பத்து நன்று எய்து ஞான்று என்று கொல் என்று- உவமை யில்லாத 2பரமானந்தக் கடலாகிய 3முத்தியிற் குளிக்கும் நாள் எந்நாளோ என்று; நெடிது நினைகுவர்- 4மிகவும் நினைத்துக் கொண்டிருப்பர்; 5வடு நீங்கு சிறப்பின் வயங்கியோர் -6குற்றமற்றதாகிய ஞான சித்தியால் விளக்க முற்றோர். எ-று.

  ஒடு, மாது, அசை, கொல், ஐயம்.

  அகவல் 48

  ஞானசித்தர்க்கு வினையிற் பற்றின்மை

  நஞ்சு வீற்றிருந்த வெஞ்சினைப் பகுவாய்

  போர்வை நீத்த புயங்கத் தன்ன

  ஆசறு படிவத் தான்றோர் நிற்க

  நிலஞ்சேறு படுத்த கருங்கைக் கொண்மூப்

  5.  பொரியரை விளவின் புனிறுதீர் பெரும்பழம்

  7அரிதுபெற் றயின்றதன் 8வறுமை போலத்

  தெரியாத் தேர்ச்சித் 9தீரா வுள்ளத்துப்

  பெரியோர் விட்டனர் பிறழா வினையே

  10அரியவு முடையதென் றுளதே யிரியா

  6.  துடனுறை பழைமை வூங்கே கடனறி

  1மண்வினை மாக்க டம்வினை முடிமார்

  திகிரி யுருட்டி யொருவி யாங்கும்

  வருத லோவா மாறுங் குவிவாய்த்

  தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்தும்

  7.  இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை

  உடையதை யுடையரோ மற்றே யுடையதை

  வரையளந் தறியாத் திசையருந் 2திருத்தப்

  பேரா னந்தப் புணரி

  ஓராங்குப் படித லுடையோ ரீண்டே.

  இது தேகபாரத்தைக் கழித்து முத்தியைக் கூடும் நாள் எந்நாளென்னும் ஞனேசித்தர்க்குப் பூருவ வாசனையாலுள்ள அனுபவமல்லது (அவர் வினையிற் பற்றிலரென்று கூறியது.

  1-3. உரை: (நஞ்சு……..நிற்க) 3வெஞ்சின நஞ்சு வீற்றிருந்த பகுவாய்- வெவ்விய சினத்தையும் நஞ்சுக்குச் சுதேசமாயிருக்கிற பெரிய வாயையுமுடைய; போர்வை நீத்த புயங்கத் தன்ன - தோலுரித்த பாம்பையொத்த; ஆசறு படிவத்து ஆன்றோர் 4நிற்க - புறச்சுத்தி பண்ணின தூய 5விரதத்தை யுடைய 6அறிவுடையோர் அழிவின்றியே நிற்க;

  4-8. (நிலம்……….வினையே) நிலஞ்சேறு படுத்த 7கருங்கைக் கொண்மூ- மதத்தாலே பூமியைச் சேறாக்கிய பெரிய கையை யுடைய யானை; பொரியரை விளவின் புனிறுதீர் பெரும்பழம்- பொரிந்த அடியையுடைய விளாவினது உள்ளே இளம்பருவமறப் பழுத்த பெரிய பழத்தை; அரிது பெற்று அயின்ற தன் வறுமை 1போல- அரிதாக எடுத்துக்கொண்டு புசித்தலால் அதனில் உள்ளொரு பற்றுமின்றியுளதாந் தன்மை போல; தெரியாத் தேர்ச்சி தீரா உள்ளத்து2 -பிறராலறிதற் கரிதாகிய கன்மச் சேதவுபாயத்தைக் கடைப்பிடித்தலின் நீங்காத வுள்ளத்தை யுடைய; பெரியோர்- ஞானவான்கள்; 3பிறழாவினை விட்டனர் - புறச்சுத்தி யின்றியே அந்தரங்க சுத்தியுடையராய்க் கெடுத்தற்கரியதாகிய கன்மத்தைச் சேதம் பண்ணியேயிருப்பர்;

  9-10. (அரியவும்…………..பழைமை) அரியவும் உடைய தொன்றுளது- ஆயினும் அவரை 4விடுதற்கரிதாய் இருந்ததுவு மொன் றுண்டு; உடன் உறை பழைமை- அஃது அனாதியாகப் பழகிப் போந்த சரீர வாசனை; 5இரியாது- பிரார்த்த கன்மம் புசித் தறுமளவும் அஃது ஒழியாது; அஃது எங்ஙனமென்னில்,10-13. (ஊங்கே……………ஓவாமாறும்) ஊங்கு கடனறி மண்வினைமாக்கள்- இவ்விடத்தே தம் கிரியைகளை மிகவும் அறியும் குலாலர்; தம்வினை முடிமார்- தம் காரியம் முடிப்பான் காரணமாக; திகிரி உருட்டி 6ஒருவியாங்கும் - திகிரியை விசை கொளச் சுழற்றி அச்சுற்றுத லொழித்த விடத்தும்; வருதல் 1ஓவாமாறும்- சிறிது பொழுது தானே சுழன்று ஓயுமாறு போலவும்;

  13-16. (குவிவாய்………….மற்றே) குவிவாய்த் தசும்புறை இங்கு- குவிந்த வாயையுடைய குடத்திலிட்டிருந்த பெருங் காயம், அசும்பறத் துடைத்தும் 2இருங்கடி இகவாப் பெருங்கடன் 3ஆங்கு - அக்குடத்திலே பற்றறத் துடைத்தாலும் மிக்க நாற்றம் அக்குடத்தினின்றும் ஒழியாத பெரியதன்மை போலவுமாம்; அல்லதை- அல்லாமல்; 4உடையதை உடையரோ -5அகப்புறப் பற்றாகிய உயிர்ச் சார்பு பொருட்சார்பில் பற்றுடையார்போல இவர்கள் இருக்குமது பற்றாகவற்றோ;

  16-19. (உடையதை…………….ஈண்டே) உடையதை- இனி இவருக்கு உடைய தாவது யாதென்னில்; வரையளந் தறியா- எல்லை யளத்தற் கரிதாகிய; 6திரையரும் பேரானந்தப் புணரி திருத்தம்- அசைவில்லாத பெரிய ஆனந்த மாக்கடலாகிய தீர்த்தத்திலே; ஓராங்குப் படிதல் உடையோர்- இடைவிடாதே மூழ்குதலையுடைய ராவர்; ஈண்டே - இந்த எடுத்த சனனத்திலே, எ-று.

  புனிறு, இளமை, ஏகாரங்கள், அசை. ஐ- சாரியை. ஓ- எதிர் மறை. மற்று- அசை.

  அகவல் 49

  உபதேசப் பயன்

  நஞ்சே பாம்புண் டீநீர் மாதோ

  அஞ்செஞ் சேதா வுண்ணற லமிழ்தே

  விஞ்சை வேந்தர் ஞானம் வீடே

  வஞ்சர் ஞானம் வடுவொடு படுமே

  இது 1மேற்கூறிய பக்குவர்க்கும் அபக்குவர்க்கும் செய்யும் உபதேசத்தால் வரும் பயன் கூறியது.

  உரை: (நஞ்சே………….மாதோ) பாம்புண் தீநீர் நஞ்சு- சுவை யுடைத்தாகிய தண்ணீர் பாம்பு புசித்தால் 2நஞ்சா மாறு போலவும்;

  2.  (அஞ்செஞ்சேதா ………….அமிழ்தே) அம்செம் சேதா உண் அறல் அமிழ்து- அந்த நீரே அழகிய குணத்தையுடைய செவ்வையாகிய பசுவானது புசித்தால் அமிழ்தத்தை யொத்த 3பாலாமாறு போலவும்;

  3.  (விஞ்சை……வீடே) விஞ்சை 4வேந்தர் - பக்குவராகிய ஞானவான்கள் பெற்ற; 5ஞானம் வீடு - உபதேசம் முத்திக்கு ஏதுவாய் முடியும்;

  4.  (வஞ்சர்…………படுமே) 6வஞ்சர் ஞானம் - அபக்கு வராகிய 7கிருத்துமர் பெற்ற உபதேசம்; வடுவொடுபடும்- பிறரையும் தங்களையும் கெடுத்து உபதேசிக்கின்ற தேசிகர்க்கும் 8குற்ற மாய் முடியும் எ-று.

  1இதனால் பக்குவா பக்குவம் பார்த்து அனுக்கிரகம் பண்ண வேண்டுமென்பது கண்டுகொள்க. அறல்- நீர். 2செஞ்சேதா என்ற விடத்து முதற்கண்ணின்ற செம்மை குணத்தையும், மற்றது இலக்கணத்தையும் குறித்து நிற்பதால், பண்பைப் பண்பு விசேடித்ததன்று என அறிக. ஏகாரம், நான்கும் தேற்றம். மாது, ஒ, ஒடு, அசை3

  அகவல் 50

  மாயாமல பந்தக்ஷயம்

  எற்புக் குப்பையைப் புட்குலத் துணவை

  நரப்புக் கருவியைத் திரைப்பெருஞ் சேக்கையைப்

  புன்புல வாரியைத் துன்புக் குறையுளை

  ஈருட் போர்வையை வேரின் விளைவைத்

  5.  தசைப் பெருந்திரளை நசைக்கின் செவிலியை

  மூளைச் சேற்றை முழுமலக் குழுவை

  ஞாளிக் கிரையைப் பூளைப் பொதியை

  வெண்ணிணப் பெருமையைப் புண்ணின் பொற்பைக்

  கொடுமைக் கோதையை யடுசினத் தமலையை

  6.  மாசின் றேசை வழும்பின் வைப்பைத்

  தோலின் வேலியைத் துகளின் றுப்பை

  எரிப்பெருங் கொள்ளையை நரிக்கா ரயினியை

  பெருநோ யறையைக் கருநரைக் கமத்தைக்

  குறும்பிக் கொண்டலை இறும்பற் குறைவைப்

  7.  புழுப்பா சறையை யழுக்கார் 4புருவை

  பஞ்ச விந்தியப் பாகர்க் காகா

  அஞ்சா மதகரி யடவியை வஞ்ச

  5அரவுவா ழளையை நுரைவா யருவியை

  வாத வழுவைத் தீதுக வணைத்த

  8.  வெளிலைப் பித்தின் விளிவருங் குறும்பைக்

  குரைவிரி யிருமற் றிரைவிரி புரையைக்

  காமச் சும்மையைக் கவலைக் கெல்லையை

  நாமத் தரணைத் தீமைத் திறலை

  அழுக்கா றணையும் விழுப்பெருந் தெருவை

  9.  ஏமாப் பிரலை விலங்கலைத் தீமை

  இருஞ்சுறவு கலித்த திருந்திரும் பௌவத்தை

  மறத்தின் மன்னை வழுக்கின் புக்கிலை

  இறப்பின் கேதன மிதனை மறப்பிற்

  கொண்டனை யானெனக் கொளலொழித் தொண்டிறன்

  10. மாய வினைய தான தேயாத்

  தனுகரண புவன போகம்

  எனும்வகை யறிநனி துனியினி துகவே

  இது மாயாமல பந்தக்ஷயம் கூறியது.

  உரை:- 1. 1எற்புக் குப்பையை- எலும்புக் கூட்டத்தை புட்குலத் துணவை- பறவை வருக்கத்துப் போசனத்தை:

  2.  நரப்புக் கருவியை- 2நரம்பென்னுங் 3கயிற்றாலே கட்டப் பட்டவதனை; திரைப்பெருஞ் சேர்க்கையை- 4திரைதலுக்குப் பெரிய சயனத்தை;

  3.  புன்புல வாரியை- 5புல்லிதாகிய புலாற் கடலை; துன்புக்கு உறையுளை- துக்கத்துக்குக் குடியிருப்பை:

  4.  ஈருட் போர்வையை- ஈரலை யுள்ளேபொதிந்த போர்வையை; 1வேரின் விளைவை- வியர்வைக்கு விளை நிலத்தை;

  5.  தசைப்பெருந்திரளை- மாங்கிசக் கூட்டத்தை; 2நசைக்கு இன் செவியை- 3ஆசையாகிய குழவியை யினிதாக வளர்க்கும் செவிலித்தாயை;

  6.  மூளைச் சேற்றை- மூளைக்குழம்பை; முழுமலக் குழுவை- சருவ மலத்தின் குழாத்தை;

  8.  ஞானிக்கு இரையை- நாய்கட்கு உணவாவதனை; 4பூளைப்பொதியை- பூளைப் பஞ்சு போலே நிலையில்லாத வற்றாலே கட்டிய பொதியை;

  9.  வெண்ணிணப் பெருமையை- வெள்ளையான நிணத்தின் மிகுதியை; புண்ணின் பொற்பை- 5புண்ணின் பொலிவை

  10. 6கொடுமைக் கோதையை- 7கொடுமையென்னும் துரு நாற்ற மடிக்கும் பூவால் தொடுக்கப்பட்டதொரு மாலையை; 8அடு சினத்து அமலையை- கொல்லுகிற சினத்தின் 9செறிவை;

  11. 10மாசின் தேசை - இராகத் துவேஷங்களை வெளிப் படுத்தும் ஓளியாகிய அதனை; வழும்பின் வைப்பை- 11நிணத் தாற் பூசப்பட்ட கூரையை;

  7.  1தோலின் வேலியை- தோலை வேலியாகவுடைய தனை; 2துகளின் துப்பை- குற்றத்துக்கு வலியானவதனை;

  8.  எரிப்பெருங் கொள்ளையை- அக்கினியாலே மிகவும் கொள்ளை கொள்ளப் படுவதனை; நரிக்கு ஆர் அயினியை- நரிகள் திருத்திவரப் புசிக்கும் உணவை;

  9.  3பெருநோய் அறையை - 4பிறப்புக்குக் காரணமா யிருப்பதோர் அறை வீட்டை; கருநரைக் 5கமத்தை- பெரிய நரையாகிய மேகத்தை;

  10. குறும்பிக் கொண்டலை- அழுக்கைக் குறும்பியாகச் சொரியும் 6வருடத்தை; 7இறும் பற்கு உறைவை- உதிரக் கடவ பற்களுக்கு இருப்பிடத்தை;

  11. புழுப் பாசறையை- கிருமிகள் புகவிட்டிருக்கும் படைவீட்டை; 8அழுக்கார் உருவை - பொல்லாங்காலே 9சமைக்கப் பட்ட உருவத்தை;

  16-17. (பஞ்ச ………….அடவியை) பாகர்க்கு - 10அந்தக் கரண மென்னும் பாகராலே; ஆகா- வணக்குதற் காகாத; பஞ்ச இந்திரிய அஞ்சா மதகரி அடவியை- பஞ்சேந்திரிய மாகிய அச்சமில்லாத மதயானை யுலாவும் அடவியை;

  17-18. 1வஞ்ச அரவுவாழ் அளையை- 2வஞ்சகமாகிய சர்ப்பம் உறையும் பொந்தை;

  18. நுரைவாய் அருவியை- 3நுரையை யொன்பது வாயிலாலே அருவிபோலச் சொரிவதனை;

  19-20. (வாத …………..வெளிலை) வாத 4வழுவை - வாதமாகிய யானையை; தீதுக அணைத்த வெளிலை- குற்றமறக் கட்டப்பட்ட கம்பத்தை;

  20. பித்தின் விளிவரும் 5குறும்பை- பித்தமிருக்கும் கெடு தற்கரிய அரணிருக்கையை;

  21. (குரைவிரி………புரையை) குரைவிரி இருமல்- ஓசைமிக்கிருக்கின்ற சிலேத்துமமாகிய கடலின்; திரைவிரி 6புரையை - 7அலை விரியத் தாங்கும் மலையை;

  22. காமச் சும்மையை- 8மிக்க காமத்தாலே பிறர் பலர் அலர் தூற்றப்படுவதனை; 9கவலைக்கு எல்லையை- துக்கத்துக்கு முடி வெல்லையாயதனை;

  23. 10நாமத்து அரணை - 11அச்சத்துக் கிருப்பிடத்தை; தீமைத்திறலை- மெய்யாற் செய்யுந் தீமைக்கு வலிபெற்ற வதனை;

  24. (அழுக்காறு ……..தெருவை) அழுக்காறு அணையும்- பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டாற் பொறாமை சேரும்; விழுப்பெருந்தெருவை- 12துன்பத்தையுடைய பெரிய வீதியை;

  25. 13ஏமாப்பு இரலை விலங்கலை- 14செருக்காகிய மான் வாழும் மலையை;

  25-26. (தீமை………..பௌவத்தை) 1தீமை இருஞ்சுறவு கலித்த- மனத் தோட மாகிய பெரிய சுறாமீன் வளரப்பட்ட; திருந்து இரும் பௌவத்தை- 2திருந்திய பெரிய சமுத்திரத்தை;

  27. மறத்தின் மன்னை - மறத்துக்கு நிலையான அதனை; வழுக்கின் புக்கிலை- 3அவஞாயம் புகுந்திருக்கும் சுதேசத்தை;

  28. இறப்பின் கேதனம் இதனை- சாதற்குக் கொடிகட்டி யிருக்கின்றதாகிய இத்தனைக் குற்றமுடைய இத்தேகத்தை;

  28-29. (மறப்பின்…………..யானென) 4மறப்பின் யான் எனக் கொண்டனை- அஞ்ஞானத்தாலே நான் என்று கொண்டாய்;

  29-32. (கொளலொழித்து …………….இனிதுகவே) கொளல் ஒழித்து- அவ்வாறு கொள்ளுமதனை ஞானத்தாலே விட்டு நான் அல்ல வென்று கொண்டு; 5ஒண்திறல் மாயா வினைய தாய- அழகிய வலியையுடைய மாயாகாரியமான; தேயா தனுகரண புவன போகம் எனும் வகை- ஒழியாத தனுகரண புவன போக மென்னும் 6வகைகளின் வேறுபாட்டை; நனி துனி இனிதுக அறி- உன்னை மிகவும் கூடிய தோடமானது கெட்டற; 7அறிவாயாக, எ-று.

  8துனி, விகாரம், ஏ, அசை.

  அகவல் 51

  ஆணவமல பந்தக்ஷயம்

  ஈறறி வுக்கெவ னெவனோ மற்றதன்

  மாறறி வுக்கறி மற்றே கூறின்

  இளைத்தன் மற்றெவ னெவனோ நின்ற

  தளிர்த்தன் மற்றுயர் பின்மை 1யுளங்கொள

  5 அறிவுரு வதனோ டநித்த மன்மையின்

  மறுவற 2னெறியிவ ணெறிபட நின்ற

  3பந்தம் போகம் போக நிறுத்தலும்

  வந்தது மாயை வினைமலந் தந்தமின்

  மாயை பந்தம் வளங்கெழு போகந்

  10. தேயா வல்வினை திகழ்தரு 4மலத்துப்

  போக 5நிறுத்துவ தாம்வினை முறுகிய

  போகந் தந்து புறங்கொடுத் தினிதா

  ஏகற் கொல்லா தாகி வேகத்

  தியாத்தலைத் துடைத்தலி னெறியிறை யுண்மை

  11. பார்த்தலிற் பறிமல மனாதி கூர்த்த

  6பிறப்பிறப் பறா அச் சிறப்பி லாகத்தில்

  வாசனை யகலத் தோசொடு நிவந்த

  அமலனைச் சமாதி யமல

  விமல செய்ம்மதி 7விருப்பினை யினிதே.

  இஃது ஆணவமல பந்தக்ஷயம் கூறியது.

  1-4. உரை: - (ஈறறிவுக்கு……….உளங்கொள) அறிவுக்கு ஈறு எவன்- 1ஆன்மா வுக்குச் சாதல் எவ்வண்ண மென்றும்; அறிவுக்கு அதன்மாறு எவனோ- அவ்வான்மாவுக்கு 2அச்சாதலின் மாறான பிறத்தல் எவ்வண்ண மென்றும்; 3இளைத்தல் எவன்- அவ்வான்மாவுக்கே இளைத்தல் எவ்வண்ணமென்றும்; நின்ற தளிர்த்தல் எவனோ- இளையாமல் பருத்தல் எவ்வண்ண மென்றும்; உயர்வின்மை எவனோ கூறின்- 4முப்பது வயதளவும் வளர்தல் எவ்வண்ணமென்றும் பின் வளராமை எவ்வண்ண மென்றும் 5கேட்கும் நினக்கு இப்பொருளிருக்கும்படி சொல்லின்; உளம்கொள அறி- உள்ளம் கொள்ள அறிவாயாக;

  5-6. (அறிவுரு……….நெறி ) அறிவு உருவதனோடு அநித்தம் அன்மையின்- 6சேதனமாகிய ஆன்மா தேகமாகிய அத்துடன் அநித்தியப்படாமையால்; இவண் மறுவறல் நெறி- நீ கேட்ட 7பொருள் தேகத்துக்கே யென்று கொண்டு தேகிக்கல்லவென்று இவ்வாறு குற்றமற வறிந்து 8போகடு; இது பசுவுண்மை அறிகை.

  6-8. (இவண்………..மலத்து) இவண்- இங்ஙனம்; நெறிபட நின்ற பந்தம் 9போகம் - முறையாக நின்றனுபவிக்கும் துக்கமும் சுகமும்; போகம் நிறுத்தலும்- இச் சுகதுக்கங்களைத் தற்சொரூப மறியாமல் மறைத்துப் புசிப்பித்தலும்; வந்தது- 1உண்டாகியது; மாயை வினை மலத்து - முறையே 2மாயாமலத்தாலும் கன்ம மலத்தாலும் ஆணவமலத்தாலுமாம், காண்;

  8-14. (அந்தமில்……….நெறி) 3அந்தமில் மாயைப் பந்தம்- இனிமேலே சொல்லப்பட்ட நித்தியமாயிருக்கிற மாயாமல காரியமான தேகத்திலே நின்று முற்பவத்திற் செய்துகொண்ட தாகிய; தேயா - வல்வினை- கெடாத வலிதாகிய கன்மமலத்தால்; வளங்கெழு போகம்- வளப்பமுடையவான சுகதுக்கங்களை; திகழ்தரு மலத்துப் போகம் நிறுத்துவதாம்- விளங்குகின்ற மலமானது 4மறைத்துப் புசிப்பிக்கும்; முறுகிய வினை போகம் தந்து- 5அதுதான் பக்குவப்பட்ட கன்ம பலங்களைப் புசிப் பித்து; புறங்கொடுத்து இனிதா ஏகற்கொல்லாதாகி- உன்னை விட்டு நீங்குதற்கு இசையாதே; வேகத்து யாத்தலை 6இன்நெறி துடைத்தல்- அகங்காரத்தாலே பந்தித்தலை இனிய கன்மச்சேதவுபாயத்தாலே தவிர்வாயாக;

  இது பாசமறைப்பு விடுகை.

  14-15. (இறை…………..மலம்) இறையுண்மை பார்த்தலின்- பதியுண்மை யறிவால்; மலம்பறி- ஆணவமலத்தைக் 1கெடுப் பாயாக;

  15-19. (அநாதி……………..இனிதே) அநாதி கூர்த்த - அநாதியாகமிகுந்த; பிறப்பு இறப்பு அறாஅ- பிறந்திறந்து வரும்; 2சிறப்பில் ஆகத்தில்- 3வருத்தத்தைத் தருவதாகிய தேகத்தில்; 4வாசனை அகல்- பிரார்த்த கன்மபலம் புசித்தறு மளவும்; 5அமல விமல விருப்பினை - மிகவும் சுத்தமான விருப்பத்துடனே; தேசொடு நிவந்த அமலனை- பிரகாசமாயோங்கிய நின்மலனை; இனிது 6சமாதி செய்து மதி- நீ இனிதாகச் சமாதி பண்ணியிருப் பாயாக எ-று.

  7இது பதியுண்மை யறிந்து அதனோடு இயைந்திருக்கை. மற்றென்கிளவிகள் வினைமாற்று. 8அமலம், விமலம் - ஒரு பொருட் பன்மொழி, ஐ, சாரியை.9

  அகவல் 52

  **cஞானவான்களைப் பாசம்வாதியாமை

  பதிபசு பாசு மதியோர் வரத

  உலையா வென்பதைத் தலைநனி 1நிறீஇ

  உடையா தாயி னொருபெரும் பாசம்

  அடையா வீடெனக் கடைநனி 2கழறின்

  5.  தன்னுரை மலைவு முன்பின் மலைவும்

  அன்னவை யருளோ யாமெனிற் 3பன்னிய

  4உடையா மாண்டவ ரடையா பொடிபட

  மாமலை யன்ன மரந்தெறுங் கடுங்கனல்

  தாமரை யன்ன தளிர்க்கை தாங்கினும்

  6.  மந்திர மாக்கட் கந்தர மியாதே

  செம்பிது செறிந்த புன்புறக் களங்கமிது

  என்றுரை கூடா வெழில்வளர் சீருணஞ்

  சித்துநீர் செறிந்த 5தொத்தே மிக்க

  6விடங்கெழு பெருவலி யுளங்கொண் மந்திரத்

  7.  தடங்கிய தன்மையு மற்றே 7குடங்கர்க்

  கலங்குநீ ரில்ல நலங்கிளர் விழுக்காழ்

  8அணைந்த மாறௌ விணங்கிறந் தகன்ற

  பாசப் பெருவலி9 தடுத்தனர்

  மாசின் ஞான மன்பெருந் தகையே

  இது பாசமும் நித்தியமும் வியாபாகமுமாயிருப்பினும் ஞானவான்களை வாதியாதென்று கூறியது.

  1-6. உரை: - (பதிபசு………….எனில்) மதியோர் வரத- ஞான வான்களுக்குச் சிரேட்டமாயுள்ள ஞானா சிரியனே; பதி பசு பாசம் உலையா என்பதை- பதியும் பசுவும் பாசமும் நித்திய மென்னுமதை; 1தலைநனி 2நிறீஇ - முன்பே மிகவுமருளிச் செய்து வைத்து; கடை- பின்பு; ஒரு பெரும் பாசம் 3உடையாதாயின் வீடு அடையா எனநனிகழறின்- உவமையில்லாத மகத்தாகிய 4பாசச்சேதம் இல்லாவிடத்து முத்தி சித்தியாது என்று மிகவும் அருளிச் செய்வாயேல்; 5அருளோய்- 6அருளையுடையோனே; அன்னவை- அவ்வசனங்கள்; தன் உரை மலைவும் முன்பின் மலைவுமாம்- 7சுவவசன விருத்தமும் சாத்திரத்துக்குப் பூருவாபர 8விருத்தமுமாய் இருந்தனவல்லவோ; எனில்- என்பாயாகில்;

  6-7. (பன்னிய……..அடையா) பன்னிய உடையா- இங்ஙனம் சொல்லப்பட்ட முப்பொருளும் 1நித்திய வியாபகங்களே; மாண்டவர் அடையா- அவையிற்றிற் பாசங் களானவை மாட்சி மையுடையவரான ஞானவான்களை 2வாதிக்க மாட்டாவாம்; என்போல வென்னில்.-

  7-10. (பொடிபட ………………..யாதே) 3மாமலை அன்ன மரம் பொடி படத் தெறும் கடுங்கனல்- பெரிய பருவத்தைப் போலத் திரண்டு உயர்ந்த மரத்தைப் பொடியாகச் சுட்டெரிக்கும் மிக்க நெருப்பை; 4தாமரை யன்ன தளிர்க்கைதாங்கினும்- தாமரைப்பூவின் இதழ் போன்ற மெல்லியகையிலே தரித்தாலும; மந்திரமாக்கட்கு அந்தரம் யாது- மாந்திரிகருக்குக் கேடாகிய விதனம் யாதாயினுமுண்டோ;

  மந்திரவாதிகளை அக்கினி வாதியாமையல்லது மற்றுள்ள விதனம் நீங்காமையால், பாசம் வாதியாமையல்லது 5சுத்தராவ தில்லை யாலோவென்று வினவில்,-

  11-13 (செம்பிது ………….ஒத்தே) 6செம்பு இது என்று - செம்பு இதுவென்றும்; செறிந்த புன்புறக் களங்கம் இது என்று-இதனுடன் கூடிய புறத்தே விளங்கும் 1புல்லிய களிம்பூ இது வென்றும்; உரை கூடா எழில் வளர் சீருணம்- பிரித்துச் சொல்லுதற்கரிய அழகு மிகுந்த செம்பிலே; 2சித்து நீர் செறிந்தது ஒத்து- 3இரதம் செறிந்தால் பொன்னானவாறு போலச் சுத்தனாவா னென்றருளிச் செய்ய;

  செம்பிலே குளிகையிட்டு உருக்கினல்லது சுத்தமாகாத படியாலே, 4வியாபகமான ஆன்மாவுக்கு ஏகதேசமான தேகத்தில் பாசச் சேதம் செய்தவாறு எவ்வண்ணமென்ன,-

  13-15. (மிக்க………….அற்றே) உளங்கொள் மந்திரத்து- உள்ளத்திலே மந்திரத்தைத் 5தியானிக்க; மிக்கவிடம் கெழு பெருவலி 6அடங்கிய தன்மையும் அற்று- தேகமுற்றும் வியாபித்த மிக்க நஞ்சினிடத்துப் பொருந்திய பெரிய சத்தியானது 7பாதாதி கேசமளவும் 8கலவாமல் தடுப்புண்டவாறு போலவாம் என்று அருளிச் செய்ய;

  நித்திய நோய்கள் சரீரியாவான் உடையனவாதலால், இவை தோற்றின காலங்களில் 9ஞானத்தையே குறித்துக் கொண்டிருக்க வொண்ணாமையால், மந்திரம் தியானியாத பொழுது நஞ்சு வாதிக்கு மாறு போல ஞானமும் இவனுக்குச் சித்தியாக மாட்டாதோவெனின்,-15-19. (குடங்கர்……….பெருந்தகையே) 1குடங்கர் கலங்கு நீர் - குடத்திலெடுத்த மண்ணீரானது; 2இல்லம் நலம் கிளர் விழுக்காழ்- தேற்றின் மரத்துண்டாகிய அழகு விளங்கிய சிறந்த விதையையிட்டு; அளைந்த மாறு என- தேற்றின் பின்பு மறித்துக் கலங்கினாலும் தேற்றாமலே தெளியுமாறு போலே; மாசில் ஞானம்- குற்றமற்ற ஞானவனாலே; 3இணங்கு இறந்தகன்ற பாசப் பெருவலி தடுத்தனர்- ஞானிகளும் உவமை யில்லாத மகத்தாகிய பாசத்தினுடைய பெரிய சத்தியைச் சேதம் பண்ணினபின், பிரார்த்த கன்மம் புசித்தற் கேது வாகிய நித்திய நோய்கள் நலியினும், 4தெளிவுக் காட்சி 5யுடையராயிருப்பர்; பெருந்தகையே- பெருந்தன்மை யுடையோனே, அறிக எ-று.

  காழ், வித்து, ஏகாரம் தேற்றம். அற்று, குறிப்புமொழி ஏ, மன்- அசை.

  பாசச் சேதம் முடிந்தது

  பதி நிச்சயம்

  அகவல் 53

  உயிர்கட்குப் பற்றாவது பரமன் சீர்பாதம்

  திருவின் செல்வி யொருதனிக் கொழுந

  புலமை சான்ற கலைமகள் கணவ

  வீரிய மடந்தை 1பேரிசைக் கிழவ

  தவத்தின் றலைவ 2தருமத் துறைவ

  5.  அருளோ னருளோ னென்ப நீயே

  அருளோ னாவதை யெவனோ 3தெருளக்

  கண்ணிற் காணா ராயினுங் கனவின்

  நண்ணுங் காலை நல்லுயிர் 4செகுக்கும்

  5பேயே யாயினும் பிரியினின்பம்

  6.  வாயா தென்றே மதியோ ரறைப

  மரீஇ நாளு நின் 6னன்றி யாரும்

  அறிய வாராப் பெரும வென்னை

  அன்ன தாய தொன்முது பிறவி

  அறைபோக் கொழியக் குலமுழுதும் 7வளைஇ

  7.  ஞான வொள்வாட் பூமுக 1மழுந்தக்

  கொன்று சினந் தணியா 2தன்றிய சீற்றத்து

  மறவனை யல்லையோ மற்றே யிறைவ

  எவன்பல மொழிகுவ மியாமே வனச

  நீர்நிலை நின்று தாணலம் பெற்ற

  8.  தாளோய் 3நின்றா ணீழல மியாமென்

  றிரந்து குறை யுறினும் பிறந்தை 4யெந்திறம்

  மறந்து நோக்கா தெவன்புக லெமக்கென

  ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை

  ஒருவன் பாத மல்லதை

  9.  பிறிது முண்டோ பெறும்புக னமக்கே

  இது, பாதச்சேதம் கேட்டுத் தனக்குப்பற்றாய் உள்ளது ஏதென்று சீடன் விண்ணப்பஞ்செய்ய, “ஆசாரியன் நமக்குப் புகலிடமாயுள்ளது 5அகண்ட பரிபூரணமாய் நிறைந்த நிரஞ்சன தேவ நாயனாருடைய சீர்பாத மல்லது வேறுண் டோ”? என்று அருளிச் செய்தது.

  1-6. உரை: (திருவின்……எவனோ) திருவின் செல்வி ஒருதனிக் கொழுந- 6சருவஞ்ஞத்துவமான செல்வத்தையுடையவ னாகையால் 7சிவபோகமாகிய செல்விக்கு ஓர் ஒப்பற்ற நாயகனே யென்றும்; புலமை சான்ற கலைமகள் கணவ- கலை ஞானமாகிய அபரஞானம் முற்று முணர்தலால் 8அறிவுடைமையாகிய வாகீசுவரிக்குப் பர்த்தாவாயுள்ளோனே யென்றும்; 1வீரிய மடந்தை பேரிசைக் கிழவ- பஞ்சேந்திரிய நிக்கிரகம் பண்ணின படியால் வீரமாகிய மாதுக்குப் பெரிய கீர்த்தியை யுடைய நாயகனேயென்றும்; தவத்தின் தலைவ- சருவ சங்க நிவர்த்தியு டைமையால் 2தவமாகிய செல்விக்கு நாயகனே யென்றும்; தருமத் 3துறைவ- செனனமரண சாகரத்தில் அழுந்துவோரை யெடுத்துக் கரை சேர்க்கும் முறைமையால் தருமத்துக்கு இடமாயுள்ளவனே யென்றும்; அருளோன் அருளோன் என்ப- கிருபையை மிகவும் உடையவனே யென்றும் நின்னைச் சொல்லா நிற்பர்; நீ 4அருளோனா வதை எவன்- நீ கிருபையையுடையையானது எவ்வண்ணம்; 5அல்லாமலும்;-

  6-10. (தெருள………..அறைப) தெருளக் கண்ணிற் 6காணா ராயினும்- இன்ன தன்மைத்தா யிருக்குமெனக் கண்ணாலே தெளியக் காணவேண்டும் என்னினும் புலப்படாததாய்; கனவில் நண்ணுங் காலை- கேட்டபடியே கனவிலே கண்ட காலத்தும்; நல் உயிர் செகுக்கும் பேயே ஆயினும்- நல்ல வுயிரைப் போக்கும் 7பேயே யானாலும்; பிரியன் இன்பம் வாயாது என்று- 8கூடி யிருந்து பிரிந்தால் இன்பமன்றித் துன்பத்தைக் கொடுக்குமென்று; 1மதியோர் அறைப- அறிவுடையோர் 2சொல்லியிருக்கின்றனர்; சொல்லியிருப்பவும்.

  11-13. (மரீஇ……………பிறவி) பெரும- மகாத்துமாவே; என்னைத் தொன்முதுநாள் மரீஇயும்- என்னை 3அனாதி தொட்டு வேறுபாடற 4இந்நாள் வரை மருவியும்; நின் அன்றி யாரும் அறிய வாரா- நின்னை யொழிய யாவர்க்கும் அறிதற்கரிதாகிய; அன்னதாயபிறவி- அத்தன்மைத்தான் பிறவியை5;

  13. (அறை...........வணைஇ) அறைகுல முழுதும் - நூல் களிலே சொல்லப்பட்ட உற்பிசம் அண்டசம் சராயுசம் சுவேதசம் என்னும் நான்கு வருக்கத்தின் தோற்ற முழுதையும்; போக்கு ஒழிய 6வளைஇ- ஒதுக்கமற வளைத்துக்கொண்டு;

  15-17. (ஞானம்…………..அற்றே) 7ஞான வொள்வாள் பூ முகம் அழுந்தக் கொன்று - ஞானமாகிய அழகிய வாள் 8பொலிவு பொருந்திய புகர்முகங் குளிக்கக் கொன்றும்; சினம் தணியாது 9அன்றிய சீற்றத்து மறவனை அல்லையோ- மற்றும் பாசச்சேதம் பண்ணப் பக்குவராயினாரைத் தேடிக் கோபம் தணியாதே யிருக்கும் 1மாறுபட்ட மாற்சரியத்தையுடைய மறவனல்லையோ;

  17-18. (இறைவ……………யாமே) இறைவ- கர்த்தாவே; யாம் பல மொழிகுவம்- நாங்கள் தேவரீரைப் பலவாகச் சொல்லு வோம்; எவன்- அஃது எவ்வண்ணம்?

  18-22. (வசனம்…….எமக்கென) வசனம் நீர் தாள் நிலை நின்று நலம் பெற்ற தாளோய்- 2தாமரையானது நீரிலே ஒற்றைக் காலினாலே நிலையாக நின்று தவசுபண்ணி நின்னுடைய சீர்பாதத் தினுடைய அழகைப்பெற்ற அச்சீர்பாதத்தையுடை யோனே; நின் 3தாள் நீழலம் யாம் என்று - நின் சீர்பாத ஆசிரயரா யிருந்தோம் நாங்கள் எங்களுக்குச் செனனம் வேண்டுமென்று; இரந்து குறையினும்- நின்னைக் குறையிரந்து வேண்டிக் கொண்டாலும்; 4பிறந்தை எம்திறம் மறந்தும் நோக்காது- அச்செனனமானது எங்களிடத்து மறந்தும் நோக்காததாய் முடிந்தது; எமக்குப் புகல் எவன் என - எமக்குப் புகலிடம் யாதென்று விண்ணப்பம் செய்ய;

  23-25. (ஒழிவற………..நமக்கே) 5ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை 6யொருவன் பாதம் அல்லதை- அணுப்புதைக்கவும் இடமின்றிச் 1சடசித்துக்களெல்லாம் நிறைந்த இளம் பிறையைத் திருச்சடாபாரத்திலே யுடையனாகிய 2உவமனில்லாத பரமேசுவரனுடைய சீர்பாதமல்லது; நமக்குப் 3பெரும்புகல் பிறிதும் உண்டோ- மற்று உனக்கும் நமக்கும் பெரிய புகலிட முண்டோ என்று ஆசாரியர் அருளினார் எ-று.

  ஓ, மற்று, ஏ, அசை.

  அகவல் 54

  பதி ஞானம்

  வாழிய பெரும வாழி வாழிய

  வன்மீ னாணைத் தொன்முது கடவுள்

  வலம்படு கொற்றந் தொலைச்சி மீளா

  தடங்கருஞ் சீற்றத் திடங்கெடக் கடக்கும்

  5.  4மடம்பறி ஞான வாழி 5யுடம் பெரி

  6வெளியென நில்லா தென்னு மாத்திரந்

  தெளிவரத் தெருட்டினை செல்வ வளியேன்

  தற்பொரு விறந்த மெய்ப்பரந் தெரியா

  7தெய்த்தன னாயினிருவினை யின்று

  6.  மொய்த்தன வல்லவோ முனிவ மொய்த்திடை

  எய்துவ வெனைப்பல வன்றே யித்திறன்

  யானிற் கிளத்தல் சாலு மானின்

  குளம்புறு குழிவாழ் கலங்கற் சின்னீர்

  மகரா லயத்தின் மயக்கறத் தெளித்தலிற்

  7.  கவரா தென்றே கண்பனி தூங்க

  மெய்ம்மயிர் 1பொடித்துத் தன்முதல் கலங்கி

  இழந்த நெஞ்சமொ டிறைவன் பாதம்

  ஓதினன் வீழ வவனை நோக்கித்

  தானுமி யாது மாகா திவ்வென

  8.  ஒண்ணா நீதிய 2னீதியாற் றனாது

  தெய்வ நாட்டந் தைவரு மளவைக்

  3குவிவா யமையாக் குடநிறை தீநீர்

  4பகுவா யாமைப் பார்ப்பினோ டஃதோ

  தினகர னொளிசேர் சிலைகா றீயின்

  9.  துரியமு மிறந்த தூயோன் றூய்மை

  அருளின னருள்பெற் றெழுந்தோற்

  கிளிசேர் தீஞ்சொ லியம்பின னினிதே

  இது “மதி சேர் செஞ்சடை யொருவன்பாத5” மடைய ஆசை வைத்த சீடனுக்கு ஆசாரியன் கடா க்ஷித்தமை கூறியது.

  1-5. உரை:- (வாழிய………..வாழி) வாழிய பெரும வாழி வாழிய- மகாத்துமாவே, வாழ்வாயாக, வாழ்வாயாக; 6வன்மீன் ஆணைத் தொன்முது 7கடவுள் - வலிய மகரக் கொடியையும் வெற்றியையும் பழமையையு முடைய காமதேவன்; 8வலம்படு கொற்றம் தொலைச்சி- இச்சை பண்ணு விக்கும் வலிய வெற்றி யைக் கெடுத்து; மீளாது- ஒழியாதே; அடங்கரும் சீற்றத்து- அடங்குதற் கரிதாகிய மாற்சரியத்தை;

  1இடம் கெடக் கடக்கும்- நின்னிடத்தே சிறிதும் 2இடமில்லாத படிச் செயிக்கும்; 3மடம்பறி ஞான -அறியாமை நீங்கிய ஞானத்தை யுடையோனே; வாழி- வாழ்வாயாக;

  5-7. 4(உடம்பு ………….. செல்வ) செல்வ- ஞானச் செல்வனே 5வெளி எரி என - வெள்ளிடையிலே ஏற்றிவைத்த விளக்குப் போல; உடம்பு நில்லாது என்னும் மாத்திரம்- சரீரமானது நில்லாது என்னும் அந்த வேறுபாட்டை; தெளிவரத் தெருட்டினை- 6தெளிவுண்டாக அறிவித்தருளினாய்;

  7-10. (அளியேன்…………….முனிவ) அளியேன் -நின்னாலே அனுக்கிரகம் பெற்ற அடியேன்; தற்பொருவு இறந்த மெய்ப் பரம்- தனக்கு உவமையில்லாத நித்திய 7ஞானானந்த சொரூப மான 8பதியுண்மையை; தெரியாது 9எய்த்தனனாயின்- அறியாதே தேகம் விட்டேனாயின்; இன்னும் இருவினை 10மொய்த்தன வல்லவோ- இன்னமும் பாவபுண்ணியங்கள் என்னைப்பந்தித் தனவா மல்லவோ; முனிவ- 1செனனத்துக்குக் காரணமாகிய 2அவாவறுத்தோனே;

  10-11. (மொய்த்திடை…………….அன்றே) 3மொய்த்த இடை எய்துவ- கன்மங்கள் பந்தித்த விடத்து 4அடியேனை வந்து கூடுவன; ஏனைப் பல அன்றே- 5எண்ணிறந்த பலவாகிய செனன மல்லவோ;

  11-12. (இத்திறன்………..) நின்யான் இத்திறன் கிளத்தல் சாலும் நின்னுடைய திருமுன்பே அடியேன் இந்த வேறுபாடுகளைச் சொல்லி விண்ணப்பித்தமையுமிது 6எத்தை யொக்கு மென்னில்,-

  12-15. (மானின்………கவராது) மானின் குளம்புறு குழிவாழ் கலங்கல் சின்னீர்- மானின் குளம்படி யழுத்தின் குழியிலே நின்ற அற்பமான கலங்கல் நீரைக்கொண்டு; மகராலயத்தின் மயக்கு அறத் தெளித்தலில் கவராது- சமுத்திரத்திலே கலந்துள்ள உவர்ப்பு நுரை முதலாகிய தோட முழுதுங் கெட வேண்டுமென்று 7தெளித் தலை யொக்கும்8.

  15-18. (என்று ……………வீழ) என்று - என்று கூறி; கண் பனி தூங்க- 9கண்ணீர் வார; மெய் மயிர் பொடித்து- சரீரத்துண்டாகிய உரோமம் புளகமாகி; தன்முதல் கலங்கி1- தற்போது முழுதும் கலங்கி; இழந்த நெஞ்சமொடு இறைவன் பாதம் ஓதினன் வீழ- கரைந்த நெஞ்சத்தோடே 2ஆசாரியன் சீர்பாதங்களிலே தோத்திரம் பண்ணி வீழ்ந்து வணங்க;

  18-21. (அவனை………அளவை) அவனை நோக்கி- இங்ஙனம் பரிபாகத்துடனே வீழ்ந்த 3சீடனை அருளோடு நோக்கி; தானும் யாது மாகாது - 4ஆசாரியன் தானும் கிருபை யாலே மிழந்து; இவ்வென ஒண்ணா நீதியன்- 5இன்ன சொரூப முடைய னென்றும் இன்னபடி யிருப்பனென்றும் சொல்லுதற் கரிய நீதிமானான பரமசிவனுடைய; நீதியால்- 6முறைமையாலே சிவத்து வத்தைப் பாவித்து; தனாது தெய்வநாட்டம் தைவரு மளவில்- தனது தெய்வீகத் திருநயனத்தாலே 7கடாக்ஷித்தருளு மளவில்:

  22-26. (குவிவாய் ………………..அருளினன்) குவிவாய் அமையாக் குடம் நிறை தீ நீர்- 1குவிந்த வாயில்லாத 2ஊமைக் குடத்து இனிய நீர் நிறைந்தாற்போலவும்; பகுவாய் யாமைப் பார்ப்பினோடு- பெரிய வாயினையுடைய 3ஆமையாகிய தாய் பார்க்கக் குஞ்சு வளர்ந்தாற் போலவும்; அஃதோ - அந்த அதிசய மாத்திரமோ; தினகரன் ஒளி சேர் சிலை- 4ஆதித்தன் சந்நிதியிலே சார்ந்த சூரியகாந்தக்கல்; கால் தீயின்- தீக்கான்றாற் போலவும்; 5துரியமும் சிறந்த தூயோன் - நின்மல துரியாவத்தைக்கும் அப்பாலாகிய நின்மலனுடைய; 6தூய்மை அருளினன்- 7பதியிலக்கணத்தைத் திருவுள்ளம் பற்றினான்;

  26-27. (அருள் ….இனிது) அருள்பெற்று எழுந்தோற்கு இளிசேர் தீஞ்சொல் இனிது இயம்பினன்- இங்ஙனம் அனுக்கிரகத்தைப் பெற்றெழுந்த சீடனுக்கு இளியென்னும் இசையை யொத்த வசனங்களாலே இனிதாக அப்பதியுண்மையறிதலைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான், எ.று.

  8ஏ, அசை. ஓ, வியப்பு.

  அகவல் 55

  பதி யிலக்கணம்

  1படியடி யடங்காக் கடிகமழ் தாமரைக்

  கட்காண் கடவுளொடஃ தத்துறை யமலனும்

  எண்ணா வியல்பின னிறையென 2முழங்கும்

  விண்ணோ ரண்ணலை வினவின் மண்முதல்

  5.  முப்பது முதலா மூவிரண் டோவா

  ஒப்பி றத்துவ 3மொரீஇய திப்பியன்

  ஒழிவற நிறைந்த வொருவன் 4பழிதீர்

  வண்ண மில்லி யமலன் கண்முதற்

  புலனொடு புணரா னிணையிலி யானென்

  6.  மதத்தின் வாராப் பிறப்பிலி தனக்கென

  நாம மில்லோ னாத னனாமயன்

  கால காலன் கணக்கிலி கடையும்

  மூலமு நடுவு முனிந்தோன் மேலோன்

  ஆகுல மில்லி யகோப னமேகான்

  7.  அபய னபங்க னகம்ப னசஞ்சலன்

  நித்தன் முத்தன் சுத்தன் சுதந்தரன்

  பந்தமும் வீடும் 5பறைந்தோன் சிந்தையொ

  டின்பமுந் துன்பமு 6மிகந்தோ 7னியாவதும்

  புலமின் றுணர்ந்த 8புலவன் கலரெனத்

  8.  தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் றற்பரன்

  9துரியமுந் தொடராத் தூயோன் பெருமைக்

  கண்ட மணுத்தர வணுவண் டத்துடன்

  நின்று நுணங்கிய தண்டாச் சீர்த்தி

  உரைதரு புணரிக் 1கரைகரை யம்பிக்

  9.  காட்சி முதலிய வளவையு மளவறச்

  சேட்பட வகன்றனன் சிவனெனச்

  சூழ்ச்சியி னிறைந்தோர் துணிந்தனர் நெடிதே.

  இஃது இளிசேர்தீஞ் சொல்லாக அருளிச்செய்த பதியிலக்கணம் கூறியது.

  1-4. உரை: (படியடி…….வினவின்) 2படி அடங்கா அடி 3மூவுலகும் அடங்காத பாதத்தினையும்; கடிகமழ் 4தாமரைக் கண்காண் கடவுளொடு -நறு நாற்றத்தையுடைய தாமரைப் பூவையொத்த காணும் கண்ணையு முடையனாகிய திருமா லோடு; அஃது உறை 5அமலனும்- அத்தாமரைப் பூவிடத் திருக்கும் பிரமாவும்; எண்ணா இயல்பினன் இறையென முழங்கும் விண்ணோர் 6அண்ணலை அறிதற்கரிய 7இயல்பினை யுடையான் பதியென்று வேதாகம சாத்திரங்களாற் 8சொல்லப்பட்ட வனாகிய தேவர்கட்குக் கருத்தாவாகிய பரமசிவனை யாராயின் 4-6 (மண்முதல்……….திப்பியன் ) ஓவா- நித்தியமான; ஒப்பில் - உவமையில்லாத; மண் முதல் முப்பது முதலா மூவிரண்டு ஒரீய 9திப்பியன் - பிருதுவி தத்துவமுதலாகவுள்ள தத்துவமுப்பத் தாறுக்கும் 10அதீதனாயிருக்கும் ஆச்சரியத்தை யுடையோன்.

  7.  ஒழிவற நிறைந்த 1ஒருவன் - சருவவியாபகமாய் நிறைந்த ஏகன்;

  7-8. பழிதீர் 2வண்ணம் இல்லி- குற்றமற்ற பொன்மை நீலாதி 3வண்ணங்களில் ஒன்றும் இல்லாதோன்;

  8.  அமலன்- நிருமலனாயிருப்போன்;

  8-9. மண்முதல் 4புலனொடு புணரான்- கண் முதலாகிய இந்திரியங்களோடு கூடாதவன்;

  9.  இணையிலி -5தனக்கு உவமையில்லாதவன்;

  9-10. 6யானென் மதத்தின் பிறப்பிலி- 7யானென்னுமகங் காரத்தாலே வருவது செனனமாதலால் 8அவ்வகங்காரமில்லா மையால் செனனமில்லாதோன்;

  10-11. தனக்கென 9நாமம் இல்லோன்- தனக்கென ஒரு 10நாமதேயமில்லாதவன்;

  12. 11நாதன்- சருவ கருத்தாவாயிருப்போன்;

  11. 12அநாமயன்- 13ஒன்றிலும் பற்றில்லாமையான் நோயில்லா தோன்.

  13. காலகாலன்- திரிகாலங்களுக்குங் 1காலமாயிருப்போன் கணக்கிலி- 2அளவுபடாதோன்;

  12-13. கடையும் மூலமும் நடுவும் 3முனிந்தோன்- கடையும் முதலும் நடுவும் இல்லாதோன்;

  14. மேலோன்- 4சருவதோமுகாமாயிருப்போன்;

  14. ஆகுலமில்லி- 5கலக்கமில்லாதவன்; அகோபன் - கோப மில்லாதோன்; அமோகன்- மோகமில்லாதோன்;

  15. அபயன் - பயமில்லாதோன்; 6அபங்கன்- பங்கிக்கப் படாதோன்; 7அகம்பன்- நடுக்கமில்லாதோன்; 8அசஞ்சலன்- சலனமில்லாதோன்;

  16. நித்தன் - என்றும் ஒருபடித்தாயிருப்போன்; முத்தன்- 9முத்தியையீவோன்;

  17. 10சுத்தன் - தோடமில்லாதோன்; 11சுதந்தரன்- என்றும் தன் வயத்தனா யிருப்போன்;

  18. 1பந்தமும் வீடும் பறைந்தோன்- பெத்தமும் முத்தியும் இல்லாதோன்;

  17-18. சிந்தையோடு 2இன்பமும் துன்பமும் இகந்தோன்- சிந்தனையில்லாமையாற் சுகதுக்கமில்லாதோன்;

  18-19. புலன் இன்று யாவதும் உணர்ந்த 3புலவோன்- புத்தீந்திரியங்களின்றியே சருவபதார்த்தங்களையுமறியும் 4சர்வஞ்ஞன்;

  19-20. கலர் எனத் தணித்தலும் அளித்தலும் 5தடிந்தோன்- வினை நுகர் காலம் நோக்காது கீழோரென்று நிக்கிரகித் தலும் நல்லோரென்று அனுக்கிரகித்தலும் இல்லாதோன்; 6தற்பரன் - தானே பரவத்துவாயுள்ளோன்;

  21. 7துரியமும் தொடராத் 8தூயோன் - நிருமல துரியாவத்தைக்கு அப்பாலாயிருக்குந் தூயோன்;

  21-23. (பெருமைக்கு…………சீர்த்தி) பெருமைக்கு அண்டம் 9அணுத்தர - அனந்தகோடியண்டங்களெல்லாம் நோக்கத் தன் பெருமைக்கு அவை அணுவாகவும்; அணு அண்டத்துத் தன் நுண்மைக்குப் பரமாணுக்கள் அண்டமாகவும், 10உடனின்று நுணங்கிய தண்டாச் சீர்த்தி- 11அவற்றுடனாய் நின்று தேய்ந்து நுணுகிய கெடாத சீர்மையையுடையோன்;

  24-27. (உரைதரு ………….நெடிதே) உரைதரு புணரிக்கரை 1கரை- புகழப்பட்ட வேதாகம சாத்திரமாகிய கடலின் கரையை யணைதற்குச் சொல்லுகிற; காட்சி முதலிய அளவை அம்பியும்- பிரத்தியக்க முதலாகவுள்ள 2சட் பிரமாணமாகிய மரக்கலங் களுக்கும்; அளவற- அளவுபடாமல்; 3சேட்பட அகன்றனன் சிவன் என - தூரமாக அகன்றிருப்போன் பரமசிவன் என்று; சூழ்ச்சியின் நிறைந்தோர் நெடிது துணிந்தனர்- ஆகம விசாரம் மிக்கோர் மிகவும் அறுதியிட்டனர், எ-று.

  ஏ, அசை.

  அகவல் 56

  பதியின் வியாபகம்

  இன்ன தன்மைய னெனைய னென்றினி

  தன்னோற் றேரி னம்ம மின்னவிர்

  பதும ராகப் புதுவெயி னீழல்செய்

  மடநடை நல்லான் வனமுலை வந்த

  5.  மதியிற் றண்மை ஞெலிகோல் வன்றழல்

  பாலிற் றீநெய் பழத்தி னின்சுவை

  பூட்சி யாருயிர் பொருளுரை யெண்ணெய்

  கடிமலர் கஞலிய வொடியா வாசம்

  விம்மித மென்னென் றிசைக்குவ மற்றோ

  6.  நிலநீர் தீகால் வெளியுயிர் யாவும்

  அவையே தானவை தானே யாகி

  விரவியும் விரவா வீரம் விரவிய

  தன்வா ளல்லதை தன்வா ளிழந்த

  மதிமா சூர வொளிகால் பளிங்கின்

  7.  1பூட்சித் தென்னப் புலனொடு புணரா

  தருளுமி னடிக ளென்றனன்

  2மருள் கெட விலங்கிய மறை வல்லோனே.

  இது “காட்சி முதலிய அளவையும் அளவறச் சேட் வகன்ற3” பரமசிவனது 4வியாபகம் கூறியது.

  1-2. உரை: (இன்ன……தேரின்) இன்ன தன்மையன்- முன்னை 5அகவலிற் சொல்லப்பட்ட பரமசிவன்; எனையன் என்று 6இனிது அன்னோன் தேரின்- 7எவ்வியல்பாய் நின்றா னென்று இனிதாக அவனை ஆராயின்;

  2-3. (அம்ம …………..வெயில்) அம்ம- கேட்பாயாக; மின்அவிர் பதுமராகம் 8புது வெயில் - விட்டுவிளங்கா நின்ற ஒளியையுடைய மாணிக்கமும் 9புதிய சோதியும் போலவும்;

  3-4. (நீழல்………….தண்மை) நீழல் செய்மதியின் தண்மை- 1விளக்கத்தைச் செய்யும் சந்திரனும் தட்பமும் போலவும்;

  4.  2ஞெலி கோல் வன்றழல்- தீக்கடை கோலும் அதில் வதியும் வலியதீயும் போலவும்;

  5-6. (மடநடை…………….தீநெய்) மடநடை நல்லான் வனமுலை தந்த பாலின் தீநெய் - மெத்தென்ற நடையையுடைய நல்ல பசுவின் அழகமைந்த முலையிலுண்டாகிய பாலும் இனிய நெய்யும் போலவும்;

  5.  3பழத்தின் இன்சுவை- பழமும் இனிய இரதமும் போலவும்;

  6.  4பூட்சி ஆருயிர் - 5உடலும் நிறைந்த உயிரும்போலவும்; 6உரைபொருள்- சொல்லும் பொருளும் போலவும்; 7எள் நெய்- எள்ளும் எண்ணெயும் போலவும்;

  7.  (கடிமலர்………..வாசம்) கடிமலர் கஞலிய ஒடியா 8வாசம் - அழகிய புட்பமும் அதில் விரவிய கெடாத கந்தமும் போலவும்;

  8.  (விம்மிதம்…………..மற்றோ) விம்மிதம்-9வியாபித்திருக்கு மதை வியந்து; என்னென்று மற்று இசைக்குவம்- திட்டாந்தம் 10இவ்வனைத்துமேயோ வேறே எதை எடுத்துச் சொல்வோம்;

  10-12. (நிலநீர்……..வீரம்) நிலம் நீர் தீ கால் வெளி - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் ஆகிய பூதங்களிலும்; உயிர் யாவும்- சருவான்மாக்க ளிடத்தும்; அவையேதான்- அவை யிற்றைத் தானெனலுமாய்; அவைதானே ஆகி- தன்னை அவை யெனலு மாய்; 1விரவியும் விரவா வீரம்- 2வியாபித்தும் அவையிற்றில் விரவாதிருக்கிற வீரியமும் என்போலவென்னில்;

  12-15. (விரவிய ……………பூட்சித்தென்ன) விரவியதன் 3வாள் அல்லதை- அடுத்த பொருளின் நீலாதிவண்ணங் காட்டும தல்லது; தன் வாள் இழந்த - தன்னொளி தோன்றாதிருக்கின்ற; 4மதிமாசு ஊர ஒளிகால் 5பளிங்கின்- 6சந்திரனும் களங்கமுடைத் தாதலால் ஒளி குறைந்த தென்னும்படிப் பிரகாசத்தைச் செய்கின்ற பளிங்கினது; பூட்சித்தென்ன 7இயல்பு - போல்வதாம் என்று அருளிச் செய்ய;8

  15-17. (புலனொடு…………வல்லோனே) மருள்கெட இலங்கிய மறைவல்லோனே- மயக்கங் கெட விளங்கிய திவ்வி யாகமத் துக்கு அதிகாரியான என் 1சுவாமி; 2புலனொடு புணராது- நீர் அருளிச் செய்த பதியின் தன்மை 3இப்படியானால் எனக்குப் புலப்படாதிருந்த அப்பதியை யறியுமுபாயத்தை; அடிகள் அருளுமின் என்றனன்- தம்பிரானே, அடியேனுக்கு அருளிச் செய்யவேண்டுமென்று சீடன் விண்ணப்பஞ் செய்தான் எ-று.

  மற்று- வினைமாற்று, ஒடு அசை, ஏகாரம்- தேற்றம். ஒ-வியப்பு.

  அகவல் 57

  பதியுண்மை.

  4பூபூத ராதி யோவற வுஞற்றும்

  ஒருவனை யுடைத்துப் பொருவிரி காரியம்

  ஆதலிற் கடம்போ லென்னிற் கோதின்

  றிருங்கட மதனோ டியற்றிய வொருவனை

  5.  ஒருங்குடன் கண்டோ னொழிந்திக லிரிகடங்

  கண்டா லிவையு மவணெனக் கொண்டாங்

  குண்டோ வுலக முஞற்றுட னொருவற்

  கண்டுமற் றிதூஉ முண்டிவ ணெனவெனிற்

  கண்டதின் மான முனக்குக் கொண்டல்கொள்

  6.  1கிரிவளர் கழைஞெலி தூம மதனின்

  எரிவள ரட்டிற் புகையய லெனவுணர்ந்

  தொட்டினை பிறங்க லொள்ளழ லொட்டிய

  2தென்னை விசேட சமனியத் தியாதிற்

  பன்னெனில் விசேட மென்னி னன்னோ

  7.  காட்சிய தலதிலைச் சமனிய மாட்சிய

  தென்றேற் செயலொடு செய்வோற் கண்டோன்

  மன்ற மாண்வினை காணி 3னென்றாங்

  கோதுவ னொருவன் றீதுகு செயலென்

  றற்றேன் மாக மாதிய வினையா

  8.  கெற்றேற் பாக மியைதலிற் கடவற்

  றின்னு மொண்குண மன்னலிற் புவிபோல்

  ஆதிய வழியு மழிபவை செயலென்

  றோதுரு வஃதுந் தீதறு செயலே.

  இது பதியை யறியும் உபாயம் அருளிச் செய்ய வேண்டு மென்று விண்ணப்பஞ் செய்த சீடனுக்குக் கேவலான்னுவய அனுமானப் பிரமாணத்தாற் பதியுண்மை கூறியது.

  1-2. உரை: (பூபூதராதி……உடைத்து) 4பூ பூதர ஆதி- பிருதிவி முதலிய தத்துவ சமூகங்களும் மலை முதலிய பொருள் களுமாகிய பிரபஞ்சம்; 5ஓவற உஞற்றும் ஒருவனை உடைத்து- ஒழியாதே 6செய்வா னொருவனையுடைத்து;

  இது பிரதிஞ்ஞை.

  2-3. (பொருவிரி…………ஆதலின்) 1பொரு இரி காரியம் ஆதலின்- அதற்கு ஏது என்னென்னில், உவமையில்லாத 2காரிய மாயிருத்தலால்;

  இஃது ஏது.

  3. 3கடம் போல்- என் போலவென்னில் கடம் போல;

  இது திட்டாந்தம். இவை மூன்றும் 4கேவலான்னுவய அனுமானம்.

  என்னில் கோதின்று- இங்ஙனம் 5கூறியதற்கு இசைந்தால் குற்றம் இன்றாம்.

  4-8. (இருங்கடம்………..இவணென) இருங்கட மதனோடு இயற்றிய ஒருவனை- பெரிய கடமான அதனையும் செய்வா னொரு வனையும்; 6ஒருங்கு உடன் கண்டோன்-ஓரிடத்தே சேரக் கண்டவன் ஒருவன்; ஒழிந்து 1இகல் இரி கடம் கண்டால்- இவ்விடம் ஒழிந்து வேறிடத்திலே 2உவமனில்லாத பல கடங் களைக் கண்டால் இவையும் அவண் எனக் கொண்டாங்கு - இவையும் அங்ஙனம் இயற்றப்பட்டன என்றே நிச்சயித்தாற் போல; உலகம் உஞற்று 3ஒருவன் உடன் கண்டு மற்று இதூஉம் 4இவண் உண்டு எனஉண்டோ - வேறோருலகத்தைச் செய்வா னொருவனை யுடன்கண்டு இவ்வுலகமும் அங்ஙனம்போல ஒருவனாலே செய்யப்பட்டுள்ளது என்று நிச்சயித்தற்குண்டோ என்று 5விண்ணப்பம்செய்ய;

  8-9. (எனில்…………உனக்கு) எனில்- என்று அங்ஙனம் கூறுவாயேல்; 6கண்டதில் உனக்கு மானம்- 7அனுமானமல்லக் காண், பிரத்தியக்கத்திலே உனக்குக் காட்டற்குப் பிரமாண முண்டு;

  9-13. (கொண்டல்………..என்னை) கொண்டல் கொள் கிரிவளர் கழைஞெலி தூமம் அதனில்- மேகத்தைக் கிட்டிய 8மலையிலுண்டான மூங்கில் இழைந்து தானே தோற்றப்பட்ட தூமத்துக்கு; 9அட்டில் எரிவளர் புகை அயலென உணர்ந்து- நெருப்பும் புகையும் காணப்பட்ட அடுக்களையில் எரியில் வருகின்ற புகை அற்பமாதலாலே அதனை 1உவமமாகக் கூறல் ஒவ்வாதென்று அறிந்தும்; பிறங்கல் ஒள்ளழல் 2ஒட்டியது ஒட்டினை- பருவதத்திலே ஒளியுடைத்தாகிய நெருப்புண் டென்பதற் கிசைந்தாய்; என்னை- இசைய வேண்டுவான் ஏனோ?

  13-14.(விசேடம்……….பன்னெனில்) 3விசேட சமனியத்து யாதிற் பன்னெனில்- 4(விசேட சாமானியத்தினால் இசைந்த தென்று சீடன் கூறினானாக, அங்ஙனமாயின்) விசேடத்திலும் சாமானியத்திலும் 5நீ கொள்ளுமது யாது சொல்வாய் என்று வினவ;

  14-15. (விசேடம்…………இலை) 6விசேடம் என்னின்- கடத்தைச் செய்த செயலுக்கு உலகத்தைப் பண்ணும் செயல் பெரிதாத லால் விசேடந்தான் கொள்வதென்று விடை கூறுவாயாயின்; 7அன்னோ- ஐயோ; காட்சியது அலது இலை- நீ பிரத்தியக்கப் பிரமாணம் கொள்ளுமதுவன்றி அனுமானங் கொண தில்லையாம்;

  15-16 (சமனியம்……………என்றோல்) சமனியம் மாட்சியது என்றேல்- புகையென்னும் சாதி சாமானியத்தால் நெருப்புண் டென்று அழகிதாகக் கொள்வேன் என்பாயாகில்;

  16-18 (செயலொடு …………….செயலென்று) செயலொடு செய்வோற் கண்டோன்- கடத்தைப்பண்ணுகிற செயலோடே செய்பவனையும் கண்டானொருவன்; ஒன்று 1மாண்வினை காணின்- ஒரு பதார்த்தம் மாட்சிமையுடைய காரியமாகிய உருவமாயிருப்பது கண்டால்; ஆங்கு- அவ்விடத்து; மன்ற ஒருவன் 2தீதுகு செயல் என்று ஓதுவன் - அனுமானத்தாலே சிறிதாயிருப்பினும் பெரிதாயிருப்பினும் நிச்சயமாக ஒருவனாலே குற்றமறச் செய்யப்பட்டதென்று 3சொல்வான் காண், என்று சொல்ல;

  19-20 (அற்றேல்…………எற்றேல்) அற்றேல் - அங்ஙன மேயாயின்; மாகமாதிய- ஆகாய முதலாக மேலுள்ள தத்துவங்கள் அருவமாதலால்; 4வினையாகு எற்றேல்- வுவை 5தொழிற் பட்டமை எவ்வண்ணமென்று 6வினவுவாயாகில்;

  20. (பாகம்………..கடவற்று) 7பாகம் இயைதலின்- ஆகாயம் பங்கிக்கப் படுதலானும் 8அது பாகமாகிய நான்கு தத்துவமும் உருவமாதற்கியைதலானும்;கடம் அற்று- கடம்போலே 9காரியமாயேயிருக்கும்.

  21. (இன்னும் …புவிபோல்) இன்னும்- மேலும்; ஒண்குணம் மன்னலின்- அழகிய சத்தமாகிய 1குணமுடைத் தாதலால்; புவிபோல்- பிருதிவி தத்துவம்போல 2உருவ முடைத் தாம் காண்;

  22-23. (ஆதிய………செயலே) 3ஆதிய அழியும்- இத்தத் துவங்கள் ஆதியான படியாலே அழியும்; அழிபவை செயல்- அழியும் பதார்த்தம் ஒருவனாலே ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும்; உருவஃதும் தீதறு செயல்- உருவமாயிருத்தலால் அந்தப் பிரபஞ்சமும் பரமசிவனால் குற்றமறச் செய்யப்பட்டதே; என்று ஓது- 4என்று கொள்வாயாக.

  சமனியம், குறுக்கல், ஆகு, பெயர்ப்பட்டது

  அகவல் 58

  பதியள வளவை மதியோர் வரத

  உணர்தல் வேட்கையெ னளவையி னுணர்த்த

  உணர்வோர்க் குணர்வ தனைவகை யாதலின்

  அறிதவ வசத்துல கறிவனை விநாஅக்

  5.  குறிவரல் போதல் கூடா துறுதேர்

  ஆதி போல வவையினி துய்க்கும்

  5நீதிய னெவன் பதி யேஎற் கோதமல்

  அநேகாந் திகமென் னினைவொடு 6நின்றது

  கன்றுவளர் பாலினுஞ் சென்றின் றீன்கோச்

  6.  சேதன மாதலி னோதிய வுயிர்போஒஞ்

  சுரபி தீம்பால் சொரியிற் புரையில்

  தீம்பால் வளர்த்த தன்றென வோம்பா

  1துரையா டுநரெவர் வரையா வறிவன்

  செயலென விரும்பை2யயலற வுய்க்கும்

  7.  காந்தமென் றெடுத்துக் கோளும் வாய்ந்தன்

  றிரண்டையு மியைக்கு 3முரண்டகு சேதனன்

  இன்றெனி னவைசென் றொன்றா வாகலின்

  சேதனன் 4செய்தியென் றோதிடி னுயிர்கட்

  கேதள வவையே கோதுக வமைக்க

  8.  நாத னென்னை யெனிலுயி ரறியா

  ஈசத் தன்மையு மில்லை யாகில்

  தம்முடைச் செயற்கும் வெம்முரட் கடம்போல்

  5ஒருவனை யிகலிரி துணையென மருவுவர்

  என்றா லிறைமை யிவர்க்கெனை யிறையே

  9.  மன்றார் மாநட மாடி 6யொன்றோ

  வீடடை பவரே கூடுக செயலெனின்

  ஆதிய ரோமற் றனாதிய ரோவே

  றேதமின் முத்திய ரென்னி னாதி

  அன்றெனிற் சித்த சாதன மாதி

  10. என்றிடின் முத்திய தீவோன் முன்னர்

  நின்றன னாக நிகழு மின்றி

  என்றும் பந்த மன்றி முத்தி

  ஒன்றா துணர்வோ ருணர்விற் 7குன்றா

  திருந்திரும் பாசஞ் செற்ற

  11. பெருந்தகை யருளிற் பொருந்துமற் றஃதே.

  இஃது அன்னுவயவெதிரேகி யனுமானத்தால் பதியுண்மை கூறியது.

  1-3. உரை: (பதியளவு…………..ஆதலின்) மதியோர் வரத- ஞானவான்களுக்கு மேலான 8ஞானமுடையோனே; உணர் வோர்க்கு 1உணர்வது அனைவகையாதலின்-2வத்து நிச்சயவிசார முடையவர்க்கு விசாரித்தறியும் அளவைகள் 3முன்பே சொல்லப் பட்ட 4சட்பிரமாணங்களாதலால்; பதி அளவு அளவை- பதிப் பொருளினுடைய அளவாகிய எல்லையை; 5அளவையின் உணர்த்த உணர்தல் வேட்கையென்- அந்தப் பிரமாணங்களாலே அறிவிக்க அறிய விரும்பினேன் என்று சீடன் இவ்வாறு விண்ணப்பஞ் செய்ய;

  4.  அறி தவ- பிரபஞ்சம் ஒரு கருத்தாவையுடைத்தென்று மிகவும் அறிவாயாக;

  இது பிரதிஞ்ஞை; 6இதற்கு ஏது என்னெனில்,4-5. (அசத்து…………கூடாது) உலகு அசத்து- 7பிரபஞ்சம் அசேதனமாயி ருத்தலால்; அறிவனை 8விநாஅ- சைதன்னியனான ஒரு கருத்தாவையின்றி; குறிவரல் போதல் கூடாது- அவயவத் தோடு காணத்தக்க 9சிருட்டியும் சங்காரமும் எய்துதல் கூடாதென்று நிச்சயிக்கப்படுமாதலால்;

  இஃது ஏது, என் போலவென்னில்.

  5-6. உறுதேர் ஆதி போல- 10மிக்க உறுதியையுடைய தேராதி வாகனம் போல:

  இது திட்டாந்தம்.

  1தேராதி தாமே பிரவர்த்திக்கமாட்டா; பிரவர்த்திப்பாரை வேண்டும்; அது போலப் பிரபஞ்சத்தையும் பிரவர்த்திப்பானொரு கருத்தா வேண்டும்; 2இஃது உபநயம்

  6-7. (அவை…………….பதி) அவை இனிது உய்க்கும் நீதியன்- இவ்வுலகங்களை இனிதாகச் செலுத்துகிற முறைமையை யுடையான் யாவன்; அவன் பதி- அவன் பதியாகும்.

  இது நிகமனம்; இவை ஐந்தும் அன்னுவய வெதிரேகி யனுமானம்.

  7-8. (ஏஎல் …………….நின்றது) ஏஎல்- அங்ஙனமேயாயின்; கோதமல் அநேகாந்திகம் குற்றம்- செறிந்திருக்கின்ற 3அநேக விதத்தாலே அசேதனம் பிரவிர்த்தி நிவிர்த்தியெய்தி நிற்றல் கூடுமென்பது; என் நினைவொடு நின்றது- என் நினைவில் உண்டாகா நின்றது என்று சீடன் விண்ணப்பஞ் செய்ய;

  9-13. (கன்று………..இலர்) கன்று வளர் பாலினும் சென்றின்று - கன்றைவளர்ப்பது பாலென நினைக்கும் செயலினும்4 செல்லாது காண்; ஈன் கோ சேதனமாதலின்- கன்றீனும் அந்தப் பசுத்தான் சைதன்னிய மாதலால்; ஒதிய உயிர் போஒம் சுரபி தீம்பால் சொரியின்- சொல்லப்பட்ட பிராணன் போகிய பசு இனிய பாலைச் சுரந்த தாயின்; புரையில் தீம்பால் வளர்த்தது அன்றென ஓம்பாது உரையாடுநர் இலர்- குற்றமில்லாத இனிய பால் கன்றை வளர்த்தன்றென்று பரிகரியாதே சொல்லுவோர் 1இலராவர், காண்.

  13-17. (வரையா……………..ஆகலின்) வரையா அறிவன்- 2சர்வஞ்ஞனான பரமசிவன்; செயல் என- செய்தியைப் போல; காந்தம் இரும்பை அயல் அற உய்க்கும் என்ற எடுத்துக் கோளும்- 3அசேதனமாகிய காந்தக்கல் இரும்பை அந்நியமற வலிக்கு மென்று நீ யெடுத்துச் சொல்லும் திட்டாந்தமும்; வாய்ந்தன்று- பொருளாகமாட்டாது காண்; இரண்டையும் இயைக்கும் முரண்மிகு சேதனன்- காந்தக்கல்லையும் இரும்பையும் முக மொக்கச் சேரவைக்கும் வலிமிக்க சைதன்னியன்; இன்றெனின்- இல்லையாயின்; அவை சென்று ஒன்றா ஆகலின்- அவை தம்மிற் கூட மாட்டா வாதலால் என்று அருளிச்செய்ய;

  18-20. (சேதனன் …………..என்னை) 4சேதனன் செய்தி யென்று ஓதிடின்- சைதன்னியனாயிருப்பான் ஒருவனாலே செய்யவேண்டும் எனில்; உயிர்கட்கு ஏது அளவு- ஆன்மாக்களில் செயல்கட்கு எல்லையில்லையாம்; அவையே கோதுக அமைக்க நாதன் என்னை- அவைதாமே குற்றமறச் செய்ய அமையுமெனில், கருத்தா வொன்று ஏனோ? என்று சீடன் விண்ணப்பம் செய்ய;

  20-24. (எனில் உயிர் …………..ஏனை) எனில் - கருத்தா வொன்று ஏன்தான் என்பாயாயின்; உயிர் அறியா1- ஆன அஞ்ஞானி

  களாதலாலே: ஈசத்தன்மையும் இல்லை- அவ்வான்மாக்கட்குப் பதித்துவமில்லை; 2ஆசில் தம்முடைச் செயற்கும்- குற்றம் நீங்கத் தம்முடைய கன்மபலம் புசித்தற்கும் பக்குவப்படுதற்கும்; வெம் முரண் கடம்போல்- அசேதனமாகிய மிக்க வலிய கடம் போல்; இகல் இரி துணையென ஒருவனை மருவுவர் என்றால்- 3உவ மனில்லாத முதல்வனென்று செய்விப் பான் ஒருவனை வேண்டி நிற்றலால்; இவர்க்கு இறைமை எனை- இவ்வான்மாக்கட்கு கருத்திருத்துவம் எவ்வண்ணம் உண்டாவது;

  24-25 (இறையே………………ஆடி) இறையே- இனி கருத்தாவைக் கேட்பாயாயின்; மன்றார் மாநடம் ஆடி-4திருச் சிற்றம்பலத்திலே மகத்தாகிய திருநடனத்தைப் புரியும் பரம சிவனே யென்று அருளிச்செய்ய;

  25-28 (ஒன்றோ…………என்னின்) 5வீடு அடைபவர் செயல் கூடுக எனின்- முத்தராயிருப்பாராலே பஞ்சகிருத்தியம் செய்யப்

  படும் என்பாயாயின்; ஒன்றோ- அந்த முத்தான்மாக்களுக்கு அளவில்லையே, 6அவர் பலரல்லவோ; வேறு ஏதமில் முத்தியர் ஆதியரோ அனாதியரோ- அங்ஙனமாயின் வேறாகிய குற்றமற்ற முத்தான் மாக்கள் ஆதியாக முத்தரோ, அன்றியே அனாதியாக முத்தரோ; என்னின்- 7என்று வினவுமிடத்து;

  28-33. (ஆதி…………………ஒன்றாது) ஆதி அன்று எனில்1- அனாதி முத்தன் செயல் என்னில்; சித்த சாதனம்- அவ்வார்த்தை என் பக்கம் என்று அறிக; ஆதி என்றிடின்- ஒருநாளிலே முத்தி பெற்றோராலே செய்யப்படும் எனில்; முன்னர் முத்தியது ஈவோன் நின்றனனாக நிகழும்- அவர்கட்கு முன்பே முத்தியைப் பிரசாதித்தானொருவன் உளனாக வேண்டும்; இன்றி- இப்படி யொரு கருத்தாவையின்றி; என்றும் பந்தமாய்க் கிடக்கு மஃதன்றி, 2முத்தி ஒன்றாது- முத்தி அடைவதும் இல்லையாம்; ஆகையால்,-

  33-35. (உணர்வோர் ………….அஃதே) உணர்வோர் உணர்வில் குன்றாதிருந்து - 3இனிப் பதியுண்மை யுணர்ந்து தியானிப் போர் உணர்வின்கண் 4ஒளியாமலே அமர்ந்து; இரும் பாசம் செற்ற பெருந்தகை 5அருளின்-பெரிய பாசச்சேதம் பண்ணுதற்குரிய பெருந்தகையாகிய பரமசிவனுடைய பிரசாதத் தாலே; அஃது பொருந்தும்- அந்த முத்தி கூடும் எ-று.

  மற்று, வினைமாற்று, ஓகாரம், எதிர்மறை, ஏ, அசை.

  அகவல் 59

  1எல்லாத் தொழிலு மிறைவற் குறித்த

  2இல்லாச் சேதன மாகி யெங்கணும்

  நின்றுழி நில்லாத் தகைத்தா னின்றுழி

  நிற்கப் படுவதி யாதே யஃதே

  5. முற்பட வமைந்தது முயற்சியு மின்றே.

  இது 3கேவல வெதிரேகி யனுமானத்தாற் பதியுண்மை கூறியது.

  1. உரை: (எல்லா …………..குறித்த) எல்லாத் தொழிலும்- 4சருவ காரியங்களும்; இறைவற் குறித்த5 - ஒரு கருத்தாவைக் காட்டாநின்றன;

  2.

  இது பிரதிஞ்ஞை. இதற்கு ஏது என்னெனில்,-

  2-3. (இல்லா …………..தகைத்தால்) இல்லாச் சேதனமாகி எங்கணும்- அசேதனமாய் எவ்விடத்தும்; நின்றுழி நில்லாத் தகைத்தால்- ஒரு படித்தாயில்லாத தன்மையால்;

  இஃது ஏது. 6இவை இரண்டும் கேவலான்னுவயம். இனிக் கேவல வெதிரேகி வருமாறு:-

  3-5. (நின்றுழி……இன்றே) நின்றுழி நிற்கப்படுவது யாது- நின்றவிடத்தே 7ஒருபடித்தாய் நிற்க அமைந்தது யாதொன்று; அஃது முற்பட அமைந்தது- அஃது அனாதியாயுள்ளது, 8ஒருவராற் செய்யப்பட்டதுமன்று காண் எ.று.

  ஏ. அசை. இல்லாச் சேதனம் என்றது அசேதனம் என்றபடி.

  அகவல் 60

  பதிசங்கற்பம்

  விந்து வவத்தை விசேடத் தெந்தை

  கவவுசிவ பேதந் தவவளித் தனையது

  சேதன மன்மையிற் கோதறச் செயலின்

  றச்செயற் கமல னென்னின் மற்றவற்

  5.  கெய்திடும் விகாத மெய்த 1மையுகாஅ

  விகாஅ ரத்தைத் தவிரத் தவிரா

  தென்னை யென்னிற் பன்னுவ மன்னோ

  பொங்கிய வினையிரு வகைத்துச் சங்கற்

  பத்தொடு கரணத் தலர்கடங் குலாலன்

  6.  எற்படு சங்கற் பத்தின் முற்பட

  இயற்றல னிறைவன் சங்கற் பத்தின்

  மயக்கற விந்துவைத் துயக்கறக் கலக்கல்

  செய்வ னோவான் செய்தற் கைய

  காரண மாக மெவையுஞ் சேர்தல்

  7.  செல்லா னாக லானு 2நல்லியல்

  அமல னாக லானும் விமலம

  தாக வம்ம வாக மேவுநர்

  போகல ரியாவுந் தீதுக வியற்றல்

  இல்லோ ராக மியற்ற வல்லோர்

  8.  அல்லோ ரென்ன லாக 3மெல்லாஞ்

  செய்தியைத் தடுத்தற் கைய மின்ற

  தின்றே லெவையு மியற்றற் கொன்றுங்

  குன்றா தெவணெனின் மன்ற4 தன்றனு

  ஆக வியற்றிய வறிவன் போகிய

  9.  தேக னல்லகொல் சிவனகி லத்தைச்

  செய்வனின்னு மைய கேண்மோ

  மெய்யுட னியைவோர்க் கல்லதை வினைமற்

  றுய்யா தென்னி னுடல்கா ரியமக்

  காரியஞ் செய்வோ னின்றி வாரா

  10. தவனுடன்1 முதலிற் சிவணு மற்றவண்

  ஆக வவத்தைத் திறனல் லாத

  போகா தாகலிற் புகன்முதற் றொடக்கிற்

  கெல்லா வாகமு 2மிரித்திணை யிறந்த

  செல்லா நல்வலி சிறந்த3 வல்லோன்

  11. 4ஈச னாக லியையும்

  ஆசின் றாயுநர் 5ஆயுங் காலே

  இஃது அனுமானப் பிரமாணத்தால் “பூபூதராதி6” என்னும் திருவகவல் முதல் பிரபஞ்ச சிருட்டி கொண்டு பதியுண்மை கூற இவன் சிருட்டிக்கிறபடி எங்ஙனே யென்று சீடன் விண்ணப்பிக்க அவன் நிட்களனாயிருந்தே சிருட்டிப்பான் என்று கூறியது.

  1-2. உரை: (விந்து………..அளித்தனை) எந்தை- என் சுவாமியே; கவவு சிவபேதம்- பரமசிவனுடனே கூடியிருக்கின்ற சத்தி; விசேடத்து- சங்கற்பத்தாலே; 7விந்து அவத்தை- 8சுத்த மாயையினுடைய கலக்கத்திலே யுண்டானது பிரபஞ்சம் என்று; தவ அளித்தனை- மிகவும் அருளிச் செய்தாய்9;

  2-3. (அது…………..செயலின்று) அது- அந்தச் சுத்த மாயை தான்; 1சேதனம் அன்மையில் கோதறச் செயலின்று- அசேதனமாதலாலே குற்றமற யாதும் செய்யமாட்டாது;

  4-5. (அச் செயற்கு………….விகாரம்) அச்செயற்கு அமலன் என்னின்- அந்தச் செயல்நின்மலனான பரமசிவனாலே செய்யப் படும் என்னில்; 2விகாரம் எய்திடும்- அவனுக்கு விகாரம் கூடும்;

  5-7. (எய்த………….மன்னோ) எய்த - அவனுக்கு 3விகார முண்டாகவே; மையுகாஅ விகாரத்தைத் தவிரத் தவிராது என்னை என்னின்- 4குற்றத்தை விடாத அவ்விகாரத்தையொழிய விடாது எய்தும் தூடணத்துக்கு முடிவு என் என்பாயாகில்; 5பன்னுவம்- சொல்லுவோம், கேட்பாயாக.

  8-9. (பொங்கிய………கரணத்து) பொங்கிய வினை இருவகைத்து- 6மிகுந்து தொழிற்படும் சிருட்டிவினை இருவகைப் படும்; 7சங்கற்பத்தொடு கரணத்து- அவை சங்கற்ப சிருட்டி யென்றும் கரண சிருட்டி யென்றுமாம்;

  9-13. (அலர்……….ஓவான்) அலர் கடம் -விரிந்த கடங்களை; குலாலன்- குயவன்றான்; 1ஏற்படு சங்கற்பத்தின் முற்பட இயற்றலன்- 2விளக்க முண்டாகச் சங்கற்பத்தினாலே முதன்மை யறச் செய்ய மாட்டுவானல்லன்; இறைவன்- பரமசிவன்; சங்கற்பத்தின்- தனது திவ்ய சங்கற்ப மாத்திரை யானே; விந்துவை மயக்கறத் துயக்கறக் கலக்கல் செய்வன்- விந்துவை 3மயக்கமும் வருத்தமும் இல்லையாய்க் கலக்காநிற்பன்; ஓவான்- ஒருகாலும் 4விகாரியாகாண்;

  13-14. (செய்தற்கு……….காரணம்) ஐய - பிள்ளாய்; செய்தற்குக் காரணம்- பரமசிவன் சங்கற்பத்தாலே செய்தற்குக் காரணம் கேளாய்;

  14-17. (ஆகம்………….அம்ம) 5ஆகம் எவையும்- கரணத்தினாற் செய்தற் கியன்ற 6மந்திரரூப முதலாகவுள்ள தேகம் யாதும்; சேர்தல் செல்லான் ஆகலானும்- எடுத்துக் கொள்ளா னாகலானும்; 1விமலம தாக 2நல்லியல் அமலன் ஆகலானும்- சுத்தமாக நல்ல இயல்பையுடைத்தாகிய நிருமல னாகலானுங் காண்;

  17-18. (ஆகம்………..இயற்றல்) ஆகம் மேவுநர்- சரீரத்தைப் பொருந்தியோர்; யாவும் 3தீதுக இயற்றல். போகலர்- 4அஃது ஏகதேசப்பட்டமையாலே கரணங்களாலே ஒன்றைச் செய்வதன்றி யாவற்றையும் குற்றமறச் செய்யமாட்டுவாரல்லர்;

  19-20. (இல்லோர்……………என்னல்) இல்லோர் 5இயற்ற வல்லோரல்லர் என்னல்- சரீரமில்லாதோர் அனைத்தையும் செய்தற்கு வல்லாரல்லர் என்று சொல்லற்க:

  20-23 (ஆகம்………….குன்றாது) ஆகம் எல்லாம் செய்தியைத் 6தடுத்தற்கு ஐயமின்று- ஆகவே சரீரமானது பிரபஞ்சம் அடங்கலும் செய்வதற்கு விக்கினமாயிருப்பது என்பதற்கு ஐயமில்லை; அஃதின்றேல்- அத்தேகம் இல்லையாயின்; எவையும் இயற்றற்கு ஒன்றும் குன்றாது- எல்லாவற்றையுஞ் செய்தற்குச் 7சிறிதும் தாழ்வு படாது;8

  23-26. (எவண்…………செய்வன்) எவண் எனில்- அஃது எவ்வண்ணமென்னில்; மன்ற- நிச்சயமாக; 1தன் தனு ஆக இயற்றிய ஒருவன்- தனது தேகத்தைக் கரணமாகக் கொண்டு 2ஒவ்வொன்றைச் செய்கிற சைதன்னியன்; போகிய தேகன் அல்ல கொல்- அரூபியாகிய ஆன்மாவல்லனோ; சிவன்- பரமசிவன்; அகிலத்தைச் செய்வன்- இப்படியால் அரூபியாயிருந்தே பிரபஞ்சம் அனைத்தையும் செய்யா நிற்பன்;3

  26. ஐய இன்னும் கேண்மோ- பிள்ளாய், நீ இன்னமும் கேட்பாயாக.

  27-30. (மெய்யுடன்..சிவணும்) மெய்யுடன் இயைவோர்க்கல்லதை 4வினை உய்யாது என்னின்- சரீரத்தோடு கூடியிருப்போர்க் கல்லது செயல் கூடாது என்னில்; உடல் 5காரியம்- அச் சரீரம் காரியமாயிருத்தலால்; அக்காரியம் செய்வோன் இன்றி வாராது- அக்காரியந்தான் செய்வோன் ஒருவனையின்றி வருவதில்லை

  யாதலால்; அவனுடன் முதலிற் சிவணும்-6 தன்னை வர்த்திக்கு மவனையே யன்றி அவனுக்குக் காரணத்தையும் காட்டும்;

  30-32. (மற்று……………ஆகலின்) அவணாக - அப்படியாகவே; அனவத்தைத் திறனல்லதை 1போகாதாகலின்- 2அனவத்தைப் பட்டு ஒருவரையொருவர் சிருட்டிக்குமதுவல்லது மூலமான ஓர் ஆன்மாவுளன் எனக் 3காணமாட்டாதாம் ஆதலால்;

  32-36. (புகல்………..அறியுங்காலே) புகல் முதல் தொடக்கிற்கு- சொல்லப்பட்ட முதற் 4பஞ்சகிரு த்தியத்துக்கு; எல்லா 5ஆகமும் இரித்து - விந்துநாத முதலான தேகமெல்லாம் விடுத்து; இணை இறந்த செல்லா நல்வலி6- உவமையில்லாத கெடாத 7அருட்சத்தியுடனே கூடிய; சிறந்த வல்லோன் ஈசன் ஆகல் இயையும்- சருவசத்தி பரனாகிய பரமசிவன் கருத்தா வென்பது பொருந்தும்; ஆசின்று ஆயுநர்8 ஆயுங்கால்- 9

  ஆகமங்களைக் குற்றமற ஆராய்ந்த நல்லோர் தாம் ஆராயுமிடத்து எ-று.

  மன், ஓ, மற்று, அசை.

  அகவல் 61

  ஞான நாட்டம்

  ஏணி போகிய 1கீழ்நிலைப் படலமும்

  உம்பர் போகிய வுயர்நிலை யுலகமும்

  எண்டிசை மூன்று தண்டாக் காலமும்

  உளப்படப் பொதிந்து நிலைக்குரி மரபின்

  5.  அவத்தை நீங்கிய தவத்தின் சார்வைக்

  காண்டல் வலியோ ரின்மையின் 2மாண்ட

  ஞான நாட்டக் 3கன்றி யிலகா

  யாணர்த் 4திணையிரி நோக்கங் காணான்

  இருளற விரிய விரிகதிர் பரப்பிய

  6.  ஒருதேர் நேமிப் பருதி வானோற்

  காணா வாறு போலச் சேணென

  இடைகடை 5முதலிறந் துடைதர வளவை

  ஒழிவற நிறைந்தோ னின்றுங் குழிகட்

  கூளி யூர்ந்த வாடவற் றிரிந்த

  7.  ஆள்வினை காட்சித் தலகைகண் டிலதெனக்

  காட்சியிற் கஞலிய வெவற்று மாட்சியின்

  நின்றனன் பரம காரணன்

  மன்ற நன்றறி யொன்றினை யுணர்ந்தே.

  இது நிட்களனா யிருந்தே அனைத்தையும் செய்கிற கருத்தா சருவான்மாக்களுக்கும் 6திருசியனல்லாமைக்குக் காரணம் என்னென்று வினவ ஞானநாட்டம் உடையோர்க் கன்றிக் காண வொண்ணாது என்று காரியம் கொண்டு காரணம் உணர்ந்து பதியுண்மை கூறியது.

  1-6.உரை; (ஏணி…………..இன்மையால்) 1ஏணி போகிய கீழ்நிலைப் படலமும்- 2எல்லை யிறந்த ஆடகேசுர புவன முதலாகக் கீழுற்ற தலங்களையும்; உம்பர் போகிய உயர்நிலை யுலகமும்- 3மேலே உள்ளனவாகிய 4அநாகிருத புவன முதலாகிய உலகங்களையும்; எண்திசை- திக்குகள் எட்டையும்; 5தண்டாக் காலம் மூன்றும்- பூத பவிஷிய வர்த்தமானங்களாகிய பிறழாத காலங்கள் மூன்றினையும்; உளப்படப் பொதிந்து- தன்னிடத்தே அகப்படப் பொதிந்துகொண்டு 6நிலைக்குரி மரபின்- நித்தியத்துக்குரிய முறைமையினால்; அவத்தை நீங்கிய தவத்தின் சார்வை- 7அப்பிரயோசனமாகிய முயற்சி யல்லாத பெரிய தவத்தினருக்குப் புகலிடமாயுள்ள பரமசிவனை; காண்டல் வலியோர் இன்மையின்- கண்ணாற் காணவல்லோர் இல்லை;

  இது பிரதிஞ்ஞை.

  இதற்கு ஏது என்னென்னில்.-

  6-8 1(மாண்ட……யாணர்த்து) மாண்ட 2ஞான நாட்டக்கு அன்றி- மாட்சிமை யுண்டாகிய ஞானக் கண்ணுக் கன்றி; இலகா 3யாணர்த்து- 4விளங்கத் தோன்றாத புதுமை உடைத்தாதலால்;

  இஃது ஏது; என்போல வென்னில்-8-11. (இணையிரி………….போல) இணையிரி 5நோக்கம் காணான்- உவமை யிறந்த கண் தெரியாத குருடன்; இருள் அற 6இரிய - உலகத்தில் அந்தகாரமானது அறப் போகவும்; ஒரு நேமித்தேர்- ஓராழித்தேரை யுடைய; விரிகதிர் பரப்பிய7 பருதிவானோன் காணாவாறு போல- விரிந்த கிரணங்களைப் 8பரப்பி வரும் சூரியதேவனைக் காணாதவாறு போல.

  இது திட்டாந்தம்; இவை மூன்றும் 9கேவல வெதிரேகி யனுமானம்.10

  11-13. (சேணென……….இன்னும்) சேண் என முதல் இடை கடை இறந்து- பரமாகாயம் போல முதல் நடு இறுதி யின்றியே; 1அளவை உடைதர- பிரமாண ரகிதனாய்; ஒழிவற 2நிறைந்தோன்- சருவ வியாபகனாய் எங்கும் நிறைந்துள்ளவன் 3நின்றபடிக்கு; இன்னும்- இதற்கு இன்னும் ஒரு திட்டாந்தம் வருமாறு-13-18. (குழிகண்……….உணர்ந்தே) குழிகண் கூளி ஊர்ந்த ஆடவன்- குழிந்த கண்ணை யுடைத்தாகிய பிசாசு 4பிடிக்கப் பட்ட புருடனிடத்து; 5திரிந்த ஆள்வினை காட்சித்து- வேறு பட்ட செய்தி காண்பதல்லது; அலகை கண்டிலதென- அப்பிசாசு கண்ணிற்குப் புலனாகாததுபோல; காட்சியிற் கஞலிய எவற்றும்- காணுதற்குப் பொருந்திய பொருள்கள் எல்லா வற்றினும்; 6மாட்சியின் நின்றனன் - 7காணப்படாது அழகிதாக நின்றான்; பரம காரணன்- பரமகாரணனான பரமசிவன் என்று; மன்ற- 8தெளிவாக; ஒன்றினை உணர்ந்து நன்று அறி- 9ஏகாக்கிர சித்தமாய் இருந்துணர்ந்து மிகவும் அறிவாயாக எ-று.

  10இன், அசை, ஐகாரம், சாரியை.

  அகவல் 62

  சக்தி சங்கற்பம்.

  இறைசிவ னெனவரு ளுறைபதி யறைதன்

  முறையல வன்மையின் 1மூர்த்தி கறைகடி

  கரண மின்மையின் முரண்மிகு கடாவிடை

  அறிமதி கால மமூர்த்த முறுபலந்

  5.  தருமது போலத் தலைவன் மூர்த்தத்

  திரிபின னானு 2மின்றொழில் பொருவிரி

  இச்சையி லியற்று மெனினவ் விச்சை

  நற்றொழிற் செய்தி நயவா தாங்கெனிற்

  கண்டிசின் யோகக் கலைத்துறை நீந்திய

  6.  ஒண்டிற லியோகர் போலத் தண்டா

  விச்சை யிறைக்கிவ 3ணெற்றெனிற் சொற்றகு

  சல்லியந் 4தாளற வாங்கிற் றெல்லேய்

  புலமின் றாயினு நலமிலி கட்டகம்

  அன்ன தானு மதன்பா லின்றொழில்

  7.  மன்னா தானு மற்றது வந்த

  செய்தி கட்காண் 5பெய்யா வுவமையின்

  பெருத் தெனைப் பலவா முருத்திகழ் 6தொழிறான்

  இருத்தல் கூடா திருத்திய கடம்போல்

  ஆதலிற் காரண மொன்றுண் டாமென

  8.  ஓதிடிற் கரும மதுமற் றாதற்

  கேதிட ரெனிலது கோதி லசேதனம்

  அருமறை யறையு 7முருவிலி யருவுரு

  உரிவவி ரீச னொளிதிகழ் சதாசிவன்

  சாந்த 8னென்றினி தம்ம

  9.  ஏந்திய கொள்கை யிசையி னானே.

  இது காரண ரகிதனுமாய் அமூர்த்தனுமாய் இருக்கிற பரம சிவனைக் கர்த்தா என்று சொல்லுதல் முறைமை யல்ல என வினவ, அமூர்த்தனாயிருந்தே பிரபஞ்சத்தைச் சத்திகளாலே செய்வன் என்று கூறியது.

  1-3. உரை. (இறை சிவன்…………கடா) அருள் உறை பதி- கிருபைக்குப் புகலிடமாயுள்ள குருநாதனே; சிவன் இறை என அறைதல் முறையல - பஞ்ச கிருத்தியம் செய்வதற்குப் பரம சிவன் கருத்தா என்று சொல்லுமது பொருந்தி யிருந்த தில்லை; மூர்த்தி அன்மையின்- அவன்1 வடிவுடைய னல்லாமையின்; கறைகடி 2கரணம் இன்மையின்- பிரபஞ்சத்தை உண்டு பண்ணுகைக்குக் குற்றமற்ற கரணங்கள் உண்டாகமாட்டா. ஆதலால்; முரண்மிகு கடா- பொருந்தாமை மிக்க கடாவாயிருந்தது என்று சீடன் விண்ணப்பம் செய்ய:

  3. விடை அறிமதி- இதற்குப் பரிகாரம் கேட்பாயாக;

  4-7. (காலம்….இயற்றும்) காலம் 3அமூர்த்தம்- கால மானது வடிவின்றி இருந்தும்; உறுபலம் தரும்- 4அவ்வக் காலத்திற்குரிய பிரயோசனங்களைக் கொடுக்கும்; அதுபோல- அதுபோலவே; தலைவன் மூர்த்தத் திரிபினனானும்- கருத்தா வாகிய பரமசிவனும் 1மூர்த்தத்துக்கு வேறுபட்டிருந்தானா யினும்; இன்றொழில்- இனிதாகிய பஞ்ச கிருத்தியத்தை: 2பொருவு இரி இசையில் இயற்றும்- உவமை யில்லாத இச்சா சத்தியால் செய்யா நிற்பன்;

  7-8. (எனில்……………ஆங்கெனில்) எனில்- என்று இவ்வாறு அருளிச் செய்யின்; அவ்விச்சை ஆங்கு நற்றொழில் செய்தி 3நய வாது- அந்த இச்சா சத்தி அவ்விடத்தே 4நல்ல கிருத்தியமாய்ச் செயற்படாது; எனில்- என்கின்றாயாகில்;

  9.  கண்டிசின்- காண்பாயாக;

  9-11. (யோக………..இச்சை) யோகக் கலைத்துறை நீந்திய 5ஒண்டிறல் யோகர் போல- யோக சாத்திரத்தை முடிய வறிந்த 6அழகிய வலிமையுடைய யோகிகட்கு யோக சித்தி அட்டமா சித்திகள் செய்யுமாறு போல: தண்டா இச்சை- கர்த்தாவினது 7கெடாத 8இச்சாசத்தி இலக்கணம் என்று அருளிச் செய்ய;

  11. 1இறைக்கு இவண் ஏற்று எனில்- யோகிகளைப் போலப் பரமசிவனுக்கு இராகமுண்டாகவற்றோ, இவ்வியல்பு பொருந்தும் படி என் என்பாயாகில்;

  11-16. (சொற்றகு……….செய்தி) 2எல்லேய் புலமின்றா யினும்- ஒளியையுடைத்தான கரணமில்லா திருந்தேயும் சொல் தகு சல்லியம் தாள் அற வாங்கிற்று நலமலி கட்டகம் - சொல்லப்

  பட்ட இருப்புத் தாளை 3வலியறத் தன்பால் சூழ இழுத்தது அழகிய காந்தக்கல்லே; அன்னதானும்- அத்தன்மைத் தாயினும்; 4அகன்பால் இன்றொழில் மன்னாதானும்-அதனிடத்தே இனிய தொரு கிரியை 5தோன்றாதிருக்கவும்; அது வந்த 6செய்தியின்- அந்த இருப்புத் தாள் காந்தக் கல்லினிடத்திலே செறிந்த 7செய்தி

  போல என அறிக.

  16-20. (கட்காண்பு ……………….ஓதிடின்) கண் காண்பு எய்யா -கண்ணால் காண்பதற்கு அளவுபடாத; உவமையில் பெருத்து எனைப் பலவாம் உருத்திகழ் தொழில் - உவமை யில்லாத பெருமையுடைத்தாகி 8நானாவித வுருவமாய் விளங்கு கின்ற 9பிரபஞ்சகிருத்தியமானது; இருத்தல் கூடாது- தானே உண்டாகுதல் கூடாதாம்; திருத்தியகடம் போல்- ஒருவன் திருத்திச் செய்த கடம்போல; ஆதலின்- ஆதலாலே; காரணம் 1ஒன்று உண்டாம்- 2பிரபஞ்சத்திற்கு உபாதானமாகிய மாயையிடத்தே ஒன்றாகிய சத்தி 3உண்டாகவேண்டும்; 4என ஓதிடின் - என்று சொன்னால்;

  20-21. (கருமம்………….இடர்) 5கருமம் அது ஆதற்கு இடர் ஏது- 6அக்கன்ம சுத்தியே கருத்தாவாக அமையாதோ அதற்கு. விக்கினம் என்னென்று விண்ணப்பஞ் செய்ய;

  21. எனில் அது கோதில் அசேதனம்- கன்மமே கருத்தா வாக அமையுமென்பா யாயின், அது , குற்றமற்ற 7அசேதனமல்லவோ?

  22-25. (அருமறை…………..இசையினானே) சாந்தன் உருவிலி - சாந்தனாகிய சிவன் 8நிட்களமாயிருப்பர்; ஒளிதிகழ் சதாசிவன் அருவுரு- பிரகாசம் விளங்கிய சதாசிவ தேவர் 9நிட்கள சகள மாயிருப்பர்; அவிர் ஈசன் உரு - விளங்குகின்ற மகேசுரதேவர் சகளமாயிருப்பர்; ஏந்திய கொள்கை இசையினான்- 1இவர் 2மூவரையும் தமக்குச் சுதந்திரத் திருமேனியாகக் கொண்ட கோட்பாட்டையுடைய கீர்த்தியையுடை யோனாகிய பரம சிவனே கருத்தா; என்று இனிது அருமறை அறையும்- இனி தாக அரிய ஆகமங்கள் 3சொல்லா நின்றன எ-று.

  மதி, சின், மற்று- அசை.

  அகவல் 63

  பஞ்ச கிருத்திய பதி அவிகாரி.

  அடையான் விகார 4மாயினுஞ் சுடரவன்

  சுடர்வீழ் தாமரைத் தோடினி தலர்த்தவும்

  மற்றவை குவிப்பவு முலர்த்தவும் கொற்றக்

  கிரணத் ததுவென வரணமில் கூற்றின்

  5.  முரண்டொலை யொருவனு முரியாச் சத்தியின்

  அண்ட ரண்டமற் றெண்டர லிடைவ

  செய்தக் கண்ணுந் 5திரிவிலன் வெய்யோன்

  இலங்குகதி ரீரமட் 6டிரளை மெழுகை

  நலங்கொளக் கரைத்து நவையற வலித்தற்

  6.  கொன்றே போலச் சென்றகல் பறியாச்

  சத்தியிற் பிணித்தற் கப்பிணி யவிழ்த்தற்

  கன்ன சத்தி 1யறியிற் பன்னுவம்

  பொருவொடு போகா வொளியொடு பொருந்தி

  அளவற வகன்று விளைவதோர் சலனம்

  7.  இன்றி யென்று நின்றாங் கொன்று

  மறைப்பதை யின்றி யுறப்பெருத் தகன்ற

  உருவொடு செறியாது 2வெருவரு மராகம்

  ஆதிய வணையா வலரைம் பூதம்

  ஊர்தரு விந்துவி னேர்தர வியைந்த

  8.  செய்தியிற் 3றிகழ்ந்தும் பிறிதிற் சிறிதும்

  உய்யா தாசை யொளிமுக மெங்கணும்

  ஆகி முதலிடை கடையிற் போகா

  தியாவதோர் பந்தமு மிரீ இப்போவதும்

  வருவது மிறந்து மேலாய் முடிந்த

  9.  4திருவா யெல்லை யாகி யொருவா

  நுணங்கிய தரனை யிணங்கி வணங்கா

  5விந்துவில் வைகரி யாதி விருத்தியில்

  வந்தா ணவமான் மாவை மறைப்பது

  போல விகாரித் தது6 மற் றஃதெது

  10. 7போலு மெனிற்கட றண்கதிர் வெஞ்சுடர்

  ஒட்டிய காலை யுருத்தெழு திரையின்

  விட்டுய ரோதை 8விராவுபு முற்ற

  அந்தர 9மறைவது போலப் பொங்கிய

  வாறென வமோக னீறில் சத்தி

  11. ஒன்று பலபோல நின்றியல் பெவணெனின்

  வென்றி விரிச்சிகன் விரிகதிர்க் கோடையிற்

  கோடலி னொன்றே யாகி யிச்சை

  1ஆடா னாகி யாடுநன் போலப்

  பலபோற் 2றோன்ற லலர்வா ளமலன்

  12. இச்சைசெய் சத்தி யிவணமற் றவனோ

  காரியத் திசைந்த பேரிசைப் பெருவலி

  அறிவின் றறிவதை யொத்துப் பிறிவின்

  றிருந்தொழி லிலதஃ தருந்தொழில் 3சிவணல்

  அருமறை யகத்து முலகத் தெங்கணும்

  13. 4வருமறி சிந்தா மணிகற் பகமிவை

  வேண்டுநர் வேண்டிய வாண்டாண் டுதவல்

  அன்ன தாய வளவி லரனுடைப்

  பன்னா ஞானப் படரடு பெருவலி

  இலங்கிருங் கிரியையின் விதியின்

  14. நலந்தரு காம நல்குமன் னயந்தே.

  இது 5பஞ்சகிருத்தியச் செயலால் விகாரம் கூடுமென்று வினவப் பரமசிவன் அவிகாரியாயிருந்தே ஏக சத்தியாலே பிரபஞ்ச காரியஞ் செய்வன் என்று சொல்லியது.

  1-4. உரை: (அடையான்………அதுவென) 6சுடரவன் விகாரம் அடையான் ஆயினும்- ஆதித்தன் அவிகார முடையனாயினும்; சுடர்வீழ் தாமரைத்தோடு இனிது அலர்த்தவும்- 1ஆதபத்தை விரும்புதலையுடைய தாமரை மொட்டை இனிதாக மலர்விக்கவும்; மற்றவை குவிப்பவும்- ஆம்பல் முதலான ஏனைப் புட்பங்களை மொட்டிப்பிக்கவும்; உலர்த்தவும்- பறித்த புட்பங்களை 2உணத்தவும்; 3கொற்றக் கிரணத்து- அவனது கீர்த்தியை யுடைத்தாகிய கிரணத்தாலே 4யாம்; அது என- அதுபோல;

  4-7. (அரணமில்…………திரிவிலன்) 5அரணம் இல் கூற்றின் முரண்தொலை ஒருவனும்- பரிகாரமில்லாத கூற்றுவனுடைய வலியைக் கெடுத்த பரமசிவனும்; முரியாச் சத்தியின்- 6கெடாத சத்தியினாலே;அண்டர் அண்டம் மற்று எண்தரல் இடைவ செய்தக் கண்ணும்- தேவருலகமும் மற்றும் எண்ணிறந்த அண்டங்களும் செய்தானேயாயினும்; திரிவிலன்- அவிகாரி யாயே இருப்பன்.

  7-11. (வெய்யோன்…………அவிழ்த்தற்கு) வெய்யோன் இலங்கு கதிர் ஈரமண் திரளை நவையற வலித்தற்கு- இந்த ஆதித்தனுடைய விளங்குகின்ற 1ஒளியானது ஈரமண்ணின் திரளைக் குற்றமற வலிக்கப் பண்ணவும்; மெழுகை நலங்கொளக் கரைத்து- வலியுண்டான மெழுகை 2நன்றாக உருக்கவும்; 3ஒன்றே போல- தான் ஒன்றேயாய் இருத்தல் போல; சென்று அகல்பு அறியாச் 4சத்தியின்- 5ஒருகாலத்தும் கூடுதலும் பிரிதலும் அறியாத ஏக சத்தியாலே; 6பிணித்தற்கு அப்பிணி அவிழ்த்தற்கு- 7சிருட்டியாதி தொழில்களைப் பரமசிவன் செய்யா நிற்பன்;

  12-18. (அன்ன…………….அணையாது) அன்ன சத்தி அறியின் பன்னுவம்- 8அத் தன்மைத்தாகிய சத்தி இருக்கும்படி அறிய வேண்டில் அதனைச் சொல்வோம்; 9பொருவொடு போகா ஒளியொடு பொருந்தி- உவமையில்லாத மகத்தான பிரகாசமாய்; 1அளவற அகன்று- அளவில்லாத சருவ வியாபியாய்; விளைவ தோர் சலனம் இன்றி- தனக்கு உண்டாவ தொரு விகாரமின்றி; அன்றும் நின்று- நித்தியமாய்; ஆங்கு ஒன்றும் மறைப்பதை யின்றி- அவ்விடத்தே ஒரு பதார்த்தத் தான் மறைக்கப்படாததாய்; உறப் பெருத்து அகன்ற- மிகவும் பெருத்து விரிந்திராநின்ற; உருவொடு செறியாது- உருவ முடையதன்றாய்; வெருவரும் அராகம் ஆகிய அணையாது- நல்லோராலே 2வெருவப்பட்ட இராகத்துவேஷ முதலான வற்றோடு இசையாததாய்க் 3காண் இருப்பது; இது சிவசத்தியின் சொரூபவிலக்கணம்4.

  18-26. (அலர்…………நுணங்கியது) அலர் ஐம்பூதம் - அந்தச் சத்திதான் விரிந்திருக்கின்ற 5பஞ்சபூதங்களுக்கும் உபா தான மான மகா மாயையை; ஊர்தரு விந்துவில் நேர்தர இயைந்த - பிரேரீப்பதான 6சிவதத்துவத்தில் அழகிதாகப் பொருந்திய; செய்தியின் திகழ்ந்தும்- பஞ்ச கிருத்தியங்களிலே 7பிரகாசித்தும்; பிறிதிற் சிறிதும் 8ஆசை உய்யாது- இக் கிருத்தியமன்றி வேறு பதார்த்தமில்லாமையாலே மற்றொரு தொழிலில் யாதும் ஆசை யின்றியே; எங்கணும் ஒளிமுக மாகி- சர்வதோமுகமாய் விளங்கி; முதல் இடை கடையிற் போகாது- முதல் நடு இறுதி யின்றியே; யாவதோர் பந்தமும் இரீஇ- சருவ பந்தங்களையும் ஒழிந்து; போவதும் வருவதும் இறந்து- போக்குவரவின்றியே மேலாய் முடிந்த 1திருவாய் எல்லையாகி- எல்லாப் பதார்த்தங்களுக்கும் மேலாய் முடிவான நாதபரியந்தம் தேடக் கிடையாத செல்வம் மிகுந்த எல்லையாய்; 2ஒருவா நுணங்கியது- 3நீங்காத 4சூக்கும மானதாய்;

  26-29. (அரனை …………..விசாரித்தது) அரனை 5இணங்கி- பரமசிவனுடனே கூடி; 6வணங்கா விந்துவில்- கெடாத 7சுத்தமாயை யினுடைய பிரவிருத்தியில் தோன்றிய; 8வைகரியாதி - வைகரி மத்திமை பைசந்தி சூக்குமை என்னும் நால்வகை வாக்கையும்; விருத்தியில் வந்து- விருத்தியுறத் தோற்றுவிக்கும் காரணத்தினால் வந்து1; ஆன்மாவை ஆணவம் மறைப்பது போல 2விகாரித்தது- சூக்குமமான ஆன்மாவை ஆணவமலம் மறைப்பது போலச் சிருட்டி காலத்திலே அந்த விந்துவைக் கலக்காநிற்கும்.

  29-34. (மற்று……பொங்கியவாறென) அஃது எது போலும் எனில்- அச்சத்திதான் எதுபோலக் கலக்கு மென்னில்: தண்கதிர் வெஞ்சுடர் ஒட்டிய காலை- சந்திராதித்தர் கூடிய ஞான்று; கடல்- சமுத்திரமானது; உருத்தெழு திரையின் விட்டுவர் ஓதை- 3பயங்கரமாக எழுகின்ற அலைகளினாலே மிகவும் உயர்ந்து ஆரவாரிக்கின்ற ஆரவாரம்; அந்தரம் விராவுபு முற்ற மறைவது போலப் பொங்கியவாறென- ஆகாசத்தின் மேற்கலந்து அதன் இடம் முழுதும் மறைத்தாற் போலச் 4சத்திக்கின்ற 5தன்மை யாயிருக்கும்;

  34-40. (அமோகன் ………..இவணம்) அமோகன் ஈறில் சத்தி ஒன்று பல போல நின்று இயல்பு- 6மோகமில்லாதவனாகிய பரமசிவனுடைய முடிவில்லாத சத்தியாகிய ஏக சத்தியே கிரியாபேதத்தாலே திரிவிதமாக நின்று 7இயற்றும் இயல்பு எவண் எனின்- எவ்வண்ணம் என்னில்; வென்றி விருச்சிகன் விரிகதிர் கோடையிற் கோடலின்- வெற்றியையுடையனாகிய ஆதித் தனுடைய விரிந்தகிரணம் மெழுகை நெகிழ்க்கவும் ஈரமண்ணின் நீரை வாங்கவும்; ஒன்றே யாகி- ஏக சக்தியாகி; இச்சை ஆடானாகி- இராகத்துவேட மற்றிருக்கவும் ஆடுநன் போல- இவை உடை யனாகத் தோன்றினாற் போல; 1அலர் வாள் அமலன் இச்சை செய் சத்தி- விரிந்த பிரகா சத்தையுடைய பரமசிவனுடைய ஏக சத்தியாகிய இச்சாசத்தியே; பல போல் தோன்றல் இவணம்- பல போலத் தோன்றுவது 2இவ்வண்ணமாய் இருக்கும்;3

  40-45. (மற்று………வருமறி) அவன் காரியத்து இசைந்த பேர் இசைப் பெருவலி- அந்தப் பரமசிவனுக்குக் கிரியா சத்தியாய்ப் பொருந்திய பெரிய கீர்த்தியையுடைய மகா சத்தி இருக்கும்படி சொல்லின்; 4அறிவின்று அறிவதை ஒத்து- அறிவின்றி இருந்தும் 5அறிவுடைய பதார்த்தத்தைப்போன்று 6பிரிவின்று- பரமசிவனைப் பிரிதலை யின்றியே; இருந்தொழில் இலது- மிக்க தொழில் இல்லாததாகி; அஃது- அது தான்; அருந்தொழில் சிவணல்- அரிய தொழில்களைச் செய்யும் இயல்பு; 1அருமறை யகத்தும் உலகத்து எங்கணும் வரும்- அரிய வேதாகமங்களிலும் உலக நூல்களிலும் அவ்வவ்விடங்களிலே சொல்லப்பட்டுவரும்; அறி- இதனை நீ அறிவாயாக; அஃது என்போலவென்னில்,-

  45-46. (சிந்தாமணி…………….உதவல்) 2சிந்தாமணி கற்பகம் இவை- சிந்தாமணியும் கற்பகமும் என்று சொல்லப்பட்ட இவை; வேண்டுநர் வேண்டிய ஆண்டாண்டு உதவல்- அசேதனமா யிருந்தும் வேண்டினோர் வேண்டிய பொருளை அவ்விடத் தவ்விடத்து உதவினாற் போலவாம்3;

  47-50. (அன்னதாய……………..நயந்தே) அன்ன தாய 4அரனுடை – அத்தன்மைத் தாகிய பரமசிவனுடைய; படர் அடு- ஆன்மாக்களின் துக்கத்தைக் கெடுக்கும்; பன்னா அளவில் ஞானப் பெருவலி- சொல்லுதற்கரிய அளவில்லாத மகத்தான 5ஞான சத்திதான்; இலங்கு இருங்கிரியையின் - விளங்குகிற பெரிய கிரியா சத்தியினாலே; நலம் 1தரு காமம்- 2நன்மையைத் தருகிற போகம் மோக்கம் என்னும் 3அபேட்சிதமான பொருள்களை; 4நயந்து நல்கும்- மிகவும் 5அறிவித்து அளித்து நிற்குங்காண்6 எ.று.

  மற்று, வினைமாற்று, ஒ, இசைநிறை. மன், மிருதி.

  அகவல் 64

  சருவகாரண சிவன் அவிகாரி.

  நார மேய நல்லுயி ரனைத்தும்

  நார மன்றே நாரமின் றின்றே

  நாரச் செய்தியு மன்றே நாரம்

  ஆருயிர்க் கல்ல துயிரதற் 7குதவும்

  5.  பேருப காரமு மின்றே யாயினும்

  ஆருயிர்க் கபய மறன்மற் றுள்ளா

  தாருயிர்க் கபய 8மாற்றும் பேரிசை

  வான்மண் டீநீர் வளியக நிறைதந்

  தானா தப்புறம் படர்ந்துந் தானவை

  6.  உறைவிட னூங்கினி தளித்து 1மிடையுந்

  தானே யாகி யேனைய விளக்கி

  இருவே றிசையா தொருவழிச் சிவணி

  2இன்றி யமையாச் சிறப்பிற் றாகி

  என்றுந் தானவை யொன்றா 3வாறாம்

  7.  பதங்கன் பல்கதிர் பரப்பி விசும்பினி

  தியங்குங் காலை யெழுந்தினி தியற்றும்

  மன்னுயிர்த் தொடக்க 4மார்த்தாண் டற்கின்

  றன்னோ 5தானு மருவிலை யமளிப்

  பாய னீங்கிப் பஃறொழில் புரிகென்

  8.  6றேவு திறம் படரா னேனு மேவிய

  ஆதப 7னிடத்தன் றருந்தொழில் புரியும்

  8நீத மில்லை நீணிலத் தோர்க்கே

  இன்னுங் கேண்மதி 9யினமலர் துதைந்த

  தாதுபடு கொழுநிழல் பாதவ மன்றே

  9.  மாதர் வண்டொடு சுரும்பிமிர் 10தருநிழல்

  பாதவம் படைத்தது மன்றே பாதவம்

  இன்றே னீழல் 11காண்டலு மிலமே

  ஒன்றோ மற்று முண்டுமற் பெரிதே

  கருந்தாது கொட்கு மிருஞ்சிலை யிரும்பை

  10. 12வருந்தின மறுகுமன் னென்னா தையமின்

  றிருந்தாது கறங்கற் கிதனிடத் தல்லதை

  பொருந்தா தென்ன விரிந்தொளி கான்று

  மாதிர மனைத்து மீரேழ் புடவியும்

  அளவிழைத் தளவா வண்டமும் பலவெனக்

  11. கொட்புறு காலமு மெப்பே ருயிரும்

  உறாவரை யெய்தி யொன்றொடும் புணரா

  தினைய காக்குங் களைக ணாகிக்

  களைகண் யானெனும் விளைவற வொரீஇப்

  பன்னிய வெவற்றுந் 1தன்னமோர் குறையின்

  12. றன்னோ னின்ற 2வகாரணாற் காரணம்

  என்னதென் றிசைக்குவம் யாமே யன்னோ

  உரையுணர் வொடுங்கின ருணர்வின்

  விரையுறு கடியின் விரவி யோனே.

  இது, 3பரமசிவன், செயல்களனைத்திற்கும் காரண மாகித் தான் அவிகாரியாயிருப்பன் என்று கூறியது.

  1-7. உரை: (நாரம் ……………..ஆற்றும்) நாரம் 4மேய நல் உயிர் அனைத்தும்- சலத்தில் வர்த்திக்கும் பல வருக்கத்து நல்ல 5பிராணிகளும்; 6நாரம் அன்று - சலம் அல்ல; நாரம் இன்று இன்று- சலத்தை இன்றி அமையா; 7நாரச் செய்தியும் அன்று-

  அவை சலத்தின் 1காரியமும் அல்ல; 2நாரம் ஆருயிர்க் கல்லது உயிர் அதற்கு உதவும் பேருபாகரமும் இன்று -சலந்தான் 3நிறைந்த பிராணிகளுக்கு இரட்சையாமல்லது பிராணிகள்தாம் அந்தச் சலத்துக்குச் செய்யும் பெரிய உபகாரமும் இல்லை; ஆயினும்- 4அற்றாயினும் 5ஆருயிர்க்கு அபயம் அறன் மற்று உள்ளாது -நிறைந்த பிராணிகளை இரட்சிக்கின்ற தான தருமத்தைச் செய்யாநின்றேன் நான் என்று இச்சலந்தான் நினையாதிருந்தும்; ஆருயிர்க்கு அபயம் ஆற்றும்- இந்த நிறைந்த பிராணிகளுக்கு இரட்சையைச் செய்யா நிற்கும்6;

  7-14. (பேரிசை………….ஒன்றாவாறாம்) பேரிசை வான்- பெரிய கீர்த்தியையுடைய ஆகாயமானது; மண் நீர் தீ வளிஅகம் நிறை தந்தும்- பிருதுவி அப்பு தேயு வாயுவாகிய நான்கிலும் வியாபித்தும்; ஆனாது- அமையாது; அப்புறம் படர்ந்தும்- அப்பாலும் வியாபித்தலையுடைத்தாய்; தான் அவை ஊங்கு இனிது 7உறை விடன் அளித்தும் - தான் அப்பூதங்கட்கு மிகவும் இனிதாக இருக்கத் தக்க இடம் கொடுத்தும்; 8இடையும் தானே யாகி- நடுவும் தானேயாய்; ஏனைய விளக்கி- 1அப்பூதங்

  களை உருத்தெரித்து; 2இருவேறு இசையாது ஒருவழிச் சிவணி- 3அவை வேறு தான்வேறு என்னும் வேறுபாடற ஒரு படித்தாகக் கூடித் தன்னையின்றி அமயாத 4சிறப்பு உடைத்தாய்; என்றும் தான் அவை ஒன்றாவாறாம்- ஒருநாளும்தான் அவையிற்றோடு கூடியிராதவாறு போலவுமாம்;

  5இஃது இன்றியமையாமைக்குத் திட்டாந்தம் எனக் கொள்க.

  15-22. (பதங்கன்………….நீணிலத் தோர்க்கே) பல் கதிர் பரப்பிப் பதங்கன் விசும்பு இனிது இயங்குங் காலை- தன்னுடைய கிரணங்கள் பலவற்றையும் விரித்துக்கொண்டு ஆதித்தனானவன் ஆகாயத்திலே இனிதாக இயங்கும்பொழுது; 6இனிது இயற்றும் மன் உயிர்த்தொடக்கு 7அம்மார்த்தாண்டற்கு இன்று- 8இனி

  தாகத் தொழில் புரியும் நிலையற்ற உயிர்களின் தொடக்கு அந்த ஆதித்தனுக்கு இல்லை; அன்னோ- ஐயோ; தானும் அருவிலை அமளிப் பாயல் நீங்கிப் பல் தொழில் புரிக என்று 1ஏவுதிறம் படரானேனும்- ஆதித்தன் தானும் பெறுதற்கரிய விலையுடைத் தாகிய 2மஞ்சத்திற் கொள்ளப் படுகின்ற சயனத்தினின்றும் எழுந்திருந்து பல தொழில்களையுஞ் செய்யுங்கோள் என்று ஏவும் முறைமையைச் செய்யானாயினும்; மேவிய ஆதபன் இடத்தன்று அருந்தொழில் புரியும் நீதம்- இச்செயலுக்குக் காரணமாகப் பொருந்திய ஆதித்தனிடத்தல்லது அரிய தொழில்களைச் செய்யும் முறைமை; 3நீள் நிலத்தோர்க்கு இல்லை- விரிந்த பூமியிலுள்ளார்க்கு இல்லை4;

  5இது பெத்த முத்திஇரண்டினும் பேரறிவு சிற்றறிவு இருக்கும் இலக்கணத்திற்குத் திட்டாந்தம் எனக் கொள்க.

  23. இன்னும் கேண்மதி- இன்னமும் கேட்பாயாக:

  23- 27 (இனமலர்…….இலமே) துதைந்த தாது இனமலர் படு கொழுநிழல்- செறிந்த தாதோடே கொத்துக் கொத்தான பூக்களையுடைய அழகிய விருக்கத்தின் நிழல்; பாதவம் அன்று- விருக்கந்தான் அன்று; மாதர் வண்டொடு சுரும்பு இமிர்தரு நிழல்- 6காதலிக்கப்பட்ட பெடையும் வண்டும் சத்திக்கும் அவ்விருக்கத்தின் நிழல; 7பாதம் படைத்ததும்அன்று- விருக்கத்தாற் படைக்கப் பட்டதன் றாயினும்; பாதவம் இன்றேல் நீழல் காண்டலும் இலம்- விருக்க மில்லையாயின் நிழலைக்காண்பதும் இல்லை;

  1இஃது அனாதியே பரமசிவனைப் போல ஆன்மா நித்தியமாய் இருந்ததாயினும், அவனையின்றி ஆன்மா என்றொரு பொருள் உளதாதற்கு இடமில்லை என்பதற்குத் திட்டாந்தமெனக் கொள்க.

  2இவை நான்கும் அகாரணாற் காரணமாகப் பஞ்ச கிருத்தியம் செய்தற்குத் திட்டாந்தம் அருளிய தெனக் கொள்க.

  28. (ஒன்றோ……..பெரிதே) ஒன்றோ - ஒன்றேயோ; மற்றும் பெரிது உண்டுமன்- இன்னமும் திட்டாந்தம் பல உள்ளன காண்;

  29-32. (கருந்தாது……………பொருந்தாது) கருத்தாது கொட்கும் இருஞ்சிலை- இருப்புத்தாளைச் சுழற்றும் பெரியகாந்தக் கல்; இரும்பை 3வருந்தின் மறுகும் என்னாது- இரும்பை வருத்திச் கழற்ற வேண்டும் என்னும் கருத்தில்லையாயினும்; ஐயமின்று இருந்தாது கறங்கற்கு இதனிடத்தல்லதை பொருந்தாது- ஐயமறப் பெரிய இரும்பு சுழலுதற்கு உரிய ஏது இதனிடத்தல்லது இல்லை;

  4இது பரமசிவன் அவிகாரியாயிருக்கச் சத்தி சந்தி தானத்திற் பிரபஞ்சம் காரியப்படுதற்குத் திட்டாந்தம் எனக்கொள்க.

  32. என்ன- இவ்வைந்து திட்டாந்தமும் போல;

  32-43. (விரிந்தொளி………..விரவியோனே) 5விரிந்து ஒளிகான்று - சருவவியாபியாய்ச் சுயம்பிரகாச முடையனாகி; 6மாதிரம் அனைத்தும் ஈரேழ் புடவியும் - திக்குகள் பத்திலும் உலகம் பதினாலிலும்; அளவு இழைத்து அளவா அண்டமும்- 7அளவு செய்து அளத்தற்கரிய அண்டங்களிலும்; 8பல எனக் கொட்புறு காலமும்- வருங் காலம் செல் காலம் நிகழ் காலம் என்று சுழன்றுவரும் காலங்களிலும்; எப்பேர் உயிரும் 9உறாவரை எய்தி- 1சருவான்மாக்களும் போகம் புசித்தற்குத் தான் இன்றி யமையாத முற்றூட்டாகிய பொருளாய் நின்று; 2ஒன்றொடும் புணராது - இவைகள் ஒன்றினும் தான் பற்றற்று; இனைய காக்கும் 3களை கண் ஆகி- இத்தன்மையவாகிய உயிர்களை இரட்சித்தற்குத் தான் இரட்சனுமாய்; களைகண் யான் எனும் விளைவு அற ஒரீஇ- இரட்சகன் யானென்னும் அகங்காரம் அறவொழிந்து; பன்னிய எவற்றும் 4தன்னமோர் குறையின்று- இப்படிச்சொல்லப்பட்ட பொருள் எவற்றினிடத்தும் 5சிறிதேயு மொரு குறைவின்றியே; உரை உணர்வு ஒடுங்கினர்- “6நான் மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்களைச் செற்று மோனிகளாயினார்”; உணர்வின்- உணர்விலே; விரையுறு கடியின் 7விரவியோன் - பூவிற் கந்தம் போலக் கூடி நின்றோனாகிய; அன்னோன் - அத்தன்மை யனான பரமசிவன்; நின்ற அகாரணாற் காரணம் 8என்னது என்று அன்னோ யாம் இசைக்குவம்- அகாரணாற் காரணனாய் நின்ற இயல்பை ஐயோ நாம் என்னென்று சொல்லு வோம் எ.று.

  மற்று, வினைமாற்று, ஏகாரம் தேற்றம், மன் , அசை, ஐ, சாரியை, விரை, ஆகுபெயர்.

  அகவல் 65

  அசுத்தாத்துவ கருத்தர்.

  கலைநில வலனெனிற் புலனல னலனெனின்

  நலமலி புற்கல னிலைமலி கலையுடன்

  ஒன்ற லொன்றா தாக லென்றும்

  ஒன்றிற் கொன்றா வென்றனி நாயக

  5.  பன்னு நிட்கள மறிதற் குன்னிற்

  பசுவுக் கமலன் சத்தி யொசியா

  துற்ற வுண்மை யானு மற்றவன்

  மந்திர வலியி னானு மந்தமில்

  நிட்கள மறித றொக்கதன் வலியின்

  6.  நொசிவிட விகார மான வசிபடு

  சகல னானுந் துகடொகு புற்கலன்

  அல்லன் மாயை யவயவ மாட்டி

  எல்லிய 1நிமல மாய நல்ல

  மந்திர கலையின் மரீஇ மைந்துமலி

  7.  திருந்திருந் தியானத் 2திருந்தனன் பெருந்தகை

  அரும்பெறல் யோகரிற் பொருந்துதல் விடலென

  நின்றது விந்து நிட்கள மலமன்

  மன்ற நன்றினி தாயிற் சென்றுயர்

  ஆகத் தன்மைய னாயிற் 3போகிலன்

  2.0 இருங்கலை யிவணம் பெருந்தகை திருந்தியல்

  அரும்பெறல் யோகப் பெருந்துறைப் படியுநர்க்

  கிருந்தோ ரிலக்க மின்றெனிற் பொருந்தா

  தாகலி னாத விந்து வாகிய

  யோக வாணர்க் குறுபயன் புரப்ப

  25. நின்றனன் யாவு மொன்றிய வறிவன்

  ஆகலி னமல னற்றோ போகிய

  ஆருயிர்க் கருட்கடன் பூண்டு சீர்மிக

  உயர்ந்தனன் பணிந்த வியந்தா கத்தை

  நயந்தன னல்லகொ னன்றே வியந்தென

  26. இச்சை யருளோ டிறைமை நச்சி

  இலய போக வதிகா ரத்து

  நிலையின னீச னிலை இத் தொலையா

  மாயை முதலிய 1விச்சைக் கிறையின்

  2ஏய செய்தியி னேயத் தூய

  27. அத்துவா வதனுக் கதிப 3னெத்தகை

  அத்தகை யனந்த னிறையசுத் தத்தின்

  மிக்க பூபதி தலைமை வைத்தோன்

  வைத்த நிருபனோ 4டொத்த வாறேனச்

  செய்வ னெவையுஞ் சிவன்வலி யவமற

  28. ஐயமின் றுணர்த்த வறிந்தின தெவையுந்

  தூய வாக னாகி யாயா

  ஞான மெவையு நலங்கொள

  ஊனம தகல வுறவிரிந் துயர்ந்தே

  இஃது உரையுணர் வொடுங்கின ருணர்வின் விரையுறு கடியின்5” விரவிய பரம சிவனுக்கு நிட்களமும் சகளமும் சகள நிட்களமும் பொருந்தாமை வினவ, “இவை யிற்றுக்கு இவன் இன்றியமையானாயிருப்பன்” எனக் கூறி, அசுத் தாத்துவாவுக்குக் கருத்தா அனந்த தேவரே என்று கூறியது.

  1-4. உரை: (கலை…………..நாயக) என் தனி நாயக- 6அடியேனுக் கென்று வாய்த்த உவமையில்லாத கருத்தாவே; கலை 7நிலவலன் எனில் புலனலன்- தேகத் தோடே கூடியிரா னாயின் 8காணப்படா தவனாம்; அலன் எனில் 9நலமலி புற்கலன் அன்றியே தேகத் தோடே கூடியிருப்பானாயின் 1பந்தனாம்; 2நிலைமலி கலையுடன் ஒன்றல் ஒன்றாதாகல் என்றும் ஒன்றிற்கு ஒன்றா- 3கழித்தற்கருமையால் இடையறாத தேகத்துடனே கூடுதலும் கூடாமையுமாகிய ஈரியல்பும் என்றும் ஒரு பொருளுக்குப் பொருந்தா என்று சீடன் விண்ணப்பஞ் செய்ய;

  5-10. (பன்னும் ……….விகாரமான) பன்னும் நிட்களம்4 அறிதற்கு உன்னில்- புலப்படுவானல்லனென்று நீ சொல்லும் நிட்களத்தை அறிதற்கு உபாயம் விசாரிக்கில்; பசுவுக்கு- பாசபந்தனான ஆன்மாவுக்கு; 5அமலன் சத்தி ஒசியாது உற்ற உண்மையானும்- 6நிட்கள சிவசத்தி குற்றமறப் பதிதலாலே 7முத்தனானமையானும்; மற்று- மற்றும்; 8அவன் மந்திரவலி யினானும்- பிரத்தியட்சத்திலே மந்திரவாதியினுடைய ஆக்கினை யால் மந்திரசத்திகள் பலிக்குந்தன்மையாலும்; நொசி விட விகாரம் மான -குறுகிய விட விகாரம் கண்டு விடம் தீண்டின தன்மையை ஐயமற நிச்சயித்தாற் போல; தன் வலியின் தொக்க அந்தமில் நிட்களம் அறிதல்- 9இப்பொருள்கள் சிவன் சத்தி சந்நிதியிலே முடிந்தன என்று நித்தியமாகிய நிட்களத்தை 1யறிதல் கூடும்.

  10-16. (வசிபடு……….விடலென) 2வசிபடு 3சகலனானும் துகள் தொகு புற்கலன் அல்லன்- இனி 4வசீகர முடைத்தாய ஏகதேசமாகிய சரீரங் கொண்டானாயினும் குற்றங்கள் கூடிய புற்கலன் அல்லனாம், அஃது எங்ஙனம் என்னில்; 5மாயை அவயவம் 6மாட்டி- மாயாகாரியமான தேகத்தை யொழித்து; 7எல்லிய நிமல மாய நல்ல மந்திர கலையின் மரீஇ- ஒளியுடைத்தாகிய நின்மல மாகிய நல்லமந்திர சொரூபமாகப் பொருந்தி; மைந்துமலி திருந்து 8இரும் தியானத்து இருந்தனன் பெருந்தகை- வலிமிகுந்து திருந்தியிருக்கின்ற மகத்தாகிய தியானத்திலே பக்குவப்பட்டோர்க்குச் சொரூபமாகிய தொரு குறி வேண்டித் திருமேனி கொண்டான் பரமசிவன், என் போல என்னில்; 1அரும் பெறல் யோகரின் பொருந்துதல் விடல் என- பெறுதற் கரிய யோகிகள் சுவேச்சா விக்கிரகம் கொண்டு விட்டாற் போல;

  17-18. (நின்றது………ஆயின) நின்றது விந்து- 2இங்ஙனம் கூற இனி நின்றதாகிய திருமேனி சகள நிட்களம் என அறிக; நிட்களம் அல- அது தான் நிட்களமல்ல; மன்ற இனிது நன்று 3ஆயின் - நிச்சயமாக இனிதாக மிகவும் ஆராயுமிடத்து;

  18-20. (சென்றுயர்…………….பெருந்தகை) சென்று உயர் ஆகத் தன்மையனாயின்- விரிந்துயர்ந்திருக்கின்ற 4சகளத் திருமேனி கொண்டானானபடியைச் சொல்லின்; 5இவணம் இருங்கலை போகிலன் - இவ்வண்ணம் பெரிய கலை முதலாகிய தத்து வாங்கிசங்களாலே யாகிய சரீரம் எடுத்தானல்லன்; பெருந் தகை- பெருந்தகைமையை யுடையோனான பரமசிவன்;

  20-25. (திருந்தியல்………..நின்றனன்) திருந்து இயல் யோகப் பெருந்துறை படியுநர்க்கு- 6திருந்தியிருக்கின்ற இயல்பை யுடைய பெறுதற்கரிய யோகமாகிய பெரிய சமுத்திரத்திலே ஆடுவோர்க்கு; இருந்ததோர் இலக்கம் இன்றெனின்- உண்டாய தோர் 1இலக்காகிய சகள நிட்கள வடிவில்லையாயின்; 2பொருந்தா தாகலின்- நிருவகிக்கவொண்ணாதானபடியால்; நாதவிந்து வாகிய யோக வாணர்க்கு- 3விந்து நாத தரிசனம் பெறும் 4சிவயோகிகளுக்கு; உறுபயன் புரப்ப நின்றனன்-மிக்கபயன் கொடுப்பான் காரணமாகச் சகளீகரித்தான்5;

  6இனி இவன் நிட்களமான படியைச் சொல்லின்.

  25-29. (யாவும்………..வியந்தென) யாவும் ஒன்றிய அறிவனாகலின்- சருவ பதார்த்தங்களிலும் ஒரு படித்தான அறிவுடையோனாதலால்; 7அமலன்- நிட்களனாம்; அற்றோ- அஃது ஒன்றோ; போகிய ஆருயிர்க்கு 8அருட்கடன் பூண்டு சீர் மிக உயர்ந்தனன்- 9அளவற நிறைந்த ஆன்மாக்களுக்கு அருளென்னும் முறைமையைப் பூண்டு எல்லையில்லாத கீர்த்தி மிக உயர்ந்தோன்; வியந்தென பணிந்த ஆகத்தை நன்று வியந்து நயற்தனனல்ல கொல்- தன் பெருமைக்கு ஆச்சரியமாகத் தாழ்ந்த தேகத்தை 1நல்ல அதிசயமாக விரும்பானல்லவோ;

  30-32. (இச்சை………….ஈசன்) இச்சை போகம்- இங்ஙனம் ஆதலாலே இச்சையான் ஆன்மாக்களைப் போகம் பொசிப்பிப் பான் காரணமாகச் சகள நிட்களமான சதாசிவ தேவரிடத் தும்; இறைமை அதிகாரம்- இறைமையாலே அதிகாரமாகச் சகவீகரித்த 2மகேசுர தேவரிடத்தும்; அருள் இலயம் நச்சி- அருளாலே இலயமாக நிட்களனாகிய இலய சிவனிடத்தும் விரும்பி; நிலைஇயினன் ஈசன் -நின்றான் 3பரமசிவன்;

  32-36. (நிலைஇ. ……………………..அசுத்தத்தின்) நிலைஇ -இங்ஙனம் நின்று; 4தொலையா மாயை முதலிய விச்சைக்கு- கெடாத 5சுத்த மாயை 6முதலாகிய சுத்தாத்துவாவை; இறையின் ஏய செய்தியின்- பரமசிவன் பிரேரித்துச் செய்தலால்; அத்தூய அத்துவா வதனுக்கதிபன்- அந்தச் சுத்தாத்துவாவுக்கு அதிபனாகிய பரமசிவன்; எத்தகை- எவ்வண்ணம் கருத்தாவோ: அத்தகை- அவ்வண்ணமே;

  1அசுத்தத்தின் அனந்தன் இறை- அசுத்தாத்துவாவுக்கு அனந்த தேவர் கருத்தாவாயிருப்பர்;

  36-43. (மிக்க………..விரிந்துயர்ந்தே) 2மிக்க பூபதி தலைமை வைத்தோன்- மகத்தாகிய வலிமையினையுடைய இராசாவாலே அனுக்கிரகிக்கப்பட்டு இராசவரிசை தரப் பெற்றோன்; வைத்த நிருபனோடு ஒத்தவாறென- இப்படிக் கொடுத்த இராசாவோடு ஒக்கக்கருத்திருத்துவம் செலுத்தினாற் போல; 3சிவன் வலி அவம் அற உணர்த்த- பரமசிவன் சத்தி எக்காலத்தும் 4குற்றமற அறிவிக்க; 5இனிது எவையும் ஐயமின்று அறிந்து- இனிதாக அனைத்தையும் சந்தேகமற அறிந்து; 6தூய ஆகனாகி- சுத்தாத்துவாவா லாகிய திருமேனியோடு நின்று; ஆயா ஞானம் எவையும் - ஆராய்தற் கரிய 7சருவ ஞானத்தையும்; நலங்கொள உற விரிந்து உயர்ந்து- நலமாக உடையராய் மிகவும் விரிந்துயர்ந்து; ஊன்மது அகல- தோடமற; எவையும் 8செய்வன்- அசுத்தாத்துவாவிலுள்ளன யாவையும் செய்யா நிற்பர் எ.று.

  மன், ஏ, ஓ, அசை.

  அகவல் 66

  அனந்த தேவர்

  <div style="margin-left: 3em;">

  மேவினாக மனந்தற் கியாவும்

  அறிவொடு படாஅ பொறிபிற 1புலன்கொளல

  உய்த்தல் செல்லா வாகலி னப்புலன்

  2பொறிகொளப் பிறவாற் செறியா வெறிகொள்

  5.  ஆக மாயை யாதலி னன்றிப்

  போகிய நாம விசேட மெய்தல்

  உளதெனிற் சிறிது சேய்த்தாய் வளமலி

  உரைமுதல் விடய 3முணர்வன் விரைவினொடு

  என்னின் மற்றவ னாகம் 4பன்னிய

  6.  தூய மேனி வினையுட னேயா

  தாய காலை யவனே பாசம்

  உடைத்தன னாதலி னவனது ஞானம்

  தடுக்குந ரியாரே யுரக முடைத்தயல்

  அடுவது தன்னை யடலின் றதுபோல்

  7.  விடுமொளி யனந்தனை விரவிய பாசம்

  சின்ன மானுஞ் சின்ன வுற்பவம்

  5துன்னிய வதனின் வியோகத் தன்ன

  மந்தி ரேசனு மந்தமில் 6தான் முதல்

  கூடலி னடம் போ லாடிய லாக

  8.  மந்திர 7வலியின் மரும மந்தமில்

  கால நீடல் போலவி மோடிய

  வேண்டிய வியையுங் காண்டகு காலம்

  கூடின னாயினு மேனி பீடியல்

  ஆண்டகை வலியி னிலைமை மாண்ட

  9.  ஆக மவன தமலந் தாதமல்

  நளினப் பாசடை யேய்ப்பு வொளிய

  தந்திர வலியி னவண மைந்தமல்

  இரதத் தாக மெவணம் புரைதீர்

  போத மேதமில் மேதகு பெருவலி

  10. தீதின் றறி திக ழுறையி னோயுடன்

  முன்செயல் முரஞ்சிய தெவணவ1 ணெண்கெட

  இயைமிட லதனிற் குறையிலன் 2கறையின்

  மந்தி ரேசனு மந்தமி லமலன்

  மைந்தின் மாயை கலக்கி

  11. வெந்திறற் செய்தியின் விரவுவண்3விரைந்தே

  இது. தூய வாகனாயினும் அனந்ததேவர்க்குப் படைப்புக் கூடாதென்று வினவ இவரைச் சகளீகரித்தே அசுத்தாத்துவாக் களைப் பரமசிவன் சத்தியாலே செய்வ ரென்று கூறியது.

  1-5. உரை: (மேவின்…………..யாதலின்) அனந்தர்க்கு 4ஆகம மேவின்- அனந்த தேவர்க்குத் திருமேனி உண்டாயின்; யாவும். அறிவொடு படா - சருவ பதார்த்தங்களையும் 5அறியும் சருவஞ்ஞத்துவம் கூடாது; அஃது எங்ஙன மென்னில்; எறிகொள் மாயை ஆதலின்- 6பிரகாசத்தைக் கொண்ட மாயாகாரியம் தேகமாதலின்; பொறி பிற புலன்கொளல் 7உய்த்தல் செல்லா - அத்தேகசம்பந்த மான இந்திரியங்கள் அந்நிய விடயங்களை அறிய மாட்டா; 8அப்புலன் பொறிகொளப் பிறவால் செறியா ஆதலின்- அவ்விடயங்களும் தம்மைத் தம் பொறிகளாலேயல்லது பிறவகையால் உணரும் உபாயம் இல்லாதவை யாதலால்;

  5-9. (அன்றி……………………என்னின்) அன்றி- அங்ஙன மன்றியே; 1போகிய நாம விசேடம்- நெடிதா யுயர்ந்த அனந்த தேவ ரென்னும் சிவ நாமவிசேடத்தால்; எய்தல் உளதெனில்- அறிதல் உண்டென்று கொள்ளின்; சிறிது சேய்த்தாய்- சிறிது தூர தரிசனமாய்; வளம் மலி உடை முதல் விடயம் விரைவினொடு உணர்வன் என்னின்- வளமிகுந்த சத்த முதலாக உள்ள விடயங் களை விரைவினில் 2அறியக் கூடுமல்லது சருவஞ்ஞத்துவம் கூடா தென்பாயாகில்;

  9-13. (மற்றவன்…………..யாரே) பன்னிய அவன் ஆகம்- நீ கேட்கிற அந்த 3அனந்தேசுரர் திருமேனி;4 தூயயோனி- சுத்த மாயை யாதலாலே; வினையுடன் ஏயாது- கன்மத்துடன் கூடியிருக்க மாட்டாது; ஆய காலை- ஆன பொழுது; அவன் பாசம் உடைத்தன னாகலின்- அவர் பாசச்சேதம் பண்ணின வராதலான்; 5அவனது ஞானம் தடுக்குநர் யாரே- அவருடைய சருவஞ்ஞத்துவத்தைக் 6கெடுக்க வல்லார் யாரோதான்?

  13-15. (உரகம்…………பாசம்) 7உரகம் அயல் அடுவது உடைத்து- பாம்பினிடத்திலே பிறரைக் கொல்லுவதாகிய நஞ்சு கிடந்ததாயினும்; தன்னை அடல் இன்று- அது அப்பாம்பை 1நலிவதில்லை; அது போல- அது போலவே; அனந்தனை விரவிய பாசம் ஒளிவிடும்-2அனந்த தேவர்க்குண்டாகிய 3பாசமும் அவரை வாதியா திருக்கும்;

  16-19. (சின்ன…………….கூடலின்) 4சின்ன உற்பவம் சின்ன மானும்- சீந்திலின் உற்பத்தி அற்பமாயினும்; துன்னிய அதனின் வியோகத்தன்ன- 5ஒன்றோடே பற்றின படியால் அதனை மிகவும் 6பரிணமித்தாற் போலே; 7மந்திரேசனும் அந்தம் இல் தான் முதல் கூடலின் - மந்திர நாயகரும் முடிவில்லாத 8சிவ சத்தி யோடே கூடின் படியால் 9அசுத்தாத்துவாவுக்குக் கருத்தாவா யிருப்பர்;

  19. (அடம்…………….ஆகம்) அடம் போல்- கொட்டைப் பாசி யானது நீரில் கிடந்தும் அதில் தோய்வற்றுக் கிடப்பது போல; ஆடியல் ஆகம்- வெற்றியியன்ற திருமேனி கொண்டாராயினும் இவர் 10அதில் தோய்விலர்;

  20-24. (மந்திரவலியின்………ஆண்டகைவலியின்) மேனி- இவரது திருமேனி; பீடு இயல் 1ஆண்டகை வலியின் காண் தகு- வலியியன்ற பரமசிவனுடைய சத்தியாலே காணத்தக்க; காலம் கூடினனாயினும்- காலத்துடனே கூடியதாயினும்; மருமம் மந்திர வலியின்- யோகிகள் தேகம் மந்திரசத்தியாலே; அந்தமில் காலம் நீடல் போலவும்- அளவில்லாத காலம் 2சென்றிருத்தல்போல; ஒடிய வேண்டிய இயையும்- அதி தூரமாகிய வேண்டிய காலம் அழியாதிருக்கும்;

  24-26. (நிலைமை …………ஏய்ப்ப) 3வலியின் நிலைமை மாண்ட ஆகம்- சிவசத்தியோடே கூடும் நிலைமையால் இவரது மாட்சி பெற்ற திருமேனி; அவனது அமலம்- பரமசிவனது போல 4மலபந்தம் உடைத்தன்று; தாது அமல் நளினப்பாசடை ஏய்ப்ப- தாதையுடைய தாமரையின் 5நீரில் தோயினும் தோய்வுறாத பசிய இலையைப்போல;

  26-30. (ஒளிய ……………அறி) ஒளிய தந்திர வலியின் எவணம் -6சிவசத்தியோடே கூடுதலாற் பிரகாசமான வேதாகமங் களைக் கற்றோர்க்கு உண்மைஞானம் உண்டாவது எவ்விதம்; இரதத்து மைந்தமல் ஆகம் எவணம்- இரதம் புசித்தோர்க்குச் சரீர சித்தி வருவது எவ்விதம்; அவணம் புரைதீர் போதம் ஏதமில் மேதகு பெருவலி- அவ்விதமே 1ஒப்பற்ற ஞானமும் குற்றமற்ற 2மேன்மை தக்கிருக்கப்படா நின்ற பெரிய சத்தியும் உடைமை; 3தீதின்று அறி- 4அனந்ததேவர்க்கு மகத்தானதன்மையில் அமைவது தடையில்லை யென அறிவாயாக.

  இது நிரல் நிரை.

  30-32. (திகழுறை………………குறையிலன்) திகழ் உறையின் நோயுடல் முன் செயல் முரஞ்சியது எவன்- பிரகாச முடைத் தாகிய ஒளடத சத்தியாலே நோயானவுடம்பு 5முன்பு போலே செயல்வலி பெற்றது எவ்வண்ணமோ, அவண் இறை எண்கெட 6மிடல் அதனில் குறைபிலன்- அவ்வண்ணமே பரமசிவனுடைய அளவிறந்த சத்தியாலே 7இவர் குறைவிலர்;

  32-35. (கரையில் …………..விரைந்தே) கறையில் மந்திரேசனும்- குற்றமில்லாத அந்த 8அனந்தேசுரரும்; அந்தமில் அமலன் மைந்தின்- முடிவில்லாத பரமசிவனுடைய சத்தியாலே; மாயை கலக்கி வெந்திறல செய்தியின் விரைந்து விரவுவன்- 1அசுத்த மாயையைக் கலக்கி மிக வலிய பஞ்சகிருத்தியங்களை விரைந்து செய்யாநிற்பர் எ.று.

  மற்று, வினைமாற்று, தான், இன் என்பன அசை. உம்மை இசை நிறை. வலியின் என்பது மத்திம தீபம்.

  அகவல் 67

  சிவானுபவம் வாசாரகிதம்.

  யாணர்க் கோங்கின் குவிமுகை யெள்ளிப்

  பூணகத் தொடுங்கிய முலையு மானிறக்

  கயன்மலைப் பன்ன கண்ணும் புயலெனப்

  பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென

  5.  ஆகத் தரும்பிய சுணங்கும் பாகொத்

  தின்றீங் கிளவியு நிதம்பமு 2மொன்றிக்

  கண்ணு மனமுங் கவற்றப் பண்வர

  இரங்குமணி மேகலை யிரியச் சுரும்பொடு

  வண்டினம் வாய்விட் டார்ப்பத் தண்டா

  6.  நாணு நிறையு நடப்பப் பூணொடு

  கோதை 3பரீஇத் தாதுகு பொங்கணை

  கலவி விளைந்த காமத் தேறல்

  உண்டோ ருணரி னல்லதை 4யாவதுங்

  கொண்டுரை கூடா 5வாறுந் தெண்டிரை

  7.  அமிழ்துபடு தீஞ்சொ 1லிமிழ்பெரும் புலனொடு

  பனுவற் 2பவ்வம் படிந்துண்டு நிமிர்ந்த

  3இருபெரும் புலனு மொருங்கினி திழந்து

  மெய்யுரை பெறூஉஞ் செவ்வி யாளன்

  கனாத்திற னல்லதை வினாத்திறம் பிறிதோ

  8.  பொறைப்பெருங் கவசம் புக்குச் செறுப்பருஞ்

  செயறீர் கனைகழற் கட்டி மயலொடு

  காம நீத்த கயந்தலை கடிதூர்ந்

  தச்ச மின்மையிற் றுணையின் றாங்கு

  4வசையில் பேருணர் விசைய மள்ளர்

  9.  பூமுக ஞானப் புகர்வா ளேந்தி

  ஐம்புல னடக்கி யறுபகை யோட்டி

  இருவினை வீட்டி யொருவழிக் கொளீஇய

  உள்ளமொ டுணர்வுசூ ழொடுக்கி

  உள்ளுந ருணர்வ துணர்வின் பாலே

  இஃது, “பசுவுக்கு அமலன் சத்தி யொசியா துற்ற வுண்மையானும் மற்றவன் மந்திரவலியினானும், அந்த மில் நிட்களம்” பெற்ற 5அறிவனுக்கு 6அனுபோகம் இன்னபடியிருக்குமென்று சொல்ல ஒண்ணாமைக்குக் காரணம் என்னென்று வினவ, அவ்வனுபவம் அனுபவித்தறியும தல்லது 7வாசாரகிதமெனக் கூறியது.

  1-14. உரை: (யாணர்…………..கூடாவாறும்) யாணர்க்8 கோங்கின் குவிமுகை எள்ளி- 9புதுமை வினையுடைத்தாகிய கோங்கினது குவிந்த மொட்டை 10யொத்து; பூணகத்து ஒடுங்கிய முலையும்- ஆபரணங்களை யகத்திடப்பட்ட முலையும்; 1கயல் மலைப்பன்ன மான்நிறக் கண்ணும்- பிறழ்ச்சியாற் 2கயல்மீனோடு பொருவது போன்ற மானின் 3நோக்கத்தையுடைய கண்களும்; புயல் எனப் 4பின்னுவிட நெறித்த கூந்தலும்- 5மேகமென்னும் படியாகப் பின்னுதல் தங்கிய நெறித்த கூந்தலும்; பொன் என ஆகத்து அரும்பிய6 சுணங்கும்- பொன்னின் 7நிறத்தையுடைய மார்பிலே பரந்த தேமலும்; பாகொத்த இன்றீங்கிளவியும்- பாகுபோல் இனிதாகிய அழகிய வசனமும்; நிதம்பமும்- 8அல்குலும் என்னும் இவையத்தனையும்; ஒன்றி- பொருந்தி; கண்ணும் மனமும் கவற்ற- 9கண்ணும் மனமும் 10தொழிலிழந்து மயங்க; இரங்கு மணிமேகலை இரிய- சத்திக்கின்ற 11மணிகளா லான மேகலாபரணமும் நீங்க; 12பண்வரச் சுரும்பொடு வண்டினம் வாய்விட்டு 1ஆர்ப்ப- பண்ணுக்குப் பொருந்த பெடையும் வண்டும் வாய்விட்டு ஆரவாரம் பண்ண; 2தண்டா நாணும் நிறையும் நடப்ப- நீங்காத நாணம் மடம் அச்சம் பயிர்ப்பும் அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியும் நீங்க; 3பூணொடு கோதை பரிய- 4ஆபரணங்களும் புட்ப மாலையும் தம்மிற் பின்னிக் கலைந்து சிதைய; தாதுகு பொங்கணை- புட்கங்களின் தாதுகள் உதிரப்பட்ட உயர்ந்ததாகிய சயனத்திலே; கலவி விளைந்த காமத் தேறல்- போகத்திலுண்டாகிய காமரசம்; உண்டோர் உணரின் அல்லதை- புசித்தோர் அறியுமதல்லது; கொண்டு யாவதும் உரைகூடாவாறும்- அவர் தம்மானும் இன்னபடி யிருந்ததென்று கொண்டு சிறிதும் 5சொல்ல வொண்ணாதவாறு போலவும்;

  14-29. (தெண்டிரை………பிறிதோ) 6தெண்டிரை அமிழ்து படு தீஞ்சொல் இமிழ் 7பெரும்புலனொடு- கடலிலுண்டாகிய அமிழ்து போன்ற இனிய வசனத்தைச் சொல்லும் வாக்காகிய பெரிய புலனும்; பனுவற் பவ்வம் படிந்துண்டு நிமிர்ந்த இரு பெரும் புலனும்- அழகிய சாத்திரங்களாகிய சமுத்திரத்திலே மூழ்கி அவையிற்றைப் புசித்துத் தலைமை பெறும் சோத்திர மாகிய புலனும் என்ற இரண்டு பெரிய புலன்களும்; ஒருங்கு இனிது இழந்து- 1ஒக்கவே 2அழகிதாக இழந்து; 3மெய் உரைபெறூஉஞ் செவ்வியாளன்- பரிசத்தாலே அறிவிக்க அறியும் 4ஊமன்; கனாத்திறன் அல்லதை வினாத்திறம்- காணும் கனாப் போல்வதல்லது வசனிக்கவொண்ணாத சிவபோகம் இன்னபடி யிருந்ததென்று 5கேட்கவும் சொல்லவும் கூடிய கூறு பாட்டை யுடையதோ, அன்று; 6பிறிது- வேறுபட்டது, காண்;

  20-29. (பொறை…..உணர்வின்பாலே) வசையில் 7பேருணர்வு 8இசைய மள்ளர்-குற்றமில்லாததாகிய பெரிய உண்மைஞானத்தையுடைய கீர்த்திமான்களாகிய வீரரானவர்கள் 9பொறைப்பெருங் கவசம் புக்கு- பொறுத்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்தால் சகிக்கும் பொறுமையாகிய பெரிய கவசத்தை யுட்டு; செறுப்பு அரும் 1செயல் தீர்கனை கழல் கட்டி -விரோதி களால் சயித்தற்கரிதாகிய தம்மால் பிறர்க்கும் பிறரால் தமக்கும் ஒரு செயல் இல்லை என்னும் சத்திக்கின்ற வீரக்கழலை வீக்கி; மயலொடு காமம் 2நீத்த கயந்தலை கடிதூர்ந்து- காமமயக்கங்களை 3யொழித்தல் என்னும் யானையைக் கடிதாக மேல் கொண்டு; அச்சம் இன்மையின்- சருவசங்க நிவிர்த்தி வந்து நிர்ப்பயமானபடியால்; 4துணை யின்றி- துணையின்றித் 5தமியராய்; ஆங்கு- அவ்விடத்தே; 6ஞானப் பூமுகப் புகர்வாள் ஏந்தி - ஞான மென்னும் கூர்மையும் ஒளியு முடைத்தாகிய வானெயெடுத்துக் கொண்டு; ஐம்புலன் அடக்கி- பஞ்சேந்திரியங்களையும் தம் வசமாக்கி; அறுபகை ஓட்டி- காமாதிபகை ஆறையும் போக்கி; இருவினை வீட்டி- புண்ணியபாவங்களைச் சயித்து; 7ஒருவழிக் கொளீ இய உள்ள மொடு- 8பரமசிவமே பரதத்துவமென்னும் 9ஒரு நெறிப்பட்ட அறிவொன்றே யல்லாமல்; உணர்வு சூழ் ஒடுக்கி-அல்லாத 10உணர்வுகளைக் கெடுத்து; உள்ளுநர் உணர்வின்பால் உணர்வது- அறிவோர் அறிவின்பாலாய் அறிந்து அனுபவிக்கத் தக்கதாம் எ.று.

  ஒ, 11வினா. ஏ, அசை.

  அநந்நிய பாவகம்

  அகவல் 68

  சகளங் கட்காண் டகுதித் தாகத்

  துகளில் தியானந் துறவா தறவ

  நிட்களங் கட்காண் டகுதி - 1நீளிடைத்

  துட்க வோடிய தோட மிக்க

  5.  பாவனை படியா தாவகை யரிதெனின்

  மேவினை யுணர்நனி விமல னோவா

  நிலைமையன் குணமுக நிவந்தோ னிலனுரு

  அறிவறி யாமை யகன்றோன் பொறிபுனை

  யோக வியோக 2மொழித்தோன் றூமனச்

  6.  சங்கற் பத்தொடு சகலங் கலைதீர்

  பெங்கணு மிரிய விருந்தோன் பொங்கிய

  மதியாங் கார மடித்தோன் விதியால்

  அபாவ னதனைப் பாவா பாவத்

  3துயர்வற பாவ மொழித்தரும் பாவத்

  7.  துற்றோ னேதுக் காலஞ் செற்றோன்

  தீண்ட றீண்டா தாதன் மாண்ட

  ஆக மணைத லகறல் போகோன்

  விகற்ப மேவோன் றரிப்பது 4தவிர்த்தோன்

  இச்சை மற்றா சி5ரயஞ் செற்றோன்

  8.  எற்றிவ னபாவ னாத லெற்றேற்

  கூடான் 6குறியுட னதனால்

  7வீடா வுலக மபாவனென் றறைவே

  இஃது “உள்ளுந ருணர்வ துணர்வின் பாலாய்”8 வசனிக்க வொண்ணாத அனுபவமாயிருக்கிற நிட்களம் பாவிக்கப்படாத தாய் இருந்ததென் என்று வினவ, அரூபி யாதலின் சட்சுவாதி கரணங்களுக்குத் 1திருசிய னல்லாமையாற் கரணவறி வொழிய. அருபியாயிருக்கிற 2ஆன்ம வறிவாலே தரிசிப்பார்க்குத் திருவருளால் அநந்நியமாகப் பாவிக்கப்படுவன் என்று கூறியது.

  1-5. உரை: (சகளம்…………அரிது) 3அறவ- தருமவானே; சகளம்4 கட்காண் தகுதித்தாக துகளில் தியானம் துறவாது- பதிப்பொருள் உரூபியாயிருக்குமாயின் கண்ணாற் காணப்படும் முறைமைத் தாதலாலே குற்றமற்ற தியானத்துக்கு நீங்காதாம்; நிட்களம்- அங்ஙனமின்றி 5நிட்களமென் றருளிச் செய்த படியாலே; கட்காண் தகுதி நீளிடைத்து 6உட்க ஓடியது- கண்ணால் தரிசிக்கு முறைமை அதிதூரத்ததாய்ப் பயத்தை யுண்டாக்கிக் கிட்டாததாயிருந்தது; ஓட -கிட்டா தொழியவே, மிக்க பாவனை படியாது- அது மிகவும் பாவிக்கப்படாத தாகலின்; 7ஆவகை அரிது- தியானித்தல் அரிதாயிருந்ததென்று சீடன் விண்ணப்பஞ் செய்ய; 8இனி, ஆசிரியர் கூறுவார்:

  5-6. (எனின்……….நனி) எனின்- என்பாயாயின்; மேவினை நனி உணர்- 1பொருந்த மிகவும் அறிவாயாக;

  6-19. (விமலன் ………….உற்றோன்) 2விமலன்- நின்மலன்;

  6-7. 3ஓவா நிலைமையன் - 4மாறுபாடின்றி என்றும் ஒரு படித்தான 5நிலைமையுடையோன்;

  7. 6குணம் உக நிவந்தோன்- முக்குணங்களையும் ஒழித்து ஓங்கினோன்;

  7உருவிலன்- அரூபியாயிருப்போன்;

  8.  அறிவு அறியாமை அகன்றோன்- தனக்கு அபூருவமாக அறிவதோர் 8அறிவில்லாமையாலேஅறிதலில் விருப்பும் சர்வஞ்ஞனானபடியினாலே 9அறியாமையு மாகிய இரண்டும் இல்லாதோன்;

  8-9. பொறிபுனை யோக வியோகம் ஒழித்தோன்- 10இந்திரியங்களையுடையார் பதார்த்தங்களிற் கூடியிருப்பது போலத் தனக்கு அபூருவமாயிருப்பதொரு பொருளில்லாமை யினாலே ஒரு பதார்த் தத்திற் கூடியிருக்க 11வேண்டுதலும், தன்னையொழிய ஒரு பொருட்கும் நிலை இல்லாமையால் ஒரு பொருளை 12ஒழிந்திருத்தலும் இல்லாதோன்;

  9-11. (தூமன………….இருந்தோன்) தூமனச் 1சங்கற்பத் தொடு 2சகலம் கலை எங்கணும் தீர்பு இரிய இருந்தோன்- தூயதாகிய மனத்திலுண்டாகிய 3ஈடணாத் திரயங்களும் சகல கேவலங்களும் தேகமும் யாண்டும் விட்டு நீங்க விளங்கி யிருந்தோன்;

  11-12. பொங்கிய மதி ஆங்காரம் மடித்தோன்- மிக்குற்ற கரணவறிவாலாகிய அகங்காரம் கெடுத்திருந்தோன்;

  12-15. (விதியால்………..உற்றோன்) 4விதியால் அபாவன்- அரூபியான முறைமையாலே கரணவறிவாற் பாவிக்கப்படான்; அவனைப் பாவா பாவத்து- ஒருவன் 5அவனைப் பாவிக்கப் படுவனோ பாவிக்கப்படானோ என்று பார்த்து; உயர்வு அறு அபாவம் ஒழித்து- 6பாவா பாவம் என்றவையிற்றில் தாழ்ந்த தாகிய அபாவமென்னும் அஃது ஒழித்து; அரும் பாவத்து உற்றோன்- 7அவைகளாலே நிச்சயித்துக்கொண்டு 8கரணரகித மாயிருத்தலினால் அரூபவறிவாலே பாவிக்கப்படுவன் என்று உணர்ந்து அவனை அவ்வளவும் அபேட்சித்துக்கொண்டு அனுட்டிப்போர் 9பாவனையிலே நின்றோன்;

  15. ஏதுக்காலம் செற்றோன்- தனக்கு மற்றொரு 1நிமித்த காரணரும் திரிகாலங்களும் இல்லாதோன்;

  16-17. (தீண்டல்…..போகோன்) தீண்டல் போகோன்- ஒரு பொருளினும் பற்றில்லாமையாலே 2அதில் தோய்வுடை யானும் அல்லன்; தீண்டாதாதல் போகோன்- சருவவியாபியா தலாலே அதனை ஒழிந்திருப்பானுமல்லன்; மாண்ட ஆகம் அணைதல் போகோன்- அழகிய தேகங்களா லுண்டாகிய சுக துக்கம் தனக்கு இல்லாமையாலே அவையிற்றிற் பந்தமில்லா தோன்; அகறல் 3போகோன்- அத்தேகங்களுக்குப் பிரவிருத்தி நிவிருத்தி தன்னையின்றி அமையாமையால் அவையிற்றை விட்டு இராதோன்.

  18. (விகற்பம்…………தவிர்த்தோன்) 4விகற்பம் மேவோன் அவிகாரியாயிருப் போன்; தரிப்பது தவிர்த்தோன்-5தன்னை யொன்றும் தாங்கி நிற்றலே இல்லாதோன்;

  19. (இச்சை- செற்றோன்) இச்சை- ஒரு பொருளில் ஆசையும்; ஆசிரயம் செற்றோன் - ஒருவரை ஆசிரயித்தலும் இவையிரண்டும் கெடுத்தோன்;

  20. இவன் அபாவனாதல் எற்று- 6இத்தனைப் பிரகாரத்தாலே அறியப்படுவான் ஒருவனைப் 7பாவிக்கப்படான் என்பது எற்றிற்கோ?

  21. எற்றேல் - 1அபாவனென்னும் வசனம் ஏன்றான் உண்டாயிற்று என்னில்;

  21-22. (கூடான்…………அறைவே) குறியுடன் கூடான்- 2அரூபியாதலாலே 3கரணவறிவால் குறிக்கப்படுவானல்லன்; அதனால் உலகம் 4அபாவன் என்று அறைவு வீடா- அதனால் உலகத்தார் பாவிக்கப்படாதான் என்று சொல்லுதலை ஒழியார். எ.று.

  மற்று - அசை; உலகம் - ஆகுபெயர்; ஐகாரம் - சாரியை; வீடா - நீட்டல் விகாரம்.

  கன்ம சமத்துவ சத்திநிபாதம்

  அகவல் 69

  அத்தமி லமலன் சத்தி யெங்கணும்

  நந்து நன்றெனி னல்லறி வெவவர்க்கும்

  உந்தா தொழிதலென் னுரவோர்க் கல்லதை

  5பிறவா தெனினதற் கிறவா தாரகம்

  5.  அனைத்தெனிற் பதங்க னலர்கதிர் பங்கயம்

  6அனைத்து மலர்த்தா வியல்பிற் கவற்றின்

  உண்டுகொ லுரைசின முரைமோ கண்டிசிற்

  கண்டன மாவலி யற்றாக் 7கோடி

  சத்தி பதிப்பிற் சம்பிர தாயந்

  6.  தொத்துவ தென்பது துகளச் சத்தி

  எங்கணு நிறைதலி னெனின்மற் றாங்கதற்

  கறிவிடை யுரையுப சாரத் தல்கல்

  புற்கலனித்த னிறைந்தோ னவனை

  மிக்க போக்கின னிற்றோ னென்றும்

  7.  இறைபா சத்தை யிறுத்தோ னென்றும்

  அறையுரை யற்றச் சத்தி நிபாத

  1நிபாத மென்ற தியாவ னொருவன்

  இடைக்கடி தொருபொரு ளடுத்துற வீழின்

  வெரீஇ யந்நிலை யொரீஇ வேறிடம்

  8.  மருவு மற்றென நிருமலன் பெருவலி-

  பதிப்ப வறிவன் பவபயங் 2கதுவ

  மதித்தனன் றேசிகன் மலரடி யடையும்

  மோக வனந்தர் முயல்வோர்க் கமோகன்

  சத்தியி னவனை யுணர்த்தன் மற்றது

  9.  கருமத் தொப்பி 3னல்லதை

  4வருமா றாங்கின்று மதிக்குங் காலே.

  இது மேற் பசுவுக்கு அமலன் சத்தி ஒசியாதுற்ற உண்மை யால், அறிவுண்டாகில், அச்சத்தி வியாபியாயிருக்க எல்லார்க்கும் நல்லறிவு இல்லையாதற்குக் காரணம் என் என்று வினவ, கன்ம சமத்துவ சத்தி நிபாதத்தா லல்லது ஞானமுண்டாகா தென்று சொல்லியது.

  1-4. உரை: (அந்தமில்…………..தாரகம்) அந்தமில் அமலன் சத்தி- நித்தியனான பரமசிவனுடைய சத்தி; 5எங்கணும் நன்று நந்தும் எனின்- எவ்விடத்தும் அழகிதாக வியாபகமாம் என்னில்; நல்லறிவு எவர்க்கும் உந்தா தொழிதல் என்- உண்மைஞானம் யாவருக்கும் உண்டாகா தொழிதல் 1என்னையோ; 2உரவோர்க் கல்லதை பிறவாது எனின்- இஃது அறிவுடைய நல்லோர்க்கல்லது உண்டாகாதென்னில்; அதற்குத் தாரகம் இறவா- அச்சத்திக்கு அனுக்கிரக நிக்கிரகங்கள் 3ஒழியாதனவாயிருந்தன, காண், என்று சீடன் விண்ணப்பம் செய்ய;

  5-7. (அனைத்தெனில்……..உரைமோ) அனைத்து எனில்- 4அத்தன்மையாகவும் ஒரு 5கடா உண்டென்னில், சொல்வோம்; 6பதங்கன் அலர்கதிர் பங்கயம் அனைத்தும் அலர்த்தா இயல்பிற்கு- 7ஆதித்தனுடைய விரிந்த கதிர் பக்குவமான தாமரை மொட்டை அலர்த்துமதொழியப் பக்குவமில்லாத தாமரை மொட்டை 8அலர்த்தாமைக்கு; அவற்றின் 9உறுசினம் உண்டு கொல்- 10அவையிற்றின் மேல் அந்த ஆதித்தனுக்கு மிக்க கோபமுண்டோ; உரைமோ- சொல்லாய்;

  7.  கண்டிசின்- அந்தச் 1சத்தியிருக்கும் படியைக் காண்பாயாக; காண்பாயாயின்,

  8.  (கண்டன………..கோடி) கண்டன மாவலி - பரமசிவ னிடத்திற் கண்டனவாகிய மகத்தாகிய சத்திகளும்; அற்றாக் கோடி- ஆதித்தனுடைய அத்தன்மைத்தாகிய சக்தி போலக் 2கொள்க;

  9-10. (சத்தி…………எனின்) சத்தி பதிப்பின் 3சம்பிரதாயம் தொத்துவது என்பது - இனி சத்திநிபாதத்தால் குருபரன் அருளாலே தீக்கை கூடுமென்னும் இது; துகள்- குற்றமா யிருந்தது; அச் சக்தி எங்கனும் நிறைதலின் எனின்- அச்சத்தி எவ்விடத்தும் சருவ வியாபியானபடியா லென்னில்;

  11-12 (மற்று………….விடை) ஆங்கு அதற்கு விடை- 4அவ்விடத்து அதற்குப் பரிகாரம் கூற அறிவாயாக;

  12. (உரை……………அல்கல்) உரை- இவ்வசனம்; உபசாரத்து அல்கல்- உபசாரமாய்த் தங்குவதாம்; 5அதுதான் எதுபோல வென்னிற் கேட்பாயாக;

  13-6 (புற்கலன் …………..அற்று) புற்கலன் நித்தன் அவனை இற்றோன் 6என்றும் - ஆன்மா நித்தியனாக அவனை மரித்தா னென்றும்; நிறைந்தோன் அவனை மிக்க போக்கினன் என்றும்- வியாபியான அவனைச் 1சொர்க்காதிகட்குப் போனானென்றும் சொல்லுமாறு போலவும்; இறை பாசத்தை இறுத்தோன் என்றும்- 2சிவன் அவிகாரியா யிருந்தும் பாசச்சேதம் பண்ணினானென்றும்; அறை உரையற்று- 3சொல்லுகின்ற உபசார வசனம் போலவும் கொள்க.

  16-17. (அச்சத்திநிபாதம்…………..என்றது) அச்சத்திநிபாதம் நிபாதம் என்றது- இனி அந்தச் சத்திநிபாதம் சத்திநிபாதம் என்று சொல்லுமதனைக் கேட்பாயாக.

  17-22. (யாவன்………..அடையும்) யாவன் ஒருவன் இடை ஒரு பொருள் கடிதுற அடுத்து வீழின்- யாவனொருவன் இருந்த விடத்திலே ஒரு பொருள் கடிதாக மிகவும் சேர வீழுமாயின்; 4வெரீஇ அந்நிலை ஒரீஇ வேறிடம் மருவும்- என்னவோவென்று பயப்பட்டு அவ்விடத்தினின்றும் நீங்கி வேறோரிடத்திலே பெயரும்; அற்றென- அதுபோலவே; நிருமலன் பெருவலி பதிப்ப- 5பரமசிவனுடைய பெரிய சத்திநிபாதத்தாலே; அறிவன்- ஆன்மாவானவன்; பவ பயம் கதுவ மதித்தனன் மலரடி 6அடையும் - பிறவிப்பயம் பொருந்த அப்பிறவியின் 7பொல்லாங் கினை அறிந்து பிறவித்துக்கம் தீர்த்தற்குச் சிந்தித்து ஞானாசிரி யனுடைய சீர்பாத கமலங்களிலே 8சென்றடைவான்;

  23-26. (மோகவனந்தர்………….காலே) மோகவனந்தர் முயல்வோர்க்கு- சமுசாரவு றக்கத்திலே உழந்தோரை; சத்தியின் அவனை உணர்த்தல் அது- சத்திநிபாதத்தாலே தன்னையறி வித்தலாகிய அந்த ஞானந்தான்; கருமத்து ஒப்பினல்லது வருமாறு மதிக்குங்கால் 1ஆங்கு இன்று- 2கன்ம சமத்துவத்தினல்லது வரும் வழி விசாரிக்கு மிடத்து அவ்விடத்தில்லையாம் எ.று.

  மோ, இ, சின் , மற்று , அசை.

  தீக்கை விசேடம்

  அகவல் 70

  எந்தை ஞான மின்மை பந்த

  காரண மென்ன வாரண வாரி

  அருளினை மருளை யடுவது ஞானமென்

  றிருடீர் பெய்த விசைத்தோய் தெருளில்

  5.  தோற்ற மசத்துக் கில்லை யாற்றவுஞ்

  சத்துக் 3கேயுள வென்னிற் பொற்புடை

  விருத்தம தணையுந் திருத்தக வென்றும்

  4முரண்டர லியைவ விரண்டொரு வழியின்

  அடையா 5வாதபஞ் சாயை போலக்

  6.  கடாவிடை பொடியாய் புடைபட வுயர்ந்த

  இந்தனக் குழுவை 6யடூஉஞ் செந்தழல்

  கூட நின்றும் 7பீடுதரு பாயஞ்

  செல்லாக் காலை மெல்லென விளங்கல்

  ஒல்லா வல்லழல் போல நல்லோய்

  ஞானமு மின்மையு நலமிக்

  கானா வுயிர்கட் 1குணர்வனை வகையே.

  இஃது அமோகன் சத்தியின் அவனை யுணர்த்தலாய 2ஞானத்தான் முத்தியும் அஞ்ஞானத்தாற் பெத்தமுமாம் என்றருளி னாய்; முரணாயிருப்பன இரண்டு ஓரிடத்து நிற்றற்கு உதாரணம் என்னென்று வினவக் காட்டமும் 3அங்கியும் போல இரண்டுங் கூடநிற்பினும் தீக்கை யாகிய உபாயத்தாலல்லது ஞானப் பிரகாசம் இல்லை யென்று கூறியது.

  1-4. உரை: (எந்தை………..இசைத்தோய்) எந்தை ஆரணவாரி- என் சுவாமியாயுள்ள வேதாகம சமுத்திரமே; 4ஞானமின்மை பந்த காரணம் என்ன அருளினை- அஞ்ஞானம் பந்த காரணம் என்று 5முன்பே அருளிச் செய்தாய்; 6மருளை அடுவது ஞானம் என்று இருள் தீர்பு எய்த இசைத்தோய்- அந்த அஞ்ஞானத்தைக் கெடுப்பது ஞானமே யென்று இப்பொழுது மயக்கந் தீர அருளிச் செய்யா நின்றாய்;

  4-10. (தெருளில்…………கடா) தெருளில்- இதனை விசாரிக்கில்; 7அசத்துக்குத் தோற்றம் இல்லை- 8அசத்தினிடத்தே ஞானம் தோன்றுவதில்லை; சத்துக்கே ஆற்றவும் 9உள என்னில்- முன்பே சத்தாதலினாலே இவன் பக்கல் மிகவும் உண்டு என்று சொல்லின்; பொற்புடை 1விருத்தம் அணையும்- அழகைக் கெடுக்கின்ற பொருந் தாமையாகிய குற்றம் வருதல் கூடும்; 2திருத்தக- நன்மையுண்டாக; 3முரண்தரல் இயைவ இரண்டு என்றும் ஒருவழியின் அடையா- மாறுபாடாயுள்ளன விரண்டு எக்காலத்தும் ஓரிடத்தே கூடா; ஆதபம் சாயை போல கடா வெயிலும் 4இருளும் போல, ஆதலால் இஃது ஐயமாயிருந்தது என்று விண்ணப்பஞ் செய்ய;

  10. விடை- இதற்குப் பரிகாரம் விடுக்கக் கேட்பாயாக;

  10-16. (பொடி………….அனைவகையே) புடைபட வுயர்ந்த இந்தனக் குழுவைப் பொடியா செந்தழல் அடூஉம் - பரந்துயர்ந்த காட்டத்தின் திரட்சியைத் 5தூளியாகச் 6சிவந்த அக்கினியானது தகிக்கும் தன்மையுடைய 7தாயினும்; கூட நின்றும்- காட்டத்திலே 8தான் ஒக்க வியாபித்திருந்தும்; பீடுதரு உபாயம் செல்லாக் காலை- பெருமை தருகின்ற 9கடமையான உபாய மில்லாத போது; மெல்லென விளங்கல் ஒல்லா வல்லழல் போல- இலேசாகத் தன்னைத் 1தோற்றுவியாத வலிய அக்கினியைப் போல; நல்லோய்- நல்லோனே; 2ஆனா உயிர்கட்கு- 3அமையாத ஆன்மாக்கட்கு; ஞானமும் இன்மையும் நலம் மிக்கு உணர்வு 4அனைவகை- 5ஞானமும் அஞ்ஞானமும் நலமிகக் கூடவுண்டா யினும் அத்தன்மையாகிய தீக்கை யுபாயம் கூடினாலல்லது ஞானம் பிரகாசியாதாம் எ-று.

  ஞான வஞ்ஞான விருப்பு

  அகவல். 71.

  இரும்பிர தானத் தெழுமனத் தத்துவம்

  பொருந்தா தப்பிர தான 6மிகுந்துயர்

  தத்துவ நெறியிற் பொற்பொடு புணர்தல்

  செல்லா தொழியத் திகழ்தரு தியானம்

  5.  நில்லா தென்ன நிழலவிர் மணிகால்

  7எரியி னூங்கு விரிதரன் மாறெனத்

  தன்னினு முயர்ந்த பன்னருந் தத்துவத்

  தன்ன தாத லறிமன் மன்னிய

  யோக மாக்கலை யுணர்வோர் போகிய

  6.  இந்தனத் தெரிபோற் பொங்கிய தத்துவங்

  காண்டகு தகுதிய ரம்ம

  மாண்டகு தியான மாட்சி யோரே.

  இஃது “இந்தனமும் எரியும் போல ஞானமின்மையும் ஞானமும் ஓரிடத்தில் நிற்குமென உணர்த்தினாய்; அவ்வுணர்வு பிரதானத்தில் செனிதமான மனதாலே மேலுள்ள தத்துவங் களிலுஞ் செல்லுமோ?” என்று வினவக் காட்டத்தில் அக்கினி பிரகாசித்தாற்போல பரமாயுள்ள தத்துவங்களிலும் செல்லும் என்று கூறியது.

  1-5. உரை: (இரும் பிரதானம்………..நில்லாதென்ன) இரும் பிரதானத்து எழும் 1மனத்தத்துவம்- மகத்தாகிய பிரகிருதி தத்துவத்திலுண்டாகிய 2மனத்தத்துவத்தாலாகிய அரூப யோகம்; பொருந்தாது- பொருந்தாதாம்; அப் பிரதானம்- அந்தப் பிரகிருதி தத்துவந்தான்; 3மிகுந்துயர் தத்துவ நெறியில் பொற்பொடு புணர்தல் செல்லா தொழிய- மிகவும் உயர்ந்திராநின்ற தத்துவ நெறிகளில் அழகிதாகச் 4செல்லமாட்டாது ஒழிதலினாலே; திகழ் தரு தியானம் நில்லாது என்ன - பிரகாசமான தியானம் 5கூடாதே என்று விண்ணப்பம் செய்ய;

  5-8. (நிழலவிர்………..அறிமன்) நிழல் அவிர் மணிகால் எரியின்- பிரகாசமான சூரியகாந்தக் கல்லிலுண்டாகிய அக்கினி; 1ஊங்கு விரிதரல் மாறென- 2மேலே ஆதித்தனைக் காணத் தோன்றினாற் போல; தன்னினும் உயர்ந்த பன்னரும் தத்துவத்து அன்னது ஆதல் அறிமன்- மனத்தத்துவமும் தனக்கு மேலாகிய சொல்லுதற் கரிய தத்துவங்களிலும் 3பிரகாசமுடைத்தாதலால் அவையிற்றைத்தியானித்தல் 4அத்தன்மைத்து என்று அறிவாயாக;

  8-12. (மன்னிய……………..மாட்சியோரே) மன்னிய யோக மாக்கலையுணர்வோர் - நிலையுடைத்தான யோகத்தைச் சொல்லுகிற திவ்வியாகமங்களை உணர்ந்தோராகிய; மாட்சி யோர் - மாட்சிமையை யுடைய ஞானாவன்கள்; மாண்தகு தியானம்- மாண்பு தக்கிருக்கப்படாநின்ற தியானத்தைக் கொள்ளு மிடத்து; போகிய இந்தனத் தெரிபோல்-மிக்க காட்டத்தில் அக்கினி போல; பொங்கிய தத்துவம் காண்தகு தகுதியர்- மகத்தாகிய 5விந்து நாதங்களை மனத்தத்துவத் தாலே தியானித்துக் காணும் 6முறைமையை யுடையர் எ.று.

  மன், அம்ம, அசை,

  ஞானபாதச் சிறப்பு

  அகவல் 72

  1கழிபெருந் துன்பங் கஞல வழிவழி

  2ஓவாச் செய்தித் தாவா நோன்பின்

  அவர்க்கே மிக்க தகைப்பரும் பலமெனிற்

  கற்றாங் குநர்க்கே கழிகவின் றுதைந்த

  5.  எற்படு மணிதாங் குநரிற் பொற்பொடு

  வருபலம் வரூஉம் பொருவிரி 3வன்சிலை

  தாங்குநர் மிகவுந் 4தளர்தலோ டோம்பிய

  உயிருட லுடைத லடைப 5கடிபயில்

  பலமோ பகரி னலமோ வின்றே

  6.  மோதிர மணைந்த 6தீதறு திருமணி

  தாங்குங் காலு மோங்கிய லணியாய்

  உளமலி யுவகை யாமீக் கூர்ந்தன்

  றரும்பொருள் பயக்குங் காலைத்திருந்திய

  கோடியெல்லை கூடா தாடியல்

  7.  அந்த ரங்கம் புறவங் கத்தின்

  மைந்தமல் பெய்தும் வெந்திற னிருபர்

  அகத்துறை பவரே புறத்துறை பவரிற்

  போக மேவுத றாவார் காண்டிகும்

  அற்றோ வாடவ ரரிவையர் தம்மின்

  8.  மிக்க வந்தரங் கத்தவர் பெற்ற

  இன்பமு முரையில ததனால்

  அந்த ரங்கமன் மைந்தமல் பறியே.

  இது 1புறக்கருமம் செய்வோரில் அந்தரங்கர் சிறந்தாற் போலச் சதுர்ப்பாதங்களில் ஞானபாதம் சிறந்தது என்று கூறியது.

  1-3. உரை: (கழிபெரும்…….பலமெனில்) 2கழி பெருந்துன்பம் கஞல- அளவிறந்த பெரிதாகிய துக்கஞ் செறிய: வழி வழி ஓவா- மேன்மேலும் 3ஒழிவின்றியே; செய்தி தாவா4 நோன்பினவர்க்கே- 5உபாயச் சரியை கிரியை யோகங்களைச் செய்து அவையிற்றின்வாயிலாகக் கெடாத தவசையுடை யோர்க்கே; மிக்கதகைப்பரும் பலம் எனில்- மிகவும் தடுத்தற்கரிய பலனாகிய 6முத்தி சித்திக்கும் என்னில்;

  4-6. (கற்றாங்குநர்க்கே….வரூஉம்) கல் தாங்கு நர்க்கு- கருங் கல்லைச் சுமந்தோர்க்கு7; கழிகலின் துதைந்த எல்படு மணி தாங்குநரின்- கல்லாந்தன்மை ஒத்தலால் 8அதனி டைப் பிறந்த9 மிகவும் அழகிதாகிய பிரகாசமான மாணிக்கக் கல்லைக்கைக் கொண்டோரிடத்திற் போல; பொற்பொடு வருபலம் வரூஉம் -1அழகுண்டாக வரும் 2பிரயோசனம் உண்டாக வேண்டும் அல்லவோ;

  6-9. (பொருவிரி ……….இன்றே) 3பொருவிரி வன்சிலை தாங்குநர்- 4உவமையின்றாக அவ்வலிய கல்லைச் சுமந்தோர்; மிகவும் தளர்தலொடு- மிகவும் இளைப்படைதலோடு; ஓம்பிய உயிர் உடல்5 உடைதல் அடைப- காக்கப்பட்ட உயிர் உடலை விட்டு நீங்கவும் பெறுவர்; 6கடிபயில் பலம் பகரின்- பிரகாசம் பொருந்திய பிரயோசனத்தைச் சொல்லின்; நலமோ இன்று- நன்மையான பிரயோசனமும் இல்லையாம்;

  10-14. (மோதிரம்……….கூடாது) மோதிரம் அணைந்த7 தீதறு திருமணி- மோதிரத்தில் அழுத்தின குற்றமற்ற அழகிய மாணிக்கம்; தாங்குங்காலும்- தரிக்கும் பொழுதும்; ஓங்கியல் அணியாய்- 8உயர்ந்த இயல்புடைத்தாகிய அணியாதலாலே; உளம் மலி உவகை 9அகம் மீக்கூர்ந்தன்று- உள்ளத்தில் உண்டாகிய பிரியம் புறம்பும் விளங்கா நிற்கும்; அரும் பொருள் பயக்குங்காலை- அதுதான் பெறுதற்குரிய பலத்தைத் தருமிடத்து; 10திருந்திய கோடி எல்லை கூடாது- மதிப்புடைத்தாகிய விலை இத்தனை கோடிப் பொன்னென்று நிச்சயிக்க முடியாது; அதுபோல-14-16. (ஆடியில் …………..எய்தும்) புற அங்கத்தின் ஆடு இயல் அந்தரங்கம்- புற 1க்கரணத்தாலே 2உண்மை சரியையாதி நெறியிலே நின்றவரினும் வெற்றியுடைத்தாயிருக் கின்ற உட்கரணத்தாலே; மைந்து அமல்பு எய்தும்- பசுபாசபதிகளின் 3உண்மை உணர்ந்து கரணங்கள் இறந்து நின்ற அறிவினாற் சிவத்தை 4வழிபடும் ஞானவான்கள் பெறுவதான வலிதாகிய சத்தி அதிகமாம்; 5அன்றியே,16-18. (வெந்திறல்………..காண்டிகும்) வெந்திறல் நிருபர் அகத்துறைபவர் - வெவ்விய வலியுடையராயிருக்கின்ற அரசர் இருக்குமிடத்து உறையும் மந்திரிகள்; புறத்துறைபவரின் போகம் மேவுதல் தாவார்- 6புறப்பாட்டுச் சாமந்தரினும் அனுபோகம் மேவுதற்குக்7 குறைவுபடுவதில்லை யென்று; காண்டிகும்- காண்பாயாக.

  19. அற்றோ- அத்தன்மைத்தேயோ;

  19-22 (ஆடவர்…………அறியே) மிக்க அந்தரங்கத்தவர் ஆடவர் அரிவையர்- மிகவும் அந்தரங்கத்தே இருக்கின்ற நாயகனும் நாயகியும்; தம்மில் பெற்ற இன்பமும் உரையிலது- தம்மிற் புணர்ச்சியிற் பெற்றதாகிய இன்பமும் சொல்லிறந்தது; அதனால் அந்தரங்கம் மைந்து அமல்பு அறி ஆதலால் ஞானிகள் அந்தரங்கத்திலே பெற்ற அனுபோகமும் மேலான வலியுடைத் தாகிய 1மோட்ச சித்தி என்று அறிவாயாக எ-று.

  ஏகாரம் முன்னது தேற்றமும் பிரி நிலையுமாம்; ஏனைய, அசைநிலை. ஓகாரம் முன்னிரண்டும் அசை: பின்னது வினா. இகும். மன், அசை.

  பதியுண்மை யுணர்த்தல் முடிந்தது.

  பாச மோசனம்1

  அத்துவித பதித்துவம்.

  அகவல் 73

  உள்ள முதலிய 2வுறுபகை யுடற்றித்

  தெள்ளுநர்க் கல்லதை தெளிவருஞ் சிவனைத்

  தெளிந்தோர் செய்தி சினஞ்செலச் சிதைத்து

  வல்வினை 3கெடுக்கு நல்வினை யாள

  5.  அருளல் வேண்டுவ லத்த மருள்கெட

  நாவொடு நவிலாக் கேள்வித்துறை போகிய

  தேவ தேவனைச் சேர்ந்தவ ரவனை

  ஆவதை யல்ல துளதோ மோது

  4முரிதிரை முந்நீர் விரிதரு காயல்

  6.  வித்தாது5 விளைத்த வெண்டிரட் பழனத்

  துற்றவை யெவனோ வுரவ துப்புவளர்

  உவரி யுற்ற தீ நீ ரல்லதை

  கவர்பு முண்டோ கற்றோய் கவர்புக

  மண்புனை மதிற்பெய் தொண்சிறை பரப்பி

  7.  ஊதுவண் டுணர்ந்த பேதை வான்புழு

  மாதர்வண் டாவதை யறிதி கோதற்ற

  அமலனை யாசற வுணர்ந்த

  அமலர் செய்தியு மற்றான் மற்றே.

  இது பதியுண்மை கேட்டறிந்து அப்பதியுண்மை உணர்ந்த ஞானவான்களின் இயல்பு கேட்க, உப்புவிளை பழனத்து உற்றவை போலவும், உவர்க்கடலற்ற நன்னீர் போலவும் புழு வேட்டு வனாதல், போலவும் 1அத்துவித மான பதித்துவம் பெறுவார் எனச் சாதித்தது.

  1-5. உரை: (உள்ளம்………….அத்த) சினம் செலச்2 சிதைத்து- 3கோபத்தைச் செல்லத் துறந்து; வல்வினை கெடுக்கும்4 நல்வினையாள -வலிய கன்மச்சேதம் செய்யும் நல்வினையாகிய5 தீக்கையுடையாய்; அத்த- என் கருத்தனே; உள்ளம் முதலிய உறுபகை உடற்றி- சித்த முதலாகிய கரணங்களும் 6காம முதலிய குற்றங்களும் ஆகிய மிக்க பகையை யறக் கெடுத்து: தெள்ளுநர்க்கு அல்லதைத் தெளிவு 7அருஞ் சிவனை- 8தெளிந்த ஞானத்தை யுடையோர்க் கல்லது அறிதற்கரிய பரமசிவன் உண்மையை; தெளிந்தோர் செய்தி அருளல் வேண்டுவல்- உணர்ந்த மகாத்து மாக்களின் செய்தியை அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்ய;

  5-8. (மருள் கெட……………உளதோ) 1நாவொடு நவிலாக் கேள்வித்துறை போகிய தேவதேவனை- 2வாசாரகி தனாய்க் கேள்வித் துறையில் அகப்படாத தேவோத்தமனாகிய பரமசிவனை; 3மருள் 4கெடச் சேர்ந்தவர்- அஞ்ஞானம் கெடச் சேர்ந்தவர்; அவனை ஆவதை அல்லது உளதோ- அவன் தன்மை யாகிய 5சிவத்துவம் பெறுவதல்லது வேறுண்டோ? இஃது என்போல என்னில் கூறக் கேட்பாயாக.

  9-11 (முரி………உரவ) உரவ- அறிவுடையோனே; மோது முரிதிரை முந்நீர் விரிதரு 6காயல்- கரையிலே மோதி முரிந்து விழும் திரைகளையுடைய சமுத்திரத்தைச் சேர்ந்த பரந்த கழிக் கானலில்; வித்தாது விளைத்த வெண்திரள் பழனத்து உற்றவை வித்திடாதே விளைத்த வெளுத்துத் திரண்ட உப்புப் படும் அளத்துட்பட்டவை உப்பாமதல்லது; எவனோ- 7வேறுபாடு ஏதேனுமுண்டோ;

  11-13. (துப்பு ………….கற்றோய்) கற்றோய்- கல்வி ஞானம் உடையோனே; 8துப்பு வளர் உவரி உற்ற தீநீர்- 9பவழக் கொடி படர்ந்த சமுத்திரத்திற் கூடிய இனிய தண்ணீர்; அல்லதை கவர்பும் உண்டோ- 10உப்பு நீராமல்லது 11வேறு சுவையுடைத்தாதல் உண்டோ;

  13-16. (கவர்புக……..அறிதி) மண்புனை மதில்பெய்து- மண்ணாற் செய்யப்பட்ட கூட்டிலே அடைத்து; ஒண்சிறை பரப்பி- அழகிய சிறகைப் பரப்பி; ஊதுவண்டு- ஊதுகின்ற 1வேட்டுவனாகிய குளவியையே உணர்ந்தபேதை வான்புழு - குறித்துக் கொண்டு கிடந்த அறிவில்லாத வாலியபுழு; 2கவர்பு உகமாதர் வண்டு ஆவதை யறிதி- வேறுபாடற 3அழகிய அவ்வேட்டுவனாவதும் அறிவாயாக;

  16-18. (கோதற்ற………….மற்றே) கோதற்ற அமலனை ஆசற உணர்ந்த அமலர் செய்தியும்- குற்றமில்லாத விமலனாகிய பரமசிவனை ஐயமற உணர்ந்த நின்மலராகிய ஞானவான்களின் இயல்பும்; அற்று- 4அச்சிவத்தன்மையாவதாமல்லது வேறு பாடில்லை, கண்டாய் எ.று

  ஆல், மற்று, அசைநிலை.

  அணையுந் தன்மை

  அகவல் 74

  பசுபதி யாகப் பன்னிய பனுவன்

  மதியோர் பெரும வாயன்றது1 வெனின்

  ஒன்றொன் றாயினல்லதை யிரண்டொன்

  றென்று மாகா தெவணெனி னாவது

  5.  கெட்டது வாத லதுவாய்க் கெடலல

  தொட்டுவ திவணோ வின்றே கெட்ட

  தாத றானே யமரர்க் காயினும்

  மேவா தாகு மதுவாய்க் கெடுமெனின்

  ஆகிய பின்னர்க் கெடுவ தியாதென்

  6.  றேவிய கடாவுக் 2கிடையீ டாவ

  தழிந்தாய்த் தன்றா யழிந்தது மன்றே

  மொழிந்தவை யிரண்டு மோரமை யத்தே

  எழுந்த தியாவகை யென்னிற் செழுந்திரட்

  காரிரு ளிரிய நூறிக் கனல்வாள்

  7.  ஏரொளி விளக்க மெய்திற் றன்றா அங்

  கெய்திய பின்ன ரிருளற விரித்த

  செய்தி செப்பி னில்லை மையறத்

  தெளிமதி யிவணஞ் சிவணிய 3தளிகிளர்

  தடவுநிலைப் புன்னை மடலவிழ் வாசம்

  8.  புலவுக்கட லதற்றுங் கானலலவன்

  வன்பெடை தழீஇ யின்புறு காயல்

  உப்புவிளை பழனத் துற்ற 4பொற்கோட்

  டுலவையி னறிக மாதோ

  கலைவ லாளர் நிலைபுணர் பண்பே.

  இது. “தேவதேவனைச் சேர்ந்தவர் அவனை, ஆவகை யல்லது உளதோ” என்று அருளினாய்; ஆனமை எவ்வண்ணம் என்று வினவப் பசுத்துவம் போகையும் பதித்துவமாகையும் ஒரு காலத்திலேயாம் என்று கூறியது.

  1-4 உரை: (பசுபதி……ஆகாது) மதியோர் பெரும- 1ஞான வான்களுக்குத் தலைவனாய் உள்ளோனே; பசுபதியாகப் 2பன்னிய பனுவல்- பசுத்துவமான ஆன்மாப் பதியாம் என்று சாதித்த சாத்திரம்; வாயன்று - 3பொருந்துவதில்லையாயிருந்தது; அது என் எனின்- அஃது என்னென்னில்; ஒன்றி ஒன்றாயின் அல்லது இரண்டு ஒன்று என்றும் ஆகாது- முன்னர் பதித்துவ முண்டா ஆகாது- 4முன்பே பதித்துவ முண்டாயின் பதியாமல்லது 5அசுத்த மான ஆன்மாச் சுத்தனாம் என்பது எக்காலத்தும் பொருந்தாது;

  4-6. (எவண்………….இன்றே) எவண் எனின்- எவ்வண்ணம் எனின்; ஆவது கெட்டு அதுவாதல்- 6ஆகும் முறைமையாவது பசுத்துவங் கெட்டுப் பதியாகுதல்; அது ஆய்கடல் அலது - பதியாகிப் பின்பு பசுத்துவம் கெடலன்றி இவண் ஒட்டுவது இன்று- இவ்விடத்துத் 7தேவரீர் உரைத் தருளுமது பொருந்துவ தாய் இல்லை;

  6-10. (கெட்டது……………..ஆவது) கெட்டது ஆதல்- யாதொரு பொருளும் கெட்டால் பின்னை ஆதல்; 1அமரர்க்கா யினும் மேவாதாகும்- தேவர்களே முயன்றாலும் முடியாது; அது 2ஆய்க்கெடும் எனின்- பதியாகிப் பின்பு பசுத்துவம் கெடும் எனில்; ஆகிய பின்னர்க் கெடுவது யாவது- பதியான பின்பு கெடும் அது யாதாம்; என்று ஏவிய கடாவுக்கு- என்று கடாவிய கடாவுக்கு; இடையீடாவது- பரிகாரமாவது கூறக் கேட்பாயாக;

  11-13. (அழிந்தது……என்னின்) அழிந்து ஆய்த்து அன்று- பசுத்துவம் 3கெட்டுப் பின்பு பதித்துவமானதும் அல்ல; ஆய் அழிந்ததும் அன்று - 4பதித்துவமாகிப் பின்பு பசுத்துவம் கெட்டது மல்ல; 5மொழிந்தவை இரண்டும் ஓரமை யத்தே- சொல்லப்பட்ட இரண்டும் 6ஒரு காலத்திலே, காண்; எழுந்தது யாவகை என்னின்- அங்ஙனமாயின் அஃது எவ்வகை போல என்னில்;

  13-17. (செழுந்திரள்………..இல்லை) செழுந்திரள் காரிருள் இரிய நூறி - அழகிய செறிந்த 7கரிய இருளைப் போகத் துறந்து ஏரொளி வாள்கனல் விளக்கம் எய்திற்றன்று- பின்பு அழகிய மிக்க வொளியையுடைய 8விளக்குப் பிரகாசித்ததன்று; ஆ அங்கு- அவ்விடத்து; எய்திய பின்னர் இருள் அற இரித்த செய்தி செப்பின் இல்லை- விளக்குப் புகுந்த பின்பு இருளை அறவே போக்கின செய்தியும் விசாரிக்கின் இல்லை, கண்டாய்;9

  17-18. (மையற …………..சிவணியது) இவணம் சிவணியது- இவ்வண்ணம் பதித்துவம் பெறுதலும் பசுத்துவம் போதலும் என்று; மையறத் தெளிமதி- குற்றமறத் தெளிய உணர்வாயாக;

  18-24. (அளிகிளர் கிளர்……….பண்பே) 1தடவுநிலை அளிகிளர் புன்னை- பெரிய நிலையினையுடைத்தாகிய வண்டு கிளரப்படாநின்ற புன்னைப் பூவின்; மடல் அவிழ் வாசம் கடல் புலவு 2அகற்றும் கானல்- இதழ் விரிகிற நறு நாற்றம் சமுத்திரத்தி லுண்டாகிய புலால் நாற்றத்தைக் கெடுக்கும் கானற் சோலையில்; அலவன் வன்பெடை தழீஇ இன்புறு கானல்- நண்டு கற்பு வலியையுடைய தன் பெடை யோடே கூடி மருவிப் போகம் புசிக்கும் 3கழியில்; உப்பு விளை பழனத்து உற்ற- உப்பை விளைக்கும் அளத்திற்பட்ட; 4பொற்கோட்டு உலவையின்- அழகிய மரக்கொம்பு வடிவுவேறுபடாதே உப்பாயினாற் போல; கலை வலாளர் நிலைபுணர் பண்பு - ஞானவான்கள் பதித்துவம் பெறும் முறைமை; அறிக- நின்ற நிலையிலே சுத்தராம், இத்தனையே, என்று அறிவாயாக. எ-று.

  ஓ, ஏ, மதி, மாது, அசை, ஒளிவாள், மீமிசை போலக் கொள்க

  அணைந்தோர் தன்மை.

  அகவல் 75

  ஆறாக் கூறிய வத்து வா அமற்

  றீறோ டியையா விறைவற் கியையா

  சேதனற் செறியா வியாபகத் துறழ்தலின்

  என்னிற் புற்கலற் கெய்தும் பன்னிய

  5.  பாசம் பசுவுக் காசில் வான்பிணி

  அந்தப் பந்தஞ் சம்பிர தாயத்

  1துந்தி யேபெறு முறைமையி னுந்திய

  காசினி யாதி யாசி றத்துவம்

  போக பூமி யாக மமர்ந்தோர்க்

  6.  கற்றா கலின்மற் றதுமுத லாகப்

  பற்றும்2 பற்றறுத் ததனூங் குற்ற

  வும்ப ரும்பரி னுய்த்து வம்பறு

  சிவனிடத் திலயஞ் செய்க செய்தல்3

  அவமில் போக்காங் கதுமற் றெவணெனிற்

  7.  சுற்பம் பூரி சந்திரம் பொருவல்

  எற்றற் றிறையுற லிவனு மற்றுந்

  தருமா தருமந்தாமும் வரிமடி

  வருண முதலிய பொருணனி புரக்கும்

  உயர்ந்தோ னென்றல் வியந்தினி தெங்கணும்

  8.  நின்ற விறைக்கு நினைமோ விறகின்

  எங்கணு மாயினு மிகன்மே லல்லதை

  அங்கெரி காணா வாறும் பொங்கிய

  குணத்தின் மிக்கோன் குழுவி னுயர்ந்தோன்

  எனத்தகு முரையினு மியையு மனைத்தால்

  9.  ஆய காலை யத்து வாவா

  மேய மாநெறி யியையமற் றிஃதே

  இஃது “அழிந்தாய்த்தன்று ஆயழிந்ததும் அன்று, மொழிந் தவை இரண்டும் ஓரமையத்தே4” என்று அருளினாய்; அஃது எவ்வண்ணம் எனத் தருமா தருமம் போலப் பசுத்துவம் போகையும் பதித்துவம் ஆகையும் உடைத்தாதலால், அத்து வாவால் பிரயோசனம் ஆன்மாவுக்கே எனக் கூறியது.

  1-4. உரை: (ஆறா…………என்னின்) 5ஈறோடு இயையா இறைவற்கு- 6அனாதியாய் ஒருபடித்தா யுள்ள பரமசிவனுக்கு 1ஆறாக் கூறிய அத்துவா இயையா- சடத்துவாவாகச் சொல்லப் பட்டவற்றால் உபகாரம் இல்லாமையாலே அவற்குப் பொருந்தா; சேதனன் வியாபகத்து உறழ்தலின் செறியா என்னின்- ஆன்மாவும் வியாபக முடைமையால் அவனுக்கும் உபகாரம் இல்லையாத லால் அவனையும் அடையா என்று சொல்லின்;

  4-7. (புற்கலற்கு……….முறைமையின்) பன்னிய பாசம் பசுவுக்கு ஆசில் வான்பிணி- சொல்லப்பட்ட பாசமானது ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடு ஆகாத பெரிய பந்த மாதலால் அந்தப் பந்தம் 2சம்பிரதாயத்து உந்திப்பெறும் முறைமையின்- அப் பந்தத்தைத் தீக்கையாற் சேதித்து முத்தியைப் 3பெறும் முறை மையால்; புற்கலற்கு எய்தும்- மலபரிபாகத்தால் 4திரோதகம் நீங்கிச் சிவஞான முண்டாகைக்குப் பக்குவரான ஆன்மாக் கட்குக் 5கூடும்; கூடும் முறைமைதான் எங்ஙனம் என்னில்-

  7-14. (முந்திய………..போக்கு) முந்திய 6காசினியாதி ஆசில் தத்துவம்- முன்னெண்ணப்பட்ட பிருதிவிதத்துவ முதலாகவுள்ள குற்றமற்ற தத்துவங்கள்; ஆகம் அமர்தோர்க்குப் போகபூமி- தேகம் எடுத்தோர்க்குப் போகம் புசித்தற்கு இடமாம்; அற்றாகலின்- - அங்ஙனம் ஆதலாலே; அது முதலாகப் பற்றும்பற்ற றுத்து- அந்தப் பிருதிவிதத்துவ முதலாக அதன்மேற்பட்ட தத்துவங்க டோறும் தேகம் எடுத்ததாகக் கிரியா சத்தியாலே பாவித்து ஒவ்வொரு தத்துவத்

  தினுமுண்டாகிய போகம் புசித்தற்கு அமைந்த கன்மங்களை அனுபவித்ததாகவும் பாவித்துச் சேதித்து; அதன் ஊங்குற்ற உம்பரின் 1உய்த்து - அங்ஙனம் 2மேன்மேல் தத்துவங்களினும் ஆன்மாவைச் செலுத்தி; வம்பறு சிவனிடத்து இலயம் செய்க- உவமை இல்லாத பரமசிவனை யொக்க 3நின்மலனாக்குக; செய்தல் அவமில் போக்கு- இப்படி ஆக்குதல் குற்றமற்ற பாசச்சேதமாம்;

  14-16. (ஆங்கது………இவனும்) ஆங்கு அது எவண் எனின்- அவ்விடத்து அந்தத் தீக்கை எவ்வண்ணம் என்னில்; சுற்பம் பூரி சந்திரம் பொருவல் எற்று- செம்பானது குளிகை யாலே வேதிக்கப் பொன்னோடே கூடின இயல்பு எத்தன்மைத்து; அற்று இவனும் 4இறையுறல்- அத்தன்மைத்தே இவனும் சிவத்துவமாதலாம்5;

  16-18. (மற்றும்…….புரக்கும்) மற்றும்- வேறு திட்டாந்தம் சொல்லின்; விரிமடி முதலிய பொருள்- அகன்ற புடவை முதலான பதார்த்தங்கள்; வருணம் நனிபுரக்கும்- வேற்று வன்னம் பற்றினால் தம் நிறம் மிகவும் கெட்டு அவ்வேற்று வன்னம் பெறும் 1தன்மைத்துமாம்;

  19-24. (உயர்ந்தோன்………..இயையும்) வியந்து இனிது எங்கணும் நின்ற இறைக்கு- இந்தப் பதித்துவம் 2பெற்ற முத்தனும் பரமசிவனும் 3சருவ வியாபகமாயிருக்கினும் 4அதிசய மாக எங்கணும் வியாபித்திருக்கின்ற பரமசிவனை மாத்திரம்; உயர்ந்தோன் என்றல்- மேலான 5சிவதத்துவத்தை அதிட்டித்துக் கொண்டிருப்பன் என்று சொல்லுதலை; நினைமோ- இனிதாக அறிவாயாக; விறகின் எங்கணுமாயினும்- காட்டத்தின் முழுதும் அக்கினி வியாபித்திருக்கு மாயினும்; 6இதன்மேல் அல்லதை அங்கு எரிகாணாவாறும்- காட்டத்திற்குமேல் அல்லது அவ்விடத்து அக்கினி பிரகாசியாதவாறு போலவும்; பொங்கிய குணத்தின் மிக்கோன்- மிகுந்த குணத்தான் மிக்கோனை; மிக்கோனை; 7குழுவின் உயர்ந்தோன் எனத் தகும் உரையினும் இயையும்- இக்கூட்டத்தில் உயர்ந்தோன் என்று சொல்லுமாறு போலவும் பொருந்தும் என்று கொள்க; இங்ஙனம் வருகின்றது தீக்கை1 எனவும் அறிவாயாக.

  24-26. (அனைத்தால்………….இஃதே) அனைத்து ஆய காலை- அத்தன்மையான விடத்து; அத்துவா மேய மாநெறி - அத்துவா மார்க்கமாகப் பொருந்திய2மகத்தாயுள்ள நெறியிலே கூடி; இயைகை இஃது- தீக்கிக்கும் முறைமை இது எ.று.

  மற்று, ஆல்- அசை. இவை மூன்றும்3 பாசமோசனம்.

  வாகீச முனிவர் அருளிய

  ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  முற்றும்

  தனியன்

  1பொன்னை நிலத்தைப் புரிகுழன் மாதரைப் பொய்ப்புணர்வென்

  றென்னை நிரஞ்சன தேவன்றன் றாணிழ லெய்துவித்த

  மன்னை வயற் கோடற்பாகை யுளானை மனத்து வைத்த

  பின்னை வருவதுண்டோ விடரஞ்சலென் பேதை நெஞ்சே,

  வாகீச முனிவர் திருவடி வாழ்க.

  குருவே துணை.

  இணைப்பு-1

  ஞானாமிர்தக் கட்டளை

  உள்ளடக்கம்

  முன்னுரை 1

  1. துன்பத்தை வெல்லும் துணிவு 3

  2. நலமார்ந்த நட்பு 15

  3. வாழ்வியல் வழி 27

  4. சான்றோர் சால்பு 73

  5.“குறள் நெறி” 82

  6. ஒரு குறள் 97

  7.வள்ளுவம் காட்டும் வாழ்வியல் 104

  8.திருக்குறள் வாழ்வியல் உரை 110

  9.திருக்குறளும் தரமேம்பாடும் 117

  10. தன்னை உணர்விக்கும் தவக்குறள் 123

  11.திருக்குறள் ஞானபீடம் 131

  12. இலக்கியத்தில் இயற்கை 138

  13. சங்க இலக்கிய இயற்கை வாழ்வியல் 152

  14. அன்னை நெஞ்சம் 163

  15. தோழியின் அருமை 167

  16. இரவே வாழ்க 174

  17. ஓதாக் கல்வி 180

  18. சித்தர்-திருமூலர் 184

  19. பேரும் பெருமையும் 190

  20. வாழிய வையகம் 194

  முதலாவது - பதி இலக்கணம்

  பதி பசு பாசங்களுக்கு இலக்கணம் கூறுவாம்.

  பசுக்கள் சுதந்திரம் இல்லாதவைகள் ஆதலாலும், பாசங்கள் சடமாய் இருக்கையினாலும், பதி சுதந்திர ஞானம் உடைமையாலும் முதலில் பாதிக்கும், இரண்டாவது பசுக்களுக்கும், மூன்றாவது பாசங்களுக்கும் இலக்கணம் கூறத்தொடங்கி முதலில் பதி இலக்கணம் கூறப்படுகின்றது.

  பதி சொரூபம் என்றும் தடத்தம் என்றும் இருவகைப்படும். சொரூபமாவது - முதல் நடு இறுதி இல்லாததாய், தூல சூக்கும சூனியரூபம் இல்லாததாய், குணம்குறி இல்லததாய், ஒன்றாய், அசலமாய், அகண்டாகார சச்சிதானந்த பரிபூரண சோதியாய், பஞ்ச கிருத்தியத்திற்கு அதீதப்பட்டு நின்மலவடிவாய் விளங்குவது.

  இனி, தடத்த இலக்கணமாவது - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்னும் பஞ்சகிருத்தியங்களைப் பண்ணுவதாம்.

  பதியாகிய சிவத்தை அக்கினிக்கு உஷ்ணம் போலப் பிரிவற்றிருக்கும் சத்தியானது நித்தமாய், ஒன்றாய், இச்சா ஞானக் கிரியா சொரூபமாய் இருக்கும். இது காரிய பேதத்தினாலே பரை முதலாக அநேக பேதப்படும். சத்தியுடைய பேதத்தினாலே சிவனும் சத்தர் உத்தியுத்தர் பிரவிருத்தர் என மூவகையாய்ப் பேதப்படுவர்.

  சத்தர் என்பவர் காரியத்தைப் பண்ண உத்தியோகியாமல் காரியம் பண்ணத் தொடங்காமல் இருக்கிய சத்திமாத்திரமாயிருக்கிறவர். இவர் சத்திகலை அற்றிருக்கிறவர் ஆகையால் நிஷ்களராய் இருப்பவர். இவருக்கு ஞானமாத்திரமே திருமேனி. இவருக்கு இலயர் என்றும், சத்தர் என்றும் பெயர்.

  இனி, உத்தியுத்தர் ஆவார் காரியம் பண்ண உத்தியோகிக்கிற சத்தியுடையவர். காரியம்பண்ண உத்தியோகிக்கிற பொழுது ஞானகிரியா சத்திகள் ஒப்பில் உண்டானவர். பரை ஆதி இச்சை ஞானக்கிரியை என்னும் பஞ்ச சத்திகள் சுத்தமாயையிலே பதிந்தபொழுது உண்டாகிய ஈசானாதி பஞ்சப் பிரமங்களையே திருமேனியாக உடையவர். பாச கலைகளுடன் கூடியிருத்தலால் சகளமும், சத்திகலைகளுடன் கூடியிருத்தலால் நிஷ்களமும் உடைமையால் சகள நிஷ்களராம். இவருக்குச் சதாசிவர் என்றும் போகர் என்றும் பெயர்.

  இனி, பிரவிருத்தர் ஆவார் காரியங்களைப் பண்ணத் தொடங்கிய சத்தியை உடையவர். காரியம் பண்ணுகிற வேளையில் கிரியை அதிகமாக வேண்டும். ஆதலால், ஞானசக்தி கொஞ்சமும் கிரியா சத்தி அதிகமுமாக உடையவர். இவர் பாச கலைகளுடனே கூடியிருக்கையால் சகளராம். இவருக்கு மகேசுரர் என்றும் அதிகாரர் என்றும் பெயர்.

  இந்தப் பதி சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், விட்டுணு, பிரமா என்னும் நிஷ்களம், சகள நிஷ்களம், சகளமாக ஒன்பது பேதப்படும். இவர்களில் சிவத்திற்குச் சத்தியும், நாதத்திற்கு விந்துவும், இவ்விரண்டும் ஒழிந்த மூர்த்திகள் ஐவர்க்கும் முறையே மனோன்மணி என்றும், மகேசை என்றும் உமை என்றும், இலக்குமி என்றும், சரசுவதி என்றும் சத்திபேதம் ஐவகைப்படும். காரிய பேதத்தினாலே சத்தி சிவங்களும் பேதமாயின என்க. பதிக்கு இந்தச் சிற்சத்தியே தேகம் கரணம் இடம் எல்லாம் என அறிக.

  இப்படிக் கர்த்தா உண்டென்பதற்குப் பிரமாண மாவது:-

  ஆண் பெண் அலி முதலான தேகாதிப் பிரபஞ்சம் காரியம் ஆதலால் கடாதிகளைப் போலக் கர்த்தாவை உடையன.

  மாயை சடமாய் இருத்தலானும் ஆன்மாக்கள் தடைப் பட்ட ஞானக்கிரியை உடைமையால் சுதந்திர ஈனமுடைய ராய் இருத்தலானும் இவ்விரண்டையும் தொழிற்படுத்தும் கர்த்தா உண்டு என்பது புலப்படும்.

  ஆன்மாக்கள் மலத்தையுடையமையினாலும், கர்த்தா நிர்மலர் ஆனதாலும், ஆன்மாக்களுக்கு வேறாகியும் எள்ளுக்குள் எண்ணெய் போலப் பிரிவற்று இரண்டற நின்றும் கன்மத்துக்கு ஈடாகத்தனது ‘சமவாய சத்தி’யினாலே சுத்தாசுத்த மாயைகளைச் சேர்த்துத் தனுகரணாதிகளை உண்டாக்குவர். சமவாயம் - விட்டுப்பிரியாமை.

  ஆதலால், இவ்வாறு கர்த்தா ஆனவர் குலாலனைப் போலச் சரீரம் முதலானவைகளை உடையவராக வேண்டும் எனில், அற்றன்று: காலம்போல அரூபியாய் இருந்து சிருட்டியாதிகளைப் பண்ணுதல் கூடும். அவர் தேகத்தையுடையவராகில் அவருடைய தேகத்தை உண்டுபண்ண வேறே ஒரு கர்த்தா வேண்டும் என்ற அவத்தை வரும். ஆதலால், தேகாதி சகல உபாதியும் அற்றவரே கர்த்தாவாம். தேகாதிகளையுடைய அனந்தேசுரர் (மகேசுரர் எனவும் பாடமுண்டு) முதலானவர்கள் அவாந்தர கர்த்தாக்களாம்.

  அவ்வாறு அன்றி, சூரியன் நிர்விகாரியாய் இருந்து அவன் சந்நிதானத்தில் தாமரை மொட்டு அலரவும், ஆம்பல் குவியவும், சேறு இறுகவும், வெண்ணெய் இளகவும் பண்ணுமாறுபோல, கர்த்தா காரியத்திலே உன்முகமாய் இருக்கிற சத்தியுடனே கூடியிருப்பவர் ஆதலால் அவர் சந்நிதி மாத்திரத்திலே சிருட்டியாதிகளைப் பண்ணுவர் என்க.

  இந்தக் கர்த்தா சத்தராய் இருந்து பண்ணும் கிருத்தியமாவது தீவிரதர சத்திநி பாதத்தை உடையவர்களை அநுக்கிரகித்துப் பர முத்தியில் விடுவதும், தீவிர சத்திநிபாதத்தை உடையவர்களை அபரமுத்தித்தானத்தில் வைப்பதும் ஆம்.

  இவர் சுத்தமாயையைத் தனது சத்தியால் கலக்கி சத்தரூபம் ஆகிய நாதவிந்துக்களையும், அர்த்தரூபம் ஆகிய நாதம் விந்து என்னும் பெயரையுடைய சிவதத்துவம் சத்திதத்துவங்களையும், இந்தத் தத்துவங்களிலே புவனங்களையும், இந்தப் புவனங்களிலே இருக்கிற வர்களுக்குத் தனுகரணாதிகளையும், விந்துதத்துவத்திலே நின்றும் சதாசிவ தத்துவத்தையும் உண்டாக்கி, அந்தச் சதாசிவ தத்துவத்துக்குச் சதாசிவரை நாயகராகப் பண்ணி அவரை வேற்றக்கூடி நின்று சிருட்டியாதிகளைப் பண்ணுவர் என்க.

  இனி, உத்யுத்தராகிய சதாசிவராய் இருந்து பண்ணும் கிருத்தியமாவது:- சதாகாலமும் அநுக்கிரகித்து மிகுந்திருக்கிற விஞ்ஞானகலரிலே தீரவதர சத்திநிபாதம் உடையவர்களை அநுக்கிரகித்துப் பரமுத்தியில் விடுவதும்; தீவிர சத்திநிபாதம் உடையவர்களை அநுக்கிரகித்து மலபரிபாகத்துக்கு ஈடாகச் சிவதத்துவம் முதலிய பஞ்ச தத்துவங்களிலும் ஞானக்கிரியை களை விளக்கிப் பரமுத்தராகவும், சிவசமனாகவும், அணுசதாசிவர்களாகவும், வித்தியேசுரர் களாகவும், பிரணவர் முதலியோருக்குக் காமிகாதி ஆகமங்களாகவும் பிரித்து அநுக்கிரகிப்பதும்: சாதாக்கிய தத்துவத்திலே நின்று ஈசுவர தத்துவத்தையும், அதிலே புவனங்களையும். அந்தப் புவனநாயகராகிய அனந்தர் முதலான அட்ட வித்தியேசுரர் களுக்குத் தனுகரணாதிகளை உண்டாக்குவதும், இந்த ஈசுவரதத்துவத்துக்கு நாயகராக மகேசுவரரைப் பண்ணுவதும், இந்தத் தத்துவத்திலே நின்றும் சுத்தவித்தியா தத்துவத்தை உண்டாக்குவதும், சுத்த வித்தையிலே இருக்கும் சத்தகோடி மகாமந்திரர்களுக்குத் தனுகரணாதிகளை உண்டாக்குவதும் ஆம்.

  இனி, பிரவிருத்தராக இருந்து பண்ணும் கிருத்தியமாவது:- பிரளயாகலரிலே தீவிரதர சத்திநிபாதத்தை உடையவர்களை அநுக்கிரகித்துப் பரமுத்தி அடையப்பண்ணுவதும், தீவிரசத்திநிபாதம் உடையவர் களைச் சகலகன்மங்களையும் போக்கி அதிகாரமலம் மாத்திரமாக நிறுத்தி உருத்திரராக புவனேசுவரர்களாகப் பண்ணுவதும் அசுத்தமாயையைக் கலக்கி மாயை, காலம், நியதி, கலை என்னும் தத்துவங்களையும் உண்டாக்குவதும், இவைகளிலே புவனங்களை உண்டாக்குவதும், இந்த நான்கு தத்துவங்களிலே இருக்கிறவர்களுக்குத் தனுகரணாதிகளை உண்டாக்குவதும், சீகண்டபரமேசுவரனை அதிட்டித்து நின்று கலையிலே பிரகிருதியையும், வித்தையையும், அராகத்தையும் உண்டாக்குவதும், காலாதிகளின் கூட்டத்திலே புருடதத்துவத்தை உண்டாக்குவதும் பிரகிருதியைக் கலக்கிக் குணங்களைப் பிரிப்பதும், தம்முடைய வலப்பாகம் இடப்பாகம் மார்பு என்ற அங்கங்களிலே உண்டான பிரமவிட்டுணு நீலருத்திரன் என்னும் மும்மூர்த்திகளையும் சீகண்ட பரமேசுரனால் நாளடைவிலே இராசத சாத்துவிக தாமதங்களால் சிருட்டிப்பித்து, குணம் முதலாகப் பிருதிவி ஈறான இருபத்துநான்கு தத்துவங்களில் சிருட்டி திதி சங்காரம் பண்ணுவதும் ஆம்.

  இனி, கர்த்தாவானவர் சுத்தாத்துவாவுக்குச் சத்தரும் உத்யுத்தரும், அசுத்தாத்துவாவுக்கு அநந்தேசுரர் ஆகிய பிரவிருத்தருமாக வருவார் என அறிக.

  முதலாவது - பதி இலக்கணம் முற்றிற்று.

  இரண்டாவது - பசு இலக்கணம்

  ஆன்மா இல்லை என்று சிலர் சொல்லுகின்றமையால் அதை உண்டு என்று நிரூபிக்கப்படுகின்றது.

  அஃதாவது சூனியம் என்பது இன்றி, என்னுடைய தேகம் என்று சொல்லுவதும் இன்றி, இந்திரியங்கள் ஒழிந்திருக்கிற சொப்பன அவத்தையினாலும் அறிகையால் இந்திரியங்களும் அல்லவாய்ச் சுழுத்தி துரியம் துரியாதீதங்களிலே அந்தக் கரணங்களும் பிராண வாயுவும் அற்றிருக்கையால் அந்தக் கரணங்களுக்கும், பிராணவாயுவுக்கும் அந்நியமாய், விழித்தபோது முன்பண்ணின காரியக் குறைகளைப் பண்ணவும் அறியவும் செய்கையால் கணிகனும் அல்லாமல், தேகத்திற்கு அப்புறத்திலே இருக்கின்ற பதார்த்தத்தைக் கிரகிக்கையால் அணுபரிமாணனும் மத்தியபரிமாணனும் அல்லாமல், சுகதுக்க பலத்தைப் புசிக்கையால் கர்த்தாவும் அல்லாமல், நித்தியனாய் வியாபகனாய் அசுதந்திரனாய் அநேகனுமாய் அகர்த்தாவாய் மலத்தினாலே தடைப்பட்ட ஞான சொரூபியாய் இருக்கிறவன் என அறிக.

  இந்த ஆன்மா அந்தக் கரணங்களுக்கு அந்நியனாய் இருந்தாலும் இராசாவும் மந்திரியும் கூடியிருக்குமாறு போல அந்தக் கரணங்களுடன் விடய போக நிமித்தம் கூடிக்கொண்டிருப்பன்; மலத்தால் தடைப்பட்ட ஞான சொரூபி யாகையால் ஐந்தவத்தையைப் பொருந்தியிருப்பன். இவ்வாறு ஒரு ஆன்மா உண்டு என்பதற்குப் பிரமாணம்: தொழிலைப் பொருந்தி யிருக்கும் தேகாதிகள் சடம் ஆகையால் கடாதிகளைப் போலத் தானே சேட்டிக்க மாட்டா; இவற்றை சேட்டிக்கிறவன் எவனோ? அவனே ஆன்மா என்பதாம்.

  இனி, ஆன்மாக்களுக்குக் கேவலம், சகலம், சுத்தம் என ஆணவம் மாயை சிவசத்தியால் மூன்றவத்தை வரும்.

  இவற்றுள் கேவலாவத்தையாவது:- தேகாதிகள் ஒன்றும் அற்று, குணம் அற்று, தொழில் அற்று, போகம் அற்று, கர்த்தா ஆகை அற்று, மைக்குள் மணிபோல ஆணவமலத்தினாலே மூடப்பட்டு ஓர் அறிவும் அற்று வியாபியாய் இருக்கும் அவதரம் என அறிக.

  சகலாவத்தையாவது:- பஞ்சகோச பெத்தனாய் அதனாலே பரிச்சின்னன் ஆகி, கிஞ்சிக்ஞனாய், அநாதி கன்மத்துக்கு ஈடாய், அநேக யோனிகளிலும் சஞ்சரித்து விடயங்களைப் புசிக்கும் அவதரம் என அறிக.

  சுத்தரவத்தையாவது: இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் வந்த காலத்து, சரியை கிரியை யோக ஞானபாதங்களை உணர்ந்த குருகடாட்சத்தினாலே மும்மலங்களையும் நீங்கிச் சச்சிதானந்த சிவமாக விளங்கும் அவதரம் என அறிக.

  இனி, இந்த ஆன்மாக்கள் அதமரான சகலர், மத்திமரான பிரளயாகலர், உத்தமரான விஞ்ஞானாகலர் என மூவகைப்படுவார்கள். இவருட் சகலர் ஆவார்:- ஞானக் கிரியைகளைத் தடுக்கும் ஆணவமலத்தையும், அது சிறிது நீங்குதல் நிமித்தமாக மாயாகாரியம் ஆகிய கலாதிகளையும், போகத்தின் பொருட்டுக் கன்மமும் ஆகிய மும்மலத்தையும் உடையவராக இருப்பார்கள்.

  பிரளயாகலர் ஆவார்:- ஞானக் கிரியைகளைத் தடுக்கும் ஆணவமலத்தையுடையவர்களாய்க் கன்ம பரிபாகத்தினாலே காலாதிகளைத் தங்கள் வசம் பண்ணிக்கொண்டு ஈசுராத்துவாவில் போகத்திற்கு ஏதுவான கன்மத்தையும் உடையவர்களாய் இவ்வாறு ஆணவம் கன்மம் என்று இருமலபந்தராய் இருக்கிறவர்கள்.

  விஞ்ஞானாகலர் ஆவார்:- ஆணவ மலத்தினாலே தடைப்பட்ட ஞானக்கிரியை உடையவர்களாதலால் இல்லை என்பதற்கொத்த ஞானக்கிரியை உடையவர்களாய் ஒரு மலத்தராய் இருக்கிறவர்கள்.

  இந்த மூவகை ஆன்மாக்களும் மாயையினுடைய வடிவு என்னும் ஆன்மதத்துவம் இருபத்து நான்கினும், நடு என்னும் வித்தியா தத்துவம் ஏழினும், முடிவிலும் இருப்பார்கள். விஞ்ஞான கேவலாநுக்கிரகம் பெற்றதற்குப் பின் சிவதத்துவங்களிலே இருப்பார்கள் என அறிக.

  இரண்டாவது - பசு இலக்கணம் முற்றிற்று.

  மூன்றாவது - பாச இலக்கணம்

  பாசம் ஆணவம், திரோதாயி, சுத்தமாயை, அசுத்தமாயை, கன்மம் என ஐந்தாம்.

  இவற்றுள் 1. ஆணவமலமாவது:-

  நித்தியமாய், ஒன்றாய், விபுவாய், அநாதியாய், ஆன்மாக்ள் தோறும் ஞானத்தைத் தடுக்கும் எண்ணிறந்த சத்திகளையுடையதாய், செம்பிற்குக் களிம்புபோலச் சகசமாய் இருக்கும். இதற்குப் பரியாயநாமமாவன - பசுநீகாரம், பசுத்துவம், மலம், அஞ்சனம், அவித்தை, ஆவிருதம், மூலமலம், மிருத்தியு, தமசு, சென்மபீசம், ஆவரணம், அசுத்தி, மோகம், சகசமலம் எனப் பலவாம்.

  இவ்வாறாகிய ஆணவமலம் உண்டு என்பதற்குப் பிரமாணம்: ஆன்மா ஒன்றினாலே ஆவரிக்கப்பட்ட சர்வஞ்ஞன் ஆகவேண்டும்; அற்ப அறிவனாகக் காண்கையால் அற்ப அறிவுள்ளவன் மலரகிதனும் அல்ல. சிவனைப்போல ஆன்மாவுக்கு அற்ப அறிவும் இயல்பு அல்ல. எல்லாருக்கும் ஒருபடித்தன்றாய் ஞானம் இருக்கையாலும், மோட்சத்திலே சர்வஞ்ஞனாகக் கேட்கப் படுகையாலும் இவை அன்றியும், அசூசியாய்த் துக்கமயமாய் இருக்கிற விடய போகங்களிலே ஆசை வருவதும் ஆணவமலத்தினாலேயே என்பது பிரமாணமாம்.

  இனி, 2. திரோதாயியாவது:-

  ஆணவம் சடம் ஆகையால் இந்த ஆணவசத்திகளைச் சேட்டிப்பது ஞான சொரூபியாகிய ஆதிசத்தியே ஆம். இந்த ஆதிசத்தியானது பாச கன்மத்துக்குப்பின் சொல்லுகையால் இதையும் பாசம் என்று உபசாரமாகச் சொல்லப்படும்.

  இனி, 3. சுத்தமாயையாவது:-

  நித்தியமாய், ஒன்றாய், சடத்துவாவையும் வியாபித்திருப்பதாய், சடமாய், சுத்தமாய், சூக்குமை முதலிய நான்கு வாக்குக்களுக்கும், சடத்துவாக்களுள்ளே மந்திரம் பதம் வன்னம் கலை என்னும் நான்குக்கும், சிவதத்துவம் முதலிய சுத்ததத்துவங்கள் ஐந்துக்கும், அவைகளில் உள்ள புவனங்களுக்கும், அந்தப் புவனங்களில் உள்ள விஞ்ஞானகலருக்கும், அந்தப் புவனநாயகராகிய மந்திரமகேசுரர் மந்திரங்கள் என்னம் அணுசதாசிவர் ஆதியோர் தனுவாதிகட்கும் முதற்காரணமாய், சிவனுக்கு வைப்புச் சத்தி என்று சொல்லப்படும் பரிக்கிரக சத்தியாய் இருப்பது. இதற்குக் குண்டலி, குடிலை, மகாமாயை, ஊர்த்துவமாயை, விந்து என இவைபோலப் பரியாய நாமங்களும் உண்டு. இஃது உண்டு என்பதற்குப் பிரமாணம்: இங்ஙனம் கூறிய காரியங்கள் காரணமின்றி உண்டாகா என்பதாம்.

  இனி, ஊர்த்துவபாகம் ஆகிய சுத்தமாயையினுடைய அதோபாகம் ஆகிய 4. அசுத்தமாயையாவது:-

  நித்தமாய், ஒன்றாய், தன்னுடைய காரியங்களைக் காரணம் இன்றி வியாபித்திருப்பதாய், வஸ்து ரூபமாய், கன்மத்துக்கிருப்பிடமாய், அசுத்தமாய், சகலர் பிரளயாகலர் என்னும் ஆன்மாக்களுக்குப் பொதுவாய், பிரளயகாலத்திலே காலாதிதத்துவங்கள் தூல சூக்குமம் முதலானவைகள் உண்டாவதற்குப் பிறப்பிடமாய், சிவனுக்கு போகசத்தியாகிய பரிக்கிரகசத்தியாய் இருப்பது. இதற்கு அதோ மாயை, மோகினி முதலான அநேக பரியாய நாமங்கள் உண்டு. இவ்வாறு ஓர் அசுத்தமாயை உண்டு என்பதற்குப் பிரமாணம்: இந்தக் காலாதி காரியங்கள் மாயை ஆகிய உபாதானம் இன்றி உண்டாகா, மண்ணுண்டை இன்றிக் கடம் உண்டாகாததுபோல என்க. கன்மம் சடம் ஆகையால் ஆன்மாவினிடத்தில் இராது. இருக்கில், ஆன்மா சடமாகத் திரியும். சுத்தமாயை கன்மத்துக்கு மேற்பட்டிருப்பதால் சுத்தமாயையிலும் இராது. ஆகவே, சங்காரகாலத்திலே இதில் இருக்க வேண்டும் என்பது அறிக.

  இனி, 5. கன்ம மலமாவது:-

  மனோ வாக்குக் காயங்களால் பண்ணப்படுகையால் கன்மம் என்றும், பண்ணின கன்மம் நசித்துப் பலம் உண்டாகுமட்டும் புவனத்திலும், மருத்தெண்ணெய் வாசனை போலப் புத்தியிலும் தங்கிக் கண்ணுக்குக் காணப்படா திருக்கையால் அதிட்டம் என்றும், தேகாதிகளைப் பலவகையாய் உண்டாக்குகையால் சனகம் என்றும், எல்லாவற்றையும் தரிக்கையால் தாரகம் என்றும், புசிக்கப்படுகையால் போக்கியம் என்றும் சொல்லப் படுவதாய், ஆத்தியான்மிகம் முதலிய துக்கத்திரயத்திற்குக் காரணமாய், ஆன்மஞானமும் மாயாகாரியங்களும் கூடின இடத்திலே உண்டாகுகையால் தன்மாதன்ம சொரூபியாய், பிரளய காலத்திலே பக்குவப்படுவதாய், சிருட்டி காலத்திலே தேகாதிகளுக்கு ஏது ஆவதாய், சங்காரகாலத்திலே மாயையிலே இருப்பதாய், புசித்தாலொழியத் தொலையாமல் இருப்பதாம். இது காயிகம், வாசிகம், மானசம் என மூவகைப்படும்.

  இவற்றுள், காயிகம் ஆவது, - தெய்வங்களைப் பூசித்தல், ஒருவனை அடித்தல் முதலிய புண்ணிய பாவங்களாம். வாசிகமாவது - வேதாகம ஞானசாத்திர புராண அடங்கன் முறை முதலிய திருமுறைகளை ஓதுதல், ஓதுவித்தல், பொருளைக்கேட்பித்தல், வேதாகம மந்திரங்களை வாக்கு மந்தம் மானதமாகச் செபித்தல், ஒருவனை வைதல் முதலிய புண்ணிய பாவங்களாம்.

  மானசமாவது - முக்கூற்று அறுவகைச் சமயத்திற்கு அதீதப் பட்ட அகச்சமயம் ஆறனுள் சைவர்கள் பண்ணும் அதோபாகம் ஆகிய தியானம் நீக்கி, சைவ சித்தாந்திகள் ஐந்தெழுத்தும், திருநீறும், கண்டிகையும் பொருளாகக் கொண்டு பரசிவத்தின் தடத்தலக்கண சொரூபலக்கணங்களை அறிந்து தியானித்தல் முதலிய தியானமும், பிறர் உடைமையை அபகரிக்கச் சிந்தித்தல் முதலியனவும் ஆகிய புண்ணிய பாவங்களாம்.

  இந்தக் கன்மம், சாதி - ஆயு - போகங்களைக் கலந்து அகந்தை பண்ணி நிற்கும், அஃது ஒழிந்து ஒருவர்க்காயினும் தீர்க்காயுவும் நல்லசாதியும் நல்லபோகமும் பண்ணாது. புண்ணியத்தினாலே பாவமும் பாவத்தினாலே புண்ணியமும் அழியாது.

  ஆகம புராண விதிப்படி பிராயச்சித்தம் பண்ணினால் புசிப்பியாமல் போகும். அவ்வண்ணம் பரிகாரம் செய்யாவிடில் ஆன்மா பாவகன்மங்களுக்கு இரௌரவம், கும்பீபாகம் முதலிய துக்கக் கிலேசங்களை அநுபவித்துப் பாடாணம்போல் கிடக்கும்; அன்றி, புசித்தால் ஒழியத் தொலையாது. புசிக்குமிடத்து இதாகிதங்களால் மேலைக்குக் கட்டுப்பட்டிருப்பதும், மனோவாக்குக் காயங்களால் உண்டாகையால் உற்பத்தியையும், புசித்துத் தொலையப் படுகையாலே நாசத்தையும் உடையதாம். இது தொன்று தொட்டு வருகையால் ஆற்றொழுக்குப் போலப் பிரவாக அநாதி ஆம். இந்தத் தன்மா தன்ம சொரூபமான கன்மத்துக்கு மூலகாரண கன்மமானது ஆணவம் மாயைகளைப் போல நித்தியமாய், சகசமாய் இருக்கும்.

  இப்படி ஒரு கன்மம் உண்டு என்பதற்குப் பிரமாணமாவது:- இருவர் ஒத்த நிலத்திலே திருவள்ளுவர் குறளின்படி உழவு முதலியன சரியாகச் செய்து பயிரிட்டிருக்க, ஒருவனுக்கு விளைகின்றது மற்றொரு வனுக்கு விளையாமற் போகின்றது. இதற்குக் காரணம் யாது? “பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்” என்றபடி புண்ணிய பாவ வன்மை மென்மை எனக் கூறநிற்கும் கன்மமாம். அன்றியும், ஒருவன் சுவர்க்கத்திலே சுகம் அநுபவிக்கின்றான், மற்றொருவன் நரகத்திலே துக்கம் அநுபவிக்கின்றான்; இதற்குக் காரணம் யாது? அதுவே கன்மம் ஆம் என அறிக.

  சிருட்டி வரலாறு

  இனி, சிருட்டி வரலாறாவது சுத்தமாயையிலே நின்று சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நான்கு வாக்குகளும்; சிவம் சத்தி சாதாக்கியம் ஈசுரம் சுத்தவித்தை என்னும் சுத்ததத்துவங்கள் ஐந்தும் உண்டாம்.

  அசுத்தமாயையிலே நின்று மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என ஏழு தத்துவங்கள் உண்டாம்.

  பிரகிருதி மாயையிலே சித்தம், புத்தி, அகங்காரம், மனம்; சோத்திரம், தொக்கு, சட்சு, சிங்ஙுவை, ஆக்கிராணம்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்; சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்; ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி என்னும் இருபத்துநான்காம்.

  நால்வகை வாக்கு

  இனி, சுத்தமாயையிலே வாக்குகள் தோன்றுமாறு:- சத்தருடைய சத்தி சுத்தமாயையைக் கலக்கிக் காரிய உன்முகமாய்க் கூடிநின்ற பொழுது, சந்திரகிரணம் கூடும்போது சமுத்திரம் உப்பி ஒலி உண்டாவதுபோல ஒருநாதம் உண்டாம். அந்தநாதம் பரசரீரத்தினுள்ளாக நாதமாத்திரையாய் விளங்குவதாய், மூவகை ஆன்மாக் களுக்கும் ஞானப்பிரகாசத்திற்கு ஏதுவாய், சூக்குமை என்னும் பேர் பெற்றிருக்கும். அது தானே விருத்தியாய் பஞ்சவர்ணங்களையும் சூக்கும ரூபமாய் ஒலிக்கின்ற மயில் முட்டைக்குள் இருக்கிற நீர் போலப் பிரிக்கப்படாத வர்ணங்களையுடைத்தாய் உன்முகமாய் அர்த்த விசேடத்தைப் போதிக்கப்படாமல் சிந்தையில் இருக்கிற சத்தம் பைசந்தி ஆம்.

  அதுதானே விருத்தியாய் விந்துவில் அதோபாகத்தில் உண்டாகிய அம்பிகை, வாமை, சேட்டை, ரௌத்திரி என்னும் நான்கு சத்திகளினாலும்; சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, வியோமரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை என்னும் பதினாறு சத்திகளினாலும் உண்டாகிய புத்தியில் இருக்கும் அகாரம் முதலிய ஐம்பத்தோரக்கங்களையும், அவற்றின் அடைவையும் உடைத்தாய், செவிக்குக் கேட்கப்படாததாய், உள்ளே உணரப்படுவதாய், உதானவாயுவின் தொழிற்பாடு பற்றியிருப்பதாய், கண்டத்தில் அடங்கியிருக்கும் சத்தம் மத்திமை ஆம்.

  பிராணவாயு வியாபாரமாய் மேலே எழுந்து தன் செவிக்கும் பிறர்செவிக்கும் கேட்கயோக்கியமாய் அர்த்தத்தைச் சொல்லுவதாய் இருக்கிற சத்தம் வைகரி ஆம்.

  இந்த நான்கு வாக்குகளும் நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளைப் பற்றுக்கோடாகச் சார்ந்து, ஐவகைப்பட்டு, சிவதத்துவம் முதலிய பஞ்சதத்துவங்களிலும் இருக்கும் மூவகை ஆன்மாக்களிடத்திலும் பந்தித்திருக்கும்; இந்த வாக்குகள், தனக்கு அந்நியமாக ஒருவன் சிவ ஞானத்தால் கண்ட காலத்திலே ஆணவமலத்துடனே நீங்கும் அல்லது ஒருவருக்கும் நீங்காது.

  இந்த வாக்குகளை ஞானவான் யாவன் அந்நியமாகக் காண்கின்றான் அவன் நித்தியன் ஆகி, நினைப்பும் மறப்பும் அற்றவனாகி, விகாரம் இல்லாதவனாய், சுதந்திரனாகி, ஞானானந்த சொரூபி ஆவன் எவ்வாறு? எனில், சூரிய உதயத்திலே நட்சத்திரப் பிரகாசமும் அந்தகாரமும் போலச் சிவஞானப் பிரகாசத்திலே அஞ்ஞானமாகிய ஆணவமலத்துடனே இந்தவாக்கு ரூபமாகிய விஞ்ஞானமும் போம். இது சுத்தமாயையில் சுத்தம் உண்டாமாறு சொல்லப்பட்டது.

  சிவதத்துவம் ஐந்து

  இனி, சுத்தமாயையில் தத்துவங்கள் ஆகிய அர்த்தவடிவு என்றும், ஒலிவடிவு என்றும் இருவிதமுடைய அத்துவாக்களில், அர்த்த வடிவாகிய சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தில் –

  1. சிவ தத்துவமாவது:- சுத்தமாயையினுடைய முந்தின விகாரம் என அறிக. இதிலே சூக்குமை என்னும் வாக்கு மிகுத்துக் காமிகாதிசொரூபமாய் இருக்கிற சிவாகமவழி முத்தியை இச்சிக்கிறவரிடத்தில் சிவஞானவிளக்கம் அதிகம், அதிலும் சிறிது அதிகம், மிகவும் அதிகம் என்பதை விளக்கும். இன்னும் அவ்வாக்கு ஈசுரசந்திக்கு ஏவல் செய்துகொண்டிருக்கும். இன்னும் அச்சிவதத்துவம், மலத்தைப் போக்கும் சத்திக்கும் சிவபதத்தை அடைவிக்கும் சத்திக்கும் உபாதியாய் இருக்கிற இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்துவகாமினி என்னும் கலைகளுக்கு இருப்பிடமுமாய் நாதம் என்று சொல்லப்படுவதாய் தன்மரூபமாய் இருப்பது என அறிக.

  இனி 2. சத்தி தத்துவமாவது:- காமிகாதி அபரஞானத்தையுடைய பைசந்தி வாக்கு விருத்திக்குக் காரணமாய், ஆன்மாவுக்குச் சமுசார நிவர்த்திக்குப் பகையாயிருக்கிறதிலே பிரவர்த்திக்கை. இதிலே விஷயகோசரமாயிருக்கிற பசுஞானத்தை விடுத்துச் சிவஞானத்தைச் சாட்சாத்காரமாய்ப் பிரகாசிப்பிக்கிறதற்குத் தாபத்திரயம் முதலான சர்வதுக்கங்களையும் போக்குகை ஆகிய இவற்றைப் பண்ணுகையால் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்னும் சத்திகளுக்கு இருப்பிடமாய், விந்து என்று சொல்லப்படுவதாய் இருக்கிற சிவதத்துவகாரியமாம்.

  இனி, 3. சாதாக்கிய தத்துவமாவது:- காமிகம் முதலான அபரஞானத்தையுடைய மத்திமை என்னும் வாக்கு விருத்திக்கு இருப்பிடமாய், காமிகம் முதலான தந்திரங்கள் வேறாகிறதற்குக் காரணங்களாய் இருக்கிற பிரணவாதிகட்கும் சாமீப்பியம் முதலானவற்றை அடைந்தோர்க்கும் தனு கரணாதிக்குக் காரணமாகிய சத்திதத்துவ காரியமாம்.

  இனி, 4. ஈசுரதத்துவமாவது:- அனந்தேசுராதிகட்கும் அவர்களை உபாசிக்கையால் அவர்களுடைய பதத்தை அடைந்திருக்கிறவர்கட்கும் தநு கரண புவனாதியை உண்டாக்குவதற்கான சதாசிவ தத்துவ காரியமாம்.

  இனி, 5. சுத்தி வித்தியா தத்துவமாவது:- காமிகம் முதலான ஆகமங்களுடைய வைகரிவாக்குவிருத்திக்கு இருப்பிடமாய், சத்தகோடி மகாமந்திரங்களுக்கும், கணேசுரர்களுக்கும், இந்திரன் முதலான திக்குப் பாலகர்களுக்கும் தனு கரண புவனம் முதலானவற்றிற்குக் காரணமாய், ஈசுவரதத்துவ காரியமாய் இருப்பதால்.

  சிவதத்துவம் முதலிய சில பெயர்கள் வருமாறு:-

  பரமான்மா ஞான மாத்திரத்துடன் கூடியிருக்கிற பொழுது அவர்க்குச் சிவம் என்று பெயர்; அவர் இருக்கும் தத்துவத்திற்கும் சிவம் என்று பெயர். தொழில் மாத்திரத்துடன் கூடியிருக்கிற பொழுது அவருக்குச் சத்தி என்று பெயர்; அவர் இருக்கும் தத்துவத்திற்கும் சத்தி என்று பெயர். ஞானக்கிரியைகள் சரியாயிருக்கக் கூடியிருக்கிற பொழுது அவருக்குச் சதாசிவம் என்று பெயர். கிரியை அதிகமாய் ஞானம் குறைந்திருக்கக் கூடியிருக்கிற அப்பொழுது அவருக்கு ஈசுவரர் என்று பெயர். ஈசுவரர் எனினும் மகேசுவரர் எனினும் ஒக்கும். ஞானம் அதிகமாய்ச் கிரியை குறைந்திருக்கக் கூடியிருக்கிற அப்பொழுது அவருக்கு ஈசுவரர் என்று பெயர். ஈசுவரர் எனினும் மகேசுவரர் எனினும் ஒக்கும். ஞானம் அதிகாய்க் கிரியை குறைந்திருக்கக் கூடியிருக்கின்ற அப்பொழுது அவருக்குச் சுத்தவித்தை என்று பெயர்; அவர் இருக்கும் தத்துவத்திற்கும் சுத்தவித்தை என்று பெயர். அப்பரமான்வுக்கு இவ் ஐவகைத் தத்துவமும் சுதந்திர வடிவம் ஆம்.

  வித்தியா தத்துவம் ஏழு

  1.  மாயா தத்துவமாவது:- ஆன்மாவுக்கு மயக்க அறிவைப் பண்ணுவது.

  2.  கலையாவது:- நியதியின்பின் மாயையினின்றும் தோன்றுவதாய், ஆணவத்தை ஏகதேசத்திலே நீக்கி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்குவதாய், மாயாகாரியமாய் இருப்பது. இது உண்டு என்பதற்குப் பிரமாணம் - இதுவே ஞானக் கிரியைகளை விளக்கும், பின்னை ஒன்றினாலே அவ்விளக்கம் வாராது என்பது.

  2.  வித்தையாவது:- கலையிலே உண்டானதாய், ஆன்மாவுக்கு ஞானசத்தியை விளக்குவதாய், போகத்தைக் கிரகிக்கிறதற்குக் காரணமாய் இருப்பது.

  3.  அராகமாவது:- வித்தையிலே உண்டானதாய், ஆன்மாவின் இச்சாசத்தியை விளக்குவதாய், புத்தி தருமமான் அந்தந்த விஷயங்களில் ஆசையை உண்டாக்குவது.

  4.  காலமாவது:- மாயையினின்றும் தோன்றி இலவம் துடி என்பது முதலியவற்றிற்குக் காரணமாய், இம்மட்டென்று போகத்தை அளவிடுவதாய், எல்லை பலம் புதுமைகளைப் பண்ணுவதாய், செல்காலம் நிகழ்காலம் எதிர்காலம் முதலாக அநேக பேதப்பட்டிருப்பது.

  5.  நியதியாவது:- காலத்தின்பின் மாயையினின்றும் தோன்றி ஒருவன் செய்த கன்மபலத்தை விஷயம் நன்றாய் இருக்கிறதென்று புசியாமலும், தான் செய்த கன்மபலத்தை விஷயம் நன்றாயிருக்கவில்லை என்று புசியாமல் இராதபடியும், ஒருவர் தேகாதிகள் மற்றொருவருக்குப் போக ஏது ஆகாதபடியும், அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகரும்படி இராசாக்கினை போல நிச்சயம் பண்ணி நிறுத்துவது.

  6.  புருடதத்துவமாவது:- இங்ஙனம் கூறிய கலை முதலான பஞ்ச தத்துவங்களையும் பொருந்திய பஞ்ச கஞ்சுகமுடைய உயிரே முற்கூறிய இச்சா ஞானக் கிரியை மருவிப் புருடதத்துவம் எனப் பெயர் பெற்று, போகத்து உன்முகமாய் நிற்பது.

  இனி, பிரகிருதியாவது:- கலையிலே நின்றும் ஸ்ரீகண்டபரமேசுரனால் உண்டாக்கப்பட்டதாய், குணம் முதலான இருபத்து நான்கு தத்துவங்களுக்குக் காரணமாய், பிரிக்கப்படாமல் குணங்களைச் சரியாகக் கூட்டியிருப்பதாய், விபரீத உணர்வையுடையதாகிய அவிச்சையைத் தோற்றுவிப்பது. இதற்கு மூலப்பிரகிருதி என்றும் பெயர் கூறப்படும்.

  இனி, குணதத்துவமாவது:- பிரிக்கப்பட்ட குணங்கள் சரியாய்க் கூடியிருக்கும் அவதரம்; ஆகையால், பிரகிருதிக்கும் குண தத்துவத்திற்கும் பேதமில்லை. இக்குணதத்துவம், சாத்துவிகம் இராசதம் தாமதம் முதலிய மூன்றாய் ஒவ்வொன்று முத்திறப்பட்டு ஒன்பது வகையாய் இருக்கும்.

  ஆன்மதத்துவம் - 24.

  அந்தக் கரணம் நான்கு

  1.  சித்தமாவது:- பிரகிருதியின் அதோபாகமே; அதுபோகத்திலே சாமானியமாய் இருக்கச் சிந்திக்கப் பண்ணும். குணம், சித்தம், பிரகிருதி என்ற மூன்றும் அவதர நாமங்களாம்.

  இனி, 2. புத்தியாவது:- குணதத்துவத்திலே நின்றும் உண்டானதாய், உயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் தன்பாற் சாரப்பட்டும், இருவினைக்கு ஈடாகவந்த விடயத்தை அஃது இன்னது என நிச்சயித்தும் நிற்பது. இனி தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் என்னும் எட்டினுக்கும் காரணமாய் இருப்பது.

  இனி, 3. அகங்காரமாவது:- என்னோடு ஒப்பவர் ஒருவரும் இல்லை என்னும் அகந்தைக்குக் காரணமாய், யான் எனது என்னும் அபிமானத்துக்கும் காரணமாய், புத்தியிலே உண்டானதாய் இருப்பது. இது சாத்துவிகம் முதலிய குணங்களுடைய மிகுதியினாலே தைசதம், வைகாரிகம், பூதாதிகம் என மூன்று பேதப்படும். இவைகள் மனம் முதலியவற்றிற்குக் காரணமாய் இருக்கும்.

  3. மனமாவது:- தைசத அகங்காரத்தில் உண்டானதாய், விகற்பம் என்னும் சந்தேக நினைவும், சங்கற்பமென்னும் நினைவும், இந்திரியங்கள் வழியாய்வந்த பொருள்களைப் பற்றி அறியும் அறிவும் உடையதாய் இருப்பது. இந்த விசேடத்துடனே கூடினது. விசேடியம் என்ன விஷயீகரித்துவரும் நிச்சயத்தையும் பண்ணுவது. இதுதான் சுரோத்திராதி இந்திரியங்களிலே கூடின அடைவிலே சத்தாதி ஞானங்களை உண்டாக்கும். ஆகையால், விபுவும் அல்ல; பஞ்சாவதானியிடத்திலே ஒருங்கே ஞானம் வருகையால் அணுவும் அல்ல: விரிதல் குவிதலையுடைய மகத்துவமாம்.

  ஞானேந்திரியம் ஐந்து.

  இனி, சுரோத்திராதியாவன:- முற்கூறிய தைசத அகங்காரத்திலே நின்றும் சுரோத்திராதி இந்திரியங்கள் உண்டாம். தன்னை வந்தடைந்த சத்தத்தைக் காது வெளியில் ஆகாசம் இடமாயிருந்து கிரகிக்கும் தத்துவம் சுரோத்திரம்.

  தன்னை வந்தடைந்த பரிசத்தைத் துவக்கில் வாயுவினிடமாக இருந்து கிரகிக்கும் தத்துவம் துவக்கு.

  கோளகையிலே அக்கினியிடமாக வந்த நயன ஒளி வழியாகப் போய் ரூபத்தைக் கிரகிக்கும் தத்துவம் சட்சு.

  நாக்கிலே அப்புவினிடமாக வந்தடைந்த ரசத்தைக் கிரகிக்கும் தத்துவம் சிங்ஙுவை.

  மூக்கிலேயிருந்து பிருதிவியினிடமாக வந்தடைந்த கந்தத்தைக் கிரகிக்கும் தத்துவம் ஆக்கிராணம்.

  காது முதலான தானங்கள் இருக்கவும் செவிடர் முதலியோர்களுக்குச் சத்தாதிகள் அறியப்படாதிருக்கை யால் அந்தத் தானங்களில் இந்திரியம் இல்லை என்க.

  இவற்றிற்கு அந்நியமாய் வைகரி அகங்காரத்திலே வாக்கு முதலான கன்மேந்திரியங்கள் உண்டாம்.

  கன்மேந்திரியம் ஐந்து

  இவற்றில் நாக்கினிடமாக நின்று சொற்களை வசனிக்கும் தத்துவம் வாக்கு: கால்களினிடமாக நின்று நடத்தல் ஓடல் முதலியவற்றைச் செய்விக்கும் தத்துவம் பாதம்; கைகளினிடமாக நின்று ஈதல் ஏற்றல் முதலிய தொழில்களைச் செய்யும் தத்துவம் பாணி; குதத்திலே நின்று மலசலவிசர்க்கங்களைப் பண்ணும் தத்துவம் பாயு; குய்யத்திலே நின்று ஆனந்தத்தைப் பண்ணும் தத்துவம் உபத்தம் என்க.

  தன்மாத்திரை ஐந்து

  இனி, பூதாதி ஆங்காரத்திலே நின்று பஞ்ச தன்மாத்திரை உண்டாம். அர்த்தம் தரும் விசேடமின்றியிருக்கும் சாமானிய சத்தம் சத்ததன்மாத்திரை; குளிர்ச்சி உஷ்ணம் முதலான விசேடணம் அற்று, சாமானிய சத்தமாய், சத்த பரிசமுமாய் இருப்பது பரிச தன்மாத்திரை; வெண்மை, கருமை, செம்மை முதலிய விசேடங்கள் அற்று ரூப சாமானியமாய், சத்த-பரிச-ரூபமாய் இருப்பது ரூபதன்மாத்திரை; மதுரம் முதலான விசேடம் அற்று ரச சாமானியமாய், சத்த-பரிச-ரூப-ரசமாயிருப்பது ரசதன்மாத்திரை; நற்கந்தம் துர்க்கந்தம் ஆகிய விசேடம் அற்று, கந்த சாமானியமாய்ச் சத்த-பரிச-ரூப-ரச கந்தமாயிருப்பது கந்ததன்மாத்துiர என்க.

  இவ்வாறாகிய பரிசம் முதலான தன் மாத்திரைகளில் ஒவ்வொரு குணம் அதிகம். அதிகமாகக் கூடியிருக்கையால் வாயுவாதி பூதங்களிலும் ஒவ்வொரு குணம் அதிகம் என அறிக.

  இந்தச் சத்தாதி தன்மாத்திரைகள் ஆகாசாதி பூதங்களுடைய சூக்கும அவத்தை. சத்தாதி தன்மாத்திரையிலே நின்றும் ஆகா சாதி பூதங்கள் உண்டாம்.

  பூதம் ஐந்து

  ஆகாயம்: சத்த தன்மாத்திரையிலே உண்டானதாய் இடங்கொடுப்பதாய், தூலமாய், சுத்தமாய், வன்னரூபமாய், சத்தத்தைக் குணமுடையதாய் இருக்கும்.

  வாயு: சத்தத்தினுக்குப் பேரிமுதலான நிமித்தம் ஒழித்து, குணி அல்லதாய், பரிச தன்மாத்திரையிலே ஆரம்பிக்கப்பட்டதாய், உஷ்ணமும் அநுஷ்ணமும் அல்லாத பரிசத்தையுடையதாய் சத்தத்தையுடையது. இது, பிராணன் அபானன் முதலாக அநேக பேதம் உடையதாய், திரட்டுதல் என்னும் தொழிலைப் பண்ணும்.

  அக்கினி: ரச தன்மாத்திரையில் உண்டானதாய், வெண்ணிறத்தையும் ரசத்தையும் குளிர்ந்த பரிசத்தையும் சலசல சத்தத்தையும் உடையதாய், நெகிழ்ச்சியாய், தூள் முதலியவற்றை வலிய உண்டையாகப் பண்ணுவதாய் இருக்கும்.

  அப்பு: ரச தன்மாத்திரையில் உண்டானதாய், வெண்ணிறத்தையும் ரசத்தையும் குளிர்ந்த பரிசத்தையும் சலசல சத்தத்தையும் உடையதாய், நெகிழ்ச்சியாய், தூள் முதலியவற்றை வலிய உண்டையாகப் பண்ணுவதாய் இருக்கும்.

  பிருதிவி: கந்த தன்மாத்திரையில் உண்டானதாய், சுகந்த துர்க்கந்தங்களையும், மதுரம் முதலான ஆறுரசங்களையும், வெண்ணிறம் முதலிய நானாவித வன்னங்களையும், சூரியன் அக்கினி முதலியவைகளின் கூட்டுறவின் பாகத்தில் உண்டானதாய், உஷ்ணமும் அநுஷ்ணமும் அல்லாத பரிசத்தையும் கடகட சத்தத்தையும் உடையதாய், கடின தாரக ரூபமாய் இருக்கும்.

  இந்தப் பஞ்சபூதங்கள் ஒன்றில் ஒன்று உண்டாகாது, காரண குணம் காரியத்திலே வரவேண்டும் என்னும் வாக்கால் என்க.

  தத்துவமாவது பிரளயம் மட்டாக இருக்கிறதாகையால் சரீராதிகள் தத்துவமல்ல பூதவிகாரமாம்.

  சிவதத்துவம் முதல் பிருதிவி தத்துவம் ஈறான முப்பத்தாறும் சாதாரணம், அசாதாரணம் என்று இருவகைப்படும். சாதாரணமாவது, புவனத்திற்கு ஆதாரமாய் தூலமாய் இருக்கும்; அசாதாரணமாவது, சூக்குமரூபமாய் ஞானக்கிரியையை விளக்குவதாக ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய் இருக்கும்.

  இனி, சுத்தமாயா காரியம் ஐந்திற்கும் சிவதத்துவம் என்றும், சுத்ததத்துவம் என்றும், சுத்தாத்துவா என்றும் பிரேர காண்டம் என்றும் பெயர்.

  மாயாதிகள் ஏழுக்கும் வித்தியாதத்துவம் என்றும், ஈசுவர தத்துவம் என்றும், போககாண்டம் என்றும், மிச்சிராத்துவா என்றும், சுத்தரசுத்ததத்துவம் என்றும் பெயர்.

  சித்தம் முதலான இருபத்துநான்கு தத்துவங்களுக்கும் ஆன்ம தத்துவம் என்றும், அசுத்த தத்துவம் என்றும், போக்கியகாண்டம் என்றும், அசுத்தாத்துவா என்றும் பெயர்.

  இந்தத் தத்துவங்களால் வரும் காரியங்கள் சாதாரணம் என்றும், அசாதாரணம் என்றும், பொதுச்சிறப்பாகிய உபயரூபம் என்றும் மூவகைப்படும். இவற்றில், புவனங்கள் எல்லார்க்கும் போக ஏது ஆகையால் சாதாரணம் ஆம். பஞ்ச தன்மாத்திரைகள், மன அகங்கார புத்திகள் இந்த எட்டுத்தத்துவங்கள் கூட்டுறவினால் உண்டான புரியட்டகதேகம் அவரவர்களுக்குப் போக ஏது ஆகையால் அசாதாரணமாம். இந்தப் புரியட்டக தேகத்திலே நின்றும் ஆன்மா ஒரு உலகத்திலே போக்குவரவு உடையன் ஆவன். ஸ்திரீ முதலியவருடைய தூல தேகம் அவர்களுக்குப் போகத்துக்கு ஏதுவாய், கணவனுக்குப் போக்கியமுமாய் இருக்கையால் உபயரூபமாம். இவ்வாறு மற்றைத்தேகங்களும் உபயரூபம் என அறிக.

  இனி, தூலதேகமானது சூக்கும பூதங்களை விட்டு நீங்காமல் மாதா பிதாக்களுடைய சுரோணித சுக்கிலங்களுடனே உண்டாம்.

  அவ்வாறு உண்டாகுமாறு:- எலும்பு, மாமிசம், மயிர், துவக்கு, நகம், தந்தம், நரம்பு இவை முதலியன சூக்கும பிருதிவியிலும்; மூத்திரம், இரத்தம், கபம், வேர்வை, சுக்கிலம் இவை முதலியன சூக்குமமான அப்புவிலும்; இருதய தாபம், கண்களில் பித்தபாகம் முதலானவை சூக்குமமான அக்கினியிலும்; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன் தேவதத்தன், தனஞ்சயன் இவை பத்தும் சூக்கும வாயுவிலும்; ஆகாசமானது சூக்கும ஆகாசத்திலும் உண்டாம். இவ்வாறு சூக்கும பூதத்தினின்றும் தூலதேகம் உண்டாம் என அறிக.

  இவ்வாறு ஆணவம் மாயை கன்மங்களாலே தத்துவ தாத்துவிகமான சகல பந்தங்களுடனும் கூடின சகலருக்கு முன்சொன்ன கேவலாதி அவத்தைகள் சாக்கிராதியாக ஒவ்வொன்று ஐந்து வகையாகப் பதினைந்து பேதப்படும்.

  கேவலாவத்தை ஐந்தில் சகலாவத்தை ஐந்திற்கும் இலக்கணம் வருமாறு:-

  கீழாலவத்தை

  கேவலத்தில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீ தம் என்று ஐந்துவகை ஆகும்.

  கேவலத்தில் சாக்கிரமாவது:- ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களுடனும், தாத்துவிகங்கள் அறுபதுடனும் கூடச் சகல விடய போகங்களையும் அநுபவித்துக் கொண்டிருக்கும் வேளையிலே போக ஏதுவான கன்மம் இல்லாதிருக்கையால் பிரேர காண்டமாகிய சுத்த தத்துவங்கள் ஐந்தும், போக காண்டமாகிய காலாதிகள் ஏழும், பிருதிவி முதலான பூதங்கள் ஐந்துமாகப் பதினேழும் நீங்க சுரோத்திரம் முதலாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், வாக்கு முதலாகிய கன்மேந்திரியங்கள் ஐந்தும், சத்தம் முதலாகிய தன்மாத்திரைகள் ஐந்தும், வசனம் முதலாகிய தாத்துவிகமாகிய வசனாதிகள் ஐந்தும், பிராணன் முதலிய தாத்துவிகமாகிய வாயுக்கள் பத்தும் மனம் முதலாகிய அந்தக் கரணங்கள் நான்கும் ஆகிய முப்பத்து நான்கு கருவிகளுடனும் கூடி, கேத்திரிகனாகிய ஆன்மாவும் கூட முப்பத்தைந்தாய், சாக்கிரத்தானமாகிய லலாடத்திலே நின்று மேற்கூறிய பிரேரிக்கிற தத்துவமும், புசிக்கிற தத்துவமும் தாரகம் ஆகிய பூதங்களும் நீங்குகையால், ஆணவமலம் மேலிட்டுக் கண்டும் காணாமல் கேட்டும் கேளாமல் மயங்கியிருக்கும் அவதரமாம். இது அறிவில்லாச் சாக்கிரம் என்க.

  புறம்பே விடயங்களைக் கிரகிக்கும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்துமாக இப்பத்தும் நீங்க நின்ற சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி வாயுபத்தும், மனாதி அந்தக்காரணம் நான்கும், கேத்திரிகனும் ஆகிய இருபத்தைந்தும் கண்டத் தானத்திலே நின்று, சாக்கிராவத்தையிலே நின்று முன் அநுபவித்த போகத்தை நினைப்பதும், தற்காலத்திலே வரும் சூக்கும தேக போகம் ஆகிய ஆனைஏறி மாலை சூடுதல் முதலியவற்றை அநுபவிப்பதும் கேவலசொப்பனம் என்க.

  முற்கூறிய சொப்பனாவத்தையில் கூடியிருந்த இருபத்துநான்கு கருவியில் இருபத்திரண்டு நீங்க நின்ற சித்தமும், பிராணவாயுவும், கேத்திரிகனும் கூடி இருதயத் தானத்திலே நின்று சுகமாய்த் தூங்குவது கேவல சுழுத்தி என்க.

  சித்தமும் நீங்க உச்சுவாசம் நிச்சுவாசம் பண்ணிக் கொண்ட, தேகத்துக் காவலாயிருக்கிற பிராணவாயுவுடன் கேத்திரிகனும் கூடி நாபித்தானத்திலே நின்று, ஒன்றும் தெரியாமல் தூங்குவது கேவலதுரியம் என்க.

  பிராணவாயுவை நீக்கிக் கேத்திரிகனாகிய ஆன்மா ஒருவனே தனித்து மூலாதாரத்திலே ஆணவமலத்துடனே கூடி ஓர் அறிவும் அற்றிருப்பது கேவல துரியாதீதம். இந்த அதீத அவத்தைதானே நித்தியகேவல அவத்தை ஆம்; இவற்றிற்குக் கீழாலவத்தை என்றும் பெயராம்.

  மத்தியாலவத்தை

  சகலத்தின் மத்தியாலவத்தையாவது இலாடத் தானத்திலே நின்று ஆன்மா சகலவிடயங்களையும் அநுபவிக்கிற வேளையிலே கல்லெறி முதலியவைகளாலும், சிசுமரணம் கேட்பது முதலியவைகளாலும் திடுக்கிடப் பிராணவாயுவும் சீவியாமல் மூர்ச்சித்து மயங்கி நின்ற அவதரம் சாக்கிராதீதம்.

  அற்பமாகப் பிராணவாயு சீவித்துப் பெருமூச்செறிவது சாக்கிரத்தில் துரியம்.

  சித்தத்துடனும் பிராணவாயுவுடனும் கேத்திரிகன் கூடித் துக்கமாத்திரத்தை அறிவது சாக்கிரத்தில் சுழுத்தி.

  ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், பிராணாதிவாயுக்கள் பத்தும், அந்தக் கரணம் நான்கும் ஆக இருபத்து நான்குடன் கேத்திரிகனும் கூடி இருபத்தைந்தாய்த் துக்கம் இதனாலே வந்தது என்ற துர்ச்சிந்தையுடனே துக்கத்தை அநுபவிப்பது சாக்கிரத்தில் சொப்பனம்.

  தத்துவ தாத்துவிகங்கள் எல்லாவற்றினும் கூடி சர்வ விடயங்களையும் அநுபவிப்பது சாக்கிரத்தில் சாக்கிரம்.

  சகலாவத்தையுடையனாகிக் கலையினாலே விளங்கப்பட்ட ஞானக்கிரியா சொரூபமான சைதன்னியத்தையும், வித்தையினால் விளங்கப்பட்ட விடய ஞானத்தையும் அராகத்தினாலே விடயத்திலே இச்சையையும், குணரூபமான பிரதானத்தினாலும் புத்தி முதலான கரணசமூகத்தினாலும் அவற்றின் காரியங்களால் பேதிக்கப்படும் புருடனாகி நியதியுடன் கூடுகையால் தான் புசிக்கப்பட்ட போகங்களிலே நியமிக்கப்பட்ட காலத்திலே அந்தக் காலத்தில் எண்ணப்பட்ட போகத்திலே மோகிதனாகி, இவ்வாறு தத்துவ கலாபந்தங்கள் உடையனாய், கிஞ்சித்துவம் உள்ளவனாய், தூல சூக்கும தேகங்களுடன் கூடினவனாய், மாயாபோகங்களிலே கூடித் தன்வயனாகி, தேகாதிகளே தான் என்று விசாரித்து மூடனாகித் திரிகிற காலத்தில், வேதபாகியமான சமயங்களிலேயிருந்து பண்ணிய புண்ணிய விசேடங்களினாலே அவற்றின் விசிட்டமான வைதிக சைவ சமயத்தை அடைந்து, சமய விசேட தீக்கை பெற்று, சாலோகாதிகளை அடைந்து, அங்கே விரத்திவந்து புண்ணியபூமியிற் செனித்து, கிரியை முதலியவற்றை அநுட்டித்து, அவைகளினாலே இருவினையொப்ப மலபரிபாகம் வர, நிவிர்த்தி முதலிய மந்திரசத்தியும் பதிய நல்லாசிரியனைத் தேடுங்கால் வாக்கு மனாதீ தமாயிருக்கிற சிவமே கிருபையினாலே கிருதகாடினியம் போல் ஆசாரியனாகக் காணப்பட்டுத் திருநோக்கம் முதலியவற்றால் மந்திராதி பஞ்சாத்துவா கற்பித நிவிர்த்தியாதி கலைகளைச் சோதித்து, பாசக்ஷயம் பண்ணி, பரிபாகத்துக்கு ஈடாகச் சச்சிதானந்த சிவமாகப் பண்ணும் என்க.

  உத்தம இலக்கணமுடையனான ஆசாரியன் உத்தம இலக்கணமுடையனாய் இருக்கிற சீடனுக்குச் சாத்திரத்திலே சொன்னபடி சமய விசேட நிருவான அபிடேகங்களைப் பண்ணுவன். அவன் ஆலோகனம் செய்த மாத்திரத்திலே பரமானந்தம் உண்டாகும்; அவனே ஞானாசாரியன் என அறிக. அவ் ஆசாரியன் சத்தி நிபாதமுடைய தீவிரதர பக்குவனுக்குச் சாம்பவதீக்கை பண்ணுவன்.

  சாம்பவதீக்கையாவது:- ஞானதுக்கை, கிரியாதீக்கை என அநேகபேதமாய் இருக்கிற நிருவாண தீக்கையினும் வேறாய், சிவ சீவர்களுடைய தாதான்மியத்தை விளக்குவது என அறிக.

  இவ்வாறு சாம்பவதீக்கை பெற்றுச், சிவசொரூபமான ஆசாரியனாலே இந்திரிய வேருடன் கூடி, நம்மில் அநந்நியமான உனது சொரூபத்தை அறிந்தாயில்லை, நாமே நீ ஆவாய் என்று போதிக்கப்பட்டு, அவன்தான் சிவனைக் காட்டிலும் அநந்நியன் என்று சிந்தித்தல் தெளிதல் செய்து, ஆணவாதி பாசங்களை நீக்கி, சச்சிதானந்த சொரூபமான சிவத்தையே அநந்நியமாக சாட்சாத்கரித்து, அதிலே அழுந்தி, அதுவேயாய் காசமற்றகண் சூரியப் பிரகாசத்துடன்கலந்து பின் ஒன்றும் காணாததுபோலப் பசுகரணம் சிவகரணமாம் ஆகையாலே நின்மல சாக்கிராதியான சுத்தாவத்தைகளைப் பொருந்துவன். அவை வருமாறு:-

  சுத்தாவத்தை

  நின்மல சாக்கிரமாவது:- நின்மல சாக்கிரா வத்தைக்குத் தானம் ஆகிய இருதயத்திலே சிவசத்தியுடனே கூடுதலால், உப்பளத்திலே விழுந்தது உப்பாமாறுபோல ஜீவீபூதமாய் அகார உகார மகார விந்து நாதங்களுடன் கூடிய மனம், அகங்காரம், புத்தி, சித்தம், உள்ளம் என்னும் அந்தக்கரணம் ஐந்துடன் கூடினவாகிய இந்திரியங்களால் காணப்பட்ட சத்தாதி விடயங்களைச் சிவாகாரமாகவும், விடய சுகங்களைச் சிவானந்தமாகவும் அநுபவிப்பது நின்மல சாக்கிரமாம்.

  நின்மலசாக்கிராவத்தைக்குக் காரணமான அகாரம் உகாரத்திலும், புறம்பே விடயங்களைப் பற்றும் மனம் அகங்காரத்திலும், கிரியாசத்தி ஞானசத்தியிலும் ஒடுங்க, அகங்காராதி நான்குடனும் அதற்குப் பிராணன் ஆகிய ஞானசத்தி முதல் நான்குடனும் சொப்பனாவத்தைத் தானம் ஆகிய கண்டத்தானத்திலே அந்தக் கரணவிருத்தியுடன் சிவோகம் பாவனை பண்ணி நிற்பது நின்மல சொப்பனம்.

  நின்மல சொப்பன அவத்தைக்குக் காரணம் ஆகிய உகாரம் மகாரத்திலும், நான் என்று திரிக்கிற அகங்காரம் புத்தியிலும், ஞானசத்தி இச்சாசத்தியிலும் ஒடுங்க, புத்திமுதல் மூன்றும் அவற்றைப் பிரேரிக்கும் அகாராதி மூன்றும் அவற்றிற்குப் பிராணன் ஆகிய இச்சாசத்தி முதல் மூன்றுடனும் சுழுத்தித்தானம் ஆகிய மூலத்திலே தேகேந்திரிய வியாபாரம் அற்று, வாசா மகோசரம் ஆய ஞாதுறு ஞான ஞேயம் மூன்றும் மூன்றாகச் சுகத்தை அநுபவித்து நிற்பது நின்மல சுழுத்தி.

  நின்மல சுழுத்தி அவத்தைக்குக் காரணமான மகாரம் விந்துவிலும், பகுத்து நிச்சயிக்கிற புத்தி சித்தத்தலும் ஒடுங்க, சித்தம் முதலாகிய இரண்டும் அவற்றைப் பிரேரிக்கிற விந்து நாதங்களும், அவற்றிற்குப் பிராணன் ஆகிய ஆதி பரை என்னும் இரண்டு சத்திகளுடனும் துரியாவதத்தைத் தானம் ஆகிய புருவமத்தியிலே நின்று, தேகேந்திரிய அந்தக்கரண வியாபாரம் ஒன்றும் அற்றுக் கேவலானமாத்திரமாய் இருப்பது நின்மல துரியம்.

  நின்மல துரியாவத்தைக்குக் காரணமான விந்துவும், அர்த்தநாதமும் குடிலையிலும், சித்தம் பிரகிருதியிலும், ஆதிசத்தி பராசத்தியிலும் ஒடுங்க, நின்மல துரியாதீத அவத்தைக்குக் காரணம் ஆகிய அநாத நாதம் என்னும் பராசத்தியும், சிவானந்த அநுபவியாகிய சொரூபஞானம் ஆகிய உள்ளமும் அடங்க நின்மலதுரியாதீத அவத்தைக்குத் தானம் ஆகிய பிரமரந்திரத்திலே அகண்டாகார சச்சிதானந்த பரிபூரண சிவானந்த அநுபோகத்தை இரண்டறப் பெற்றிருப்பது நின்மலதுரியாதீதம். இதுவே, உன்மனைக்கு மேற்பட்டிருக்கிற மோட்சம் என்க.

  இந்த நின்மல சாக்கிராதீதத்தைப் பெறவே நிவிர்த்தி முதலான பஞ்சகலைகளும், அன்னமயம் முதலான பஞ்சகோசங்களும், அகாராதி சூக்கும பஞ்சாக்கரமும், நகாராதி தூல பஞ்சாக்கரமும், சத்தியோசாதாதி பஞ்ச மந்திரங்களும், பிரமன் முதலிய பஞ்ச கர்த்தாக்களும் சுத்தவித்கை முதலான பஞ்ச தத்துவங்களும், உள்ளத்துடன் மனம் முதலான அந்தக் கரணங்கள் ஐந்தும், வைகரி முதலான வாக்குகள் ஐந்தும், கிரியாசத்தி முதலான பஞ்சசத்திகளும் ஆணவாதி பஞ்சபாசங்களும் சர்வ உபாதிகளும் நீங்கும்.

  இவ்வாறு நின்மல துரியாதீத அவத்தையை ஒரு பசுக்கறக்கிற நேரம் ஆயினும், வில்லம்பு பூமியில் விழுகிற நேரமாயினும், கண்ணிமை பொருந்தும் நேரமாயினும் பெற்றவர் பூமியில் மீளப் பிறவார். இவ்வாறு நிட்டைகூடியவர்க்கு விதி நிஷேதம் புண்ணிய பாவம் ஒன்றும் இல்லை. இவர் செய்த புண்ணிய பாவம் இவர்க்கு இதாகிதம் செய்பவனுக்குச் சாரும். இவ்வாறு நின்மல சாக்கிராதி அநுபவித்துக்கொண்டு சீவன் முத்தராயிருந்து தேகாந்தத்திலே பரம மோட்சத்தை அடைவர் என்க.

  இனி, ‘பரமதத்தை நிராகரியாதிருக்கில் தன்மதம் பிரதிட்டை ஆகாது’ என்கிற நியாயத்தால் பலரது மோட்சத்தை நிராகரித்து, சித்தாந்தத்திலே முத்தி சொரூபம் கூறுவாம்.

  பரமோட்ச நிராகரணம்

  சாருவாகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் புத்திக்குத் தக்கதாக வெவ்வேறே மோட்சம் நிரூபிப்பார்கள். சௌத்திராந்திகன் சகலமாய் இருக்கிற துக்கங்களுக்கும் காரணமாய் இருக்கிறதேகம் என்கிற அவாவிடயநாசமே பரமமுத்தி என்றும்; பௌத்தரிலே சிலர், சித்த சந்தானம் அற்றுப் போவதே பரம மோட்சம் என்றும்; ஆருகதன் எப்போதும் மேலே போகிறதே பரம மோட்சம் என்றம்; சாங்கியர் பிரகிருதியின் விகாரங்களுடைய வியாபாரம் அற்ற அளவில் புருடனுக்குச் சொரூபமாய் இருக்கிறதே பரம மோட்சம் என்று கூறுவர்.

  யோகர், சாத்துவிகமாய் இருக்கிற பிரகிருதி யோகமே பரம மோட்சம் என்றும்; அவரவர்கள் பத்தர்கள், கணபதி, இந்திரன், சூரியன், பிரமா, விஷ்ணு, உருத்திரன் இவர்களுடைய சாலோக்கியம் சாமீப்பியம் சாரூப்பியம் சாயுச்சிமே பரம மோட்சம் என்றும்; சிலர், சீவான்மாவுக்குப் பரமான்மாவிலே லயிக்கிறதே பரம மோட்சம் என்றும்; நையாயிகர், அத்தியந்தமான துக்கமற்றுப் போகிறதே பரம மோட்சம் என்றும்; பாட்டா சமயிகள் நித்தியமான சுகம் விளங்குவதே பரம மோட்சம் என்றும் சொல்லுவர். சிலர் முத்தியிலே ஆன்மாக்களுக்கெல்லாம் கிரியாசத்தி விளங்குவது மாத்திரமன்று, பின்னை என்னையெனில்? கிருத்தியம் பண்ணுகிறதும் உண்டு; சிவன் தனக்கு ஒத்திருக்கிற முத்தான்மாவிலே சகத் உண்டாக்குகிறது கூடும் என்றும்; மறைகையிலே கர்த்தா அல்ல ஆகையால் கர்த்தாவாய் இருக்கிற சிவனைக் காட்டிலும் அதிக கிருத்தியம் பண்ணுகிறது பரம மோட்சம் என்றும் சொல்லுவர்; சிலர் சர்வஞ்ஞனாய் இருக்கிற ஈசுவரனைக் காட்டிலும் முத்தனுக்கு ஆதிக்கம் இருக்கப்பெற்று, சர்வகர்த்தாவாயும் சர்வஞ்ஞனாயும் இருக்கிற சிவனுடனே சரியாயிருக்கிறதே முத்தி என்றும் சொல்லுவர்.

  இன்னும் சாமீப்பியத்தை நான்காகச் சொல்வார்கள். எவ்வாறெனில்? பாசுபதர்கள் ஈசுவரனிடத்திலே இருக்கிற சர்வஞ்ஞத்துவம் ஆன்மாவினிடத்திலே சங்கிரமிக்கிறதே பரமமோட்சமாம் என்றும்; மகாவிரதர் தமக்கு அப்போது சர்வஞ்ஞத்துவமுண்டாகிறதே பரமமோட்சம் என்றும்; சிலர், சர்வஞ்ஞனாகையால் சமசைவ ஏகதேசிகள் சத்தியமாய் மலத்திலே ஆவரிக்கப்பட்டிருக்கிறதினால் சர்வஞ்ஞனாகைக்கும் சர்வகர்த்தா ஆகைக்கும் தடையான மலம் போகையினாலே விளங்குகிறதே பரமமோட்சம் என்றும்; மாயாவாதிகள் அநிர்வசனமான அவித்தை நிவர்த்தியினாலே ஆனந்தத்தைப் பெறுதல் பரமமோட்சம் என்றும் கூறுவர். இவைகளெல்லாம் பரமமோட்சம் அல்ல.

  சரீர நாசம், சித்தசந்தானம் கெடுதல், சீவ லயம், சொரூபாவத்தானம், அத்தியந்தமான துக்கம் கெடுதல் இவை பரம புருடார்த்தமல்ல, அறியப்படாதிருக்கையால்; அறியப்படாதது புருடார்த்தமல்லாதது. ஆகையால் சரீர நாசம், சித்தசந்தானம் கெடுதல், சீவ லயம் என்றும் மூன்றும் அறிகிறவனே இல்லாமற் போகையால், மற்றைச் சொரூபாவத்தானம் முதலான மூன்றிலும் சரீரம் முதலானவைகள் அங்கீகரியாதிருக்கையால், சுயம்பிரகாச மாக அங்கீகரியாதிருக்கையால், அறிகிறது கூடாதிருக் கையால், காணாபததியம் முதலான சாரூப்பியாதிகளுக்கும் புராணங்களிலும் ஆகமங்களிலும மோட்சம் என்று சொல்லப்பட்டாலும் சரீரபந்தம் உண்டாகையால், அஃது உள்ள பொழுதே துக்கம் முதலானவையும் அவசியம் வேண்டுமாகையால், அச்சரீரம் காரியம் ஆகையினாலே அவசியம் கெடுதல் கூடுகையால், முத்தனுக்குத் திரும்பச் சென்மம் வர்த்திக்கையினாலே திரும்பச் செனியாதிருக்கிற பரம புருடார்த்தமான பரமமோட்சம் ஆகைகூடாது. பின்னை யாது? எனில், குணமுத்தியாதல் கூடும்; ஆகையினாலே, அதுவும்தானே எப்பொழுதும் ஊர்த்துவகமனம் சாத்தியமாய் இருக்கிற பிரகிருதியோகமும் பரமமோட்சம் ஆகை கூடாது.

  இவைகள் இரண்டும் சரீரம் ஆகையினாலே முன்சொன்ன பட்சத்திலே உள்ள தூடணங்கள் இவற்றிற்கும் வருகையாலும் உபத்திரவம் அற்ற சித்த சந்ததியும் அப்பிரமாணியம் ஆகையினாலும், புருடனாலே அபேட்சிக்கப்படாதிருக்கையினாலும் பரமமோட்சமல்ல. சிவனைக் காட்டிலும் அதிகமாகை ஒருக்காலும் கூடாது ஆகையால் சீவாதிக்கமும் பரமமோட்சமல்ல. சங்கிராந்தரூபம் ஆகிய சாமியம் சீவனிடத்திலே ஞானம் இல்லாமற் போகப் பண்ணுகையால் அதுவும் யோக்கியமல்ல; ஆகையால், அது பரமமோட்சமல்ல. உற்பத்திசாமியமும் அநித்தியமாகத் தெரிகையால் கூடாது; ஆகையால் அது பரமமோட்சமல்ல. ஆட்சேபமான சாமியம் முத்தனுடைய ஞானத்தைத் தெரியாதபடி பண்ணுகையால், அபேஷிக்கப்படாதிருக்கையால் பரமமோட்சமல்ல. சைவ ஏகதேசிகள் சொல்லுகின்ற வேறே ஒருபடித்தான சாமியம் ஏகதேசத்திலே ஒப்பாகி எல்லாருக்கும் சாதாரணம் ஆகையால் சாமியம் ரூபமல்ல. எல்லாம் மொத்தார்த்தமாய் இருக்கிற முத்தி என்கிறதில் சங்கையே இல்லை. நித்தியமான சுகம் விளங்கும் என்கிற பட்சத்திலே விளங்குதலாவது ஆணவம் அபிபலம் படுவதுமாத்திரமாகில் அப்போது நமது மதத்தைப் பிரவேசித்ததே. ஞானம் அப்போதாகில் அநாதியாகிற புருடார்த்தமல்ல. உண்டானதாகில் அநித்தியமாகும். அநிர்வசனீயமான அவித்தையிலே மரணம் இல்லாதிருக்கையால் மாயாவதி சொல்லுகிற முத்தியும் பரமமோட்சம் அல்ல. பின்னை பரமமோட்சம் யாது? எனில், ஆவாரகமாயும், விட்சேபமாயும் இருக்கிற மலமாயாதி பாசக்ஷயத்திலே பரமானந்தமான சிவ தாதான் மியத்தினுடைய அபிவியாப்தியே பரமமோட்சமாம் என்க.

  இனி, மோட்சசாதனம் ஞானம் பிரபத்தி வைராக்கியம் என மூன்று. இவற்றில், ஞானமாவது: தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி: சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகிய இந்த தசவிதத்தையும் குருகடாட்சத் தினாலே அறிந்து அநந்நியமாயிருக்கிற சிவபோகமே என அறிக.

  இவ்வாறு கூடுவது அரிதாகில்; எங்கும் சிவம் வியாபகமாய் இருக்கிறதையும், அவனிடத்திலே எல்லாம் இருக்கிறதையும், அவன் அருள் வழித்தன்றி ஒன்றாயினும் அறிய முடியாது என்பதையும் அறிந்து, அவன் ஏவலின்படி செய்கிறோம் என்று எல்லாப்போகத்தையும் சிவார்ப்பணம் பண்ணி, நாம் ஒருவன் ஏவற்பணி செய்கையால் நமக்குப் புண்ணிய பாவம் என்று ஒன்றில்லை எனத் தன்னைப் பின்னிட்டுச், சிவனை முன்னிட்டுக் கொண்டு அவனுடைய ஆதீனம் ஆகிப் பஞ்சாக்கரத்திலே திரிபதார்த்தத்தின் உண்மையை அறிந்து, பாசத்தைக் கீழாக்கிப் பரசிவத்தை முன்னாக்கி, விதிப்படி உச்சரித்துக் கொண்டு, வாசனாக்ஷயம் பண்ணி, விற் பன்னனாகியிருப்பதாகப் பாவித்துத் தான் செய்கின்ற கிரமத்திலே முன் சொன்ன சிவாநுபவம் கூடும்.

  இதுவும் அரிதாகில், குரு-லிங்க-சங்கமத்திலே வழிபட அஞ்ஞானம் போய்ச்சிவஞானம் பிரகாசித்து முன்சொன்ன சிவாநுபவம் பெற்றிருப்பன் என்க.

  ஞானாமிர்தக்கட்டளை முற்றிற்று.

  திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  ஸ்ரீ மெய்கண்ட தேவர் மிளிர்கழல் வெல்க.

  ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் பதமலர் வாழ்க

  ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் மலரடி வாழ்க

  இணைப்பு-2

  #ஞானாமிர்த சாரம்*

  அருள்மிக்க அவைத்தலைவர் அவர்களே,

  அன்புடைய பெரியோர்களே, தாய்மார்களே!

  “ஞானாமிர்த சாரம்” என்னும் பெரும் பொருள் பற்றி அடியேனைப் பேசுமாறு எனக்குக் கட்டளையிட்டவர் நமது சமாசக் காரியதரிசியாகிய சைவத்திரு. பாலசுப்பிரமணிய முதலி யார் அவர்களே ஆவர். அவர்கள் செய்துவரும் சைவத் தொண்டும். சமயத்தொண்டும் தமிழ்நாடு நன்கறிந்த செய்தியாகும். அவர் களுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றும் இல்லையாயினும். அவர்கள் பெருநலம் எய்திப் பல்லாண்டு வாழ ஆண்டவனை வழிபடுவ தொன்றையே உடையோம். என் போன்றோர். அதனோடு அவர் இடும் பணிகளை ஆற்றவேண்டும் என்னும் கடமையுடை யவராவார். அதனால் என் பேச்சில் நலம் உண்டாகுமாயின் அதனை அவர்களுக்கே உரிமை செய்து விடுமாறு முதற்கண் வேண்டிக் கொள்ளுகிறேன்.

  சென்ற சில ஆண்டுகளாக, யான் ஞானாமிர்த நூலுக்கு விளக்கவுரை ஒன்று வகுத்து நம் சித்தாந்தத்தின் வாயிலாக வெளி யிட்டு வருகின்றேன். சுமார் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் இந்த ஞானாமிர்த நூலைப் பதிப் பித்தனர். இதனை ஆராய்ந்து தந்த பெரியார் சேற்றூர் - திரு. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் இத்துறையில் பட்ட துன்பத் துக்கு அளவில்லை என்பது அவர் எழுதியுள்ள முன்னுரையால் விளங்குகின்றது. தற்செயலாக எங்கள் வீட்டின் பழைய ஏட்டுப் பிரதி ஒன்று சில ஆண்டுகளுக்குமுன் கிடைக்கப் பெற்றது. அதனைப் பார்த்தபோது பாட்டுக்கள் பலவும் செவ்வையாகவே காணப் பட்டன. ஆனால் அவற்றில் இலக்கணக் குறிப்பும், உரைக் குறிப்பும், பாடவேறுபாடுகளும் இருப்பக் கண்டேன். அவ்வுரைக்கும், அச்சாகி வெளிவந்துள்ள உரைக்கும் மிக்க வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஒன்று கூறுகிறேன்; “யாளி, கூவல் தூண்டும் ஆதப் புலைச்சி, காதற்காசனியாகி, மேதினி இன்னிசை எழுவர்ப் பயந் தோள் ஈண்டே” (ஞானா - 40) என்பதன் உரையில் எழுவர் என்றது கபிலர் அதிகமான் முதலிய எழுவர் என அச்சாகியுள்ள உரை கூறுகிறது; ஏட்டுப் பிரதியில் உள்ள குறிப்புரை. “எழுவர் என்றது முனிவர் எழுவரை” என்று கூறுகின்றது. அதனால், இவ் வேறு பாடுகளை ஆராய்ந்து விளக்கவுரை ஒன்று எழுதி வெளியிட விரும்பி நமது சமாசக் காரியதரிசி அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள், அவ்வாறு வெளியிடுவது நன்றே என உரைத்தார்கள். யானும் அவ்வண்ணமே எழுதியுள்ள விளக்க வுரையைச் சென்ற சில ஆண்டுகளாக நம் சித்தாந்தத்தில் வெளியிட்டு வரலானேன்.

  சென்ற சில மாதங்களுக்குமுன் ஓர் எண்ணம் தோன்றியது. “இதனை இவ்வாறே செய்துவரின் காலம் நெடிது பிடிக்கும்; முழுதும் நன்கு எழுதித் தனி நூலாக வெளியிடுவதே தக்கது.” என எண்ணி வேண்டுவன செய்யத் தொடங்கினேன். அதனால், நம் காரியதரிசியவர்கள். யான் இதனைக் கைவிட்டு விட்டதாகக் கருதலானார்கள். தில்லைத் தமிழ்க் கழக ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொருள் நூல் ஆசிரியரும். என் இனிய தோழருமாகிய உயர்திரு. S.K. கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள் என்னை இந்த ஞானா மிர்தத்தைப் பற்றியே பேசவேண்டும் என்றார்கள். அப்போது செவ்வியபடி எடுப்பதற்காகப் பிரதிகளை வேற்றூருக்கு அனுப்பி யிருந்தமையால் முடியாது போயிற்று. போயினும், இம்முறை குன்றக்குடி முருகன் திருமுன் அது வெளிப்பட வேண்டும் என்பது திருவருள் முடிபு போலும் என்று எண்ணி, என் மனமொழிகளால் ஆண்டவனை வேண்டுகின்றேன். இது குறித்து என்னை ஊக்கிய திரு. கோவிந்தசாமிப் பிள்ளை, M.A., அவர்களுக்கும் என் பணி வான நன்றி செலுத்துகிறேன்.

  பெரியோர்களே, ஞானாமிர்தம் என்கிறபோதே, குற்றமோ கோதோ ஏதுமில்லாத அமுதமாகும் இது என்பது விளங்கும். குற்றமும் கோதும் உள்ளதாயின். அதனை வடித்துச் சாரம் காண்பது இயல்பாகும். ஆனால், இங்கு சாரம் என்றொரு சொல்லைப் பெய்து நம் காரியதரிசியார் குறித்துள்ளார்கள். வேண்டாத ஒரு சொல்லைப் பெய்து கூறுவது வேறொரு பொருளைக் கருதுமிடத்து உண்டு. அதனால், ஞானாமிர்தம் என்பது ஒரு செவ்விய தமிழ்ச் சைவப் பெருநூல் என்றும். அதனுடைய சுருங்கிய கருப்பொருள்தான் அடியேனால் பேசப்படவேண்டும் என்றும் சமாசம் கட்டளை யிட்டது என்று கருதுகின்றேன்.

  அமுதம் என்று சொல்லுகிறபோதே. அதன் ஓசை இரண்டு செய்திகளை நம் நினைவிற்குக் கொண்டுவருகிறது. ஒன்று தேவ ருண்ட சாவா மருந்து என்பது; மற்றொன்று பண்டு. அது குறித்துக் கடல் கடையப்பட்ட செய்தி. சாவா மருந்து என்பது. சாதலை நீக்க வந்த - உயிர் உடலை விட்டு நீங்குவதாகிய சாதலை நீக்க வந்த - அமுதமாகும். ஆகவே, உடலின் நீங்காது உயிர் நெடிது நிற்றற் குதவும் மருந்தாகிய அந்த அமுதத்தினும். இந்த அமுதம் வேறு பட்டது. உயிரை உடலின் நீக்குவோரை நண்பர் என்றும், ஒன்று படுத்து வோரைப் பகைவர் என்றும் கூறும் பான்மை உடையது இந்த ஞானாமிர்தம்.

  “ ஈன்றோர் பகைஞர், கீழ்ந்தோர் நட்பே

  அருஞ்சிறை விடுநரின், அருஞ்சிறை இடுநரின்

  யார்கொல் உறுதி யோரே”

  என்று இது கூறுகின்றது. ஆனால், கடைந்து கொள்ளப்படும் செய்தியை நோக்கின். இந்நூல் அதனைத் தழுவி.

  “ ஆகம மத்தின், அருளின் கோலத்து

  ஆசிரி யமலன் பாத பங்கயப்

  போதொளி யிலகப் புனைந்து, மாதவன்

  அருள் உபதேச அரும்பெறல் நோன்ஞாண்

  மதிமாத் தடக்கைக் கதுமெனப் பூட்டி

  முறுக வாங்க மறுகுபு கலுழந்து

  ………………………… …………………….. …………………….

  அச்சா னாழி ஏற்பட எழுதலின்

  ஞானா மிருதம் என்ப

  ஆனாச் செவ்வி மாநூற் பெயரே” - ஞானா – 3

  என்கின்றது.

  இனி, இந்நூலாசிரியர் வாகீச முனிவர் என்பவர். இவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் கோடலம்பாகை என்னு மிடத்தில் இருந்த பரமானந்த முனிவரிடம் சித்தாந்த சைவ மெய்நெறியை உணர்ந்தவர். இச்செய்தி, இந்நூலில்.

  “ பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ

  வாடாத் துப்பின் கோட லாதி

  அருளா பரணன் அறத்தின் வேலி

  அருள் மொழி திருமொழி போல” - ஞானா – 28

  என வருவதாலும்.

  “ இருள்நெறி மாற்றித்தன் தாணிழல்இன்ப மெனக்களித்தோன்

  அருள்மொழித்தேவன் நற்கோடலம் பாகை யதிபனெங்கோன்

  திருநெறி காவலன் சைவ சிகாமணி சில்சமய

  மருணெறி மாற்ற வரும்பர மானந்த மாமணியே”

  என இவர் பாடியதாகக் கூறப்படும் தனிச்செய்யுளாலும் தெரி கின்றது. வேறு குறிப்புகள் மிகுதியாகக் கிடைத்தில. கிடைத்துள்ள வற்றைக் கொண்டு பின்னர் ஆராய்ச்சி செய்யக் கருதி இதுபோது நிறுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இவர் பாடிய பாட்டுக் களை எங்கள் சைவத் தனிமுதலாகிய சிவஞான முனிவர். யாம் செய்த தவப்பயனாகத் தந்துள்ள மாபாடியத்தும், பிறாண்டும் பொன்னே போற் போற்றி ஆண்டிருக்கின்றார் எனின். இப்பாட்டுக் களின் நலங்கள் எத்துணைச் சிறப்புடையது என்பது யாவர்க்கும் நன்கு விளங்கும்.

  பெரியோர்களே, இனி யான் பேச வேண்டியது “ஞானா மிர்த சாரமே” யாதலின், இனியும் இவற்றைப்பற்றிக் கூறிச் செல்வது மற்றொன்று விரித்தல் ஆகும். அதனால் இனி யான் பொருளுக்கு வருகின்றேன்.

  ஆண்டவன் அருளிய ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதமாக நடக்கும் என்றும். ஞானபாதம் பதி, பசு, பாசம் என்பதை உரைப்பது என்றும் நாம் கேட்டிருக்கின் றோம். ஆனால், இந்நூல் “திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியையென்ற விரிதருபாதம்” நான்கு என்று முறைசெய்து கொண்டு. ஞானபாதத்தைப் பதி பசு பாசம் என்று முறை செய்யாது. பசுவும், பாசமும், பதியும் என்று முறை செய்து கொள்கின்றது. ஞானபாதம் “பசுபாசத்தொடு பதியாய் பெற்றி” என்றே ஆசிரியர் நமக்கு வழங்குகின்றார். பசுவின் இயல்பைப் பத்துப்பாட்டிலும். பாசத்தின் தனியியல்புகளை ஒன்பது பாட்டுக் களிலும், பசுபாசப் பிணைப்பும் வீடும் முப்பத்தாறு பாட்டுக் களிலும், பதியியல்புகளை இருபது பாட்டுக்களிலும் உரைக் கின்றார். மேலும், இந்நூல், பாயிரம், சம்மிய ஞானம், சம்மிய தரிசனம், பாசபந்தம், தேகாந்தரம், பாசவனாதி, பாசச் சேதம், பதியுண்மை உணர்த்தல், பாசமோசனம் என ஒன்பது வகையாக வகுத்து ஆராயப் பட்டிருகின்றது. இனி, அம்முறையைப் பின் பற்றாது. இந்நூலின் சாரத்தையே ஒரு வகையாய்ச் சுருங்கக்கூறி என் சொற்பொழிவை முடித்துக் கொள்கின்றேன்.

  இனி, பசு, பாசம், பதி என்ற மூன்றனுள் பசு என்பதும் பதி என்பதும் அறிவுடைய சித்துப் பொருள்களாகும். பசுவை உயிர் என்றும், சீவன் என்றும், ஆன்மா என்றும்; பதியை இறைவன் என்றும் சிவன் என்றும் கூறுவர். இவை அனாதியாகவும், நித்த மாகவும் உள்ளனவாகும். முதலாக எடுக்கப்பட்ட சீவன் அனாதியே ஆணவமல சம்பந்தமுற்றுத் தன்னறிவு பெரிதும் மறைப்புண்டு. உரிமை குன்றிப் பிணிப் புடையதாயிற்று. அதனால் இதனை ஆராய்ந்து கண்ட அறிஞர். இதனைப் பசு என்றே கூறலாயினர். பசு என்ற வடமொழிச் சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பதே பொருளாகும். சீவனைப் பற்றிப் பிணித்து நிற்கும் ஆணவம் மாயை, கன்மம் என்பவைகளைப் பாசம் என்றும் கூறுவர். பாசத்தால் பிணிப்புண்டு அறியாமை பெரிதும் அறிவு சிறிதும் உடையது பசு என்று கூறுங்கால். அறிவும் அறியாமையும் ஓரிடத்தில் எவ்வாறு நிற்கமுடியும் என்று ஒரு கேள்வி பிறக்கின்றது. அதற்கு, இந்நூலா சிரியர், தீக்கடைக்கோலை எடுத்துக் காட்டி, கடையுங்காறும் கோலோடு கிடந்து, கடைந்தவழிப் பிறந்து, அதனையே அழிக்கும் தீப்போல, அறிவும், அறியாமையொடு விரவிக்கிடந்து. பக்குவம் வந்த வழித் தான் விளங்கித் தோன்றி. அறியாமையை அழித்து உண்மை அறிவாய்த் துலங்கும் என்பார்.

  “ ஒல்லா வல்லழல் போல, நல்லோய்!

  ஞானமும் இன்மையும் நலம்மிக்கு

  ஆனா உயிர்கட்கு உணர்வு அனைவகையே” - ஞானா – 70

  என்று கூறுகின்றார்.

  இனி, பதிப்பொருளாகிய சிவன். சீவன்களைப்போல மலப் பற்று இல்லாத அறிவுப் பிழம்பாகும். ஆயினும், சீவன்களைப் போலச் சித்துப் பொருளாகிய இது. மலமில்லா மலும், சீவன்கள் மலமுடையனவாயும் இருப்பதற்குக் காரணம் கூறுவர். பளிங்குக்கு ஒளியும். செம்பிற்குக் களிம்பும்போல் இவை அனாதி என்றும். இஃது ஆன்றோர் அறிந்துரைத்த அருண்மொழி என்றும் கூறு கின்றார்.

  “ அம்ம சீருணம்

  திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்

  இறை புற்கலனுக்(கு) என்றனன் குறைவின்று

  அறைகழல் அருளொலி பரந்த

  பொறைவளர் சாரல் அறவ னோனே” - ஞானா – 9

  என்பதனால் இது விளங்கும்.

  இவ்வாறு, அனாதியே மலசம்பந்த முற்றுப் பசுவாகிய உயிர்பால். அருள் மிகக் கொண்ட பரமனுக்கு. அதனை அப்பிணிப் பினின்றும் விடுவிக்கவேண்டுமென்ற திருவுள்ள முண்டாகின்றது. அவன் எல்லா வல்லமையும் உடைய வனாதலால். தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி. அதனால் உடல், கருவி, உலகு, நுகர்ச்சி எனப்படும் தனு கரண புவன போகங்களைப் படைத்து. அவற்றில் இச் சீவன்களைப் புகுத்தி. தம்மைப் பற்றி நிற்கும் மலவழுக்கைப் போக்கிக் கொள்ளுமாறு அருளுகின்றான். இவற்றிற்கு முதற்காரணமாகிய மாயை என்பது பாசவகையுள் கூறிய ஒன்றாகும். இதுவும் உயிரைப் பற்றி நிற்பாதயினும். ஆணவத்தால் உண்டாகிய அறியாமையை உடைப்பதற்குக் பெருந்துணை செய்வதாகும். இதுவும் அனாதியானது; உயிர்போல் பதியின் சத்தியில் ஒடுங்கி. அவன் சங்கற்பித்தவழி மீளத் தோன்றும் இயல்புடையது. அதனால் ஆணவத்தை இயற்கை மலம் (சகச மலம்) என்றும். மாயையைச் செயற்கை மலம் (ஆகந்துக மலம்) என்றும் அறிஞர் கூறியிருக் கின்றனர். இந்த மாயையின் காரியமாகத் தோன்றியுள்ள உடல், கரணம், உலகு முதலியவை அசேதனமாக இருப்பதால். இம்மாயை அசேதனமாகும். ஆதலால்தான், இதனை.

  “ வாலிய சேதனமன்றுஇது, தீதறு செயல்கள்

  கோதுக அசேதன மாதலின்; அலதேல்

  காரணம் நியமம் என்னும் பேரிசை

  எல்லாம் உடைக்கும் பொல்லாத் தோடம்

  வல்லே எய்தும்” - ஞானா – 21

  என்கின்றார்.

  மேலும், இந்த மாயை, தன் காரியப்பொருளால் ஆன் மாவைப் பற்றியுள்ள மலம் அறுமளவும் விடாது தொடர்ந்து. அற்றவழி, ஆண்டவனது சத்தியில் ஒடுங்கிப் பின் அவன் திருவுள்ளப் படி மீளத் தோன்றுவதாகும்.

  “ ஓதுமாயா காரியம் நிற்பது, முடிவில், சீரிய

  சத்தி வடிவிற் பொற்பொடு புணர்ந்து

  தொடங்கற் காலை வலம்பட விளங்கும்;

  ஆருயிர் ஏரிசைப் போகம்

  சீரிதின் அருந்தத் திகழ்தனு முதலே” - ஞானா – 21

  என்று இதனை விளக்குகின்றார். இதன்கண் ஆருயிர் போகம் அருந்தத் திகழ்தனு கரணாதிகளுக்கு முதலாகிய மாயை என்ற தனால். இது பரமன் அருள் மிகுதியால் வேலை செய்வது என்பது பெறப் படும். ஆனால், அறியாமை மிக்கு வருந்தும் உயிர்கள் இதன் உண்மையினைத் தம் அறிவால் ஆராய்ந்து காணாது. இவற்றிற்கே அடிமையாகி. கன்மங்கள் பல செய்து மீளமீளப் பிறந்து இறந்து உழலுகின்றன. மலம் அறாமையின். உடலும் கருவியும் பிறவும் உயிர்களைச் சூழ்ந்து தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உயிர்வகையின் தோற்றம் குறித்து அமைந்த காம வுணர்ச்சி. தீங்குகளுக்கும் காரணமாதல்போல, பல நீக்கத்துக்கென வந்த தனுகரணாதிகளை உயிர்கள் பிறப்பிறப்புக்களுக்கும் இன்ப துன்பங்களுக்கும் காரண மாக்கிக் கொள்கின்றன. ஆகவே, அறியாமை கொண்டு உயிரை மறைத்துத் துன்பம் உறுவிக்கும் ஆணவத்தைக் கெடுக்கப் புகுந்த ஆண்டவன். மாயா காரியமாகிய பிறிதொரு துன்பக் காரியத்தை உண்டுபண்ணுவது என்னை? என்றொரு வினா நிகழ்கின்றது. இதற்கு ஆசிரியர்.

  “ …… உடையுறு

  கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த

  பெற்றியின் இவனுக் குற்ற வான்பிணி” - ஞானா – 10

  என்றும், மாயாகாரியமாகிய தனுகரணாதிகளைப் பாரிசேடப் பிரமாணத்தால் ஆன்மாவின் மலநீக்கத்துக்கென்றே ஆண்டவன் படைத்துளன் என்பார்.

  “ காரியம் காசினி யாதி; ஏரியல்

  ஈசன் கத்தா; இவற்கிது போகம்

  ஆதல் செல்லாது; அகன்றுயர் கருமம்

  தானோ நுகர்தல் செல்லாது; ஆனாது

  என்னை செய்தது என்னின், அன்னோ,

  கொன்னே செய்யான், தன்நேர் இல்லோன்;

  பாரி சேட மதனிற் பரனுக்கு

  ஏரியல் பரன்பசு என்றறி இனிதே” - ஞானா – 12

  என்றும் கூறியுள்ளார். இவ்வாறு, உயிர்களைத் தனுகரணாதி களில் கூட்டிப் பந்தியாதுவிடின். இவற்றிற்கு விடுதலை, (வீடுபேறு) இல்லை என்றற்கு.

  “விரவிய பந்தம்

  கூடா தோடின் குலவிய போகம்

  துய்த்தல் செல்லான்; செல்லா னாக

  எய்த்தல் இன்றாம் இருவினை யாக

  அபவர்க்கமும் மற்று அடையான்”                       - ஞானா – 10

  என்று கூறுகின்றார்.

  இங்ஙனம், ஆன்மாவிற்கு உதவியாக வந்துள்ள உடல், கரணம், உலகம், போகம் முதலியவற்றை. அது நன்கு ஆராய்ந்து கண்டு. அவற்றிற்கே அடிமை யாகாது. பாசச் சேதம் விரும்பி அதற்குரிய முயற்சியில் இறங்கிக் கன்மச் சேத உபாயத்தால் மலங்களைப் போக்கி உண்மை ஞானம் பெற்று விடுதலையாகிய சிவபோகம் துய்த்தல் வேண்டும்.

  “ பயன்பல மாந்தி வியந்துறை காலை

  வல்வினை எல்லை செல்லாக் காலத்து

  ஒல்லென ஒப்ப உயர்பெருஞ் சிவனது

  சத்தி நிபாதம் தழைப்ப மெய்த்தகு

  குருபரம் பரனது அருளின் செவ்வி

  வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்

  உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

  தேயாது யாவுமாய் அறிவகன்ற

  ஆயாச் சிவனது அணிகிளர் சீர்த்தி

  நின்மலத் தியையும் பின்மலத்து இயையான்

  அந்தமில் பந்தம் மற்று இ(வ்)வணம்

  சிந்துதல் சிந்தல் தெரியுங் காலே” - ஞானா – 8

  எனக் கன்மச்சேத உபாயத்தால் மலநீக்கமும் வீடுபேறும் எய்தும் வகையை விளக்குகிறார்.

  இனி, பாசத்சேதமாகிய ஞானநெறியை விளக்கத் தொடங்கும் ஆசிரியர். ஆன்மாவை அனாதியே பிணித்துக் கொண்டு கிடக்கும் ஆணவமலம் நீங்குமாறு யாதெனக் கூறத் தொடங்கி.

  “ உயிர்தொறும் நின்றக் கண்ணும், விளிதரும்;

  தன்னுடைக் காலம் துன்னில் பின்னிடும்

  வலியின் தகுதித்து” - ஞானா – 19

  என்கின்றார்.

  வன்மையுடைய பொருளொன்று, பிறிதொன்றைப் பற்றி இருக்குங்கால். அது பக்குவமடையும் வரையில் பற்றியிருந்து. வந்தவழி நீங்குவது சிறப்பு ஆதல் குறித்து. “பின்னிடும் வலியின் தகுதித்து” என்றது குறிக்கத்தக்கதாகும்.

  இவ்வாறு மலத்தைக் கெடுத்தற்காக வந்து பற்றும் மாயா மலத்தின் இயல்பு கூறுவார். உலண்டுப் புழுவை எடுத்துக்காட்டி.

  “ நுண்ணூற் பேரில் இழைத்து அகப்படுபு

  தன்முதல் கெடூஉம் எண்ணாக் கீடத்து

  இறும்பூத யார் அஃதறிந் திசினோரே” - ஞானா – 18

  என்று விளங்குகின்றார். உயிரைப் பற்றியுள்ள அழுக்கைப் போக்குவது குறித்து வேறோர் அழுக்கு வடிவாய்ப் போந்து. அவ்வுயிர்க்குத் துணை செய்யும் இயல் புடைமை காணாது. பலரும் அதனை அத்தகைய துணையாகக் கருதாது. அதற்கே அடிமை யாகிக் கழிகின்றனர் என்பார். “யார் அஃது அறிந்திசினோரே” என்கின்றார்.

  இனி, தனுகரணாதிகளைக்கொண்டு ஆன்மா போகத்தை நுகருமிடத்துக் கன்மம் பிறக்கின்றது. கன்ம மாவது நல்வினை தீவினை என்ற இரண்டுமாகும். இவ்வினை மலமாயை காரணமாக வருவது குறித்து. இந்நூலாசிரியர். “களியிடைக் கலித்ததென்ப, விளிவருங்குரைய இவ்விரு வினைத்திறனே” என்கின்றார். இவ் வினைகளைச் செய்யு மிடத்து நன்மை தீமைகள் தோன்றி. உயிரின் கட் கிடந்து, தம்மை நுகர்விக்கும் தன்மையுடையவாகும். இவை எவ்வாறு உயிர்களைப்பற்றி நிற்கின்றனவெனின். இதற்கு மூன்று பொருள்களை எடுத்துக்காட்டுகின்றார்.

  “ ஆடிப், பேரிருள், புடம்மடிகூடிய குற்றம்

  கோடேந் தல்குல் மாதோர் பாகற்

  சேர்வோர் இன்பம்” - ஞானா – 25

  போல இவை செறிந்திருக்குமென்றும். இவை பின்னர் விரிந்து உயிர்களுக்குப் பயன் தரும் திறத்தை. உச்சிப்போதில் நிழல் அடிக்கீழ் ஒடுங்குவதும். கற்ற கல்வி உள்ளத்தில் ஒடுங்குவதும். ஆலமரம் வித்தில் ஒடுங்குவதும்போல. ஒடுங்கிக்கிடந்து விரியும் என்றும் கூறுவார்.

  “ பாதவக் கண்ணிழல், பனுவல், கோளிப்

  பெரும்பணை பொதிந்த சிறுநுண் வித்தின்

  இருந்தவை விரியும்” - ஞானா – 25

  என்கிறார்.

  இக் கன்மங்கள் சுயங்கன்மம், பூர்வகன்மம் என இருவகைப்படும். இவற்றுள் சுயங்கன்மம் உண்மை ஞானத்தால் சார்பின்றிக் கெட்டழியும். பூர்வகன்மத்தை நுகர்ந்தே தீர்தல் வேண்டும். நெய்யாகியது வெண்ணெயும், திருநீறாகியது சாணமும் ஆகாத வாறு போலப். “போகாதம்ம புராதனம்” (ஞானா-41) என்று ஆசிரியர் கூறுகின்றார். பூர்வ கன்மங்களுள் பக்குவப்படாதவை. ஆன்மா மெய் யுணர்வு பெற்றவழி, சார்பில்லாமையால் கெட்ட ழிந்து விடும்.

  இனி, இக்கன்மங்களைக் கெடுத்தற்கு வழி யாது என நிகழும் அவாய் நிலையை ஓர்ந்து. இந் நூலாசிரியர் ஓர் உபாயமும் கூறு கின்றார். நிகழும் நலந்தீங்குகளுக்குக் காரணம் ஊழே என நினைந்து வினையின்பால் விருப்பு வெறுப்புக் கொள்ளாதொழிய வேண்டும்.

  “ …………….மாறெழுந்து

  உடம்பிடி உடல் துணி படுப்பினும், விரையொடு

  மலைய சாந்தும் வழுத்தும் கொண்டு

  தலையிற் பாதம் தாங்கினும், “உலையாப்

  பிறவிப் பிணிதணி அறவணர் இவ,” ரென

  விளையா இன்பம் விளையின் அல்லதை,

  உளைவதை யுடையரோ வினையுணர்ந்தோரே” - ஞானா – 37

  என்றும். இவ்வியல்பினால், உணர்வு மிகுந்து வருவோர்க்கு. வினைப்பற்றுக்கு ஏதுவாகிய உடல் முதலியவை வேறாய்த் தோன்றும்; தமக்கென ஓர் உருவின்மையும், தம்மைப் பின் எப்பொருளும் நலந்தீங்குகளுக்கு அடிப்படுத்த இயலாதென்பதும் விளங்கும்; அதனால்.

  “ உருவில் ஒர் உயிருக்கு உடலுநர் உழையரென்

  றிருவே றுரைப்பதை யெவனோ” - ஞானா – 35

  என்றும் கூறுகின்றார். இவ்வாறு உணர்ந்து எவ்வுயிர்பாலும் எப்பொருள்பாலும் காய்தல் உவத்தல் கொள்ளாதவரே உண்மை ஞானத்துக்கேது உடையராவர். அவ்வாறு இல்லாத மக்கள் நாயினும் கடைப்பட்டவர் என்பார்.

  “ அளியரோ அளியர்தாமே, தெரியாது

  இளையோன் எறிந்த குணில்வாய்ச் செல்லாது

  இளையோற் சினவும் வளைவாய் ஞமலியின்

  அளியரோ அளியர் என்னை,

  ஒளிகொள் காரணம் உன்னா தோரே” - ஞானா – 35

  என்கின்றார்.

  இவ்வாறு கன்மச்சேத உபாயத்தால் வினைப்பயன் நுகர்ந்து வருமுகத்தால் வினையொப்புண்டாகும். பற்றி நிற்கும் மலங்களும் அதனால் கெடுதற்குரிய பரிபக்குவம் எய்த, நல்லுணர்வு பரமனால், தன்மை, முன்னிலை என்ற நிலைகளுள் ஒன்றின் வழியாகக் கொள்ளப் படுகிறது. அதனைப் பெற்றுச் சிறக்கும் மேலோர்கள். ஏனை யோரைப் போலவே, நின்றவினை அறக்கெடும்வரையில் செய்வன செய்து வருவார்கள். ஆனால், அவற்றால், அவர்கள் வினை வயப்பட்டுத் தீது அடைவது இலர் என்பார்.

  “ ஞான மாக்கழல் யாணுற வீக்குநர்,

  விடய வேலைத் தடையின்று படியினும்,

  தீதொடு படியுநர் அல்லர்;

  மாதுயர் கழியுநர், நீதி யானே” - ஞானா – 44

  என்கின்றார். விடயவேலையில் படிந்து செய்வன செய்பவர் எவ்வாறு வினையால் பற்றப்படுவதிலர் என்றோர் ஐயம் நிகழ் கின்றது இதற்கொரு சிறந்த உவமை கூறுகின்றார். சுற்றிவிட்ட குலாலன் சக்கரம் தானே வினைப்பயனின்றிச் சுழலுதலும். காய மிருந்த பாண்டம் மணநாறுதலும்போல. வினைசெய்து பயின்ற உடல். தானே அதனைச் செய்கின்றதேயன்றி. அதன் பயனைப் பெறுவதில்லை என்பார்.

  “ மண்வினை மாக்கள் தம்வினை முடிமார்

  திகிரி யுருட்டி யொருவி யாங்கும்

  வருதல் ஒவாமாறும், குவிவாய்த்

  தசும்பு இங்கு ஆங்கு அசும்பறத் துடைத்தும்

  இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை

  உடையதை உடையரோ மற்றே” - ஞானா – 48

  என்கின்றார்.

  அங்ஙனமாயின், தனுகரணாதியோடு கூடியிருப்பதால். அவர் மனத்து நிகழும் எண்ணந்தான் யாதாகும் எனின். “உருவில் உயிர்” எனத் தம்மை எண்ணி, தான் அடைதற்குரிய சிவத்தையே நினைந்து பயின்று. அதனைக் கூடுநாள் எந்நாளோ என்ற எண்ணமே உடையராய் இருப்பர் என்பார்.

  “ ……….உரைதுடக்கு

  உணர்வொடு கழிந்து இணையில் இன்பத்து

  என்றுகொல் எய்து ஞான்றென்று நன்றும்

  வடுநீங்கு சிறப்பின் வயங்கியோரே” - ஞானா – 47

  என்கின்றார். அவர் மனத்துப் பந்தகாரணமமதை சிறிதுமின்றி, முத்தி காரணமான மமதையே தலைசிறந்து நிற்கும். இதன் உண்மை யினை. நம் அப்பமூர்த்திகள்.

  “ இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

  சிறுமானேந்தி தன் சேவடிக்கீழ்ச்சென்று

  இறுமாந்திருப்பன் கொலோ”

  என்று அருளியிருத்தல் வற்புறுத்துகின்றது.

  இவ்வாறு பசுபாச இயல்புகளை விளக்கிவந்தவர். பின்பு பதியின் இயல்புகளைப் பல அளவைகளால் வற்புறுத்தி. அவன் அருவுருவத் திருமேனி உடையனாதலை விளக்குவார். விந்துநாத தரிசனமுடைய சிவயோகிகளுக்காகவும். எல்லாப் பொருளினும் கலந்துநின்று. அவரவர் பக்குவத்திற்கேற்ப காட்சி வழங்குவதற் காகவும் அருவுருவனாகின்றான் என்றும். அருட்குரவனாய் எழுந் தருளுங்கால் கொள்ளும் உருவத் திருமேனி. அவன் தானே சங்கற் பித்துக் கொள்வதென்றும் கூறுகின்றார். இச்செய்தி.

  “ அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்

  சகளமாய் வந்ததென் றுந்தீபற;

  தானாகத் தந்ததென் றுந்தீபற”

  என்ற திருவாக்கை நினைவுறுத்துகின்றது. அங்ஙனம் அவன் சகளீ கரித்து வரும் திருவுருவைக் கூறுவார்.

  “ இரந்து குறையுறினும் பிறந்தை எந்திறம்

  மறந்தும் நோக்காது; எவன்புகல் எமக்குஎன,

  ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை

  ஒருவன் பாத மல்லதை

  பிறிது முண்டோ பெரும்புகல் நமக்கே” - ஞானா – 53

  என்கின்றார்.

  இனி, சத்திநிபாதமுற்று மெய்யுணர்வு கூடியவர் அந்தரங்க தியானத்தால் அச்சிவத்தைக் கூடிப்பெறும் இன்பம் எத்தகைத்து எனின். அஃது உரையிறந்து நிற்கும் உவட்டாப் பேரின்பம் என்பார்.

  “ கலவி விளைந்த காமத் தேறல்

  உண்டோர் உணரின் அல்லதை யவருங்

  கொண்டுரை கூடா மாறு” - ஞானா – 67

  என்கின்றார்.

  இனி, முத்தியின்கண் சிவஞானிகள் சிவத்தோடு அத்து விதமாகும் இயல் பினை மூன்று வகை உவமைகளால் விளக்கு கின்றார். உப்பளத்துப் பட்டவை உப்பாதலும். உவரிபுக்க நன்னீர் உவரி நீராதலும். புழு வேட்டுவனாதலும் போல அத்துவிதமாவர் என்கின்றார். அது.

  “ முதுதிரை முந்நீர் விரிதரு காயல்

  வித்தாது விளைத்த வெண்திரள் பழனத்து(உப்பு)

  உற்றவை யெவனோ, உரவ, துப்புவளர்

  உவரி யுற்ற தீநீ ரல்லதை

  கவர்பு முண்டோ, கற்றோய், கவர்புக

  மண்புனை மதிற்பெய்து ஒண்சிறை பரப்பி

  ஊதுவண் டுணர்ந்த பேதை வான்புழு

  மாதர்வண் டாவதை யறிதி; கோதற்று

  அமலனை ஆசற வுணர்ந்த

  அமலர் செய்தியும் அற்றால் மற்றே” - ஞானா – 73

  என்பது.

  இந்நிலையில் நுண்ணிய தருக்கமுறையில் கடா வொன்று எழுப்பி விடை பகரப் பெறுகின்றது. ஆன்மாக்கள் சிவமாந்தன்மை எய்துமிடத்து. பசுத்துவம் கெட்டபின் பதித்துவம் எய்துமோ, பதித்துவம் எய்தியபின் பசுத்துவம் கெடுமோ எனின். பசுத்துவம் கெட்டபின் ஆயின். “கெட்டது ஆதல் தானும். அமரர்க்கானும் மேவாதாகும்” என்பதனால். பதித்துவம் பெறுமாறு இல்லை; பதித்துவம் எய்தியபின் ஆயின், கெடுதல் பதித்துவத்துக்குக் குற்ற மாகும்; அதனால், இரண்டும் ஒரு காலத்து நிகழ்ச்சி என்கிறார்.

  “ அழிந்தாய்த் தன்று, ஆயழிந்தது மன்று

  மொழிந்தவை இரண்டும் ஓரமை யத்தே” - ஞானா – 74

  என்கின்றார்.

  இனி, பசுத்துவமின்றிப் பதித்துவம் எய்திய ஆன்மா எவ்வண்ண முள்ளது என்பதற்கு. உப்பளத்தில் பட்ட கொம்பொன்று. உப்பே என்னுமாறு உப்பேற்றி நிற்றல் போல. பதித்துவம் எய்திய ஆன்மா சிவமேயாகித் தூய்மையாக உள்ளது என்றும். இஃது ஆண்டுப் பெறும் இன்பத்தை. கானலிடத்து அலவன்பெடையோடு கூடிப் பெறும் இன்பத்தோடு உள்ளுறுத்தும் கூறுகின்றார்.

  “ ………………………………………………………..அளிவளர்

  தடவுநிலைப் புன்னை மடலவிழ் வாசம்

  கடற்புல வகற்றும் கானல் அலவன்

  வன்பெடை தழீஇ இன்புறு காயல்

  உப்புவிளை பழனத் துற்ற பொன்தோட்டு

  உலவையின் அறிக மாதோ

  கலைவ லாளர் நிலைபுணர் பண்பே” - ஞானா – 74

  இதன்கண் கடற்புலவைப் புன்னையின் மடலவிழ் வாசம் மாற்றும் என்றதனால். பாசபந்தமாகிய அஞ்ஞான நாற்றத்தை. பாசச் சேதமாகிய ஞான மணம் பரந்து மாற்றும் என்றும். அலவன் வன்பெடை தழீஇ இன்புறும் என்பது உயிர் அவாவறுத்து மெய் யுணர்வுற்றுச் சிவத்தோடு கூடிப் பேரின்பம் நுகரும் என்றும் கூறி. சிவத்தோடு அத்துவிதமாகிய வழி. ஆன்மா சிவத்துக்குரிய தலைமை இயல்பெல்லாம் பெறாது என்பதை வற்புறுத்துவது குறித்து. “உலவையின் அறிக” என்றும். “நிலைபுணர் பண்பு” என்றும் கூறியுள்ளார். ஊடலுற்று. நீக்க நீங்கிக் கூடிய பெடை என்றற்கு. வன்பெடை என்றார். இன்றேல் மென்பெடை என்று கூறியிருப்பர்.

  பாசபந்தமாகிய அஞ்ஞானம். பாசச் சேதமாகிய ஞானத்தால் கெடும் திறத்தைப் பிறிதோர் இடத்தில் வேந்தர் இருவர் போர் செய்து பெறும் வெற்றிச் செயல் மேல்வைத்து மிக அழகாகக் கூறுகின்றார். பாசபந்தமாகிய அஞ்ஞான வேந்தன்.

  பொறாமை, அவா காவற்காடு ஆகவும்

  புத்திரர், தாரம் அகழி ஆகவும்

  தேகம் வேலி ஆகவும்

  கோபம், மாற்சரியம் சேனை ஆகவும்

  ஐம்பொறி யானை ஆகவும்

  ஐம்புலன் தேர் ஆகவும்

  மனம் குதிரை ஆகவும்

  அறியாமை மந்திரி ஆகவும்

  புண்ணிய பாவம் நகரி (அரண்) ஆகவும்

  நால்வகைப் பிறப்பு தேசம் ஆகவும்

  கொண்டு எதிர்க்கவே. பாசச் சேதமாகிய ஞானவேந்தன்.

  புத்தி மந்திரியாகவும்

  விரக்தி சேனை ஆகவும்

  பொறை தேர் ஆகவும்

  உபதேசம் குதிரை ஆகவும்

  அவாவறுத்தல் யானை ஆகவும்

  கொண்டு சென்று.

  “ அடுமிளை பொடிபட எறிந்து, நெடுமதில்

  அகழியொடு இடிய நூறிக், கொடுநகர்

  எரிவிருந்து ஊட்டி, அரிதுபெறு சிறப்பின்

  தன்னுடை நாசம் மன்னன் எய்தப்

  பரமா னந்தப் பைதிரம்

  வளையாச் செங்கோல் ஓச்சினன் நெடிதே” - ஞானா – 33

  என்பதனால் இச்செயலை அழகுறுத்துகின்றார். உயிர்கள் வினைத் திரளை ஈட்டிப் பிறவித் துன்பம் எய்தும் திறத்தை அரசன் செயல் மேல் வைத்து.

  “ …………….துயரிடை வினைநகர்க்

  கருங்கைக் கயமைக்களிறு உகைத்து, இரும்புலப்

  பெரும்படை விரிந்துசூழத், திருந்தா

  நாற்கதிப் பவன் யுலாஅய்,

  ஆர்த்தவிழ் திறம்பிற; போற்றுமதி புரிந்தே” - ஞானா – 26

  என்று கூறுகின்றார்.

  இங்ஙனம் தாம் உணர்ந்து உரைத்த ஞானாமிர்தச் சிறப்பை. இந்நூலாசிரியரே பிறிதோர் இடத்தில்.

  “ தேனுடன் அமிழ்து கலந்தன்ன சுவைய,

  அமிழ்தூண் அண்டரும் பெறற்கருந் தகைய,

  தண்டாப் பிறவிப் பேரிடர் எறிப,

  உரையுணர்வு கூடா வரகதி யுய்ப்ப

  மதியோர் ஆனாது பருகுவ, பருகியும்,

  அமையாது நுவலும் அமைதிய, பாச

  வல்லி வேரற நிமிர்ப, எல்லையில்

  மறக்குறும் பறுப்ப, அறத்தின் வேலிய,

  தனக்குநிக ரில்லாத் தகைமைய, மனத்தின்

  மாசறக் களைவ, தேசொடு நிவந்த” -ஞானா – 32

  பாசச் சேதமாகிய ஞானாமிர்தம் என்கின்றார்.

  இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நூலின் சாரத்தை அறிவில் சிறிய அடியேன் கூறியதில் குற்றங்கள் மிக இருக்கலாம். கருத்து வேறு பாடு இருக்கலாம். இவற்றை ஏற்று யான் இதுகாறும் செய்த என் சிறு சொல்லை அமைதியோடு கேட்டு என்னை ஊக்கிய சைவப் பெருமக்களாகிய உங்களுக்கும். என்னை இவ்வாண்டு விழாவிற்கு வரவழைத்து என் பணியை ஏற்றுச் சிறப்பித்த இச்சைவ சித்தாந்த சமாஜத்திற்கும். என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு என் சொற்பொழிவை இவ்வளவில் நிறுத்திக் கொள்ளு கிறேன்.

  ஆசிரியர் பிரான் ஒளவை

  கோமான் ம.வி. இராகவன்

  (நாடறிந்த நல்லாசிரியர் - ஒளவை அவர்களின் தலைமாணவர்)

  இருபதாம் நூற்றாண்டு நம் தாய்மொழியாம் தமிழ்மொழி மறுமலர்ச்சியுற்று மாண்பு பெற்ற காலம். இந்நூற்றாண்டில் தம் நலமும், தம் முன்னேற்றமும் கருதாது தமிழின் மறுமலர்ச்சியே குறியாக அல்லும் பகலும் அயராதுழைத்த நல்லிசைப் புலவர் பெருமக்கள் பல்லோராவர். அவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ‘உரைவேந்தர்’ என்று புலவருலகம் ஒரு சேரப் புகழ் கூறும் செந்தமிழ்ச் செல்வராகிய ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வளர்த்த தனிப் பெருமைக்குரிய மதுரையம் பதியில் கல்லூரிப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பிள்ளையவர்கள் மறைவைக்கேட்டுத் திடுக்குற்றேன். ஈரம்மலிந்த என் விழிகளோடு என் நினைவும் ஐம்பதாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது.

  தெரிந்தெடுத்த அருந்தமிழ் ஆசிரியர்

  நாற்பதாண்டு கட்குமுன் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியர்! நான் தகுதி வாய்ந்த தமிழாசிரியரைத் தேடி அலைந்து கொண்டிருந்த தமிழார்வம் கொண்ட இளைஞன். உடற்பிணியின் குறுக்கீட்டால் என் ஆங்கிலப் பயிற்சி இடையில் தடைப்பட்டது. பிணியினின்றும் விடுபட்டபின் விட்ட ஆங்கிலப் பயிற்சியைத் தொட்டுத் தொடர விருப்பமின்றித் தமிழ் பயிலத் தொடங்கினேன். புலவர் சிலரை அடுத்துச் சிறுநூல்கள் பலவற்றைப் படித்து முடித்த நான் பெருங்காப்பியங்கள், சங்கத் தொகை நூல்கள், பேரிலக்கணங்கள் ஆகிய பெருநூல்களைத் தொடர்ந்து பயின்று பல்கலைக்கழகப் புலவர் (வித்துவான்) தேர்வு எழுத விரும்பினேன். அதுபோது அருகிலிருந்த புலவர்களுள் எவரையும் அப்பெருநூல்களைப் பாடம் சொல்லுவதற்குரிய தகுதி வாய்ந்தவராக என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஓராண்டுக் காலம் வறிது கழிந்தது. காலக் கழிவை எண்ணிக் கவன்றிருந்த நிலையில் என் நல்வினைப் பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள். (1913)

  பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலுற்றது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நகர அறிஞர்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் சேலானார்கள். ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான் ஊக்கம் பெற்று அவரை நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர் பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந்திருப்பது கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்.

  பூவேந்தப் பழஞ்சைவப் பயிர்விளைத்த புகழ்ப்பிள்ளை

  நாவேத்தத் திருவோத்தூர் நயந்தேற்றா ரருள் செய்வென்

  வரைசாமி யரங்கமென மகிழ்ந்தாடு மனத்தௌவை

  துரைசாமி! அருந்தமிழன் சுவைகனிந்த புலவ! கேள்

  உலகுவளை கடல்மடுத்த வொருமுனியு மாற்றாமே

  விலகு தமிழ் வியன் கடலை வியப்புறுமா றுண்டனைநீ!

  உற்றுயர்வான் கலையனைத்து முரைகுற்ற மூன்றுமறக்

  கற்றுயர்வான் வருமவர்க்குக் கற்பகம் போனின்றனை நீ!

  சொல்வன்மை யஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்

  வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணி நீ!

  கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையு

  மிம்பருனைப் போலெவர்மற் றினிதறிந்தார்? எடுத்துரைத்தார்?

  பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி

  நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ!

  குன்றளிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோ

  வின்றளிக்குந் தலைவனீ யெனலு நினக்கிசையே யோ!

  அஃதன்று

  ஓயா தொழுகுஞ் சேயாற் றடைகரை

  விளங்கு மோத்தூர் ருயர்நிலைப்

  பள்ளி மாணவர் கள்ளமின்றி

  யாற்றிய தவத்தி னாசரி யத்தொழி

  லேற்றவர் தம்மட மாற்று மொண்புலவ!

  சிறியேன் தமிழிற் பேரவாக் கொண்டு

  சிலரை யண்ம யிலக்கிய யிலக்கணஞ்

  சிறிது பயின்றுளேன்; செம்மல்! நின்றிறங்கேட்

  டரியவை யறிவா னார்வமுற் றடைந்தனென்

  குலனருள் வாய்ந்த குரவ! எற் கிரங்கி

  யொல்காப் பெருமைத் தொல்காப்பியமொ

  டேனை யைவகை யிலக்கண நூல்களும்

  பல்காப் பியங்களும் பரிந்தனை பயிற்றிப்

  பல்கலைக் கழகம் நல்கும் ‘வித்துவான்’

  பீடுறு பட்டம் பெறவெற் கருண்மதி

  அருளுவை யாயின் பொருளிலாச் சிறியேன்

  காலந் தன்னிற் சீல! நீ புரியும்

  ஞாலந் தன்னினுஞ் சாலப் பெரிதாம்

  நன்றியிதனை யென்று

  மறவா துள்ளி மகிழ்ந்து வாழ்த்துவனே’

  என்னும் பாடலை இயற்றி எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பிள்ளையவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே சிறிய சாய்வு மேசையின் முன் அமர்ந்து ஏதோ குறிப்பெடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். நான் வணக்கம் கூறி முன்னே நின்றேன் அவர் நிமிர்ந்து பார்த்து, இருக்கப் பணித்து, என்னைப் பற்றி உசாவலுற்றார். நான் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எடுத்துச் சென்றிருந்த பாடல் தாளை அவரிடம் கொடுத்தேன். அவர் பாடலை ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு, ‘இது யார் எழுதித் தந்தது?’ என்று கேட்டார். ‘நான் இயற்றியதே’ என்றேன். ‘பழகிப் பண்பட்ட பண்டிதர் பாடலாக இருப்பதால் கேட்டேன். இதில் என்னைப் பலவாறு சிறப்பித் திருக்கிறீர்களே, அச்சிறப்புக்களை என்னிடம் எவ்வாறு கண்டீர்கள்?’ என்றார். நான் அவர் அறியாமலே அவரைப் பல நாட்கள் ஆராய்ந்ததையும் அவ்வாராய்ச்சியில் கண்டவற்றுள் சிலவே அவை என்பதையும் எடுத்துரைத்தேன். அதனை அடுத்து ‘நீங்கள் யார் யாரிடம் என்னென்ன நூல் படித்திருக்கிறீர்?’ என்று வினவினார். நான் பாடங்கேட்ட புலவர்களையும், அவர்களுள் ஒவ்வொருவரிடமும் படித்து முடித்த நூல்களையும் வரிசையாகக் கூறினேன். ‘உங்கள் தகுதியையும், உணர்ச்சியையும், வேட்கை விருப்பத்தையும் இப்பாடலிலிருந்தே உணர்ந்து கொண்டேன். உங்களுக்குப் பாடம் சொல்லுவதில் மகிழ்ச்சியே. நல்ல நாள் பார்த்துக் கொண்டு வாருங்கள்’ என்றார்.

  நான் ‘நாள் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன் இன்று நல்ல நாளே’ என்றேன். அவர் ‘அப்படியானால் இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று கூறி, ஒரு தாளில் சில பாடல்களை எழுதி என்னிடம் தந்து, ‘இப்பாடல்களைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கும் பொழுது முதலில் இவற்றைச் சொல்லவேண்டும்’ என்றார். அப்பாடல்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியார், பரிமேலழகர் ஆகிய புலவர் பெருமக்களுக்கு வணக்கம் கூறுவனவாக இருந்தன நான் முன்னமே இயற்றியிருந்த

  முத்தலை நெடுங்கடல் முழுது முண்டவர்

  புத்தமிழ் துகுபொழில் பொதிய மேவிய

  வித்தக முனிவரன் வளர்த்த மெல்லியல்

  முத்தமிழ்க் கிழத்தியை முடிவ ணங்குவோம்.

  என்னும் தமிழ் மொழிவாழ்த்துப் பாடலை முதலிற் கூறி. பின் அப்பாடல்களையும் படித்தேன். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம் என்று கூறி, தம் புத்தகத்தையே கொடுத்து உரைப்பாயிரத்திற்கு வியப்புறும் வகையில் விளக்கம் கூறியபின், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் உரையையும் பிறர் உரைவிகற்பங்களையும் தமக்கே உரிய தனிமுறையில் தடைவிடைகளால் தெளிவாக விரித்து விளக்கிமுடித்தார். அன்று முதல் நிழல்போல் அவரை நீங்காமல் உடனிருந்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அரிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றையும் முறையாகப் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு எழுதி முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவனாகத் தேறி சென்னையில் உள்ள மிகப்பெரிய உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்ந்து, முப்பது ஆண்டுகட்குமேல் தொடர்ந்து பணியாற்றினேன். இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின் அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை.

  உழைப்பால் உயர்ந்தவர்

  பிள்ளையவர்கள் உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஓயா உழைப்பினால் உருவானது, அவர் இன்றைக்கு எண்பதாண்டுகட்கு முன் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பலவேறு இன்னல் இடையூறுகட்கிடையில் உழைத்துப் படித்து இண்டர்மீடியாட்டில் முதலாண்டு மட்டும் பயிலத்தொடங்கி, தொடர்ந்து படிக்கக் குடும்பநிலை இடந்தராமையால் நகராண்மைக் கழகத்தில் நலத்துறைக் கண்காணி (Sanitary Insppector) யாக வாழ்வைத் தொடங்கினார். இயற்கையில் அறிவும், ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது. அவர் நகராண்மைக் கழகப் பணியை விடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அடுத்து, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கவியரசு, வேங்கடாசலம்பிள்ளை போன்ற பெரும் புலவர்களிடம் அருந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திருந்தக் கற்றுத் திறமான புலமை பெற்று, சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்றார். பின்னர் வடஆர்க்காடு மாவட்டக் கழகத்தில் தமிழாசிரியராகச் சேர்ந்த சில ஆண்டுகள் பல உயர்நிலைப் பள்ளிகளில் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். பின்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரியர் பதவியேற்றுச் செந்தமிழ்ப் பணிபல சிறக்கச் செய்தார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை அவரை அழைத்து அமர்த்திக் கொண்டது அங்கு அமர்ந்த அவர், கல்வெட்டு ஆராய்ச்சிலும், மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் பங்கு கொண்டு பயனுள்ள பணிபல புரிந்தார். இறுதியாகச் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மதுரையம்பதி பிள்ளையை வரவேற்றது. அங்கு அவர் தியாகராசர் கல்லூரியில் பேராசிரிய ராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பதவியினின்று ஓய்வு பெற்றாரேயன்றிப் பணியினின்றும் ஓய்வு பெற்றாரில்லை. பதவி ஓய்வைப் பயன்படுத்திக் கொண்டு செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார்.

  ஆசிரியத் துறையில் பிள்ளையவர்கள் எய்திய இவ்வுயர்வு இயல்பாக அமைந்த வளர்ச்சியே ஆகும். ஆசிரியருக்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும் அவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன. பிறவியாசிரியராகிய அவர்அத்துறையில் தமக்கென்று தனிமுறை ஒன்றை வகுத்துக் கடைப்பிடித்து, அப்பண்புகளைப் பேணி வளர்த்துக் கொண்டார்; அவ்வளவே. அவர்சிலர் போலத் தாம் உலகியல் வாழ்வில் உயர்வதற்கு வேண்டும் வசதிகளைப் பெற விரும்பியிருப்பாராயின், ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த தேர்ச்சிக்கும், தமிழ் மொழியில் அவருடைய ஆழ்ந்தகன்ற புலமைக்கும் அரிய ஆராய்ச்சி அறிவுக்கும் எம்.ஏ. (ஆ.ஹ.) பி.எச்.டி (ஞா.னு) போன்ற பயன்தரும் பட்டங்கள்பலவற்றை எப்பொழுதோ எளிதில் பெற்றிருக்கலாம். தம்மைப் பற்றிய நினைவே, தம்முன்னேற்றம் பற்றிய சிந்தனையே சிறிதும் இன்றி, தாம் குறிக்கொண்ட தமிழ்த் தொண்டுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார் அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த நாள் தொட்டு அவர் அதற்காக அயராது உழைத்தார். அவர் உழைப்பை உடனிருந்து காணும் வாய்ப்ப்புப் பெற்றிருந்த நான் அதனை இன்று நினைக்கினும் அது என்னை நின்று நடுங்கச் செய்கிறது.

  பள்ளியில் பாடம் நடத்தும் நேரம் நீங்க மற்ற நேரத்தில் ஒரு கணமும் ஓயாமல் ஒழியாமல் உழைத்தார். பள்ளியை விட்டு வீடு வந்ததும திண்ணையில் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்து விடுவார். அப்பொழுது அவர் குடியிருந்த வீட்டில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் எண்ணெய் விளக்கின் முன் இருந்து நெடுநேரம் வரையில் எடுத்த குறிப்புக்களைக் கொண்டு கட்டுரை, ஆய்வுரை, மறுப்புரை, நூலுரைகள் எழுதுவார். அவர் எப்பொழுது உறங்குவார். எத்தனை நேரம் உறங்குவார் என்பவை யாருக்கும் தெரியா. விடியற்காலம் விழித்துப் பார்த்தால் விளக்கின்முன் அமர்ந்து விரைவாக எதையோ வரைந்து கொண்டிருப்பார். விடிந்தபின் பள்ளி செல்லும் வரையில் அதே உழைப்பு! அல்லென்றும் பகலென்றும் பாராமல், ஊணும் உறக்கமும் நினையாமல் பிள்ளையைப் போலத் தமிழுக்காகப் பேயுழைப்பு உழைத்தவர்களை நான் கண்டதில்லை. ஓய்வு என்பது இன்னதென்று அறியாத ஒர் அற்புதப் பிறவி அவர். அவர்மேற்கொண்ட முயற்சியில் அவருக்குத் துணை செய்யும் அறிவும் ஆற்றலும் பண்பும் வாய்ந்த புலவர்களோ, அன்பு கொண்டு ஆதரவு காட்டும் செல்வர்களோ அக்காலத்தில் இல்லை ஆனால் அவர் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காற்றால் புறங்கூறப் புல்லறிவினோர் பலர் இருந்தனர். பிள்ளையவர்கள் பிறர் துணை நாடாமல், புல்லறிவாளரின் பொறாமையையும் புறங்கூறுதலையும் பொருட்படுத்தாமல், தமக்குத்தாமே முயன்றுபண்படுவதில் முனைந்து உழைத்தார். அன்று அவர் உழைத்தஅவ்வுழைப்பே பின்னர் அவரைப் பண்டை உரையாசிரியர்கள், வரிசையில், அவர்களோடு சரியாசனத்தில் ஏற்றி, ‘உரைவேந்தர் என்று புலவருலகம் புகழ் கூறும் உயர்நிலையை எய்துவித்தது.

  எளிமையில் வளமை

  பழந்தமிழ்ப் புலவர்களின் பண்பட்ட வாழ்க்கை சங்கத் தமிழ் நூல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசில் வாழ்க்கையினராயினும் வரிசைக்கு வருந்துவோராகவும், மண்ணாளும் மன்னரைப் போன்ற மாண்புடையவராகவும், தார்வறியாமல் வாழ்வாங்க வாழ்ந்தனர் அவர் வாழ்வு எளிமையில் வளமை கண்ட வாழ்வு. வாழ்வின் எளிமை; சிந்தனையில் சொல்லில் செயலில், உயர்வு; இதுவே பிள்ளையவர்களின் பெருமை நான் பழகிய காலத்தில் பிள்ளையவர்கள் குடும்பம் மிகச் சிறயதொன்றே. அந்நாளில் தமிழாசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவு. வேறு வருவாய்க்கும் வழியில்லை. எனவே பிள்ளையின் வருவாய் அச்சிறிய குடும்பத்தையும் செம்மையாக ஓம்புதற்குப் போதியதாக இல்லை எனினும் அவர் குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு நேர்மை தவறாமல் நிமிர்ந்து வாழும் நெறியாளராக விளங்கினார். எளிய உடையையும் எடுப்பாக உடுக்கும் கலை அவருக்குக் கைவந்திருந்தது. கவலைக் குறியின்றிக்களை தவழும் முகத்தோடு கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சீரிய பண்பு அன்றோ அவர்பால் சிறப்பாக அமைந்திருந்தது. எந்நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துக்களை மாற்றிக் கொள்ளவோ அவர் இணங்கியதில்லை. அதனால் இடுக்கண் நேர்ந்த பொழுது நடுக்கமுறாமல் அதனை நகைமுகத்தோடு ஏற்று நலியச் செய்யும் மிடுக்குடைமை அவரது சிறப்பியல்பாகும். வாழ்விலும் பிறரோடு பழகும் முறையிலும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினாரெனினும் ஏக்கழுத்தும் பீடு நடையும் கொண்ட ஏற்றம்மிக்க தோற்றம் அவருக்குப் பிறவிப் பேறாக வாய்த்திருந்தது.

  அடக்கமும் அஞ்சாமையும்

  பிள்ளையவர்கள் கடல் போன்ற கல்வியினராயினும் அவரிடம் தருக்கோ, தற்பெருமையோ தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும் நன்னடக்கை யிலும் அவர் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவர். அவரைப்போல ஆரவாரத்தில் ஆர்வம் காட்டாமல், பாராட்டை யும் புகழையும் எதிர்பாராமல், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் கொள்கையைக் கடைப்பிடித்து அமைதியாகத் தமிழ்ப்பணியில் ஆழ்ந்திருந்தவரைக் காண்டல் அரிது. நீர் தளும்பாத நிறைகுடம் போல ஆரவாரமின்றி அமைந்தொழுகிய பிள்ளையவர்கள் அறியாத ஒன்றும் உண்டு. அதுவே அச்சம். பழந்தமிழ்ப் புலவர்களைப் போலவே அவர், அச்சம் அறியாத அண்மையர். அவையஞ்சாமை அவருக்குக் கருவிலே வாய்த்த திருவாகும். தாம் உண்மை என்று கொண்டதை எவரிடையிலும் வன்மையோடு நிலை நிறுத்தும் உறுதியும், தவறு என்று கண்டதை அதற்குரியார் யாராயிருப்பினும் தயை தாட்சணியமின்றி அஞ்சாமல் அழுத்தமாக மறுத்துக் கூறும் துணிவும் உடையவர் அவர் வாதிடுவாரையும், வல்வழக்காடு வாரையும் வாயடங்கச் செய்யாமல் வணங்கிப் போனதை அவர் வாழ்வில் காண முடியாது. ஆயினும் மாறுபட்டோரிடம் பகைமை பாராட்டி மரியாதைக் குறைவக நடந்து கொள்ளும் இழிகுணம் அவரிடம் இடம் பெற்றதில்லை. அவர்களிடம் அன்பு காட்டி நண்பு கொண்டு பண்பாகப் பழகும் பான்மை அவரது மேன்மையாகும்.

  செய்ந்நன்றி மறவாச் சீர்மை

  செய்யந்நன்றி மறவாது போற்றும் சீர்மையிலும் பிள்ளையவர்கள் பண்டைப்புலவர்களோடு ஒப்பவைத்து மதிக்கத்தக்க உயர்வுடையவர். அவர்பின் எய்திய உயர்நிலைக்கு அடிகோலிய ஆசிரியப் பெருமக்களாகிய நாவலர், நாட்டார், கரந்தைக் கவியரசு ஆகியோரிடம் அவர் கொண்டிருந்த பற்றும் வைத்திருந்த மதிப்பும் அளவிடற்கரியவை. அவர்களுடைய கல்விச் சிறப்பையும் பாடம் சொல்லும் திறத்தையும் அவர் உணர்ச்சி பொங்கப் பாராட்டிப் பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர்களை ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கு முன், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்கட்கு வணக்கம் கூறும் பாடல்களோடு அவர் தமிழ் பயின்ற கரந்தைச் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக் கூறும் பாடலையும் சேர்த்துச் சொல்லுமாறு பணித்திருந்தது அவர் அந்நிறுவத்தினடம் கொண்டிருந்த நன்றியறிவுக்குச் சான்றாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட உமாமகேசுரம் பிள்ளையை அவர் தம் நினைவில் நிலையான இடம் தந்து மறவாது போற்றி வந்த மாண்பை அவர் நண்பர்கள் நன்கு அறிவர்.

  புலமை நலம்

  பிள்ளையவர்களின் புலமை பள்ளி நீர்க்கடல் போன்று அளந்தறிதற்கரிய ஆழமுடையது. விரிந்தகன்ற வானம் போன்று வரைந்துணர்தற்கரிய பரப்புடையது. அசைக்கலாகாத மலை போன்று அலைக்கலாகாத திட்பம் வாய்ந்தது. எந்த நூலையும் மேற்போக்காகப் படித்து முடிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை படித்தது போதுமென்று விடுத்திராமல் பல நூல்களையும் பலமுறை பயின்று நயங்கண்டு பயன் கொள்ள முயல்வது அவர் இயல்பு; அரிய நூற்பொருள்களையும் துருவியாராய்ந்து கடிதிற் கண்ட நெடிது போற்றுவது அவர் சிறப்பு. சங்கத்தொகை நூல்கள், திருக்குறள், பெருங்காப்பியங்கள் சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களும், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், சைவ சாத்திரங்கள் ஆகிய சமய நூல்களும், தொல்காப்பியம், பிரயோக விவேகம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம். இலக்கியத்தினும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி. தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும், அதன் பல்வேறு உரைகளில் அவர்அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை. இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத் தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். முற்காலக் காப்பியங்களுள் சிந்தாமணியும், பிற்காலக் காப்பியங்களுள் கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. சிந்தாமணியின் தமிழ்ச்சுவையையும் கம்பராமாயணத்தின் கவிச் சுவையையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர்.

  பிள்ளையவர்களின் புலமை ஒரு நெறிக்கு உட்பட்ட தன்று; பலதுறைகளிலும் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனித்தனிப் புலமை பெற்றவர் பலர் இருக்கக்கூடும். ஆனால் பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்தினும் ஆழ்ந்தகன்ற புலமை பெற்றவர் அரியராவர். அவர் எடுத்துக்கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம்நுண்மாண் நுழை புலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை உணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்; பிறர் கடுமையானவை என்று கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு பொறுமையாகப் பலகால் பயின்று பயன் கண்டு மகிழும் பண்புடையவர். அவர் புலமை பழமையினின்றும் மலர்ந்து புத்தொளிகாணும் புதுமையது. பிறர் சிலரைப் போலப் பழைய நூல்களையும் உரைகளையும் பழித்து ஒதுக்குவதும், புதுமை மோகத்தால் மரபோடு மாறுபட்ட பொருந்தாத புதுக்கருத்துக்களைப் புகுத்திப் போலிப்புகழ் பெற முயல்வதும் ஆகிய புன்மைக்குணம் அவரிடம் இல்லை. அவ்வாறே புதுமைக்கு இடங்கொடாமல் பழமையையே பற்றி நிற்கும் பிடிவாத குணமும் உடையவர் அல்லர். அவர் தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களைப் பாடம் தொடங்குமுன் பரிமேலகழர், நச்சினார்க்கினியர் போன்ற பண்டைஉரையாசிரியர் கட்கு வணக்கம் கூறும் பாடல்களை ஓதுமாறு வற்புறுத்தி வந்தது அவர்களிடத்தும அவர்களுடைய உரைகளிடத்தும் அவருக்கிருந்த பற்றையும் மதிப்பையும் விளக்குவதாகும். ஆனால் அவர் வேறு சிலர்போல உழுத சால் வழியே உழுது செல்லும் இழுதை நெஞ்சினர் அல்லர். அவர் பண்டையாசிரியன்மாரின் கருத்துக்களோடும் உரைகளோடும் மாறுபட்டுப் புதுக் கருத்துக்களையும் உரைகளையும் கண்டு கூறத் தயங்கியதில்லை. ஆனால் அத்தகைய இடங்களில் அவர்கள் அவ்வாறு கருதியதற்கும் உரை கூறியதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து கண்டு அவற்றின் பொருத்தத்தைத் தெளியத் தெரிந்து கொண்டு, பின்னர் அவர்களைக் குறை கூறாமலும், அவர்களுடைய கருத்துக்களையும் உரைகளையும் இகழ்ந்து விலக்காமலும், அவற்றிற்கு மாறாகத் தாம் கொள்ளும் புதுக்கருத்துக்களையும் காணும் உரைகளையும் கூறி அவற்றின் சிறப்பைக் காரணம் காட்டி விளக்குவது வியப்புக்குரிய அவரது சிறப்பியல்பாகும். இங்ஙனம் பழமைக்கு அமைதி கண்டு புதுமைக்கு வழிகோலும் பிள்ளையவர்களின் புலமைத்திறம் பிறரிடம் காண்டற்கரிய தொன்று.

  பிள்ளையவர்கள் பெரும்புலவர் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், மகாவித்துவான், மு. இராகவையங்கார், திரு.வி.க சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, கா. நமசிவாய முதலியார் போன்ற புலவர் பெருமக்கள், யான் பிள்ளையவர்களின் மாணவன் என்பதால் என்னிடம் அன்பு கொண்டு மதிப்பும் மரியாதையும் காட்டிப் பழகியதொன்றே அவர்கள் பிள்ளையவர்களிடம் கொண்டிருந்த நன்மதிப்புக்கு உற்ற சான்றாகும். பிள்ளையவர்களின் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காறு கொண்டோர் சிலர் இருந்தனர்; எனினும் பெரும்புலவர் பலரும் அவர் புலமை வளம் கண்டு அவரைப் போற்றவே செய்தனர். பிள்ளையவர்கட்கும் அவர்களிடம் பெருமதிப்பு உண்டு. ஆனால் யாரிடமும் தம்மைத் தாழ்ந்தவராகக் கொண்டு பணிந்தொழுகும் தாழ்வு மனப்பான்மை பிள்ளையிடம் காணப்படாத ஒன்று. எவரிடமும் சரிநிகர் சமானமாகவே பழகுவது அவர் தனிச்சிறப்பாகும்.

  நல்லாசிரியர்

  பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியர் பணி அரும வாய்ந்தது. அதற்குரிய பண்புகள் படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல; பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. “குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை, கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை, நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும், அமைபவன் நூல் உரை ஆசிரியன்”என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னூல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள் இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர். ஆசிரியராவார் மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனிமதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல்வேண்டும். அவர்க்கு இன்றியமையாத அடிப்படைப் பண்பு அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருத்திய உச்சரிப்பு, அரிய கருத்துக்களையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவை அனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப் பண்புகள் மாணவர்களை அவரிடம் “அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு” பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாணவர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும் அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை.

  பாடம் சொல்லும் முறை

  பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பாட போதனையில் அவர் கையாண்டமுறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனிப் பொருளுணரச் செய்வதினும் கருத்துக்களை அவர்கள் உள்ளத்திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே சிறப்பாகக் கருதி, அதற்கேற்பக் கற்பிக்கும் முறையை மேற்கொண்டார். சிறப்பாக, செய்யுட் பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும், கருத்து விளங்க, நிறுத்த வேண்டும் இடங்களில் நிறுத்தி, இடத்திற்கேற்ப எடுத்தும் படுத்தும் வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையோடு படித்துக் காட்டுவார். அவர் படிக்கும் பொழுதே பாட்டின் திரண்ட கருத்து மாணவர்களின் மனத்திரையில் முழு உருவம் கொண்டு தெள்ளத் தெளியப் பதிந்துவிடும். கருத்து விளக்கத்தின் துணையால் பாடலில் உள்ள சொற்கள் பலவற்றிற்கும் மாணவர்கள் தாமே பொருள் உணர்ந்து கொள்வர். அவர் கட்குப் பொருள் விளங்காத அருஞ்சொற்கள் எவையேனும் இருப்பின் கேட்டறிந்து அவற்றிற்கு மட்டும் பொருள் கூறுவார். பொதுவாக இலக்கண பாடம் என்றால் மாணவர்கள் மருண்டுமயங்கி அஞ்சி விலக்குவது வழக்கம். ஆனால் பிள்ளையவர்கள் இலக்கணம் கற்பிக்கும் இனியமுறை, மாணவர்கள் அதனை விரும்பிக் கேட்டுத் தெளிந்து மகிழச் செய்யும், பிள்ளையிடம் பயின்ற மாணவர்கள் பிற பாடங்களிலும் இலக்கணத்திடமே மிக்க ஆர்வம் காட்டியதை நான் கண்டு வியந்திருக்கிறேன். உரைநடைப் பாடம் கற்பிப்பதிலும் அவர் தனி முறையைக் கையாண்டார். பாடத்தின் மையக் கருத்தைக் குறித்துக்காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டுள்ள அதன் கூறுகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறி, மாணவர்கள் உணர்ந்து உளங்கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திகளை நினைவுறுத்தி முடிப்பார். இதனால் மாணவர்கள் கேட்ட பாடத்தில் தெளிவும் மன நிறைவும் பெறலாயினர்.

  பல்கலைக் கழகக் தேர்வு குறித்துப் பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டுப் பயன்கொண்டவர் பலர். அவர்களுள் முதல்வனாகும் பேறு எளியேற்கு வாய்த்த வாழ்வாகும். பேரிலக்கிய இலக்கணங்களைப் பாடம் செல்லுவதில் பிள்ளையவர்கள் உவகையும் உற்சாகமும் உடையவர்; தாம் பலகால் பயின்று அரிதில் ஆய்ந்து கண்ட அரும்பொருள் நுட்பங்களை, தம்மை அடுத்த மாணவர்கள் வருத்தமின்றி அறிந்து பயனடையுமாறு பரிந்து வாங்கும் வள்ளன்மை வாய்ந்தவர். அவர் மாணவர்களை நுனிப்புல் மேயவிடாமல், நூற்பொருளை நுனித்து ஆய்வும், ஆய்ந்து அறிந்தவற்றை அஞ்சாமல் பிறர்முன் எடுத்துரைக்கவும், பயிற்சியும் துணிவும் பெறச் செய்வார். அவர் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில்தான் பாடம் சொல்லுவது என்னும் வரையறை வைத்துக் கொண்டதில்லை. மாலையில் உலாவச் செல்லும் பொழுதும், சொற்பொழிவாற்ற அயலூர்களுக்கு வண்டிப் பயணம் செய்யும்பொழுதும், உடன் தொடரும் மாணவர்கட்கு உரிய இலக்கிய இலக்கணப் பாடப் பகுதிகளில் உள்ள அரியக் கருத்துக்களை அளவளாவும் முறையிலேயே எளிதில் உணருமாறு எடுத்துக்காட்டிச் செல்வது அவர் வழக்கம்.

  மாணவர்களின் தகுதியும் தரமும் தெரிந்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் தனித்திறமை வாய்ந்தவர். ஒரு நூலை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பதம்பதமாகப் பொருள் கூறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. முதலில் எடுத்துக்கொண்ட நூல் எந்த வகையைச் சார்ந்ததென்பதை எடுத்துக்காட்டி, அதனை அணுகும் முறை, பயிலும் விதம், பொருள் காணும் நெறி, ஆயுள் அடைவு, நயம்காணும் திறம் ஆகியவற்றை விளக்குவார். பின்னர் பாடல் பயிலும் இடத்தைச் சுட்டி, பாடலின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் கூறி, அருஞ்சொற்கள், தொடர்களுக்குப் பொருள் விளக்கம் செய்வார். அரிய இலக்கய அமைதிகள், வரலாற்றுச் செய்திகள், புராணக்கதைகள் ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். சொல் நயம், பொருள் நயம், செய்யுள் நயங்களை மாணவர்கள் உணர்ந்து சுவைக்கச் செய்வார். சில நாட்கள் தொடர்ந்து இம்முறையில் பல பாடல்களை நடத்தப் பின்னர், எஞ்சிய பாடல்களை நாடோறும் சிலவாக மாணவர்களையே இம்முறையில் படித்துப் பொருளறிந்து வரச்செய்வார். அவ்வப்பொழுது அவர்களைச் சோதித்து, குற்றம் குறை காணின் குறித்துக் காட்டித் திருத்தம் செய்வார்; படித்த பாடல்களுக்கு அவர்கள் கண்டவாறு விரிவுரை எழுதிவரச் செய்தும், தலைப்புத் தந்து அப்பாடல்களின் பொருளைத் தழுவிக் கட்டுரை வரைந்து வரச்செய்தும் படித்துப் பார்த்துத் திருத்தித் தருவார்.

  தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம்சொல்வதில் பிள்ளையவர்கள் பேரார்வம் கொண்டவர். அவர் அவற்றைப் பாடம் சொல்லும் முறை, மாணவர்களை அவற்றிடம் ஆழ்ந்த பற்றுக் கொள்ளச் செய்யும். தொல்காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது தேர்வுக்குரிய ஓர் ஆசிரியன் உரையை மட்டும் விளக்குவதோடு அமையாது உள்ள வேறு ஆசிரியர்களுடைய உரைகளையும் உடன் வைத்து ஒருங்கு விளக்குவார். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி ஆகிய தொடர்புள்ள பிற நூல்களையும் சேர நடத்துவார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர் தாம் உரை கண்ட இலக்கிய, சமய நூல்களின் உரைகளில் தந்துள்ள இலக்கணக் குறிப்புகளை எடுத்துக்காட்டி இனிது விளக்கம் செய்வார். உரையாசிரியர்கள் தம்முள் மாறுபடஉரை கண்டுள்ள இடங்களில் ஒவ்வொருவர் உரையையும் தனித்தனியாக விளக்கி, அவர்கள் மாறுபாட்டுக்குரிய காரணங்களை நுணுகி ஆராய்ந்து முடிவு கூறுவார். தொல்காப்பியப் பகுதிகள் பற்றிப் பிற்காலப் புலவர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள ஆய்வுரைகளையும் நூல்

  களையும் படிக்கச் செய்து, அவர்கள் கொண்ட கருத்துக்களின் வன்மைமென்மைகளைக் காரண காரியத்தோடு விரிவாக

  விளக்கிக் காட்டுவார். பின்னர், தனித்தனித் தலைப்புகளில் ஆய்வுரைகள் எழுதி வரச் செய்து படித்துத் திருத்தம் செய்வார். இம்முறையால் மாணவர்கள் தாம் பாடம் கேட்ட நூல்களில் ஐயம், திரிபு, அறியாமையின்றித் தெளிவும் தேர்ச்சியும் பெறலாயினர். மாணவர்கள் ஒவ்வொரு நூலையும், நூற்பகுதியையும் ஆசிரியரிடம் பாடம் கேட்டே அறிவதினும், ஆசிரியர் வழிகாட்ட, அவ்வழி நின்று தம் முயற்சியால் தமக்குத் தாமே பல்வேறு நூல்களையும் பகுதிகளையும் ஊன்றிப் பயின்று தேர்ந்து தெளியும் திறம்பெற அவர்கட்குப் பயிற்சியளிப்பதையே சிறப்புப் பணியாகக் கருதினார். ஒரு நூலில் தேர்வுக்குரிய பகுதியை மட்டும் படித்தறியச் செய்வதோடு அமையாது, மாணவர்களை அந்நூல் முழுவதையும், அதனோடு தொடர்புடைய பிற நூல்களையும் படித்தறியுமாறு வற்புறுத்துவது அவர் வழக்கம்.

  பிள்ளையவர்கள் தம்மிடம் புதியராகப் பயிலவரும் இளமாணவர்கட்குச் தம்மிடம்பயின்று வரும் முது முனைவர்களைக் கொண்டு பாடம் சொல்ல வைப்பர். அவர்கள் பாடம்சொல்லும் பொழுது உடனிருந்து கவனித்து, தவறும் இடங்களில் திருத்துவார். புதியனவாக வெளிவரும் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்களைப் படித்து, மாறுபட்ட கருத்துக் காணும் இடங்களைக் குறித்துவரச் செய்து, அவை பற்றி விரிவாக விவாதித்து, அவற்றிற்கு மறுப்புரை எழுதி வரப்பணிப்பார். அதனைத் திருத்திப்படி எடுப்பித்து இலக்கிய இதழில் வெளியிடச்செய்வார். அவர் இவ்வாறு செய்வது அவ்வாசிரியர்களிடம் அழுக்காறு அல்லது பகைமை காரணமாகவோ, அவர்கள் கருத்தை மறுத்து அவர்கட்கு இழுக்க உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டோ அன்று; பிறர் கருத்துக்களை ஆய்வும் ஆய்ந்து கண்டதை விளக்கி அழுத்தமாக எழுதவும் தம் மாணவர்கட்குப் பயிற்சியளிக்கும் அருள் நோக்கமே அதற்குக் காரணம் ஆகும். இதனால் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் ‘தன்நம்பிக்கையையும்’ ‘தன் முயற்சியும்’ உடையராய், எந்நூலையும் தாமே பயின்றறியும் தனித்திறம் பெற்றதோடு தாம் அறிந்ததைப் பிறர் அறியுமாறு விளக்கிச் சொல்லும் சொல்வன்மையும், விரித்து எழுதும் எழுத்தாற்றலும், துணிவும் உடன் பெற்றனர்.

  நூலாசிரியர்

  பிள்ளையவர்கள் இணையற்ற போதகாசிரியர் மட்டுமல்லர்; ஈடற்ற நூலாசிரியருமாவர். தம் கோள் நிறுவவும், தம்பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர். தமிழ்மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறை செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே. அவ்வொரு சிலருள் பிள்ளையவர்களும் ஒருவராவர். அவர் செய்யுள் இயற்றுவதில் ஆர்வம் கொண்டிலர். அதனால் அவர் செய்யும் நூல் ஏதும் இயற்றவில்லை. ஆனால்அவர் அவ்வப்பொழுது புனைந்த பாடல்கள் பலஉண்டு. அவை யாப்பமைப்பிலும், சொல் நலம், பொருள் வளம், ஓசை நயங்களிலும் சங்கச் சான்றோர், இளங்கோவடிகள், திருத்தக்க தேவர் ஆகிய பழந்தமிழ்ப் பாவலர்களின் பாடல்களை நினைப்பூட்டும் சிறப்பினவாகும். பிள்ளையவர்கள் உரைநடை நூல்கள் இயற்றுவதிலேயே பெரிதும் ஈடுபாடுடையவர். அவர் தமக்கென்று தனி உரைநடை ஒன்றை இனிது அமைத்துக் கொண்டார். அது சொல் அழுத்தமும், பொருள் அழகும், மிடுக்கும் பெருமிதமும் வாய்ந்தது. கதைகள், பாட நூல்கள், எளிய இலக்கியத் திறனாய்வுகள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் அவர் பொழுதைப் போக்கவில்லை. அருந்தமிழ்ப் புலவர்களும் தனித் தமிழ் மாணவர்களும் படித்துப் பயன் கொள்ளத் தக்க இலக்கிய, இலக்கண, சமய வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டார். இவ்வகைகளில் அவர் படைத்துத் தந்துள்ள பயன்கெழு நூல்கள் பலவாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய பேரிலக்கியங்கள் பற்றி அவர் எழுதியுள்ள சீரிய நூல்கள் அவரது இலக்கிய ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுவன. திருவள்ளுவர், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள் முதலியவற்றில், வரலாற்றுத் துறையில் அவரது ஆராய்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தறியலாம். மத்தவிலாசப் பிரகாசம் இவரது மொழிபெயர்ப்புத் திறனுக்கு விழுமிய சான்று. இவையே அன்றி, அவர் இயற்றிய இலக்கண சமய ஆராய்ச்சி நூல்கள் இன்னும் பலவாம். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய களம், பல்வேறு தமிழ் இதழ்களில் அவ்வப்பொழுது வரைந்து வெளியிட்ட கட்டுரைகள், ஆய்வுரைகள், மறுப்புரைகள் எண்ணில.

  உரையாசிரியர்

  பிள்ளையவர்கள் பழந்தமிழ்ப் பேரிலக்கியங்கள் பலவற்றிற்கும் யசோதர காவியம், மணிமேகலை ஆகிய காப்பியங்கட்கும் விளக்கவுரை வரைந்து வெளியிட்டு, புலவருகம் பண்டை உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து, ‘உரைவேந்தர்’ என்று புகழ் கூறும் உயர்நிலையை எய்தியமை அனைவரும் அறிந்ததொன்று. தமிழறிஞர் அவர் ஆக்கிய உரை நூல்களைப் படித்து உரை நல்கியதை ஆய்ந்து, அறிந்து, சுவைத்து, அதன் அருமை பெருமைகளைப் பாராட்டி வருகின்றனர். ஆகவே நான் இங்கு அவர் உரை நல்கியதை உரை போட முற்பட்டு என் குறையறிவைப்பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. பிள்ளையவர்கள் உரையாசிரியராவதற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முனைந்திருந்த காலத்தில் மாணவனாக அவரோடு உடனிருக்கும் வாய்ப்புப் பெற்றிருந்ததால், அதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பையும், உரை கண்ட சிறப்பையும் மட்டும் அறிந்தவாறு அமைவவேன்.

  உரையாசிரியப் பண்பு பிள்ளையவர்கட்குத் கருவிலே வாய்ந்த திரு. அதற்கான இயல்பூக்கம் உரம் பெற வளர்ந்து, அவர்புலவரானதும் திறம்பெறச் செயல்படத் தொடங்கியது. அதன் பயனாக அவர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண உரைகளிடம் அடங்கா ஆர்வமும், அவற்றை ஆக்கிய ஆசிரியர்

  களிடம் ஆழ்ந்த பற்றும், அளவற்ற மதிப்பும் உடையவரானார். இலக்கிய நூலாயினும் இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். அவ்வுரையாசிரியர்கள் நூல்களை அணுகும் முறைஉரைகாணும் நெறி, உரை வகுக்கும் திறம் ஆகியவற்றை அறிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை உடனே பிழையுரை என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரைவகுத்திருப்பதற்குரிய காரணத்தைக் கண்டறிந்தார். அக்காரணம் அவ்வாசிரியர் காலத்திற் மட்டுமன்றிப் பொதுவாக எக்காலத்திற்கும், சிறப்பாக இக்கால வழக்குக்கும் பொருந்தாததாயின் பொருத்தமான புத்துரை காண முயன்றார். முன்னோரின் ஆய்வுரைகளைக் காய்தல், உவத்தலின்றி நடு நின்று நெடிது ஆராய்ந்தார். இலக்கிய இலக்கண உரைகளை அன்றிச் சிவஞானபோதம், மாபாடியம் போன்ற சமயச் சார்பான சரித்திரப் பேருரைகளையும் பலமுறை படித்துத் தெளிவுற விளக்கம் கண்டார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களை மரபறிந்த வடமொழி வல்லுநரின் துணை கொண்டு விரும்பிப் பயின்றார். அவை பதசாரம் கூறும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. ஆங்கில மொழியில் உள்ள சட்டங்களையும், அவற்றின் விளக்கங்களையும், அவை பற்றிய அறிஞர்களின் ஆயவுரைகளையும், நடுவர்களின் முடிவுரைகளையும் பெற்றுப் படித்தார்; சட்ட நூற் புலவர்களும், நீதிமன்ற நடுவர்களும் முடிவு கூறும் திறனையும் தெளிவு பெற அறிந்தார். வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச்சமய அறிஞர்களை அடுத்துக்கேட்டு அறிந்து கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும், கல்வெட்டுக்களையும், அவை பற்றிய விளக்க நூல்களையும் பெற்றுப் படித்து ஆராய்ந்து, தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும், வரலாற்றுச் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பல்லாண்டுகள் முயன்று பழந்தமிழ் நூல்கட்கு நயம்பட உரைகாணும் பண்பும் பாங்கும் உரமும் திறமும் பெற்றார்.

  பிள்ளைவர்கள் முதன் முதலாக உரையெழுதி வெளியிட்டது திருஞானசம்பந்தர் அருளிய திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகமாகும். அதனோடு ஞானாமிர்தம் என்னும் சமய நூலுக்கும் தெளிவுரை எழுதி வந்தார். பின்னர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ‘ஐங்குறுநூறு’ என்றும் நூலுக்கு உரையெழுதத் தொடங்கினார். அகப்பொரள் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து அறிந்து கொண்டு அதற்கு வரிவான விளக்கவுரை வரைந்து முடித்து, அதன் முதற்பகுதியை அச்சிடுவித்து வெளியிட்டார். பின்னர் மற்றப் பகுதிகளும் வெளியிடப்பட்டன. சொற்பொருள், சொல்நயம், சொல் பொருள் நயங்கள், இலக்கண விளக்கம், அகப்பொருள் அமைதி என்னும் அடைவு முறையில் அமைந்த அவ்வகவுரை புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்து. அதனை, அடுத்துப் பதிற்றுப்பத்து நூலுக்கு உரையெழுத முற்பட்டார். சேரர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள இலக்கியப் பகுதிகளையும் தென்னாட்டையும் சிறப்பாகத் தமிழகத்தையும் தமிழரசர்களையும், அவர்களுள் சேர மரபினரையும் பற்றி வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும், கல்வெட்டுக்களையும் விரிவாக ஆராய்ந்து விளக்கவுரை எழுதி வெளியிட்டார். பதிற்றுப்பத்திற்குப் பின்னர், புறநானூற்றுக்குச் சிறப்புரை வரைவதில் ஈடுபட்டார். பல ஏடுகளைக் கொண்டு ஆய்ந்து குறைப்பாடல்களாக இருந்தவற்றை இயன்ற வரை நிறைவு செய்து கொண்டு முழு நூலுக்கும் விழுமிய விரிவுரை எழுதி முடித்தார். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிக் குறிப்பைச் சேர்த்துப் பதிப்பித்து இரு பகுதிகளாக வெளியிடுவித்தார்.

  அதனை அடுத்து வெளியிட்ட உரைநூல் மணிமேகலை பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் முன்னரே மணிமேகலையின் முற்பகுதிக்கு உரையெழுதி வைத்திருந்தார். அந்நூலின் பிற்பகுதி புத்த சமயத் தத்துவங்களும், வேறு பல சமயங்களில் மாறுபடும், கோட்பாடுகளும், அளவை நூல் நுட்பங்களும் அடங்கியதாக இருத்தலின் அதற்குப் பொருள் கண்டு தெளிவது எத்தகையோர்க்கும் எளிதாக இல்லை. எனவே அதனை முடிக்க யாரும் முன்வரவில்லை. செயற்கரிய செய்யும் சீரியராகிய பிள்ளையவர்கள் அப்பகுதிக்கு உரைகண்டு முடிக்க உறுதி கொண்டார். புத்த சமய நூல்களையும் பிற சமய நூல்களையும் முயன்று பெற்று முறையாக ஆய்ந்தார். அச்சமயங்கள் பற்றிய வடமொழி நூல்களை அம்மொழி வல்லுநரின் துணை கொண்டு படித்தறிந்தார். அளவை நூற்செய்திகளை ஐயமற ஆய்ந்து தெளிந்தார். பின்னர் அப்பகுதிக்குத் தெளிவான விளக்கவுரை எழுதி முடித்து அவ்வுரை நூலை வெளியிடச் செய்தார். அவ்வுரையின் உதவியால் இன்று யாவரும் மணிமேகலை நூல் முழுவதையும் படித்துப் பயன் பெறுவது எளிதாகி யுள்ளது. மணிமேகலை உரைக்குப் பின்னர் அவர் நாட்டம் நற்றிணையின்பால் சென்றது. பல்லாண்டுகட்கு முன் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தம் புலமையே துணையாக, அவர்காலத்தில் கிடைத்த அருகிய ஆதாரங்களைக் கொண்டு நற்றிணைக்குச் சிற்றுரையொன்று எழுதி வெளியிட்டிருந்தார். பிள்ளையவர்கள் தம் மாணவர்கட்கு நற்றிணைப் பாடம் நடத்தியபொழுது அவ்வுரையின் குறைபாடு களைக் கண்டு, அந்நூல் முழுவதையும் நன்கு ஆராய்ந்து அரிய குறிப்பு எடுத்திருந்தார். அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நூல் முழுவதற்கும் விளக்கமான விரிவுரை எழுதிமுடித்தார். அண்மையில் அஃது இருபகுதிகளாக வெளியிடப்பட்டது. பிள்ளையவர்களின் முன்னைய நூலுரைகள் அனைத்திலும் இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளத பிள்ளையவர்கள் மாணவர்கட்குப் பாடம் சொல்லும்பொழுது ஒவ்வொரு நூலுக்கும் விரிவான விளக்கக் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட உரைகள் யாவும் பெரிதும் அக்குறிப்புக்களின் விரிவே ஆகும். அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றுக்கும் அவர் அரிய குறிப்புகள் வரைந்து வைத்திருந்தார். அவை இன்னும் உரைவடிவு பெற்லி. அவையும் உரைவடிவில் வெளிவருமாயின் தமிழ் மொழியின் வளம் செழிக்கவும், பிள்ளையவர்களின் புலமை நலத்தை உலகம் அறிந்து உவக்கவும் உதவும் என்பது ஒருதலை. பிள்ளையவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் ஓய்ந்திரா மல்ா பொள்ளாச்சி வள்ளலாகிய மகாலிங்கம் அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, வள்ளலாரின் திருவருட்பா நூலுக்கு விரிவுரை எழுதினார். தமிழ் அறிஞர்களின் துணையும் தமிழ்ச் செல்வர்களின் ஆதரவும் கிடைக்க பெறின் அவர் தமிழ்மொழியின் செழிப்புக்கு இன்னும் பல சிறப்புத் தொண்டுகள் செய்திருக்கக்கூடும். அதற்குரிய ஆர்வமும் ஆற்றலும் அவருக்கு உண்டு.

  பேச்சாளர்

  பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், பேச்சு வன்மை ஆகிய முன்றும் ஒருவரிடம் ஒருங்கு அமைவது அரிது. இவற்றுள் ஒன்று இருப்பவரிடம் ஏனை இரண்டும் இருப்பதில்லை. ஆனால் பிள்ளையவர்களிடம் இம் முத்திறனும் ஒருசேர முழுமையாக அமைந்திருந்தன. பேச்சு வன்மை ஒரு கலை; பெறுதற்கரிள கலை. அது பிள்ளையவர்களுக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர் விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு தம் பேச்சுத் திறனைப் பேணி வளர்த்துக் கொண்டவர். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர் விவேகானந்தரின் உரைகளைப் பலமுறை படிக்க வேண்டும் என்ற அவர் தம்மாணவர்கட்கக் கூறுவதுண்டு. கவர்ச்சியான தோற்றம். அவைக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் ஆகிய பேச்சாளர்க்கு இன்றியமையாத அமைதிகள் அனைத்தும் பிள்ளையவர்களிடம் இயல்பாகவே இனிது அமைந்தன. பேச்குக்குரிய பொருள் இலக்கியம். இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அது பற்றிய செய்திகளையும் கருத்துகளையும் வரையறத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாது - காரண காரியத் தொடர்பமைய நிரல் படத் தொடுத்து, பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, அவையோர் ‘அருமை’ ‘அருமை’ என்று பெருமை பேசுமாறு உரையாற்றும் திறமை பிள்ளையவர்களின் தனியுரிமையாகும். சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும் சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மாண் நுழை புலத்தையும் ஆய்வுத்திறமையும் அறியலாம். இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே. பேச எடுத்துக்கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது. ‘கால்பணத்திலே கல்யாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை’ என்னும் பீடிகையோடு அவர் கம்பனின் சொற் சுருக்கத்தையும் கவிநயத்தையும் எடுத்துக்காட்டி விளக்கி அவரையாரைச் சுவைக்கச் செய்வார். அவர் பேசச் செல்வதற்குமுன் பேச்சுக்குரிய பொருள் பற்றிச் சிந்தித்துச் சிறு குறிப்பு ஒன்றை வரைந்து கொள்வத வழக்கம். அக்குறிப்பை உரை நிகழ்த்தும் இடத்திற்கு உடன்கொண்டு செல்லமாட்டார். ஆனால் அங்கு நிகழ்த்தும் உரை முற்றிலும் அக்குறிப்பை ஒட்டியே அமைந்திருக்கும் இது கொண்டு இவருடைய சிந்தனைத் தெளிவையும் நினைவாற்றலையும் தெரிந்து கொள்ளலாம்.

  மாணவர்களிடம் அன்பு

  பிள்ளையவர்கள் மாணவர்களிடம் பேரன்பு கொண்டவர், இவர் மாணவர்களை ‘ஐயா, ஐயா’ என்ற அக மகிழ்ச்சியோடு அன்பொழுக அழைக்கும் இன்ப ஒலி இன்றும் என் செவிகளில் மாணவர்கள் சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் இவர் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர். அதற்கேற்ப அரிய நூல்களையும் ஐயம் திரிபு அறியாமைக்கு இடமின்றி அருமையாகப் பாடம் சொல்வார். தாம் அரிதில் வருந்திச் சேர்த்த தமிழ் வளத்தைத் தம்மாணவர் வருந்தாமல் எளிதில் பெறுமாறு வாரி வழங்குவார். தாம் முயன்று வரைந்து வைத்துள்ள அரிய நூற்குறிப்புக்களை மாணவர்கட்குத் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். தாம் பாடம் கேட்ட நூல்களைப் பிறர்க்கு முறையாகப் பாடம் சொல்லவும், கட்டுரை ஆய்வுரைகள் வரையவும் அறிஞர் அவையில் அஞ்சாமல் அடக்கமாக உரையாற்றறவும் மாணவர்கட்குப் பயிற்சி

  யளிப்பார், தம்மைக் கண்டு அளவளாவவரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம்மாணவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார்.

  மாணவர்களின் ஆக்கத்தில் அவர் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாக என்னைப் பற்றிய சில செய்திகளை இங்குத் தந்துரைப்பது தவறாகாது என்று கருதுகின்றேன். நான் பிள்ளையவர்களிடம் மாணவனாக அணுகிய பொழுது ம.விஜயராகவன் என்னும் பெயருடையவனா

  யிருந்தேன். அது என் பெற்றோர் எனக்கு இட்டு அழைத்த பெயர். நான் மாணவனாக அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “உங்கள் பெயரில் ஒரு மாற்றம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இராகவனுக்கு அடைமொழி எதற்கு? விஜயம் இன்றி இராகவன் இல்லை. ஆகவே உங்கள் பெயரை அடைமொழியின்றி ‘இராகவன்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள்; ‘இராகவன்’ என்று பெயர் எத்துணைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது பாருங்கள்” என்றார் நான் ஆசிரியரின் அன்பு ஆசையை அருளாணையாக ஏற்று அவ்வாறே மாற்றிக் கொண்டேன். அன்று முதல் என் பெயரை ம. வி. இராகவாசாரியன் என்று எழுதி வரலானேன். அதனைக்கண்ட பிள்ளையவர்கள் மீண்டும் ஒரு நாள் என்னை அழைத்து, “உங்கள் பெயரில் இன்னும் ஒரு மாற்றத்திற்கு இடம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; ‘ஆசாரியன்’ என்பதற்குப் பதிலாக ‘ஐயங்கார்’ என்பதை இணைத்துக் கொள்ளுங்கள். ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார்களோடு நீங்கள் ம.வி. இராகவையங்காராக இருங்கள்.” என்றார். அதனைக்கேட்டு நான் உணர்ச்சிப் பெருக்கால் உடல் வேர்த்துப் போனேன். அன்று தொடங்கி என் பெயரை அவர்விரும்பியாறே அமைத்துக் கொண்டேன். அவர் என்னை அழைக்கும் பொழுதெல்லாம் ‘ஐயங்கார்’ என்றே அழைத்து அதனை ஆட்சி பெறச் செய்தார்.

  பின்னர் நான் 1936 ஆம் ஆண்டே வித்துவான் இறுதிநிலைத்

  தேர்வு எழுத விரும்பி, அதனைப் பிள்ளையவர்களிடம் கூறி அனுமதியும் ஆசியும் வேண்டினேன் அவர், ‘ஏன், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கலாகாதா? அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவீரானால் முதல் வகுப்பில் தேறி அதற்குரிய பரிசு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றார். அப்பொழுது என் குடும்ப

  நிலை அதற்கு இடந்தருவதாக இல்லாததை எடுத்துக்கூறி, நான் மூன்றாம் வகுப்பில் தேறினால் போதும், அன்பு கூர்ந்து அனுமதி தாருங்கள்’ என்று வேண்டிக் கொண்டேன். அவர் என் நிலைக்கு இரங்கி, ‘அப்படியானால் சரி.இந்த ஆண்டே எழுதினாலும் முதல் வகுப்பில் தேறும் தகுதி உங்களுக்கு உள்ளது. கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்’ எக்னறு ஆசி கூறி அனுமதியளித்தார். அவ்வாண்டே தேர்வு முடிவும் தினத்தாள்களில் வெளிவந்தது. நான் முதல் இரு வகுப்புக்களில் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே மூன்றாம் வகுப்பில் தேறியவர்கள் வரிசையை மட்டும் பார்த்தேன் அதில் என் பதிவெண் இடம் பெறவில்லை. எனவே தேர்வு பெறவில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். அன்று மாலை சிறிது வருத்தத்தோடு பிள்ளையவர்கள் இல்லத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சியோடு, வாருங்கள். உங்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன். தங்களுக்கு என் பாராட்டுக்கள். இனிப்பு எங்கே? வெறுங்கையோடு வந்திருக்கிறீர்களே, என்ன?’ என்றார் அவர் கூற்று என்னைத் திகைப்புறச் செய்தது நாணத்தால் நாக்குழற நான் தேர்வு பெறவில்லை உங்கள் சொல்லைக் கேளாததன் விளைவு’ என்றேன் ‘தேர்வு பெறவில்லையா? யார் சொன்னார்?’ என்று கூறியவாறே உள்ளே சென்றுஇந்து பத்திரிகையை எடுத்து வந்து முதல்வகுப்பில் தேறினவர்களின் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றிருந்த என் பதிவெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘இது உங்கள் எண்தானே? மறந்து விட்டீர்களா?’ என்றார். நான் வியப்பினால் விம்மிதமுற்றேனெனினும், தவற்றுக்கு நாணினேனாய், ‘நான் மூன்றாம் வகுப்பையே எதிர்பார்த்தேன், அதனால் பிற வகுப்புக்களின் தேர்வு வரிசையகளைக் கவனிக்கவில்லை. என்றேன். அவர் முதல் வகுப்பில் தேறியிருப்பது மட்டும் அன்று; மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது’ என்று கூறி, கற்கண்டு வாங்கிவரச் செய்து உடனிருந்த அன்பர்களுக்கு வழங்கினார். பிள்ளையவர்கள் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கும், அவர்கள் தேர்ச்சியிலும் உயர்விலும் அவருக்கு இருந்த அக்கறைக்கு இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாகும் அன்றோ?

  பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்நிலை எய்தியோர் பலர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் ஆவார். புலவர் கோவிந்தன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த நாளிலிருந்தே பிள்ளையவர்களின் அன்புக்குரிய அருமை மாணவராக அமைந்தார். பிள்ளையவர்களிடம் தனித்தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் சிறப்புறத் தேறிப் பட்டம்பெற்று உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்போடு பணியாற்றி வருகின்றனர். பிள்ளையவர்களின் மாணவர்கள் அனைவரிடத்திலும் அவருக்குரிய தனி முத்திரையைக் காணலாம். அவர்கட்குப் புலவருலகில் மதிப்பு உண்டு.

  இவ்வாறு தம் உழைப்பினாலும் தாம் உயர்ந்தோடு தம்மை அடுத்தோர் பலரும் உயர்ந்து உய்ய உதவி வந்த ஒப்புரவாளராகிய பிள்ளையவர்கள் மறைந்தது பெரும் அவலம் தருகிறத. தமக்கென வாழாது தமிழே உயிர்ப்பாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்நத அவர் திருப்புகழ் வளமை குன்றாத் கன்னித் தமிழே போல இன்னும் பல்லாண்டுகள் மன்னுதல் உறுதி.

  “கற்றவர்தம் கண்ணீர்க் கடல்மூழ்கச் சாய்ந்து தமிழ்

  உற்ற கடல் மூழ்கி ஒளிந்ததே - பெற்ற நிலம்

  எங்கும் ஒளிசெய்திரந்ததுரை சாமியெனும்

  பொங்கு தமிழ்ச்சுடரிப் போது”

  Lecture delivered at the 34th Conference of the Saiva Siddhantaha maha samajam held on 29.12.1939 at Kunrakkudi.

  உரைவேந்தர் தமிழ்த்தொகை பட்டியல்

  தொகுதி

  1

  ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

  ”

  2

  சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்

  ”

  3

  1. சிலப்பதிகாரச் சுருக்கம் 2. மணிமேகலைச் சுருக்கம்

  ”

  4

  சீவக சிந்தாமணிச் சுருக்கம்

  ”

  5

  சூளாமணிச் சுருக்கம்

  ”

  6

  பெருங்கதைச் சுருக்கம்

  ”

  7

  1. சிலப்பதிகார ஆராய்ச்சி

  ”

  2.  மணிமேகலை ஆராய்ச்சி

  ”

  3.  சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

  ”

  8

  யசோதர காவியம்

  ”

  9

  தமிழ் நாவலர் சரிதை

  ”

  10

  சைவ இலக்கிய வரலாறு

  ”

  11

  மாவை யமக அந்தாதி

  ”

  12

  1. பரணர்

  ”

  2.  தெய்வப்புலவர் திருவள்ளுவர்

  ”

  3.  Introduction to the study of Thiruvalluvar

  ”

  13

  சேரமன்னர் வரலாறு

  ”

  14

  நற்றிணை 1

  ”

  15

  நற்றிணை 2

  ”

  16

  நற்றிணை 3

  ”

  17

  நற்றிணை 4

  ”

  18

  ஐங்குறுநூறு……………………… 1

  ”

  19

  ஐங்குறுநூறு……………………… 2

  ”

  20

  பதிற்றுப்பத்து

  ”

  21

  புறநானூறு………………………. 1

  ”

  22

  புறநானூறு……………………… 2

  ”

  23

  திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் (கட்டுரைத் தொகுப்பு)

  ”

  24

  செந்தமிழ் வளம்……………………..1

  ”

  25

  செந்தமிழ் வளம்……………………..2

  ”

  26

  வரலாற்று வாயில்

  ”

  27

  சிவநெறிச் சிந்தனை………………….1

  ”

  28

  சிவநெறிச் சிந்தனை…………………..2

  திருக்குறள் தெளிவு - பொதுமணித் திரள்

  1. வள்ளுவர் காட்டும் சமயக்கருத்துகள்

  2. திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி

  3. ஏட்டிற் கண்ட குறிப்பு

  4. ஊழ்வினை

  5. உரையனுபவம்

  6. இறைமாட்சி

  7. கல்வி

  8. அறிவுடைமை

  9. தன்குறை நீக்குதல்

  10. தகுந்த துணை

  11. செயல்முறை

  12. தொழில் நுணுக்கம்

  13. தலைமைச் சிறப்பு

  14. சுற்றமும் பணிவும்

  15. நீதிமுறை

  16. இரக்கம்

  17. பிறர் மனம் அறிதல்

  18. ஊக்கம்

  19. வள்ளுவர் கண்ட இன்பம்

  20. முயற்சி

  21. புரட்சிக் கவிஞன் வாழ்க!

  22. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் கண்ட மணிமொழியார்

  23. அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு

  24. வியப்பிறந்த மேன்மையர்

  25. வியப்பிறந்த மேன்மையர்

  26. புலமைப் புரவலர்

  27. அருள் திரு விபுலானந்த அடிகள்

  28. அருள்திரு விபுலானந்த அடிகள் மறைந்தது குறித்துப் பாடியவை

  29. பாராட்டற்குரியது

  30. கன்றும் உதவும் கனி

  31. முன்னணியில் நிற்பவர்

  32. தலைமையானவர்

  33. இரு துருவங்கள்

  34. நிலையான அறிஞர்

  35. தமிழன்னையின் தனிப்பெருந் தொண்டர்

  36. முத்தமிழ் காவலன் கவிதை

  37. எழுத்தாளர் மன்றம்

  38. வள்ளலார் கண்ட வள்ளன்மை

  39. பாரத சமுதாய ஒருமை நலம்

  40. விஞ்ஞானம்

  41. எழில் உருவம்

  42. பண்டிதமணியின் மாண்பு

  43. சித்தாந்தப் பேராசிரியர்

  44. கரந்தைக்கவியரசு மறைவு

  45. வாணிக மந்திரம்

  46. சுந்தரகாண்டம் முதற்பகுதி (மாதிரிப்பதிப்பு) மதிப்புரை

  47. வாழ்நாள்

  48. கருவிலே வாய்த்த திரு

  49. ஞானியார் சுவாமிகள் பொன்விழாப் பாராட்டுரைகள்

  50. இருபெரும் தமிழறிஞர்கள்

  51. செய்தி மடலில் ஓர் இனிய காட்சி

  52. உயிர்களின் நுண்ணறிவு 53. அருள் விருந்தளிக்கும் அழகரடிகள்

  செந்தமிழ் வளம் - 1

  54. பண்டைத் தமிழகம் - I

  55. பண்டைத் தமிழகம் - II

  56. எழுதா இலக்கியம்

  57. குணமாலை

  58. இளங்கோ கண்ட இயற்கை

  59. நந்தா விளக்கு

  60. தமிழரசில் புலவர் பணி

  61. முல்லை

  62. புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம்

  63. முதனூலா? மொழி பெயர்ப்பா?

  64. சங்ககாலப் பரணர்கள்

  65. தமிழகத்தில் தமிழ்நிலை

  66. முல்லை - ஒரு சொற்பொழிவு

  67. முடத்தாமக் கண்ணியார்

  68. காதல் வாழ்வு

  69. மறுப்பு முறை

  70. நற்றிணைக் கடவுள் வாழ்த்து

  71. கல்லாடனார்

  72. சொகினனார், சொகிரனார்

  73. கிழான்

  74. தமிழரசு நீதி வழங்கிய திறம்

  75. தொல்காப்பியச் சொல்லதிகாரக்குறிப்பு ஆராய்ச்சி

  76. மதுரைக்காஞ்சியாராய்ச்சி

  77. நன்னனும் பரணரும்

  78. சிந்தாமணியின் செந்தமிழ் நலம்

  79. மனைகெழு மடந்தை

  80. ஒளவையாரும் பாரிமகளிரும்

  81. நாடக வழக்கு

  82. அருள் இயக்கம்

  83. சங்க இலக்கியத் தனிச்சிறப்பு

  84. மணிமேகலையில் அழகுணர்ச்சி

  85. அறுவடையில் நிலவும் அருள்

  86. சிலப்பதிகாரமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளும்*

  87. இன்ப நிலை

  88. ஓர் திருமுகம்

  89. தேம்பாவணி

  90. தமிழுக்கு ஆக்கமாகும் பணிகள்

  91. அகநானூற்று உரை

  92. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்

  93. தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை - அணிந்துரை

  94. தமிழிசைப்பாடல்

  95. கவிதைகளின் அணியமைப்பு 96. சங்ககாலத் தமிழ்மகன்

  செந்தமிழ் வளம் - 2

  97. அறிவு

  98. உழைப்பு

  99. வரனென்னும் வைப்பு

  100. பிறப்பொக்கும் : சிறப்பொவ்வா

  101. யாதும் வினவல்

  102. மையீரோதி மடநல்லீரே

  103. பொருண்மொழி

  104. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி

  105. தமிழ் மகளிர்

  106. ஏட்டில் இல்லாத இலக்கியம் - பழமொழிகள்

  107. சமண முனிவர் தமிழ்த் தொண்டு

  108. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு

  109. தமிழகம் - வடவெல்லை

  110. பழந்தமிழர் நாகரிகம்

  111. புறநானூறு காட்டும் அரசியல்

  112. தமிழர் போர்த்திறம்

  113. புறப்பாட்டுணர்த்தும் தமிழ்வாழ்வு

  114. பழந்தமிழர் சமயநிலை

  115. தமிழரிடையே நிலவிய இதிகாச புராணங்கள்

  116. சங்க காலம்

  117. நல்லிசைப் புலமைச் சான்றோர்

  118. கோனாடு

  119. மதுரைக் குமரனார்

  120. முடிவேந்தர் தொடர்பு

  121. செல்வர் தொடர்பு

  122. பெருங்கோப் பெண்டு

  123. கோமகள் கண்ணகி

  124. வணிகர் மகள் கண்ணகி

  125. துறவி மணிமேகலை

  126. காரைக்காற் புனிதவதி

  127. பாட்டங்கால் வந்த பயன்*

  128. தமிழின் தற்கால நிலையில் தமிழ் மகளிர் செயற்குரிய பணிகள்

  129. சங்ககாலத்துச் செந்தமிழ்ச் செல்வி 130. இலக்கிய வுண்மை

  வரலாற்று வாயில்

  131. முதல் மகேந்திரவன்மன்

  132. உலக வரலாறு

  133. வாணிக மந்திரம்

  134. வெற்றிலை வாணிகர்

  135. தமிழகச் செய்திகள்

  136. சங்க காலச் சோழர்

  137. சங்ககாலப் பாண்டியர்

  138. பல்லவ வேந்தர்

  139. இடைக்காலப் பாண்டியர்

  140. இடைக்காலச் சோழர்

  141. ஆர்க்காடு

  142. தமிழ் வேந்தர்

  143. சோழன் கரிகாலனைப் பாடிய ஆதனார்

  145. சிந்தனைச்செல்வர் சித்தார்த்தகௌதமர்

  146. பொருளியல் வீழ்ந்தது எங்ஙனம்?

  147. பாண்டியன் சடில பராந்தகன்

  148. எதிரிலிசோழச் சம்புவராயன்

  149. கோடைமலைத் தலைவர்கள்

  150. காளிங்கராயன் தில்லைத் திருப்பணிகள்

  151. சேரநாடு

  152. சேரநாட்டின் தொன்மை

  153. வள்ளல்கள் வரலாறு

  154. கல்வெட்டுதவி

  155. கல் கூறும் சான்றுகள்

  156. தமிழ் நாட்டு வடவெல்லை வரலாறு

  157. தகடூர் அதியமான்

  158. வீரப் பிரதாப தேவராய மகாராயர்

  159. ஆணை மலை மாசானியம்மை

  160. பிள்ளை மாவலி வாணராயர்

  161. வரலாறும் சமுதாயமும்

  162. நாவுக்கரசர்

  சிவநெறிச் சிந்தனை-1

  163. தேவாரம் என்பதன் பொருள்

  164. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை

  165. ஞானசம்பந்தர் ஞானவுரை

  166. தேவாரத்திலுள்ள அகத்துறைப் பாடல்கள்

  167. குமரகுருபரர் பண்டார மும்மணிக்கோவை

  168. திருவெம்பாவை

  169. திருமுருகாற்றுப் படை

  170. திருவாமாத்தூர் யானை

  171. விஞ்ஞானமும் தத்துவஞானமும்*

  172. ஏரொளிச் சக்கரம்

  173. `இரந்தார்க்கீதல்’

  174. பழந்தமிழர் சமயம்

  175. சைவ சித்தாந்தம்

  176. சைவத்தின் இற்றைநிலை

  177. ஞானசம்பந்தரின் ஞானக் காட்சி நெய்தல்

  178. கண்டவர் விண்டது

  179. தில்லையில் நாவுக்கரசர்

  180. தில்லையில் சுந்தரர்

  181. கயிலையும் அரசும்

  182. நம்பியாண்டார் நம்பியும் ஞானசம்பந்தரும்

  சிவநெறிச் சிந்தனை-2

  183. வினையுணர்வும் ஞானசம்பந்தரும்

  184. பட்டினத்துப் பிள்ளையார்

  185. திருப்பாசுரப் பேருரை விளக்கம்

  186. சேரமான் பெருமாள் பிரபந்தங்கள்

  187. திருவானைக்காவில் சோழா திருப்பணிகள்

  188. குமரகுரபரர் நல்கும் சமயவாழ்வு

  189. உமாபதி தேவரான ஞானசிவ தேவர்

  190. சைவ முரசு

  191. ஞானாமிர்த சாரம்

  192. திருவாசகம் சிவபுராணம்

  193. தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை

  194. சிவஞானபோதச் செம்பொருள் 195. நம்பியாண்டாரும் அப்பரும்

  196. சீவக சிந்தாமணியும் சைவமும்

  197. திருநணாவில் திருஞானசம்பந்தர்

  198. சேக்கிழார் திருத்தொண்டர்புராணம்

  நூற்பட்டியல்

  1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

  2.  திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை

  3.  ஐங்குறுநூறு உரை

  4.  புறநானூறு உரை

  5.  பதிற்றுப்பத்து உரை

  6.  நற்றிணை உரை

  7.  ஞானாமிர்தம் உரையும், விளக்கமும்

  8.  சிவஞானபோத மூலமும் சிற்றுரையும் பதிப்பும்

  9.  சிலப்பதிகாரச் சுருக்கம்

  10. சீவகச்சிந்தாமணிச் சுருக்கம்

  11. சூளாமணி

  12. சிலப்பதிகார ஆராய்ச்சி

  13. மணிமேகலை ஆராய்ச்சி

  14. சீவகச்சிந்தாமணி ஆராய்ச்சி

  15. யசோதர காவியம் மூலமும் உரையும்

  16. தமிழ் நாவலர் சரிதை - மூலமும் உரையும்

  17. சைவ இலக்கிய வரலாறு

  18. நந்தா விளக்கு

  19. ஒளவைத் தமிழ்

  20. தமிழ்த் தாமரை

  21. பெருந்தகைப் பெண்டிர்

  22. மதுரைக் குமரனார்

  23. வரலாற்றுக் கட்டுரைகள்

  24. சேரமன்னர் வரலாறு

  25. சிவஞானபோதச் செம்பொருள்

  26. திருவருட்பாப் பேருரை

  27. ஞானவுரை

  28. பரணர் (கரந்தை)

  29. தெய்வப்புலவர் திருவள்ளுவர்

  30. புதுநெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுகிள்)

  31. Introduction to the study of Thiruvalluvar

  32. மருள் நீக்கியார் நாடகம்

  33. மத்தவிலாசம் (மொழியாக்கம்)

  1.  History of sanskrit Literature P.S. S Sastri. p. 165-6

  1 Annual Report Madras Epigraphy 1930- 31.p. 43

  2 Pallava Architecure P. 111. பக். .9

  1 A.R.for 1907-8 para 66 and A. R. for 1915 para11.

  2 A.R. No.140 of 1907. 3 A.R.247 of 1923

  4 A.R. for 1912 para. 29

  5 A.R. for 1914 para. 47

  6 A.R. for 1915 para. 31

  1 Epigraphica Indica. Vol. 111. p, 266.

  1 A.R.No. 278, 316 of 1925

  2 Indian Historical Quarterly Vol. xxvI. p.1- 16.

  3 A.R. No. 94 of 1917.

  4 A.R. for 1917 part 11 para 33; 223 and 272 of 1905

  1   A.R. for 1917. para 35-8,

  1   A. R. for 1917, para. 33 to 38.

  1 Ep Indi. vol.i. p. 36

  2 Ibid. vol. xxII. p. 131

  3 Ind. Hist. Quartery . vol . xxvi . p. 16

  1 A.R.for 1913 para. 55

  2 A.R. for 1908 para. 64

  3 A.R. No. 303 of 1905

  4 303 of 1905

  1 A.R. No. 278, 280, 307, 316 of 1925

  2 A. R. for 319 of 1925

  3 para 50 of A. R. for 1923-24

  4 para 56 of A.R. for 1935-6

  1 A.R. 1929-30. para 24

  2 para 50 of A.R. FOR 1923-24

  3.  S. I. Ins. Vol. v. No. 1358

  1 A.R. for 1899 para 53

  2 A.R. for 1936 para 46

  3 No. 182 of 1915

  1 333 of 1917

  2 314 of S.I.I. vol. viii

  3 987 of S.I.I. vol . v

  4 425 of S.I.I. vol. vii

  5 65 of S.I.I. Vol.ii p. iii

  6 634 of S.I.I. vo l. v

  1 442 of S.I.I. vol . viii

  2 8of 1918;; 192 of 1928-9

  1 225 of S. I. I. vol. iv

  2 A. R. 431 of 1929- 30

  1 ஞானா. 28; 26-30

  1 A. R. No. 372 of 1911

  1 A.R.No. 181 of 1912 2 த. நா. சரிதை 94

  3   A.R. No. 126 of 1912       4   S.I.I. vol. v No. 1354

  5 Ibid No. 1355 & 1358

  1 A.R. No. 359 of 1916.

  2   A.R. No. 361 of 1916

  1   முத்தி, நிச். பக்.

  1   ஞானா, 27:   2 ஞானா 32

  1    ஞானா 33    2  ஞானா 35    3  ஞானா. 36

  1   ஞானா.41 2   ஞானா.44

  1 ஞானா. 45 2 ஞானா. 47

  1. ஞானா. 52

  1 ஞானா.53

  *கிடைத்த ஏட்டுப் பிரதிகளில் இக்காப்பு வெண்பாவிற்கு உரைகாணப்படவில்லை.

  †இதன் பொருள்: “எனதுள்ளத்துள்ளும் நாததத்துவத்துள்ளுமொப்ப நின்ற நன்மையாகிய பொருள் மூன்று கண்களை யுடைத்து, இரண்டு கவுளையுடைத்து, நான்ற வாயினையுடைத்து, நாகாபரணத்தை

  யுடைத்து, விலகி வில்லுமிழ்தலாற் சிவந்த மின்னையும் தோற்கும்படி செய்த சிவந்த சடையினையுடைத்து, பக்கத்தே பூதத்தையுடைத்து, அரிய நடனத்தின் பொலிவை யுடைத்து என்றவாறு. பூதத்தின் அரிய நடனத்தைப் பக்கத்திற் பொருந்தும் பொலிவையுடைத் தெனினுமாம்” - இவ்வுரை, ஒரு பிரதியில் மாத்திர மிருந்ததென்ற அடிக்குறிப்புடன் அச்சுப் பிரதியிற் காணப்படுகிறது.

  *“மதிபாய்” என்று தொடங்கும் திருவெண்பா செப்பறையேட்டுப் பிரதியில் உள்ளது. இதற்கும் உரையில்லை.

  1. மாசுணப்பைம்பூட்டு - பாம்பாகிய பசிய ஆபரணங்களையுடையது.  2. சதி- கூத்து.

  3.  குறுந்தாட்டு -குறுகிய தாள்களையுடையது.

  4.  உருகவிட்டு நின்ற ஒளி- உள்ளத்தை யுருக்கி அதனூடே நின்று விளங்கா நின்ற ஒளி.

  4.  சிவஞான மாபாடியத்து, “காமிக முதலிய சைவாகமங்களுள் ஞானபாதப் பொருளின் இகலறுத்து அவற்றின் பொருளுண்மை போதித்தற்கு………… எடுத்துக்கொண்ட ஆசிரியர்………….. ஆன்றோராசாரம் பாது காத்தற் பொருட்டும் மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய கடவுளை வாழ்த்துவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்” எனவரும் மங்கலவாழ்த்து முன்னுரை ஈண்டு ஒப்பு நோக்குதற் குரித்து.

  5.  ஏழு கொலா மவர் கண்ட விருங்கடல்- (திருநா. 4: 18: 7)

  6.  வீங்கிய சென்னிச் சிமையமு மோங்கிய- பாடவேறுபாடு.

  7.  “எழு பொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்” (தொல். பொ. புறத். 25, மேற்கோள்) ஏழுடையான் பொழில் (திருக்கோவை 7)

  8.  சித்தாந்த மரபு கண்டன கண்டனத்துள் “புவனங்களுக்கு மளவில்லை; ஆன்மாக்களுக்கு மளவில்லை; ஆகையால் ஒரு புவனத்துக்கோரான்மா விருக்குமென்ற தாயிற் றென்றீர்; ‘எண்ணீங் குயிரு மளவி லண்டமு முளைவின்றி விளைத்து’ என்புழியும் இவ்வாறே குற்றங்கூறுவீராயினீர்; சொற்குறிப் பறிய வல்லார் நும்போலே யாரையுங் கண்டிலம்” (கண்டனம் 30) எனச் சிவஞான யோகிகள் கூறினர்.

  5.  அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்க, மளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன- (திருவா. திருவண்ட, 1-4)

  9.  உளைவின்றி விளைத்தும்- பா. வே.

  10. விச்சதின்றியே விளைவு செய்குவாய்- (திருவா. சதகம்96)

  11. படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை, காப்போற் காக்கும் கடவுள்- (திருவா. அண்ட 13-4)

  12. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே- *(திருவா. திருவெம்பா9)

  13. தோற்றங்கே டில்லாதான்- (ஞானசம். 2: 42-9)

  14. இளிபடு மின்சொலினார்கள்- (ஞானசம். 2: 68-3) “இளிசேர் தீஞ்சொல்” -(ஞானா.54: 27)

  15. ஓளிமாள் திருநகை- பா.வே.

  16. மரகதக் கொடியுடன் விளங்குந் தெள்ளு பேரொளிப் பவள வெற்பென விடப்பாகம், கொள்ளுமா மலையாள் (பெரிய புரா, திருநா. 379.)

  17. இவ்வுரைத் தொடக்கத்தே “விரும்பித் தொழுவார் வினைதீர்க்கு முக்கட் கரும்பிற் பிறந்த களிறு” என்றொரு குறட்பா அச்சுப் பிரதியிற் காணப்படுகிறது; அதன் அடிக்குறிப்பு, “இக்குறள் உரையாசிரியர் கூறிய துதி” என்று கூறுகிறது, கிடைத்த ஏடுகளில் இது காணப்படவில்லை.

  18. கருமை- பெருமை.

  19. சுவர்க்கத்தை யளாவி யோங்கிய- உரை வேறுபாடு.

  20. ஏழிரும் பொழிலும் என்பதை எழு இரும் பொழில் என வினைத் தொகையாகக் கொண்டு இவ்வுரைகாரர், எழப்பட்ட பெரிய இருநூற்றிருபத்துநான்கு புவனங்களையும் என்பது குறிக்கத்தக்கது. பொழிலென்பது புவனத்தைக் குறித்து நிற்றலை, “தேவர்கோவறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கு மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன்” (திருவாச.30) என மாணிக்கவாசகர் கூறுமாற்றாலும் அறிக.

  21. விரிந்த எழுவகைத் தீவுகளையும் - உ. வே.

  22. அட்டகுல பருவதங்களாவன;- நிடதம், ஏமகூடம், இமயம், நீலம், சுவேதம், சிருங்கம், கந்தமாதனம், மாலியவான் என்பன.

  23. புவனம் இருநூற்று இருபத்துநான்குமாவன:- நிவிர்த்தி கலையிலடங்கிய கபாலீச புவனமுதல் பத்திர

  காளியீறாக வுள்ள நூற்றெட்டும், பிரதிட்டாகலையிலடங்கிய அமரேச முதல் சீகண்டமீறாகவுள்ள ஐம்பத்தாறும், வித்தியாகலையி லடங்கிய வாமதேவபுவன முதல் அங்குட்டமாத்திர புவன மீறாகவுள்ள இருபத்தேழும், சாந்திகலையிலடங்கிய சதாசிவ புவனமுதல் வாமையீறாகவுள்ள பதினெட்டும், சாந்தியதீத கலையிலடங்கிய அநாசிருதை முதல் நிவிர்த்தி யீறாகவுள்ள பதினைந்துமாக இருநூற்றிரு

  பத்துநான்காம். இது சிவஞானமாபாடியத்திற் கண்டது. இவற்றை அநாசிருதை முதல் கபாலீசருத்திர புவனமீறாக இரு நூற்றிருபத்துநான்கென்றும் வழங்குப. இம்முறையிற் சிறிது வேறுபட வுரைப்பதுமுண்டு; அவற்றைச் சிவப்பிரகாசத்து மதுரைச் சிவப்பிரகாசருரையினும், சிவநெறிப் பிரகாச வுரையினுங் காண்க.

  24. உயிர், ஈண்டு ஆகுபெயராய்த் தேகங்கண் மேனின்றது. “ஏனைப் புவனமும் எண்ணீங்குயிரும், தானே வகுத்ததுன்றமருகக் கரமே” (சிதம். மும். 2:3 -4) என்று குமரகுருபரரும் கூறுதல் காண்க.

  25. அரூபமான மாயையிலே- உ. வே.. “வித்தும்……………. பொருளின்றியே” என்பதுவரையுள்ள பகுதி சில ஏடுகளில் இல்லை.

  26. தோற்றுவித்தும்- உ.வே.

  27. அயன் அரிகட்குச் சிவனே காரணன் என்பதை, “நாரணனயனை யீன்று மயனு நாரணனை யீன்றுங், காரணமொரு வருக்கங் கொருவர் தாமிருவருக்கும், வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற, ஆரணமுரைக்கும், பக்கத் தவர்களு மடைந்தா ரன்றே” (சிவ.சித்தி. பர. பக். 277) என்பதனாலு மறிக.

  28. படைத்தல் முதலிய தொழில்களைச் செய்தானாயினும் அச் செய்கையால் தான் சிறிதும் விகாரமடையா னென்றற்குத் “தளரா முன்னோன்” என்றார். “எல்லாம் வருவிப்பன் விகாரங்கள் மருவான்” (சிவப்.17) என்பதினாலும், “விந்துவவத்தை” யென்று தொடங்கும் அகவலிற் (ஞானா. 60) கூறப்படும் கடாவிடைகளாலுமறிக.

  29. இப்பகுதி, “பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்ற திருவாசகக் கருத்தை அடியொற்றி நிற்றல் காண்க.

  30. வளப்ப முடைத்தாகிய சனன மரணம்- உ.வே.

  31. பிறப்பிறப்புக்கள் காரண காரியத் தொடர்ச்சியாய் கரையின்றி வருவனவாதலின், அவற்றைப் “பாரம்பரிய மாய் வரும் வளப்ப முடைத்தாகிய செனனமரணம்” என்று உரைக்கின்றார்.

  32. கிருபை யெனப்படாநின்ற அருட்சத்தியாகிய- உ. வே.

  33. கிருபையென்னும் மகத்தாகிய- உ.வே.

  34. மாதர்- காதல் (தொல். சொல். உரி30)

  35. சிந்தையால் சிந்திக்க வொண்ணாததனைச் சிந்தை செல்லாதது என்பது வழக்கு; “வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்து’ எனப் பரிமேலழகரும் உரைத்தல் காண்க. சிவ பரம்பொருளைச் செழுங்கிரி யென்கின்றா ராதலின், அதற்கேற்ப, “சிந்தை செல்லாச் செழுங்கிரி” யென்றார்.

  36. மனத்தால் அளவிடுதற்கரிய அழகிய பருவதத்தின்- உ.வே.

  37. பொன்னிறக் குன்றத்தில் பச்சைப் பசுங்கொடி படரவுண்டாகும் காட்சி, மிக்க அழகுடைத்தாதல்பற்றி, வளங்கொள என்பதற்கு “அலங்காரமுடைத்தாக” என்று உரைத்தது பொருத்தமாகவுளது.

  38. இசை ரசத்தால் கீழ்ப்படவும் -உ.வே.

  39. ஒளிமாள் திருநகை என்று பாடங் கொண்டதற்கேற்பத் திருநகைக்கு மற்றையவொளிகள் கெடவும் எனக் கூறிய உரை வேறுபாடும் உண்டு.

  40. கருணையாகிய அறமே தனக்கு உருவாகவுடையவளாதலின் அறவோள் என்றாராக அதற்கு “காருணியமாகிய தற்சொரூபமுடைய உமாதேவி” என்று உரை கூறுகின்றார்; இறைவனையும் “அறவன்” (திருஞான ஆரூர் 5) என்று சான்றோர் கூறுப.

  41. உண்டாகிய காருணியமே தனக்குச் சொரூபமாகவுடைய - உ. வே.

  42. துறவின் முடிபொருள் சிவமாந்தன்மைப் பேறாதலின், பரமானந்த மருளித் தானாக்கித் தன்றன்மையைக் கொடுத்தல் உரைக்கப்பட்டது; “பத்திப்பேர் வித்திட்டே பரந்த வைம் புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவாப் பகையலும் வகைநினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய் மூடாவூடா நாலந்தக் கரணமம் ஒரு நெறியாய்ச், சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (திருஞான. 126:7) என்பது காண்க.

  43. பற்றற்றோர்க்குத் தன்றன்மையைக் கொடுக்கும்- உ. வே. சிவன் உளத்தே தோன்றித் தீ யிரும்பைச் செய்வது போல் சீவன் தன்னைப் பந்தனையையறுத்துத் தானாக்கித் தன்னுருவப் பரப்பையெல்லாம் கொடுபோந்து பதிப்பனிவன்பாலே “*(சிவ. சித். சுபக். 9: 12) பரமானந்த மருளுதலும் தானாக்குதலும் தன் தன்மையைக் கொடுத்தலும் இடையறவின்றி ஒருங்கே உடனிகழ்வன வெனவறிக.

  44. “கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன ……… கொச்சை நாதன் குரை கழலே” - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 32; “என்றும் அடியவ ருள்ளத் திருப்பன ……….நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ……….சைவ சிகாமணி பொன்னடியே” - ஆளுடை பிள்: திருமும்மணிக் கோவை 3. பாக்கள் தன் திருவடியைப் பொருளாகக் கொண்டியல்வது அவற்றிற்கு மாண்பினைப் பயக்கின்றதென்பது தோன்றப் பாமாண் சேவடியென்றா ரென்றற்குப் “பாக்களுக்கு அழகைக் கொடுக்கும் சீர்பாதம்” என்று உரைக்கின்றார்.

  45. இது வித்தியானத்துறை விநாயகர் துதி என்று செப்பறை மடத்துப்பிரதி கூறுகின்றது.

  46. “பிறைமருள் வான்கோட் டண்ணல் யானை” (அகம் 115:13) “வானெழு பிறைமருப் போடைந்து கை நிலை பெற்ற வெற்பனான்” - அறம் வளர்த்தநாயகி பிள்ளைத் தமிழ்.

  47. ஒண்கேழ் என்பதில் ஒட்பம் ஒளியையும், கேழ், வடிவையும் குறித்து நிற்கின்றன. “ஒள்ளெரி யுண்ணு மிவ்வூர்” (சிலப் 18:53) என்ற விடத்து ஒட்பம் ஏவல் கேட்டலேயன்றிச் சுடுதற் றொழிலும் சுட்டி நிற்பதுபோல.

  48. எண்கடி- பா. வே.

  49. விநாயகரும் என்றும் குன்றா இளமையுடைய ரென்றற்கு “யாண்டு பல நிரம்பினும் இளமையொடு கெழீஇ” என்றார்.

  50. அழகும் ஒளியுமுடைய தொரு- உ. வே.

  51. யானையுறுப்புக் கழுத்திற்கு மேலன்றி யின்மையின், கன்னம் கபால மென்னும் இருவகை மதமுண்மை தோன்ற, “இருமதக் கடவுள்” என்றார். “மேவற்கரிய இருமதத் தொற்றை மருப்பின் முக்கண்………… யானையையே” (நம்பி. இரட். 12)

  52. ஆன்மாக்கள் - உ.வே.

  53. “ஞானம் வினைதீரி என்றி விளையாவாம்” (சிவ. போ. சூ. 12 புறநடை உதா.) என்பவாகலின், ஞான மாமதம் தருக்கி ஆனா வினையுகச் சீறும் என்றார்.

  54. கன்மங்க ளொழியும்படி -உ.வே.

  55. கதுப்பையுடைய யானை முகத்து- உ. வே.

  56. “நெறித்து” எனவே, முடிவதும் முறை பிறழாது முடிந்து நிலைத்த இன்பத்தைத் தரும் என்பது பெற்றாம். “விநாயகனேயென்று மெய்ம்மகிழ, வல்லார் மனத்தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே” (மூத்த நாயனார் இரட். மா.20) என்று சான்றோரும் கூறுதல் காண்க.

  57. இத்தொடர் சில பிரதிகளில் இல்லை. “கிரமேண நடந்து சித்தியாம்” என்று ஒரு பிரதியில் காணப்படுகிறது.

  58. தாதரு கடுத்த; தாதுக் கடுத்த; தாதுகு பெடுத்த- பா. வே. இவ்வடி பிரதிதோறும் வேறுபட்டுக் கிடக்கின்றது.

  59. புழைக்காற் சரோருகத்து- பா. வே. “உழைக்கவின் றெழுந்த புழற்காற் றாமரை”

  (பெருங். 1: 48: 148)

  60. விழையென - பா.வே.

  61. வின்றே -பா. வே.

  62. மிக்க ஒளியையுடைத்தாகிய பூரண சந்திரன் இயல்பையும் இடமுடைத்தாகிய பொகுட்டையும்- உ.வே.

  63. தெய்வத் தாமரை யென்றற்குக் “கதிர்விரி பொகுட்டு” எனப்பட்டது.

  64. தாதொடு சேர்ந்த மேம்பாட்டையுடைய வெண்மடலையும் - உ.வே.

  65. தவிசேறி, ஒலிப்ப, விழைய, மொய்ப்ப, விழைபென, கதிர் பரப்பி, துயர் அகற்றி, தொடங்க, நுவல, மங்கையர் பழிச்ச, இருந்த ஆதிநாயகி என இயைக்க.

  66. முன்னே “தாதுகு பெடுத்த வெண்மடற்” (ஞானா.3;2) சரோருகம் என்றாராகலின், தாது படிந்துண்டு வண்டினம் முரலும் சிறப்பை, “அளிக்குல மொலிப்ப” என்றார்.

  67. “நலந்தரு காம நல்குமன் னயந்தே” (ஞானா. 63: 50) என்பதற்குக் கூறிய வுரையிலும் ஈண்டுக் கூறியது போலவே, போக மோக்கங்களை அபேக்ஷிக்கத்தக்கவெனச் சிறப்பித்துக் கூறுகின்றார்.

  68. தன்னை விரும்பி வழிபடுவோர், வேண்டியாங்குப் பெற உதவு முகத்தால் ஏனையோரும் வழிபட்டு அவற்றைப் பெறச் செய்யும் நலத்தை வியந்து கூறுதலின், “தன்னை ஆசிரயிப்பதை வேண்டினாற்போல” என்றார். எனவே, அறிவுக்கொடையின் அருமை யுணர்த்தப்பட்ட தாம்.

  69. ஆபரணமாகக் கிருபையாகிய- உ. வே.

  70. மருட்சி காரணமாக அறியாமையும், அதுவே ஏதுவாகப் பல்வகைத் துன்பங்களும் உண்டாதல்பற்றி, “மருள் துயர்” என்றதற்கு “அஞ்ஞானத்தால் வரும் துக்கங்கள்” என்றார். “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்” (குறள் 360) என்று சான்றோர் மயக்கத்தை நோய்க்குக் காரணமாகக் கூறுமாறு அறிக.

  71. கின்னராதிகள் இசைப்புலவர்களாதலின் தத்தமக்குரிய முறையிலே வாகீசுவரியின் குணஞ் செயல்களைப் பண்ணமைந்த பாடலைப் பாடிப் பரவுகின்றனரென வறிக.

  72. “இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல” (முருகு.182) என்பதும் இதற்கு, “உதயகாலத்தும், மத்தியானகாலத்தும், அத்தமன காலத்தும் தாபனம் அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய” (முருகு. வேறுரை) எனவரும் உரையும் எண்ணற்பாலன.

  73. தெய்வ மகளிர் அளவின்றியே போற்ற - உ.வே. “வானுறை மகளிர் நலன் இகல் கொள்ளும், வயங்கிழை கரந்த வண்டுபடுகதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ” (பதிற்: 14. 13-5) என்று சான்றோர் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

  74. “இருவிழியும் அமையா வென்றார் அந்தர வானத்தவ ரெல்லாம்” - (கம்ப. இரா. மிதிலைக் காட்சி 25)

  75. விழைவற வெகுண்டோர் விழைய விழைபென” (ஞானா. 3;4) இருந்தாளாயினும் அருள்புரிந்து மருள் நீக்கியருளும் மாண்பு, கின்னராதிகளும் விப்பிரரும் இமையா மங்கை யரும் அமையாது பரவிய போது மேம்பட்டு நின்று, அக்கின்னரர் முதலாயினாரையடையும் குற்றங்கள் அறவே யடையா வாறுகாக்கும் முறைமை கருதி, “தீதற இருந்த” என்றதற்கு, “குற்றமற எழுந்தருளியிருந்த” என்று உரைத்தார்.

  76. கழல் என்றது வீரகண்டையையன்று; திருவடியென்னும் பொருட்டு.

  77. அநந்ந நித்திய மோக்ஷம் பெறுதல் ஒரு பொருளோ அன்று - உ.வே.

  78. இது குறிப்பெச்சம்.

  79. ஐம்புல வேழத்தின் வெந்தொழில் வீய- பா. வே.

  80. னுறீஇத்- பா. வே.

  81. ஒன்றின் துயர் கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம் (புறம்.5. உரை); இனி, “உயிர்கட்குப் பசுத்துவத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதற்கண் ணுளதாகிய இரக்கம்” (சிவஞானமாபாடியம். சூ.5. அதி. 2: மேற் 3. உரை) என்பது ஈண்டைக்குப் பொருந்தும்.

  82. நல்லதன் நலனும் தீயதன் றீமையு முள்ளவாறுணர்தல்- (தொல். பொ. 247 நச்.) “உயர்ந்த சாத்திரங்களை யையந்தீரக் கற்ற கல்வி ஞானம்” (ஞானா 24: 18 உரை)

  83. ஈண்டு “இருள்தீர்பொறை” யென்ற ஆசிரியர் பிறாண்டு, “பெரும் பொறை” யென்று கூறினாராக, ஆண்டு அதற்கு உரை கூறு மிடத்து, இவ்வாறே, “பொறுத்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்தாற் சகித்தல்” என்று கூறுதல் காண்க. (ஞானா 24: 4 உரை)

  84. பிறர்க்கு அகிதம் வாராதபடி மெய் சொல்லுதல்- உ.வே. “வாய்மையெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” (குறள் 291)

  85. ஞானா 24:12-15 உரை காண்க.

  86. “விழுமஞ் சீர்மையும் சிறப்பு மிடும்பையும்” (தொல். சொல். 353)

  87. “அழுக்காறின்மை” (ஞானா: 24) என்புழி, “பிறர் குலதன வித்தைகளைக் கண்டு பொறாமை யில்லாமை” என்று உரைப்பர்.

  88. கண், வாய், மூக்கு. செவி, மெய் என்ற ஐந்தும்- புத்தியிந் திரியம்.

  89. வாய், கை, கால், பாயு, உபத்தம்- கன்மேந்திரியம்.

  90. புண்ணியத் திருமேனிக்குப் பூண் பாச வைராக்கியம் துகில் குரு பத்தியும், மாலை ஞான சமாதியுமாகக் கொள்க. மேலே அருள் முதல் அழுக்காறின்மை யீறாகக் கூறிய பத்துக் குணங்களும் ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களாக உருவகஞ் செய்யப்படுகின்றன. இனி, ஆசிரிய மாலை யுடையார், குடியிப்பிறப்புத் துகிலாகவும், பனுவல் மாலை யாகவும், ஒழுக்கம் பூணாகவும் குறித்து, “குடிப்பிறப் படுத்துப் பனுவர்சூடி, விழுப்பே ரொழுக்கம் பூண்டு” (புறத் 827) என்று கூறுவர்.

  91. திருமேனி போன்ற - உ.வே.

  92. “குணமென்னுங் குன்றேறி நின்றார்” (குறள். 29) என்பதற்குத் “துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின் கண்ணின்ற முனிவர்’’ என்று உரைகூறிய பரிமேலழகர், “சலியாமையும் பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக வுருவகஞ் செய்தார்” என்று கூறுவதும், கல்வியைப் பொற் குன்றத்தோ டொப்பித்துக் கூறும் கல்லாடர், “நிலையினிற் சலியா நிலைமையானும்” (கல் 13) என்று கூறுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற்குரியன.

  93. காமம் உற, அம்முக்கெட்டுக் காமுற என நின்றது; காமம்- விருப்பம்; “இல்லோன் இன்பம் காமுற்றாங்கு” (குறுந். 120) என்றாற் போல.

  94. விருப்பொடு வீக்கி மேற்கொண்டு - உ. வே.

  95. “காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கியாங்கு” (கலி. பாலை 1); “யானை நாதத்திற் றோன்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு” என்பர் நச்சினார்க்கினியர்(சீவக. 748 உரை).

  96. இவ்வாறு ஞானசம்பந்தரை நம்பியாண்டார் நம்பி “தண்டமிழ் விரகன் சைவசிகாமணி” (திருக்கலம் 37) என்று பாராட்டுவர்; அவர்க்குப்பின் உமாபதி சிவனார் முதலிய சான்றோர், மெய்கண்ட தேவர் முதலிய பெருமக்களை, “எம்மை யாண்ட சைவசிகா மணி” (சிவப். 6) என்பது முதலாகப் பரவுவாராயினர்.

  97. பரமானந்தமாகிய செல்வத்தினையுடைய மகாமுனிவன்- உ.வே.

  98. “இருணெறி மாற்றித்தன் றாணிழ லின்ப மெனக்களித்தோன் அருண்மொழித் தேவன்நற் கோடலம் பாகையதிபன் எங்கோன் திருநெறி காவலன் சைவ சிகாமணி சில்சமய. மருணெறி மாற்ற வரும் பர மானந்த மா முனியே” எனவரும் இந் நூலாசிரியர் பாடிய தனிச் செய்யுளால், அருண் மொழித் தேவ ரென்பது இயற் பெயரென்றும், பரமானந்த முனிவர் என்பது தீக்ஷாநாமம் என்றும் அறியலாம்.

  6.  உளம், ஈண்டு ஆன்மாவின்மேற்று; “கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டுள்ளம், இட்டதொரு பேரழைக்க என்னென்றாங்கு” (சிவ. போ. சூ. 2உதா) என்புழிப் போல. சிவனென்றும் ஆசாரியனென்றும் வேறாகக் கொள்ளாது இருவரும் ஒரு முதலே யெனக்கொண்டு வழிபாடு புரிவது சித்தாந்த சைவத்தின் செம்மை

  நெறியாகும். “என்றும், இறவாத இன்பத் தெமையிருத்த வேண்டிப், பிறவா முதல்வன் பிறந்து நறவாருந், தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று, பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம் உண்டியுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக், கொண்டு மகிழ்ந்த குணம்போற்றி” (போற்றிப் பஃறொடை, 40-42) என்றும், “கண்ணுதலும் கண்டக் கறையு மறைத்தருளி, மண்ணிடையின மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய் நல்லூர், மெய்கண்டான் என்றொரு கால் மேவுவரால் வேறின்மை, கைகண்டார் உள்ளத்திற்கண்” (இருபா. 1) என்றும் சான்றோர் தம் ஆசிரியரைச் சிவமாகக் கருதி வழிபடுமாறு காண்க. தோத்திரம் பண்ணியதன் பயனாகத் தம் முள்ளத்தே முதல்வன் புலப்படக் கண்டு பேரின்பம் நுகர்தலின் ‘உளமலி யுவகை யுற்றனம் பெரிதே”என்று கூறுகின்றார்.

  7.  புத்தி பூரணமான மகிழ்ச்சியை; சிவானந்தானுபவத் தால் வரும் சந்தோஷத்தை - உ. வே.

  8.  இக்குறிப்பு அச்சுப்பிரதியிலும் செப்பறைப்பிரதியிலும் இவ்விடத்தே காணப்படுகிறது; ஏனைப் பிரதிகளில் 4ம் அடியின் உரை விளக்கமாகக் காட்டப்படுகிறது.

  99. நோக்கினன் - பா. வே.

  100. வருபடை- பா. வே. “வருபடை தாங்கிய கிளர்தா ரகலம்” (புறம் 282).

  101. செச்சைக் கண்டத் தொத்தூனைச் செச்சை யென்றே வழங்குதலு முண்டு; “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத், தன்னோரன்ன விளையர்” (புற.285) என்று சான்றோர் கூறியிருப்பது காண்க.

  102. “எம்பாடாதல் அதனினுமரிதே” - (நண்.330).

  103. னடைத்தே - பா. வே.

  104. தமிழிலக்கண விலக்கிய மரபு- உ.வே.

  2.ஞானா. 8:1 -2.

  3.  உரை- புகழ். “உரைசால், அந்துவஞ் சாத்தனும் ஆதனுழிசியும்” (புறம் 71) என்றாற்போல. “புரைய மன்ற புரையோர் கேண்மை” (நற் 1 ) என்றாற்போல. ஈண்டும் வேதாகமங்களைப் கற்றுணர்ந் துயர்ந்த பெரியோர்களைக் குறிப்பதாயிற்று.

  4.  மிகுந்த வசனமாகிய பதினெட்டுப் பாடையு மிக வுணர்ந்த -உ. வே.

  5.  இச்சொல் சில பிரதிகளில் இல்லை.

  6.  பாப்புனைதலின் அருமையும், எனது சிறுமையும் தோன்றவே திகைப்பு ‘உண்டாவதாயிற் றென்றற்குப் “பார்த்தவாறே திகைத்த விடத்து” என்றார். இனி, அத்திகைப்பு நீங்குமாற்றினை இரண்டு எடுத்துக் காட்டுக்களாற் குறிக்கின்றார்.

  7.  வேதம் ஏட்டில் எழுத்தால் எழுதப்படாமல் கேள்வி வழியாக வருவது பற்றி “எழுதாக் கேள்வி’ யென்றார். இக்கருத்தே பற்றி ஏனைச் சான்றோரும், இதனை “எழுதாக் கிளவி” யென்றும் “எழுதா மறையென்றும் வழங்குப. “ஆற்ற வழியுமென்றந்தணர்க ணான்மறையைப், போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்” (திருவள். மா. 15) என்று கோதமனார் கூறுதல் காண்க.

  8.  பரமேசுவரன் முதலிய சொற்கள் சில பிரதிகளில் இல்லை; வேத வாக்கியமும் ஒரு சத்தம் என்பதுமட்டில் சில பிரதிகளில் உளது.

  9.  பாவகாரி- பாவத்தைச் செய்பவர். “பாவ காரிகள் பார்ப்பரிதென்பரால்” தேவ தேவன் சிவன்பொருந் தன்மையே” (திருநா. 100: 5) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  10. “தார் தாங்கிச் செல்வது தானை” (குறள். 767) “வருதார் தாங்கி அமர்மிகல் யாவரு” (புறம்62) என வருவன காண்க.

  11. அழகுண்டாக வருகிற படையைத் தாங்கிய- உ. வே.

  12. மாலையையுடைத்தாக்கிய மார்பையுடைய சத்துரு பக்கத்தார் மேல் எறியும்- உ. வே.

  13. படைவிரர் ஏந்தும் படைபலவற்றுள்ளும் வேற்படை சிறப்புடைய தாகலின் “எறிவேல் இளைஞர்” என்றார்; “கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்தல் இனிது” (குறள் 277) என்பது வீரரது உட்கோள்.

  14. செய்தருளுதலும் வாழ்க்கை - உ. வே. இங்கே “கன்மச் சேத வுபாயத்தால் ஞானமுண்டாக வாழும் வாழ்க்கை யென்றவாறு” என்றொரு தொடர் சில பிரதிகளிற் காணப் படுகிறது.

  15. “பொய்ப்புலன்களைந்தும் நோய் புல்லியர் பா லன்றியே, மெய்ப் புலவர் தம்பால் விளையா வாம்” (நன்னெறி 11) என்று சிவப்பிரகாச சுவாமிகள் கூறுவர். புலன்கள் ஆசைக்குக் காரணமாய் உயிரைப் பிறப்பிறப்புகட் குள்ளாக்கித் துன்பஞ் செய்வது பற்றிப் “புலப் பகை” யென்றும், அவற்றை வென்று வாழ்தலே வாழ்க்கை யென்றற்கு “புலப்பகை தாங்கிப் பிறப்பற வெறியும் அறப்பேர் வாழ்க்கை” யென்று உரைத் தார். “வென்றவைம் புலனால் மிக்கீர் (பெரியபு, நீலகண். 42) என்பார் சேக்கிழார் சுவாமிகள்

  4.  வெள்ளாட்டின் கழுத்திற் றொங்கும் அசகளத்தம், அதற்கு இன்பக் கருவியாகவோ துன்பக் கருவியாகவோ ஒரு பயனும் செய்யாது உடலின் ஒரு கூறாய்க் கிடப்ப தன்றி வேறன்மையின், அதனை எடுத்தோதினார்.

  தர்மார்த்த காமமோக்ஷாணாம்

  யஸ்யைகோஷபி ந வித்யதே!

  அஜாகளஸ்தனஸ்யேவ தஸ்ய ஜன்ம நிரர்த்தகம்

  என்று இதோபதேசம் கூறுகின்றது (ஆட்டின் கழுத்தில் தொங்கும் அசகளதம் வீணாயொழிவது போல அவனுடைய பிறப்பும் வீணே கழிகிறது என்பது பொருள்).

  5. அதர்போல; அசகளத் ததள்போல- உ. வே.

  7.  தாவா- எதிர்மறை வினையெச்சம் ஈறுகெட்டு நின்றது.

  8.  “இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவும், நன்பகலமையமு மிரவும் போல, வேறு வேறியலவாகி மாறெதிர்ந்துள” (அகம் 327) என்று பண்டைச் சான்றோரும் கூறுப.

  9.  ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம்.

  10. யாமுரைக்கும் விரசமான சொல்லும்- உ. வே.

  11. ஞானவான்களின் செயற் சிறப்பை, எம்போல்வாரது செயலின் சிறுமையும் புன்மையும் நன்கு விளங்கச் செய்தலால், அவர் சிறப்பே மிகுமென்றற்கு, “தம்முடைச் சிறப்பே” என்றார்.

  12. சிறப்பைக் கொடுக்கும்- உ. வே.

  13. இங்ஙனம் ஞானவான்கள் தாம் அருளிச் செய்யும் நூலுக்குச் சிறப்புக் கொடுக்கு மதனால் உ.வே.

  14. இவர்கள் சொல்லும் செயலும் நம் சிறப்பு மிக்கு விளங்குவதற்குத் துணைசெய்கின்றனவென வெண்ணிக் கொள்ளும் உவகையால், எம்மை அருளுவது ஒருதலை யென்பார், “அவரிடத்தும் அனுக்கிரகம் பெறுதலுடையேம்” என்றார்.

  15. அஞ்ஞானிகள் சிற்றினமாதலாலும், “சுற்றமாச் சூழ்ந்து விடுதல்” (குறள் 451) அதன் இயல்பாதலாலும், அவர்பால் அங்கீகாரம் பெறுவது அரிதன்றென்றற்கு, “அஞ்ஞானி களிடத்தும் ……..முடிவில்லை” என்பாராயினர்.

  16. வியசனமில்லை- உ.வே.

  17. ஏழாவதன்கண் நான்காவதன் உருபு வந்து மயங்கிற்று; “நாணற் கிழங்கு மணற் கீன்ற முளை” (அகம். 212) என்றாற்போல.

  18. அனுக்கிரகம் பெறுதற்குரிய - உ.வே.

  19. நான்கு வருக்கத்துக்குமாம் - உ. வே.

  20. இத்தொடர் சில பிரதிகளில் காணப்படவில்லை; சிலவற்றில் பொருளிடத்துக் குற்றமில்லை யென்பது

  மட்டில் காணப்படுகிறது. இவ்வாறே, பொருள் குற்றமில்ல தாதலின், அதனைக் கூறும் சொற்களிடத்துக் காணப்படும் குற்றங்களைப் பொருளாகக் காண்டல் வேண்டா என்ற கருத்தமையப் பல பெரியோர்கள் கூறியுள்ளனர். ‘செப்பலுற்ற பொருளின் சிறப்பினால், அப்பொருட் குரையாவரும் கொள்வரால், இப்பொருட்கென் னுரைசிறி தாயினும், மெய்ப்பொ ருட்குரி யார் கொள்வர் மேன்மையால்” (பெரியபு. பாயி. 7) எனச் சேக்கிழார் பெருமானும், “புன்மைச் சொல்லேனும் புராணப் பொருளைப் பொழிந்தால், நன்மைக்

  கண் வைத்தற்கினி நாமிரங்கும் படித்தோ” (மேரு.5) என்று வாமன முனிவரும் பிறரும் கூறுவனகாண்க.

  21. முற்றுமுணர்தல் என்பது பரமசிவனுடைய எண்குணத்துள் ஒன்றாதலால், அப்பெற்றியோன் அருளிய ஆகமப் பொருளில் குற்ற மில்லையென்பதை யாப்புறுத் தற்காகவே, “பரமசிவ னருளிச்செய்த திவ்வியாகமப் பொருளாதலால்” என்றுரைத்தார்.

  22. “வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக், கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே” (சிலப். ஆய்ச்சி) “மந்தர மத்தென” என்பது முதல் “உவரி யமிழ்த மென்ப” என்பதுவரையுமெடுத்து, “ஞானக் கடலமு தருந்தினோரே” (சிவப். 98) என்பதன் உரைவிளக்கத்தில், ஞானத்தைக் கடலென்றது, “அந்தச் சமுத்திரம்போலே அமுதம் விளைகையினாலும் அப்படிச் சொன்னதென வறிக” என்றதற்கு ஆதரவாக இதனைக் காட்டினர் மதுரைச் சிவப்பிரகாசர். “பங்கமார் கடலலறப் பரு வரையோடரவுழலச், செங்கண்மால் கடையவெழு நஞ்சருந்தும் சிவமூர்த்தி (ஞானசம். 324:5) என்றும். “நாகந்தான் கயிறாக நளிர்வரை யதற்கு மத்தாகப், பாகந்தேவரோ டசுரர் படுகடலளறெழக் கடைய, வேகநஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட, ஆகந்தன்னில் வைத்தமிர்த மாக்குவித்தான் மறைக் காடே” (ஞானசம்.227:7) என்றும் “பருவரை யொன்று சுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த், திருநெடுமால் நிறத்தை யடுவான் விசும்பு சுடுவானெழுந்த விசை போய்ப், பெருகிடமற்றிதற்கோர் பிதிகார மொன்றை யருளாய் பிரானே யெனலும், அருள் கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட லவனண்டரண்ட ராசே” (திருநா. 14:1) என்றும் சான்றோர் இவ்வரலாற்றை யெடுத்தோதுதல் காண்க. இக்காட்டுக்

  களால் தேவரும் அவுணரும் கடல்கடைய மாட்டாராகச் செங்கண்மால் கடைந்ததும், நஞ்சமெழுந்ததும் தேவர் இறைவனை இறைஞ்சியதும், அவன் அருள் கொண்டு நஞ்சினை யயின்றதும் இனிது விளங்குதல் காண்க.

  23. லாற்றா நாட் செல - பா. வே.

  24. கூப்பிட்டன்று - பா. வே.

  25. யெழில் பெற - பா.வே.

  26. “முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமே”- (திருநா. 204: 10)

  27. இரியல்போக- “அரிபுகு பொழுதின் இரியல் போகி” (பெரும்பாண். 202.)

  28. அஞ்ஞானம், அச்சானமெனச் சிதைந்தது; அச்சான ஆழி, அச்சானாழி யெனவந்தது வடநூன் முடிபு; பிறாண்டும் “அறிவனை விநாஅ” (ஞானா. 58.4) என வடநூன் முடிபு கூறுதல் இவ்வாசிரியர்க் கியல்பு.

  29. அவுணர் தலைப்பக்கமும் தேவர் வாற்பக்கமும் பற்றிக் கடைந்தனரென்று பாகவத புராணம் கூறுகின்றது.

  30. அசுரர்களும் தேவர்களும்- உ.வே.

  31. கூடிப் பேர்க்கப் புக்கவிடத்து- உ. வே.

  32. தேவரும் அசுரரும் கூடிக்கடைந்தகாலை எளிதில் அக்கடல் கடையப் படமாட்டாமையின், அனைவரும் இளைத்தனர்; முதற்கண் அவர்கள் வாசுகியைப் பிணித்துப்பற்றிக் கடைந்தபோது மந்தரமலை யசையாது நின்றதென்றும், அதனால், இருதிறத்தாரும் இளைத்தனரென்றும் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. அதனை, “பொறியரா இருபுடைப்பற்றித் தருவலி மிகையால் ஈர்த்தனர் அசலம் தன் பெயர் நாட்டிய தன்றேனூ (காஞ்சி. மணிகண்9) என்பதனாலறிக. மற்று பாசுவதபுராணம், வாசுகியைப்பற்றிக் கடையுங்கால், அதன் வாயினின்றுக்க நஞ்சின் வெம்மை யாற்றாது இருதிறத்தாரும் இளைத்தனரென்று கூறுகிறது; ஈண்டு வருஞ் சொற்றொடர்களையே யமைத்துச் சிவஞான முனிவர். “இயக்க லாற்றாமை, இளைத்த தானவரை எதிருறுங் கடவுளர் நோக்கி வியத்தக வெழுந்து நீரினி விடுமி னென் றெய்தி வாசுகியை, வயத்துடன் பற்றி யீர்த்தன ரவரும் வலியிழந் தெய்த்தனர் நின்றார்” (காஞ்சி. மணிகண். 10) என்று கூறுவது காண்க.

  33. தனாது -தனது என்பதிலுள்ள அதுவின் விகாரமே ஆதுஎன்பது என்பர் நேமிநாதவுரைகாரர். (நேமி. சொல். 19 உரை.)

  34. ‘‘வழிந்தநறைத்தா ரணி திணிதோள் வருந்த வாங்கி யானாது, தழைந்த மிடலாற்கடைந்திடலும்” என்றும், ஆமுழிவாயலறிப் பொங்க வாழியந் தடக்கையம்மான் பாழிவா யரவு வாங்கிப் படுபலி காட்ட லோடும், ஊழிவாய் நெருப்போ டொப்ப வுயிரெலாமுடிக்கு மென்ன, ஏழொடெழுலகு மஞ்ச வெழுந்ததுகாளகூடம் (பாகவ 8 கடல் கடை, 17,20) என்றும் ஆரியப் புலவர் கூறுவது காண்க.

  35. முழுவலி முகுந்தன் தனாது எறுழ்த்தோள் என்றியைத்து, முழுவலியையுடைய விட்டுணு தனது மிகவும் வலியுடைத்தாகிய தோளானது என்று உரைக்கும் உரை வேறுபாடு முண்டு.

  36. கூப்பு இட- முழக்கத்தைச் செய்ய; அழுகைக் குறிப்புத் தோன்ற“கூப்பிட” என்றார். உவரி கூப்பிட, அமிழ் தம் எழுந்தது என இயைத்துக்கொள்க.

  37. “அமிர்தம் வந்தது பாற்கடலிலல்ல; அமிர்து கடைந்தது லவண சமுத்திரத்தென வுணர்க”

  (284 உரை) எனத் தக்க யாகப் பரணியுரைகாரரும், “வங்கக் கருங்கடல் நஞ்சுண்டார் போலும்” (திருநா. 235:4) என்று சான்றோரும் கூறுதலின், உவர்க்கட லென்று கோடலே பொருந்துமென வறிக.

  38. “தமிழ் வளர் என்பதனை “மாநூற்பெயரே” (வரி.28) என்பதனோடு கூட்டி, தமிழ்மொழிக்கண்ணே வளரும் பெரிய நூலின்பெயர் என்று உரைக்கும் உரைவேறுபாடுமுண்டு. தமிழ் வளர்தலாவது தமிழுக்குப் பெருமை கொடுப்பது. பெருமை கொடுப்பதால், பல்வகையான நூல்கள் பெருகி மொழியின்வளத்தை மிகுதிப் படுத்துமென்பது ஒரு தலையாகலின் இவ்வுரை சீரிதாதல் காண்க.

  39. கோமளம்- அழகு; இளமையுமாம்.

  40. இமையவல்லி அமைவுற விளங்கிய கடவுளென்றலின், வல்லியுந் தானுமாக இரண்டு திருமேனியுடையனல்லன், ஒரு திருமேனியேயுடைய னென்றற்கு, ‘‘ஒரு தனிக் கடவுள்” என்றாரென்றும் அக்கருத்தே பற்றி “ஏகனாய்” என்று உரை கூறப்பட்டதென்றும் கொள்க. “நீலமேனி வாலிழை பாகத் தொருவன் (ஐங். கட) என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரும்” கூறியிருத்தல் காண்க.

  41. உமாதேவியும்- உ. வே.

  42. தணியென்பது தணித்தல் வேண்டுமென்னும், வேண்டுகோட் பொருட்டாய முற்றுவினை.

  43. பயப்படத்தக்க பிறவியை- உ.வே.

  44. பிறவிவேர் தணிவிமல என்பதற்குப் பிறவி வெப்பத்தைத் தணிக்க வேண்டும் நின்மலனே என்று ஒரு பிரமிமட்டில் கூறுகின்றது.

  45. தோத்திரம் பண்ணுவதாலே- உ.வே.

  46. அவன்தான் இனிதாக அருளிச் செய்த- உ. வே. “ஆரண நூல் பொது சைவம் அருஞ் சிறப்பு நூலாம்” என்றும், “நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது” (சிவ. சித்தி 8:15) என்றும் கூறும் மரபு பற்றி, “பக்குவான்மாக்கள் உய்தற் பொருட்டு” என்று இப்பிரதி கூறுவதாயிற்று.

  47. ஆசிரி அமலன் என்ற இதற்குக் கூறும் பொருள் குரு என்னும் படசொற்குக் கூறப்படும் பொருளோடு ஒத்திருப்பது காண்க. தான் அமலனாகாதவழி ஏனையோரைப் பற்றிநிற்கும் மலவிருளைக் கெடுத்தல் கூடாதாகலின், “அமலன்” என்றார்.

  48. ஆசாரியனாகிய நின்மலன்- உ.வே. ஆசு, இரி, அமலன்; அஃ தாவது அஞ்ஞானமாகிய இருளை நீக்குபவன்.

  49. பரமன் திருவடி சிவஞானப் பேரொளி யுடைத்தாகலின், அதனைச் சூடுவதால் தமக்கு அந்த ஞானவொளி விளங்குவது குறித்து, “ஒளியிலகப் புனைந்து” என்றார்; “அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” (திருநா. 93) என்றும் சான்றோரும் கூறுப.

  50. இவ்வுபதேசத்தின் அருமைப் பாட்டினை வியந்து இந்நூலாசிரியர் கூறும் பாராட்டுரையைத் “தேனுடன் அமிழ்து கலந்தன்ன சுவைய” (ஞானா.32) என்றற்றொடக்கத்து அகவலிற் காண்க.

  51. உறவுக் கோனட் டுணர்வுக் கயிற்றினான், முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே” (திருநா. 204; 10) என்று நாவரசர் உணர்வைக் கயிறாகக் கூற, இவர், அவ்வுணர்வுக்கு வாயிலாகிய உபதேசத்தைக் கயிறாகக் கூறுகின்றார். “முறுக வாங்க” என்ற சொற்றொடர் இத் திருப்பாசுரம் முனிவர் உள்ளத்தே யொளிர்வதைப் புலப்படுத்துகிறது.

  52. இந்திரியங்கள் சேட்டைகெட- உ. வே.

  53. என்னிடத்துண்டாகிய - உ. வே.

  54. ஆகமத்தை மத்தாகவும், அறிவைக் கையாகவும், உபதேசத்தை நாணாகவும் கொண்டு அஞ்ஞானத்தைக் கடைய, ஞானாமிர்தம் உண்டாகிறதென்பது கருத்து. அஞ்ஞானமும் ஞானமும் உயிர்கட்குண் டென்றும், அஞ்ஞானத்தைக் கடைந்தவழி ஞானம் பிறக்குமென்றும் இவ்வாசிரியரே, “எந்தை ஞானமின்மை” (ஞானா. 70) என்றற்றொடக்கத்து அகவற்கண் விளக்குகின்றார்

  55. உவர்க்கடலிடத்தே தேவாமிர்த மெழுந்ததுபோல, அஞ்ஞானக் கடலிடத்தே ஞானாமிர்த மெழுந்த தென்பதும், எனவே, இப் பெயர் காரணப்பெயர் என்பதும் பெற்றாம். திவ்விய ஞானாமிர்த மென்று பெயராயிற்று- உ.வே.

  56. ஞானா: 70: 15-6.

  57. இவ்விசேடக் குறிப்புச் சில பிரதிகளில் இல்லை.

  58. “எரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன்” (புறம்.56)

  59. மதிமுத றுணிந்த - பா. வே.

  60. நஞ்சுக வளித்த - பா.வே.

  61. சரியை யென்ற விரிதரு பாதம், சரியை யென்றிவை யுரைதரு பாதம், சரியை யெனவுரை யீரிரு பாதம் - பா.வே.

  62. இது கண்ணுத லண்ணலை அமரரும் முனிவரும் பிறவிக்கஞ்சினோ மென்று விண்ணப்பம் செய்யப் பரமசிவன் அருளிச்செய்த …………….. பா. வே.

  63. அக்கினியைக் கெடுக்கிற சிவப்பையும்- உ. வே.

  64. ஈசர் என்றது, ஈண்டுத் தலைவர் என்று பொருள் தந்து நிற்கிறது; மதுரைக்குத் தலைவன் மதுரேசன், அளகைக்குத் தலைவன் அளகேசன், சுரர்க்குத் தலைவன் சுரேசன் என்றாற்போல. பலராதலின் தேவரை உம்பர் என்றும், அவர்க்குத் தலைவர்களும் ஒருவரல்லராதலின், “ஈசர்” என்றும், பன்மையாற் கூறி, எல்லார்க்கும் மேலாகிய ஈசனொருவனாதலால், அவ்வீசனை, “உம்பன்” என ஒருமையாற் கூறினார். “தேவர் கோ வறியாத தேவதேவன்” (திருவா. திருச்சத. 30) என்றாற் போல.

  65. தேவர்களுக்கு மேலாகிய வித்தியேசுராதிகட்கும் கருத்தாவுமான- உ.வே.; அனந்த சீகண்ட ராதி கிருத்தியே சுரர்கட்கும் கர்த்தாவுமாகிய- உ. வே.

  66. பரமசிவன் ஆகமப் பொருளை யருளிய செய்தி குறிக்க வரும் இவ்வாசிரியர் அவர் தம்கண்டத்தில் நஞ்சையுண்டடக் கியதைச் சிறப்பாகக் கூறுவது போல, உமாபதி சிவனாரும், “பெருங் கடலுதவுங் கருங்கடு வாங்கிக், கந்தரத் தமைத்த வந்தமில் கடவுள், பாலரை உணர்த்தும் மேலவர் போலக் கேட்போ ரளவைக் கோட்படு பொருளால், அருளிய கலைகள் அலகில” (சங்கற். 2;1 -5) என்பர். இப்பகுதிக்கு உரைகண்ட ஞானப்பிரகாச தேசிகரென்பார், “கர்த்தாவை நீக்கி முற்காலத்திலே தேவர்கள் அமுதங் கடைய அதிலே நஞ்சு பிறந்து அதனாலே அவர்கள் பீடைப் படுகையினாலே துட்ட நிக்கிரகரும், அவர்கள் கர்த்தாவை நோக்கி அபயமிட அஞ்சாதேயென்று அந்த நஞ்சை அமுதுசெய்த அவர்களை இரட்சிக்கையினாலே சிட்ட பரிபாலருமாய் நின்றதெனக் கொள்க,” என்று கூறுகின்றார். இக்கருத் தடைவே நோக்கின், நுதற்கண் “துட்ட நிக்கிரகத்துக்கும், “பிறையணிந்தது “சிட்ட பரிபாலனத்துக்கும்” இயைதலின், நஞ்சுண்டு அமுது உதவியருளியது இடும்பை நீக்கி இன்பமருளும் ஞானக் கொடைக்கு நற்குறிப்பாதலைக் காணலாம்.

  67. தவிக்கின்ற - உ.வே.

  68. தேவர்களும் முனிவர்களும் பிறவிக்கேதுவாயவற் றினின்றும் நீங்கியோராதலின், அவர்களே பிறவியின் கொடுமை நன்கறிந்து கூறும் தகுதியுடையராதல் பற்றி, அவர் செய்து கொள்ளும் விண்ணப்பத்தின் முகமாகக் கூறுகின்றார்; அவர் தாமும் பிறவிச் சூழலிற் பட்டு அலமரும் பிற ஆன்மாக்களின் பொருட்டே இவ்விண்ணப்பம் செய்கின்றா ரென்பது. எனவே, இவ்வணக்கம், பிறர் பொருட்டாம். திருமூலரும், ‘முத்திக் கிருந்து முனிவருந்தேவரும், ஒத்துடன் வேறாயிருந்து துதி செய்யும், பத்திமையால்” (திருமந். 98) என்பர்.

  69. இரித்த என்று பாடங்கொண்டு போக்கின என்று உரை கூறிய பிரதியுமுண்டு.

  70. மூல சிவாகமங்கள் காமிகம் முதல் வாதுளமீறாகக் கூறப்படும் இருபத்தெட்டென்றும, உபாகமங்கள் நாரதீய முதலாக விசுவான் மகமீறாக இருநூற்றே ழென்றும் கூறுப; மெய்த்தா நாலேழாகமமிரு நூற்றேழு பாகமம்” (தணிகை. நந்தி. 108) என்று கச்சியப்ப முனிவர் கூறுவர்.

  71. மேதாதி யுன்மனாந்த தரிசனமாகிய என்பது பல பிரதிகளில் இல்லை; அச்சுப்பிரதி மட்டில் இதனைக் காட்டி, இதன் அடிக்குறிப்பில் “மேதாதி யுன்மனாந்த மாவன, மேதா, ஆர்க்கீச, விஷ, விந்து அர்த்தசந்திர, நிரோதி, நாத, நாதாந்த, சத்தி, வியாபினி, வியோமரூபி, அநந்தை, அநாதை, அநாசிருதை, சமனை, உன்மனை எனப்பதினாறாம்; இவற்றைத்தெரிசிக்கும் யோகத்தைச் சோடச கலாப்பிராசாத யோகம் என்பர்; இவற்றின் விபரத்தைப் பௌஷ்கராகமத்திற் காண்க” என்று கூறுகிறத, இனி, இவற்றுள், வியோமரூபி அநந்தை, அநாதை அநாசிருதை என்ற நான்கு மொழிந்த பன்னிரண்டும், துவாதச கலாப்பிரா சாதம் என்று வழங்கும்.

  72. சொல்லப்படாநின்ற விரிந்த நான்கு பாதங்களும் - உ. வே.

  73. இந்நான்கு பாதங்களுள், ஞானபாதமே ஈண்டுக் கூறப்படுகிறது; ஏனை மூன்றனுள் “யோகபாதத்தில் முப்பத்தாறு தத்துவங்களும், தத்துவேசுரரும், ஆன்மாவும், பரமசிவனும், சத்தியும், சகத்திற்குக் காரணமான மாயை மாமாயைகளைக் காணும் வல்லமையும, அணிமாதி சித்திகள் உண்டாம் முறைமையும், இயமம், நியமம், ஆசனம் பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதிகளினுடைய முறைமையும், மூலாதார முதலிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும்.

  “இனிக் கிரியாபாதத்தில், மந்திரங்களது உச்சரணம், சந்தியா வந்தனம், பூசை, செபம், ஓமங்களும், சமயம், விசேடம், நிருவாணம், ஆசாரியாபிடேகங்களும், புத்தி முத்திகளுக்கு உபாயமான தீக்கையும் கூறப்படும். “இனிச் சரியாபாதத்தில், பிராயச்சித்த விதியும், பவித்திர விதியும் , சிவலிங்கவிலக்கணமும், உமா மகேசுரர் முதலிய வியத்தாவ் வியத்த இலிங்கங்களின் இலக்கணமும், நந்தி முதலிய கணநாதர் இலக்கணமும், செபமாலை, யோகபட்டம், தண்டம், கமண்டலம் முதலியவற்றின் இலக்கணமும், அந்தியேட்டி விதியும் சிராத் விதியும் கூறப்படும்” என்று சித்தாந்தப் பிரகாசிகை சாத்திரப்பிரகரணம் கூறுகின்றது. (பக்28) இவ்வியைபு பற்றியே சரியா பாதத்தைத் தந்திர கலையென்றும், கிரியை யோக மென்ற இரண்டு பாதங்களையும் மந்திர கலை யென்றும், ஞான பாதத்தை உபதேசகலை யென்றும் கூறுப.

  3.  சொல்ல என்றதனால் இந்த ஞானாமிர்த ஆசிரியர் ஞானபாதமேயன்றி ஏனை யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்ற மூன்றனையும் இவ்வாறே அருளியிருக் கின்றாரென்பது துணியப்படும். அவை இப்போது கிடைத்தில.

  4.  னெச்- பா. வே.

  5.  தருங்கலை- பா. வே.

  6.  தருஞ்சேதன - பா. வே.

  *இத் தலைப்புக்கள் மூலம் மட்டில் இருந்த ஏடுகளில் காணப்படுகின்றன.

  7.  “தான் நுகரும் பெரிய போகத்தைப் பூருவகன்ம பல மென் றெண்ணாதே, கருத்த தானே எனக்கருவித்து மேலும் கன்மங்களையே செய்து வருங்காலத்து என்று தாற்பரியம்” என்றொரு தொடர் ஒரு பிரதியிற் காணப்படுகிறது.

  8.  சம்பிரதாயம்- தீக்கை. இதன் இன்றியமையாமை, “அரிசியிலும் செம்பிலும் அனாதியே கூடியிருக்கிற உமியும் களிம்பும் பாகத்தினாலும் ரச சத்தியினாலும் எப்படி நிவர்த்தி யடைகின்றவோ, அதுபோல அனாதியே மறைத்துக் கொண்டிருக்கிற ஆணவ மலமானது தீக்ஷையினால் நிவர்த்திக்கப் படுகிறது” (தத்துவப் பிரகாசிகை சூ. 18. ) என்பதனாலறிக.

  9.  பசு விகாரமாகிய கேவல சகல சுத்தாவத்தை- பா. வே.

  10. இத்தொடர்சில பிரதிகளில் இல்லை. பெருமண்டூர் சீபால நயினார் எழுதிய ஏட்டுப் பிரதியில் இவ்வாறு எழுதி, “இதன் வியாக்கி வருமாறு” என்ற தொடரும் எழுதப்பட்டுள்ளது. மாமண்டூர்த் தியாகேச முதலியார் ஞானாமிர்த மூலத்தில் சம்மியஞான முதலிய பாகுபாடு கண்டதாகச் சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயரவர்கள் “ஞானமிர்தத் திருவகவல் வகை முதற் குறிப்பு” என்ற தலைப்பின்கீழ், “வெண்டிரை” யென்று தொடங்கும் அகவலொன்றைக் காட்டி யுணர்த்துகின்றார்கள்.

  11. பிறழா நிலைமைப் பெரும் பெயர் ஞானக் கறையறு பாதம் எனக்கிடந்தபடியே கொண்டு, பிறழாத நிலைமையினையுடைய ஞேயப் பொருளை யறிவிக்கும் ஞானமாகிய குற்றமற்ற பாதம் எனக் கூறுவது சிறப்பாம். ஞானத்தால் உணரப்படும் பதிப்பொருள் ஞேய மாதலாலும், என்றும் பிறழா நிலைமை அதற்கு இயல்பாதலாலும் என அறிக. சிவஞான போதச் சிறப்புப் பாயிரத்து வரும் “ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு” என்புழிப் பெரும் பெயர்க் கடவுள் என்பதுபற்றிக் கூற வந்த சிவஞான முனிவர், “பெரும் பெயர்க் கடவுளென ஞேயமொன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுளடக்கி நிற்றலின் தலைமை பற்றி யென்றுணர்க” என்றும், “பெரும் பெயரெனினும் மகா வாக்கியமெனினும் ஒரு வார்த்தையெனினும் ஒக்கும்” என்றும் கூறுவது இப்பொருள் கோட்கு ஆதரவு நல்குகிறது.

  12. ஞானப் பெரும் பெயர் பிறழா நிலைமைக் கறையறு பாதம் என்று இயைத்து, ஞானமென்னும் பெரிய பெயரை யுடைத்தாய ஒரு படித்தான குற்றமற்ற பாதத்தின் என அச்சுப்பிரதி கூறுகின்றது. அனாதி………….திரியாத என்ற தொடர் அதன் கண் இல்லை.

  13. உறக்கழறுதலாவது கேட்போர் உள்ளம் பொருந்தச் சொல்லுதல். இது நூல்கள் இறைவனால் உணர்த்தப் பட்ட முறை; “அந்தமில் கடவுள், பாலரை யுணர்த்தும் மேலவர் போலக், கேட்போரளவைக் கோட்படு பொருளால், அருளிய கலைகள்” (சங்கற்ப.2) என்று சான்றோர் கூறுதல் காண்க. சொல்லின் என்னாது ‘கழறின்’ என்றது. பொருள்களைத் தடை விடைகளாலும் மேற்கோள் ஏது திட்டாந்தம் முதலிய தருக்க நெறியாலும் சொல்லுவது பற்றி.

  14. “பசுபாசத்தொடு பதியாய் பெற்றி” என்புழி, (உத்தேசம்) ஆய்தற்குச் செயப்படுபொருளாய் நின்றது” என்பர் சிவஞான முனிவர். (சிவஞான பாடியம்; சூ. உ. உரை).

  15. அறிவுடையோர் - உ. வே.

  16. பசு மூன்றவத்தையை யுடையதென்பர்- உ.வே.

  17. “கேவல சகல சுத்தம் என்று மூன்றவத்தை யான்மா, மேவலன்” (சிவ. சித். 4; 37) என்றும், “ஓங்கிவரும் பல வுயிர்கள் மூன்ற வத்தைப் பற்றி யுற்றிடுங் கேவல சகல சுத்தமென வுணர்க” (சிவப். 33) என்றும் பிறரும் கூறுப.

  18. நிற்கு முறையே சொல்லின்- உ.வே.

  19. உடம்புடன் கூடிய முக்குண மில்லாதோன்- உ. வே.

  20. புத்திகுண மெட்டினையும் ஏனைப்போக்கிய காண்டக் கருவிகளையு மில்லாதோன்- உ. வே. புத்திகுணம் எட்டும்; தருமம், ஞானம், வைராக்கியம் ஐசுவரியம், அதருமம், அஞ்ஞானம் அநைசுவரியம் எனவரும்.

  21. தனக்கொரு செயலிலாதோன்- உ. வே.

  22. குற்றமற்ற அரூபியாயிருப்போன்- உ. வே.

  23. போக்கியகாண்டக் கருவிகளில்லாமையால் வலியில்லா தோன்- உ. வே.

  24. ஆசிரியர் அசேதன மென்னாமையாலே அசேதனம் போன்று இச்சையில்லாதிருப்போன்- உ. வே.

  25. ஈண்டுக் கூறியவற்றையே சுருக்கமாக, “அறிவிலன மூர்த்தன் நித்தன் அராகாதி குணங்களோடுஞ், செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்களில்லான், குறியிலன் கர்த்தாவல்லன் போகத்திற் கொள்கையில்லான், பிறிவிலன் மலத்தினோடும் வியாபி கேவலத்தில் ஆன்மா” (சித்தி. 4: 38) என அருணந்தி சிவனாரும், “ஈங்கு வரும் கலாதியொடு குறியுருவ மொன்றும், இன்றிமல மன்றி யொன்று மில்லையெனு மியல்பாய், ஆங்கறிவை யறிவரியன் அறி கருவி யணையா, ஆதலினால் இருள்மருவும் அலர்விழிபோ லதுவாய், நீங்கும் வகையின்றி நித்த வியாபகமா யங்கண, நிற்பது கேவல மென்று நிகழ்த்தும் நூலே” (சிவப் 33) என உமாபதி சிவனாரும் கூறுவர்.

  26. இஃது அச்சுப்பிரதியிற் கண்டது.

  27. துய்க்குந்தோறும் போகம் மேன்மேலும் பெருகுவதன்றித்தேய்வது காணப்படாமையின், தேயாப் போகம் என்றதற்கு, “அளவிறந்த போகம்” என்று கூறப்படுகிறது. “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய், மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே” (திருக்கோவை.9) என்று மணிவாசகர் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

  28. இச்சை, கிரியை, ஞானம் என்ற மூவகைச் சத்திகளையும் சத்தி யெனப் பொதுப்படச் சிவனிடத்தொடுக்கி, “அரனது” என்றா ராகலின், ‘பரமசிவனது சத்தியாலே’ என்று உரை கூறப்பட்டது. சுத்த தத்துவங்களும் கலை முதலிய வித்தியா தத்துவங்களும் சிவசத்தியால் காரியப்படுவனவாம்; இதனை, “இச்சை நடத்தியிடும் ஈச்சுர தத்துவத்தை மெய்ச்சத்தி சாதாக்ய மேவியிடும்- நிச்சயமே, என்ற கிரியை நடத்தியிடு மெய்ஞ்ஞானம், ஆன்றசிவஞ் சுத்த வித்தை யாம்” என்றும் “கால நியதிகளை சத்தி தானடத்தும், ஏலும் வித்தை வித்தையரா கம்மீசர் சாலவே, மாயை சிவம்புருடன் சாதாக்கியமேவி, நேய முடனடுத்து நின்று” என்றும் வரும் பழம் பாட்டுக்களாலுணர்க.

  29. பரமசிவன் கூற்றுவனை யழித்த செய்தியை, நம்பி யாரூரர், “அந்தணானனுன் னடைக்கலம் புகுதவவனைக் காப்பது காரணமாக, வந்த காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய்”(55:1) என்று உரைப்பது காண்க.

  30. பரமசிவனாலே அரிய கலா தத்துவமானது- உ.வே.

  31. பெறுதற்கரிய வித்தியா தத்துவத்தை- உ. வே.

  32. தடுக்கவொண்ணாதபடி விடயங்க ளைந்தினும் விரவி- உ.வே.

  33. பக்கமே மிக்கு- உ. வே.

  34. வியத்தமாய் நின்ற மூலப்பிரகிருதியினின்றும் பிறந்த - உ. வே.

  “முக்குணமும் விளங்குதலின்றித் தம்முட் சமமாய் நின்ற அவத்தையில் மூலப்பகுதியும், விளங்கித் தம்முட் சமமாய் நின்ற அவத்தையில் குணதத்துவமும், அவை சமமாகாது தம்முள் மிக்குங் குறைந்தும் பரிணமித்து நின்ற அவத்தையிற் புத்தி தத்துவ முதலியனவு மாதலின், இவை தம்முள் வேற்றுமையென்க “போக்கிய ரூபமாய் நின்ற தத்துவ பிரபஞ்சங்கட் கெல்லாம் மூலகாரணமாதல் பற்றி மூலப்பகுதி யென்றும் பிரகிருதி மாயையென்றும் பிரதான மென்றும் மானென்றும்…….வழங்கப்படும்”- சிவஞான பாடியம்.

  35. கலை, வித்தை, அராகம் என்ற இவற்றின் கூட்டுறவோடு மாயை கலப்பக் குணதத்துவம் தோன்றுமாற்றை, “மூலவருங் கட்டில் உயிர் மூடமாய் உட்கிடப்பக், காலநியதி யதுகாட்டி - மேலோங்கு, முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை, அந்த அராகம் அவை முன்பு- தந்த, தொழிலறி விச்சை துணையாக மானின், எழிலுடைய முக்குணமும் எய்தி” (போற்றி. 27-29) என்பதனாலறிக.

  36. தத்துவவருக்கம்; கரணமும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும், தன்மாத்திரைகளும், பூதங்களைந்து மாகும்; இவற்றைப் போக்கிய தத்துவமென்றும் கூறுப.

  37. கலா தத்துவம் ஆணவத்தை நீக்குமென்பதை, “கலை தான் மூலமலம் சிறிதே நீக்கி, மருவும் வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனை” என்றும், வித்தியா தத்துவத்தின் செயலை, “வித்தை இடை நின்று அறிவை உயிர்க்குப் பொருந்தியிடும்” என்றும், அராக தத்துவத்தின் செயலை, “அராகம் தம் கன்மத்துக் கீடாய்ப் பெற்றதனில் ஆசைகளைப் பெருகுவிக்கு” மென்றும் (சிவப். 39, 40) உமாபதி சிவனார் கூறுவர். இனி, அருணந்தி சிவனார், “கலைபின் தோன்றி ஆணவ மொதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியாசத்தி தெரிவிக்குஞ் சிறிதே” என்றும், வித்தை “அறிவினை யுதிக்கப் பண்ணும்” என்றும்,. “அராகந்தோன்றி வினைவழி போகத்தின் கண் இச்சையைப் பண்ணி நிற்கும்” (சிவ. சித்தி2; 55-6) என்றும் கூறுவர். இவற்றையும் இவைபோலும் பிறநூல்களையும் ஒப்ப ஆராய்ந்து கண்ட சிவஞான முனிவர் “கலாதத்துவ

  மாவது, ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியின் பொருட்டு மலசத்தியிற் சிறிதே நீக்கிக் கிரியா சத்தியை விளக்குவ” தென்றும், “கலையினின்றுந் தோன்றி (ஆன்மாக்களின்) ஞான சத்தியை விளக்கி அதனால் அதிட்டிக்கப்பட்டு”ப் பல்வகையறிவிற்கும் கருவியாய் நிற்பது வித்தியா தத்துவ மென்றும், “வித்தையினின்றுந் தோன்றி ஆன்மாவின் இச்சாசத்தியை விளக்கிப் புத்திகுணங்களின் அவ்வராக்கிய மெனப்படும் அராக நிகழ்ச்சிக்கு ஏதுவாய் நிற்பது அராக தத்துவ” மென்றும் கூறுவர். (சிவஞானபாடியம்.2 சூ. 2 அதி.).

  38. நியதி தத்துவத்தின் செயலை அருணந்தி சிவனார் “நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணு

  விக்கும்” (சித்தி. 2: 55) என்றும், உமாபதிசிவம், “நியதி தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கைபோல, நேசமுறு தங்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்” என்றும் கூறுவர்.

  39. கன்மபலத்தை- உ. வே.

  40. பிறழ்ச்சியின்றியே நியமித்துக்கொடுக்க- உ. வே.

  41. முடிவில்லாத காலதத்துவமாவது- உ. வே. “கலை வித்தை அராகங்களால் தொழிலும் அறிவும் இச்சையும் விளங்கிப் போகநுகர்ச்சிக் கட் சென்ற ஆன்மாக்களுக்குக் கணம், இலவம், துடி என்றற் றொடக் கத்தாற் பலவேறு பட்டுப் போகவரையறைப்படுத்துவது காலதத்துவம். “கலை முதலிய மூன்றும்வினை முதலாகிய ஆன்மாக்களுக்குத் தொழிலறி விச்சைகளை விளக்கி நேரே யுபகரிப்பன்; காலமும் நியதியும் அவ் வான்

  மாக்களுக்கு வினையை வரையறுப்பதும் நியமிப்பதுமாகிய முகத்தான் உபகரிப்பன; ஆகலான், ஆன்மாக்களுக்குத் தொழிலறிவிச்சை நிகழ்ந்த பின்னன்றிக் கன்மத்தோடு இயைபு கூடாமையின், கால நியதிகளின் உபகாரம் அவற்றின் (கலை முதலியவற்றின்) பின்னர்த் தாயிற்றென்க” -சிவஞான பாடியம்.

  42. முறைமையிலே கொடுக்க- உ. வே.

  43. முயற்சியுடனே போகவிச்சையிலே யலைப்புண்டு- உ. வே.

  44. ஒழியாத பந்தங்கள் பந்திப்பதால்- உ. வே.

  45. பூரண வியாபகமா யுள்ள மாயை- உ. வே.

  46. காரியமாய்வரும் பெரிய போகத்தை அனுபவித்த தற்காக வந்த தேகத்தை- உ. வே.

  47. மாயாகாரியமாகிய பெரிய போகத்தைத் தானென்று அவிவேகித் தெண்ணுதலாவது தன்தன்மையிழந்து அப்போகத்தின் வழி நிற்பது; “ஆங்கவை தானு நீங்காது நின்று, தன்வழிச் செலுத்தித் தானே தானாய், என்வழி யென்பதொன் றின்றாம்” (இருபா. 4: 11.3) என வருதல்காண்க. “மாயா விகாரம் மதுபானம் போன்று மயக், கோயா” தென்று ஒழிவிலொடுக்க முடையாரும் (விரக்தி 5 ) கூறுர்.

  48. புத்திபண்ணி- உ. வே.

  49. இப்பகுதிக்கட் கூறப்படும் கலையாதி தத்துவங்களின் இயல்புகள் மிருகேந்திர கலாதி பிரகரணத்தும் பௌட்கர பாசபதார்த்த படலத்தும் விரியக் கூறப்படுகின்றன.

  50. வலியவினையாவது (ஆன்மா) பக்குவப்படுத்துவதால் வரம்பின்றிச் செல்லமாட்டாது சட்டெனச் சமத்துவப் பட்டவழி- உ. வே.

  51. மலபரிபாகமாவது; “மலம் தனது சத்தி தேய்தற்குரிய துணைக்காரணங்களெல்லாவற்றோடுங் கூடுதலேயாம்.”

  52. கன்ம சமத்துவமாவது இருவினையொப்பென்றும் கன்மசாமயம் என்றும் கூறப்படும். இதனைச் சிவஞான பாடியம் “சிவப்பிரகாசத்தில்” எதிர்வினையுமுடி வினையுதவு பயனானேராக என ஏனை வினைகள் போல ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டு மென்றோது தலின், அஃதொத்தல் பிறிதோராற்றாற் பெறப்படாமையானும், மல பரிபாகக்குறி சத்தி நிபாதக்குறி சிவபுண்ணியக் குறிகளெல்லாம் ஆன்மவறிவின்கண் விளங்குமாறுபோல, இருவினையொப்புக் குறியும் தன்னறிவின்கண் விளங்கு மாறில்லையாயின், அது முத்திக்கேது வாதல் கூடாமை யானும், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணிய பாவமிரண்டினும் அவற்றின் பயன் களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின்கண் அவ்விரு வினையும் அவ்வாறொப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப் பென்றதற்குப் பொருளென நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. ‘எதிர்வினையு முடிவினையுதவுபயனா னேராக’ எனப் புடைநூல் வெய்த ஆசிரியர் இஃதறியாது, வேறு வேறுரைப்பாரை நோக்கி யன்றே ‘இருவினை தூக்கவருவினை நில்லா, வொருவினை புரிகாலிருவினை யாகா, ஒப்புறு மாறு செப்புக, எனச் சங்கற்ப நிராகரணத் தோதியதூஉ மென்க” -என்று கூறுவது காண்க. இனிச் சிவாக்கிர யோகிகள், ‘சிவதருமம சரிதை எழிற் கிரியை யோகமிவையியற்றியிடுந் தவத்தால், தப்பறவே யொன்றையொன்றங் கொழிப்ப தாகத் தகும் பாவ புண்ணியங்கள் சமனாகப் பொருந்துவது (சிவநெறிப். 155) என்பர். இவ்விருவினை யொப்பாவது அனுக்கிரக காரணமன்று. என்றும் பாகம்படுதற்குத் துணையா மென்றும் பௌட்கர முதலிய ஆகமங்கள் கூறும்.

  53. மிகப்பெரிய பரமசிவனுடைய சத்திநிபாதமுண்டாய் - உ. வே.

  54. பக்குவமாதற் பொருட்டு மலத்திற்குத் துணையாய் மறைத்தற் சத்தியை யுதவிநின்ற திரோதான சத்தி, அம்மலம் பரிபாகமெய்து மிடத்துப் பராசத்தி ரூபமாய் மலத்தின் நீங்கி அருளொளியிற்சிறக்கும் பொருட்டு ஆன்மாக்கள் மாட்டுப் பதிவது. இதன் இயல்பினை. சத்திநிபாத மென்றது கேட்டியாவ னொருவன், இடைக்கடிதொருபொரு ளடுத்துற வீழின், வெரீஇ யந்நிலை யொரீஇவேறிடம், மருவு மற்றென நிருமலன் பெருவலி, பதிப்ப வறிவன் பவபயங் கதுவ, மதித்தனன் தேசிகன் மலரடி யடையும்” (ஞானா 69: 16-22) என்பது காண்க.

  55. சத்தியரூப ஞானாசிரியருடைய கிருபா நோக்கமுற்று அனாதியாகப் பிரசாதிக்கப்பட்டு வருகின்ற தீக்கை விசேடத்தால் ஞானோதயமாகிப் பிரகாசிக்குங் காலத்திலே- உ. வே.

  56. சம்பிரதாயம்- தீக்கை; “சத்தி பதிப்பிற் சம்பிரதாயந், தொத்துவதென்பது” (ஞானா69; 9-10) சம்பு சம்பந்தமான கிரியை யாதல் பற்றி, தீக்கை சம்பிரதாயம் எனப்பட்டது போலும், (பௌ. 4-43).

  57. ஞானாவதி தீக்கையாவது: “குண்டமண்டலம் அக்கிநெய் சுருக்குச் சுருவமுதலிய வனைத்தும் மனத்தாற் கற்பித்துக்கொண்டு விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்வது” (சிவ. சித். 8: 13) என்று சிவஞானமுனிவர் கூறுவது காண்க. “செய்யும் வகை யிரண்டு படியாகும் தேரில், திகழ்ஞானவதி கிரியாவதியென்று செப்பி, உய்யும் வகையுவந்து மனோபாவகத்தான மலங்களோட்டுவது ஞானவதி” - சிவார்ச்சனாபோதம், சிவாக்கிர யோகிகளும், “இவை மனத்தினாலே யுறச்செய்தல் ஞானமென வுரைக்கும் நூலே” (சிவநெறிப். 164) என்று கூறுவர். இக்கிரியாவதி ஞானாவதியென்ற இருவகைத் தீக்கையும் முறையே “புறப்பூசையும் அகப்பூசையும் போலக் கொள்க” (சிவதீக்கை) என்பது சிவஞான மாபாடியம்.

  58. “சொற்றெரியாப் பொருள் சோதிக்கப்பானின்ற சோதி” என்றும்; “இன்னவுரு இன்னநிற மென்றறிவதே லரிது” (ஞானசம் 267-10, 329-3) என்றும் பெரியோர் கூறுவது காண்க.

  59. சேதனா சேதனப்பிரபஞ்ச முழுவதும் தானேயாகி- உ.வே.

  60. “சிவமுதல் நிலமிறுவாய் ஐந்தும் ஏழும் இருபத்துநான்குமாகிய முப்பத்தாறு தத்துவங்” களை, இங்கே “சிவதத்துவாதி……………………………………..தத்துவங்களை” எனத் தொகுத்துக் கூறினார்; ஐந்தாவன: சுத்த தத்துவமெனப்படும். சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை யென்பன; ஏழாவன: வித்தியாதத்துவமெனப்படும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை. யென்பன; புருடன், மாயை என்ற இரண்டினையும் கூறாமல், பிரகிருதி, குணம் என்ற இரண்டினையும் சேர்த்து ஏழாகச்சில நூல்கள் கூறுகின்றன; ஏனையிருபத்து நான்கு மாவன; கரணம் நான்கு, ஞானேந்திரியமைந்து, கண்மேந்திரியமைந்து, தன்மாத்திரையைந்து பூதமைந்து என்பன.

  61. அகன்ற என்றது “அஃகி யகன்ற வறிவென்னாம்” (குறள் 175) என்புழிப்போல நின்றது.

  62. ஒன்றனையும் சுட்டியறியாத சர்வஞ்ஞனான பரமசிவனது உ. வே.

  63. நின்மல சிவானந்தத் தியைவான்- உ. வே.

  64. பின்னும் மலத்தோடு இயைவனாயின் முத்தியாற் பயனின் றாமாதலின், “பின்மலத்தியையா” னென எடுத்தோதினார்; “உய்த்துணர்வது எடுத்தோத்தில்வழி” யென்பது சேனா வரையம்.

  65. பின்பு சனனாதிகட்கேதுவாகிய மலத்தோடு கூடுவதில்லை. - உ. வே.

  66. இவ்விலக்கணக்குறிப்புக்கள் சில பிரதிகளில், அவ்வப்பகுதி உரையிறுதியிலேயே எழுதப்பெற்றுள்ளன.

  67. சிவஞானபாடியத்திண்கண், தூலாருந்ததி நியாயமாவது இஃதென விளக்குவாராய் ஸ்ரீமாதவச் சிவஞான முனிவர் “காரணம்………புணர்வதற்கு” என வினாயவழி, ‘அற்றே……..அறவனோனே’ என்றெடுத்துக்

  காட்டி, உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடை கூறி, பின்னர்ச் சீருணம் தான் பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்ற தாகலின், அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டாமாறு என்னை என்று ஆசங்கித்து, ‘ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே யிடம் ஒன்று மேலிடில் ஒன்று, ஒளிக்கும் எனினும் இருளட ராதுஉள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு செறிந்துள தேனும் திரிமலத்தே, குளிக்கும் உயிர்அருள் கூடும்படி கொடி கட்டினனே” (கொடிக்.1) என்றெடுத்துக்காட்டி வேறு வினாயவழி, உண்மையான் விடை கூறியுணர்த்துதலும்….போல்வனவாமென்க” (சிறப்பு) என்று இத்திருவகவலை எடுத்தாளுகின்றார்.

  68. “செம்பிற் பெருகிருந் துகளென அறிவினை மறைத்தல் அணிமலம் (ஞானா: அக. 18; 6-7) என்று பிறாண்டும் ஓதுமாறு காண்க.

  69. சார லறவ னோனே- பா. வே.

  70. பசுமலபந்தனாதற்கும் - பா. வே.

  71. பொறி- ஈண்டு, செல்வப்பேற்றுக்குரிய நல்லூழ் என்னும் பொருள் படநின்றது; “பொறியின்மை யார்க்கும் பழியன்று (குறள் 618) என்றாற்போல.

  72. விழுமலம் விழுமத்தைச் செய்யும் மலம்; விழுமம். இடும்பை (தொல். சொல். சே. 353) விழுமம். இடும்பைப் பொருட்டாதலை “நின்னுறு விமுமங் களைந்தோள்” (அகம் 170) என்பதனாலுமறிழுக. இவ்வுரிச்சொல் ஈண்டு ஈறுகுறைந்து விழுமல மென நின்றது; “ இறைவிழு முறினே” (புறம் 314) என்றாற்போல.

  73. சம்மியஞானம் விளங்காதபடி மலத்தால் மறைப்புண்டிருக்கும் ஆன்மாவானவன் அந்த இடும்பையைச் செய்யும் மூலமல சம்பந்தத்தால் மலசகிதனாவதற்கு- உ. வே.

  74. தடைவிடைகளால் விளங்க வுரைக்கவேண்டு மென்றற்குக் “கழறல் வேண்டுவல்” என்கின்றான்.

  75. “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிலே, பதியினைப் போல் பசு பாசம் அனாதி” (திருமந், 115) என்று திருமூலரும் கூறுதல் காண்க.

  76. இவர்களுக்கு (சிவனுக்கும் ஆன்மாவுக்கும்) முறையே மலமின்மையும் மலமுண்மையும் என்றவாறு.

  77. அம்ம, கேளாய் என்னும் பொருட்டாய இடைச்சொல் “அம்ம கேட்பிற்கும்” (தொல். சொல் இடை. 28)

  78. உரைக்கக் கேளாய்; இருந்தபடி கேளாய் - உ. வே.

  79. சீருணம் - செம்பு; “குளிகை சீருணம் நீடா தழித்த நிலையிலை” (சங்கற்ப. 10: 5-6) என வருதல் காணுக.

  80. இறை புற்கலனுக்கு - இறைக்கும் புற்கலனுக்கும்; இறையென்புழி நான்கனுருபு விரித்து இரண்டிடத்தும் எண்ணும்மை பெய்து உரை கூறப்படுகிறது.

  81. புற்கலனுக்கு மலம் செம்பிற்குக் காளிதம் போலவும், இறைக்கு நின்மலம் பளிங்குக்கு ஒளிபோலவும் என உவமம் கொள்க. “படிகத்துக்குத் தூய்மையும் செம்புக்குக் களிம்பும் எய்துதற்குக் காரணம் எவ்வாறு இல்லையோ அவ்வாறே சிவனும் ஆன்மாவும் மலரகிதரும் மலசகிதரு மாதற்குக் காரணம் இல்லை; இருவர்க்கும் இரண்டும் அநாதி” என்று கிரணாகமம் கூறுகின்றது.

  82. திருவடிச் சிலம்பின் ஓசை கயிலையில் விளங்கி நிற்றலை நக்கீரதேவ நாயனாரும், “தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலசலனென், றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்க கலத், தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய் நீ, கூத்தாடல் மேவியவா கூறு” (கயிலைபாதி 61) என்று கூறுவர்

  83. ஒன்றோடொன்று பொருந்தாத மிருகங்கள் விரோதமின்றிப். பொறையினோடு பொருந்தி வாழும் திருக்கயிலாய- மென்னும் திரு மலைச் சாரலில் குறைவற ஆடியருள்கின்ற திருச்சிலம்பின் ஓசை கேட்டார் பிழைக்கும் தன்மையையுடைய பரமாசாரியன் - உ.வே. பொருந்தாத மிருகங்கள் பொருந்தி வாழும் திருமலைச்சாரலில்- உ.வே. அரசியற் பொறையைமேற் கொண்ட சுழறிற்றறிவார்க்கு இறைவன் திருவடிச் சிலம்போசை, அதனைப் பொறையாகத் தோற்றுவியாது திருவடி பரவும் வழிபாடாகிய தவத்தை வளர்த்தது இவ்வுரைக்குச் சான்றாகிறது.

  84. பெற்றிபின்- பா. வே.

  85. வான்பிணி- பா. வே.

  86. விரிகலை- பா. வே.

  87. நெறியே- பா. வே.

  88. இது கேவலாவத்தையில் நின்றவனுக்குச் சகலாவத்தை வந்தமையைக் குறித்துக்

  கொண்டு மனாதி பலம் இவனுக்கு இரண்டாலோ பெந்தத்துக்கும் மாயோதரத்தன் வியாபகனாதற்கும் காரணமென்னெனக் காரண சாதகம் கூறியது- பா. வே.

  89. நித்தியமாகிய மாயையினின்றுந் தோன்றுவதால், “நிலை மலி கலை முதலாய தத்துவம்” என்றும், இக்கலை முதலாய தத்துவங்களால் ஆன்மா சகலாவத்தை யெய்திப் போக நுகருமாற்றால் அதன்கண் அழுந்திப் பிறப்பிறப்புக்களிற் சுழலுவதுபற்றி, “உலைவில் கட்டு” என்றும் கூறினார். “காரிட்ட ஆணவக் கருவறையிலறிவற்றகண்ணிலாக் குழவியைப் போற், கட்டுண் டிருந்த வெமை வெளியில் விட்டல்லலாம் காப்பிட்டு” (சின்மயா6) என்று தாயுமானாரும் கூறுவது காண்க.

  90. அளவில்லாத- உ.வே.

  91. மாயையைப் பெண்ணாக வுருவகஞ்செய்து கூறுவது மரபாதலின் மாயாகாரியமகிய தேகத்தில் உறைவதை, “மாயாவு தரம் மரீஇயோன்” என்றார். “மாயாள்தன் வயிற்று இவற்றால் துடக்குண்டு வாழும் ஆன்மா” (சிவ சித்த. 2;63) என்று அருணந்தி சிவனார் கூற, “மாயாளெனப் பெண்பாலாகக் கூறியது வடமொழி மதம் பற்றி உருவகஞ்செய்தற் பொருட்டெனி னுமாம்” என்று சிவஞான முனிவர் விளக்கங் கூறியிருத்தல் காண்க.

  92. கலையாதி தத்துவங்களால் பந்தமுற்றவன் மாயா காரியமான தேகத்தைப் பொருந்தி- உ.வே.

  93. வீயானாதல்- போக்குவரவுகளில் ஏதேனும் ஒன்றோடே யொழித லன்றி இரண்டனையும் மாறிமாறிப் புரிதலின், “வீயானாதல் என்” என்றார் “இவ்வுயிர் பிறந்திறந்து போவது வருவதாகும்” (சிவ. சித்தி. சூ. 2:4) என்று பிறரும் கூறுப.

  94. ஒழிவின்றிப் போக்குவரவு- உ. வே.

  95. இப்பொருள்கள் என்னுடைய ஆராய்ச்சியால் தெரியுமள வாயிருந்ததில்லை யென்கிறாயாகில்- உ. வே.

  96. உடம்பெடுக்க வேண்டிற்று உடம்பெடாவிடில்- உ.வே.

  97. கொண்டாடப்பட்ட கன்மம் புசித்தற்கு வழியில்லை- உ. வே.

  98. அந்த வழியில்லாமையாலே- உ. வே.

  99. கன்ம சமத்துவம் வந்து பிரசாதத்தாலே கன்ம க்ஷயமா காது- உ.வே.

  100. நாசமாகாது - உ. வே.

  101. மோக்ஷத்துக்கு உபாயமும் இல்லையாம்- உ.வே.

  102. பெறமாட்டுவானல்லனாம் -உ.வே.

  103. ஈண்டுக் கூறிய கருத்தையே சிவஞான சித்தியும் “எல்லா மாய்த்தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில், தொல்லாய கன்மமெல்லாந் துய்ப்பித்துத் துடைத்தற்கும் பின், நில்லாமை முற்றுவித்து நீக்கவும் கூடிநின்ற, பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே” (சித்தி. சூ. 2: 79) என்று கூறுகின்றது.

  104. கழல- உ. வே.

  105. பெற்றியின் என்று பாடங்கொண்டு, “உவர்ப்பிடித்த தன்மைத்தாம் பின்பு இவனுக்கு உண்டாகிய வலிய சரீரபந்தம்” என்றுரைக்கும் உரை வேறுபாடு முண்டு.

  106. வலிய சரீரபந்தம்- உ.வே.

  107. இங்கே இந்நூலாசிரியர் கூறிய உவமையினையே அருணந்தி சிவனாரும், “செழுநவை யறுவை சாணி யுவர் செறி வித்தழுக்கை, முழுவதும் கழிப்பன் மாயை கொடு மலம் ஒழிப்பன் முன்னோன்” (சிவ சித். 2: 52) என்று காட்டுகின்றார்.

  108. கலைமுதல் சொற்றரும் படி கடையாயவற்று ஓடியது உலாவலின் நுணங்கிய ஆகனாகியென்றும், மாயையின் வயினிவன் என்றது என்றும் இயைத்து, கலாதத்துவ முதலாகச் சொல்லப்பட்ட பிருதுவிதத்துவம் அந்தமாகவுள்ள தத்துவாங்கி சத்தாலே கூடினதேகத்தில் ஒழியாதே போகம் புசித்து உலாவுதலால் இதை நுண்ணிதாகிய சரீரமெடுத்தா னென்றும் உவமையில்லாத மாயையினிடத் தானென்றும் சொன்னது இத்தனையே என்று ஓர் உரை வேறுபாடு காணப்படுகிறது.

  109. தன்மாத்திரைகள் பிருதுவி முதலிய பூதங்களிலும் நுண்ணியன; தன்மாத்திரையினும் பூதாதியாங்காரம் நுண்ணிது; அதனினும் புத்தி தத்துவம் நுண்ணிது; அதனினும் பிரகிருதி மாயை நுண்ணிது; அதனினும் கலாதி சமூகம்; அதனினும் நுண்ணிது அசுத்தமாயை. இவ்வகையால் மாயை மிக நுண்ணிதாதலால் அதன் உதரத் திற்கும் ஆன்மா மிகமிக நுண்ணிதாதலின், “நுணங்கிய ஆகனாகி” என்றார். இதனைப் பௌட்கரத்துள் ( 3. 8) விரியக் காண்க.

  110. முன்பு சொற்றது - “மாயா வுதர மரீஇயோன்” (ஞானா. 10-3) என்று சொன்னது; “மாயாமண்டலமத்யஸ்தா: யுமாம்ஸ: (மாயையின் மண்டலத்தினாரையும் புருடன்) என்று பௌட்கரடம் (3. 63) கூறுதல் காண்க.

  111. அழிவுடைய பொருளே ஆராய்வதற்குரிய தென்ற தருக்க நெறி பற்றி அழிவில்லாத புகழை, “ஆயாச் சீர்த்தி” யென்றார்; “நாடா நல்லிசை” (பதிற்24; 10) என்றாற் போல.

  112. அளவில்லா - உ.வே.

  113. இக்குறிப்பு அச்சுப்பிரதியில் இல்லை.

  114. னென்ப - பா. வே.

  115. இது “நுணங்கிய ஆகனாகி” க் கலை முதலாய தத்துவங்களில் உலாவப்பட்ட பசுவுக்குப் பெந்தம் சொல்லா நின்றது- பா. வே. பெந்திக்கப்பட்ட பசுவுளன் - பா. வே.

  116. சாதகம்- பா. வே.

  117. போக்குவரவுடைத்தா யிருக்கப்படாநின்ற - உ. வே.

  118. பழிக்கப்பட்ட தேகத்திலே - உ. வே.

  119. நித்தியமாயிருக்கின்ற ஓர் ஆன்மாவுளன் - உ. வே.

  120. கடம்- குடம்.

  121. “கண்ணென்றும் மூக்கென்றுங் காதென்றும் நின்றதனு, எண்ணொன்றி நின்றங் கிசையாவாம் -கண்ணொன்றி, நோக்குவதே யாவியென நுண்ணறிவால் எவ்விடத்தும் ஆக்குவதே யாவிக் கணி” (வபாய நிட்டை 3) என்று அம்பலவாண தேசிகர் அருளுமாறு காண்க.

  122. அவன் அழிவில்லாத தேகி- உ.வே. ஈண்டுக்கூறிய இக் கருத்தை,“ப்ரவர்த்தமாநோ தேஹாதிஸ் சேதனாதிஷ்டிதஸ்ஸதா ஸ்வதஃப்ரவ்ருத்திசூன்யத்வாத் ஜடத்வேன் கடாதிவத் யஸ்து ப்ரவர்த்தகஸ்ஸோரயமாத்மேதி பரிபட்யதே(சேதனன் உடனிருக்கையில் இயக்கம் பெறுகின்ற தேஹம், குடம் முதலியனபோன்று தானே இயங்க வல்ல தன்று. இயக்குகின்றவனே ஆத்மா) என்று பௌட்கரமும் கூறுவது காண்க.

  123. இவ்வைந்தனையும், ‘தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை’ க்கண் “பக்க மேதுத் திட்டாந்தம் உபநயம். நிகமனம் என்ற ஐந்துள அவற்றிற், பக்கம் இம்மலை நெருப்புடைத் தென்றல், புகையுடைத்தாதலால் எனல் பொருந் தேது, வகையமை யடுக்களை போல் திட்டாந்தம்; உபநயம் மலையும் புகையுடைத் தென்றல், நிகமனம் புகை யுடைத்தே நெருப்புடைத் தெனல்” (57-63) என மணிமேகலையாசிரியர் விளக்கியுரைப்பது காண்க.

  “பஞ்சாவயவம் பிரதிஞ்ஞாஹேதுரேவச

  த்ருஷ்டாந்தோ பநயாவேதௌநிகமஸ்சாத பஞ்சம்

  (அனுமானத்தில் பிரதிஞ்ஞை, ஹேது, த்ருஷ்டாந்தம், உபநயம் நிகமம் என்ற ஐவகைப்படி உண்டு)” (பிரமா சூ. 38) என்று பௌட்கரமும் இவ்வைந்தையும் கூறுகிறது.

  124. அறிவுடையதை அறிவென்றது உபசாரம்.

  125. அறிவின்மையை வறுமையென்றார்; “அறிவிலாதார் என்னுடைய ரேனுமிலர்” (குறள் 430) என்பது பற்றி.

  126. உடல் ஆன்மா இரண்டனையும் பகுத்து நோக்கி, உடலை அசேதனம் என்றும், ஆன்மாவைச் சேதனம் என்றுந் தெரிந்துணர்தல் ஆன்ம ரூபம்; அசேதனத்தின் நீங்கித் திருவருள் ஞானத்தை மேற் கொள்ளுதல் ஆன்மதரிசனம் என்று சான்றோர் கூறுப. “ஆசறவே தன்னறிவாய் மூன்று முண்டாய்த் தோன்றுங்கால் அது ரூபம் ஆங்கறிவற்று உனைக் காண்டல் தெரிசனமாம்” (தட்சிணா- தசகாரி.7) என்றும் “பாசம தகல ஞானம் பற்றல்” (சிவப். 71) என்றும் வருதல் காண்க.

  127. இப்படியா யிருக்குமென் றறிவாயாக, எ-று.

  128. யேறிய; லேரிய வீசன்- பா. வே.

  129. இப்பாட்டு, மிருகேந்திரம் பசுலக்ஷணப் பிரகணத்து,“கார்யம்க்ஷித்யாதி கர்த்தேசஸ்தத் கர்த்துர நோபயுஜ்யதே; நஸ்வார்த்தமப்யசித்யாவாத் நாநர்த்யம்கர் த்ருகௌரவாத் பாரிசேஷ்யாத் பரார்த்தம் தத் க்ஷேத்ரஜ்ஞஸ்ஸவர - ஸ்தயோ;

  (சு. 2,3) என்று வரும் சுலோகங்களின் பொருளை உட்கொண்டு நிற்கிறது.

  130. செயலா யிருந்தன - உ.வே.

  131. அழகிய இயல்பையுடைய பரமசிவன் - உ.வே.

  132. செய்வோனது செய்கையின் விளைவே செயப்படுபொருள்; அதனாற் பிறக்கும் பயனாகிய போகம் செய்வோனைச் சேருமென்பது அறிவு நூற்றுணிபு; ஈண்டுச் செயப்படுபொருளாகிய உலகத்தாற் பிறக்கும் போகம் செய்வோனாகிய பரமசிவனைச் சேராது என்பதாம்; இக்கருத்தையே, கச்சியப்ப முனிவர், பேரூர்ப் புராணத்தே “உலகு காரணம் மாயை; உண்ணான் வினை அமலன்” (காலவர் 62) என்று கூறினார்; வினை யென்பது வினைப்போகம். வினையின் பயனாகிய இன்பமேயன்றித் துன்பமும் போகமெனப்படும் “போக மாவது சுகதுக்கங்களை யறிவிக்கும் ஞானம்” என்றும் “புருஷனுடைய சுகதுக்க ரூபமான அறிவே போகம்” என்றும் சுவாயம்பு வாகமம் கூறுகிறது.

  133. விரிந்துயர்ந்த காரியமாகிய தேகாதி தத்துவத் தொகுதி - உ.வே.

  134. காரியமாகிய தேகாதி பிரபஞ்சம் தானே தனக்குப் போகப் பொருளாவதில்லை- உ.வே.

  135. ஆனாது தன் நேர் இல்லான் செய்தது என்னை யென்னின் என்றியைத்து, “நிமித்த காரணனாகிய தனக்காவது பிரபஞ்சம் பிரயோசனப்படாமையால் அமைந்தொழியாது தன்னை யொப்பார் இல்லாத சருவேசன் இவையிற்றைச் செய்வானென் னெனில்; கொன்னே செய்யான்-அவன் அத்தன்மையுடையனாகையால் அப்பிரயோசனப்படச் செய்யான்” என்றோருரை வேறுபாடு சில ஏடுகளில் காணப்படுகிறது.

  136. முதல்வனாகிய பதிப்பொருட்கும், சடமாகிய பாசத்துக்கும் பயன் படாமை காட்டி, காசினியாதி காரியம் பயனில் செயலாமென்பது பட, “ஆனாது என்னை செய்தது” என்று வினவுதலின், பயனில் செயலன்று என்று தெரித்தற்கு “அன்னோ ‘என்றும்’ கொன்னே செய்யா” னென்றும் கூறும் நெறி நோக்கி, “இந்த நெடும்பிழை” என்று உரை காணப்படுகிறது. பயனில் செயலும் சொல்லும் மக்களும் பதடிபாற் காணப்படும் பெரும்பிழை யாதலின் “நெடும்பிழை” என்றார்.

  137. “சீரார் ஒழிபென்று செப்பப்படுவது திண்புவிமேல், போராடி நின்று பொருதார் இருவர்தம்போர்க்களத்துப், பாராரி ராகவன் வென்றான் எனில்தன் பரிசழிந்து, நேராரமி ராவணன் தோற்ற சொல்லாகி நிகழ்வதுவே” (சிவ. சித்தி அளவை. மறைஞான தேசிகர் உரை.) பாரிசேடம் ஒழிபென்றும் வழங்கும்.

  138. காசினியாதி காயத்தைப் பரமன் உயிர்களின் பொருட்டேபடைத் தானென்றும் அதற்குக் காரணம் ஈதென்றும் கூறுவார், அருணந்தி சிவனார் “உயிர்க்கு மன்னிய புத்தி வழங்கலும் அருளால் முன்னே துன்னிய மலங்களெல்லாந் துடைப்பதுஞ் சொல்லலாமே” (சிவ.சித்1: 36) என்றும், இந்நூலாசிரியரே பிறிதோரிடத்தே, “விரவிய பந்தங் கூடா தோடின் குலவிய போகம் துய்த்தல் செல்லான் செல்லானாக, எய்த்தல் இன்றாம் இருவினையாக, அபவர்க்கமும் மற்றும் அடையான்” (ஞானா: 10 6-10) என்றும் கூறுதல் காண்க.

  139. ஆன்மாவுக்காக வேண்டும்- உ.வே.

  140. சைதந்நியமாக- இஃது அச்சுப்பிரதியில் இல்லை.

  141. இந்திரிய முதலிய பாசக்கூட்டத்தை நோக்க, ஆன்மா பரமாதலின் ஆன்மாவைப் பரன் என்று ஆகமங்கள் கூறும். சொரூபானந்திசித்தி யென்னும் நூலுடையார், ஆன்மாவைப் பரன் என்றதற்குக் காரணம், “இந்திரியங்களிற் பொருள்களே பரம் மனம் இவற்றினும் பரம் இத்திற்- புந்தி நற்பரம் இதினும்மான் பரம் எல்லாம் பொன்றிய தெரியாமை- அந்த மானினும் பரம்அவ்வி யத்தமாம் அதிற்பரம் புருடன்றான்-இந்த மெய்ப்பரம் புருடனிற்பரம் பிறி தில்லை மேல் இவனேயாம்” என்று கூறுகின்றார். “மேல் இவனேயாம்” என்றது, மேலே இவ்வைவகை நிலையின் நீங்கி அத்துவித பாவனையாற் பரமான்மாவென நிற்கும் இயைபுப்பற்றியென அறிக; இதன்விரிவைச் சருவ ஞானோத்தரத்துட் காண்க. பாரிசேடத்தில் கழிந்தன போக எஞ்சுவது பரமாலின், எஞ்சி நிற்கும் பசுவினைப் பரன் என்றார் என்றுமாம்.

  142. இப்பகுதி, பாரிசேடம் என்பதன் உரையிடையே விரவிச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது

  143. மின்னுகு- பா. வே.

  3.“கிளரா தரத்துண்ணும் அன்னஞ்சுடக்கை, கிட்டப்பொறாதேயிருந்தார் கிடந்தார், தளராதுறுப்பொன்றும் உயிர்போக வன்றே தழற்பள்ளிமீதே துயின்றார் சகித்தே”-சசிவன்னபோதம் தாழிசை 44

  4.  முகையன - பா. வே.

  5.  எருக்குதல்- மகளிர் மார்பில் அறைந்துகொள்ளுதல்: “அறனில் கூற்றம் திறனின்று துணிய, ஊழி னுருபப எருக்கிய மகளிர், வாழைப் பூவின் வளை முறி சிதற” (புறம். 237) என வருதல் காண்க. இவ்வெருக்குதல் அருக்கு தலென்றும் வழங்குகிறது; “பெருவிதுப் புற்ற பல்வேண் மகளிர், குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்” (அகம் 208) என வருதல் காண்க.

  6.  “நிழற்பாவை கண்ணாடி யிற்பாவை கைகால், நிமிர்க்கும் முடக்கும் இவன் செய்யுமெல்லாத், தொழிற்பால வாமற்றிவ்வுடலஞ் செய்தொழிலும், சுடர்ஞான வடிவானவன் செய்த தொழிலே” -சசி., போ. தாழி 45. “கையுங் காலும் தூக்கத் தூக்கும், ஆடிப்பாவைபோல” (குறுந். 8) என ஆலங்குடி வங்கனார் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது.

  7.  வாகுவலய முதலாகவுள்ள தோளணிகலமும், முடி முதலாக வுள்ள தலையணிகலமும், மகரக்குழை முதலாகவுள்ள காதணிகலமும் இத்தன்மைத்தாகிய அணிகலங்களை- உ.வே.

  8.  புத்திபண்ணாதே- உ. வே.

  9.  அங்கதம் மகுடம் முதலாயவற்றைப் பாரமென் றெண்ணாது ஆரமென் றணியும் செயலே மயக்கமுடைமைக்குப் போதிய சான்றாதலின், “மம்மர் மாந்தரின்” என்றார். மயக்கத்தின் விளைவு அறியாமை யாதலால், அதனையுடைய மாந்தரை “அஞ்ஞானிகள்” என்று உரைக்கின்றார். அணிந்து மயக்க முறும்- உ. வே.

  10. உலகரைப்போல- உ.வே.

  11. நிச்சயமாக உடம்பு நீயல்லையானபடி- உ.வே.

  12. திரட்சியாகிய நெல்- உ.வே.

  13. “மோட்டிருவரா அல்” (புறம்.499) என்றாற் போல மோடென்பது, பெருமைப் பொருட்டாயினும், ஈண்டு மிகுதி குறித்து நின்றது.

  14. மூரல்- சோறு; “பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்” (பெரும்பாண். 168) என்று பண்டைச் சான்றோரும் வழங்குப.

  15. சவத்தை- உ.வே.

  16. புகழ்ச்சியில்லாத பாடையிலேயிட்டு உ. வே. புகழாக் கட்டில்- பாடை; இது வெளிப்படை; உ.வே. இப்பாடையைக் “கால் கழிகட்டில்” என்றலும் மரபு; “கால்கழி கட்டிலிற் கிடப்பி” (புறம். 286) எனச் சான்றோர் கூறுதல் காண்க.

  17. இட்டிடை - சிறிய இடை; இட்டென்னும் சொல் சிறுமைப் பொருட்டாதல், “ஆகா றளவு இட்டி தாயினுங் கேடில்லை” (குறள். 478) என்பதனாலும் அறியப்படும்.

  18. செத்தார் பிணத்தைநெடுங்காலம் மனையில் வைத்திருத்தலாகாது என்னும் உலக வழக்குப் பற்றிச் “சட்டென” என்றார்; காலம் தாழ்க்கின் தீநாற்ற மெழுந்து வாழ்வார்க்குத் தீங்கு பயக்கு மென்பது கருத்து.

  19. அடுக்கிக் கிடத்திய வழி - உ.வே.

  20. ஒளியையும் புகையையுமுடைய அவ்வக்கினியை ;- உ.வே.

  21. கொன்னே வேஎம்; விகற்பமற வேகும் - உ.வே.

  22. விறகின் தன்மை இந்தச் சரீரம் - உ.வே.

  23. இதனால் தேகத்தின் சடத்துவம் கூறப்பட்டது - கு.ரை.

  24. நீக்குதற்கரிதாகிய - உ.வே.

  25. காதளவு நீண்ட செவ்வரி கருவரி பரந்த கண்ணையுடைய மாதர்களெல்லாம் - உ.வே.

  26. என்ற ஆங்கும்- என்ற அப்பொழுதும்- உ.வே. என்ற என்புழி ஈற்றகரம் விகாரத்தால் தொக்கது.

  27. மெத்தென மெத்தென- உ.வே.

  28. கன்மம் புசித்தற்கு நெறியாகிய சரீரமும் - உ. வே.

  29. செயலாயிருக்கும் - உ.வே.

  30. இதனால் தேகத்தினுடைய சரியாபாசம் (சரித்திராபாசம்?) (போலியியக்க) மென்னும் குணம் கூறப்பட்டது - உ.வே.

  31. தானை யானை - பா.வே.

  32. “எனதாடை பொன்பூ மகன்தையல் பாய்மா, இபங்கண் முகங்கால்கை மெய்யென்ன என்றும், தனதாயுரைப்பான் வகுத்திந்த வூனைத் தானென் றயர்த்துஞ் சொலத்தக்க தன்றே” - சசி. போ. தாழி. 40. ஈண்டு, ஆடை முதலிய வற்றைத் தனித்தனியே என தென்றும், கண் கால் முதலியவற்றை என்ன (என்னுடையன) என்றும் கிடந்தவாறே கொண்டு பொருள் காணமாட்டாது தத் தமக்கு வேண்டியவாறு பிரித்துக் கூட்டி இயைபில்லன உரைத்து இடர்ப்படுவாரு முளர். கு.ரை.

  33. ஒருகூறு மனமாகும் ஒருகூறு மலமாகும், ஒரு கூறு டம்பாகும் உண்டற்ற அன்னம், இருகூறு நீயாகில் ஒருகூறு நீயாம், இழிக்கும் மலஞ் சோ ரிடப்பட்டதுடலே” -சசிவன்ன போதம். தாழி. 43

  34. திழித்தகு மலமா- பா.வே.

  35. “தாளாக வூராளி யார்வெந்நில் வீணா, தண்டாக வன்மார்பு தட்டாக மொட்டா, நாளா மலர்ச்சென்னி கூந்தற் கொடித்தேர் நாணாளு மூர்வானின் வேறாக நாடே” - சசி. போ. தாழிசை 41 கொளுமிடை - பா.வே.

  36. தானை யானை யென்று பாடங்கொண்டு, “படையும் புடவையும் யானையும்” என்று கூறும் உரை வேறுபாடும் உண்டு.

  37. ஐயமறப் பொன் முதலாகவுள்ள ஒரு பக்கத்தைத் தம்முடையன வென்று பார்த்தும்- உ.வே. ஐயமறவென்பது அயமறவென வந்தது.

  38. மார்பு முதலாகவுள்ள ஒரு பக்கத்தைத் தாமென்றும் மயங்கிப் பித்தேறினார்- உ.வே.

  39. இது கிழமை கூறிற்று- குறிப்புரை.

  40. சுவைத்துக்கொள்வதாய் - உ.வே.

  41. மூன்று கூறாகி, இவையிற்றில் - உ.வே. தேகத்தில் தங்கிய உணவுப்பொருள்தானும் மூன்று கூறாகி முறையே எலும்பு முதலி யனவாகவும், தசை முதலியனவாகவும் வாக்கு முதலியஇந்திரியங்களாகவும் மாறும் என்றும், உண்ணப் படும் நீரும் இவ்வாறு முக்கூறாகி, ஒருகூறு சிறு நீராகவும், ஒரு கூறுகுருதியாசுவும், ஒருகூறு உயிர்க்கற்றைாகவும் மாறும் என்றும் கூறுப.

  42. விரும்பத் தகாத என்பது அச்சுப்பிரதியில் இல்லை.

  43. ஆதலால் இந்தக்கழித்த மலம் நீயல்லாமை யறிந்தாயே, இந்த ஒரு கூறாகிய மலம் நீயாகில்- உ.வே.

  44. இது தேகத்தின் அசுத்தத்தன்மை கூறிற்று- கு.ரை.

  45. அல்லகாண் - ஒரு சொல்- உ. வே.

  46. நீ அறிவைக் கண்டாயே- உ. வே.

  47. ஆர்க்கட்டையும் - உ.வே.

  48. சிரமென்னும் தலையலங்காரத்தையும் உடைத்தாயிருக்கின்ற - உ.வே.

  49. செய்கையில் வைத்து மதித்துக்கொள்வாயாக - உ.வே.

  50. இது அசேதனத்தன்மை கூறிற்று - கு.ரை.

  51. இக்குறிப்புக்கள் பல ஏடுகளில் காணப்படவில்லை.

  52. “விண்டுவன்ன வெண்ணெற் போர்வின்” (ஐங். 58) எனச் சான்றோர் கூறுப.

  53. கோதுகு குணத்தர் -பா. வே; கோது குணத்தர் - பா.வே.

  54. அவற்றது தொடர்பாம் என்று பாடங்கொண்டு சூக்கும தூல சரீரங்களது தொடர்ச்சியா யிருக்கும் என்று உரை வேறுபாடு கூறிய பிரதியுமுண்டு.

  55. “மூன்று குற்றம் மூன்று குணம் முன்று மலம் மூன்றவத்தை, என்று நின்று செய்யும் இருவினை” (நெஞ்சு. 19).

  56. யறிவன்- பா.வே.

  57. இது பின்னரும் தூல சூக்மேமான தேகத்தை பா.வே.

  58. குற்றமற்ற மகத்தான சரியை கிரியாயோக முதிர்ச்சியினாலே சூக்ஷிக்கப்படாநின்ற; மகா தவசியாலே சூக்ஷிக்கப்படாநின்ற - உ.வே.

  59. சரீரமிருக்கும்படி யாராய்ந்த முறைமையை- உ.வே. ஈண்டுத்தேகம் வேறு ஆன்மா வேறு என்று துணிந்து, தேகத்தின் தன்மையைப் பகுத்து ஆராய்வது பற்றி, தேகாத்தும விசாரம் செய்யும் முறைமை யென்று மெய்யுணர் பக்கத்துக்கு உரை கூறுகின்றது என அறிக; “அந்நிய மென்ப தறிவோ யறிதி அங்கம் பிறிது”(ஞானா 14; 12-3) என்பது காண்க.

  60. ஏடுகளில் இப்பகுதி மிகவும் முறை மயங்கிக் காணப்படுகிறது.

  61. உண்ணிலைப் பஞ்சவிஞ்சதி; “செவியாதி வாக்காதி தானம் பத்தின் திகழ்சத்த வசனமுதல் விடயம் பத்தும், பவமாமத்தானத்தில் உணர்ந்து பண்ணும் பகர்ஞான கருமவிந்திரியம் பத்தும், துவமாகச் சிந்தித் தாய்ந்தே துணிந்து துரிசறவே செய்யுமன முதலா நான்கும், அவையாளுமவனுடனுள் ளையைந்தன்றி யறைதூல சூக்கபர மையைந் துங்கேள்” - சித்தாந்த தீபிகை

  62. உண்ணிலை யொருவகை யிருபத்தைந்தாவன: பஞ்சமா பூதமாகிய பிருதிவி யப்பு தேயு வாயு ஆகாசாம் ஐந்து, தன்மாத்திரையான சததாதிவிடய மைந்து, கன்மேந்திரி யமான வாக்காதி யைற்து, ஞானேந்திரியமான சோத்திராதி யைந்து, மனமாதி அந்தக்கரண நான்கு, இவற்றைக் கொண்டு முயறற்கிடமானபோது புருடனெனப் பெயர் பெறும் தத்துவமொன்றுமாம்- உ.வே.

  63. “இச்சா ஞானக்கிரியை முன்மருவி யான்மா, நிச்சயம் புருடனாகிப் பொதுமையின் நிற்பனன்றே” (சிவ. சிந். 2: 56) என்பதும் “போகத்து உன்முகமாகிய உயிரே புருட தத்துவமென நிற்பதன்றி வேறில்லை” என வரும் அதன் உரையும் காண்க.

  பஞ்ச கஞ்சுகஸம்யுக்த; ப்ரக்ருதிம் போக்து முத்யத: அவித்யாதிஸமாயுக்த: புருஷ: பரிகீர்தித:

  (VI. 2) என்று பௌட்கரம் கூறுகின்றது.

  64. “மண்ணதனின் என்பொடுதோல் நரம்பிறைச்சி மயிரென வைந்தப்பதனின் உவர்நீர் மூளை, பண்ணியசுக் கிலஞ்சோரி நிணமைந்தங்கி பசிதாக நித்திரைமை துனம் மறப்பாம், நண்ணியகாற் றுரை யோங்கல் நடத்தல் நிற்றல் நலந்திகழ விருத்தலென வைந்தாம் வானில் கண்ணுபயங் கதம் இலச்சை யுலோபமாசை கருதுடம் பிற்புறநிலையாம் ஐயைந் தன்றே” - சித்தாந்த தீபிகை.

  65. மகாபூதமைந்தின் அமிசமாகிய இருபத்தைந்துமாம்-

  66. “என்பொடு தோல்நரம் பிறைச்சி மயிரெனப், பொன்படு பூமி பொருந்திய கூறே” - வீட்டுநெறி, “அன்றியும், மண்ணின் பகுதி, நரம்பு, இறைச்சி, என்பு, மயிர், தோல் என ஐந்து (சிலப். 3: 26, அடி. நல் உரை.)

  67. “மூத்திரஞ் சுக்கில மூளை யொடுநிணம், பேர்த்தெழு சோரியு நீரின்கூறே” - வீட்டு நெறி.

  நீரின்பகுதி நீர், மூளை, சுக்கிலம், நிணம், உதிரமென ஐந்து- (சிலப். உரை.)

  68. “பசியே சோம்பு நித்திரை மறவி, வசிதரு மைதுனம் அங்கியின் வகையே” - வீட்டு நெறி. அக்கினி, வாயு என்ற இரண்டின் கூறுகளை, “பசி சோம்பு மைதுனம் காட்சி நீர்வேட்கை, தெசிகின்ற தீக்குணமோ ரைந்து- மொசி கின்ற, போக்கு வரவு நோய்க்கும்பித்தல் மெய்ப்பரிசம், வாக்குடைய காற்றின் வகை” (சிலப்,3 : 26, அடி. நல். மேற்)

  69. “ஓங்கல் ஓடல் உரைத்தல் இருத்தல், வாங்கல் என்றிவை வாயுவின் கூறே” - வீட்டு நெறி.

  70. “குரோதம் உலோபம் இலச்சை பயமொடு, நிரோதமில் மோகம் நீள் விசும்பாமே” - வீட்டு நெறி. “ஓங்கும் வெகுளி மதமானம் ஆங்காரம், நீங்காவுலோபமுடன் இவ்வைந்தும் - பாங்காய, வண்ண முலை மடவாய் வானகத்தின் கூறென்றார், எண்ணிமிக நூலுணர்ந்தோர் எண்”- (சிலப். அடி. நல். மேற்.)

  71. இது செப்பறைப் பிரதியில் மட்டில் காணப்படுகிறது.

  72. “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன், நாமங் கெடக் கெடும் நோய்”- (திருக்குறள்: 360).

  73. “திரிகுணமாம் அவைதாம் இவ்வகையிற் சாத்துவித ராசத தாமதமாய் இயம்புவர்கள்”-

  (சிவப். 41).

  74. “குறையா மும்மலக் கொத்தே முறைதேர், ஆணவ மாயை கருமம்” (ஞானா. 18. 4- 5).

  75. இருவினையின் தோற்றங்கள் மனமுதலியவற்றின் அசைவு அசைவின்மைகளாதலின், இம்மூன்றையும் தனியே வாங்கிக் கூறுகின்றார்.

  76. கருப்பு - உ.வே.

  77. சிவப்பு - உ. வே.

  78. வெளுப்பு - உ. வே.

  79. இவ்வைந்தனையும் பொன்மை, வெண்மை. செம்மை, கருமை, புகை நிறம் என்ற சிவஞான சித்தி கூறுகிறது. புகை நிறம் இவ்வுரையில் நீலமெனக் குறிக்கப்படுகிறது. ஐம்பூதங்கட்குமுள்ள நிறமே ஈண்டுக் கொள்ளப்படுதல் பற்றி நிறம் ஐந்தாயிற்று: இதனை, “பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல்சிவப்பு, வன்கால் கருமைவளர் வான் தூமம்”(உண்மை விளக்- 5) என்பதனாலறிக.

  80. “மருவானந்தம் விஞ்ஞானம் மனோபிராணன் அன்னமயம்”- (சிவ. சித். 4: 23) இவற்றுள் விஞ்ஞானம் ஆனந்தம் என்ற இரண்டும் முறையே சீவான்மாவும், பரமான்மாவு மாம் என்பர் பிறர்; இனி, மெய்ஞ்ஞான விளக்கமுடையார், “தூலமாம் அன்னகோசம் தூலத்திற் பிராணனுற்றால், வாலிய பிராணகோசம் மன்னுறின் மனோ மயந்தான், சாலவே பத்தியுற்றால் தகுதிவிஞ் ஞானகோசம்.

  ஏலவே விடயமுண்போ திசைந்த தானந்த கோசம்” என்றும், சித்தாந்த தீபிகையுடையார், “அன்னமயமாதிவரும் கோசமிவையைந்தும், துன்னியெழும் ஈருடலம் ஆகும் அவை தம்மின், நன்னருரு தூலமொழி நாலுமறை சூக்கம், என்னும் இவை தம்மினுணர் என்வடிவு வேறே” (பெருந். 1087, 1088) என்றும் கூறுவர்.

  10. “மூலஞ் சுவாதிட் டானந்தான் மணிபூரகமேல் விகத்தியுடன் மேலங் கனாகதம் மாஞ்ஞை விளம்புமிரு மூன்றாதாரம் - (குறுந். 318).

  11. இக் கூறியன வேயன்றி இன்னும் பலபல தத்துவங்களை அறிஞர் கூறுவர்; அதனால் “பிறவும்” என்று கூறுகின்றார்; “பன்னுவர் பலபல தத்துவங்களை” என்றும், தத்துவம் பலவெனச் சாற்றுவ” ரென்றும் முறையே போதாமிர்தம், மூலசித்தி என்ற நூலாசிரியர்கள் கூறுவர், “எத்தனையோ தத்துவங்கள்” (களிறு 38) என்பர் உய்யவந்த தேவநாயனார்.

  12. “ஆன்மாவின் உண்மை யுணர்தற்கு இவற்றை இங்ஙனம் பகுத்தறிதலும் ஒரு சாதனமெனக் கொள்க” என்பர் சிவஞான முனிவர் “நன்றாவுரைக்கக் கேள் நல்லசித்தின் முன் அசித்திங், கொன்றாது சித்தசித்தை யோராது- நின்றிவற்றை அன்றே பகுத்தறிவ தான்மாவே என்று மறை, குன்றாமல் ஓதுங் குறித்து” (உண்மை. 24) என்பதும் காண்க.

  13. தத்துவ தீபிகை யுடையார் இவ்வாறு தத்துவங்களைக் கழித்துக் கண்டோரை நின்மல ஞானவான்கள் என்று கூறி, “சிவமுதலைந்திராகாதி யைந்தும் சேருந் திகழ் நிவர்த்தி முதலைந்து மூர்த்த மூன்றும், அவமுறுமுப் பிணிது யரஞ் சங்கங் குற்ற மாகிய பாசங்களுநற் சுடர்தான் மூன்றும், துவமுறமுற் சாற்றியிடுந் தொண்ணூற்றாறுந் தொகுத்துரைத்த நூற்றிருபத் தொன்பதுந்தான், அவமதற ஆய்ந்தவற்றைக் கடந்தவுண்மை அறிந்தவர்கள் அமலரென அறிக ஐயா” என்று கூறுகின்றார்.

  14. ஆன்மாவும், இச்சை ஞானம் கிரியை என்பவற்றை யுடையனென்பதை அருணந்தி சிவனார், “சீவனும் இச்சா ஞானக் கிரியையால் சிவனையொப்ப னாவன் என்றிடின்” (சிவ. சித். சூ. 1: 64) என்பதனால் உணர்த்துகின்றார்.

  15. “கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி வேய்ந்து தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத்து” - திருநா. 33: 4.

  16. “வீணாதன் டென்னாரின்” - ஞானா. 14.

  17. “என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் மில்லம்” - ஞானசம். ஆரூர் 8.

  18. நானிலை- பா. வே.

  19. சுவனம் - பா. வே.

  20. யுந்திப் பொருநாள் - பா. வே.

  21. புந்தீந்தியமும் - பா. வே.

  22. பிராணா பானா- பா. வே.

  23. நீரி -பா. வே.

  24. செயப்படும்- பா. வே.

  25. றீண்டி-பா. வே.

  26. னீங்கிய- பா. வே.

  27. கனாக்காண்டல் மேனோக்கிய அவத்தையினன்றி ஈண்டில்லையென் பாரை மறுத்தற்கண், மாதவச் சிவஞான முனிவர், “நனவெனக் கனவி னன்னடை வழாஅ, துரைத்தனன் சொப்பனத்து எனக் கீழ்நோக்கு மவத்தையின் இயல்புரைப்புழிக் கூறுதலானும்…………சாக்கிரத்தினின்று இழியுங்காலும் அதீதத்தினின்று ஏறுங்காலும் கண்டத் தானத்திற் கனவுநிகழ்த லுண்டென்பது தெற்றென வுணர்க” (சிவ.போ. பாடி. சூ. 4: அதி. 3) என்று கூறுவாராய் இப்பகுதியினை எடுத்துக் காட்டுகின்றார்.

  28. இடைத்தகத் தெரித- பா. வே.

  29. சிவஞானமாபாடியத்து (சூ. 4: அதி.3) ஸ்ரீ மாவதச் சிவஞான முனிவர், அந்தக் கரணங்களும் ஏனைக் கருவிகளும் அரசுறுப்புக்களோடொக்குமென்றுரைத்து இவ்வகவலை யதற்குச் சான்றாகக் காட்டுகின்றார்.

  30. தேகத்திலே நின்று தேகி போகங்கொள்ளும் முறை எங்ஙனே யென்னப் பஞ்சாவத்தை சாதகத்தாற் பசு தரிசனம் கூறியது - பா.வே.

  31. வெந்நில் வாழிய தண்டு என்று கொண்டு முதுகிலே வாழப்பட்ட வீணாதண்டு என்று உரைகூறிய பிரதியுமுண்டு.

  32. இயல்பாகிய - உ.வே.

  33. நிரல்பட வைத்து - உ. வே.

  34. மாங்கிசமென்னும் - உ. வே.

  35. இனி, திருநாவுக்கரசு சுவாமிகள் “இரண்டு வாசல் ஏல்வுடைத் தாவனமத்து அங்கு ஏழுசா லேகம் பண்ணி, மால்கொடுத் தாவி வைத்தார்” (மறைக்காடு 4) என்பர்.

  36. சிகரமாகிய மணிக்குடம் போன்ற தலையையும்- உ.வே.

  37. நால்வகை நிலையையும் பொருந்திய- உ. வே. நான்கு நிலை: “சாக்கிர முதலிய நான்கவத்தைக்கு முரிய நான்கிட மென்க; துரியாதீதத்திலே கருவிகள் கூடாமை பற்றி அவத்தைப் படுதற்குரிய நான்கிடம் கூறினாரென்க.” என்பர் சேற்றூர் சுப்பிர மணியக்கவிராயர்; இவ்வாறே குறுந் திரட்டுடையாரும், “நன வொடு கனவு கழுத்தியேறுரிய நான்கெனச் சொலப்படும் அவத்தை” (பெருந்- குறுந். 1) எனத் துரியாதீதத்தை விலக்கியே கூறுதல் காண்க. ஆனால், குறுந்திரட்டுடையார் கொள்கையால் வேறுபட்டவரென அறிக.

  38. ஈண்டுத் தேகத்தை ஒரு பெருமனையாக உருவகஞ் செய்தது போலவே சித்தாந்த தீபிகையுடையாரும், “அத்தி நற்றூணோடுத்தரந் துலாங்கொண்டழகுறு சட்டமா வமைத்து, வித்தக மாகப் பழுக்கழி நிரைத்து விவிதமாஞ் சிரையினாற் கட்டி, மெத்து நீருதிரந் தசையெனு மண்ணான் மேவவே சுவர்செய்து மேலங், குய்த்ததோல் கேசவுரோமத்தால் வேய்ந்த வுரோககா யத்தினை யுரைப்பாம்” என்றும், “உரைத்தவாய் வாய்தல் செவிமுத லெட்டு மோங்குசாளரங்களாயதரந், திருத்துநற் கபாடம் பற்கள் தா ளாகித் திகழுநா மொக்கதா மலாதிப், பெருத்த பண்டமதாய்ப் பேதநா டிகளாற் பெருகையும் பித்துதே மிகுத்து, வரைப்பில் சோகாதி மூப்பினாற் பரந்த மனையிதை யார்வகுத் துரைப்பார்” என்றும் கூறுகின்றார்.

  39. ஆன்மா இங்கே கூறியவாறு சாக்கிர முதலிய நான்கவத்தை யெய்தும் திறத்தை, ‘‘புருவமத் தியத்தே புலன்கரணங்கள் பொருந்திய பொழுது சாக்கிரமாம், கருவியில் தூக்கம் போகிமற்றவை தாம் களத்தினின் றிடுதகை கனவாம், இருதயத் தெல்லா மிறந்திடச் சித்தமொன்றிட நின்றது சுழுத்தி, ஒருவிமற் றதுநா பியினினால் விரலினும்பராய் நிற்பது துரீயம்” (குறுந். ஆதாரகரணகதா வத்தை1) என்பதனாலுமுணர்க.

  40. “மருமத்தாதி” என்பது முதல் “துரியம்” என்பது வரையுள்ள பகுதிகட்குச் சில ஏடுகளில் இவ்வுரை காணப்படவில்லை.

  41. உந்தியும்பர் ஒருநான் கங்குலி துரியம் என்பதற்கு நாபித் தானத்துக்குமேலே நான்கங்குலத்து நின்றபோது என்று ஒரு பிரதியிற் காணப்படுகிறது. சிவஞான சுவாமிகளும் துரியாவத்தையைப் பற்றியுரைக்கு மிடத்தே, “இனிச் சித்தமும் தனது சத்தி மடங்கிச் செயலற்றொழியும் அவத்தையின் என்னும் இரண்டு கருவியுங்கூடி உடம் பிற்குக் காவலாகிய தன்னையே விடயிக்கும் அவத்தை துரியம்; இதற்குத் தானம் உந்தி” (சிவஞா. பாடி. சூ. 4: அதி. 3) என்று பொதுப்படக் கூறியுள்ளார். இவ்வாறு சொல்லுமிடத்து, திருமூலநாயனார் துரியாவத்தைக்கு இடம் உந்தியென்றே கூறுவர்; “ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம், கை கண்ட பன்னான்கிற் கண்டங் கனாவென்பர், பொய்யாகுந் துரியமே”(திருமந். 2142) என்பது காண்க. அருணந்தி சிவனார், “சாக்கிர முப்பத்தைந்து நுதலினிற் கனவு தன்னில், ஆக்கிய விருபத்தைந்து களத்தினிற் சுழுனை மூன்று, நீக்கிய விதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி, நோக்கிய துரியாதீதம் நுவலின் மூலத்தினொன்றே” (சிவ. சித். சூத். 4:33) என்பர்.

  42. முகேஜாக்ரமிதிஞேயம் ஸ்வப்னந்து ஹ்ருதயாந்தகம்

  ஹ்ருதயாதிஸமாரப்ய நாப்யந்தந்து வீஷரப்திகம்

  தஸ்மா தயஸ்துரீயஸ்ய துர்யாதீதம் துலிங்ககம்

  என்று சித்தாந்த போத முதலியன கூறுவது காண்க.

  43. இப்பகுதிக்குமட்டில் அச்சுப் பிரதியிலும் செப்பறைப் பிரதியிலும் பொழிப்புரையே காணப்படுகிறது.

  44. பொறியிலே நின்று - உ. வே.

  “உடம்பின் உரைக்கும் உரையா நாவிற், படம்புகு மிலேச்சர் உழையராக” (முல்லை. 65-6) என்று நப்பூதனார் கூறுவதும், நச்சினார்க் கினியர், “வார்த்தை சொல்லாத நாவினையுடைய கையாலும் முகத்தாலும் வார்த்தை சொல்லும் சட்டையிடும் சரவாசிகள் பள்ளிகொள்ளு மிடத்தைச் சூழ்ந்து திரிய” என்று உரைப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற்குரியன.

  45. வாயில்லாத அநாரிய மெய்காப்பாரும்- உ. வே. வாயில்லாத மிலேச்சர்களும்- உ.வே.ஆரியர் வேற்றுமொழியினராய்த் தமிழறியாது கையினும் முகத்தினும் தம் கருத்தை யுணர்த்துவோராயி ருந்தமையின் வாயில்லாத மிலேச்சர் என்று உரை நிகழ்வதாயிற்று என்க. மிலேச்சராவார் ஆரியராதலின், ஆரியமெய்காப்பார் என்றார்; ‘மிலேச்சர் ஆரியர்’ (72) பிங்கல நிகண்டு. ஆரியர் கேரள பங்கள நாட்டுக்கு வடக்கில் ஆரியகத்தில் வாழ்ந்தவர்; ஆரியகம் தாலமி முதலிய யவனர்களால் ஆரியக் (Ariake) எனக் குறிக்கப்படுவது.

  46. தூது போவாரும்; தூதரும்- உ.வே.

  47. ஈண்டுச்சொல்லப்பட்ட மெய்காப்பாரும் ஒற்றரும் தூதரும் ஏத்தாளரும் புரோகிதருமென்ற ஐவரும் அரசியற்கு உரிய பொருளையறிந்து அரசர்க்குணர்த்தும் அமைதியுடையராதலின், அவர்களை ஞானேந்திரியங்கட்கு உவமமாக வைத்து உருவகஞ் செய்தாரென்க; எனவே, ஞானேந்திரியங்களைந் தும் புறத்தே நிகழ்வனவற்றை யறிந்து ஆன்மாவுக்கு அறிவுறுத்தும் கருவியாவன என்றாராயிற்று. இவற்றின் இயல்பை, “நற்செவி, தவக்குக் கண்ணா தாசி யைந்தினையும் நல்லோர். புத்தியிந் திரியமென்று புகன்றனர் (சிவ. சித் 151) என்றும், “ஞானேந் திரியங்கள் நன்றாவுரைக்கக்கேள் ஊன மிகு பூத முற்றிடுமா- ஈனமாம், சுத்தாதி யையறியுந் தானஞ் செவி தோல்கண், அத்தாலு மூக்கென் றறி” (உண்மை. 11) என்றும் பிறரும் கூறுதல் காண்க;

  48. இப்பகுதிகட்குச் சில ஏடுகளில் உரையில்லை.

  49. இக் கண்மேந்திரியத் தொகுதிகளை “வாக்கொடு பாதம் பாணி பாயு வோ டுபத்த மைந்தும், நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளென நினைந்தே” (சிவ. சிந். 152) என்று அருணந்தி சிவனாரும், “கண்ணுதல் நூல் ஓதியிடுங் கன்மேந் திரியங்கள், எண்ணும் வசனாதிக் கிடமாக -நண்ணியிடும், வாக்குப் பாதம் பாணி மன்னுகுதமுபத்த மாக்கருது நாளும் அது” (உண்மை 14) என்று உமாபதி சிவனாரும் கூறுப.

  50. ஓசைமுதல் ஆனந்தமீறாகவுள்ள பத்தனையும், பத்தென்று தொகை கொடாது “விடயப் பல்பரிசன” மெனப் பொதுப்படக் கூறியதனால், பரிவாரம் அகப்பரிவாரம், புறப்பரிவார மென இருதிறப்படுதல்போல், ஓசைமுதல் ஐந்தும் ஞானேந்திரிய விடயம் என்றும், வசன முதலைந்தும் கன்மேந்திரிய விடய மென்றுங் கொள்க. இவை தமக்கு (ஞானேந்திரியங்கட்கு) சத்தநற் பரிசரூப விரதகந்தங் களைந்தும், வைத்தனர் விடயமாக அடைவினின் மருவும் என்றே” என்றும், “ஆக்கிய வசன கமன் தானமும் விசர்க் கானந்தம் ஊக்கமாரைந்தும் ஐந்தின் (கன்மேந்திரி யங்களின்) தொழிலென ஓதினாரே” (சிவ. சித். 151, 152) என்றும் சான்றோர் கூறுப.

  51. பரியானத்தாரும்- உ. வே.

  52. இப்பகுதியில் ஏனைப் பிரதிகளில் உரை விளக்கமாகக் கூறப்பட்டவை அச்சுப் பிரதியிலும் செப்பறைப் பிரதியிலும் உரையகத்தே பெய்து கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: - பிராணவாயு இதயத்தில் இந்திரநீல நிறத்தை

  யுடைய இடை பிங்கலை சுழுமுனையிற் போக்கு வரவு செய்யும் அபாவாயு குதத்தில் இந்திர கோபநிறத்தையுடைத்தாகி மலசலங்களைப் பிரிக்கும்; உதானவாயு, நாபித்தானத் திலே மின்னொளியின் நிறத்தையுடைத்தாகிய அக்கரங்களைப் பிரிக்கும்; வியானவாயு உடல் முழுதும் வியாபித்து நின்று பால்நிறத்தை யுடைத்தாகித் தேகத்தைச் சுழித்தல் முதலிய தொழில்களைச் செய்யும்; சமானவாயு கண்டத்திற் காயா மலர் நிறத்தையுடைத்தாகி அன்னசாரத்தை நாடி தோறுஞ் செலுத்தும்; நாகவாயு இளஞாயிற்றின் நிறத்தை யுடைத்தாகி நகை முதலிய தொழில்களைப் புறம்பே செய்விக்கும்; கூர்மவாயு குருந்தமலர் நிறத்தை யுடைத்தாகிக் கண்ணை யிமைக்கும்; கிருகரவாயு மஞ்சள் நிறத்தை யுடைத்தாகித் தும்மலை யுண்டுபண்ணும்; அஞ்சன நிறத்தையுடைத்தாகி- உ.வே. தேவதத்தவாயு பளிங்கு நிறத்தை யுடைத்தாகிக் கொட்டாவியைச் செய்விக்கும்; தனஞ்சயவாயு நீலாஞ்சன நிறத்தையுடைத்தாகித் தேகத்தை வீங்கவெடிக்கச் செய்யும். இவற்றைப் பிங்கல நிகண்டுடையார், “இருதய மண்டலத் தியங்கும் பிராணன்” “உச்சத் தலத்திடை நிற்பதபானன்”; “நாபியி னின்றங் கோவாது தானன்” “வியான னெங்கும் வியாபி யாய் நிற்கும்”; “கந்தரக் குழியிற் சந்திடைச் சமானன்”, முடக்கலு நீட்டலுங் கிளப்பது நாகன்”, “உரோமம் புளகித் திசைப்பது கூர்மன்”; “கிருகரனென்பது முகத்திடைக் கெழுமித், தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைக்கும்”; “ஓட்டமும் இளைப்பும் வியர்ப்பும் தேவதத்தன்” “ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின், உயிருடல் விடினுந் தானுடல் விடாஅது, ஒக்க நின்றங் குடலினை வீக்கித், தலைகிழித் தகல்வது தனஞ்சய னாகும்” (பிங்கல 33- 42) என்பர். இனி, இசை நுணுக்கமுடைய சிகண்டியார் “இடை பிங்கலை யிரண்டும் ஏறும் பிராணன், புடைநின்றபானன் மலம் போக்கும்- தடையின்றி, உண்டன கீழாக்கும் உதானன் சமானனெங்கும் கொண்டெறியு மாறிரதக் கூறு” என்றும் “கூர்மன் இமைப்பு லிழிகோணாகன் விக்கலாம், பேர்வில் வியானன் பெரிதியக்கும்- போர் மலியும், கோபங்கிருசுரனாங்கோப்பினுடம் பெரிப்புத்,தேவதத்த னாகுமென்று தேர்’ என்றும், “ஒழிந்த தனஞ்செயன்பே ரோதில் உயிர்போய்க், கழிந்தாலும் பின்னுடலைக் கட்டி- அழிந்தழிய, முன்னா ளுதிப்பித்து முன்னிய வான்மாவின்றிப், பின்னா வெடித்து விடும் பேர்ந்து” என்று கூறுவர். (சிறப். அடி. மேற்.) இவற்றுள் உதானவாயு கண்டத்தில் நிற்குமென்றும், நாகன் விக்கலிடு விக்கும் என்றும் தேவதத்தன் உடம்பெரிப்பை யுண்டு பண்ணு மென்றும் அடியார்க்கு நல்லார் கூறுவர்.

  53. அரசன் தன் அரசியலை நடாத்துதற்கு உறுதித்துணை வழங்குதலின், நட்பாளர் முதலாயினாரை உறுதிச்சுற்றம் என்றாற்போல, இவ்வாயுக்கள் பத்தும், உடற்கு உறு துணையாய் நின்று நடாத்துதலால், “தசவாயுக்களாகிய உறுதிச் சுற்றம்” என்றார்; இக் கருத்தை, “காவல்மற்றதுவாய் நின்று உறக்கத்தில் கருதுடல் பிணமெனாவண்ணம், ஆவது இத் தசவாயுக்களும் உடலாமாதியை நடாத்து காரணமாய் ஓவல் மற்றின்றி யுள்ளன விவற்றை யொக்கவே தரித்து நின்றுணர்ந்து, தாவலற்றுணர்வே யாகுமுன் தனக்குத் தகுமுடல் செயல்களொன்றிலையே” என்று தத்துவசித்தி என்னும் நூல் கூறுகின்றது.

  54. இது சில பிரதிகளில் இல்லை.

  55. மடைத்தொழிலாளரும் படைத்தொழில் வாணரும் - பா.வே.

  56. மனம் அத்தைச் செய்வித்து வருகிற நான்காகிய அந்தக் கரண மந்திரிகளும் - உ.வே. “துவமாகச் சிந்தித் தாய்ந்தே துணிந்து துரிசறவேசெய்யுமன முதலாநான்கு” - சித்தாந்த தீபிகை.

  57. “அந்தரக்கரண மவற்றி னென்றன்றவை, சந்தித்த தான்மாச் சகச மலத் துணராது, அமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே” - சிவ. போ. சூ. 4

  58. அந்தக் கரணத்தின் இயல்பை, “சித்தமாம்” (சிவ. சித். 148- 150) என்றற் றொடக்கத்துச் செய்யுட்களால் அருணந்தி சிவனார் விளக்கியருளுகின்றார்.

  59. ஈண்டியென்று பாடங்கொண்டு, துறைதோறுங்கூடி என்றுரைக்கும் பிரதியுமுண்டு.

  60. பேரத்தாணி - பெரிய அத்தாணிமண்டபமாகிய அரசிருக் கையில் இருந்த தன்மைத்தாகக்கூடி- உ.வே. ஆஸ்தானம் அத்தாணி என வந்தது என்பர்.

  61. அந்தப் புருவமத்தியிலே யென்பது சில ஏடுகளில் இல்லை.

  62. விரும்புதற்கு அறிகருவிகளும், வீசுதற்குத் தொழிற்கருவிகளும் வேண்டுவதால் ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் ஞாபகப்படுத்தப்பட்டன என்று பெருமண்டூர்ப் பிரதி கூறுகிறது.

  63. இது சில ஏடுகளில் இல்லை. அச்சுப் பிரதி, “இது சகலம். இனிக் கீழாலவத்தைச் சாக்கிரம் வருமாறு; அந்தத் தானத்திற் றானே பூதங்களைந்தும், சிவதத்துவமைந்தும் ஆகப் பதினாறும் நிறுத்தி, ஞானேந்திரியமைந்தும், கன்மேந்திரியமைந்தும், தன்மாத்திரைகளைந்தும், வசனாதி களைந்தும், வாயுக்கள் பத்தும், அந்தக் கரணம் நான்கும், உள்ளம் ஒன்றுமாக முப்பத்தைந்து கருவிகளுடனே நிற்பது “கேவல சாக்கிரம்” என்று கூறுகிறது.

  இதுகாறும் முப்பத்து நான்குகூறி, அவற்றோடு, புருடனை அரசனாகக் கூட்டினமையின் சாக்கிரத்தே கருவி முப்பதைந்தாதல் உணர்ந்துகொள்க “இருபத்தைந்து தத்துவமும் வாயுப்பத்தும் சாக்கிரமே” - மூலசித்தி. வாயுபத்தும் தாத்திகம் என்பர் சிவாக்கிரயோகிகள் (சிவ நெறி. 132).

  3.  இக் கூறியவாற்றால், சாக்கிராவத்தையிலே ஆன்மா புருவத் தானத்தே நின்று, ஞானேந்திரியமைந்து, கன்மேந்திரிய மைந்து, விடயம் பத்து, வாயுபத்து, அந்தக்கரணம் நான்கு ஏன்ற முப்பத்து நான்கு கருவிகளோடு தன்னைக் கூட்டமுப்பத்தைந்தாக நிற்குமாறு காண்க. “சாக்கிர முப்பத் தைந்து நுதலின்” (சிவ. சித். 223) என்றும் அதனை விரித்து, “ஓசை யேபரிசு முருவமே யிரதங்கந்தமே யொள்ளிய வைந்தும், வாசகந் தானங்கமனமே விசர்க்க மானந்த மென்றிவையைந்தும், பேசிடின் மனமே புத்தியாங்காரஞ் சித்தமே பதினான்குங் கூட, ஆசில் சாக்கிரத் தென்றறைந்திடு மவத்தை யாவது மானதந் மறையில்” (பெருந், 1257) என்றும் சான்றோர் கூறியவாறு காண்க.

  4.  சத்தாதிகளை ஈண்டுத் தன்மாத்திரையென்று கோடல் பொருந்தாது என மாதவச் சிவஞான முனிவர் மறுத்து “ஈண்டுக் கூறப்படும் சத்தாதியாவன ஞானேந்திரியங் களான் அறியப்படும் விடயங்களே யன்றி, சத்த முதலிய தன்மாத்திரைகளல்ல (என்பதற்கு வசனாதியோடொப்ப வைத்து, விடயப் பல்பரிசனமும் (24) எனக் கூறியதே சான்றாதலறிக; இஃதறியாதார இவ்வவத்தைக்கண் ணிற்கும் முப்பத்தைந்து கருவிகளுள், சத்தாதியென்றது பெரும் பூதங்கட்குக் காரணமாகிய தன்மாத்திரைபோலு மெனப் பெய ரொருமை மாத்திரையேபற்றி மயங்குப” என்பர் (சிவ. பாடி. சூ. 4: அதி.2).

  5.  “சொப்பனத்தானத்தில் இருபத்திரண்டு கருவிகளை நிறுத்திக் தான் இனிதாக நீங்கி” என்று அச்சுப்பிரதியிற் காணப்படுகிறத. இருபத்திரண்டுமாவன; புருடன், சித்தம, பிராணவாயு என்ற மூன்று மொழிந்த இருபத்திரண்டு; சொப்பனத்தே தொழிற்படும் இருபத்தைந்தாவன சத்தாகி வசனாதி விடயம்பத்து, வாயுக்கள் பத்து, கரணங்கள் நான்கு, புருடன் ஒன்று ஆக இருபத்தைந்து.

  6.  “அந்தக்கரணங்களின் குணம், நினைந் தாராய்ந்து துணிந்து செயல் மணந்து” எனவும், “நியதி சிந்தித்தாராய்ந்து துணிந்து செயற்படும், அந்தக்கரண வமைச்சரும்” எனவும் நூல்களிற் சொல்லி வருகையாற் சித்தம் நினைவை யெழுப்புங் கருவியாயும், ஆங்காரம் அறிவை மேலிடுவிக்குங் கருவியாயும், புத்தி நிச்சயிக்குங் கருவியாயும் மனது பற்றுங் கருவியாயுமிருக்கும்” என்று மதுரை ஞானப் பிரகாசர் (சிவப். 63. உரை) கூறுவர்.

  7.  கனவு நிலையிற் கண்டவற்றை நனவாகிய சாக்கிரத்திற் கூறுதற்குக் காரணம், அதற்கேற்ற கருவிகள் பலவும் கனவு நிலையில் இருப்பது பற்றி யென்றறிக, சுழுத்தியின்கண், இக்கருவிகள் பலவும் இல்லாமையால், ஆண்டுக் கண்டவற்றை நனவின்கட் கூறுதற்கு வழியில்லை; “சிந்தை மாத்திரம் கனவலின்” என்றும், “தந்துரை கழுத்தி யின்றே” என்றும் கூறுவதனால், ஈண்டு “நனவெனக் கனவின் நன்நடை வழாஅ துரைத்தனன்” என்றார்.

  8.  சொப்பனாவத்தையில் தொழிற்படும் கருவியின் வகையை, “மனமுதற் கரண நான்குமாய்ப் பத்து விடயமு மடங்குதல் கனவாம்” என்று சனற்குமார மென்னும் தத்துவ நூலுடையார் கூறுவர்.

  9.  வன்கடும்பு -வலிய சுற்றம், அஃதாவது உறுதிச்சுற்றம்; “சேர்ந்தவர் கடும் பார்த்தும், ஓங்கு கொல்லியோர் அடுபொருந” (புறம்22) என்புழிப்போலக் கடும்பு, சுற்றத்தின் மேற்றாயிற்று. வாயுக்கள் பத்தினும், பிராணன் தலையாய தாகலின், அதனை, “வன்கடும் பதிபன்” என்றார்.

  10. எனவே சுழுத்தியவத்தையில், பிராணவாயுவும், சித்தமும் புருடனும் என்ற மூன்று கருவிகளே தொழிற்படுமாறு பெற்றாம். இதனைத் திருமூலர், ‘தான மிழந்து தனிபுக்கிதயத்து, மான மழிந்து மதிகெட்டு மாலாகி, சுழுத்திய தாமே’ என்றும், ‘சுழுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி, கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி, யொழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து. விழுமப் பொருளுடன் மேவி நின்றானே” (திருமந். 2155, 2156) என்றும், அருணந்தி சிவனார், “சுழுனை மூன்று நீக்கிய இதயந் தன்னில்” (4. 33) என்றும் கூறுவர்.

  11. ‘‘உவளகந் தனதாக வொடுங்கினான்” (சீவக. 243).

  12. பெரிய அழகுபோல- உ. வே.

  13. “உறங்கு மாயினு மன்னவன் தன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்” (சீவக. 248.)

  14. வரி 24-28 காண்க.

  15. துரியாவத்தையில் ஆன்மாப் பிராணவாயுவுடன் கூடியிருத்தல் பற்றி “துரியத்தில் இரண்டு நாபி” (சிவ சித். 4: 33) என்று அருணந்தி சிவனாரும் “எய்திய துரியத்தொன்று” (சிவப் 60) என உமாபதி சிவனாரும் கூறினர். அறிவறிதற்குரிய கருவிகளின்றி, அறிவு நிலையில் இருத்தல் பற்றி “உறுவளியெடுப்ப ஏற்றமிழிவு சீற்ற மாற்றல், இழிச்சல் பழிச்சல், இன்பந்துன்பம் ஒழித்தனன் துரியத்து” என்றார். துரியத்தில் ஆன்மா அறிவிடையழுந்தியதுவேதானாய்க் கிடப்பதனையே விதந்து “அறிவறி வாகு மான துரியமே” (திருமந். 2206) என்று திருமூல நாயனார் கூறினர்.

  16. ஏற்றமுடையேனென்றும் - உ.வே.

  17. “ஆற்றுதலென்பது அலந்தவர்க் குதவுதல்” என்பர் நல்லந்துவனார் (கலி. நெய். 16) ஆற்றல்-வன்மை; ஈண்டு அஃது சிறப்புடைய வன்மையாய்ப் பொறைமேலதாயிற்று; “வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” குறள். 175) என்று சான்றோர் கூறுதல் காண்க. இவ்வியைபே கருதி “ஆற்றுவாராற்றல் பசியாற்றல்” (குறள். 225) என்ற விடத்துப் பரிமேலழகர் “பசியைப் பொறுத்தல்” என்று உரை கூறுதல் காண்க.

  18. “சித்தமும் தனது சத்திமடங்கிச் செயலற்றொழியும் அவத்தையின் ஆங்காரத்தான் இயக்கப்படும் பிராணவாயுவும் புருடனு மென்னும் இரண்டு கருவியுங்கூடி உடம்பிற்குக் காவலாகிய தன்னையே விடயிக்கும் அவத்தை துரியம்; இதற்குத் தானம் உந்தி” - சிவஞான பாடியம் (சூ. 4: அதி 3).

  19. துரியாவத்தையினின்றும் அழகிதாகக் கழிந்து- உ.வே.

  20. நின்மலதுரியாதீதத்திலே - உ.வே.

  21. “நீக்கமில் அதீதம் மாசு நிறைந்தகேவல மாநீர்மை (சிவப். 62) என்று கூறப்படுதலின், கீழாலவத்தைகண் அதீதத்தில் ஒடுங்கும் ஆன்மாவை “ஆணவமலம் மறைப்ப” என்று உரை கூறப்படுகிறது. இது கேவலாதீதம். திருமூலரும், “சாக்கிராதீதத்ததில் ஆணவந் தான்விடா” (2212) என்றும் ஆணவமாகும் அதீதம் (2259) என்றும் கூறுதல் காண்க சுத்த அதீதமாயின் வரும் பயன் ஈதென்பார், “பரமாம் அதீதமே பற்றறப் பற்றப், பரமாம் அதீதம் பயிலப், பரமாம் அதீதம் பயிலாத் தபோதனர், பரமாகார் பாசமும் பற்றின் றறாதே” (திருமந். 2274) என்று கூறியருளினர்.

  22. இந்த மல மறைப்பாகிய ஆன்மாவினிடத்து இருளைக் கெடுக்கும் விளக்கைப் போல………… - உ.வே.

  23. சகலாவத்தையிலே அறிகை - உ. வே.

  24. ஈண்டுக் கூறுவது சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்து தன்னையும் முதல்வனையும் அறிக என்பதாம் “பொற்புறு கருவியாவும் புணராமே அறிவிலாமல், சொற்பெறு மதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற, சிற்பரமதனால் உள்ளச் செயலறுத்திட வுதிக்கும் தற்பரமாகி நிற்றல்” (சிவப். 80) என்பர் உமாபதி சிவனார். “அரன் முதலாக அறிவோன் அதீதத்தன்” (திருமந். 2260) என்ப சான்றோர்.

  25. எங்கணுமாகி நான்கின் இடை இருள் இரிசுடர்த் தொழில் தகை, சாக்கிரத் தாங்கண் தெரிதல், நிற்றெரியுமாறு என இயையும்.

  26. பிங்கலநிகண்டு 71. இந்நிகண்டில் இதன் ஈற்றடி, “பயிற்றுந்தண் வீப்பாய் பஞ்ச சயனம்” என்றிருக்கிறது; “மயிர்ச்சேணம் செம்பஞ்சு வண்படாந் தூவி” என்று செப்பறைப் பிரதி கூறுகிறது. “ஐந்து மூன்றடுத்த செல்வத் தமளி” (சீவக. 838) என்பதன் உரையில் நச்சினார்க் கினியர். “சிறு பூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சேக்கையோ ரைந்து” என்றொரு குறட்பாவைக் காட்டுகின்றார்.

  27. கடந்த - பா.வே.

  28. பூக்கிளரோதி-பா.வே.

  29. வெய்தி- பா.வே.

  30. வறியுமென்று -பா. வே.

  31. என்னை கொலிடத் திவற்கிரண்டே மன்னென - பா.வே. இரண்டேன் மன்னெனா- பா. வே.

  32. ஐம்புலக் கரிசட் டார்த் தவ்- பா. வே.

  6.இது சிவாந்துவிதி துரியத்தில் ஆன்மாச் சுத்தன் என்ன என்ற பாடம் செப்பறைப் பிரதியிற் காணப்படுகிறது.

  7.  மேலே சாக்கிரம் முதல் துரியாதீத மீறாகச் சொல்லப்பட்ட ஐவகை யவத்தையிடையே யன்றி அவை இலாடத்தினின்று கீழ்நோக்கியும் மூலத்தானத்தினின்று மேனோக்கியும் நிகழுமிடையும், சாக்கிரத்திற் சொப்பனம் முதலியவாக நிகழுமிடத்தும் சாக்கிர முதலிய ஐந்தனுள்ளும் சாக்கிரத்திற் சாக்கிரம், துரியநிலை யெய்துதலின், இடைவரு துரிய மென்றாராக, “இடையிடையே வருகிற துரியாவத்தை” என்று உரை கூறுவதாயிற்று. (சிவ. சித்தி. 4: 34, 5) கீழ் நோக்கியும் மேல் நோக்கியும் செல்லுமிடத்தே துரியத்தில் புருடன் பிராணவாயுவொடு கூடியும், சாக்கிர துரியத்தில் சிவதத்துவம் சத்தி தத்துவமென்ற இரு கருவிகளோடு கூடியும் இருக்கும் என்று சித்தாந்த நூல்கள் கூறுவது காண்க.

  8.  கண்டு+இசின் என்று பிரித்து, இசின் என்பது அசைநிலை யென்றமையின், கண்டென்பதற்குக் காணுதலாலே என்று உரைகாரர் கூறுவது குறிக்கத்தக்கது.

  9.  சிவாத்துவிதியாகிய அறிவில்லாதான் சொல்லுமது - உ. வே.

  10. “நற்சைத னன்தான் ஒடுங்கினா னென்னத் தோன்றும் அத்தன்மை யன்றி மற்றோர் அவத்தைதா னவனுக் குண்டோ” (மெய்ம்மொழி. அவத்தை.5) என்றும், “அவத்தையாகி யொடுங்கிடத்தும் விரிந்திடத்தும் ஒருமைத் தாகிப் பேதமில்நல் துரியமெனும் பிரமந் தன்னைப் பெற்றவத்தை யெதுமறியார் பெருமையோரே” (மெய்ஞ்ஞான விளக்கம். அவத்தாந்தராவத்தை.3) என்றும் பிறரும் சித்தாந்த தீபிகை யுடையாரும் மாயாவதி கூற்றை இவ்வாறே ஒதி மறுப்பர்.

  11. மெய்ம்மையன்று- உ.வே.

  12. “வீங்குசெலல் மண்டிலம்” (புறம்.8) என்பதற்கு அதன் உரைகாரரும் “மிக்க செலவையுடைய மண்டிலமே” என்று பொருள் கூறுமாறு காண்க.

  13. பரந்து செல்லாநின்ற - உ.வே.

  14. பள்ளியிடமான விடத்திருப்பினும் - உ.வே.

  15. அரசன் அரசனே; வேறாகானாதலாலும் - உ. வே.

  16. வேந்தரைக் காணச்செல்லும் சான்றோர், அவர் தம் படை நடுவே விளங்கும் விளக்கத்தையும் உரிமை மகளிரிடையே விளங்கும் விளக்கத்தையும் கண்டு பாராட்டுதல் மரபாதலின், தானை நாப்பணும், இடனுடை வரைப்பும் எடுத்தோதினார்; “கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும், வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக், கொல்களிறு மிடைந்த பஃறோற் றெழுதியொடு, நெடுந்தேர் நுடங்கு கொடி யிவிர்வரப் பொலிந்து, செலவுபெரி தினிதுநிற் காணுமோர்க்கே” (பதிற். 83) என்றும், “ஓவத் தன்னவுரு கெழு நெடுநகர்ப் பாவையன்ன மகளிர் நாப்பண்………….மாகஞ் சுடர மாவிசும்பு கக்கும், ஞாயிறுபோல விளங்குதி பன்னாள், ஈங்குக் காண்குவந்தனென் யானே”(பதிற். 87) என்றும் சான்றோர் கூறுமாறு காண்க.

  17. பொற்றொழில் செய்ய அறிந்தவன் - உ.வே.

  18. சிங்கமாகவும்- உ.வே.

  “ஆளி நன்மான அணங்குடைக் குருளை” (பொருந. 139) இனி யாளியும் அரிமாவும் வேறு என்பதுமுண்டு; “குழிகட களிறு வெரீஇ அரியாளி குழீஇ” (கோவை. 255) என வருதல் காண்க.

  19. கண்கவர்வு எய்தி மன்பதை மருள- கண்ணைக் கவரும்படிச் செய்து பார்க்கின்ற மக்கட் டொகுதி ஆச்சரியத்தால் மயங்க - உ.வே.

  இவ்வுரைப்பிரதி, எய்தி என்பதை எய்த என்பதன் திரிபாகக் கொண்டு உரை கூறுகின்றது.

  20. ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட - உ.வே.

  21. பொற்குடத்திலும் - உ.வே.

  22. பொற்குடத்தின் புறத்தே மேலே கூறிய களிறு வேங்கை முதலிய வற்றின் கண்கவ ருருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கு மென வறிக. இக்காலத்தும் நாட்டுப்புறங்களில் இவ்வாறு உருவமைக்கப்பட்ட குடங்கள் காணப்படுகின்றன. இத்தகைய குடங்கள் ஆரிய நாகரிகம் நம் நாட்டிற் பரவியதற்கு முன்பிருந்தே இருந்துவந்திருக்கின்றன எனறு வில்லியம் ரோதம்ஸ்டீன் என்பார் கூறுகின்றார்- Ancient India by K. De. B, Codrington. see under the head Pre - Aryan Culture.

  23. “குவிவாயமையாக் குடநிறை தீநீர்” (ஞானா. 54: 22) எனப் பிறாண்டும் வருதல் காண்க. பேசுதற்கேற்ற வாயில்லாரை ஊமையென்பவாகலின், தன்னுள் இருப்பதை வெளிப்படுத்தற்கேற்ற வாயில்லாக் குடத்தை ஊமைக் குடம் என்றார்; எனவே, இஃது ஏனைக்குடம்போலக் கழுத்தும் வாயும் இன்றி வறிதே குடுக்கை போற் புழையுடையதாகிய குடமாம் வாயுடைய ஏனையவற்றைப் போலப் பயன் படாமையின் ஊமைக்குடம் எனப்பட்டது. இதன் வயிற்றிற் சுற்றிலும் சிறு சிறு முக்கோண வடிவுடைய பொள்ளல் செய்து, உள்ளே பலவாய்த் தோன்றுமாறு விளக்கேற்றி வைத்தல் பற்றி இவ்வாறு கூறினாரென அறிக.

  24. இப்பகுதியின் உரை ஏடுதோறும் வேறுபட்டும் பிறழந்தும் வழுமலிந்தும் காணப்படுகின்றது.

  25. “விரிந்த பதினாற் கரணங்களும்” என்றோர் உரைவேறுபாடு முண்டு; பதினான்குமாவன, சாக்கிராவத்தையிலே ஆன்மாவையும் தம்மையும் பிரிக்கவொண்ணாது கூடியிருந்த ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் அந்தக்கரணங்களும் ஆகிய பதினான்கு. இனி, சத்தாதி வசனாதியாகிய விடயங்கள் பத்தும் அவ்விடங்களை யறிதற்கும் செய்தற்கும் ஊக்கத்தை விளைவிக்கும் வாயுக்கள் பத்தும் அவை ஆண்டு விடயமாக்குதற்குரிய அந்தக் கரணங்கள் நான்கும் தொகுத்து ‘விரிபுலன் எவையும்’ என்றார் என்றுமாம் “நிலவு சகலத்தி னின்ற பூதாதி, கலாதி சிவாதி கழித்துக் - குலாவிய நூல், வாட்டிய சாக்கிரத்தின் வாயுவசனாதிகளைக் , கூட்டிய தென் மெய்த் தேவே கூறு’; (சதமணிக்கோவை. 70) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  26. சேதனம்போலத் தோன்றும் அவையிற்றின் விபரீதக் காட்சியை- உ.வே. அஞ்ஞான நிலையைக் கெடுத்துப் பார்க்கில்- மருள்- அஞ்ஞானம்; கை- இடம்- உ.வே.

  27. ஏன்தான் இவ்விடத்து இவ்வான்மாவை இரண்டு படியாகச் சொல்ல வேண்டிற்றென்றருளிச் செய்ய - உ.வே.

  28. “மனத்தினி னொடுக்கம்விரி வாய்வரு மவத்தை, யனைத்தையும் அறிந்தறிவ தேவடிவுதானாய், இனத்தையற நின்ற துரியத்தினை யுணர்ந்தோர், அனைத்தையு மறிந்தவர்க னென்பதல துண்டோ” என்று போதரத்னாகரமென்னும் நூலுடையார் மாயாவாதி சாக்கிர முதலிய வவத்தையில் அசுத்தனான ஆன்மாத் துரியத்தில் சுத்தனாவான் என இரண்டு தன்மை கூறுதலைக் குறிப்பித்தல் காண்க. கேவல துரியத்தில் ஆன்மா ஆணவமலத் தொடக்கால் அசுத்த னென்பதே சித்தாந்த சைவத்தின் கொள்கை. இந்நூலேயன்றி, திருமூலனாரும், “காய்ந்த விரும்பு கனலையகன்றாலும், வாய்ந்த வனலெனும் வாதனை நின்றாற் போல, ஏய்ந்த கரண மிறந்ததுரியத்துந் தோய்ந்த கரணத் துரிசக லாதே” (திருமந். 2309) எனத் துரியத்தும் ஆன்மா சுத்தனல்லவென்று விளக்குதல் காண்க.

  29. சிவாத்துவிதி இப்படி சொல்லத் தரியானாகி - உ. வே.

  30. விகற்பமில்லாத இந்திரியமைந்தும் - உ.வே.

  31. பரமசிவன் ஒருகாலும் கலக்கமில்லாதோ னானபடியினாலே - உ. வே.

  32. நொந்து இவையென்று கொண்டு, வருந்தி யிந்தச் சுகதுக்கங்களை யென்று உரை கூறும் ஏடும் உண்டு.

  33. இவ்வறிவு, இந்திரியங்களால் வரும் போகத்தை அதுவது வாய்த்தோய்ந்து நுகர்ந்து இடர்ப்படுதலால், சாக்கிரத்தும் ஆன்மாச் சுத்தனல்லனென்பதை எளிதிற் காட்டிவிடுவது பற்றி யதனை யுய்த்துணர வைத்து ஆன்மாவின் உண்மை நிலையினை யுணர்த்துமென்பதை மட்டில் விதந்து “ஆன்மாவை யறியும் ஆன்ம சமாதி” என்றார்.

  34. பசு. தரிசனமாகிய ஆன்ம சமாதியென்று சொல்லுவர் - உ. வே. பசு தரிசனமாவது, சிற்றறிவுடைய தனக்குத் துணையாவது திருவரு ளென்றுணர்ந்து, அத்திருவருளே கண்ணாகக்கொண்டு, தானும் அதுவாய் நின்று காண்கின்ற தன்னையும் சிவத்தையும் உடனிகழ்ச்சி யாயறிவது; “பாசமதகல ஞானம் பற்றல்” என்றும் “தன்னாலே தனையறிந்தால், தன்னையுந் தானே காணுந்தான துவாகி நின்றே” (சிவப். 71, 72) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இவ்வாற்றால், பசு தரிசனம் வேறென்றும் ஆன்ம சமாதி வேறென்றும் அறிந்து கொள்க. இச்சிவப்பிரகாசத்துள் ஞானம் என்றதும் அது வென்றதும் திருவருளை யென்க.

  35. இந்திரியங்களிடமாக வளர்கின்ற சத்த திரவிடமைந்தாலும் குற்றங்களைக் கெடுத்து - உ.வே. இந்திரியங்களிலேவருகிற உ.வே.

  36. உம்பர் உலகு என்றும் உயர்நிலை யுலகென்றும் கொண்டு, மேலுல கங்களாய் மேன்மேல் உயர்ந்துகொண்டே செல்லும் ஒட்பமுடைய வாயுள்ள புவனங்கள் இருநூற்றிரு பத்து நான்கையும் உம்பருல கென்றும், சிவபதத்தை உயர்நிலை யுலகென்றும் உரை கூறப்படுகிறது. இவ்வுலகப் பேற்றுக்குத் தம்மை உரிமை செய்துகொண்டோரைப் பண்டைத் தமிழ் நூல்கள், “உயர்நிலை யுலகத் துயாந்தோர்” (பதிற். 89) என்றும் “உயர்நிலை யுலகத் தையர்” (பதிற். 70) என்றும் கூறுதல் காண்க.

  37. காலாக்கினிருத்திர புவன முதல் அனாகிருத புவன பரியந்தமான இரு நூற்றிருபது நூற்நாலு புவன வர்க்கத்துக்கு- உ. வே. இது சில ஏடுகளில் இல்லை. இப்புவன மிரு நூற்றிருபத்து நான்கையும் அகவல் 1, வரி3, உரையின் அடிக் குறிப்பிற் காண்க. “காலாக்கினி புவன முதல் அனாகிருத புவனமீறாகிய இருநூற்றிருபத்து நான்கு புவனங்களும்” சித்தாந்தப் பிரகாசிகை, அத்துவாப்பிரகரணம் என்று மாதவச் சிவஞான முனிவரும் கூறுவர்.

  38. தம்மைச் செலுத்தின ஞானவான்கள்- உ.வே.

  39. இத்தொடர் சில ஏடுகளில் காணப்படவில்லை.

  40. னறியின் - பா. வே.

  41. “செம்பினுடன் கூடியிருக்கப்பட்ட காளிதமானது அந்தச் செம்புள்ள வன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்புங் கலந்து வெட்டு வாய் தோறும்” நிற்றல்பற்றி, (மதுரைச் சிவப்பிரகாசர்) ஈண்டு ஆசிரியர் இருந்துகளென் றொழியாது “பெருகிருந்துகள்” என்றா ரெனவறிக.

  42. பெய்தினீணில - பா.வே.

  43. முறைசொன் - பா.வே.

  44. நனிபுணர் - பா.வே.

  45. “மாயை கன்மங்கள் மலம்போல அறியாமைப்பொருளென்பார்க்கு ‘இரண்டுஞ் சோதி யிருளென வேறாம், எனவும், ‘இகலிவருமிவையுணரினிருள் வெளியாந்தன்மை’, யெனவும், இருள் இருளிரி சுடர் முரண்டாநின்ற முழுமலமாயை யெனவும் வருமித் தொடக்கத்துச் சுருதி களெல்லாம் முரணுமாகலின் சடமெல்லாம் அறியாமைப் பொருளாமென்றல் பொருந்தாமையின், ஈண்டுப் பிட்டபே டண நியாயமென்னுங் குற்றமாதல் யாண்டையதென் றெழிக” - சித். கண்டனம். (கண்ட.1).

  46. பார்நனி - பா. வே.

  47. சித்தால் - பா. வே.

  48. அவணல தெனினவன் - பா. வே.

  49. வறிதுக்கு- பா. வே.

  50. ணாதவனாட்டத்தென்று பாடங்கொள்வர் மதுரைச் சிவப்பிரகாசர் (சிவப். 80. உரை)

  51. னோரவர் - பா. வே.

  52. குரைய விருவினை - பா. வே.

  53. இத்தொடர், திருவெண்ணெய்நல்லூர்ப் பிரதியிலும் பெருமண்டூர்ப் பிரதியிலும் காணப்படுகிறது. பாசவிலக் கணம் சொல்லியது பா. வே.

  54. “முன்பு தந்த, தொழிலறிவிச்சை துணையாக மானின், எழிலுடைய முக்குணமும் எய்தி” (போற்றி. 28- 9) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  55. மலசகிதனாயினேன்; இச்சா ஞானக் கிரியா ரூபியாயினே னென்றுமாம்; திருக்கு திருசு கிரியா ரூபியாயினே னென்றுமாம்; திருக்கு திருசு கிரியா ரூபியாயினேன் - உ. வே. இங்கே கூறும் கருத்தையே “த்ருக்கிரியாரூபிணீ சக்தி: கதிதா பரமேச்வர” என்று பௌட்கரமும் “சைதன்யம் த்ருக்கிரியாரூபம்” என்று மிருகேந்திரமும் கூறுகின்றன.

  56. என்னைக் கூடியமையாத பாசத்தை- உ. வே. மகத்தான பாசத்தை-

  57. ஆணவம் மாயை கன்மம் என்ற மூன்றையும் தொருத்துக் கூறுதலால் பாசமென்றே பொழிந்தார். பசுபாச வேதனை யொண்டளையாயின” ஞானசம் 12: 3) என்று திருஞான சம்பந்தரும் குறித்தருளுவர். இவற்றைப் பாச ஜால மென்று கிரணம், மிருகேந்திர முதலிய ஆகமங்கள் சொல்லுகின்றன.

  58. பாயிரத்துள் இந்நூலாசிரியர் தம் ஆசிரியரைத் துதி செய்த போது அவரது நினைவு அருணினைவாகவே யிருந்தமை தோன்ற “அருளும் அறிவும்” (ஞானா. 4) என்று எடுத்தோ

  தினாராகலின், அக்கருத்தே நிலவுமாறு தோன்ற, ‘அருளோன்’ என்றார்.

  59. அறியின் என்று பாடங்கொண்டு அறியவேண்டின் என்று உரை கூறிய பிரதியுமுண்டு

  60. அநாதியாய் அழிவில்லாத மும்மல வர்க்கமாய்க் காணவிருப்பது; காண் இருப்பது-

  61. அவையிற்றின் முறைமையை விசாரிக்கின்- “ஆணவ மாயையுங் கன்மமு மாமலம்” (திருமந் 2192): “பாசங்கள் மூன்றவைதாம்; பொதிதரும் ஆணவம் போகஞ் செய் கன்மமும் மாயையயுமாம்” (தத்துவ விளக்கம் 19 தணிகைபு 90).

  62. மென்றும் பெயர்; மென்றும் பெயருடையவாம்-

  63. பேணுதல், ஈண்டு விரும்புதலுணர்த்தும் பெட்பின் பொருள தாகும்; “பிணையும் பேணும் பெட்பின் பொருள” (தொல். சொல் 338) என்ற சூத்திர வுரையில் சேனாவரையர், “பெட்பின் பொருள வென்றதனால், பெட்பின் பொருளாகிய விரும்புதலுங் கொள்க; அது வந்த வழிக் கண்டு கொள்க” என்று உரைத்திருத்தல் காண்க.

  64. அவ்விடத்து அவையிருக்கும்படி முறையே சொல்லின் - உ.வே.

  65. சகசமாய்ப் பசுபாசாபதிகளாகிய பதார்த்தங்களின் உண்மையை அறிய வொட்டாதே ஞானத்தை மறைக்குமது- உ. வே.

  66. மலம் அணி என்றவிடத்து மலத்துக்கு என நான்கனுருபு விகாரத்தால் தொக்கது, இம்மலத்தின் இயல்பினை, “மோக மிகவுயிர்கடொறு முடனாய் நிற்கும் மூலவாணவ மொன்று” என்றும், “இருள் ஒளிர விருண்ட, மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய் அறிவு முழுதனையு மறைக்கும்” என்றும் உமாபதி சிவனார் (சிவப். 32, 20) கூறுதல் காண்க. “விருத்திகளால் மறைக் கின்றவவ் வாணவம் வெங்குருமன், கருத்திய னூன்முறை தேரிற் கலந்துடனா யணுவை, அருத்திய நஞ்சென்ன மோகஞ்செய் தாசை யனுபவத்திற், பெருத்திடச் செம்பினிற் காளிதம் போலப் பிணைந்துளவே” (தத்துவ. 20) என்றும் பிறரும் கூறுவர் மறைத்தலாவது இஃதென்பார் சிவாக்கிர யோகிகள், ‘அறிவு தொழிலிச்சையினைத் தடுக்கும் ஆணவமொன்று” என்றும், “அறைந்த விந்த ஆணவந்தான்……… ஞானேச்சாக் கிரியையினைத் தடுக்கும் தீவெம்மை சடுத்திடு மந்திரசத்தி செயலில்” (சிவநெறி. 62, 54) என்றும் கூறுவர். இலக்கணமாவதென்றும் - உ.வே. “தூய நினைவைத் தீமொழியைத் தீய தொழிலைத் தவத்தோற்று, மாய தனியாணவப்பகை” (தணிகை. நந்தி 107) என்று கச்சியப்பமுனிவர் விளக்குவர். ஈண்டுக் கூறியவாறே கிரணாகமம் முதலிய ஆகமங்களும் கூறுகின்றன.

  வரி7-9. வாயை, நெறி தேர்பு, முற்சொல், மாக்கலை நீணிலம் அந்தம் உற்ற, எய்திய காரணம் என உரை நடைப்படுத்தி ஆம் என ஒருசொல் வருவித்து உரை கூறப்படுகிறது. தேரி னென்பது தேர்பு என நின்றது. “வினையெஞ்சு கிளவியும் வேறு பல்குறிய’ (தொல். சொல். 457) என்பது விதி.

  67. முறைமையை; மாயாமலமாகிய திருக்கை- உ. வே.

  68. “கலை முதலாய நிலைமலி தத்துவத் துலைவில்கட்டு” (ஞானா.10; 1-2) என்றமையின், ஈண்டு “முற்சொன் மாக்கலை” யென்றார், முன்னே கிரியாபாதத்துட் சொல்லப்பட்ட என்று உரை கூறிய பிரதியுமுண்டு.

  69. இத்தொடர் சில ஏடுகளில் இல்லை.

  “கலையாதி மண்ணந்தம் காணில் அவை மாயை” (சிவ. போ. சூ. 3) (அதி.7) என்று சிவஞான போதம் அருளுதல் காண்க.

  70. உபாதானமாய்க் கூடியிருப்பது- உ. வே.

  71. குடமுண்டாதற்கு மண்போல இக்கலை முதலிய தத்துவங்கள் உண்டாவதற்கு மாயை முதற் காரணமெனவறிக; (சிவ.சித்தி. சூ. 1-38). உபாதானம்- முதற் காரணம். இனி, இதன் இயல்பு கூறவந்த ஆசிரியர் அருணந்தி சிவனார். “நித்தமா யருவா யேக நிலையதா யகிலத் துக்கோர், வித்துமா யசித்தா யெங்கும் வியாபியாய் விமலனுக்கோர், சத்தியாய்ப் புவன போகந் தனுகரணமு முயிர்க்காய், வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே” (சிவ. சித்தி. 2, 59) இம்மாயை யென்ற தன் இயல்பை (3:1) “மயதயஸ்மாஜ்ஜகத்விச்வம் மாயா தேந ஸ்மீரிதா” என்று பௌட்கரம் கூறுவது குறிக்கத் தக்கது.

  72. “இருவினை யென்ப மனமுதன் மூன்றின் இயற்றும் இதமகி தங்கள், பெருவினைப் பயன்கள் புண்ணிய பாவம் பேசுமிக் கருமத்தின் பயன்கள், மருவிடு மின்பத் துன்பமாம்” (தணிகை. நந்தி. 122) என்று கச்சியப்ப முனிவர் விளக்கியருளுகின்றார்.

  73. புண்ணிய பாவமாயிருக்குமென்றருளிச் செய்ய - உ. வே.

  74. பிறழா என்பதற்குக் கெடாத என்ற பொருளே எய்தப் “பிறழா நிலைமை” (ஞானா.8-1) என்பதன் உரையிலும் சில ஏடுகளில் காணப்படுகிறது.

  75. மாயா பந்தமாவது, “கலை முதல் பிருதிவி ஈறான தத்துவங்களும் இந்த புவனங்களும் புவனத்துப் பொருள்களுமா யிருக்கும்” என்றும், மாயை நித்தமாய் வியாபகமாய் ஆன்மாக்களுக்கெல்லாம் கன்மத்தால் பந்திப்பதாய்த் தன் காரியமுகத்தான் ஞானக்கிரியைகளை விளக்குமாயினும் மயக்குவதாயிருக்கும்” என்றும் மாதவச் சிவஞான முனிவர் (சித்தாந்த தீபிகை: பந்தப் பிரகரணம். போசயித்திரு காண்டம்) கூறுதல் காண்க. “மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே” (சிவ. சித்.

  சூ. 2: 53) இக் கருத்தை, “அல்லதூ உம் இருளாணவ மயக்குவ ததனால், நல்ல மாயையுங் கருமமு நாடியவுயிரை, வல்ல வாறெலா மயக்குவ மயக்கு மாணவந்தேய்ந், தில்லை யேலவை யுயிரையு மயக்குவ திலையே” (திருவானைக்காப் புரா. ஞானோப. 23) என்று கூறுதல் காண்க.

  76. ஆணவம் மாயை என்ற இரண்டும் ஆன்மாவைப் பந்திப் பனவாதவின், இரண்டையும் ஒன்றாகக் கூறாது வேறு வேறு வைத்துக் கூறுவதுபற்றி, “இரண்டென இசைத்தல் எற்று” என்று வினவுகின்றான். சிவாகமங்கள் இவற்றைச் சகசம், ஆகந்துகமென இரண்டாகக் கூறுவது முண்டு.

  77. ஓரிடத்தும் என்றோர் உரை வேறுபாடுண்டு; கேவலம், சகலம், சுத்தம் என்ற மூவகை நிலையுள், சுத்த நிலையில் மறைக்கும் சத்தி கெட்டொழிதலின், ஒரு நாளும் என்ற பாடமும் பொருந்துவ தாயிற்று, சுத்த நிலையில் சுத்தாணவ மாய்ச் சிவபோகத்தை விளைத்தல் பற்றி, உண்மைவிளக்கமுடையார், ‘இத்தை விளை

  வித்தல் மலம்” (50) என்றும், உமாபதி சிவனார் “நித்த மூலமலமாய்” (சிவப் 20) என்றும் கூறுதல் காண்க.

  78. இப்பொழுது - உ. வே.

  79. உபாதானமாய்- முதற் காரணமாய்; “உய்த்திடும் வைந்த வந்தான் உபாதானமாகி நின்றே” (சிவ. சித். 1: 25) என வருதல் காண்க.

  80. சகலாவத்தையில் பற்றுவதும் கேவல சுத்தாவத்தைகளில் விடுவதும் உடைமைபற்றி இவ்வாறு கூறினார்.

  81. ஒன்றுபோல இருந்தவோ- உ. வே.

  82. விசாரித்துப் பார்க்குமிடத்து ஆணவம் விட்டு நீங்காமையும், மாயை விடுவதும் பற்றுவதும் ஆகிய வேறுபட்ட இயல்புடைமை காணப்படும் என்றற்கு “நன்றுணர்” என்றே யொழியாது “நன்று நனியுணர்” என்றார்.

  83. ஏககாலத்திலே நீக்குதலைக் கொண்டாட்டமாகவுடையது கலாதத்துவமாதலால் இதனுக்கு உபாதானமான மாயா மலமும்- உ. வே.

  84. ஈண்டு அருணந்தி சிவனார், “போதகா ரியமறைத்து நின்றது புகல் மலங்காண், ஓதலாங் குணமுமாக வுயிரினுள் விரவலாலே, காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை. ஆதலா லிரண்டுஞ் சோதியிருளென வேறாமன்றே” (சிவ. சித். 2: 84) என்று கூறியதையும் வைத்து ஒப்பு நோக்குக. ‘‘கலையாதி மண்ணந்தங் காணில் அவை மாயா, நிலையாவாந் தீபமே போல” (சிவ. போ. 3: 7) என்றும் “மாயாதனு விளக்காய்” (சிவ. போ. 4: 5) என்றும் “விடிவா மளவும் விளக்கனைய மாயை” (திரு வருட். 30) என்றும் வருவன காண்க.

  85. அனாதி பந்தத்தால் மிக்க வலியுடைத்தான - உ. வே.

  86. மாறுபாடுகூட - உ. வே. ஈண்டுக் கூறப்படும் தடைவிடைகளின் கருத்து பௌட்கர பாடியத்திலும் காணப்படுகிறது.

  87. ஆன்மாவோடே கூட - உ. வே.

  88. அனாதியாகச் செறிந்துளது - உ.வே.

  “நெல்லிற் குமியும் நிகழ் செம்பினிற் களிம்பும், சொல் லிற் புதிதன்று தொன்மையே” (சிவ. போ. சூ.2.அதி. 2) என்று மெய் கண்ட தேவர் கூறியிருப்பதும், இவ்வாசிரியரே “அற்றே சொற்ற தனாதி” (ஞானா. 9-4) என்று கூறியிருப்பதும் காண்க, இவ்வாறே மிருகேந்திரமும் கூறுகிறது.

  89. ஆன்மாவுக்கு இது குணமென்று சொல்லாத முறைமை - உ. வே. “ஓதலால் குணமுமாக வுயிரினுள் விரவலாலே”; (சிவ.சித். 2: 84) என்றவிடத்துச் சிவஞான முனிவர், “குணமு மென்னு மும்மை எதிர்மறைக்கண் வந்தது” என்றுரைப்பதும், “புருடன்றன் குணம்” (சிவ. சித். 2: 85) என்று செய்யுள் ஆணவம் தருமியென்று நிறுவுவதும் காண்க. ஆணவத்தால் விளையும் அறியாமை புற்கலனுக்குத் தருமம் என்பவர் பாடாணவாதிகள்.

  90. அறியாமையும்- உ. வே. இந்த ஞானமும் அதற்கெதிராய வூனமும், “ஊனத்திருள் நீங்கிட வேண்டில், ஞானப் பொருள் கொண்டடி பேணும்” (38: 3) என்று ஞான சம்பந்தரும் கூறுதல் காண்க.

  91. நனி பார் என்று கொண்டு மிகவும் விசாரித்துப் பாராய் என்று அச்சுப் பிரதியுரை கூறுகின்றது.

  92. அந்த ஆன்மாவுக்குக் குணமும் குணமில்லாமையுமாகிய அஃது இருக்கும்படியைச் சொல்லின்- உ. வே.

  93. ஆன்மா சைதன்னியமாதலாலே- உ. வே.

  94. சித்து உணர்வுடையது “உயிர் எத்தன்மைத்தென்ற வழி உணர்தற்றன்மைத்தென்றல் செல்வனிறையாம் (“தொல். சொல்.13”) என்று சேனாவரையர் கூறுவதும் அருணந்திசிவனார் “சிவன் சீவன் என்றிரண்டும் சித்து” (சிவ.சித்.சூ 11.11) என்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.

  95. தருமம் - உ. வே.

  96. என்றும் ஒரு பொருளுக்குக் கூடாதாதலால்-

  97. “எந்தப் பொருள் பரிணாமமுடையதோ அந்தப் பொருள் நிச்சயமாகச் சடமாயிருக்கும்; பால்போல” என்று இரத்தினத்திரயம் (சூ. 135) கூறுகின்றது. பரிணாமம்- ஒன்று மற்றொன்றாய்த்திரிதல்; திரிதல்- வளர்தல் - சுருங்கல் முதலியனவாம். ஆன்மாவுக்குப் பரிணாமத் தன்மை யுண்டென்னில், அது சேதனமாகாது சடப்பொருளாய், அசம்பவம் என்னும் குற்றமாய் முடியும் என்பதாம். ஈண்டுக் கூறப்படும் தடை விடைகளின் கருத்து, பௌட்கர பாடியத்தும் சிவாக்கிரபாடியத்தும் காணப்படுகிறது. உயிரின் வேறாய உடம்பினைப் பஞ்சபூதத்தின் பரிணாமம் என்ப. “பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கை” (குறள். 972. உரை) என்று பரிமேலழகர் கூறுதல் காண்க.

  98. அருள் என்றது ஈண்டு இறைவனது பராசத்தியை; அஃது ஒன்று தானே, இச்சை, ஞானம் , கிரியை என்று மூன்றாகி நிற்கும். அந்த அருளையுடைய முதல்வன் அச்சத்திகளால் உயிர்கட்கு அருள் புரிவன். ஆகவே, அருளையுடைய முதல்வனை அருள் என்றார். இதனை, “ஒன்றதா யிச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி, நின்றிடுஞ் சத்தி” (சிவ. சித். 1: 63) என்றும், “கிரியையறி விச்சை கிளர்ந்த சத்தி யேதோ, பெரிய பராசக்தி யெனப் பேசாய்” (துகளறு. 42) என்றும் வருவன காண்க. இதனால், சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பனாவன்’’ (சிவ. சித். 1:64) என்பது போல, “அருள்நேர் அறிவுக்கு” என்றார். எனவே, பராசத்தியொன்றே மூன்றாய்த் தொழிற் படுதல் போல ஆன்மாவும் மூவகைச் சத்தியால் தொழிற்படுவனென்ற வாறாம். “இச்சை யறிவு தொழில் எல்லாம் மெய் யாவியின்மேல் வைச்சன்றோ தீர்த்தான் மல மனைத்தும்”(88) என்று அனுபோக வெண்பா கூறும்.

  99. அருளிசைந்த ஆன்மாவுக்கு; அருள் பெறத்தக்க ஆன்மாவுக்கு; அருளையுடைத்தாகிய ஆன்மாவுக்கு; அருள்போல ஞான சொரூபியாகிய ஆன்மாவுக்கு- உ. வே.

  100. ஆன்மா, சேதனம்; மலம், சடம்; சேதனமாகிய ஆன்மாவைச் சடமாகிய மலம் மறைப்பது உடம்படத்தக்கது என்ற கருத்தப்பட “ஜடேநைவாஜடம் தஸ்மா த்வ பாத்யமப்ய பகம்யதாம்” (4:154) என்று பௌட்கரம் கூறுகிறது.

  101. ஓல்கா நீங்கா என்று கொண்டு உடைந்தொழியாதே எனச் செப்பறைப் பிரதி கூறுகின்றது.

  102. மூன்று மலமும் கூடியிருத்தற்கமைந்தும் ஈங்கெனச் சுட்டுதற் கேற்புடையதும் கேவல சகல சுத்த மென்ற மூன்றிடத்து நடுவண தாகிய சகலமாதலின், இச்சகலா வத்தையில் என்று உரை கூறப்பட்டது. கேவலம் ஆங்கு என்றும், சுத்தம் ஊங்குஎன்றும் சுட்டுதற் கமைவுடையன. கேவலத்தில் ஆணவமலமும் அது குறித்துச் சகலத்திற்கு இயைந்த மாயை கன்மங்களும் என்றற்கு, “ஆங்கு ஒல்கா அம்மூன்று மலமும்” என்றும், ஆணவமல மறைப்பொழியுங் காறும் ஆன்மாவை விடாது தொடர்வனவாதலால், “நீங்கா இயைந்த” என்றும் கூறினார்.

  103. உவமனில்லாத மிக்க விருள்- உ. வே.

  104. குற்றமற்ற விரிவுடைத்தாகிய கண்ணுக்கும்- உ. வே.

  105. ஆதவன் என்று கொண்டு, இப் பகுதிக்கே, “பிரபஞ்ச ரூபத்தைப் பற்றி நின்ற கண்ணானது திரும்பி ஆதித்தனை நோக்கமளவில் அந்தப் பிரபஞ்சரூபங்கள் தெரியாதது போல” என்று பொருள் கொள்வர் மதுரைச் சிவப்பிரகாசர். (சிவப். 80 உரை.)

  106. போலவுமாம், போலும் என்பது இடையே அகரச் சாரியை பெற்றுப் போலவும் என வந்ததாக உரைகாரர் கருதுகின்றார்; “அ, சாரியை” என்று கூறுதல் காண்க.

  107. பூதவிருள் செறிந்தவிடத்துக் காணும் கண்ணுக்கும் குருட்டுக் கண்ணுக்கும் காணுதலாகிய தொழில்நிகழாமைபற்றி வேறுபாடின்றாயினும், சேதனமாகிய ஆன்மா காணுங் கண்போல மலவிருள் நீங்க ஞானம் பெறும் என்றும், ஏனை அசேதனப் பொருளாயின் குருட்டுக்கண்போல ஒருகாலும் சித்தாதலின்றாம் என்றும் வேறுபடுத்திக் காண்க. இனி, இவ்வுமையால், குருடனது கண்ணில் மறைத்து நிற்கும் படல மாகிய குற்றம் கண்ணின் ஒளிக் குண மாகாதவாறு போல, அஞ்ஞானத்தைக் குணமாகவுடைய ஆணவமலம் சடமாதலேயன்றிச் சித்தாகாது என்றும், உயிர்க்குக் குற்றமாய் அறியாமையைப் பயக்கும் ஆணவமலம் குணியேயன்றிக் குணமாகா தென்றும் அறியப்படும்; இதன் கருத்தை, “புருடன்றன் குணம் அவித்தை யெனிற் சடம் புருடனாகும், குருடன்றன் கண்ணில் குற்றம் கண்ணின்றன் குணமோ கூறாய், மருடன்றன் குணமாதாகி மலம் அசித்தாகி நிற்கும், செருடன்றன் குணமதகிச் சித்தென நிற்குஞ் சீவன்” (சிவ. சித். 2: 85) என்பதனோடு வைத்து ஆராய்ந்து கொள்க.

  1,3, இவ் விருபகுதிகட்கும் ஏடுகளில் உரை பிறழ்ந்தும் வழுமலிந்தும் உள்ளது.

  4.  “இனி மாயாமலமிருக்கு முறைமை கூறின் முயற்சித்துச் செய்யும் போது நுண்ணிய நூலாலே பெரிய கூட்டை யெடுத்து அதற் குள்ளே யகப்பட்டுத் தான்கெடும் விசார மில்லாத உலண்டுப் புழுப் போல இருப்பதோராச்சரியம், இந்தச் சரீரத்திலே நின்று வேறொரு சரீரமெடுப்பதாக முடிந்தது” என்பது அச்சுப் பிரதியிற் காணும் உரை வேறுபாடு.

  5.  அந்த மலமாயை மயக்கத்திலே வந்ததென்று சொல்லப்படுவனவாகிய கெடுத்தற்கரிய அந்தக் கன்ம மலமான புண்ணிய பாவத்தின் தன்மையாகிய அஃதை யார்தான் அறிந்தோர்- உ. வே. அறிந்தி சினோரவர் என்று பாடங்கொண்டு பெருமிதத்தை யறிந்தார் யாரோ தான் அவர் அக்கன்ம மலமான புண்ணியபாவ மலமாயை மயக்கத்திலே வந்ததென்றும் கெடுத்தற்கரியவை யென்றும் சொல்லுவார்கள் எ-று-உ. வே.

  6.  தன்னுடலினாகிய நூற் கூட்டினாலே தான் சிறைப்பட்டு உலண்டுப் புழு மடிவதுபோல. மாயாமல சம்பந்தமுற்ற ஆன்மா மேன்மேலும் அதன் காரியமாக உடம்புகளையே தோற்றி அவற்றுட் சிறையுண்டு உழலுகின்றதென்பது கருத்து. இது மதிலை சாலா மருட்கைச் செயலாதல் தோன்ற “இறும்பூது” என்றார். வியப்பு- மருட்கை; இறும்பூது என்பதும் அதுவே. “நுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும், அறிவில் கீடத்து நுந்துழிபோல, ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட், டிடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது, குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி” (கோயில் 28) எனப் பட்டினத்தடிகளும் கூறுதல் காண்க.

  7.  இவற்றின் தொடர்பினின்றும் நீங்கிய ஞானவான்களல்லது பிறர் எவரும் அறியார் என்றற்கு, “யார் அஃதறிந்திசினோர்” என்றும் அறியாது அக்களியிடை உழப்பிக் கொண்டிருப்போரே இவ் வுலகத்தவராதலின், “யார்” என்றும் கூறினார்.

  8.  யிசைந்தோர்- பா. வே.

  9.  ஒளிவற. ஒழிவற- இவை சித்தாந்த மரபு கண்டன கண்டனத்துட் கண்ட பாடவேறுபாடுகள் (கண்ட. 30.)

  10. பின்னொடு - பா. வே.

  11. றொகுதித் - பா. வே.

  12. றின்னு மாசிரி - பா. வே.

  13. ரொப்பரு - பா. வே.

  14. மேல் மும்மலமுண்டென்கைக்குப் பிரமாணம் என்னென்று கேட்கப் பிரதானமான ஆணவமல சாதகம் கூறியது - பா. வே.

  15. அனாதியே ஆன்மாவைத்தன் சொரூப மறியாதபடி மறைத்தது யாது - உ. வே.

  16. “மலமே யனாதி மருவுங் கருமக், குலமே யரனீந்த கொள்கை - நலமாம், உயிரே மலமா யொடுங்குமால் எல்லாஞ், செயிரே யெனவே தெளி” (அநு. வெண். 165). என்பர் பிறரும். ஆணவம் ஆன்மாவின் அறிவிச்சை தொழில்களை மறைத்து நிற்றலை, “நிகழ்த்தியிடிற் சொரூபத்தின் விருத்தியாய் நிகழ்ந்தே, சிறந்துளதாம் ஞானேச்சாக் கிரியை யினைத் தடுக்கும்” (சிவநெறி 54) என்றும், “அறிவு தொழிலிச்சையினைத் தடுக்கு மாணவமொன்று” (சிவநெறி. 62) என்றும் சிவாக்கிர யோகிகள் கூறுமாற்றா லறிக.

  17. ஆர் உயிர். இறந்தகாலந் தொக்க வினைத்தொகை.

  18. மலம் நீங்கியபின் ஆன்மா ஞானானந்தப் பேற்றுக் குரித்தாதலை, “நின்மல மாயாவி நிகழ்மலத்தைப் பற்றுதற்கு, முன்மல மொன்றுண்டாய் மொழிவதாம்- பன்மலமும், உள்ளபோதாவி யொருப்பட்டுப் பின்மலத்தைத், தள்ளுங் கால் நின்மலமாந் தான்” (20) என்றும், பரிபாக காலத்தில் மலம் நீங்குமென்பதை “இருவினையு மொத்தா விசைந்த வரற் கன்பு, மருவுதலா லுண்டோ மலமால்” (31) என்றும் சித்தாந்த சிகாமணி யென்னும் நூல் கூறுகின்றது.

  19. குற்றமற்ற சர்வஞ்ஞத்துவத்தைப் பெறும் - உ.வே.

  20. புத்திமானே அறிவாயாக - உ. வே.

  21. ஏதுக்காணவமுண் டென்ன வேண்டும் எனில் உயிர்கள் ஞானத்தைத் தடுப்பதொன்றங் கிலையேல், மாதுக்க முறாவுயிர்கள் எவ்வறிவு மெல்லா வல்லமையும் சுதந்தரமும் மருவியிடும் பிறப்பாம், தீதுற்று வருந்தாது ஞானவுரு வாமால் சிவன்போலவே நிற்கும் சிற்றறிடி மாக, கோதற்ற முத்தியென்ப தேதுவிடி லென்றே, குறித்திடி லிவ்வாணவ மாங்கூறுங்காலே” (சிவநெறி. 57) என்று சிவாக்கிர யோகிகளும் இவ்வாறு ஆசங்கித்து உரைக்குமாறு காண்க. “பாசாபாவே பாரதந்தரியம் வக்தவ்யம் கிந்திபந்தனம்” (7:2) என்பது மிருகேந்திரம்.

  22. முறைமை - உ. வே.

  23. முன்பு முத்தியடைந்த ஞானிகளாலே சொல்லப்பட்டு வருகிற - உ. வே.

  24. ……………..ததநாதிஸ்த மர்வாக்வா தத்தேது ஸ்தததோரந்- யதா ருணத்திமுக்தாதேவம் சேத் மோக்ஷேயத்னஸ்ததோம் ருஷா ” (7,9) என்றும் மிருகேந்திரம் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  25. பதித்துவம் பெற்றோராவர்- உ. வே.

  26. “மலகமல மாயா தனுவகலுங் கன்ம, நிலையகலப் பூரணமாய் நிற்கும்” (சித். சிகாமணி. 53) என்று அம்பலவாண தேசிகரும் கூறுதல் காண்க.

  27. ஆணவத்தோடு ஒன்றியவுயிர், அது காரணமாக மாயா காரியமான உடம்பும் பிற கருவி கரணங்களும் பெற்றுப் புவனத்திற் பிறந்து இருவினைகளை யீட்டிப் பிறப்பிறப்பில் அலமருவதேபயனாகவும், அதனை யறியாதே அதன் சேட்டை யாகிய ஐம்புல வடிமைக்கண் பிரிப்பின்றி நிற்பது பற்றி, “பந்தத் தொன்றினர் ஐம்புல னேவலினின்றன” ரென்றார். “ஆணவத்தன்றே பட்டாய் அடுத்துறு மாயை பெட்டாய், பூணுறு வினைக்கோட் பட்டாய் போக்கொடு வரவும் பட்டாய்” (தணிகை. நந்தி. 139) என்று கச்சியப்ப முனிவர் விளக்குதலாலும் காணலாம்.

  28. பந்தமாவதும் - உ. வே.

  29. பரதந்திரியத்துக்கு ஏது மலபந்தமாகலின், ஏவல் செய்விக்கும் பந்தம் என்று உரை கூறினார். பரதந்திரியம்- பிறர் ஏவின செய்தல். பரதந்திரியம் கரைகழிபந்தம் என்னும் இது சிவாகமக் கருத்து. “முத்தியிற் சிவசம மாகாதவழிச் சுதந்திரமுடையனல்லனாம்; ஆகவே, ‘பரதந்திரியம் கரை கழிபந்தம்’ என ஞானாமிர்தத்திற் கூறுதலானும், சிவாகமங்களினும் இவ்வாறே கூறுதலானும் முத்தியும் பெத்த மெனப்பட்டு வழுவாம்” என்றும், “பரதந்திரியம் கரைகழி பந்தமெனச் சிவாகமங்களில் ஆண்டாண் டோதியது இவ்விறைபணி நிற்றலையன்று” என்றும் சிவஞானமுனிவர் (சிவ. பாடி. சூ. 6: அதி 2: சூ 10. அதி. 2) கூறுதல் காண்க. தத்பாரதந்திரியம் பத்தத்வம் (VII :4) என்பது மிருகேந்திரம்.

  30. மலபந்தத்தால் பரதந்திரியமாய்க் கல்வி கேள்விகளின் நிற்கும் திட்பம் குன்றியொழிதலின், “மிகப் போதித்தாலும் ஞானமெய்த மாட்டார்” என்றார். “ஒருகோடி யாகமங்களெல்லா முணர்ந்தும், பெருகு தவஞ் சித்தியெல்லாம் பெற்றும்- குருவருளால், வைத்தபடியிருக்க மாட்டாத மாந்தருக்குச், சித்தசல னம்மாந் தினம்” (15) என்று சிவ போகசாரம் கூறுவது காண்க.

  31. நின்ற நிலையிலே மிக்க ஞானமுண்டாகமாட்டார்- உ. வே.

  32. உமாபதி சிவனாரும், ஆணவமலம் தான் ஒன்றாய், உயிர்த்தொகைகளை மறைக்கும் அளவிறந்த சத்தியினை யுடைத்தாம் என்பார், “ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் இருளொளிர விருண்ட, மோகமாய்ச் செம்பினுறு களிம் பேய்ந்து நித்த மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும்” (சிவப். 20) என்று கூறுதல் காண்க.

  33. தனது வியாபகத்தில் குறைபாடின்மை ஈண்டுக் குற்றமின்மையென்றிக. நிபிடம்- செறிவு. “அது சருவான் மாக்களுக்கும் ஒன்று; அநாதி நிபிடம் மஹத ஆன்மாக்கள் தோறும் அமைந்தனவாய்த் தமது கால முடிவில் அழிவுடையனவாகிய அநேக சக்திகளையுடைது’ (67) என்ற கருத்துப்பட ததேகம் ஸர்வபூதானாமநாதிநிபிடம் மஹத் ப்ரத்யாத் மஸ்தஸ்வகாலாந்தா பாயி சக்தி ஸமூஹவத்” (VII :8) என மிருகேந்திரம் கூறுகிறது.

  34. ஆணவமலம் தான் ஒன்றுமே அனாதியாகச் செறிந்திருக்கும்; இது தான் அளவுபடாதது- உ. வே.

  35. சர்வான்மாக்களிடத்தும் நிற்பதாவது ஆன்மாக்கடோறும் அவையனைத்தையும் தன்னுள் மறைத்துக்கொண்டு ஆணவ மலந் தானேயாய் நிற்றல். ‘இருளானதன்றி யிலதெவையும் ஏகப், பொருளாகி நிற்கும் பொருள்” (திருவருள் 22) என வருதல் காண்க.

  36. பாசச்சேதம்- பாசத்தினின்றும் நீங்குவது.

  37. வலியின் தகுதித்து என்பதை வலியில் தகுதித்து என்று பாடங் கொண்டு அதற்கேற்ப ‘வலியில்லாத முறைமையினை யுடைத்து” என்று பெருமண்டூர்ப் பிரதி கூறுகின்றது. “தம்கால் எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியது” (சிவப். 20) என்பதும் இக் கருத்தை வலியுறுத்தி நிற்பது காண்க.

  38. “முத்தருக்கு மலபந்தமில்லாதது கொண்டு மலத்துக்கு வியாபகத்துவங் கூடாதெனறீர்; ஒளிவற நின்றக் கண்ணும் விளிவுறு தன்னுடைக் காலந்துன்னிற் பின்னிடும் வலியின் றொகுதித்து” என்றதன் தாற்பரியமு மறியீர் போலும்” என்று சித்தாந்த மரபு கண்டன; கண்டனத்துள் இப்பகுதி எடுத்தோதப்படுகிறது. (சித். கண். 30)

  39. வியாபக மலமானது “ஒவ்வொரு புருடனிடத்தும் நியமமாயும், தத்தம் காலவெல்லையில் நீங்குஞ் சத்திகளையுடைய தாயுமிருக்கின்றது” (சூ. 132) என்று போக காரிகை கூறுகின்றது. இவ்வாறே, “ஒவ்வொரு புருடனிடத்தும் இருக்கிறதாயும் தத்தங்கால முடிவில் நசிக்குஞ் சத்திகளை யுடையதாயுமிருக்கின்றதெனப் பிறரும் கூறுகின்றனர்”- அகோர சிவாசாரியார்.

  “ததநாதிஸ்த மர்வாக்வா சத்தேது ஸ்தததோபிந்யதா ருணத்தி முக்தானேவம் சேத் மோக்ஷே யத்னஸ்ததோ ம்ருஷா”(VII 9) என்று மிருகேந்திரம் கூறும்.

  அது உண்டானபடிக்கு வேறோர் ஏது வேண்டும் - உ. வே.

  3.  இன்னும் - உ. வே.

  4.  வேண்டுமென்று உற்சாகிப்போர் உற்சாகிக்கும் - உ. வே.

  5.  உமையில்லாத வருத்தம்- உ. வே.

  6.  “ஆன்மாவிற்கும் மலத்திற்கு முள்ள சமபந்தத்தை இடையில் உண்டானதாகக் கொள்ளின், அவ்வாறுண்டான தற்கும் ஒரு காரணஞ் சொல்லவேண்டும்; அதனால் அது மேலுஞ் சென்று முடிவின்மை யென்னுங் குற்றத்திற்கிடனாம்” (134,5) என்றும் “ஆன்மாக்களுக்கு முத்தியே இல்லாமற் போய்விடும், ஈசுவரனுக்கும் ஈசுவரத் தன்மை இல்லாமை நேரிடும்” என்றும் போக காரிகை கூறுகிறது.

  7.  உண்மை இன்மையின் என்று கொண்டு உண்மையாக இல்லாதபடியாலே யென்று செப்பறைப் பிரதி கூறுகின்றது.

  8.  ஆன்மாக்கள்தோறும் தனித்தனி யிருப்பதாகக்கொண்டு ஆணவமலத்துக்குப் பன்மைத் தன்மை யுண்டென்றால், அது குற்றமாம் என்பதனால், “ஏகம் என அறி” என்றார்; “மலம் ஒவ்வொரு புருடனிடத்தும் இருப்பதாகக் கூறின் சடத்தன்மையும் அநேகத்தன்மையும் இருப்பதுபற்றித் தோன்றி யழிவதாகிவிடும்” (போக. சூ. 136) என்றும் “சடமாயும் நித்தியமாயும் இருத்தலால் ஆணவமலம் ஒன்றேயாம்; அநேகமென்று சொல்லின், சடமாயும் அநேகமாயு முள்ள கடம் முதலியவைகளுக்கு அநித்தியத் தன்மை காணப்படமாறுபோல, ஆணவமலத்திற்கு அநித்தியத் தன்மை சம்பவிக்கு மாதலால், அது பொருந்தாது” (தத்துவப்பிரகா. 18. உரை) என்றும் அறிஞர் கூறுவது காண்க.

  9.  “ஒன்றதாய் அநேகசத்தி யுடையதாய் உடனாய் ஆதி, யன்றதாய் ஆன்மாவின்றன் அறிவொடு தொழிலை யார்த்து, நின்று போத் திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற்களிம் பேய்ந், தென்றுமஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே” (சிவ. சித். 2: 80) என்றும் அருணந்தி சிவனார் கூறுவர்.

  10. ஒளிகெழு எனற்பாலது எதுகை நோக்கி, “ஒலிகெழு” என வந்தது; பொள்ளார் எனற்பாலது “பொல்லார்” (சிவ. போ. கடவுள் வாழ்த்து) என வந்தாற்போல இவ்வாறே லகரம் ளகரமாய் வருதலுமுண்டு; “அலமரு குயிலினம்” எனற்பாலது “அளமரு குயிலினம்” (சீவக. 49) என வருதல் காண்க. வீடென்பது ஆகு பெயராய் வீடு பேற்றுக்குரிய ஞானத்தின்மேல் நின்றது.

  11. “மலம் ஒன்றாயிருக்குமாயின் மலநிவர்த்தி யென்னும் முத்தி ஒருவனுக்குண்டாகும்பொழுது அனைவருக்கும் உண்டாக வேண்டுமே யென்னின், மலம் ஒன்றாயிருந்தாலும் அநேக ஆன்மாக்களை மறைக்கக்கூடிய அநேக சத்திகளை உடையதா கையால், எந்த மலசத்திக்குப் பரிபாகம் உண்டாகின்றதோ அந்த மலசத்தியால் மறைக்கப் பட்டிருந்த ஆன்மாவிற்கு மட்டும் முத்தியேயன்றி ஏனையோருக்கில்லையென்க” என்று அகோர சிவாச்சாரியார் கூறுவது நோக்கத்தக்கது. இதனால், எல்லா ஆன்மாக்கட்கும் முத்திஞானம் ஒரு காலத்திலே கூடாதென்பது இனிது விளங்கும். இவ்வாற்றால் ஆணவ மலத்தின் மறைக்குஞ் சத்திகள் கெடினும், முதலாகிய அவ்வாணவ மலத்துக்கும் கேடில்லை யென்பதும் சாதித்தவாறாயிற்று. இவ்வகவலிற் கூறிப் போந்த தடை விடைகள் மிருகேந்திரப் பாசலக்ஷண ப்ரகரணத்தில் காணப்படுகின்றன.

  ‘ததேகம் பஹீஸங்க்யம் து தாத்ருகுத்பத்திமத்யத: கிந்து தச்சக்தயோநைகை க யுகபத் முக்த்யிதர்ச ளுத” (VII. 10) என்பது மிருகேந்திரம்.

  12. என்று அறிவாயாக என்றே பல பிரதிகளிலும் காணப்படுகிறது.

  13. கலை யென்பது கற்றற்குரியன என்னும் பொருளில் கல்லென்னு முதனிலையிற்றோன்றிய தமிழ்ச்சொல். கலா என்னும் வடசொல்லின் சிதைவாகிய கலையென்பது நீக்குதல் அல்லது செலுத்துதல் என்னும் பொருளதாம்.

  14. கேட்டியின்பம்- பா. வே.

  “எல்லாவுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற்றாகும்” - தொல். பொரு. பொருள் 29.

  15. “நிரயமெய்தினர் பலரே புரைதீர் போகபூமி மேவுநர் பலரே” என்ற பாட வேறுபாடு செப்பறைப் பிரதியில் காணப்படுகிறது.

  16. மெய்துநர்- பா. வே.

  17. மேவுநர் - பா. வே.

  18. மையிகு என்ற பாடம் அச்சுப் பிரதியில் மட்டிலுள்ளது

  19. “நல்லார் நயவரிருப்ப நயமில்லாக், கல்லார்க்கொன் றாகிய காரணம்- தொல்லை, வினைப்பய னல்லது வேல்நெடுங்கண்ணாய், நினைப்ப வருவதொன் றில்” (நாலடி. 265) என்பதன் கருத்து ஈண்டு ஒப்பு நோக்கற் குரித்து.

  20. மாசு துடைத்துயர்ந்த என்ற பாடம் ஒரு பிரதியில் மட்டில் காணப்படுகிறது

  21. இவ்வகவலின் பொருள், “அவிசிஷ்டேது போக்த்ருத்வே புஞ்ஜதே தீவி கேசன தேசதை வீசிமுக்யேஷூ நஸ்யாதித் அஹேதுகதி யத்தத்ர ஹேதுகர் மேதி மந்தவ்யம் முனிபுங்கவ: உபயோ: க்ருஷிஸாம்யேது கஸ்சித்தான்யாரு யச்சதி ந கிஞ்சித் அபரஸ்தஸ்ய கர்ம காரணகம் த்விஜா: இது கன்மமல சாதகம் கூறியது. (iii. 31, 32) என்று பௌட்கரம் கூறும் பொருளைத் தழுவி நிற்பது காண்க.

  22. கலை யென்பதை எல்லா நூல்கட்கும் பொதுப் பெயராகக் கொண்டு, இவ்வுரைகாரர்,“வேதாகமங்கள்” என்று கூறுகின்றார்; இவரைப் போலவே, மதுரைச் சிவப்பிரகாசரும்,கலைஞானமென்பது சருவ நூலுக்கும் பொதுப் பெயர்” என்பர். ‘‘பல கலை யாகமவேதம்” (சிவப். 13) என்பதற்கு, “பல கலை ஞானங்களாகச் சொல்லப்பட்ட ஆகமங்கள் வேதங்கள்” என்று அவர் உரை கூறுமாறு ஈண்டு நோக்கத்தக்கது. இனி, கலையும் சாத்திரமும் என வேறுபடுத்தி, கலை செயற் குரியதென்றும் சாத்திரம் அறிதற்குரியதென்றும் கூறுப.

  23. இருக்கும்படி சொல்லின் புத்தி பூர்வமாகக் கேட்பாயாக - உ. வே.

  24. வேண்டினோராயிருக்கின்றார்; இருக்க - உ. வே.

  25. குற்றிமில்லா துயர்ந்த - உ.வே

  26. போகம் புசித்தோரும் பலர் விதனம் புசித்தோரும் பலர் என இறந்த காலத்தாற் கூறியது, ஆசிரியர் புராண இதிகாச வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு வற்புறுத்துகின்றாராதலால்; இதனைக் “கலைநவில் கருமம்” என்று மேற்கொண்டுரைப்பதாலறிக.

  27. இஃது எப்படி யென்பாயாகில் இதனைத் திட்டாந்தத்திலும் காண்பாயாக- உ. வே.

  28. இவ்வுரை சில பிரதிகளில் இல்லை.

  29. இக்கருத்தையே ஒளவையார் “பண்ணிய பயிரிற் புண்ணியந்தெரியும்” என்று உரைத்திருப்பதை ஓர்க.

  30. கன்மங் காரணமாகவேண்டுங் காண்- உ. வே.

  31. கருமம் காரணம் என்று ஈண்டு உணர்த்துவதுபோலவே, பிறாண்டும், “பையுள்நீங்கப் பயன்பல பெருக்கக், கைதூவாத செய்தியோர்க்கும், பருவரல் வருவது துருவ மல்லதை, வருவது நன்னய மற்றோ” (ஞானா. 38: 1-4) என்று கூறுவது காண்க. இனிச் சிவஞான முனிவர், “காரியங்களெல்லாம் ஒருங்கே தோன்றாது, அடைவே தோன்றுதற்குக் காரணம் வினையேயன்றிப் பிறிதின்மை யானும் வினையுண்மை துணியப்படும்” என்றும், “வினை யில்லையாயின், விதித்தன செய்து விலக்கியன ஒழிதலாற் பயன் இன்றாய் முடியுமாகலானும் வினையுண்மை துணியப்படும்” (சிவ. பாடியம் ) என்றும் கூறுவர்.

  32. உயர்ந்த மதியினோயே என்றது, பயன் பெற்றான் செய்த முயற்சி யினையே பெறாதானும் செய்திருப்பவும், வினை வேறுபட்டதற்குரிய காரணத்தை ஆராயவேண்டி யிருத்தலின், முயற்சி யொப்பினைச், செய்வினை ஒத்தக் கண்ணும் என்பதனால் உணர்த்துகின்றார்.

  33. மேலான ஞானத்தை- உ. வே.

  34. வலியுற் றுலகவை புரக்கும் - பா. வே.

  35. சகல புவனத்திலுமிருக்கும் ஆன்மாக்களுக்கு அறிவும் தொழிலும் கொடுக்கிறதினாலே சிவனுக்கு வியாபகம் என்றது முதல் எண்ணிறந்த கோடி ஆன்மாக்களுக்கும் எண்ணிறந்த கோடி புவனத்திலே புசிப்பிருக்கையினாலே கன்மம் வியாபகம் என்பது வரையும் தூலாருந்ததி நியாயமாய்க் காணப்பட்டு நிகழும் நிகழ்ச்சி கொண்டு, காணப்படாத பொருளைத் தெரிவித்தல் சிவாகமங்களின் துணிபு என்னும் முறைமைபற்றிக் கூறியதென்று அறியமாட்டாது, ஏதேதோ குழறிய நீர் ‘இலதென்றலின் ஆன்மா வுளது, எனதுடல் என்றலின் ஆன்மா வுளது: என்றாற்போல் வனவற்றையும், ‘சகக்கருமத்தின் மிகத் திகழிறையை….. கூறுதி’ என்றற்றொடக் கத்தன வற்றையும் இவ்வாறு குற்றம் கூறி இகழ்வீர் போலும்’ - சித்தாந்த மரபு கண்டன கண்டனம். (கண். 27- 30)

  36. பூதமவதியா- பா. வே.

  37. என்பரறிவி- பா. வே.

  38. நின்றிடுந் தன்னை- பா. வே.

  39. கண்டா லெவர்க்கும்- பா. வே.

  40. புணர்ந்து- பா. வே.

  41. துடங்கற விடம்பட விளங்கு மாரி?- இப்பாடம் செப்பறைப் பிரதியிற் காணப்படுகிறது. வடம்பட விளங்கும் - பா. வே.

  42. ரேரியல்- பா. வே.

  43. மேதகுமாயை என்று சிறப்பிக்கப்படும் இதன் இலக்கணத்தை,அருணந்தி சிவனார், “நித்திமா யருவா யேக நிலையதா யுலகத் திற்கோர், வித்துமா யசித்தா யெங்கும் வியாபியாய் விமலனுக்கோர், சத்தியாய்ப் புவனபோகந் தனுகரணமு முயிர்க்காய், வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே” (சிவ. சித். சூ. 2. 53) என்றும், பௌட்கராகமம்.

  “நித்யைகா வ்யாபினீ வஸ்தர ரூபா தர்மாச்ரயா சிவா ஸாதாரணீச ஸர்வேஷாம் ஸகலானாம்முனீச்வரா:

  ப்ரலயே லீநதேஹஸ்ய கர்மிணோ ணோரஹர்முகே

  தேஹாதே: காரணம் மாயா ஸூக்ஷ்ம ஸ்தூலாத்மகஸ்யது

  “என்றும், சுவாயம்புவாகமம்” மாயாதத்வம் ஜகத்பீஜம் அவிநாச்ய சிவாத்மகம்

  விப்வேக மகலம் சூக்ஷ்ம மநாத்யவ்ய யமீச்வரம்

  என்றும், மிருகேந்திராகமம் ததேக மசிவம் பீஜம் ஜகத: சித்ரசக்திமத்

  ஸஹ கார்யா திகாராந்த ஸம்ரோதி வ்யா ப்யனீச்வரம்”

  (ix : 2) என்றும் கூறுதல் காண்க.

  2.  மேம்பாட்டைத் தகுதியாகவுடைய- உ. வே.

  3.  சாங்கியர் மதம் பற்றி முக்குணங்களிற் செல்லாமைப் பொருட்டுக் கோதின் றேகம் என்றார். மாயை ஏகம் என்னும் இதனை மேலே “யாது பலவாய்ச் சேதனம், அன்று அது தோற்றத் தொன்றும் அன்று இது, தோற்றமாகலின் ஏகம்” (ஞானா 21: 19-21) என்பதனாலும் வற்புறுத்துகின்றார்.

  4.  தானொரு நித்திய வத்துவாயிருக்கும்- உ. வே.

  5.  கணிகவாதிகள் மதம் பற்றிச் சார்பினிற் செல்லாமைப் பொருட்டு நித்தமான தென்பார், நாசமதணையாது என்றார்.

  6.  பாற்கரியர் மதம் பற்றிப் பிரமத்திற் சொல்லாமைப் பொருட்டு அளவில் வலியாய் என்றார்; “விசித்திரமாயும் அளவிறந்த தாயுமுள்ள காரியங்கள் காணப்படுகின்றமை யால் இந்த மாயை விசித்திரமாயும் அநேகமாயும் (அளவில்லாததாயும்) உள்ள சத்திகளுடன் கூடிய தென்றறியப்படும்” (போககாரிகை 118) என்பதனாலும் மாயை “அளவில் வலியிற்”றாதல் தெளியப்படுகிறது.

  7.  உலகவை பிறக்கும் யோனி யென்றது மாயையின் சொரூபம். இது மாத்தியமிகர் மதம்பற்றிச் சூனியத்திற் செல்லாவாறு கூறியது.

  8.  வைசேடிகர் மதம் பற்றிப் பரமாணுக்களிற் செல்லாமைப் பொருட்டு எங்கணும் அமலும் என்றார்.

  9.  பிராரத்துவ கன்மபலம் புசித்தறுமளவும்- உ. வே.

  10. தேகத்தைக் கொடுக்கைக்கு இடமான முறைமையாகிய ஆச்சரியத்தை யுடைத்து- உ. வே.

  11. ஆன்மாக்கள் கன்மபலம் புசித்தறுமளவும் தனுகரணாதிகள் வேண்டியிருத்தலின், அவ்வெல்லை காறும் சலிப்பின்றிக் கன்மத்துக் கேற்பத் தனுவாதிகளை நல்கும் பெருமை குறித்து வியப்பிற் றென்றாராக, “ஆச்சரியத்தை யுடைத்து” என்று உரைகூறினார்.

  12. காரியமாகிய பிரபஞ்சத்தைக்கொண்டு- உ. வே.

  13. பிரகாசமான பரமசிவனை விசாரித்தறிந்தாற் போல- உ. வே.

  14. அழகுண்டாகிய பிரபஞ்சம் காரியமாக இருத்தலால் - உ. வே.

  15. இக்கருத்தேபற்றிச் சிவஞான முனிவரும், மாயை யுண்மையைப் பற்றிக் கூறலுற்றவிடத்து, “மேலைச் சூத்திரத்திற் (முதற்சூத்திரத்திற்) பிரபஞ்சத்திற்கு நிமித்த காரணமுண்டெனச் சாதித்த வழியளவையே, முதற்காரண முண்மைக்கும் பிரமாணமாம்; ஆகலானும் மாயையுண்மை துணியப்படுமென்க” என்று கூறுகின்றார். “காரியம் காசினியாதி” (ஞானா.12) என்றாராகலின், அணி கிளர் உலகம் என்றதற்கு, “காரியப்பிரபஞ்சம்” என்றும் இது “காரியப் பொருளாயிருத்தலால்” என்றும் உரைக்கின்றார். உபதானம்- முதற்காரணம்.

  16. மிருகேந்திரம், “கர்தா து மீயதே யேந ஜகத்தர்மேண ஹேது நா

  தேநோபா தாந மபயஸ்தி ந படஸ்தந்துபிர் விநா” (ix 3) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

  17. முன்பு அளவில் வலியாய் என்றதனால், முதல்வனது சிற்சத்தி என்று ஆகாமைப் பொருட்டு, ஈண்டுச் சேதன மன்று என்றார். இக்கருத்தே விளங்க, அருணந்தி சிவனார், “அசித்தாய்” என்றமை அறிக.

  18. இதனுடைய - இம்மா யையினுடைய இக்கருத்தையே

  மிருகேந்திரம் “ததசேதன மேவ ஸ்யாத் கார்யஸ்யா சித்வ தர்சனாத்

  ப்ராப்தஸ் ஸர்வஹரோ தோஷ: தாரணா நியதோ ந்யதா” (ix.4) எனக் கூறுகிறது.

  19. பெரிய கீர்த்தியெல்லாம் -உ. வே.

  20. பிரம முதற்காரண வாதிகள், “பிரம்ம பிரபஞ்சத்திற்கு முதற்காரணமென்பது வேதமுதலியவற்றிற் கெல்லாம் ஒப்ப முடிந்ததாகலின், அதுவேயமையும்” என்றாராக, அவரை மறுத்து மாயையே முதற்காரணமெனச் சாதிக்கும் சிவஞான முனிவர், “அற்றன்று; அவ்வம் முதற்காரணங் களின் குணமெல்லாம் அவ்வக்காரியங்கட்கும் உளவென்பது நியமமாகலின் சித்தாகிய பிரமத்தில் தோன்றிய பிரபஞ்சமும் சித்தாதல் வேண்டுமன்றிச் சடமாதல் பொருந்தாமை யான், என்க” என்றும் எனவே, “மாயையே முதற்காரண மாவதன்றிப் பிரமம் முதற்காரண மாகா தென்று ஒழிக” என்றும் கூறுவன காண்க.

  21. படைத்தல் காத்தல் அழித்தலென்னும் இவற்றிற்கு ஆதாரமாயும் உலகத்திற்கு முதற்காரணமாயும் நித்தியமாயும் வியாபகமாயும் சடமாயும் ஒன்றாயும்இருக்கும். மாயை யானது தனது விகாரமான காரிய வருக்கங்களுக்குப்பின் படிக்கப்பட்டிருக்கின்றது” (27) என்னும் பொருளினதாகிய தத்துவ சங்கிரகக் கூற்றுக்கு விளக்கவுரை சொல்லப் புக்க அகோர சிவாசாரியார், “மாயை பரம காரணமாயிருத்தலால் நித்தியமாயுள்ளது” என்றும், அந்த மாயையைப் பரம காரணமாகக் கொள்ளாவிடில், அதற்கும் ஒரு முதற்காரணம் வேண்டப்படும்; படவே வரம்பின்றி யோடல் என்னும் குற்றம் வருமென்க” என்றும் கூறுவர்.

  22. அந்நீர்மைப்பட - உ. வே.

  23. எவ்விதமோ- உ. வே.

  24. மாயை வியாபியன்று எனில், பரமாணுவாய்ச் சென்று அடங்கி வைசேடிகர் முதலியோர் மதமாயொழியுமென்பர் சிவஞான முனிவர். அவ்வாறு கொண்டால், அநித்தியத் தன்மை முதலிய குற்றங்களுண்டாமென்பர் அகோர சிவாசாரியார். இனிப் போக காரிகை யுடையார் “எல்லாவற்றையும் வியாபிக்கும் இந்த மாயை, ஆன்மாக்கள் அநேகமாதலால் அவற்றின் போகத்தின்பொருட்டு எவ்விடத்தும் எல்லாக் காரியங்களையும் பிரவாக ரூபமான எல்லா மகிமைகளுடன் தோற்று விக்கின்றது”(120) என்று கூறுகின்றார்.

  25. கன்மம் பக்குவப்பட்டபடிக்கு ஆன்மாக்கள் எவ்விடத்தும் போகம் புசிக்கும் உபாயம் சொல்லாய்- உ. வே.

  26. 16-19 வரையிலுள்ள இப்பகுதியின் கருத்தை மிருகேந்திரம் “யத்யநித்யமிதம் கார்யம் தஸ்மாதுத்பத்யதே புன; அவ்யாபீசேத் குதஸ்தத்ஸ்யாத் ஸர்வேஷாம்ஸர்வதோ முகம்” (ix.5) என்று கூறுகிறது.

  27. தோற்றரவைக் காட்டாது- இவ்வுரை அன்று என்பதை ஒன்றும் என்பதனோடு இயைத்துக் கூறுகிறது.

  28. இவ்வாறே மிருகேந்திரமும்.

  ‘யதநேத மசித்தம்து த்ருஷ்ட முத்பத்திதர்மகம்

  நததுத்பத்திமத்தஸ்மாதேக மப்யுபகம்யதாம் ” என்று கூறுகிறது.

  29. இது சில பிரதிகளில் இல்லை.

  30. நூற்கழிகளின் தொகுதியன்றிப் புடவையென வேறின்மையின், நூலின் தொகுதிக் காண்டலின் என்றான்.

  31. நூற்கழி- நூலிழைகள்,

  32. “என்று……………செய்ய” என்பதற்குப் பதிலாக “எனில் என்றொரு சொல் சில பிரதிகளில் காணப்படுகிறது. இவ்வினாவையே மிருகேந்திரம் “படஸ்தந்து தணாத்த்ருஷ்ட; ஸர்வமேகம நேகத: (ix 7) என்று வினவுகிறது.

  33. புடவையின் ஆக்கத்துக்குரிய காரணக் கூறுகளாக நூற்கழியன்றி, அதற்கும் காரணமாகிய வித்தினை நினையாமையாலும், நினைந்தவழி, அதுவே இப்புடவைக்கும் காரணமாய ஏகமாய் இருப்பது விளங்கிவிடுமாதலாலும், “அறி அப்பலவும்” என்றும், “அறிதி” யென்றும் வற்புறுத்தினார்.

  34. வென்னும்படி யறியாயோ-

  35. இக்கருத்தே கொண்ட விடை மிருகேந்திரத்தில் “ததப் யநேக மேகஸ்மாதேவ பீஜாத் ப்ரஜாயதே”

  (ix 7) என்று கூறப்படுகிறது.

  36. இவ்வாறு சொல்லுவோர் பிரம முதற்காரணவாதிகள்.

  37. பிரமாணக் குற்றமாம் என்றும், அனுமானம் கொண்டபடியாகிய பிரமாணமின்மையாம், இது பிரமாணாபாசம் என்றும் பிரதிகளில் உரை வேறுபாடு காணப்படுகிறது.

  38. இஃது அச்சுப்பிரதியில் இல்லை. அழகிய பரமாணுவே காரணமென்று திருஷ்டாந்தமாக நூற்கழி பலவற்றால் வரும் புடவையை யெடுத்துக் காட்டும் நையாயிகரது நுண்ணறிவை யினிதாக வறிந்தோம் - செப்பறைப்பிரதி.

  39. பரமாணுவே பிரபஞ்சத்திற்கு முதற்காரணம்; மாயை யன்று என்பாரை மறுத்து மாயையே முதற்காரணமென்று வற்புறுத்துவாராகிய சிவஞானமுனிவர் ‘அற்றன்று, அணுக்கள், அவயவமுடைமையானும் அவற்றின் நுண்ணிய பரமாணுக்கள் உண்டென்பதற்குப் பிரமாணமின்மை யானும், உண்டெனினும் சடமுடாய்ப் பலவு மாயின வெல்லாம் தோன்றி நின்றழியும் காரியமே யாதலின், அவற்றிற்குக் காரணமுண்டென்பது பெறப்படுதலானும், காரியந் தோன்றியவழிப் பலவாய் ஏகதேசமாய்க் காட்சிப் புலனாய் நிற்றல் பற்றித் தூலமெனவும், ஒடுங்கிய வழி ஒன்றாய் வியாபகமாயப் புலனாகாது நிற்றல் பற்றிச் சூக்கமமெனவும் கொள்ளப்பட்டன; அக் கருத்தறியாது சூக்கும மென்னும் சொல்லே பற்றி அணுக்களை உலகிற்கு முதற் காரணமென்றல் பொருந்தாமையானும் மானயயேமுதற் காரணமென்றுணர்க” என்பர்.

  40. தோன்றுமல்லது, தோன்றுமதல்லது-

  41. ஒரு நாளிலேயழிந்து தோன்றும் மகா சங்காரம்-

  42. இல்லையென்று கூறுபவர் உலகாயதர்; “உதிப்பதும் ஈறு முண்டெனறுரைப்பதங் கென்னை முன்னோர், மதித்துல கனாதியாக மன்னிய தென்பர்” (சிவ. சித்தி. சூ. 1:2) என வருவதும், ‘ஒத்துறு புணர்ச்சியினுருக்கள் பலவாகும். வைத்துறு கடாதிபல மண்ணின் வருமாபோல்” (சிவ. சித்தி. பா. 15) என்பதும் காண்க.

  43. ஈண்டுக்கூறப்படும் கருத்தும் “பெற்றிமையின்- ஓதாரோ, ஒன்றென்றிற் றோன்றி யுளதா யிறக் கண்டும், அன்றென்றும் உண்டென்று மாய்ந்து” (சிவ. போ. சூ. 1. வெ. 1) என்ற திருவெண்பாவின் கருத்தும் ஒத்திருத்தல் காண்க.

  44. ஒரு நாளிலே யழியப் பக்குவப்படுமாயின்- உ. வே.

  45. “அந்தப் பக்குவத்தை நீக்கும் வெற்றியுடையார்” என்றும், “அப்பக்குவத்தை நீக்கி அழியாமையை வென்றியுறச் செய்ய வல்லர்” என்றும் உரை வேறுபாடுகள் உண்டு.

  46. எல்லாச் சரீரிகட்கும் ஒரு நாளிலே யுண்டு காண்- உ. வே.

  47. “பயில்வித்தெல்லாம், காரிட மதனிற் காட்டு மங்குரங் கழியும் வேனிற் சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்” (சிவ. சித். 1:9) என்று அருணந்தி சிவனார் கூறுவதும், இச்சித்தியார்க்குச் சிவஞான முனிவர் உரைத்த உரையில் “தம்முள் ஒருசாதிப் பல பொருளாகிய வித்து முதலிய சடங்கள் ஒவ்வொரு கால விசேடத்தின் ஒருங்கே தோற்றுதலும், ஒருங்கே யழிதலும் கண்டாமாகலின் அவ்வியல்பிற்றாகிய உலகமும் அவ்வக்காலம் வந்துழி அவ்வாறு முழுவதும் ஒருங்கே தோன்றி ஒருங்கேயழியிம்“ என்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

  48. இதனைச் சிவஞான சித்தியார், “காரண வணுக்கள் கெட்டாற் காரியவுலகின் றென்னில், காரண மாயை யாகக் காரியங் காணலாகும், காரணம் மாயை யென்னை காண்பதிங் கணுவே யென்னிற், காரணமாயையே காண் காரியம் மணுவிற் கண்டால்” (சூ. 1: 12) என்றும், கிரணாகமம் “மகாப்பிரளயத்தில் மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்டு சத்தி ரூபங்களாக நிற்கும் காரியங்கள், சிருட்டிகாலத்தில் பொருள் ரூபத்தோடு காரியத்தின் பொருட்டுத் தொழிற்படுகின்றன.

  “ததாதாராணி கார்யாணி சக்திரூபாணி ஸம்ஹ்ருதௌ

  விக்ருதௌ வ்யக்திரூபாணி வ்யாப்ரியிந்தேயிர்த்த- ஸித்தயே” (ix 13) என மிருகேந்திரம் கூறுதலும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  49. தொடங்கற்காலை திகழ் தனுமுதல் போகம் அருந்த இடம் படத் தோன்றும் என இயைக்க. இக்கருத்தையே போககாரிகையுடையார் “இந்த மாயையினுடைய கலை முதலிய வற்றின் தோற்றமானது, போகத்தை யனுபவிக்கும் சம்சாரிகளுக்கு அந்தப் போகத்தை உண்டுபண்ணுதற் பொருட்டு உண்டாகின்றது” (சூ. 117) என்றும், அருணந்தி சிவனார். “உயிர்க்கு, மன்னிய புத்தி முத்தி வழங்கலும் அருளால் முன்னே துன்னிய மலங்களெல்லாந் துடைப்பதுஞ் சொல்லலாமே”(சித். 1:56) என்றும் கூறுவர். இவ்விரு வரினும் திட்பமாக, “மயக்கிடு மாயா காரிய மிலையேல் வல்வினை நுகர்ச்சியு மில்லை, துயக்குமவ் வினையின் கழிவு மாங்கெய்தா தொல்லையே சூழ்ந்த வாணவத்தின், முயக்கு மற்றொழித லரிதரி தாகும் மூதுயிர் மாயை காரியத்தின், இயக்குற லன்றி யிருவினை யீட்டா திவை யின்றி யவையு மெய்தாவால்” (தணிகைபு. நந்தி 110) என்று கச்சியப்ப முனிவர் கூறுகின்றார்.

  50. அவ்வாறு ஒடுங்கிச் சிருட்டி காலத்திலே - உ. வே.

  51. நன்றாகப் புசித்தற்கு ஏதுவான பிரகாசமுள்ள தனுகரண புவன போகங்கள்- உ.வே.

  52. ஒழுங்குபட, அழகுண்டாக - உ. வே.

  53. இத்திருவகவல் மாதவச் சிவஞான முனிவரால் சற்காரிய வாதத்துக்குச் சிவஞான பாடியத்துள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. முதற் சூத்திரத்து இரண்டாமதி கரணத்துட் காண்க.

  54. யின்றெனி னாடை- பா. வே.

  55. வனையா - பா. வே.

  56. பாயினும் - பா. வே.

  57. டியமனம் - பா. வே.

  58. மிதனுள - பா. வே.

  59. மன்னோ என்னும் சீர் சில பிரதிகளில் இல்லை.

  60. மோடப் பேரிசை - பா.

  61. முடைய வென்னும் சீரும் சில பிரதிகளில் இல்லை.

  62. தகற்ற - பா. வே.

  63. யாங்கு மாமரு - பா. வே.

  64. நிலைமலிபுடைய - பா. வே.

  65. இல்லாமையாலல்லவோ - உ. வே.

  66. நெய்யவேண்டுவது - உ. வே.

  67. ஆடையின்மை காரணமாகத் தந்து முதல காரகம் கோடல் அமையுமெனவே அசற்காரியத்துக்குக் கருவிகள் வேண்டுமென்றும், சற்காரியத்துக்கு வேண்டுவதில்லை யென்றும் கூறியவாறாம்.

  68. இவ்வுரை பிரதிகளில் வேறுபடுகிறது. அசற்காரியத்துக்குக் கெடாத கருவிகள் உண்டாயிடுக; ஆளவிடத்து எப்பதார்த்தமாகிய கருவிகளைக்கொண்டும் எங்ஙனம் விவேகிகளாயினா ரெல்லாரும் தாம் வேண்டின பொருள்களைத் தடையின்றியே இல்லாததினின்றும் உண்டாக்கினார்; ஆகில் இப்படியிருத்தல் நிச்சயமாகக் கண்டிலோம் கண்டாய் என்று அருளிச்செய்ய- உ. வே.

  இக்கருத்தையே மிருகேந்திரம் “தத்வாதி காரகாதாநம் படாஸத்வே படார்த்தின; ஸத்வேகாரசப்தேரசி வ்ய பைதீதி ஹதம்ஜகத்” ஸாபவ்ய மஸதுத்பத்தா வஸ்து காரகவஸ்துந:” என்று கூறுகிறது.

  2.  வளைதல் ஈண்டு ஆராய்தல் குறித்து நின்றது. வளைதல் சூழ்தலாகி, அச்சூழ்தல் ஆராய்ச்சியாதற் கியைபு காண்க. வளையா- செய்யா வென்னும் வினையெச்சம்; கொண்ட என்னும் முடிக்குஞ்சொல் வருவிக்கப்பட்டது.

  3.  அசற்காரியத்துக்குக் கருவிகள் வேண்டுமென்பது அனுவாதம். சற்காரியத்துக் குரிய கருவிகளை அசற்காரியத்துக் கெனக் கருதுதல் குற்றமாதலின், அக்குற்றத்தைக் கருவி மேலேற்றி “வளையாக்காரகம்” என்கின்றார்.

  4.  வாளா ‘‘கண்டோர்” என்னாது “தண்டாது கண்டோர். என்ற அடைச்சிறப்பால், காண்போர் ஒருகாலும் ஓரிடத்தும் இரார் என்ற கருத்து வலியுற்றெழுகிறது. இவ்வாறே மிருகேந்திரமும், “உத்பாதயது ஸர்வஸ்மாத் ஸர்வஸ்ஸர்வ மபீப்ஸிதம்” என்று கூறுகிறது.

  5.  நூலினிடத்துப் புடவையில்லை; உளதாயின் கருவிவேண்டா எனத்தான் கூறும் இல்லது தோன்றுமென்னும் அசற்காரிய வாதம் வீழ்கின்றமையின், “அன்னதாயின்” என்றான் “ஆயின்” என்றதனால், அதனோடமையாது மேலும் வினாதற்கு எண்ணம் எழுந்து நிற்பது பெற்றோம்.

  6.  உண்டென என்புழி, ஏகார வினா தொக்கது.

  7.  இது சில ஏடுகளில் இல்லை.

  8.  புடவையை யுண்டாக்கும் சத்திதான் இந்நூலொன்றிலே தான் உண்டென்று சொல்லுவாயேல் - உ. வே.

  9.  அன்னோ எனக்கொண்டு ஐயோ என்று பொருள் கூறுகிறது அச்சுப்பிரதி. அதுவே பாடமும் பொருளுமாயின் வாதியின் மேற்கோளையே பிரதிவாதியின் வாதம் சாதித்துக் கொடுப்பது அப்பிரதிவாதிகட்குத் தோல்வியும் குற்றமும் இகழற்பாடும் பயக்கும் சிறுமை யெய்துவது குறித்து வருந்துமாறு தோன்ற “அன்னோ” என்றார் என்றவாறாம்.

  10. தில்லையாலெனின்- உ. வே.

  11. அழகிய கீர்த்தியெல்லாம் - உ. வே.

  12. இத்தொடர் சில ஏடுகளில் காணப்படவில்லை. செப்பறை யேட்டில் “இனி அசற்காரியம் ஒழிக” என்பதன் ஈற்றில், “இதனாற் சொல்லியது நீ சொல்லியதெல்லாம் அபசயப் பட்டுப்போம் என்ற வாறாம்” என்று வரையப்பட்டுள்ளது.

  13. இப்பகுதியின் உரை பிரதிகளில் இயைபில்லாத சொற்கள் நிரம்பிச்சிதறிக் கிடக்கின்றது.

  14. விசேட மொன்றும் காண்கிலோம் - உ. வே.

  15. அந்நுவய முதலியவற்றின் இலக்கணம் அச்சுப்பிரதியில் இவ்விடத் தேயே சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

  16. பிரகாசமாயிருக்கிற; பிரகாசமான- உ. வே.

  17. கண்டென்பது சொல்லெச்சம்.

  18. என்னும்படி முழங்க வறிதலாகும்- உ. வே.

  19. “தஸ்மாந்நியாமிதா ஜன்ய சக்தி, தாரகவஸ்துந: ஸாஜன் வய வ்யதிரேகாப்யாம் ரூடிதோ வ்யவஸீயதே (மிருகே ix ; 19) என்பதன் உரையில்பட்டநாராயணர்” ஸா ச ஜன்மசக்தி: அன்வய வ்யதிரேகாப்யாம் ப்ரஸித்யா ச அவகம்யதே ஸத்யேவ ம்ருத்பிண்டே கடாத்யுத் பத்தி; அஸத்யனுத்பத்திரே வேத்யன்வய வ்ரதிரேகௌ; ரூடிஸ்ச இயம் ஆபாலபாலிசாங் கனம் ஸீஸ்திதா யத் கடோத்பத் யர்த்தினோ ந ம்ருத்பிண்டவ்யதிரிக்தம் உபாதானம் குலாலஸ்ய உபஹாரயந்தீதி நநு யதி ம்ருத்பிண்டே கட: ஸ்யாத், தத் கும்பகார வ்யாபாரம் விநாரப்யுப்பலப் யேத ந சோபலப்யதே தஸ்மாத் நம்ருத் பிண்டே கடோரஸ்தி அபிது தத; கும்மகாரேண க்ரியதே யத ஸ்தத்வ்யாபாரானந்தரம் உத்பத்யமானஸ்ய தடஸ்யோ- பலம்ப: நைதத்; உபலப்திதாரணாபாவாத் தத்ர கடஸ்யானுபலம்ப:; நத்வஸத்வாத் யதா புன: குலாலாதஸ்யா பிவ்யஞ்ஜன க்ரியயா உபலப்தியோக்தா பவதி ததா உபலப்யத ஏவ யதா கனனாதிநா கீலமூலோதகாதே: ந e கீல மூலோதகாதே: ப்ராகஸத்வே ப்ரமாண மஸ்தி ந தும்ருத்பிண்டேகடஸ்ய தஸ்மாத் கடஸ்த தோபவதி நத்வபி வ்யஜ்யத் இதி யுக்தமுக்தம் ஏவம் சேத் அத்ராபி என்று கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  20. தோற்றத்துக்கு வேண்டிய கருவி கரணங்களின் கலப்பன்றி வேறு கலப்பின்மையான் புது மடியை, “புடமடி” யென்றார். புடம் - தூய்மை, பிறாண்டும் “தூமடி விளங்கும்” (ஞானா. 23: 28) என்று ஆசிரியர் கூறுவது காண்க.

  21. இந்த நூல்கள் என்பது “செவ்வி” தென்றதனால், (தொல் சொல் 69) வெளிப்படாது நின்றது. மறைத்த, அன்பெறாது நின்ற அகர வீற்றுப் பலவறி சொல்.

  22. விரிந்த வேமம் முதலான- உ. வே. விரிந்திருக்கின்ற குழல் முதலான கருவிகளை - உ. வே.

  23. வேமம், நெசவுக் கருவிகளுள் ஒன்று. பா, குடில், நாடா என்பன முதலாகப் பல வுண்மையின், “வேமம் முதலான கருவிக” ளென் றொழிந்தார்.

  24. அகற்ற என்று கொண்ட பாடத்துக் கேற்ப, விரிக்க என்று உரை கூறுகின்றது அச்சுப் பிரதி.

  25. இதனால், முதற் காரணமாகிய நூலினிடத்தே சூக்குமமாய் ஒடுங்கிக்கிடக்கும் புடவையைத் தோற்றுவித்தற்கு இக் கருவிகள் துணை செய்வனவே யன்றி உபாதானமாகா எனக் கிளந்தோதியவாறு பெறுகின்றோம்.

  26. இவ்வுவமை, “பிரமம் சங்குசிதாவஸ்தையில் காரணமாய்ப் பிர சாரிதாவஸ்தையில் காரியமுமா

  கின்றது” என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பிரமசூத்திரத்திலும் (பிரம. நீல கண். 2: 1: 19), சுத்த மாயையின் காரியம் படம் குடிலானாற் போல விருத்தி யெனச் சிவஞான சித்தியாரி லும் *

  (சூ: 1: 24) காணப்படுகின்றது.

  27. அந்நிய விபதேசமாவது முற்கூறியதனைப் பிறிதொன்றி லேற்றிக்காட்டிக் கூறுவதென்றும், “இங்கே முற்கூறியதாவது தடமலிந்து ……….விளங்கும் என்பது; அதனை விளக்கும் பொருட்டுப் பிறிதொன்றிலேற்றிக் கூறியதாவது மாமரு….. ஆங்கு என்பது” என்றும் சேற்றூர் ரா. சுப்பிரமணியக் கவிராயர் கூறுவர். சுட்டென்னும் உள்ளுறையையும், பிறிது மொழிதலென்னும் அணிவகையையும் வட நூலார் அந்நிய வியபதேசம் என்பர்,

  28. “இவ்வண்ணமே பரமசிவன் கருத்தாவாகவும் அவன் சத்தி கருவியாகவும் கொண்டு” என்பது அச்சுப் பிரதியில் காணப்படுகிறது;

  29. இனி, இரத்தினத்திரய முடையார், சற்காரியவாதத் திற்குப் பரிணாமத்தின் இயல்பை விளக்கி, அதுவே வாயிலாக வற்புறுத்தலுற்று, “பொருள்களுக்குப் பரிணாமமோ வென்னில், முன்னை நிலையினின்று நழுவி வேறு நிலையை அடைவதாகும்; பாலுக்குத் தயிர்த் தன்மை போலும், தயிருக்கு

  மோர்த் தன்மை போலுமாம்; பால் நிலையும் தயிர் நிலையும் மோர் நிலைக்குச் சிந்தனை நிலைகளாய்க் கொள்ளப் பட்டிருத்தலால், மோர் நிலையானது பால் நிலையிலும் தயிர் நிலையிலும் இல்லை யென்பதாம். சத்துரூபமான நிலையை யுடையவொரு பொருளே முன்னர்ப் பால் ரூபமாயிருந்து பின்னர்த் தயிர் ரூபமாயிருக்கின்றது; அதன் பின்னர் மோர் ரூபமாயிருக்கின்றது; அவ்வாறே மாயையும் நானா விதமான பரிணாமத்துடன் கூடியிருத்தலால் தத்துவங்கள் தாத்து விகங்களென்னும் இவற்றிற்கு நித்தியமான முதற் காரண மாகின்றது” (சூ. 35- 38) என்று கூறுகின்றார். இந்தச் சற்காரியவாதமானது தம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப்பட்டுள்ளது என்று அகோர சிவாசாரியார் கூறுகின்றார்.

  30. இப்பகுதிக்கட் காணப்படும் கருத்து, “தத்வ்யக்திர்ஜனனம் நாம தத்தாரகஸமாச்ரயாத்; தேந தந்து கதா காரம் படாதாராபநோதகம்”; யதா கடாதி- கூடஸ்யபடாதே ஸ்தத்வ்யு தாஸத: ந த்வத; க்ரியதே வ்யக்தி; கலாதே: க்ரந்திதஸ்த தா” எனவரும் மிருகேந்திரத்தும் காணப்படுகின்றது. மேலும் இச் சற்காரியவாதத்தைப்பற்றிச் சிவஞான பாடியம், சிவாக்கிர பாடியம், மிருகேந்திரவிருத்தி தீபிகை, சாங்கிய பிரவசன பாடியம், சாஸ்திர தீபிகை முதலிய தமிழ்நூல் வடநூல்களிற் காண்க.

  31. செப்பட- பா. வே.

  32. துடர்ப்பிணி - பா. வே.

  33. ஒப்பின் றுயர்ந்த மெய்ப்படு பேருணர் - பா. வே.

  34. கை தூவாமை - பா. வே.

  35. எழுந்து மூழ்கி - பா. வே.

  36. துவலு வஞ் - பா. வே.

  37. அகவல்18: 42

  38. கன்மபந்த உபாயஞ் சொல்லுகிறோம் என்று கூறியது - பா. வே.

  39. “புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய்” (திருநா. 269: 6) என்புழிப்போல, பூட்சி உடம்பு குறித்து நின்றது. இது வினையின் காரியமாய் மேலும் வினை விளைதற்கிடமாய் இருத்தல் பற்றி, “வெருவரும் பூட்சி” யென்றார். “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” (மணி. 3: 113) என்று பிறரும் கூறுப. தன்னால் பெருந் துன்பம் உழந்த போதும் தன்பாற் பெருங் காதலுற்றுப் பிணிப்புண்டழுங்கச் செய்வது பற்றி. இவ்வாறு கூறினா ரென்றுமாம்; “துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்” (குறள். 940) என்று திருவள்ளுவரும் கூறுவர்.

  40. இவ் வேதுத் தொடர் சில பிரதிகளில் இல்லை.

  41. ஈண்டு ஆசிரியர் உடம்பை மரமாக உருவகம் செய்து, இந்திரியங்களைப் பறவை யினமாகக் கூறியது போலப் பிறரும், “கலங்க வருகாமமுதல் கட் செவிக ணோயாம், சலங்கொள் பறவைத் திரள் தமக்கோர் முடிவின்றி, யிலங்கு மறி வெல்லி லிருளாய விது கெட்டார், மலங்கு கிலரிப் பிறவி மாமர வகுப்பே”(குறுந். 128) என்று கூறினர். மணிவாசகர். “இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோட” (திருவாசக. தோணோக். 14) என்பது காண்க

  42. தன் மாத்திரை விடயங்களிலே தாவி - உ. வே.

  43. பலாதி; பலம்- பழம், காய் தளிர் முதலியன.

  44. மனம் முதலிய மூன்றன் செயலே வினை யென்பதை, “இரு வினையென்ப தென்னைகொல் லருளிய, மனமே காயம் வாக்கெனு மூன்றின் இதமே யகிதம் எனு மிவை” (இருபா.14 என்று சான்றோர் கூறுதல் காண்க. இதம், அகிதம் என்பன இவை யென்பார், “இத் முயிர்க் குறுதி செய்தல் அகித மற்றது செய்யாமை” (சிவ. சித்தி-2. 13) என்பர் அருணந்தி சிவனார். வட நூல்களும்,

  “ச்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்கும் க்ரநத் கோடிபி: பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம் இதி” என்று கூறும்.

  45. செப்பம், செப்பு எனக் குறைந்து நின்றது.

  46. உள்ளத்தைப் பிணிப்பது பற்றி ஆசையைப் பிணி யென்றார்; இவ்வாறே பண்டைச் சான்றோரும், பொருளீட்டற்கு வேண்டும் விருப்பினைப் பிணி யென்பாராய், “ஏதில் பொருட் பிணி (அகம். 43) என்றும். “அருஞ் செயற்பொருட்பிணி” (ஐங். 355) என்றும் பயிலவழங்குமாறு காண்க.

  47. ஆசை யுண்டாகி - உ. வே. உண்டாக்கி- உ. வே.

  48. ஆசைப்பட்ட மனம் அதனை நிறைத்தற் குரிய பொருளில் தங்குவதனைத் தாழ்த லென்றே சான்றோர் கூறுப. “தக்க தன் றென்ன வோராள் தாழ்ந்தன ளிருப்ப” (கம்ப. பால. அகலிகை 76) எனக் கம்பரும் கூறுதல் காண்க.

  49. பொறி யென்றது திருமகளைக் குறித்ததாயினும், அவளால் அடையும் பயன் திரவியமே யாதல் பற்றி, அத்திரவியத் தையே “பொறி” யென்றொழிந்தார்.

  50. சிற்பம் என்னப்படா நின்ற- உ. வே.

  51. கரும பூமிக் குரிய தொழில் வகை ஆறு என்று வகுத்து, அவை “உழவு தொழிலே வரைவே வாணிகம் விச்சை சிற்பமென் றித்திறத் தறுதொழில், கற்ப நடையது கரும பூமி” (12:75) என்று சேந்தன் திவாகரம் கூறுகிறது.

  52. என்ற என்பதன் ஈற்றகரம் விகாரத்தால் தொக்கது.

  53. “பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச், சொரியினும் போகா தம” (குறள். 376.) என்று சான்றோர் கூறுவர்.

  54. “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால், அல்லற் படுவதெவன்” (குறள். 379.) என்பதனால் “எய்யாராதல்” உணரப்படும்.

  55. பொருளே காதலித்து அதனை யீட்டலே உயிர் வாழ்க்கையின் பயனாகக் கருதி உணர்வு உரை செயல் மூன்றும் அதற்கே யுரியவாக முயறலின், ஊழினது உண்மையை உணரா ராயினர் என்றற்கு, “எய்யாராகி” யென்றும், ஒரு கால் உணரினும், ஒரு காலாக இருகாலாக வல்லது பல காலும் புகுந்து ஊழ் இடையூறு செய்வதின்றாதலின், தாழாது உஞற்றுகின்றன ரென்பார், “கை தூவாமே” யென்றும் கூறினார்; “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்” (குறள். 620) என்ற திருக்குறளையும் அதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையையும் காண்க.

  56. செயல் வகையினையும், அதனைச் செய்வதால் வரும் பயனை யும் எண்ணிச் செயல் வேண்டுமாதலின், “என்னை செய்யின் என்னையாம் என” எண்ணுவாராயின ரென வறிக; “முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும், படுபயனும் பார்த்துச் செயல்” “ஆகாறள விட்டி தாயினும் கேடில்லை, போகா றகலாக் கடை” (குறள். 676, 478) என்பன விதி.

  57. என்னாமோ வென்னாமோ என்ற - உ. வே.

  58. இவ்வாறு கருமஞ் செய்தலை மேற் கொண்டவர், மெய் வருத்தம், பசி, உறக்க மின்மை, பிறர் கூறும் பழிப்புரை முதலிய துன்பங்கட்குள்ளாதல் இயல்பாதலின், “எழுபு மூழ்கி நொந்துழி” என்றார்; “இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ” (குறள். 1029) என்பதும் ஈண்டு நினைக்கத் தக்கது.

  59. இது சில பிரதிகளில் இல்லை.

  60. கலிழுநெஞ்சின், கழல்புகு நெஞ்சின் - பா. வே.

  61. இறப்ப வூங்குந் தம்மினும் வேண்டும்- பா. வே.

  62. அறம் பெரிதறைதல் என்று அச்சுப் பிரதியும், ஏனை அச்சாகிய நூல்களும் பாடம் கொள்கின்றன. ஞானாமிர்த ஏடுகள் “அறம் பெரிது கரைதல்” என்றே பாடம் கூறுகின்றன.

  63. அறிவனூல்- பா. வே.

  64. வறைதல்- பா. வே.

  65. கடுஞ்சொ லொழிதல் பயனின்ற படித்தல் என்பன சில ஏடுகளில் இல்லை.

  66. கெடுத்தல்- பா. வே. விடுத்தல் -பா. வே.

  67. தியானம்- பா. வே.

  68. படையுடன் படாமை - பா. வே.

  69. மோம்பல்- பா. வே.

  70. தெரிபொ ராருயிர்- பா. வே.

  71. விழைதல்- பா. வே.

  72. பாத்தூண் செல்வம் பூக்கமழிரும் பொழில்- பா. வே.

  73. “அல்லதை யென்பது அன்றி யென்னும் பொருள்பட வந்த வினையெச்சக் குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம்” என்றற்கு இதனைக் காட்டினர் மாதவச் சிவஞான முனிவர். (சிவ. போ. பாடி. சிறப்பு)

  74. தேர்தல்- பா. வே. 4. லாவுறைசாலை- பா. வே.

  75. னவிந்தோர்- பா. வே. 6. கண்ணிய - பா. வே. 7. உஞற்றல் மொழிப- பா. வே

  76. இது, உள்ளம் உரை செயல் கல்லோலத்தினுந்திட வெழுந்து மூழ்கி நொந்துழிப் பெந்தித்தலை வினவ மன வாக்குக் காய கன்ம லக்ஷம் கூறியது- பா. வே.

  77. உயிரைப் பொறிமுத லென(சீவக. 475) வழங்குவதுண்மையின், அவ்வுயிர்க்கு இடமாகிய உடம்பைப் “பொறி” யென்றும், இதன் நிலையாமை நன்கறியப்பட்ட செய்தி யாதல்பற்றி, “பொய்ப்பொறி” , யென்றும் கூறினார்.

  78. மெய்யுணர்வு- உ. வே. இருள்தீர் காட்சி மெய்யுணர்வு அஃதாவது “அறமையப்படாமை யவாவொன்றின்மை அறிவவர்ப் பின்மை மூட மறுத்தல், அறப்பழி மறைத்த லழிந்தோரை நிறுத்தல், ஆறுசமயத்தவர்க் கன்புறலாகு, மெண்வகைக் காட்சி” (பிங்கல. 116) என்று செப்பறைப் பிரதி கூறுகின்றது

  79. ‘‘பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத வையங்களானன்றி உண்மை யானுணர்தல்” (பரிமே) மெய்யுணர்வாகலின்” விபரீத ஐயங்கட்கேதுவாகிய குற்றத்தை “இருள்” என்றார்.

  80. எக்காலமும் அருளொடு கூடித் துரியத் தானத்தே சுத்தா வத்தையுளதாதல்- உ. வே.

  81. சாக்கிரா தீதத்தில் ஆன்மா அருளொடு கூடித் தன்றன் மையின்றி நிற்றல் பற்றி “அருளொடு புணர்தல்” என்றார் பொற்புறு கருவியாவும் புணராமே யறி விலாமைச் சொற்பெறு மதீதம் வந்து தோன்றாமேதோன்றி நின்ற சிற்பர மதனாலுள்ளச் செயலறுத்திடவுதிக்கும் தற்பரமாகி நிற்றல் சாக்கிரா தீதந்தானே” (சிவப்.80) என்று உமாபதி சிவனார் கூறுமாறு காண்க.

  82. “காரணம் பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தமக்கு மிகையாயின செய்தவழித்தாமும் அதனை அவன்கட்செய்யாது பொறுத்தலையுடையராதல்” பரிமேலழகர்.

  83. பிறர்க்குரிய பொருளை வௌவக்கருதாமை பிறருடைமை கண்டவழிப் பொறாமையே யன்றி அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றமாதலின் அரும்பொறை தாங்கலென் பதனை யடுத்து இதனைக் கூறினார் பரிமலேழகர், பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதுதற்குரிய காரணத்தைக் கூறாராக, இவ்வுரைகாரர் “சரீர சுகத்தை வேண்டி” யெனக் காரணத்தையும் பெய்து கூறியுள்ளார்.

  84. “தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை” யென்பர் பரிமேலழகர். ஒருவருக்குப் பிறர் செய்யும் நன்றி பெரும் பாலும் புகழும் புண்ணியமும் கருதியே யிருத்தலின், அது தானும் இல்லாமை கூறுவார், “இன்பம் கருதாதே” என்றார்.

  85. கிருத்திரமம்- தீயன சிந்தித்தல்.

  86. இம்மூவரையும் பரிமேலழகர், பகை நண்பு நொதுமல் என்னும் முப் பகுதியினர் என்பர். “நெடுநுகத்துப் பகல் போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” (பட்டி. 206-7. கலி. 86; பழமொழி 95.)

  87. ஒரு பக்கத்தே - உ. வே.

  88. இதனை “அபிமானம் பேணல்” எனச் சுருங்கக் கூறுவர் மதுரைச் சிவப்பிரகாசர். மானமாவது தன்னிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வுவரின உயிர் வாழாமையுமா மென்பர் பரிமேலழகர். “மானாபரணன்” (நன். சிறப்பு) என்று பிறரும் கூறுதல் காண்க.

  89. இது சில பிரதிகளில் இல்லை.

  90. பிறப்புக் குற்பன்னமாகிய- உ. வே.

  91. “அவாவென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவா அப்பிறப் பீனும் வித்து”(குறள்.361).

  92. “இப்பகுதிக்கு மதுரைச் சிவப்பிரகாசர், பிறர் விதனங் கண்டிரங்குதல் என்று பொருள் கூறுவர்.

  93. உருகி யொழுகும் நெஞ்சு போல; உருகியவிழும் நெஞ்சின ராய்க் கையறவு படுதல்- உ. வே.

  94. இஃது அருளுடைமை; “அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா வுயிர்கண் மேலும் செல்வதாகிய கருணை” யென்பர் பரிமேலழகர். “ஆருயிர் யாதொன்றிடருறு மாங்கதற், கோருயிர் போல வுருகி யுயக்கொண்மின், நேரினதுமுடி யாதெனி னெஞ்சகத், தீர முடைமை அருளின் இயல்பே” (சூளா. துறவு 170) என்பர் தோலா மொழித் தேவர்.

  95. இப்பகுதிக்கு, மதுரைச் சிவப்பிரகாசர், “பிறருக்கு அறிவும் செல்வமும் அழகும் மோக்ஷமுமாகிய இவை நான்கும் தம்மினும் மிகுதியாக வேணுமென்று விரும்பி நினைக்கை” யென்று உரை கூறுவர்.

  96. மன்னுயிர்த் தொகையென உயிர்மேல்வைத் தோதினா ரேனும், ஈண்டு அவற்றை மக்களுடம்பொடு தோன்றும் உயிர்களாகக் கொள்க.

  97. அறிவும் பொறியும் பெறுதற்கரியவாயினும், அவற்றோடு அழகிய உருப்பெறுதல் பெரிதும் அரிதாதலின், “கழிபெருங் கவினும்” என்றார். “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலு மரிதே” (சீவக. 276) என்று பிறரும் கூறுப.

  98. இக் குணத்தினது பெருமை எண்ணுந்தோறும் எண்ணத்தின் வரம்பு கடந்து உயர்தலின், “எண்ணரும் பெருங்குணம்” என்றார். ‘வருவனென்ற கோனது பெருமையும், அது பழுதின்றி வந்தவனறிவும் வியத்தொறும் வியத்தோறும் வியப்பிறந்தன்றே” (புறம்217) என வியப்பிறந்தவாறு விதந் தோதப் படுவது காண்க.

  99. அறம் அறிந்தாலன்றி எவரும் பிறவித் துன்பத்தைக் கடந்து இறைவன் திருவருளைப் பெற முடியாதென்பதுபற்றி, “அறம் பெரிது கரைதல்” என்றார். “அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும், திறமறியார்” (திருமந். 262) என்று திருமூலர் கூறுதல் காண்க.

  100. புறங்கூறாமையாவது “காணாதவழிப் பிறரை இகழ்ந்துரை யாமை” என்பர் பரிமேலழகர்.

  101. செய்யக்கடவபடி சொல்லுதல் உ.வே.

  102. யாதானு மொருவசனத்தாலும் அசங்கிதம் வாராதபடி - உ. வே.

  103. “வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றும், தீமையிலாத சொலல்” -குறள்291.

  104. யோக்கியமான சாத்திரங்களை- உ. வே.

  105. “கல்வி ஞானமுடையராதல்” என்பது கற்றற்குரியவே கற்றலையும், கற்றபின் அதற்குத் தக நிற்றலையும் அடக்கி நிற்குமாறறிக.

  106. இவற்றை ஆசிரியர் திருவள்ளுவர், ‘பயனின்று பண்பின் தலைப் பிரியாச் சொல்” “சிறுமையுள் நீங்கிய இன்சொல்” (97, 981) என்று கூறுவர். திறம்பல் எனப் பொதுப்படக் கூறினாரேனும், அதிகாரத்தால், தீமை பயக்குஞ்சொற்களைச் சொல்லாமை என்று உரைப்பாராயிளர் என அறிக.

  107. இனியவையாவன, “மனத்தின்கண் உவகையை வெளிப் படுபப்பன வாகிய இனிய சொற்கள்” இனியவற்றிற்கு மாறாயவற்றை இவ்வுரைகாரர், “மாற்றமாயிருக்கும் வார்த்தைகள்” என்கின்றார்.

  108. மறமாயிருக்கும்- உ. வே.

  109. அறிவு நூல் என்பது ஆகமத்தை யுணர்த்துதல், “அறிவு நூல்களின் முடிபெலாம் அகப்படுத் தவற்றின் நெறியெலாம் விளக்கிய சிவஞான போதம்” (தணிகை. பாயி. 17) என்று கச்சியப்ப முனிவர் கூறுமாற்றானும் துணியப்படும்.

  110. நூலுரை கூறல் என்பர் மதுரைச் சிவப்பிரகாசர்.

  111. இன்மொழி யிசைத்தலாலும் வன்மொழி மறத்தலாலும் மனமெய்களின் அடக்கம் வெளிப்பட்டு விடுதலின் “அடங்கிய மொழிதல்” என்பதற்கு இவ்வாறு உரை கூறினார் போலும்.

  112. ஆசிரியன் உபதேசித்தவற்றை மானதமாய்ச் செபித்தல்- உ. வே. பணிவான வசனங்களைச் சொல்லுதல் - உ. வே.

  113. நம, சுத முதலாகச் சொல்லப்பட்ட ஏழந்தங்களை யிறுதியிலுடைய சத்த கோடி மகா மந்திரங்களென்று கூறுவர்; இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்திரம்” (தொல். செய் 176) என்பர்.

  114. “வெட்டெனப் பேசேல்” - ஆத்திசூடி.

  115. “பயனிற் சொல் பாராட்டுவானை மகனெனல் மக்கட்பதடி யெனல்” (குறள்.196) என்றலின், ‘பயன் நின்ற படித்தல்’ வேண்டும் என்றார்.

  116. பிறர்க்குப் பிரயோசனப்படும் வசனங்களைச் சொல்லுதல் - உ. வே.

  117. “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” (குறள் 297) என்றாராகலின், பொய் சொல்லாமையை இறுதிக்கண் வைத்து வற்புறுத்தினாரென வறிக.

  118. “தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தாக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்” என்றும், “தவமாவது மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான உண்டி சுருக்கல் முதலாயின” என்றும், “பெரும்பான்மைபற்றித் தானம் இல்லறத்தின் மேலும் தவம் துறவறத்தின் மேலும் நின்றன” என்றும் பரிமேலழகர் கூறுவர்.

  119. “கழற்காற் பேகன், கொடைமடம் படுதல் அல்லது படை மடம் படான் பிறர் படை மயக்குறினே” (புறம் 14:2) என்றும், “கொடை மடம் வரையாது கொடுத்தலாகும்” (திவாகரம்) என்றும் வருதல் காண்க.

  120. “படை மடமென்றது வீரரல்லாதார் மேலும் முதுகிட்டார் மேலும் புண்பட்டார் மேலும் மூத்தார் இளையார் மேலும் செல்லுதல்” என்பர் புறநானூற்றுரைகாரர்.

  121. ஆயுத மெடுத்தால் விரோதியுடன் யுத்த தருமம் கெடாதே போர் செய்தல்- உ. வே.

  122. அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்” (புறம் 99, பட்டி 200) என்பதற்குப் புறநானூற்றுரைகாரரும் நச்சினார்க் கினியரும் தேவர்களைப் போற்றி வழிபட்டும் யாகங்களைப் பண்ணி அவற்றான் ஆவுதிகளை அவர் நுகரப் பண்ணியும்” என்றே உரை கூறினர்.

  9.ஓழுக்கத்தால் உளதாவது விழுப்பமாதலின், “விழுப் பெருங் கிழமை” யென்றார். “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” (குறள் 131) என வருவது காண்க. கிழவன், கிழத்தி யெனவரும் வழக்காற்றின் பயிற்சி மிகுதிபற்றிக் கிழமைக்குத் “தலைமை” யென்று பொருள் கூறினார். ஒருவற்குக் கிழமைப்படு வனவற்றுள் உயிரினும் சிறந்த தின்மையின், விழுப்பம் பயக்கும் ஒழுக்கத்தின்பாலுள்ள கிழமை அவ்வுயிரினும் பெரிதாதலின், “பெருங் கிழமை” யென்றார்.

  123. வேலை- உ. வே.

  124. கூடிய பொழுது- உ. வே.

  125. இதன் கருத்து: புலாலுண்போர் பலர் கூடி, யாம் செய்யும் கொலை வினைக்கு நீவிர் ஒருப்படா விடினும், யாம் அது செய்தற்குச் செல்லுங்கால் உடன் வரவேண்டும்; இன்றேல் நும்மைக் கொல்வோம் என்ற போதும் மறுக்கவே அவர் பற்றி வருத்தலுற்றாரென்பது.

  126. உண்ணப்படும் ஊன் உயிர் நீங்க நின்ற உடம்பாதலால் அதனைப் “பிணம்” என்றார், உயிரில்லாத வுடம்பு பிண மெனப் படுதலின், இஃது இனிது விளங்குதற் பொருட்டே “ஆருயிர் பெரும்பிறிதாக இரும் பிணம்” என்றும், புலாலுண் போரை “இரும் பிணம் மிசைஞர்” என்றும் கூறினார். பிணந் தின்போரைக் கானிபால்ஸ் (canibals) எனப் பிறரும் கூறுப. “தன்னுயிர் நீக்கும் வினை” (குறள் 327) யென்பதற்கு இஃதொரு வாற்றாற் பொருளாதலுமறிக.

  127. ஒரு பெற்றிப்படாத - உ. வே.

  128. கொலைவினையாளரொடு கூடுதலே கொலைக் குற்றமாதல் அறிந்து, கூடாமையால் உயிரிழப்ப தாயினும் அதனையே தேர்ந்து மேற்கோடலின், “மாசில் காட்சி” யென்றார்.

  129. இஃது அச்சுப் பிரதியிலும் செப்பறைப் பிரதியிலும் இல்லை.

  130. பொய்; காமம் என்று சொல்லப்பட்ட- உ. வே. குரு நிந்தை, இவை செய்வாருடன் பயிறல் என்ற இரண்டும் அச்சுப் பிரதியில் உள்ளன.

  131. “பஞ்சபாதகம், கொலைகளவு கள்ளுண்டல், எஞ்சலில் குரு நிந்தை பொய்யு மென்ப” (12: 68) என்பது திவாகரம். “முடி பொருளுணர்ந்தோர் முது நீருலகிற், கடியப் பட்டன ஐந்துள அவற்றிற், கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும், தள்ளா தாகுங் காமந்தம்பால், ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோரென, நீங்கின ரன்றே, நிறைதவ மாக்கள்” (22: 169- 174) என்பது மணிமேகலை. இல்வாழ்வார்க்கு அறவோர்க்

  களித்தல் முதலிய அறஞ்செய்தற்கும் மகப் பேற்றிற்கும் காமம் வேண்டுதலின், முற்றவும் கடியப் படாமை தோன்ற, “தள்ளா தாகும் காமம்” என்பதனால், சேந்தனார், “கொலையை களவு கள்குரு நிந்தை, பகரும் பொய்யுடன், பஞ்ச பாதகமே” (3:68) என்றும், பிங்கலத்தை முனிவர் அதனை விலக்கி, “குரு நிந்தை” யைச் சேர்த்தும் கூறினர். ஈண்டு இவ்வுரைகாரர், பொய் “வாக்கொடு சிவணிய” (ஞான.24: 16) வற்றுள் ஒன்றாய் அடங்குதலால், அதனிடத்தே, “குரு நிந்தை செய்வாருடன் பயிறல்” என்பது பெய்து கூறினார். ஐம்பெரும் பாதகத் துள் காமத்தை அடக்குதல் ஆசியர்க்குக் கருத்தன்மை, “தன்மனை க்கிழத்தி யல்லதைப் பிறர்மனை, யன்னையிற் றீரா நன்னராண்மை” (ஞானா24; 39-40) என்பதனால் விளங்கும்.

  132. கெட ஓட்டவல்ல - உ.வே.

  133. திண்ணிய அறிவு பெற்றார்க் கன்றி, இந்திரியங்களை வேறல் அரிதாதலின், “வன்றது கண்மை” என்றார்; “உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்”(குறள் 24) என்பது காண்க.

  134. வாளிட்டாங்கு- வாளால் அறுத்தாற் போல்வதாகிய நோவு தருவன வற்றை- உ. வே.

  4.சால்புடைமையின் பயன் இதுவாதலின், “மேவன ஆங்கு இழைத்தல்” என்றும், சிறிது போது கழியினும் மறதி வந்து விடுமாதலின், அப்போதே செய்க என்பார், ‘ஆங்கு’ என்றும் கூறினார்.

  5.  தன்னுடைத்தாகிய - உ. வே.

  6.  ஒரு சிற்றுயிர்க் கேனும் திருத்தியுண்டாகக்கூடிய அளவு தானுமில்லாத சிறுமைத் தென்றற்குத் “தவச் சிறி தாயினும்” என்றார். அதனால் வருவது கேடெனினும் அக்கேடு வேண்டற் பாலதென்பது கருத்து: “ஒப்புரவினால் வருங்கேடெனின் அஃதொருவன், விற்றுக் கோட்டக்க துடைத்து” (குறள் 220). இவ்வடியும் பொருளும், “பாத் தூண் மரீஇ யவனைப் பசியென்னும், தீப்பிணி தீண்டலரிது” (குறள்227) என்பதனை நினைப்பித்தல் காண்க.

  7.  பிறன் மனையை நோக்காத ஆண்மையினைத் திருவள்ளுவர் “பேராண்மை” (குறள்.148) யென்றாராக. இந்நூலாசிரியர், அப்போராண்மை பிறன் மனையை அன்னை போலப் பேணி நோக்கு தலால் விளங்குதலின், “அன்னையிற் றீரா நன்ன ராண்மை” யென்றார். உட்பகையாகிய காமத்தையடக்கிய ஆண்மையாதலின் பேராண்மை யெனப் பட்டது; பிறன் மனையை அன்னையெனப் பேணி யொழுகும் ஒழுக்கம் அவ்வுட்பகையைச் சிதைத்து அப் பெருமைக்கு நலந்தரும் என்பது கருத்து.

  8.  கார் கோள்- கடல்; “கார் கோள் முகந்த கமஞ்சூன் மாமழை” (முருகு. 7) என்றார் நக்கீரனாரும்.

  9.  ஆதுலர் சாலை யென்பது ஆதுரர் சாலை, ஆவுறை சாலை யென்றும் ஏடுகளில் காணப்படுகிறது; பிங்கலந்தையிலும் திவாகரத்திலும் ஆதுலர் சாலை யென்பது அறவகை முப்பத்திரண்டனுள் ஒன்றாகக் கூறப்படுகிறது; ஆதுரை சாலை யென்பது ஆதுரர் சாலை யென்ப தன் வழுப்பட்ட பாடமாகும்; ஆதுரர் நோயுற்றவர்; உற்றானளவு முறுபிணியும்” (குறள்.949 ) என்புழி, உற்றானை ஆதுரர் சாலை யென்பது மருத்துவச்சாலையென்பதாயிற்று. பண்டை நாளில் வேந்தர்களால் அறத்துறையில் ஒன்றாக ஆதுரர் சாலைகள் நிறுவப் பட்டுள்ளன என்பது திருமுக்கூடற் கல்வெட்டால் தெரிகிறது.

  “ஆதுர சாலை வீர சோழனில்” (Epi.Indi. vol.XXI part 5. 220-250. Ins. 38) என வரு வது காண்க.

  ஆவுறை என்று பாடங்கொண்டு அதற்கேற்பப் பசு மடம் கட்டுதல் என உரை கூறிய பிரதியுமுண்டு.

  2.  இதனை மருத்துவச் சாலை கட்டுதல் என்ற பொருளில் கல்வெட்டுக்கள் வழங்குகின்றன.

  3.  எல்லா உயர் குணங்களாலும் அமைந்தோராதலின், அறமல்லது கூறாத இயல்பின ரென்றற்கு “அறங்கரை நாவின் ஆன்றோர்”என்றார், அவர் இருந்து அறம் புரியுமிடம் பள்ளி யெனப்பட்டது.

  4.  விஷயங்களை யவிந்தவர்களாகிய - உ. வே.

  5.  கண்ணிய என்ற பாடத்திற்கேற்பத் தேவர்கள் பூசை கொண்டருள என்று உரை கூறியபிரதியுமுண்டு. சுவர்க் கத்தைக் கிட்டுவது போன்ற - உ. வே.

  6.  “தடவுங் கயவும் நளியும் பெருமை”(தொல்சொல், உரி. 22) பெருமை, ஈண்டு உயர்ச்சி குறித்து நின்றது. “தடவு நிலைக் கொன்றை” (குறு.66) என்றாற் போல.

  7.  உயிர்கள் அளவிறந்தனவாதலின், அவற்றின் பொருட்டுச் செய்தற்குரிய அறங்களும் அளவிறந்தன என்றற்கு நினைவரும் திறத்த அறத்துறை” யென்றார்.

  8.  இன்னபடி யளவென்று நிச்சயித்தற்கரிய வேறுபாடான- உ.வே. நிச்சயித்தற்கரிய வாகிய புண்ணிய வகைகளைச் செய்தல் - உ. வே.

  9.  இத்துணையும் மனம், வாய், மெய் என்ற முக்கருவி களாலும் செய்தற்குரிய அறத்துறைகள் பலவற்றை விரியக் கூரிய ஆசிரியர், மறத்துறையை, ‘இவற்றின் வழிப்படாது எதிர்வனகெழீஇ யுஞற்றல்” என்றொழிந்தார்: அவற்றை விரிந்துரைப்பது அறமாகாமையின் இம் மறத்துறையை மணிமேகலை யாசிரியர்,“தீவினை

  யென்பது யாதென வினவின், ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய், கொலையேகளவே காமத் தீவிளைவு. உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்றுள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப், பத்து வகையாற் பயன்தெரி புலவர், இத்திறம்படரார்” 30: 64- 73) என்பர்.

  10. வியப்புற - பா. வே.

  11. தண்ணிழல்- பா. வே.

  12. நாற்கதி நரலி; நாயார்த்தவிழ் புணரி- பா. வே.

  13. மன வாக்குக் காய கன்மங்களின்- உ. வே.

  14. மன முதலிய மூன்றின் அசைவு அசைவின்மை காரண மாக வினையீட்டப்படு மென்னும் இதனை, மனமுதன் மூன்று மசைவற நின்று வந்திடு நல்வினை பலவே, மனமுதன் மூன்றும் புடைபெயர்வுற்றுவந்திடு தீவினை பலவே” (தணிகை- நந்தி) என்று கச்சியப்ப முனிவர் கூறுதல் காண்க, இனி, இலக்கணக் கொத்துடை யார் இம்மூன்றுடன் அறிவையும் கூட்டி, “மன மொழி மெய்யறிவாகிய நான்கின் அசைவேயாகியும் அவ்வசைவின் றியும் (இலக். 18) வினைநடக்கும் என்பர். இனிப் பட்டினத் தடிகள் இவ்வினைகயால் இன்பமும் துன்பமுமே மனத்தாற் காணப் படுகின்றன என்பார், “செய்தன சிலவே, செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவேயவற்றிடை நன்றென்ப சிலவே, தீதென்ப, சிலவே ஒன்றினும் படாதென சிலவே என்றிவை கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி” யென்றும் அளிய மனத்தின் செய்கை மற்றிதுவே” யென்றும் (கோயில் நான் 32) கூறுவர். மனமுதலிய மூன்றனுள் தலைமையும் காரணமுமாதல் பற்றி மனமெனக் கூறியொழிந்தமையின் பட்டினத்தடிகள் கூறுவது முரணாமையறிக வழிநிலை- பா. வே.

  15. கடுகச் செய்து- உ. வே.

  16. சித்தத்திலே மமதை பண்ணிக்கொள்வது கன்ம வீட்டத்துக்குக் காரணமாதலை, அருணந்தி சிவனாரும் ‘யான் செய்தேன் பிறர் செய்தார் என்னதி யானென்னு மிக்கோனை ஞான வெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிடவத் தத்துவன்றான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட்டோடும். நான் செய்தே னெனுமவர்க்குத் தானங்கின்றி நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்” (சிவ. சித்தி. 10:2) என்று கூறுவர்.

  17. எக்காலத்தும் எந்நிலையிலும் ஆன்மா உடம்பெடுத்தல்லது வினை செய்தல் கூடாமையின், “ஆண்டுப் பூட்சி” என்றும், ஒரு பிறப்பில் ஈட்டிய வினைப் பயனை வேறு பிறப்பில் நுகர்தல் கூடுமோ வென்னும் கடாவை யாசிங்கித்து வருபிறப்பில் நுகருமாறு முன்னைப் பிறப்பில் வினையீட்டலுண்டென்பார், “ஆண்டுப் பூட்சி ஈண்டுப் பட வியற்றல்” என்றும் கூறினார். படுதல், ஈண்டு நுகர்ச்சிப் பொருட்டு

  18. இங்கே, ஒருவனிடத்துத் திட்டாந்தம் அருளிச் செய்தபடி என்றொரு தொடர் செப்பறைப் பிரதியிற் காணப்படுகிறது.

  19. பரிணமியாதே கண்ணாடியிலேறின மாசு- உ. வே.

  20. கண்ணாடியிற் படியும் மாசு படிப்படியாகப் பெருகி அதன் ஒளி முற்றும் இன்றாக மறைத்து விடுதல் பற்றி, அதனைப் “பேரிருள்” என்றார்; இருளைப் பயத்தலின் இருள் எனப்பட்டது.

  21. இவ்வினைகள் அசுத்தம், சுத்தாசுத்தம், சுத்தம் என மூவகைப் போகங்களைப் பயப்பன வாதலின் அவற்றிற் கேற்ப, மூன்று எடுத்துக்காட்டுக்கள் காட்டப்பட்டுள்ளன வென்றறிக.

  22. இது சில பிரதிகளில் இல்லை.

  23. இக்கருத்து “தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, வீயாதடி யுறைந் தற்று” (குறள் 208) என்பதை நினைப்பித்தல் காண்க. சில பிரதிகள் பாதவக் கண்ணிழல் என்பதன் உரைத் தொடக்கத்தில், இக்கருத்தை யியைத்து, “இவ்வண்ணம் ஆர்ச்சிதமாய்ப் பந்தித்த கன்மம் பக்குவப் பட்டு அனுபவிக்கப்படும் கிரமம் எங்ஙனே யென்னில்” என்று கூறுகின்றன.

  24. “கற்றநூற் பொருளுஞ் சொல்லுங் கருத்தினிலடங்கித் தோன்றும்” (சூ. 1:31) என்பது சிவஞான சித்தியார்.

  25. “சிற்றுபகாரம் வற்றல் செல்லா, தால வித்திற்பெருகி ஞாலத்து, நன்றி யீன்றது” (பெருங்.iv7,235-2) என்றார் பிறரும்.

  26. இக்கன்மங்கள் பிரவாகானாதிகயன்றிப் பதி முதலிய பொருள் போல அனாதியல்ல வென்பாரும், பதி முதலிய பொருள் போல அனாதியே யென்பாரும் என இரு திறத்தராகிய ஆசிரியருள் இவர் பிற்கூறிய திறத்தினராதலின், ஈண்டு, மூல வினைக்கண் இருந்து விரியுமாறு கூறினாரென்க. பிறாண்டு இந்நூலாசிரியர், “ஆணவ முதலன்றது, போற் கருமமும், காண் அலதெனின் அக்கரைகழி நானாவிதம் இனிதுயிர்கட் குதவுது எதனால், அற்றது மாயையு மற்றறிய வணே” (ஞானா.29) என்று மூலகன்ம முண்மை கூறுதல் காண்க. இவர்போலவே, உமாபதி சிவனாரும், “ஏக னனேகனிருள் கருமம் மாயையிரண் டாகவிவை ஆறு ஆதியில்” (திருவருட். 52) என்பர்; அருணந்தி சிவனார் பிரவாகானாதி யென்பர்.

  27. காரியமான புண்ணிய பாவமாய்க் கிடந்து - உ. வே.

  28. பாதவக் கண்ணிழல் பிராரத்த வினைக்கும், பனுவல் ஆகாமிய வினைக்கும், கோளிவித்துச் சஞ்சிதத்துக்கும் உவமமாதலறிக. சில பிரதிகள் “பாதவக்கண்ணிழல்” என் பதன் உரைத் தொடக்கத்தில் இக்கருத்தை இயைத்து “இவ் வண்ணம் ஆர்ச்சிதமாய்ப் பந்தித்த கன்மம் பக்குவப்பட்டு அனுபவிக்கப்படும் கிரமம் எங்ஙனே என்னில்” என்று உரை கூறுகின்றன.

  29. இது ஆர்ச்சிதமான கன்மம் பக்குவப்பட்டுவர அனுபவிக்குமாறு கூறியது- உ. வே.

  30. ஆன்மா, தன்னியல்பையும் தான் பசுவாதற் கேதுவாகிய பாசவியல்பையும் உள்ளவாறு காண்டலே ஈண்டு “மாவகை” யென்றும், அவ்வாறு கண்டு கழித்த வழி உளதாய் நிற்கும் ஞான சொரூபத்தைக் கண்டு கடைத் தேறுவதை விட்டு, மீள மீள வினைகளையே யீட்டித் துயருறுவது தோன்ற, “வீழ்த்த” என்றும் கூறினார்.

  31. கருத்தாவாய் இருக்கப்படா நின்ற வுண்மையையுணராதே நித்தியமான ஆன்ம வர்க்கத் திரள்- உ. வே.

  32. செய்த கன்மத்துக்கேற்ப நால்வகைப் பிறப்பும் உண்டாகின்றன வென்பதை அருணந்தி சிவனார், “கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தான் மாறுமென்றே” (சிவ.சித். 2:43) என்பது காண்க.

  33. நான்கு வர்க்கம்: உற்பீசம், அண்டசம், சராயுசம், சுவேதசம்.

  34. நரலையை யுடைய புணரியென வேற்றுமைத் தொகை. நரலை ஆரவாரம். “வயிரெழுந்திசைப்ப வால்வளை நரல” (முருகு 110) என வருதல் காண்க.

  35. ஆதி தைவீக முதலிய மூன்றனையும் பற்றிக் கிரணாகமம், ஆத்யாத்ம மாதி பூதம் ச ஆதிதை விகமேவ ச

  த்ரிவிதம்து: க மாய்னோதி தேஷா மாத்யாத்மகம் ச்ருணு

  ஆத்யாத்மம் த்விவிதம் ப்ரோக்தம் சரீரம் மானஸம்ததா

  குல்மார் சோரதிஸாரம்ச ஜ்வர சூலாத்யநேகதா

  நரம்ருக பிசாசைஸ்ச கோபக்ஷீ சோர ராக்ஷஸை:

  ப்ரோக்தம் சரீரகம் து:கம் மானஸம் ச்ருணு ஸூவ்ரத

  சோகாஸனாயா வமாநேர்ஷ்யா மாத்ஸர்யாதி பிரேவ ச

  ஏவம் மானஸ மாக்யாதம் ஆதிபௌ திகமுச்யதே

  சீதோ ஷ்ண வாத வர்ஷைஸ்ச சித்யு தா சனி மாருதை:

  ப்ரோக் தம் பௌதிகம் து:கம் ஆதிதை விக முச்யதே

  கர்பஜன்ம ஜராஜ்ஞான ம்ருத்யுஜம் நாரகம்ததா

  ப்ரோக்தம் து:கத்ரயம் ஹ்யேவம் ரஷீஸ்தா னேஷூ புஜ்யதே

  தத்ரோத ராக்னிஜ கர்பே மாத்ரு சீலேன பாத்யதே

  சர்பாத் கோடி குணம் து:கம் யோநியந்த்ரே ப்ரபந்தனம் என்று கூறுகிறது.

  1.  இருள் கிழிமின்னு- பா. வே.

  2.  இவ்வடி அச்சுப் பிரதியில் இல்லை.

  3.  டுன்னியாறருத்தல்- பா. வே.

  4.  யளவில் பேதமை- பா. வே.

  5.  தொடங்கினர் வவ்வல்- பா. வே.

  6.  ஞானா: 25-15 ஈண்டுக் கூறிய மூன்றனையும் ஆசிரியர் பரிமேலழகர் தன்னைப்பற்றி வருவன, பிறவுயிர்களைப் பற்றி வருவன, தெய்வத் தான் வருவன என்று தமிழ்ப் படுத்துக் கூறுவர் (குறள்.4)

  கச்சியப்ப முனிவர் “புரிதரு முறையிற் பிறழ்ந்துயிர் தெய்வம் பூதமென் றிவற்றினு ளொன்றல், மருவுழி விழைந்த விழைந்தில விழைந்த வன்றி வேறாவன வென்னத் திரிவிதப்படுவ” (தணிகை. நந்தி. 11: 5) என்பர்.

  7.  முற்பாட்டிலே சொல்லப்பட்ட மூவகைத் துக்கத் திரயாதி களில் வைத்து- உ. வே.

  8.  வளி முதலிய மூன்றான் நோயுண்டாதலை, “மிகினுங் குறையினும் நோய் செய்யும் நூலோர், வளி முதலா வெண்ணிய மூன்று” (குறள்.941) என்பதனாலறிக. வளி முதலியன மிகினும் குறையினும் முறையே புளிப்பும், கைப்பும், இனிப்பும் விரும்புமென்பiதக் குமரகுருபரர், “வளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும், ஐயுண் மதுரமும் அல்லன பிறவும் நாச்சுவை யறிய நல்கின”(சித். மும். 8) என்று கூறுதல் காண்க.

  9.  இது தொழுநோய் எனவும் வழங்கும், “அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்” (திருநா. பொது. தனித் திருத்தாண் 10) என்பது காண்க.

  10. நீரிழிவினைச் சலரோகமென்றும் கூறுப; இதனால் நீரிழிவும் ஈளை மிகுதியுமுண்டாகும். அருணகிரியாரும் “சூலைப்புக் காய்கனல் நீரிழிவீளையொடளைப்புக் காதடை கூனல் விசூசிகை” (626) என்றும், “சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு” (987) என்றும் கூறுதல் காண்க.

  நீர்க்கோம்பால்- உ. வே.

  11. வெப்பு- இதனை வெதுப்பென்பதும் வழக்கு; நீரிழிவுகுட்ட மீளை வாதமொடு பித்தமூல நீள்குளிர் வெதுப்புவேறு முளநோய்கள்” (திருப்புகழ் 898) என்பதனாலறிக. இதன் கொடுமை பெரிய புராணத்துத் திருஞானசம்பந்தர் புராணத்து, “வேந்தனுக்கு மெய் விதிர்ப்புறு வெதுப்புறு வெம்மை, காந்து வெந்தழற் கதுமென மெய்யெலாங் கவர்ந்து, போந்து மாளிகைப் புறத்துநின் றார்களும் புலர்ந்து தீந்து போம்படி யெழுந்தது விழுந்துடல் திரங்க” (711) என்று வரும் திருப்பாட்டாலும் பிறவற்றாலும் அறியப்படும்.

  12. சூலையின் கொடுமையை நேரே கண்ட நாவரசர், “சுடுகின்றது சூலை” “வலிக்கின்றது சூலை”, “வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்து நலிவது” என்று கூறுதல் காண்க.

  13. மக்களாலும் பிறவற்றாலும் துன்பமுண்டாதலை, “தேவின் மானிடத் திற் றுன்பம்” என்றும், “விலங்குபுட்களாதி தாவரமற்றெல்லாம், ஓவிலாத்துன்பம்” என்றும் (பெரு. 439) பிறரும் கூறுதல் காண்க.

  14. “அற்றம் பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம், கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள்ளுநர்க் காணமார் தொடர்ந்துயிர் வௌவலின்” (கலி.4) என்றும் “அத்தம் செல்வோர் அலறத்தாக்கிக் கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்” (பெரும் பாண் 39-41) என்றும் வருதல் காண்க.

  15. “இரக்கமென்றொரு பொருளிலாத நெஞ்சினர், அரக்க ரென்றுளர் சிலர் அறத்தின் நீங்கினார், நெருக்கவும் யாம் படர் நெறியலாநெறி, துரக்கவு மருந்தவத் துறையு ணீங்கினேம்’ (கம்ப. ஆரணி அக. 12) எனக் கம்பர் கூறுவது காண்க.

  16. புறம் 249, 245 காண்க.

  17. குருகண தெய்வசன் மானத்தினும் தவசினும் வரும் காய துக்கம்- உ. வே. (புறம் 252)

  18. கந்தி உற்பத்தி விடைபெறு 35.

  19. “ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங்- காத்த, குறைபடின் துன்பம் கெடின் துன்பம் துன்பக் குறைபதி மற்றைப்பொருள்” (நாலடி 280) என்றும், “தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ, மாயாத தெவ்வர் வலியாலோ- யாதாலோ இப்பொருள் போய் மாய்கின்ற தென்று பொருள் வைத்தார்கட், கெப்பொழுதும் நீங்கா திடர்” (புற. 1148) என்றும் வருவன காண்க.

  20. மனத்தின்கண் மாசின்மை அறமாதலாலும் அவ்வறத்தான் வருவது இன்பமேயாதலாலும், துன்பத்துக்கேதுவாய மனத்தை, “மாசுறு மனத்துறு துயரம்” என்றார்.

  21. அறிவுடையோரை வடிவுடையோரைச் சம்பத்துடை யோரைக் கண்டும் கேட்டும் - உ. வே.

  22. ஐம்முதல் எனற்பாலது ஐமுதலவென நின்றது விகாரம். இவ்வாறு ஏனையவற்றிற்கும் ஆசிரியர் தொகை கொடாமையின் இஃது உரையாசிரியர் வலிந்துகொண்டதாம்.

  23. பிரிவு, அழுக்காறு, மானமின்மை, இச்சை, சினம் என்ற இவற்றால் துன்பமுண்மை கூறியவாறு, “ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர், நீங்கி னரிதாற் புணர்வு” (குறள் 1155) என்றும், “அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப்பான்” (குறள் 163) என்றும், “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” (குறள் 969) என்றும், “கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலு மைங்கருவி, கண்டவின்ப மளவில்லாத் தெரிவரிய சிற்றின்பம்” (திருவாய் 4: 9: 10) என்றும், “சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத் தறைந்தான் கை பிழையாதற்று” (குறள் 307) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  24. நினைப்பதற்கரிய வேறுபட்டுள்ள பலவகைகளை யுடைத் தாம் - உ. வே.

  25. வருடம்- மழை.

  26. “சீதமும் குளிரால் துன்பம் செழும் பனியதனில் துன்பம், போதவந்தேறும் வாதம் பொறுக்கொணா மிக்க துன்பம், ஒதிய கோடைத் தீப்போல் உலைவிலா அழலால்துன்பம், ஏதுதான் காலத்தின்பம் எப்போதும் துன்பமே காண்” என்றும், சிறுபோதுகளால் வரும் துன்பத்தை, “காலையின் மலாதி துன்பம் கடும்பகற் பசியால் துன்பம், ஏலவே இடையிலுள்ள வியாதியான் மிகவுந் துன்பம், மாலையிற் காமவெந்நோய் வந்திடும் உறக்கம் பின்வு, கோலிடில் துன்பமல்லாற் குறுக மற்றொரு நா ளுண்டோ”(பெருந். 428, 427) என்றும் பிறரும் கூறுப.

  27. வலிதாகிய மிக்க துக்கம் தரும்- உ. வே.

  28. வைத்த அவைகளினால் அவ்வண்ணமே நுகர்கை- உ. வே.

  29. “ஆதி பௌதிகத்தால் வரும் வேதனையறையின், மோது மாருத முழங்கிட முறுகியவேனில், சீதமா மழை செழும் பனி செறியிருள் கழியப் போது மின்புகை பொங்கெரி யாதியாம் பொருளால்”

  (குறுந். 334) என்றும் பிறரும் கூறினர்.

  30. கெடுதற்கரிய- உ. வே.

  31. “பிரசவார் குழல் யாவர்க்கும் சிறையுறல் பிறத்தல், வரைவில் பேதைமை யுறனரை திரையுறல் மரித்தல், நிரயமே லெழல் என வரு நினைப்பருந் துயரம், புரையிலாதவர் ஆதிதைவிக மெனப் புகன்றார்” (335) என்பது குறுந் திரட்டு.

  32. பெண்டிரின் உதரத்திடத்ததான அந்தக் கருப்பாசயத்தில் உ.வே.

  33. இக்கருப்பவேதனையே மணிவாசகப் பெருமான், தாயின் கருப்பையில் தோன்றிய காலையிற் கிருமிச் செருவும், முதற்றிங்களில் இருமைத் துன்பமும், இரண்டாந் திங்களில் ஒருமைத் துன்பமும், மூன்றாந் திங்களில் மதம் பெருகு துன்பமும், நான்காந் திங்களிற் பேரிருட்டுன்பமும்’ ஐந்தாந் திங்களில் முஞ்சு துன்பமும், ஆறாந் திங்களில் ஊறலர்த் துன்பமும், ஏழாந் திங்களில் புவிதாழ் துன்பமும், எட்டாந் திங்களில் இடநெருக்கத் துன்பமும், ஒன்ப தாந் திங்களில் நெருக்கமிகுதித் துன்பமும், பத்தாந்திங்களிற் கடற் போலும் துன்பமும் (திருவா. போற். 14-25) என்று கூறுவர்.

  34. பிரசவ வேதனையை “தாயொடு தான்படுந், துக்கசாகரத் துயர்” என்றாராக, குறுந்

  திரட்டுடையார், “மலை மேனின்று வீழ்வார்போன் மாதம் பத்தில் வாயுவினால், தலைகீழாக விழுமந்தத் தாபத்தோடே வேகத்து, நிலமேல் விழுவதன்முன்னே நெடியோன் மாயக் கால் வீசி, மலமேவுடலாய் நினைவெல்லா மறக்கு முன்னைவல் வினையால்” (134) என்று கூறுவர் “தோற்றம் பொழுதி னீற்றுத் துன்பத்து, யாயுறு துயரமும், யானுறு துயரமும், இறக்கம் பொழுதிலிறைப் பெருந்துன்பமும், நீயலதறிகுநர்யாரே” திருவிடை. மும். 4: 16-19) என்பர் பட்டினத்தடிகள்.

  35. மூப்பால் வரும் துன்பம்: “தொடரநரைத்தங்க முன்புள வாயின, தொழில்கண் மறுத்தொன்று மொன்றியிடா தொரு, சுளிவுதலைக் கொண்டு புன்புலைவாரிகள், துளையொழுகக் கண்டு சிந்தனையோய் வொடு, நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு, நடலை நமக் கென்று வந்தன பேசிட, நலியிருமற் கஞ்சியுண்டி வெறா விழும்” துன்பம் (கோயில். நான். 39) என்பதனாலுமறிக.

  36. துன்பமல்லது பிறிதியாதும் நல்காத பேதமையால் விளையுந் துன்பமும் இத்துணையென வரையறுக்கப் படாமையின் வரைவில் பேதைமையென்றார். “பேதைமை யென்ப தொன் றியாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்”(குறள் 831) என்றும் “ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையந், தான்புக் கழுந்தும் அளறு” (குறள் 835) என்றும் திருவள்ளுவர் கூறுதல் காண்க.

  37. மடங்கல்- யமன்; “மடங்கலுண்மை மாயமோவன்றே” (புறம் 363) என்று சான்றோரும் கூறுப, குறித்து வுயிரைக் கோடற்கண் மடங்குதல் ஒரு ஞான்று மின்மையின் யமனை “மடங்க” லென்றார்.

  38. மரண வேதனையை’ “சாதலின் இன்னாததில்லை” (குறள் 230) என்றும் “மரண வேதனை யாவரா லறியலாம் மயங்கியைம் புலனந்தக், கரணம் யாவையும் கலங்கிட வருந்துயர் கடவுளே யறிகிற்பான்” (குறுந்.188) என்றும் வருவனவற்றாலறிக.

  39. நிரந்துன்பநிலையை, “செறுசொலாள ருறுசினந் திருக எற்றியு மீர்த்துங் குற்றங்கொளீஇ ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும் செக்குரற் பெய்துந் தீநீர் வாக்கியும் புழுக்குடை யழுவத் தழுக்கியல் சேற்றுப் பன்னெடுங்கால மழுத்தி யின்னா, வரையில் தண்டத்து மாறாக்கடுந்துயர் நிரயம்’ (கோவில் நான்மணி 36) என்று பட்டினத்தடிகள் கூறுதலாலறிக.

  1.இத்தன்மைய பலவாகிய துக்கங்களை மாலையாக பூண்டு கொண்டு உ.வே

  2.  இவ்விதனங்களுக்கு இலக்காகி - உ. வே.

  3.  கயமையைக் களிறாக உருவகஞ் செய்தலின் அதற்கேற்பக் கருங்கைக் களிறௌ விசேடித்தார். கருங்கையென்ற தனால் பாவமே செய்யப்படுவது குறித்தவாறு.

  4.  குணவீனமாகிய யானை மேலே ஏறிக்கொண்டு

  5.  தந்திரம்- தானை இந்திரியங்களைப் புலம் என்றார், புலந் தோறும் தங்கிப் போகம் நுகர்வித்தலின், தானை சூழ்வரச் செல்லும் வேந்தன் இடந்தோறும் நின்று காண்பன கண்டு செய்வனசெய்தல் போலப் புலந்தோறும் இனவ அறிவன அறிந்து செய்வன செய்தலும் உளவாதல் பெறப்படும். “விரவு மொழிக்கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ (அனம். 212) என்பதனால் தானை சூழ்தரச் செல்லும் வேந்தன் புலந்தோறும் தங்குதல் இயல்பாதல் காண்க.

  6.  மிகுந்த சூழ்தரநகரியிலேயுலாவரும் வேந்தற்கு நான்கு தெருக்கள் போல உயிராகிய வேந்தற்கு நாற்கதி கூறினார்; அரசவீதி போலாது மாசுநிறைந்த வீதிகளென்பார் “திருந்தா நாற்கதி” என்றார். கயவன் அரசனாகியவிடத்துத் தெருக்களில் திருத்தமேது?

  7.  எடுத்தவுடற் கட்டவிழ்த்து வேறேயுடலோடு பிணித்துக் கொண்டுழலும் திறத்தைப் பட்டினத்தடிகள், எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத் தியாவரும் யாவையும் எனக்குத் தனித் தனித்தாயாராகியுந் தன்தையராகியும், வந்திலாதவரில்லை யானவர், தந்தையராகியுந் தாயராகியும் வந்திராததுமில்லை முந்து, பிறவா நிலனுமில்லை யவ்வயின் இறவா நிலனுமில்லை பிறதிவென்னைத் தின்னா வுயிர்களுமில்லை யானவை தம்மைத் தின்னா தொழிந்தது மில்லை யனைத்தே, காலமுஞ் சென்றது யானிதன் மேலினி, இளைக் குமாறிலனே” (கழுமல மும்ம 7) என்று விளங்க வுரைப்பர். “குடம்பை தனித் தொழியப் புட் பறந்தற்றே யுடம் போடுயிரிடை நட்பு”(குறள் 338) என்பதும் இதனை இனிது விளக்கி நிற்கு மாற்றிக.

  8.  ஓரடலைவிட்டு ஓருடலையெடுத்துச் செல்லும வேறு பாட்டைச் சொல்லுவன் உ. வே. இஃது அடுத்துவரும் திருவகவலிற் கூறப்படுகிறது.

  9.  சொல்ல என்பது சொல்லெச்சம்.

  10. கிழிய- பா. வே.

  11. சாலி- பா. வே.

  12. கிச்செயிலுதவ - பா. வே.

  13. புழுக் - பா. வே.

  14. வடிவொடு - பா. வே.

  15. யொன்னார்கடிமதில் - பா. வே.

  16. வாங்குங் - பா. வே.

  17. விடையிற் சேறலின்- பா. வே.

  18. கிழித்தல்- பா. வே.

  19. இது தேகாந்தரம் சொல்லியது- பா. வே.

  20. இப்பகுதியுரை சொற்கள் தடுமாறிச் சிதைந்து காணப்படுகிறது.

  21. திரசயங்களுடனே கெழுமிச் செல்கை செய்தே- உ. வே.

  22. புசித்தற்ற பின்பு- உ. வே.

  23. கெட்டுப்போக- உ. வே.

  24. கடாவைப் பூட்டி- உ. வே.

  25. முன்னே விளைந்த விளைவை யுண்டு கொண்டே பின்னே யுண்டற் கேதுவாக உழவர் நெல்விளைவினை யுண்டுபண்ணு கின்றனரென்றற்கு, “உழவர் ஆக்கிய விளைவயல் செந்நெற் பயிர்பயன் தந்தாங்கு” என்றார். உழவரை உயிர்க்கிழவனாகவும், விளைவயலை யுடம்பாகவும் செந்நெற்

  பயனை வினைப் பயனாகவும் கொள்க. செவ்வேயாக்கிய வழி நெற்பயனை நன்குவிளைவிக்கும் வயலென்பார், “விளைவயல்” என்றார்; இது வினைத்தொகை. “கிளவியாக்கம்” என்புழி ஆக்கத்துக்குச் சேனாவரையர் கூறியதுபோல தீது நீக்கிச் செம்மை செய்தலென்றே கொள்க.

  26. பயிர்செய்வோர் விளைக்கப்பட்ட- உ. வே.

  27. வினைவயலில் உண்டாகிய- உ. வே.

  28. இதனாலே உயிர்தான் நின்ற உடலினீங்கி வேறு உடலெடுத்தற்குக் காரணம் கூறியவாறாயிற்று. நின்ற வுடம்பின் நீக்கிப் பக்குவப்பட்டட கன்மபலத்தை நுகர்தற்குரிய வேற்றுடம்பினை நல்குவதற்கு ஏது இவ்வுடம்பிற் செய்து கொண்ட வினையாதலின், “இச்செயல் உதவ” என்றார். வினை சடமாதலின், அஃது உடம்பு நல்காதாயினும், வேறு உடம்பு வருவதற்கு ஏதுவாதலின் அதனையே கருத்தாவாக்கிக் கூறினார். “பல்லாவுளுய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய் நாடிக்கோடலைத் - தொல்லைப், பழவினையு மன்னதகைத்தே தான் செய்த, கிழவனை நாடிக் கொளற்கு (நாலடி 101) என்பது வினையையே சேதனம் போலப் பயன் நல்கும் கருத்தாவாகக் கருதிக் கூறும் பிறசமயக் கொள்கை.

  29. நின்று ஆர்ச்சித்த- உ. வே.

  30. கன்ம பலனை- உ. வே.

  31. பொசிக்கைக்குப் பக்குவப்பட்ட தேகத்தை - உ. வே.

  32. குகை- உடம்பு கருமருவு குகையனைய காயம்” (தாயு.320 என்று பிற்காலத்தான்றோரும் கூறுதல் காண்க.

  33. எடுக்கும் இயல்பைச் சொல்லின்- உ. வே.

  34. மள்ளர் திருந்தடி, வினைகள் இன்பமும் துன்பமும் பயந்து மாறி மாறிப் பெருகுதற்கும் சாபவான புழு இடையற வின்றித் தொடர் புற்றுவருதற்கும், புட்டகம் மடிவிடுபு புனைதல் உடம்பின் நீங்குங் கால் உயிரின் பாற் செறிந்திருத்தற்கும், கனாக்காண்டல் வினை நிகழ்ச்சியின் விரையுடைமைக்கும் உவமைகளாகும்; இங்கே கூறப்படும் கருத்துக்கள் சிவதருமோத்தரத்தும சுப்பிரபேதத்தும் உள்ளன.

  35. செல்லுகிற திருந்திய அடியிட்டு - உ. வே.

  36. “பூதத்தாலுண்டாகிய தூலவுடலை விட்டுச் சாணளப்பான் புழுப் போல ஆன்மா அக்கணமே வேறோருடலைக் கன்மத்துக் கீடாகப் பூமியிற் பற்றினாலும் பற்றும்” என்று கூறுவர் மறைஞான தேசிகர். வில்லூன்றிப் புழுவைச் சாணளப் பான் புழு என்றும் கூறுவர்.

  37. பீறிய கூறையைப் பிரித்து - உ. வே.

  38. “பழம்புடவையைப் போட்டு நவமான வத்திரத்தை யெடுக்குமாறு போல மீளவும் கன்மத்துக் கீடாகப் பூதபரிணாமதேகத்தை யெடா நிற்கும்” என்பர் மறைஞான தேசிகர் (சிவ சித். 237).

  39. மடிவிடுபு புனைதலைப் பலவினைகளின் பயனை ஒருங்குதொக நுகர்தற்கும், கனவுக்காட்சி வினைப்பயனை நுகர்ந்து கழிதற்கும் என்றும் கூறுப.

  40. மடிவிட்டுடுப்பானைப் போலவும்- உ. வே.

  41. உள்ளத்தாற் செல்லலாகா இடமின்மையின், “உள்ளரும் நுழையா” என்றார். மேலிடமென்றது, மேலேழ் உலகங் களையும், அவையாவன புவ லோகம், மக லோகம், சன லோகம், தவ லோகம், சத்திய லோகம், வைகுந்தம், உருத்திர லோகம் என்பன, உள்ளமு நுழைய வூங்கும் என்றது, “அண்ட மாரிரு ளூடுக டந்தும்பர்” (தனி குறுந்) என்ற நாவரசர் திருவாக்கினை நினைப்பிக்கின்றது.

  42. கீழதை ஏழ்தலம், கீர் பாலேழும் மேற் பாலேழும் நடுவேழுமாக முக்கூற்று எவ்வேழு நரகங்களுமாகும். இவற்றின் விரியை மிருகேந்திரம் (அக்வப் பிரகரணம்) கூறுவது கொண்டறிக. “அதா அன்று , கீழது நீரகம் புகினு மேலது விசும்பின் பிடர்த்தலையேறினும் புடையது, நேமிமால் வரைக்கப் புறம்புகினும்” என்ற ஆசிரிய மாலையடிகளை ஒத்திருத்தல் காண்க.

  43. இந்நாவலந்தீவைச் சூழ்ந்து அறுவகைத் தீவுகளும் உவர்க் கடல் முதல் தூநீர்க் கடலீனாக எழுவகைக் கடலுண்டென்றும், அத் தூநீர்க் கடற்கப்புறத்தே பொன்னில முண்டென்றும், அதனைச் சூழ்ந்து “உலோகாலோகமென்னும் சக்கரவாளகிரி பதினாயிரம் யோசனைப் பரப்புடைத் தாயிருக்கும்” என்றும், “அந்த மலையின் புறத்தைச் சூழ்ந்து இருள்மயமாய்த் துன்னிய நிலம்” உண்டென்றும் அதனைச் சூழ்ந்தது பெரும்புறக் கடலென்றும், அதனைச் சூழ அண்டச் சுவருளதென்றும் கூறுப. இவற்றின் விரிவைச் சிவஞானபாடியத்தும் மிருகேந்திரத்தும் காண்க.

  44. சக்கரவாளகிரி திக்குப்பாலகர் இருக்கும் இடமாகிய மலை. இதனை மிருகேந்திரம், “நேமீர்தா மஸ்தகோபாந்த லோக பாலஸமாச்ரயா சக்ரவாடேதி தாமாஹீஸ்ஸர் வரத்னப் ரபா வினீம்”(xiii.44) என்று கூறுவது காண்க.

  45. தாங்கிய என்னும் இச்சொல் சில ஏடுகளில் இல்லை.

  46. அணித்தாகச் செறிந்த அண்மையினும்; செறிக்கப்பட்டட அண்மையினும்; அண்மையிலும் அண்மையிலும் உ. வே.

  47. “துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன், நட்பெதிர்ந் தோர்க்கேயங்கை நண்மையன்” (புறம் 380) என்று சான்றோரும் கூறுப.

  48. மாட்சிமைப்பட்டதாகிய மகத்தான வலிமையுடைத்தாகிய மனோரதத்திலே- உ. வே.

  49. ஒரு துடியோசையைப் பல கூறிட்ட கடுமையிலே நினைவு பொருள் கெடாது- உ. வே.

  50. தேர்மிகமிக விரைந்து கடுகுமாயின், தேர்மீது செல்லும் பொருள் விகாரமடைதல் ஒருதலையாதலின், “பொருள் கெடாது” என்று உரைப்பது குறிக்கத்தக்கது. உயிர் பிறப் பிறப்பாகிய சுழலிலகப்பட்டு மிக விரைந்து சுற்றுங்கால், அதனைப்பற்றியிருக்கும் வினை கெடா திருத்தற்கு இஃது உவமம்.

  51. புகர் முகத்தையுடைய- உ. வே. “பூவாள்” (புறம் 224) என்றாற்போலப் பூ ஈண்டுக் கூர்மை குறித்தது.

  52. தாரத்திலே- உ. வே.

  53. வினைதான் பக்குவப்பட்டுப் பயனுகர்விக்கச் சமைந்து நேர்பட்ட மாத்திரத்தே உயிர் அதற்குரிய உடம்புட் சென்ற டைதற்கு இஃது உவமம்.

  54. அதீத துரியத்தில் ஆன்மா வேறுதொடக்கின்றி மலத்தோடு அத்து விதக் கலப்புற்றுத் தன் உண்மை வடிவிலிருத்தலின் ஒரு பெருந்தமியன் என்றார். கேவல துரியத்திலே நின்ற - உ. வே.

  55. இந்திரியங்களோடு கூடி- உ. வே.

  56. சாக்கிராவவத்தைத் தானத்தில்- உ. வே.

  57. சாக்கிரதுரியத்தில் உடலோடு கூடியிருப்பினும் ஆன்மா பிராண வாயு ஒன்றேயன்றி வேறே அறிகருவிகளோடு கூடாமையின், துணையின் றறிவரும் துரியத்தல்கினும் என்றார்.

  58. சாக்கிரத்துக்குப் புருவநடுவும், கனவுக்குக் கழுத்தும், சுழுத்திக்கு இதயமும், துரியத்துக்கு உந்தியும், அதீதத்துக்கு மூலாதாரமும் இடமாம் என்பதைச் சைவாகமங்கள், “முகே ஜாக்ரமிதி nயம் ஸ்வப்னம்து ஹ்ருதயாந்த- கம் ஹ்ருதயாதி ஸமாரப்ய நாப்யம் தத்து ஸூஷூரப்தி - கம் தஸ்மாதயஸ்துரீயஸ்ய துர்யாதீதம்துலிங்கம்” என்று கூறுகின்றன.

  59. துரியாவத்தையில் நின்ற ஆன்மா உறக்கத்தினின்றும் நீங்கிப் பரந்த இந்திரியங்களாலே யோகம்புசிக்கும் சாக்கிராவத்தையிலே வந்தாலும் என்று செப்பறைப் பிரதி கூறுகிறது.

  இந்தப் போக்குவரவு ஆன்மாவுக்குள்ளனவல்ல என்றொரு தொடர் சில பிரதிகளில் இங்கே காணப்படுகிறது. இப்படிச் சொல்லிற்று தேகதேகாந்த்ததை இதுதான் ஆன்மாவுக்குப் போக்குவரவுடைத்தாயதல்ல- உ. வே.

  2.  கடியென்னும் உரிச்சொல் விளக்கப்பொருட்டு; “கடி யென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை, விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே, அக்ச முன்றேற்று ஆயீரைந்தும், மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே” (தொல். சொல். உரி 85) என்பது தொல்காப்பியம், கலாதத்துவம், ஆன்மாவை மலமறைப்பினின்றும் சிறிது நீக்கிச் செயற்படுத்தும் விளக்கமுடைமைப்பற்றி, அதனைக் “கடிகலை” யென்றார்; “அயர்விலாக் கலையின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின், செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்கும்” (சிவ. சித். 145) என்று அருணந்தி சிவனாரும் கூறுவர். சிவமுதல் நிலமீறாகவுள்ள தத்துவம் முப்பத்தாறனுள், சிவ முதலிய சுத்த தத்துவ மைந்தாற் பிணிப்புறாது கலைமுதல் நிலமீறாயவற்றோடே அதனை யெய்துதல்பற்றி, “கலை முதல்தர” என்றார். ஏனைவரும்மிடங்களிலும் இவ்வாறே தெரிந்துகொள்க.

  3.  ஈடானபடி தேகமானபடி- உ. வே.

  4.  ஒடிதல் செவ்விதன்மையின் அவ்வியைபுபற்றிக் குற்றத்தை “ஒடிவு” என்றார்.

  5.  உன்னோடு- உ. வே.

  6.  யாப்போ னின்றே னீக்குவரு ரையின்- பா. வே.

  7.  மன்னுதற் கிலரே- பா. வே.

  8.  மனங்கொள வீண்டி; கணங்கொடீண்டி: கணங் கொண்டீண்டி பா. வே.

  9.  பூதபவிஷ்ய வர்த்தமானமென்ற மூன்றனுள், பூதபவிஷ்யங்களை “அதீதா நாகதம்” என்று கூறுகின்றார். இவ்வாறே சிவாக்கிரயோகிகளும், யோகக்காட்சியைப்பற்றிக் கூறு மிடத்து, பூதபவிஷ்யமென்னாது, அதீதா நாகததென்றே கூறுவார், “யோகிஜ்ஞானம் நாம அதீதாநாகத வர்த்தமான சாக்ஷாத்கார: (யோகிஜ்ஞானம் நாம அதீதாநாகத வர்த்தமான ஸாக்ஷாத்கார:) என்பது காண்க. (சிவாக்கிர பாடியம். பக். 109).

  10. னொடுங்கும் வீடில்- பா. வே.

  11. ஆதியின்மையின்- பா. வே.

  12. கரணத் திலங்கியும்- பா. வே.

  13. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை.

  14. ஒரு தேகத்தை விடுத்து மற்றொரு தேகத்தை யெடுத்தல் ஆன்மாவுக்கே யுண்டென்று கூறியது- பா. வே.

  15. ஆடவரும் மார்பில் குங்குமமணிவது மரபு; “குங்குமக் குழங்கல் மாலை, மல்லுப்

  பூத்தகன்ற மார்பீர்” (சீவக. 743) என்று பிறரும் கூறுதல் காண்க.

  16. நற்குடியிற் பிறந்த குலமகளிர் என்றற்கு, “வலம்புரி பொருமணி யன்ன, மாதர்” என்றார்; விசயை சீவகனைப் பெற்றது கூறுவார், தேவரும் வலம்புரியிலகம் விற்கும் மாமணி யீன்றதென்ன, இலங்கிழை சிறுவன்றன்னைப் பயந்ரு” (சீவக. 386) என்பது காண்க.

  17. ஒப்பற்ற மணிபோலும் குடிப்பிறப்பையும் அழகையு முடைய மாதர் உ.வே.

  18. முயக்கிடையறியா மயக்கத்தை “இன்று நான் இவளாம் பகுதிப் பொற்பு ஆர் அறிவார்” (8) என்ற கோவையார் கருத்தை விளக்கலுற்ற ஆசிரியர் பேராசிரியர், “என் நெஞ்சம் இவள் கண்ணே யொடுங்க யானென்பதோர் தன்மை காணாதொழிய இருவருள்ளங்களும் ஒருவேமாமாறு கரப்ப ஒருவேகமாகிய ஏகாந்தத்தின்கண் பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம்” ஒருவராலுமறியப்படாத தென்றதனாலறிக. இச்சிற்றின்ப நுகர்ச்சியியல்பும் இனிது தோன்றப் பேரின்ப நிலையைக் கூறும் இராமலிங்க அடிகள் “மனையணைந்து மலரணைமேல் எனையணைந்த போது, மண வாளர் வடிவென்றும் எனது வடிவென்றும், தனை நினைந்து பிரித்தறிந்த தில்லையடி யெனைத்தான், சற்றுமறியேனெனில்யான் மற்றறிவதென்னே” (அனுபவ மாலை 16) என்று திருவருட்பாவில் உரைத்திருத்தல் காண்க.

  19. சுரதமயக்கத்திலே- உ. வே.

  20. சுரோணிதம் செந்நிறத்ததென்றற்கு, “துப்புருக்கன்ன பழனத்து” என்றார்; அருணகிரியாரும், அதன் நிறங் குறித்துக் “குருதியிலே சுக்கிலமது கூடிக் குவலயம் வானப் பொருகாலாய் உடலெழும்” (திருப்புகழ் 1086) என்று கூறுவர்.

  21. சுரோணிதம் நிறைந்த நிலத்திலே; சுரோணிதமுடைய நிலத்திலே- உ.வே.

  22. சுக்கிலம் வெண்ணிறத்ததாதலால். அதன் துளியை, “முத்துருக்க கன்னவித்து” என்றார்; திருத்தக்கதேவரும். “தாமரைவாய் உற வீழ்ந்ததோ ரொண்மணி போன்று” (சீவக 218) என்றாராக, நச்சினார்க்கினியார் மணியை முத்தென்றுகொண்டு, “முத்துப்போன்று” என்றார். அருணகிரியார், சுக்கிலத்துளிக்குத்தாமரையிலையிற்றங்கிய நீர்த்துளியை யுவமமாக நிறுத்தி, சுக்கிலஞ் சுரோணிதத்திலுற்று நளினத்திலப்பு வெரைத்த முற்றி” (திருப்புகழ் 565) என்றனர்.

  23. வித்தை வித்துங்காலத்து - உ. வே.

  24. சுக்கிலம் பொருந்திப் பெருகிய வழியும் பந்திப்போன் இன்றி அமையாமையை அருணகிரியார். “பனிபோல் மதம் வந்துட் பெருகிடவே விதியானவன் அருள்மேவி” (புகழ்.656) என யாப் புறுக்கும் அருளைக் கூறுமாற்றால் உரைப்பது காண்க.

  25. உரையின் என்று பாடங்கொண்டதற்கேற்ப, சொல்லுமிடத்துச் சுத்திபண்ணும் நீரோடேகழிப்பர் என்ற உரை சில பிரதிகளில் காணப்படுகிறது.

  26. அன்றே - அன்று + ஏ எனப்பிரித்து ஏகாரத்தை ஆகம் என்பதனோடு கூட்டி உரை கூறப்படுகிறது.

  27. அங்ஙனமன்றாயினும் சுக்கில சுரோணிதக் கலப்பு ஏனைப் பூதங்களின் பரிணாமக் கூட்டத்தாற் பெருகுதலாம். பெரு குமவ்வுடலே உயிர் என்னாராதலின், ஆகமே யாருயிராயின் என்றார்.

  28. புகுந்தது உயிர்- உ. வே. பகுந்தது- பகுப்புண்டு வந்தது.

  29. உண்டாதற்கு இவர்கள் உயிரோடிருத்தல் கூடாதே - உ. வே.

  30. பிரகிருதி புருடன் என்னும் இவற்றின் போக்ய போக்திரு இலக்கணமான சாமானிய சம்பந்ததே உலகம் தோன்றுதற்குக் காரணமென்றுமீமாஞ்சகர் கூறுவாரெனப் போக காரிகையுடையாரும் (9, 10) கூறுகின்றார்.

  31. “கேள்விகள் துறைபோய், வடிகொள் கண்ணியர் மனங்குழைந் தனங்கனென்றிரங்கக், கொடையுங் கோலமும் குழகுந்தம்மழகுங் கண்டேத்த, விடையிற் செல்வழி விளியினும் விளியும்” (2757) என்ற சீவகசிந்தாமணிச் செய்யுளை நினைப்பிப்பது காண்க.

  32. காணாநின்றோம் - உ. வே.

  33. இங்ஙனம் பிறந்து வளர்ந்து காமன்போற் காரிகையார் மருள வளர்ந்திருத்தலேயன்றி, கருவிலும், பிறந்தவுடனும் இறப்பது காண்கின்றோம் என்பது தோன்ற, “உற்றவும் காண்டிகும்” என்றற்கேற்பவும் இது நிற்குமாறு காண்க.

  34. பிறந்த பிள்ளை நாளாவட்டமும் வளர்தலைக் காண்கின் றோம்- உ. வே.

  35. அதீதம்- அளவுகடந்த (இறப்பு); அநாகதம்- இதுவரையில் ஏற்பட்டிராத (எதிர்காலம்); பூத பவிஷியம்- இறந்தகால எதிர்காலங்கள். இறப்பு எதிர்வு நிகழ்வு என்ற முக்காலத்தையும் வடநூலார் முறையே பூத பவிஷிய வர்த்தமான மென்பர்.

  36. ஆன்மாவாகிய கருத்தா என்ற தொடர் சில பிரதிகளில் இல்லை.

  37. இதுகாறும் தேகத்தின் வேறாக ஆன்மாவுண்டெனச் சாதித்தவர், ஆன்மா போக்குவரவுபுரிதற்குத் தேகம் வேண்டியிருத்தல் போல முதல்வனுக்கும் தேகம் வேண்டுமென்றழும் கடாவை ஆசங்கித்து அவன் தேகமின்றியே யாவும் செய்வனெனச் சாதிக்கின்றார்.

  38. “எல்லை மூவுலகு முருவியன்றி ருவர் காணுநாள் ஆதி ஈறின்மை வல்லையாய் வளர்ந்தாய்” (வாழா.4) என்றும், “முன்னைப்பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” (எம்பாவை.9) என்றும், “ஆதியனே அந்தம் நடுவாகி யில்லானே” (சிவப்பு. 73-4) என்றும் “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க. நாலணர்வுணர நுண்ணியோன் காண்க. மேலொடுகீழாய் நின்றோன் காண்க, அந்தமுமாதியு மகன்றோன் காண்க” (அண்டப். 47-51) என்றும் சான்றோர் கூறியவாறு காண்க.

  39. ஆதி- உடம்பு. உயிர் அனாதியாதலால், அதற்கு ஆதியாய்த் தொடரும் உடம்பினை ஆதியென்றார். தோற்றக் கேடுண்மை பற்றி உடம்பை யாதியென்றாரென்றுமாம். ஆன்மாவுக்கு அதனின் வேறாகத் தேக

  முண்மை கூறுவார். அவ்வான் மாவையுடைய முதல்வனாகிய பரமசிவனுக்குத் தோன்றி ஒடுங்குதற்குரிய தேக முண்டு போலும் எனும் ஐயமறுத்தற்கு உழிகந் தொடுங்கும் ஆதியின்மையின் என்றார். அதேஹஸ்யாயி கர்த்ருத்வம் ஸ்வதேஹ ப்ரேரணே யதா (1;34) என்று பௌட்கரம் கூறுவது காண்க.

  40. ஒடுக்கமில்லாத - உ. வே.

  41. சிவனுக்குத் தேகம் வேண்டா என்பதை அகோர சிவாச்சாரியார். “சிவன் நித்தியமாயும் நின்மலமாயும் அதிசயமற்றதாயுமுள்ள, எல்லாப்பொருள்களையும் விடய மாகக் கொண்ட ஞானகிரியைகளுடன் கூடியிருத்தலால்” (இரத். 43-44 உரை) அவற்கு உடம்பு வேண்டா என்கின்றார்.

  42. மாயாவாதத்தின் இயல்பை மாயாவாத சங்கற்பத்தாலும் நிரா கரணத்தாலும் சங்கற்பநிராகரணத்துட் காண்க.

  43. இது சிவாத்துவிதி நிராகரணம் என்று செப்பறைப் பிரதி கூறுகிறது.

  44. சரீர நகரிகளாகிய உற்பீசம் அண்டாசம் சராயுசம் சுவேதசம் என்னும் நாலுவர்க்கத்துப்பிறப்பாகிய தேகங்களை யெடுத்தும்- உ. வே.

  45. விரவுப் பெயர்- பலவாய் விரவிய பெயர், கோபுரம் முதலியன செம்மை நிலையின் நீங்கி இடிந்து சீரழிந்திருப்பினும் அப்பெயர் நீங்காமையால் “விரவுப் பெயர் என்றாரென்றுமாம்.

  46. கரணம் காரியப்பாட்டுக் காரணமாதல்பற்றி, காரணப் பொருளில் வழங்குவதாயிற்று. பிருதிவி ஒன்று தானே கோபுரம் முதலியவாகவுருப்பெற்றும், இடிந்து துகளாகிச் சீரழிந்தும் மண்ணோடு மணணோடாகியும் பல்வேறு மாற்றமடையினும் நிலைபெற நிலவுதல் போல என்றதனால் நால்வகைப் பிறப்பினும் பல்வேறு உடம்பு தோன்றி நின்று மறைந்து மாறினும் முதற்காரணம் நிலைபெற நிலவுதல் பெற்றாம்.

  47. பல்புகழ் உலகமெல்லாம் பொருந்தி- உ. வே.

  48. இதனால் இந்த ஞானாமிர்த ஆசிரியர், ஞானமொழிந்த ஏனை மூன்று பாதங்களையும் இயற்றியிருப்பரென்றெண்ணுதற்கு இடமுண்டாகிறது. இதனை முன்னுரைக்கட் கூறினாம்.

  49. யோகபாதக் கிரியாபாதங்களில் அனுக்கிரகித்த- உ. வே.

  8.  கோடற் பாகை கிழானுமாகிய- உ. வே. “கோடல் என்றது கோடலம் பாகையென்னும்ஊர்; அருண்மொழி யென்பது @ஸ்ரீபரமானந்த முனிகளின் பிள்ளைத் திருநாமம்; குடிப்பெயர் அம்பர் கிழான்” என்று ஏனாதிவாடிப்பிரதி கூறுகிறது.

  9.  பெரிதும் அழகிதாக- உ. வே.

  50. ஆகாமிய முதலிய வினைவகை மூன்றும் ஒன்றற்கொன்று காரணமும் காரியமுமாக நாசோற்பத்தி பண்ணிவருதல் பற்றிப் பிரபஞ்சம் போல் பிரவாகாநாதி யன்றிப் பதிப் பொருள்போல் அநாதியன்றென் பாரும், முதற்காரண மாகிய மூலவினை பதி முதலிய பொருளோடொப்ப அநாதியாயுண்டென்பாரு மென இரு திறத்தர் ஆசிரியர் என்றோதி, அவருள் ஞானாமிர்தாசிரியர் உண்டென்பார் வகையைச் சேர்ந்தவரென்றற்கு, “ஆணவ முதலன் றது போற் கருமமும் காண். அலதெனின் அக்கரைசுழி நானா விதம் இனிது உயிர்கட்குதவுவது எதனால்; அற்றது மாயையும் மற்றறி அவணே” என்ற பகுதியை எடுத்துக் காட்டுவர் மாதவச் சிவஞான முனிவர் (சிவ. பாடியம். சூ. 2. அதி. 2.) இருவினையுண்மை ஈண்டுக் கரணாகமம், “எங்ஙனம் மலம் அனாதியாயிருக்கின்றதோ அங்ஙனமே கன்மமும் அனாதியாகும்; இங்ஙனம் அனாதியன்றாயின் பல்வகைக் காரியங்கள் உண்டு பண்ணப்படுதற்குக் காரணம் எதனால் என்பது பெறப்படாதாம்” என்று கூறுவது நோக்கத்தக்கது.

  51. காணல வெனினக் - பா. வே.

  52. வீடு பேறு கேட்டறிந்து முற்பிற்பாடு கேட்கப் பாசம் அனாதியெனச் சாதித்தது- பா.வே.

  53. போக மென்பது ஈண்டு ஆகு பெயராய் அப்போது நுகர்ச்சிக் கேதுவாகிய தேகத்தின்மேல் நின்றது.

  54. அந்தக் கன்மமும் தேகத்தி லல்லது ஆர்ச்சிக்கும் உபாய மில்லையாக இருந்தது என்று விண்ணப்பஞ் செய்ய- உ. வே.

  55. அழகு விளங்கிய தேகத்தில் அல்லது- உ. வே.

  56. மார்க்கமில்லையே- உ. வே.

  57. சீத்தலைச் சாத்தனாரும் உடலே வினைக்கு ஏதுவும் பயனும் என்பார், ‘வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” (மணி. 4113) என்பர்; இனி, அருணந்திசிவாசாரியார், “உடற் செயல் கன்மம் இந்த வுடல் வந்த வாறே தென்னின், விடப்படு முன்னுடம்பின் வினை யிந்த வுடல் விளைக்கும்” (சிவ. சித். 2: 10) என்றார்.

  58. ஈண்டு ஆசிரியர் கன்மம் என்றது மூலகன்மத்தையென அறிக மேல் நிகழும் வினையும் பயனு மாகியவற்றுக்குக் காரணமாகிய மூல கன்மம் அனாதியென்றும், கன்மத்திற் கும் உடம்பிற்குமுள்ள தொடர்ச்சியானது பிரவாகானாதி யென்றும் (இரத்.174 உரை) அகோரசிவாசாரியார் கூறுகின்றார். ஆசிரியர் உமாபதிசிவனாரும் “ஏக னநேகனிருள் கருமம் மாயையிரண் டாகவிவை ஆறுஆதியில்” (திருவருட். 6:2) என்ற கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் மூலவினையை யுடன்படுவர்: “வினையே செய்வது” என்ற சூத்திரத்துள் வினைக்காரணமாகிய தொழில் முதனிலை யெட்டனுள் வினையே யென முதற்கண் மூலவினையைக் கூறுவது காண்க. மலகன்மம் மாயை மூன்றும் அனாதி என்பதை அருணந்திசிவனார், மலமாயை கன்மம் அனுச்சிவன், அனாதிகன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்ம முடற் செயா, அனாதி காரியமா முடற்கள் அசேதனம் அணையா அறிந்து, அனாதி ஆகியமைக்க வேண்டும் அமைப்பினோடும் அனாதியே” (சிவ. சித்தி. பரபக். 50) என்பது காண்க.

  59. ஆணவமலத்தைச் சகசமல மென்றும், ஏனை மாயை கன்மங்களை ஆகந்துகமல மென்றும் கூறும் இயைபுபற்றி கன்மம் ஆதி போலுமென மாணாக்கன் ஐயுறாமைப் பொருட்டு அதனையெடுத்து ஆசங்கிக்கின்றார்.

  60. அநாதியில் இனிதாக; ஆதியில் இனிதாக- உ. வே.

  61. மற்றை மாயாமலமும் அப்படியானால் ஆதியென்று கொள்வாயாக என்று செப்பறைப் பிரதி கூறுகின்றது. மலம் கன்மம் மாயை என்ற மூன்றினுள் மலகன்மங்களை அனாதியென வற்புறுத்தினமையின், மாயையை விரித்துரையாது அற்று என மாட்டெறிந்து செல்கின்றார்.

  62. சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுவார்க்கு உடம்பிருந்தும் வினையுண்டாகா தொழிதலும் உண்மையின் இதனை வேறு பிரித்து, இனும் ஒருவகை ஓதுவ துளது என இலேசாக வுரைத்தார்.

  63. இது சில ஏடுகளில் இல்லை.

  64. முற்பாடாவது யாதென்று சொல்லுவது- உ. வே.

  65. இஃது அச்சுப்பிரதியிலில்லை. “உடலும் வினையும் வித்தும் மரமும் போலத் தம்முட் காரண காரியமாய்த் தொன்று தொட்டும் பிரவாகானாதியாய் வருதலின், அவற்றிற்குத் தம்முள் முற்பிற்பாடு கூறமுடியாது” (சிவ. சித். 2: 10 உரை) யென்று கூறி வரம்பின்றி யோடலென்னும் குற்றமென மலையற்க என்றற்கு, “முற்பிற்பாடு சொல்லலாவ தில்லை”யென மறித்தும் கூறுகின்றார் சிவஞானமுனிவர்.

  66. முடலை யாக்கையின் என்பது மதுரைச் சிவப்பிரகாசர் கொண்ட பாடம்.

  67. யெறுழ்த்தோ டணிப்போ- பா. வே.

  68. துன்பப் பகுவய் - பா. வே.

  69. இனியே என்று பாடங்கொண்டு இனியேம் மயலோ என்று இயைத்து ஏம் மயலோ என்று பிரித்துக்கொள்க என்றும் ஏம், இன்பம்; ஈண்டுப் பேரின்பமாகிய முத்தியென்க என்றும் குறிப்பெழுதினார், திரு .சே. ரா. சு. சுவிராயர்.

  70. என்னை செயலாங் கொல்லோ- பா.வே.

  71. மாரிப் பானா ளார்கலி- பா. வே.

  72. துக்கமும் அச்சமும் மிக்கு - பா. வே.

  73. தூசிப்படை- முன்னேறிச் செல்லும் முதற்படை- (vanguard of the advancing army).

  74. அவையிற்றின்வழி- உ. வே.

  75. பொறை யென்னும் கெடுத்தற்கரிய தானையாலே-

  76. தாபத வொழுக்கம் மேம்பா டெய்தியவழித் தாபத வாகையெனப் படுமாதலின், வாடாத்தாபத வாகை என்றும் வாகை யென்றதற் கேற்பச் சூடிய யென்றும் கூறினார். இதனை “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். பொ. 74) என்பதற்கு உரைகூறுமிடத்து, ஆசிரியர் இளம் பூரணர், “அறுவகைப்பட்ட பக்கமெனக் கூட்டுக; அவை, ஓதல், ஓது வித்தல், வேட்டல் வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன; இவ்வொழுக்கத்தால் மிகுதல் வாகையாம்” என்று கூறுதல் காண்க.

  77. வாகையாவது, “தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப், பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” (புறத்.19) என்பர் ஆசிரியர் தொல்காப்பியர்.

  78. ஆண்பிள்ளைத் தனமாகிய முறைமையிலே கூடிய, பெரியோனே- உ. வே.

  79. “தீங்குறு மாயை சேரா வகை” (சிவப்.93) என்ற சிவப் பிரகாசத்துக்குக் “குற்றத்தையுடைய மாயா தேகம் மேலெடாதபடி” என்று பொருள்கூறி, “ஆன்மாக்கள் மாயா தேகமெடுத்தால், மேலும சனனத்துக் கேதுவாயுள்ள கன்மங்களை ஆர்ச்சித்துக் கொள்ளுகையாலே அப்படிச் சொன்னதெனவறிக” என்று உரைத்து இப்பகுதியை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றார் மதுரைச் சிவப்பிர காசர்.

  80. ஆனாது எனற்பாலது ஆனா எனக் குறைந்து நின்றது.

  81. எறுழ்- வலி, “எறுழ் வலியாகும்” (சொல் உரி.90) பிறப்பிற்கேதுவாகிய வினை உளதாகிய விடத்து, எவராலும், எதனாலும் விலக்குதற்குரிய வலியுடன் உடம்பு வந்து இயைதலின், எறுழ்த்தோல் என்றார்.

  82. தோல் ஆகுபெயர்.

  83. புல்ல ஆம் என ஒரு சொல் வருவித்துரைக்கப்படுகிறது.

  84. வினைமுதலாகும் உயிர் அவ்வினைப்பயனை உடம்பினன்றி நுகர்தல் கூடாமையின், அதனை வண்டுறை என்றார்; துறையெனவே, ஏனை, உலகு, கரணம் முதலியன கொள்க. “உலகுடல் கரணங் காலம் உறு பலம் நியதி செய்தி, பல விவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்பது” (சிவ.சித். 2:22) என்றார் சான்றோரும்.

  85. மகத்தாகிய துறையாதலால்- உ. வே.

  86. பித்தாம் அத்தனையே- உ. வே.

  87. “அனாதியுட லொன்றனை விட்டொன்று பற்றிக் கன்மால், ஆயழிந்து வருதலால் அந்தமில்லை” (சிவ.சித். 11:3) என்றும் “காயமுண்டே லிருங்கன்ம மாயை மலமெல்லா முண்டாம்” என்றும் சான்றோர் கூறுவது கொண்டு, செய்தி யோவாது என்ற ஏதுவால், அது உண்டெனல் மயல் என்றான்.

  88. அறிவுநூல் பலவற்றையும் ஆக்கி அறிவுறுத்திய முதலாசிரியனாதலின் முதல்வனை, ஆதி என்றும், அவனருளிய ஆகமத்தை நுண்மாண் நுழைபுலம் கொண்டு காண வேண்டுதலின் நூல் என்றும் கூறினார். உடலோடு கூடியிருத்தலின் வினைத்தொடர்பு நீங்காதென்றும், எனவே தனக்கு முத்தி எய்துதல் அரிது என்றும், அதற்கோர் உபாயம் அருள வேண்டுமென்றும் குறையிரந்து நிற்கும் கருத்தின னாதலின், மாணவன் அன்னோ என்னை செய்குவன் என அவலிக்கின்றான்.

  89. மாரி சொரியும் இரவிலே- உ. வே.

  90. ஆரிய வூமன் என்பதிலுள்ள ஆரிய என்ற சொல்லை முனிவரொடு கூட்டி, ஆரிய முனிவர் கோவேயென இயைத்து “அறிவுடைய தவசியர்க்குக் கோவே” யென்றும், “ஆரிய வூமன் என்பதற்குச் சற்றும் வார்த்தை சொல்லத் தெரியாத வூமன்” என்றும் உரை கூறிய பிரதியுமுண்டு. ஆரிய வூமனாவான், “ஊமைத்தன்மையிற் குறையாதவன்” என்றும், ‘ஆர், நிறைவு” என்றும் கூறுவர் சே. ரா. சு. கவிராயர். ஏனைப்பிரதிகளெல்லாம் மிலேச்ச நாட்டு ஊமன் என்பது பட ஆரியவூமனென்றே கூறுவது ஈண்டுக் கருதத்தக்கது. ஊமன் கைகளால் தன் கருத்தை யுணர்த்து வனாயினும் தமிழர் அறியுமாறு தெரிவிக்கும் பயிற்சியிலன் என்றற்கு ஆரிய வூமன் என்றும், பகற்போதாயின், அவனைக் காண்போர் கரையேற்றுவராதலின், இரவின் என்றும், கொள்ளிக்கும் விள்ளாக் கூரிருளிரவு என்றற்கு, மாரி யிரவின் என்றும் கூறினார். “மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின், ஆர்ஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக் கண்ணி லூமன் கடற்பட்டாங்கு” (புறம். 238) என்று சான்றோரும் கூறுதல் காண்க. ஆரிய வூமன் இயல்பை. “உடம்பி னுரைக்கு முரையா நாவின், படம்புகு மிலேச்ச ருழையராக” (முல்லை. 65:6) என்று நப்பூதனார் கூறுமாற்றா லறிக.

  91. ஆழியெனப் பொதுப்படக் கூறினாரேனும், தமிழகத்தின் கிழக்கு தெற்கு மேற்கு என்ற மூன்று பக்கங்களிலும் உள்ள கடலெனக் கொள்க.

  92. ஆசாரியன் சீடன் பரிபாகம் நோக்கிப் பிறவிக் கஞ்சாதே கொள் என்று- பா. வே.

  93. ஞானத்துக்குத் தலைவனாயுள்ளோனே- உ. வே.

  94. ஞானத்தைப் பெண்ணாக வுருவகஞ் செய்தல் நூன் மரபு: “கேவல மடந்தை யென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண், பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்”(சீவக.3117) என்றும் “குழைமுகஞான மென்னும் குமரி” (சீவக 368.) என்றும் பிறரும் கூறுதல் காண்க.

  95. நெஞ்சு புண்ணுற்று அஞ்சிய செய்தியை முன்பே, “என்னை செய்குவன் கொல்லோ அன்னோ” (ஞானா.30: 11) என்பதனால் தெரிவித்தமை காண்க.

  96. அஞ்சலோம்பு என்பது தெளிவித்தற்கண் வந்தது; “துணிகுவெனாயின், அரியவு முளவோ அஞ்சலோம் யெனத், தெளிவனன் கூறிய தெளிமொழி” (பெருங்.1:46: 193-5) என்பதனாலறிக.

  97. நெஞ்சு புண்ணாகி - உ. வே.

  98. மிக்க மழையைச் சான்றோர். “சேறு செய் மாரி” (பதிற் 65: 16) என்ப.

  99. அழகிய - உ. வே.

  100. இச்சொல் சில பிரதிகளில் இல்லை. “சித்தத்தால் நீக்குதல்” என்று அச்சுப்பிரதி கூறுகின்றது. சரீரத்தாலே கன்மத்தைப் பந்தித்துக் கொண்டோன், அதனாலே கன்மச் சேதமும் செய்து கொள்வான் என்பது நன்கு தெரிந்து செய்தியாதலால், விடல் வியந்தோவன்று என்றார். வியப்பு, வியந்தென நின்றது. இறைவன் சரீராதிகளை உயிர்களுக்கு அருளுவது அவற்றை இடர்க்கடலினின்றும் எடுத்து அருட்கரை யடைவித்தற்கே யென்பார். “உயிர்க்கு மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே, துன்னிய மலங்களெல்லாந் துடைப்பவும் சொல்லலாமே” (சிவ.சித். 1:36) என்று அருணந்தி சிவனார் கூறுதல் காண்க.

  101. நீங்குதல் பொருந்த என்பது நீங்க என்னும் பொருட்டு. ஐயம் என்பது எதுகையின்பங் குறித்து அயமென நின்றது.

  102. குற்றம் தீர- உ. வே. மாசுக என்றும் பாடமுண்டு.

  103. இத்தொடர் சில பிரதிகளில் இல்லை.

  104. உரையிறந் துணர்வு கூடா - பா. வே.

  105. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை.

  106. இவ்வகவற்கண் காணப்படும் கருத்துக்களே, குறுந் திரட்டில், ஆத்தருரைச் சிறப்பு என்ற தலைப்பில் வரும், “துனிவந்திடு பிறவிப் படு துயர் தீர் வகை தேனும், கனி யும் அமிர்தொடு கன்னலு மென லாதியகடுவா, யனியந் தனி லறியாதவ ரருமாலு மவாவு, முனிவும் மறுமுனிவோர் தரு மொழியேமறை மொழியே” என்றும், “பெருகும்மதி சயமாம் வகை பெருமானடி பிறழா, முருகொன்றிய மணி மாலையின் மொழியுந் துதிமாலை, திருகும்மன முடையார் களுஞ் செவிசென்றுற நீரா, யுருகும்படி சொலவல்லவ ருடையானருளுடையார்” என்றும் வரும் பாட்டுக்களில் அமைந்துள்ளன.

  107. இஃது ஆசாரியன் அனுக்கிரகித்தது- பா. வே.

  இது சேதகம் பயந்த செழுநீர் சேதக மாசுக மண்ணியதென்ன ஆசுக அயந்தீர் பெய்த அறிகென அறத்தின் கோவாயுள்ள பரமாசாரியன் இப்படி யொக்கும் வசனம் அருளிச் செய்தமையின் நல்லோர் உரைப்ப ரென்று சொல்லிய பரமகுரு துதியென்று செப்பறைப் பிரதி கூறுகின்றது.

  108. “பாலொடு தேன் கலந்தற்றே”(குறள் 1121) என்றும் “தேன்மயங்கு பாலினு மினிய” (ஐங். 203) என்றும் சான்றோர் தேனொடு பாலையே கூறுதலின், ஈண்டு அமிழ்தென்றது பாலெனவறிக.

  109. அமிழ்துண்டன ராயினும் அதனால் சாதல் நீங்காமையின் அந்தமிலின்பத் தழிவில் வீடு பயக்கும் ஞானாமிர்தம் அவர்கட்குப் பெறற்கரிதென்பார், அமிழ்தூ ணண்டரும் பெறற் கருந் தகைய என்றார்; “விண்ணோ ரமுதுண்டும் சாவ” (சிலப். வேட்டு.) என இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. “எண்ணிய சிவஞானத் தின்னமுதம்” என்றும், அது “தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருள்” (ஞானசம் 68:) என்றும் சேக்கிழார் அடிகள் கூறியருளுவது காண்க.

  110. அமுது புசித்தற்குப் புண்ணியவான்களாகிய- உ. வே.

  111. அமரரும் பிறரும் கூடிக் கடைந்து பெற்ற அமுதத்தானும் நீக்க மாட்டாத பெருமையுடைமை தோன்ற, தண்டாப் பிறவிப் பேரிட ரென்றும், அதனை அறக் கெடுத்தலால், எறிப என்றும் கூறினார்.

  112. துறப்பன- உ. வே.

  113. வாக்கு மனங்கட் கெட்டாத முத்திநிலையையே ஈண்டு உரையுணர்வு கூடா வரகதி என்றார் உரையுணர்வுக்கு அகப்படுமாயின் சுட்டியறியப்படும் பொருளாய் அசத்தாமாகலின், உரையுணர்வு கூடாமை அதற்கு இயல்பாயிற்று.

  114. மனவாசகம் கடக்கப்பட்டதாகிய; கடக்கப்பட்ட மேன்மை யாகிய- உ. வே.

  115. திருவருள்ஞானமுடையோர் அதனைத்தரிசித்துப் பிறிது எதனையும் காணாதொழிதலின், மதியோர் ஆனாது பருகுவ என்றார். பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்” (சிவ.சித்தி.11:2) என்று சான்றோரும் கூறுதல் காண்க.

  116. ஆரவுண்டவழித் தெவிட்டிவிடும் இன்பொருள்கள் போலாது உண்ணுந்தோறும் வற்றாத பேரின்பம் சுரத்தலின், பருகியும் அமையாது நுவலும் அமைதிய என்றார். சேக்கிழார் அடிகளும் இவ்வின்பத்தை அருளும் முதல்வனை, “மேவினார் பிரிய மாட்டா விமலனார்”(கண்ணப்ப. பு. 174) என்பது காண்க.

  117. பாசமென்னும் வடசொற் பொருண்மைக் கேற்ப வல்லியென்று விசேடித்தார், வல்லி- கொடி. வேரொடு போக்காதவழி மேலும் கிளைத்துப் பந்திக்குமாதலின், வேரற நிமிர்ப என்றார்.நிமிர்தல் ஈண்டுக் களைதல்.

  118. பாசமாகிய விலங்கை வேரோடே போக்குவன- உ. வே.

  119. திருவருள் ஞானத்தில் தோய்ந்து நிற்பாரையும், பண்டைப் பயிற்சி வயத்தான் வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கு வித்து மறம் செய்யுமாறு அலைப்பதுபற்றி, பாவ வினையை, மறக்குறும்பு என்றார்.

  120. மறவுணர்வு தேய அறவுணர்வே நன்கு வளர்த்தலின், அறத்தின் வேலிய என்றார்.

  121. முதல்வன் தனக்குவமையில்லாதவ னாதலின். அவனது அருள் ஞானப்பயனும் அத்தகைமைத்தாதல் பற்றி தனக்கு நிகரில்லாத் தகைமைய என்றார்.

  122. அழகையுடையன் உ.வே

  123. இந்தப் பரஞானத்தால் உள்ளம் பரமே நினைந்து அதில் தோய்ந்து கிடத்தலால். வேறு காம வெகுளி முதலிய குற்றங்கள் நிகழ்தற்கு இடனின்றிப் போதலின், மனம் எஞ்ஞான்றும் தூயநிலையில் இருப்பதுபற்றி மனத்தின் மாசறக் களைவ என்றார்.

  124. நிர்ச்சேடமாக வொழிப்பன- உ. வே.

  125. வினைநிகழ்ச்சிக் கேதுவாகிய மனம் வாக்குக் காயங்களைத் திருவருட்குரியவாய் ஈடுபடுத்தியவழி, பிறவிக்கேதுவாகிய வினை யில்லா தொழிதலின், ஞானநெறியை வினையுகு நெறி என்றும், கன்மச் சேத வுபாயம் என்றும் சான்றோர் கூறுவாராயினர், திருவள்ளுவரும “சார்புணர்ந்து சார்புகெட வொழுகும்” (குறள்.359) ஒழுக்கமென்றார்.

  126. என்று மகான்கள் சொல்லுவார்கள் எ-று .- உ. வே.

  127. அத்திரி- கோவேறு கழுதை: இதனை அரசவாகனம் என்ப. (சிலப். 6: 119 அடி.நல்)

  128. தேயம்- பா. வே.

  129. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்”(சிவப்.4: 169).

  130. வலையிற் றீரா- பா. வே.

  131. செயிர் தீர் - பா. வே.

  132. ஈண்டுக் கூறப்படும் மிளை, அகழி, புரிசை முதலியவற்றின் இயல்பை, “நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி, வான்றோய் வன்ன புரிசை விசும்பின், மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற், கதிர்நுழை கல்லா மரம் பயில் கடிமிளை” (புறம்.21) என்பதனாலறிக. அழுக்காறு முதலியன பகைவர் இல் வழியும் கேடு பயப்பனவாய் அரண்செய்யா தனவாதலின், இகலிரி மிளை என்றதற்குப் பகைவரைக் கெடுத்த மிளை என்னாது நிகரில்லாத மிளை என்று உரை கூறப்பட்டது. “அழுக்காறுடையார்க் கது சாலு மொன்னார், வழுக்கியுங் கேடீன் பது” (குறள் 165) என்ப வாகலின் அரணாகாமையும், “போரருங் கடிமிளை” (புறம் 181) என்றலின் அரணாதலுமறிக.

  133. “அழுக்காறின்மை” (ஞானா.24) என்பதற்கு “மனச் சழக்கில்லாமை” யென்று உரை கூறி, “மனச் சழக்காவது பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டு பொறாமை” என்று மதுரைச் சிவப்பிரகாசர் கூறுவர்.

  134. உவமையில்லாத நகரி சூழ்ந்த காவற்காடாகவும்- உ. வே. குற்றத்திற்படுத்தி மாறுபாட்டைத் தருகின்ற காவற் காடாகவும்- உ. வே.

  135. தன்கண் வீழ்ந்தாரை மீள எழுந்தேறி உய்ந்து போகா வண்ணம் கெடுக்கும் கொடுமை மிகுதிபற்றி, பேரகழி என்றார். அகழிக்குப் பெருமை முதலை சுறாமீன் முதலிய வற்றையுடைமையா தலின், அவற்றைப் போல மைந்தன் மருமான் முதலாயினாருடைய தொடர்பென்றற்கு, இவ்வாறு கூறினாரென்றுமாம். “கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைகள், ஆட்டெறா திரிதர வஞ்சிப் பாய்வன, மோட்டிறாப் பனிக்கிடங்கு” (சீவக.95) என்பது காண்க.

  136. பந்து சுற்றத்தினரை- உ. வே.

  137. பெயர், இடம், காலம், குணம் முதலியவற்றைக் கற்பனை யென்பது நியாயநூல் வழக்கு- நியாயப்பிரவேசம் 15.

  138. பரியன்- உ. வே.

  139. இனக் கதிர்க்காலிலே- உ. வே.

  140. கற்பனை; சங்கேத சங்கற்பனையாகிய- உ. வே.

  141. போக்கியம் என்பது வடசொற் சிதைவு; போகியம் யான் எனவே, அதற்கேற்ப “மாயா காரியமான” என்பது வருவிக்கப்பட்டது.

  142. விலங்கி என்பது ஈண்டுப் பெயராய் வேலி என்னும் பொருண்மை குறித்து நின்றது. “ஒடுங்கி மலத்துளதாம்” (சிவ. போ. சூ. 1) என்புழி ஒடுங்கி யென்பது பெயராயினாற் போல.

  143. போகத்துக் குரியதான தேகம்; மாயாகாரிய மான தேகம் -உ. வே.

  144. மமத்துவத்தை- உ. வே.

  145. “கூற்றுக் கொண்டிச் சேனை” (சிலப். 26: 162) என்பர் இளங்கோவடிகள்.

  146. படையாகவும்- உ. வே.

  147. மறத்தையும்- உ. வே.

  உரனென்னுந் தோட்டியுடையார்க்கன்றி யடங்காமையின், தறு கண் வேழம் என்றும், அவற்றின்வழிச் செல்லின் பிறவித் துன்பம் நீங்காதாகலின் வெந்தொழில வேழம் என்றும் கூறினார். “இரு கால் சுமந்த வொருபெருஞ் சேவகத், தைம்புலக் களிறுந் தம்புலத் திழுப்ப, ஊனுடைப் பிறவிக் கானகத் துழலாது”(பண். மும். 2: 40-2) என்று குமரகுருபரர் கூறுதல் காண்க.

  148. தொழிற்கருவி யைந்தனையும் மேற்கொண்டு உயிர்க்கிழவன் கன்மஞ் செய்வது பற்றி, அவற்றைத் தேராக வுருவகம் செய்கின்றார்.

  149. சத்த பரிச ரூப ரச கந்தங்களை- உ. வே.

  150. தகைத்தற் கரிய- உ. வே.

  4.குதிரையைச் செலுத்தி- உ. வே. “உள்ளம்போல வுற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா” என ஆசிரியர் தொல்காப்பியரும் குறித்தல் காண்க.

  5.  பேதமையை அமைச்சனாக உருவகஞ் செய்தலின் பேதை யமைச்சன் என்றார்.

  6.  பிறப்புக்கேதுவாய் வினைகளே மிக்கு நிகழ்தலின் பெருநகர் என்றும், அவற்றின் பயன்க ளாகிய புண்ணிய பாவங்கள் குறைவின்றிக் கிடத்தலின் செழுநகர் என்றும் கூறினார். புண்ணிய பாவமிரண்டனையும் அகநகரும் புறநகருமாகக் கொள்க.

  7.  அலங்கரிக்கப்பட்ட; அகங்கரிக்கப்பட்ட- உ. வே.

  பேதையாதலின் உள்ளதன் உண்மையை யுள்ளவாறு காணாது காணாததனைக் கண்டதுபோலப் பிழைத்தும் திரித்தும் கூறலின், அலங்கரித் துரைக்கப்படாநின்ற என்று உரை கூறினார்.

  8.  நகரிக்குக் கர்த்தாவாகிய- உ. வே.

  9.  நால்வர்க்கத் தோற்றத்து- உ. வே. “உரைசேரு மெண் பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (132:4) என்று திருஞானசம்பந்தர் கூறுவர்.

  10. ஞானமாகிய முடியின்கண் நீக்கமின்றி நின்று பேரொளி திகழும் மணி ஞேயமாகிய இறைவன் திருவடியாதலின், அதனைக்கடவுண் மாமணி என்றார். கடலிற் பெற்ற சிந்தாமணியின் நீக்குதற்குப் பெரியோன் பாதக் கடவுள் மாமணி என் முன்னும் பின்னும் விசேடித்தார். ‘கடல் பெற்ற தோர் மணி சிந்தித்த நல்கும்” (பண். மும்.7) என்று குமரகுருபரர் கூறுமாறு காண்க.

  11. கௌத்துவ மணியை- உ.வே.

  12. முடியாலே அபிடேகம் பண்ணப்பட்ட ஞானவேந்தன் - உ. வே.

  13. பூருவ சுகிர்தமான வேடன்- உ. வே.

  14. முன்னை வினையால் விளையும் போகத்தில் விருப்புற்று மேலும் அவ்வினைகளையேயீட்டிழலுதல் வலையிற் சேர் தலாதலின், அப் போகத்தில் விருப்புவெறுப்பின்றி நலத்தையுடையோரை வலையில் சேரா நல்லோர் என்றார்: யார் என்பது ஈண்டு இவரின் வேறு பிறர் இல்லை யென்பது பட நின்றது.

  15. வலையில் தீரா என்று பாடங்கொண்டு, வலையில் அகப்பட்டு நீங்காத மெல்லியர் யாவருளர் என ஆராயும் நன்மை விளங்கிய சூழ்ச்சியையுடைய மந்திரியாகப் புத்தி யையுடையவன் என்று பெருமண்டூர்ப் பிரதி கூறுகின்றது.

  16. மேதையாகிய புத்தியென்பார் நலங்கிளர் சூழ்ச்சியின் என்றார்.

  17. ஆண்மையுடைய புத்தியை விசாரவானாகிய மந்திரி- உ. வே.

  18. இஃது ஏடணையென்றும் வழங்கும், ஏடணை மூன்றும் உலோக வேடணை, தாரவேடணை, அர்த்த வேடணை என்றும் தமிழில் முறையே மண்ணாசை, பெண்ணாசை பொன்னாசை என்றும் கூறப்படும். சிலர் இம்மூன்றனுள் பெண்ணாசையை நீக்கி, புத்திரரைப் பெய்து உலகவேடணை, புத்திரவேடணை அத்த வேடணை யென்றும் கூறுப. “செறியு மேடணை மூன்றையுஞ் செப்பிடின், அறையு மெப்பொரு ளுமத்த வேடணை, பொறியுஞ் சுற்ற மெலாம் புத்திரேடணை, முறை சங்கற்ப மெலா முலகேடணை” என்று தத்துவ ரத்தினாகர

  முடையார் கூறுவதுகாண்க. ஆயினும் தாயுமானார் முதலிய பெரு மக்களெல்லாம் மண், பெண், பொன் னென்றமூன்றுமே கொண்டனரென வறிக.

  19. இது சில பிரதிகளில் இல்லை.

  20. சித்தாந்த தீபிகையுடையாரும் இவ்வுரைகாரர் கருத்தையே கொண்டு, “அவாவெனு மேடணை யளவி லவ்வினைத், தவாவற விழுங்கியே சன்ன மாய்த்திடும், பலாசனி விரத்தியின் பரம தேசினுக் குவாமதி பருதியு மொப்பின் றாகுமால்” என்று கூறுவர்.

  21. இலாப சேத சுக துக்கம் செய்வதில்லை- உ. வே.

  22. இவ்வுபதேசப் பொருளை அகவல் 35, 36ல் காண்க.

  23. பரிக்கோல்- யானையைக் குத்தும் முள்ளையுடைய கோல் “கழை காண்டலுஞ் சுளியுங் களியானை யன்னான்” (திருக் கோவை. 101) என்று சான்றோரும் கூறுதல் காண்க. கழை- பரிக்கோல்.

  24. ஐராவதத்தின்மேல் ஏறிக்கொண்டு- உ. வே.

  25. உற்பன்னமாகிய உவமனில்லாத (?)காவற்காட்டை- உ.வே.

  26. முன்னே (அடி.11) வினைப்பெருஞ் செழுநக ரென்றா ராதலின், கொடுநக ரென்றதற்கு கொடிய இருவினை யாகிய நகரி என்றார்.

  27. இது வஞ்சித் திணைக்குரிய எரிபரந்தெடுத்தல் என்னும் துறை. (தொல். புறத்.8).

  28. ஆன்மாவிடத் துண்டாகிய-

  29. இது வஞ்சித்திணையிடத்துத் தோற்றோர் தேய்வு. அஞ்ஞான வேந்தற்கு இடம் ஆன்மாவாதலை யறிக.

  30. பைதிரம் - நாடு; “வளனறு பைதிரம்” (பதிற்.19) என்பதனாலறிக.

  31. செங்கோல் எனவே வளையாமை பெறப்படுதலால், வளையாச் செங்கோல் என்றதற்கு அழிவில்லாத செங்கோல் என்று உரை கூறுகின்றார். “வளையாத செங்கோல் வளைந்ததே” (சிலப்.16) என அடிகள் கூறுவது காண்க.

  32. இது முதல் 45ஆம் அகவல் முடிய பெருமண்டூர்ப் பிரதியில் இலக்கணக்குறிப்புச் சிறிது மிகுதியாகக் காட்டப்படுகிறது.

  33. லாரணநா லறையுமற்- பா.வே.

  34. காரணத்தின்றி- பா. வே.

  35. கனலவும்; கனலலும்- பா. வே.

  36. திறையா- பா. வே.

  37. ஞானா21:6.

  38. “தொடுத்த இருவினை” யென இறந்த கால வாய்பாட்டால் எடுத்தோதி, “மூன்றிடத் துறுதல்” என்றமையின், இருவினை முன்னைப் பிறப்பிற் செய்துகொண்டவாறு பெறப்படுதலால், ‘பூருவத்தில் செய்ய வந்து பந்தித்த புண்ணிய பாவம்” என்று உரை கூறினார். மூன்றிடமாவன, கரு, பிறப்பு, இறப்பு என்பன.

  39. இந்த மூன்றையும். “தோற்றும் பொழுதி னீற்றுத், தியாயுறு துயாமும், யானுறு துயரமும், இறக்கும் பொழுதி னிறைப் பெருந் துன்பமும் நீயல தறிகுக ரியாரே” (திரு விடை. மும்.4. 16-9) என்று பட்டினத்தடிகள் கூறுதல் காண்க.

  40. அந்தகாரமாகிய காராக் கிருகத்தில்- உ. வே.

  41. இவ்விதனத்தை, “கருப்பமென்னுமக் காரிருட் சிறையினிற் கதுவும், நெருப்பின் வெந்துள நிலைகெடத் தலைநகர்ந்திடவே, பொருப் பினின்றுவீழ் பவரெனப் போந்தமை நினையா, இருப்பு நெஞ்சினர்க் கென்னையா மியம்புவ தினியே” என மெய்ஞ்ஞான விளக்கமுடையார் கூறுவர்.

  42. யோனிப் புழையாகிய அற்பப்புழையை - உ. வே.

  43. நீங்கிப் பிரசவ வேதனை யுற்று - உ. வே.

  44. பின்பு அதனை விடுமளவில்- உ. வே.

  45. சனனதுன்பத்தை, “ஆலையிற் கரும்புஞ் செக்கி லாட்டிய எள்ளும் போலச் சாலவே நெரிந்து கோதாய்ச் சனிக்குங் கால் அந்தோ துன்பம்” என்று மெய்ஞ்ஞான விளக்க முடையார் கூறுகின்றார்.

  46. மரண விதனத்தின் இயல்பை, “வந்திடு மரணத் துன்ப மறித்துரை செய்யப்போமோ, உந்திமே லையும் பித்து முணர்வொடு பொறி கலங்கி, நந்திடா விருளே மூடி நாவுலந் தலமந் தென்னே, இந்தமா இறப்பிற் றுன்பம் பவத்துன்பத் தெண்மடங்கால்” (பெருங். 435) என்பது மெய்ஞ்ஞானவிளக்கம்.

  47. கருப்ப வேதனை, சனன வேதனை, மரண வேதனை என்ற இந்த மூன்று வகையினும்.

  48. பாரணம்- உண்ணல்; இது பாரணையெனவும் வழங்கும்.

  49. புசிப்புக்கு - உ. வே.

  50. “நன்று பெரிதாகும்” - தொல். சொல். உரி. 45.

  51. அஞ்ஞானவா னாதலாலே - உ. வே.

  52. பிறவுயிர் ஏதுவாக வருங்கால் இன்பக் காலத்திலும் துன்பக் காலத்தும் அவ்வுயிர் பெரிதும் நினைக்கப்படுதல் இயல்பாதலின், அது நோக்கி இவ்வுரைகாரர், “பிறரை” என்ற சொல்லைப் பெய்து, “துக்கமாகிய விதனத்திற்குப் பிறரைக் கன்றிக் கனலவும்” என்று உரை கூறும் நயம் பாராட்டற்குரியது. இவ்வாறு கன்றிக் கனலுவது அறிவிலார் செயலாதலின், நன்றும் பேதையாகலின் என்றார். அறிவுடையோர், துன்பக் காலத்து மறந்து இன்பக் காலத்தே அதற்கேதுவாய வற்றையே நினைந்து பாராட்டுவரென்பது கருத்து, “செல்வக்காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன மன்னே” (புறம்.215) எனக் கோப்பெருஞ்சோழன் நினைந்துரைக்குமது ஈண்டு ஒப்புநோக்கற் குரித்து.

  53. அவரை (?)- உ. வே.

  54. இது சில ஏடுகளில் இல்லை.

  55. இன்றாக என்பது இன்றென நின்றது. “விடய வேலைத் தடையின்று படியினும்” (ஞானா.44:14) என்றாற் போல.

  56. பூருவ சுகிர்தத்தால் வருவதற்குப் பிரியாப்பிரியம் என்னென்ன அஞ்ஞானிகளாயுள்ளாரும் கொள்ளும் உள்ளத்தில் அறிவையொழியாராகி; பிரியம் வருவிக்கப் பட்டது என்பது செப்பறையேட்டில் காணப்படுகிறது.

  57. “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணைபிறி தில்லை”(புறம்.367) என உள்ளி அடங்கும் உணர்ச்சியே ஈண்டு வேண்டப்படுதலின், உள்ளத் துணர்ச்சி விள்ளாராகி என்றார்.

  58. இவ்வாறு காண்பதை இருவினையொப்புக் குறி யென்ப, “மலபரிபாகக் குறி, சத்திநிபாதக் குறி, சிவபுண்ணியக் குறிகளெல்லாம் ஆன்மவறிவின்கண் விளங்குமாறு போல இருவினையொப்புக்குறியும் தன்னறிவின்கண் விளங்குமாறில்லையாயின், அது முத்திக்கேது வாதல் கூடாமையான், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோன தறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்ப நிகழ்தலே ஈண்டு இருவினை யொப்பு என்றதற்குப் பொருளென நுண்ணுணர்வாற் கண்டு கொள்க” என்று சிவஞானபாடியம் கூறுவது கருதத்தக்கது.

  59. உண்மை ஞானத்தை ஈண்டு மாமுது நிதி என்றலின், ”மூலபண்டாரப் பொருள்” என்று உரை கூறுகின்றார் போலும். அஃது எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய் நிலைபேறுடைத்தாதல் பற்றி, மாமுது நிதி எனப் பட்டது. அசேதன ஏதுவாக வந்த இன்பத் துன்பங்களை நுகருங்கால், ஏது மறக்கப் படுவதுபோல, சேதன வேதுவாக வந்த போதும் அது மறக்கப்பட வேண்டும் என்றற்கு இவ்வாறு வகுத்துக் கூறினாரென வுணர்க.

  60. “மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே”

  -திருவா. திருப்பாண்டி.5

  61. இது சில ஏடுகளில் இல்லை.

  62. வரிட்டம்- சிறப்பு.

  63. யுடையதை யுளதே- பா. வே.

  64. யாதே- பா. வே.

  65. உடற்பொறை தணித்த என்று பாடங்கொண்டு தேக பாரத்தை யொழித்த என்று உரை கூறிய பிரதியுமுண்டு.

  66. வாகீசுவரியைச் சுதந்தரமாகவுடைய ஞானவான் களுக்கு- உ. வே. கலைமகளைத் தன்மனைக்கிழத்தியாக வுடைய கிழவன் நான்முகனாதலின், அவனின் நீக்கி, இவர் கலைமகளின் முழுவருளும் பெற்றவரென்பார். பனுவலாட்டி தனிமனைக் கிழவர் என்றதற்கு, “ஒப்பற்ற வீட்டிலே குடியேற்றி வைத்த ஞானவான்கள்” என்றார். அங்ஙனம் வைத்தற் குற்ற கிழமை, ஞானமுடைமை எனவறிக. குமரகுருபரர்; கலைமகளைத் தம் நாவிலே குடியேறுமாறு வேண்டுவார், “வெண்டாமரைக் கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொலோ” (சகல.1) என்பது காண்க.

  67. அவர் யாவரென்னில்- உ. வே.

  68. ஞானவான்களின் உயிர் தங்குதற் கிடமாகிய உடம்பைப் படைத்தலினாலும், உயிர்க்குத் துன்பங்களைத் தருவது உடம்பாதலினாலும், பெற்றோர் பகைவராகக் கருதப்படுகின்றனர். பகைவர் என்றது துன்ப நுகர்ச்சிக்கு ஏதுவாதல்பற்றி.

  69. நீங்குதற்கரிய சிறையென்றது உடம்பினை; எத்துணைத் துன்பம் உறினும் உயிர் அதற்கேதுவாய தன்னையே காதலித்துத் தன்னகத்து வாழ்வதையே காதலிக்கச் செய்யும் அருமையுடைமை பற்றி, உடம்பை அருஞ்சிறை என்றார். “துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்” (குறள் 940) என்று சான்றோர் கூறுதல் காண்க. “இருந்துயர்க் கிடமாம் யாக்கை யீன்றவரின்னாரென்றும், அரிந்தவர் நட்டா ரென்றும் அறிந்தவ ருயர்ந்தோ ரன்றே” (குறுந்.46) என்றார் பிறரும்.

  70. இக்கருத்தையே பிறரும், “அருந்துயர்ச் சிறையிட்டாரில் அச்சிறை விடுவித்தாரைப் பரிந்துயி ரளித்தா ரென்று பகர வேண்டுவது முண்டோ” என்று கூறுவர்.

  71. உடற்சிறை: உடல் ஈண்டுச் சிறையென உருவகம் செய்யப்படுகிறது. இக்கருத்தையே பொய்கையார் கூற்றில் வைத்து, என்னைச் சிறைக்களத் திருத்துநன் நீகொலோ……..யானுன் சிறையலேன் எனைச் சிறைப் படுத்த நீ, தானும் வலையலை தகாதனபிதற்றேல், யானே யென்னை யிச்சிறைப்படுத்தேன், ஏனோரொன்றும் எனைச் செய்தாரலர், செய்யவும் வலரலர் மெய்யிதுவாமே” (மானவிஜ. 16) என்று சூரியநாராயண சாத்திரியார் கூறுதல் காண்க. ஈண்டுக் காணப்படும் இக்கருத்தே, அருந்துயர்ச் சிறையிட்டாரி னச்சிறை விடுவித்தாராப், பரிந்துயி ரளித்தாரென்று பகர வேண்டுவது முண்டோ, இருந்துயர்க் கிடமாம் யாக்கை யீன்றவரின்னா ரென்றும், அரிந்தவர் நட்டாரென்றம் அறிகில ருலக ரந்தோ” என்று (*குறுந்திரட்டு 46) பிறரும் கூறுதல் காண்க.

  72. ஈண்டு, ஆசிரியர் பரிமேலழகர் “வரனென்னும் வைப்பு” (குறள் 24) என்பதற் குரைத்த உரை ஒப்பு நோக்கத் தக்கது.

  73. நித்த வியாபக சித்தாகிய ஓர் ஆன்மாவுக்கு - உ. வே.

  74. ஊழிலை- வினைத் தொகை; ஊழ்த்தல், உதிர்தல், “ஊழுறு கோடல் போல் எல்வளை யுகுபவால்” (கலி.48).

  75. இதனோடு, “கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும இன்மயில் போல்” (கள. 40: 260 என்பதனை ஒப்பு நோக்குக.

  76. புசித்தற் கேதுவாகி வேண்டுவாராக- உ. வே.

  77. அற்றவாறே - உ. வே.

  78. “உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை, பெறினும் இழப்பினும் என்” (குறள் 812) என்பது ஈண்டு நினைத்தற்குரியது.

  79. கூடிற்றன்றி- உ. வே.

  80. இஃது அச்சுப்பிரதியில் இல்லை.

  81. யொராஅ, யொராய்- பா. வே.

  82. இவ்வடி சில ஏடுகளில் இல்லை.

  83. எறிந்த - பா.வே.“இளையோன் துரந்த குணில” என்ற இவ்வடி “ஆங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு தீர்ந்தது போல்” (சிலப்.29 உரை பாட்டுமடை) என்பதை நினைப்பிக்கின்றது.

  84. ஞானா: 34: 1

  85. ஞானா: 35:16.

  86. தாவர சங்கமங்களை முறையே நிலைத்திணையும் இயங்கு திணையுமாகக் கூறுவர். “தாவர சங்கமங்க ளென்றி- ரண்டு” (சிவ. சித்தி. 2:28) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  87. மரு இன்று - மருவுவது இன்று; மருவென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய் மருவும் பொருண் மேல் நின்றது.

  88. இவ்வுரைப்பகுதி ஏடுதோறும் முறை மயங்க எழுதப் பட்டுள்ளது.

  89. கவிகை- ஈதற்குக் கவியுங்கை; ஈண்டுத் “தொகை- யாற்றலால் ஈயப்படும் நன்மை குறித்து நின்றது; “சென்றோர்க்கு ஆனாது ஈயுங் கவிகை வண்மை” (புறம். 54) என்றும், “கலம்பெயக் கவிந்த கழறொடித் தடக்கை” (அகம் 213 ) என்றும் வருதல் காண்க.

  90. நன்மை தீமையும் - உ. வே.

  91. அறிவுக்கு விரிதலும் குவிதலு முண்மை, “மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு” (குறள்.425) என்பதனாலறிக.

  92. விசாலித்து- உ. வே.

  93. நாமுடையது- நாம் உடைய தாயது; “நானுடை மாடெனவே நன்மை தரும் பரனை” (சுந்த. தே. 84:3) என வருதல் காண்க.

  94. தந்தது - உ. வே.

  95. கொடுத்தது - உ. வே.

  96. அறியாதாரும் - உ. வே.

  97. அறிவு கெடுதலாவது, மலராது தன்னிற் குவிந்து எல்லாம் தனக்கே யுரியவாகக் கருதுவது.

  98. ஒருவர்க்கு ஒருவரால் உண்டாகும் சுக துக்கம் அவர் செய்த வினைப்பயனென்று கோடல் அறிவுடைமை அறிவில்லாரே வினையென்று கருதாது, அது தன் பயன் தருதற்கு ஏதுவாய்க் கொண்டாரை நோகின்றனர் என்பதாம்; “பண்டுருத்துச் செய்த பழவினைவந் தெம்மை, இன்றொறுக்கின்ற தென்நினையார்- துன் புறுக்கும், மேவலரை நோவதென்” (பழ.191) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  99. லாபச்சேதம் - உ. வே.

  100. அறியாதாரும்- உ. வே.

  101. முன்பு சொன்ன அறியாதோர்தாம் அறிவில்லார்; முன் சொன்ன அவர் அறிவில்லார் அறிவில்லார்-உ. வே.

  102. ஆமுறையறியாதாரும் செயலறிபறியாதாரும் அறிவில்லார் அறிவில்லார் என்க என்று ஒரு தொடர் பெருமண்டூர்ப் பிரதியில் உள்ளது

  103. குறுந்தடி -புள்ளு. தான் எறியும் குணிலால்நாய் எய்துந் துன்பத்தை அறியாது விளையாட்டாக எறிதலின் தெளியா இளையோன் என்றார்; நாய் தெளிந்து தனக்கு ஊறு செய்தற்கு முதல் குணிலன்று, இளையோன் என்று அறிந்து அவனைவெகுளுகிற தென்றலின், நாய்க் குள்ள தெளிவு தானும் இவ்விளையோற்கில்லை யென்பது குறித்தவாறு.

  104. கறுவு கொள்ளும்- உ. வே.

  105. மனவுணர்வுடைய மக்கட் பிறப்பினராகியும் அதனையின்றி வருந்துதலின், அளியரோ அளியர் என்கின்றார் ஆராய்தற் கேற்ற கருவியாகிய மனவுணர்வு வாய்க்கப் பெற்றிருத்தலின், அது கொண்டு சிறிது நோக்கினும் வினைக்காரணம் விளங்கித் தோன்றும் என்பதற்கு ஒளிகொள் காரணம் என்றார்.

  106. மறைதலைக் கொண்ட காரணமாகிய பூருவ கன்மத்தை - உ. வே.

  107. நினையாராகி அக்கன்ம பலத்திற்கு ஏதுவாயினாரைச் செற்ற குற்றங் கொள்ளுவ தேன்றான் - உ. வே.

  108. ஈண்டுக் கூறப்படுங் கருத்தே மிருகேந்திரத்தில். “யதா க்ஷராதிநா வைத்ய ஸ்துதன்னபி நரோகிணம்” (vii :18) என்று கூறப்படுகிறது.

  109. அறவ ரிவரென- பா. வே.

  110. ஞானா.35: 15-6.

  111. அழகிய பக்குவத்திலே சுரிகையால் அறுக்கப்பட்ட புண்ணைத் துன்பஞ் செய்யும் நெருப்பு-உ. வே.

  112. விழுப்புண் என்றதற் கேற்பப் பெரிய புண்ணென் பவர், அதற்குரிய ஏதுவையும் கூட்டி, வருத்தத்தைச் செய்யும் பெரிய புண்ணை யென்று உரைத்தார். இக் கருத்தே விளங்க, விழுத்தண்டு (பெரும்பாண். 17) என்பதன் உரையிலும் நச்சினார்க்கினியரால் பொருள் கூறப்பட்டுள்ளது.

  113. கத்தியால் அறுத்தலும் சுடுதலும் பண்டைய மருத்துவ முறையில் உண்டு. “வெந்த புண்ணுக்கு ஊனமில்லை” என்ற பழமொழியே இதற்கு ஏற்ற சான்றாகும்.

  114. பரிகாரியை- உ. வே.

  115. “வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால், மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால், மீளாத் துயர்தரினும் விற்றுவக் கோட்டம்மாநீ, ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே” (பெருமாள் 5:4) என்று சான்றோரும் கூறுதல் காண்க. “எவ்வாறு வைத்தியன் நோயுடையானைப் புல் முதலியவற்றின் கார முதலியவற்றை வைத்துத் துன்புறச் செய்யினும், முடிவில் நன்மையாய் முடிகின்றமையால், துன்பத்தைத் தருபவனாக ஆகின்றானில்லையோ, அவ்வாறே ஈசனும் மலநீக்கத்துக்காகச் செய்யும் துன்பானுபவத்தைத் துன்பமாக எண்ணக்கூடாது” என்று சிவாகமங்கள் பலவும் கூறுகின்றன. “மண்ணுளே சில வியாதி மருத்துவன் அருத்தியோடும், திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடும்” (சிவ. சித்தி. 2: 35) என வருதல் காண்க.

  “ஸம்ஸாரவைத்யம் ஸர்வஸ்ஞம ஸர்வபேஷஜம்” என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.

  116. வேல் கொண்டு- உ. வே.

  117. பொதியின் மலையிலுண்டாகிய - உ. வே. இவ்வுரைமலைய சந்து என்று பாடங் கொண்டிருத்தல் குறிக்கத் தக்கதாம்.

  118. இரண்டு திறத்தோரும் புசித்தற் வேண்டும் பிராரத்த கன்மம் தொலைத்தற்கு- உ. வே.

  119. ஈண்டு கூறப்படும் செய்கையை, “செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந் தோடா நிலைமை” என்னும் நடுவுநிலை யென்றும், இது காமவெகுளி மயக்கம் நீங்கினோர்கண்ணே நிகழ்வதென்றும் கூறுவர் பேராசிரியர். (தொல். மெய்ப்.12) இவ்வாறே, “செத்திலென் போழிலென் செஞ்சாந் தணியிலென், மத்தகத்தே யுளி நாட்டி மறிக்கிலென், வித்தக நந்தி விழிவழியல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே” (திருமந்.284) என்றும், “வாய்ச்சி வாயு றுத்தி மாந்தர் மயிர் தொறுஞ் செத்தினாலும், பூச்சுறு சாந்த மேந்திப் புகழ்ந்தடி பணிந்தபோதும், தூக்கியிவ் விரண்டும் நோக்கித் தொல்வினை என்று தேறி, நாச்செறு பராவு கொள்ளார் நமர்பிறரென்றும் உள்ளார்” (சீவக. 28: 25) என்றும் சான்றோர் பலரும் கூறுப.

  120. சாந்தும் வழுத்தும் கொண்டு தலையிற் பாதம் சூடுவோர் செய்கைக் கண் விளையும் இன்பம் மாறெழுந்து உடல் துணி படுப்போர் செய்கைக்கண் விளையாத இன்பத்தை விளைத்துக் கோடலின், விளையா வின்ப விளையினல்லதை என்றார்.

  6.பிரியங் கொண்டாடுவதல்லது- உ. வே.

  7.  விளைவது முத்தியல்லது பிறிதன்மையின் விளைவு என்றார். இவ்விளைவுணர்ந்தோரைத் திருத்தக்க

  தேவர் மேற்கதிக் கேணியாய் விழுத்தவர்” (சீவக.28:26) என்பது காண்க. இக்கருத்தையே, “வீங்கு புண்ணரிந் தழலெழ வெதுப்பவென் வேதனையெல்லாந் தீர்த் தீங்கெனாவிதந் தானெனப் போற்றினா விருவினை தருநன்றுந் தீங்கு மூட்டிய வுடற்பிணி யறுத்தவர் திறத் தினிற் கைம்மாறே, தாங்க ணென்பதற் றுளைவரோ வவர் செயல விளைவினையறிந்தாரே” (குறுந். 42) என்று பிறரும் கூறுதல் காண்க.

  8.  பெருகக்- பா. வே.

  9.  வந்தது- பா. வே.

  10. செயலின்- பா. வே.

  11. வியற்றி- பா. வே.

  12. றகைத்தனற் றுகைத்தெரித் திடிப்பினும்- பா. வே.

  13. இதற்கிடரிலமென- பா.வே.

  14. பெரிதே- பா. வே.

  15. றெவனோ நாடருங்- பா. வே. கடையிரண்டடியும், அன்னோ வீடிதனூங்குமற் றென்னோ, நாடருங் கேள்வி நெடியோர்க்கே என்று பாடங்கொள்ளவும் இடந்தருகின்றன.

  16. விழைவற வுணர்ந்தோர் - பா. வே.

  17. ஊழுக்குமேல் வருவதில்லை என்றறிந்து- பா. வே.

  18. கொள்ளா தொழிதலால்- பா. வே.

  19. “கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில்”(குறள் 1021) என்புழிக் கைதூவற்குக் கையொழிதல் என்றே பரிமேலழகரும் உரைத்தார்.

  20. செய்தற்குரிய தாதலின், முயற்சியைச் செய்தி என்றார் “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந் தாள்வினை யின்மை பழி” (குறள் 918) எனச் சான்றோரும் கூறுதல் காண்க.

  21. நிச்சயம் என்னும் பொருட்டாய இவ்வட சொற்சிதைவு ஊழிற்குப் பரியாயமாய் வழங்கப்பட்டுள்ளது. “ஜாதஸ்ய ஹித்ருவேர ம்ருத்யு” (கீதை.2:27) என்ற விடத்துத் துருவம் நிச்சயம் என்னும் பொருளில் வருவது காண்க. விந்து தத்துவத்தையும் துருவம், துருவையென வடநூல்கள் கூறுகின்றன.

  22. அழுந்தல்: மகனெனல் (குறள் 196) என்புழிப் போல அல்லீற்று எதிர்மறை வியங்கோள்.

  23. ஆசறவுணர்ந்தோர் என்றொழியாது மீட்டும் தீதிலாளர் என்றது, உணர்வின்கண் தீதில்லையாகவே, ஏனை உரையினும் செயலினும் அஃது இலராதல் தோன்றற்கு; ஆகவே, உணர்வு, உரை, செயல் மூன்றினும் தீதில்லோர் நல்லோர் எனப்படற்கு இழுக்கின்மையின் நல்லோர் என்று உரை கூறப்பட்டது.

  24. பளிதம்- பாளிதம் என்றும் வழங்கும்; “அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான், கடல் போலும் கல்வியவன்” (தொல். சொல். 284 சேனா. மேற்)

  25. “உறுப்புப் பல வறுக்கினு முயிர்முதல் திருக்கினும், நிறுத்துப் பலவூசி நெருங்க வூன்றினும், கறுத்துப்பல கடிய காட்டினும் காட்டாது, சிறப்புப் பல செய்யினும் திரிந்து பிறிதுரையாள்” (பெருங், 4: 10: 21-4) என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

  26. பிற சான்றோரும் “தத்தமக்குக் கொண்ட குறியோ தமவல்ல, செத்துக சாந்து படுக்கமனம்- ஒத்துச் சமத்தனாக் நின்றொழுகும் சால்பு தவமே, நுகத்தப் பகலாணி போன்று” (பழ. 95) என்று கூறுதல் காண்க.

  27. பட்டதென எனற்பாலது பட்டென நின்றது.

  28. சிறுமுறுவல் தானும் உவகையோ எள்ளலோ குறியாது வறிதே நிலவுவ தென்பார் தேரின் என்றார். “அகழினு நிகழுஞ் சாந்த மணியினு மடையவைதிட்டிகழினும் புரள வெட்டியிடிப்பினும் பொடிய தாக்கித், திகழினும் செழுந்தண்மாலை தீயொடு மலத்தையே யிட்டிகழினும் பொறுத் தலால் நல்யோகியைப் போலும் ஞரலம்” (பெருங்.173) என்று சான்றோர் கூறுவது காண்க.

  29. உவகையோ கலுழ்ச்சியோ இலர் என ஓகாரத்தை உவகைக்கும் கூட்டி, பிரியமோ அப்பிரியமோ கொள்வது இலர் என்று கூறியவாறு.

  30. இவர் என்பது இனைபானார் (அடி 19: 20) என்புழிக் கூட்டி உரைக்கப்படுகிறது.

  31. ஒரோவழி உவகையும் கலுழ்ச்சியும் இவர்பால் உளவாதலு முண்டு என்பார், “உரையிடை மறந்தனென் யானே” என விதந்தோதினார்.

  32. இவ்விரண்டுமாவன: மான்மதம் முதலியன கொண்டு தை வருதலும், செவி சுடூஉத் தகைய மொழிந்து தகைத்தல் முதலிய துன்பம் செய்தலும் என்ற இரண்டு. ஈண்டு வரும் இன்பதுன்பங்கள் முன்னை வினையின் விளைவேயன்றிப் பிறிதில்லையாதலின், நமக்கு இவற்றாலானதோராக்கமில்லை என்று தேறி, இவ்வாற்றால் வினைப் பொறை கழிவது கண்டு மனக்களிப்புடையராகின்றார் என்றற்கு, இடரிலமென மனக் களியோர் என்றார். “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” (திருவா. குழை.7) என்ற மணிவாசகம் நினைவு கூரத்தக்கது. வினையின் விளைவாகிய சுகதுக்கங் களைக் கழித்தற் கென்றே தேகம் வந்தது என மிருகேந்திரம் முதலிய ஆகமங்கள் கூறுகின்றன.

  33. தமக்கு- உ. வே.

  34. நீங்காத நரகத்தார் கையில் அலமருதற்கு நாம் ஏது வாயினோம் என்னும் இத்தாலே மனசு அழிதலோடே அளவில்லாத் துயர முடையராதலுமாம்- உ. வே.

  35. இத்தால் என்புழி அன்சாரியை தொக்கது. விண்படர்ந் தத்தூடு (சிவ. போ, சூ.2அதி. 3வெண்.1) என வருதல் காண்க.

  36. அச்சான்றோரெய்தும் மனக்கவலைக்கு மேலுமொரு கருத்துண்மை கண்டு கூறுகின்றாராதலின், பெயர்த்தும் ஒன்று அயர்த்தனென் யானே என்றார்.

  37. “எம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால்- உம்மை, எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல்லென்று, பரிவதூஉம் சான்றோர் கடன்” (நாலடி.58) என்றும் “துகளறு ஞானிகள் துதியின் நிந்தையின், இதழ்விலர் மகிழ்விலர் எனல் வினைப்பயன், நுகர்தலின் மகிழுவர் நோவர் மேற்றமை, இகழ்பவ ரருநர கெய்த லெண்ணியே” (குறுந்.45) என்றும் பிறரும் கூறுதல் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

  38. எவ்வளவு செல்லுமென்று மனமழிந்து - உ. வே.

  இற்றை ஞான்று எய்திய நலந்தீங்குகட்கு ஏதுவாய முன்னைவினை இன்னும் எத்துணைக் காலம் இன்னோரன்ன வற்றைப் பயந்து நிற்குமோ என்பதை அறியமாட்டாமை யின் வருத்தமெய்துவர் என அக்கருத்தை இதனால் வெளியிட்டாராயிற்று.

  39. முத்திக்குபாயம் விசாரிப்போர்க்கு - உ. வே.

  40. வீடுபேறு; விடுதலை - உ. வே.

  பசு த்ருக்யோக. ஸித்தா நாம் கர்ம வ்யக்தித் வயம் ஸமம்

  ஜ்யேஷ்டாதி பல யோக் யாளும் வாதி தாராஸர முக்திஷீ

  என்றும் மிருகேந்திரம் கூறுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

  41. அணங்கொடு- பா. வே.

  42. பேரிசை தானே- பா. வே.

  43. பனிப்பப் - பா. வே.

  44. தன்வருகை தெரியாமே போந்து போகூழ்ப் பயனாய்க் கேடு செய்தலின், வஞ்சம் என்றார். மாட்சி யென்புழி மூன்றாவது விகாரத்தால் தொக்காது.

  45. ஞானா. 38: 12.

  46. நல்வினை மாட்சியால்- உ. வே.

  “அஞ்சுதரு தீவினையினாலமுத நஞ்சாம், ‘நஞ்சுமமு தாமுரிய நல்வினையின் மாதோ” (வில்லி. ஆதி. சம்ப 100).

  47. “நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுதமாகும்” - சீவக 2315.

  48. துரியோதனன் உண்பித்த நஞ்சு காளகூடமென்னும் நஞ்சு: நாகலோகத்துப் பாம்புகளின் விடம் சங்கம் நஞ்சு. சங்கநஞ்சு வீமன் உடற்குட் புகுந்து ஆங்கிருந்த காளகூட நஞ்சைக்கெடுத்து விடவே, அவன் ஊறின்றி உயிரோடிருப்பானாயினன் என்று பாரதம் கூறுகிறது.

  49. “ஒல்லை நீர்புக நூக்க வென்வாக்கினால்………….நீலக்குடியான் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனரோ- (திருநா. திருநீலக் குடி3.)

  50. நாகரும் பெறாஅ அமிழ்தென்றது ஆரியகன் என்னும் பாம்பு கூறியாங்கு வாசுகியால் வழங்கப்பட்ட இரசம் ஒரு குடம் ஆயிரம் யானையின் வலியைத் தருவது; வீமன் எட்டுக் குடம் குடித்தான். இவ்வெட்டுக் குடமும் மிக்க ஆற்றல் நிரம்பின வாதலின், வீமன் பதினாறாயிரம் யானைகளின் வலியைப் பெற்றான்.

  51. புசித்ததன்றியே - உ. வே.

  52. இத்தொடர் சில ஏடுகளில் இல்லை.

  53. பெரிய கீர்த்தியை யான் சொன்னேனல்லேன், பாரதந் தானே சொல்லா நிற்கும்- உ. வே.

  54. வியாச பாரதம் ஆதிபருவத்து நூற்றுமுப்பத்தெட்டா வது அத்தியாயத்துள் இச்செய்தி காணப்படுகிறது.

  55. மந்திரத்தையருளிய காலத்தில் துருவாசர், “நீ இந்த மந்திரத்தினால் எந்த எந்தத் தேவதையை ஆவாஹனம் செய்வாயோ அந்த அந்தத் தேவதையின் மஹிமையோடு கூடிய புத்ரன் உனக்குப் பிறப்பான்” என்று சொன்னா ரென்று வியாச பாரதம் (ஆதிபருவம் அத்தி. 120) கூறுகிறது. பின்வந்த வில்லிபுத்தூராரும், “தேவரில் யார் யாரைக் கருதி நீ வரவழைத்தனை யவரவர்கணத்து நினகரஞ் சோவார்” என்றும், “தம்மையொப்பதோர் மகவையுந் தருகுவர், தவப்பயன் எனப்பெற்ற இம்மறைப் பயன் இம்மையி லுனக்கு வந்தெய்தியது” எனக் கூறினானென்பர் (ஆதி. சம்பவ. 29, 30).

  56. மந்திர தியானத்தாலே கன்னியாய் இருக்கையிலேயே ஒரு பிண்டத்தை விழுங்கிக் கன்ன துவாரத்தாலே கன்னனைப் பெற்று: கன்னியாயிருந்தபோதே சூரியன் வரவழைத்துக் கூடிக் கன்னனைப் பெற்று- உ. வே.

  57. நல்ல கங்கையாற்றிலே ஒரு மிதவைப்பேழையில் ஒழுக்க- உ. வே.

  58. இச்செல்லவிட்ட செய்தியை, வில்லிபுத்தூரார், “பூரமா நதிப்பேடகத் திடைநனி பொதிந் தொழுக்கினள் மன்னோ” என்றும், கங்கையாறு கொண்டுசென்ற திறத்தை, “பைம் பொற் பஞ்சரத்திடை வருதிரு மதலையைப் பகீரதியெனு மன்னை, சஞ்சரந்திரைக் கரங்களா லெடுத்தெடுத் தசையவே தாலாட்டி வெஞ்சரச் சிலைச்சூதநாயகன்பதி மேவுவித் தனளன்றே” (ஆதி.சம். 3940) என்பர்.

  59. இத்தைத் திரிதராட்டிரன் தேர்ப்பாகன் கண்டெடுத்து வளர்க்க வளர்த்து துரியோதனனுக்குத் தோழனாய்- உ. வே.

  60. கிருபாசாரியர் கன்னனை இகழ்ந்து கூறியது கேட்டதும துரியோதனன், “இந்த அர்ச்சுனன் ராஜனல்லாதவனோடு யுத்தம் செய்ய விரும்பானாயின, அந்தக் காரணம்பற்றியே நான் இந்தக் கர்னனை அங்க தேசத்தின் ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்கிறேன்” (வியாச. பா. ஆதி அத்தி 146) என்று முடிசூட்டுவதும், யாதுகைம்மாறு செய்வேனென நன்றி கூறிய கர்ணனுக்குத் துரியோதனன் அவனை நோக்கி, அதிக ஸ்நேகத்தை விரும்புகிறேன் என்பதும், அவன் அவ்வாறொழுகியதும் ஈண்டு நினைவு கூரற்பாலன.

  61. இவ்வுரை சில ஏடுகளில் இல்லை.

  62. வையகத்தைக் காக்கும்- உ. வே.

  63. உபகாரியாகிய சிறப்பை வில்லிபுத்தூரார், “வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்குங் கடவுளர்க்கும், இல்லாத வர்க்குமுள்ளவர்க்கும் இரந்தோர் தமக்கும் துறந்தவர்க்கும், சொல்லாத வர்க்கும் சொல்பவர்க்கும் சூழூம் சமயாதிபர்களுக்கும், அல்லாதவர்க்கும் இரவிமகன் அரிய தான மளிக் கின்றான்” (கிருட்.235) என்று கூறுதல் காண்க.

  64. மிகைத்ததை - பா. வே.

  65. சாவா யகன்று தாவினன் கடிதே- பா. வே. பேயா யகன்று பெயர்ந்தனன் பறந்தே- பா. வே.

  66. இந்திரசித்து, யாளி, வரருசி என்ற மூவர் கதை வடமொழிக் கதாசரித் சாகரம் என்னும் கதைக் கடலில் வேறுபட்டுக் காணப்படுகிறது. அவ்வடமொழிக் கதைக் கடற்கு முதனூல் குணாட்டியர் என் போரால் பைசாச மொழியில் எழுதப்பெற்றதென்றும், வடமொழி நூல் மொழிபெயர்ப்பேயன்றி முதனூலன் றென்றும் கூறுவர். ஆகவே ஈண்டு வரும் இக்கதை, வடமொழிக் கதையின் வேறுபடுதலால், இறந்து போன முதனூலைக் கொண்டு ஒப்பு நோக்கினாலன்றி உண்மை நிகழ்ச்சி விளங்காத வகையில் உளது.

  67. பயின்று- பா. வே.

  68. நாடா- பா. வே.

  69. முகைத்தாழ்- பா. வே.

  70. தன்மையன்றி- பா. வே. தன்மையனாகிய வருந்தினன் றள்ளில்- பா. வே.

  71. மாதர்ப் புலைச்சி; மாதப் புலைச்சி- பா. வே.

  72. இவ்விரண்டடிகளும், கூவற் றூண்டு மாதப் புலைச்சி, காதற் காசனியாக மேதினி” என அச்சுப்பிரதியிற் காணப்படுகின்றன.

  73. ளீண்டே- பா. வே.

  74. தவம்புரி தந்தை. தன்றலை- பா. வே.

  75. குறுமுனி- பா. வே.

  76. துதவி- பா. வே.

  77. அமிழ்தத்தையே புசிக்கினும்- உ. வே.

  78. தக்ஷப்பிரஜாபதி, தக்ஷனென்னும் பெயருடையவனும் பிரமாவின் புதல்வனும் ஆகியவன். பிரமாவின் மகனாதல் பற்றிப் பிரஜாபதி எனப்பட்டான். இவன் பிரமாவின் வலக்கைக்கட்டை விரலினின்று பிறந்தானென்று வியாச பாரதம் (ஆதி. அதி.67) கூறுகிறது. இவன் செய்த யாகத்தில் தேவர் முறிந்தோடிய செய்தியை “சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள், ஓடிய வாபாடி யுந்தீபற, உருத்திர நாதனுக் குந்தீபற” (திருவுந்தி.5) என்று திருவாசகம் கூறுகிறது. வானோர் உற்ற பரிபவத்தைப் பின்னர் விரித்துக் கூறுதலின், ஈண்டுத் தொகைவகையில், தொக்கவானோ ருற்றது பெரிதே என்றார்,

  79. இப்பகுதி உரைக்கேற்ப முறை செய்யப்பட்டது.

  80. ஆதித்தர் பன்னிருவருள் பூஷன் என்பான் பல்லிழந்தா னென்று யசுர்வேத தைத்திரிய சங்கிதை கூறுகின்றது. திருவாசகம் “சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை, வாரி நெரித்தவாறுந் தீபற” (15) என்று கூறுகிறது.

  6.வாணி மூக்கும் சந்திரன் முகமும் இழந்து அல்லலுற்றதை, “நாமகள் நாசி சிரம் பிரமன்படச், சோமன் முகநெரித்துந் தீபற, தொல்லை வினைகெட வுந்தீபற” (மேற்படி 13) என்பது காண்க.

  7.  அக்கினி கை யிழந்ததை, “வெய்ய வணங்கி விழுங்கத் திரட்டிய, கையைத் தறித்தானென் றுந்தீபற” (மேற்படி 7) என்பதனா லறிக.

  8.  பெரிதாகிய தலையை அறுப்புண்டிழந்து- பா.வே.

  9.  தக்கன் ஆட்டின் தலைபெற்ற செய்தியை “ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக், கூட்டிய வாபாடி யுந்தீபற” (மேற்படி 11) என்பது காண்க.

  10. பிழைத்தது அரிதுகாண்- உ. வே.

  11. இந்திரன் குயிலாய வகையை, “புரந்தர னாரொரு பூங்குயி லாகி, மரந்தனி லேறினா ருந்தீபற, வானவர் கோனேன்றே யுந்தீபற” (மேற்படி 11) என்பது காண்க.

  12. இனித் திருவாசகம், விட்டுணு பேயுருக் கொண்டதாகக் கூறாமல், “ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று, சாவா திருந்தானென் றுந்தீபற” (மேற்படி 6) என்றே கூறுகிறது.

  13. இம்மூவரையும் வரருசி, வியாடி, இந்திரதத்தர் என்று வடமொழிக் கதாசரித் சாகரம் என்னும் நூல் கூறுகின்றது.

  14. தத்துவ மந்திரப் பொருனை உண்டாக்குவதும் காப்பாற்றுவதும் செய்யும் காரணத்தால் சாத்திரம் தந்திரமெனப்படும்; இத்தகைய சாத்திரம் ஆகமமாதலால் ஆகமங்கள் தந்திரமெனப்படு கின்றன. காமிகாகமம் தந்திராவதாரப் படலம். சு. 29).

  15. கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய ஞானக் கண்ணுடைய ராதலின், வினைப்பயனை முன்பே உணர்ந்து கொண்டனர்.

  16. இச்சொல் சில பிரதிகளில் இல்லை.

  17. முலையாகிய சிறப்பையுடைய வுறுப்பிற்குக் கோங்கரும்பே சீரிய வுவமையாகச் சான்றோர் எடுத்து வழங்குபவாதலின், ஈண்டு முகையினைக் கோங்கின் முறையாகவுரை கூறப்படுகிறது. “கோங்கின் குவி முகிழிளமுலை”(முருகு.34-5) என வருதல் காண்க.

  18. சிவகணங்களுட் சிறந்தோருள் ஒருவராகிய புட்பதந்த ரென்பவரே உமையம்மையின் சாபத்தால் நிலவுலகத்தில் கௌசாம்பிநகரத்தில் வரருசியென்றும் காத்தியாயனர் என்றும் பெயர் தாங்கி நிலவினார் என்று வடமொழிக் கதாசரித் சாகரம் என்னும் நூல் கூறுகின்றது.

  19. தாழ்த்திய - உ. வே.

  20. தன்னொடுபிறந்த தனக்கு இளையாளை - உ. வே.

  21. கலங்கழி மகளிர்- கைம்பெண்டாட்டிகள்; “கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல் மகடூஉ” “கழிகல மகளிர்” (புறம்.261, 280) எனச் சான்றோர் கூறுதல் காண்க.

  22. மணந்தோன் (20) பயந்தோன் (23) என்ற வினை முற்றுக்கள் ஆவோவாகச் செய்யுளில் வந்தவையாகும்; “பாலறி மரபின அம்மூவீற்றும் ஆவோ வாகும் செய்யு ளுள்ளே” தொல். சொல். விளை. 14).

  23. விதேசநாட்டுத் தேவ சுவாமி என்னும் பார்ப்பானுக்கு இந்திர சித்து மகனாவான்; கதாசரித்சாகரத்தில் இவன் இந்திரதத்தன் என்று அழைக்கப்படுகின்றான்.

  24. இந்திரசித்துப் பரகாயப் பிரவேசம் பண்ண வல்லவ னென்பது வரருசி கதையிலும் காணப்படுகிறது.

  25. சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றான்- உ. வே.

  26. அச்சுப்பிரதி, “கபிலருள்ளிட்ட ஏழு பிள்ளைகளையும் பெற்றனள்” என்று கூறுவதோடு, அதனடிக் குறிப்பில், “எழுவர்ப் பயந்தோளென்றதற்குத் திருவள்ளுவர் அதிகமான் கபிலர் ஒளவை உப்பை உருவைவள்ளி என்னும் ஏழு பிள்ளைகளையும் பெற்றனளெனவுரை கூறிய பிரதியு முண்டு” என்று கூறுகிறது. இதனை, ஆதிப்புலைச்சி யென்றும் பிள்ளைகள் ஏழுவரைப் பெற்றன ளென்றும் வருவது கொண்டு இடையிலே யாரோ செருகிவிட்ட பொய்புரையென வறிக.

  27. தேவசுவாமியின் உடன்பிறந்தானான கரம்பகன் என்பானுக்கு யாளியென்பவன் மகனாவான். இவனை வியாடி யென்றே கூறுப.

  28. வடநாட்டுக் கல்வெட்டுக்கள் அனைத்தும், வட பகுதி யிலுள்ள நாடுகளை விஷயம் என்றே குறிக்கின்றன; ஒட்டியர் நாட்டை ஒட்ட விஷயம் என முதல் இராசராசன் மெய்க் கீர்த்தி கூறுவதும் பிறவும் இதற்குச் சான்றாகும்.

  29. திரேதாயுகம் துவாபரயுகம் என்ற இரண்டுக்குமிடையில், பரசுராமர் நிலவேந்தரைக் கொன்று திரிகையில் “தம் முடைய பராக்கிரமத்தினால் க்ஷத்திரியர்களெல்லாரையு மழித்து ஸமந்த பஞ்சக மென்னுமிடத்தில் ஐந்துரக்த மடுக்கள் உண்டாக்கினா” ரென்றும் “ரக்தமே ஜலமாக நிரம்பிய அந்த மடுக்களில் ரத்தத்தினாலேயே பிதிர்களுக்குத் தருப்பணம் செய்தா” ரென்றும், அவர் செய்கையை யுவந்து போந்த பிதிர்களை வணங்கி, நான் கோபத்தினால் மூடப்பட்டு க்ஷத்திரியர்களை யழித்ததாகிய இந்த பாவத்தினின்றும் விடுபடக் கடவேன்; என்னுடைய இந்த மடுக்களும் புண்ணிய தீர்த்தங்களாகப் பெற்றுப்பூமி யிலிருக்கக் கடவன” என்றும் வேண்டிக்கொள்ள அவர் அங்ஙனமே வரந்தந்தன ரென்றும், அதுவே காரணமாக அந்த மடுக்கள் உள்ள தேசமே பின்பு சமந்த பஞ்சகமென வழங்குவதாயிற்

  றென்றும் பாரதம் (ஆதி. அத்தி.2) கூறுகிறது.

  30. அந்தரம் யாது- அந்தரமாகிய தீமை யாதாயிற்று? உலகு முழுதும் நன்கறியப் பரவிற்றன்றோ என்பார் “பிரகாவ மாய்ப் பெரிதான தன்றோ” என்று உரை கூறினார்.

  31. பிரமாதம்-குற்றம். முனிவன் தூங்கிக்கொண்டே ஓமம் செய்வதைப் பார்த்த சன்மேசயன் தன் கையிலிருந்த தருப்பையால் அவனைத் தட்டவும், அவன் தீக்கனாக் கண்டு மருண்டு ஓமகுண்டத்தே வீழ்ந்து இறந்தானென்று பாரதம் கூறுகிறது. குருமுனி என்பது போலாது அவனோர் ஏழைப் பிராமணனென்றே பாரதத்துட் காணப்படுகிறது.

  32. நகுடன் ஆயுவென்னும் வேந்தனுக்குச் சுவர்ப்பானவி என்பாளிடம் பிறந்த மக்கள் அறுவருள் முதல்வன் அறச்செய்கையின் பயனாய்‘இந்திராதிகாரத்தைச் செலுத்தினான்’ என்று பாரதம் கூறுகிறது.

  33. மலைப்பாம்பான வடிவு கொண்டு - உ. வே.

  34. நகுடன் பாம்பாய்க் கெட்டழிந்த கதையைத் திரிகூட ராசப்பக்கவிராயர், “சாகாமம் பிடித்தலைப்பத் தலைகீழாக மகுடம்போய் வானகம் போய் வையகம் போய் அரசும் போய் மலைப் பாம்பாக, நகுடன் போய் வீழ்ந்த கதையறி யாயோ” (குற்றா. மந்த. 37) என்பர். நகுடன், கொள்ளைக் காரர்களின் கூட்டங்களைக் கொன்று ரிஷிகளைக் கப்பங்கொடுக்கச் செய்தான்; அவர்களைப் பசுக்களைப் போல் முதுகில் தன்னைத் தூக்கச்செய் தான்” (வியாசபா. ஆதி. அத்69) என்றே கூறுகிறது.

  35. அற்றால் என்று பாடங்கொண்டு பூருவ புண்ணியமான கரும்பலம், புசித்தற்றால் அதுதானே உடலுக்குப் பகையாம் அறிவுடையோர் விசாரிக்குமிடத்து என்று உரை கூறிய பிரதியுமுண்டு.

  36. இது, மாதவன் என்னும் பிராமணனுக்குத் தேவதத்தன் கொடுத்தபால் நஞ்சாய் இறப்பித்ததும், பிரமதத்தன் என்னும் வேதியனுக்கு விகிதசேனன் கொடுத்த தண்ணீர் உயிரிழத்தற்கேதுவாயினதும் ஆகிய வடமொழி கதாசரித் சாகரத்துட் கண்ட கதைகளையுட் கொண்டிருப்பது தெரிகிறது.

  37. இவ்விலக்கணக் குறிப்பு அச்சுப்பிரதியில் இல்லை.

  38. பயந்த- பா. வே.

  39. துறந்த- பா. வே.

  40. இக்கருத்தோடு, அறிவாலே யறியாமை யழிகையாலே அணற்றுதி செய்வினையாலே வினைபோ மானால், இறவாமமலிவ்வாக்கை முன்பு போல விடரின்ப நுகருவதிங் கென்னை யென்னின், உறவாகக் காரணத்தை மீண்டொன்றாதே காரியமா யொழிவனவு மீண்டுமொன்றிப், பிறவாதே நிற்பனவு முளவியாக்கை பிறந்தபடியே பிரியுமுன்பு கூடா” (குறுந். 376) என்று வருவதனையும் காண்க.

  41. இக்கருத்தே “காரியமாவதன் முன்னு மான போதும் அழிபொழுதும் காரண ரூபமதாம் பித்தி, கூரியவேல் நிற்பதுவுங் குழம்புமானாற் கோமலமாகா சந்தின் குறடு மாகா, சீரிய நெய் தயிர் வெண்ணெய் பாலுமாகா தெளியறிவாற் சிதையுமறி யாமையாகா, காரியமா முடலெடுத்த கருமந் துய்த்துக் கழிதலா லறிவதனாற் கழிந்திடாதே” (குறுந்தி. 377) என்று கூறப்படுதல் காண்க.

  42. ஞானவுபாயத்தாற் கழியாதே அனுபவித் தொழிய வேண்டுமென்று சாதித்தது- பா. வே.

  43. பழவினையின் பயன் புசித்தறுதற்குப் பக்குவப்பட்ட வழியே எஞ்சுதலின்றி நுகரப்படுமாதலின், பழவினை பயின்ற என்றும் இந்நுகர்ச்சிக்கென்று உடல் வந்தமையின் இஃதுண்ணாது கழியா தென்றற்குப் பழுதின் றயின்று என்றும் கூறினார். “ஏன்ற வுடற் கன்மம் அனுபவத்தினால் அறுத்து” சிவ. சித். 8:10 ) என்றும், “ஏன்ற வுடற் பழவினைய தூட்டும்” (சிவப்.88) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  44. இத்தொடர் அச்சுப்பிரதியில் இல்லை.

  45. பழவினைப் பயனை நுகருங்காற் செய்யப்படும் முயற்சியும் செய்கையுமே ஏதுவாக மேலும் வினையீட்டப்படுதலால், அவ்வாறு வினை யுண்டாகாமைக்கு நெறி கூறுதலின், வருவினை தரூஉம் வாயில் எனப்படுகிறது. “மேலைக்கு வித்துமாகி விளைந்தவையுணவுமாகி, ஞாலத்து வருமா போல நாம் செயும் வினைகளெல்லாம் ஏலத்தான் பலமாச் செய்யும் இதமகிதங்கட் கெல்லாம், மூவத்ததாகி யென்றும் வந்திடும் முறைமையோடே” (சிவ. சித். 2:11) என வருவது காண்க.

  46. கயங்கன்மம் - ஆகாமிய வினை.

  47. வரும் மனாதி வாயில்களுக்கு- உ. வே.

  48. அறிவென்னும் செந்தாழ் என்றதற்கேற்ப நிறையென்னும் கபாடமென இயைத்துக் கொள்க; அஃது ஈண்டு எஞ்சி நின்றது. கதவுக்குத் தாழ் இன்றியமையாமை பற்றி, “அறிவென் செந்தாழ்” என்றார்; “காழொன் றுயர்திண் கதவுவலியுடைத்தோ தாழொன்றில தாயிற்றான்” என்று பிறசான்றோரும் கூறுதல் காண்க. மெய்யுணர்வு பெறுதலே சுயங்கன்ம முண்டாகாமைக்கு வாயிலாகும்; மெய்யுணர்வு பெற்றோர் எடுத்த வுடம்பளவாய் பழவினைப் பயனை நுகருங்கால் சுயங்கன்ம முண்டாயின் அது ஞானப்பேற்றால் அழிந்துபோம் என்றற்கு, அறிவென் செந்தாழ் கடாவ விடா துடைவது என்றார்; இவ்வாறே சான்றோரும் “தொல்லையில் வருதல்போலத் தோன்றிரு வினையதுண்டேல், அல்லொளி புரையு ஞானத் தழலுற வழிந்துபோமே” (சிவப்.89) என்றும், “செய்ய திருக்கண்ணருளானோக்கிக் கடியபிறப்பாற் பட்ட புண்ணும் இருவினையும் போயகல” (போற்றி. 74-5) என்றும், “இனிச் செய்கன்மம் மூலமலம் ஞானத்தால் இடிப்பன்” (சிவ.சித். 8-10) என்றும் கூறுவர். இப்பகுதிக்குரைகண்ட நிரம்பவழகியார், “கன்மங்க ளெல்லாம் போக்கியும் சரீரமிருக்கையாலே மீளவும் பிரார்த்தமும் ஆகாமியமும் வாதனையாலே போகாதாகை யால் அது போகைக்கு இவ்விடத்திலே மேற்செய்யப்பட்ட ஆகாமியத்தையும் அதற்கேதுவான ஆணவமலத்தையும் பரமசிவன் ஞானத்தினாலே இல்லை யாக்குவன்” என்று கூறுவது ஒப்பு நோக்குக.

  49. சிவஞானமென்னும் கதவை அழகிய தாழாலே- உ. வே.

  50. வருவினை தரூஉம் வாயிலை நிறையென்னும் கபாடத்தான் மூடிச் சிவஞான மென்னுந் தாழிடுக; இட்டவழி, வினை வருமாறின்றிக் கெடும் என்பதாம்; “சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் மற்றழித்துச், சார்தரா சார்தரு நோய்” (குறள் 359) என்ற தமிழ்மறைப் பொருளை ஈண்டு நினைவு கூர்க.

  51. ஆசற வொழியும்- உ. வே. ஆசு, பற்றுக் கோடு “ஆசா கெந்தையாண்டுளன் கொல்லோ” (புறம் 235:16) என்புழிப்போல.

  52. காட்சி யென்புழி ஆலுருபு விகாரத்தாற் றொக்கது. மெய்யுணர் வெய்திய வழியும் பிராரத்த வினையைப் புசித்தற் வேண்டியிருத்தலால், அஃது அறவே கெடுதற்கு உபாயம் வேண்டுமாறு தோன்ற, துகள்தபு காட்சி செல்லா துறுமதற்கு எல்லையாது எனில் என்றார்.

  53. குற்றமற்ற ஞானத்தால் கெடாதே பக்குவப்பட்டுப் புசிக்கைக் கீடாக தாவர சங்கம யோனிகளிலே செனித் தற்கு நிச்சய முண்டாக்குதலாலே - உ. வே.

  54. இங்ஙனமாக வரும் இவையிற்றை - உ. வே.

  55. உலகிற் பெரும்பான்மையும் செய்தார் செய்தன தம்மால் அழிக்கப்படுமாயிருக்க ஒருவரா லாக்கப்பட்ட பொருள்கள் அவரால் அழிக்கமுடியாதனவாய் எத்துணையோ வர்க்கமுள -உ. வே.

  56. பிரார்த்தவினைப் புசிப்புக்காக உடம்பெடுத்த ஒருவர் அவ்வுடம்பால் அதனைப் புசித்த லின்றியமையாதென்பார், படைப்புப்பூண்ட ஒருவர்க் கென்றார். எனவே, நிலமேனின்ற மரம்போல அவர் வினைமேல் நிற்குமாறு பெற்றாம். “துறப்பார்மன் துப்புரவில்லார் உறற்பால வூட்டா கழியு மெனின்” (குறள் 378) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  57. அவையிற்றில்- அக்கன்மங்களில்.

  58. இவ்வினைகட்கு முதல் அவரேயாக, செய்த அவரே அவற்றை நுகராது கழிதல் கூடுமாதலின், அவற்றை நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்பது எங்ஙனம் எனில் என்பதாம். இதனை முன்னைப்

  பிறவியிற் செய்யப்பட்டு இம்மையிற் பிரார்த்தமாய்ப் பக்குவப்பட்டு வந்த வினைப் பயன் அவரால் கழிக்கப்படாதென்பதைப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் விளக்குகின்றார்.

  59. “நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை” (அகம்.24) என்பதன்கண், “மண்ணை வெண் கோடு மழுமட்டையான கோடு” என்பர் பழையவுரை காரர். இப்பொருண்மை “நுதிமுகமழுகிய” என்பதனாலே விளங்குதலின், இவ்வுரைகாரர் கூறும்பொருள் சிறப்புடைத் தாதலறிக.

  60. துண்டாகியவற்றில்- உ. வே.

  61. நறுநெய் வெண்ணெயாகாதவாறுபோல; வெண் தயிர் ஒண்பால் ஆகாவாறுபோல; நலங்கே ழொண்பொடி புண்ணியக் குழம்பு ஆகாவாறுபோல என இயைத்துக் கொள்க. இந்நூலாசிரியர் ஆகமங்களை நன்கு பயின்ற வராதலின், ஆவிடத்துப் பெறுவனவற்றைத் தீவிய செஞ் சொற்களாற் சிறப்பித்துக் கூறுதல் காண்க; “பாவுங்கலைகளாகமநூற் பரப்பின் தொகுதிப் பான்மையினால், மேவும் பெருமையருமறைகள் மூலமாக விளங்குலகில், யாவுந் தெளிந்த பொருணிலையே யெய்த வுணர்ந்த வுள்ளத்தால், ஆவின் பெருமையுள்ளபடி யறிந்தார் ஆயற்கருள் செய்வார்” (பெரியபு. சண். 18) எனவருவது காண்க.

  62. வெண்ணெயென்புழி வெண்மை நிறப்பண்பேயன்றி, மணமின்மையும் குறித்து நின்றது.

  63. சாணகச் சாறாகாதவாறு போலவும் - உ. வே. வேள்வி முதலிய வைதிக காரியங்கட்குத் தூய்மை செய்யும் பொருளாகத் திகழ்தலின், சாணிக் குழம்பைப் புண்ணியக் குழம்பு என்றார்.

  64. வலிதாகிய அழகு நிறைந்த - உ. வே.

  65. நூல்கள் பலவும் பொதியமலையிற் பிறந்த சந்தனத்தையே சிறப்பித்துக் கூறுதலின், “கலைநவில் மலய சந்து” என்றார்; “தண்கடற் பிறந்த முத்தினாரமும்………..தன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக் குறவர் தந்த முத்தினாரமும், இருபேராரமும் எழில்பெற வணியும், திருவீழ் மார்பிற் றென்னவன்” (அகம்.13) என்றும், “மன்னுயிரறியாத் துன்னரும் பொதியில், சூருடையடுக்கத் தாரம்” (குறுந். 376) என்றும், “தென்மலைப் பிறந்த சந்தனம்” (சிலப். 4-38) என்றும் “தென்வரைப் பொதியி லார மகிலொடு தேய்த்த தேய்வை” (சீவக.2187) என்றும், “அந்தண் பொதியிற் சந்தன மரமும்” (பெருங் 1: 58: 30) பொங்கு மழைதவழும் பொதியின் மீமிசைச், சந்தனச்சோலை (பெருங். 3:2: 184-5) என்றும் தமிழ்நூல் பலவுங் கூறுதல் காண்க.

  66. புசித்தற வேண்டும்- உ. வே.

  67. இக்கருத்தையே, “காரியமாவதன் முன்னுமானபோதும் அழி பொழுதும் காரண ரூபமதாம் பித்தி, கூரியவேனிற் பதுவும் குழம்பு மானாற் கோமல மாகாசந்தின் குறடுமாகா, சீரிய நெய் தயிர் வெண்ணெய் பாலுமாகா தெளியறிவாற் சிதையுமறி யாமையாகா, காரியமா முடலெடுத்த கருமந்துய்த்துக் கழிவதனா லறிவதனாற் கழிந்திடாதே” (குறுந்தி. 377) என்று பிறரும் கூறுதல் காண்க.

  68. பகைவர் கொள்ள முடியாதவாறு பல்வகைப் பொறியும் காப்பு மமையப்பெற்று அருமை மிக்கிருத்தல்பற்றி. ஆரெயில் என்றார்.

  69. வேந்தரது இருப்பிற்கு எயிலும், மேற்சென்று பொருதற்கு வேலும் சிறந்தமையின் இவையிற்றையே ஈண்டு ஆரெயில் முதல வென்றும், வைவேன் முதல வென்றும் எடுத்தோதினார். “ஆற்று பவர்க்கு மரண்பொருள் அஞ்சித்தற், போற்றுபவர்க்கும் பொருள்” என்றும், “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்” (குறள்.741, 546) என்றும் கூறுவதனாலறிக.

  70. ஐயமில்லாத செய்தியைப்போல- உ. வே.

  71. எனவே, மேலே கூறிய வெண்ணெய், ஒண்பால் முதலியன நெய்யாகவும் தயிராகவும் பக்குவப்பட்டவழி மீட்டும் பக்குவப்படாத வெண்ணெயாகவும் பாலாகவும் மாற்ற முடியாதவாறுபோல, புசித்தற்குப் பக்குவப்பட்டுவந்த பிரார்த்த கன்மம் மாற்றமுடியாதென்றதனால், பக்குவப் படாத கன்மம், எயிலும் வேலும் போல மாற்றப்படும் என்பது பெறப்பட்டது.

  72. இப்பவத்திற் சாதிப்பதற்கு முன்பும் அகங்கரித்துக் கொண்டு - உ. வே.

  73. சற்குரு கடாக்ஷமாவது ஞானருருவால் தீக்கை செய்யப்படுதல். தீக்கை கன்மங்களை நாசம் செய்வ

  தென்று சுவாயம்பு ஆகமம் கூறுகிறது. “கிரணாகமத்திலும் யாதொரு பிரார்த்த கன்மத்தால் அநேகம் பிறவிகளில் ஆன்மாக்களால் சம்பாதிக்கப்பட்ட கன்மமும் (சஞ்சிதமும்) வருங்கன்மமும் (ஆகாமியமும்), தீக்கையால் வறுக்கப்பட்ட வித்துப்போல் தடைசெய்யப் பெற்றிருக்கின்றனவோ, அந்தப் பிரார்த்தகன்மம் போகானுபவத்தால் நசிக்கின்ற தெனக் கூறப்பட்டிருத்தல் காண்க” என்பர்.

  அகோர சிவாசாரியார் (இரத், சூ, 165 உரை).

  74. சித்தத்திலே பந்தித்துக் கிடந்த - உ. வே.

  75. தன்னாற் பிறர்க்கும் பிறரால் தனக்கும் செயலில்லாத இதனை அஞ்ஞானத்தாலே செயலுண்டென்று மனத்தால் அகங்கரித்தார்ச் சித்த இத்தனையே யென்று உபதேசத்தாலே யறிந்து விரைந்து கன்மச் சேதம் பண்ணிக்கொள்க - உ. வே.

  76. உள்ளத்தால் ஒன்றனையுள்ளுதலும் வினையாதலினாலும், ஏனை உரைசெயல்கட்கும் அது காரணமாதலாலும், உள்ளத் துள்ளிய என்றும், உள்ளத்துள்ளியதொன்றை வெளியிடுவதனையும் உகுதல் வாய்பட்டாற் கூறுதல் மரபா தலின், உகுதற் கென்றும் கூறினார்; “யாண்டும் உகா அமைவல்லதே யொற்று” (குறள். 585) என்று சான்றோர் வழங்குமாறு காண்க. உபதேசத்தால் பரஞானம் பெற்றுப் பரமே பார்க்கும் இயல்புண்டாதலின் கன்மச்சேதம் நிகழ்வதுபற்றி, “உபதேசத்தாலே விரைய அறிந்து விரத்தி கொண்டு கன்மச் சேதம் பண்ணிக்கொள்க” என்று உரை கூறினார்; ‘உபதேச மந்திரப் பொருளாலே, உனை நான் நினைந்தருட் பெறுவேனோ” (திருப்புகழ் 106) என்று அருணகிரியாரும் “பரஞானத்தாற் பரத்தைத் தரிசித் தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்” (சிவ. சித்தி. 11 ; 2) என்று அருணந்தி சிவனாரும் கூறுதல் காண்க. “பதார்த்தங்கள் பாரார்” என்றது விரத்தி.

  77. அமைத்த கன்மமாய் - உ. வே.

  78. இது அச்சுப்பிரதியில் இல்லை.

  79. அம்மநல்கிய - பா. வே.

  80. செவ்வேடன்ன- பா. வே.

  81. அகம் 11.

  82. ஞானா. அக. 24: 43.

  83. அந்தரங்க வேறுபாடு- பா. வே.

  84. மறையெனப் பொதுப்படக் கூறினாராயினும் அதன் தெளிவாம் சிறப்புடைய சித்தாந்தமாகிய ஆகமமே பொருளாயிற்று; “வேதஸாரமிதம் தந்த்ரம் ஸித்தாந்தம் பரமம் சுபம்” என்று மகுடாகமம் கூறுகிறது. “சித்தாந்த மென்னுஞ் சொல்லானது பங்கஜம் முதலிய சொற்களைப் போல் காரண விடுகுறியாய்ப் பரமசிவனால் அருளப்பட்ட காமிக முதலிய இருபத்தெட்டாகமங்களுக்கும் பிரசித்த மான உரிமையுடையது; (இரத். 10. உரை) என்ப. இனி, வேதவொழுக்கம் உலகியலுக்கும் ஆகமவொழுக்கம் சிவப் பேற்றுக்கும் உரியவாதலின், மறையென்றது ஆகம மென்றும் முறையென்றது வேதமென்றும் கொள்ளினும் அமையும்; “உலகியல்வேதநூ லொழுக்க மென்பதும், இலகுமெய்ந் நெறி சிவநெறிய தென்பதும்” (பெரியபு. ஞானசம். 820) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏனையுபநிடதங்களும் ஆக மங்களும்போல அவை உலகிய லுக்கும் சிவநெறிக்கும் சிறப்புடையவல்லவாய்க் காணப்படுதலின், மறையென்றது ஆகமங்களையே யென்று கோடல் சீரிதாம்.

  85. மறைமுறை யறிந்த ஞானவான்கள் என்றதனால் ஆகமஞானமேயன்றி அனுபவஞானமும் ஒருங்குடைய ரென்பது உபலக்கணம்.

  86. மடவ மாந்தர்பால் நிகழ்வது மயக்கமே யாகலின், மம்ம ரெய்திய எனத் துணிந்து கூறினார்.

  87. சந்தோடத்தைத் தரும் மைதுனம் இந்த நான்கினுக்கும் விருப்பத்தோடு- உ. வே.

  88. கோமளம்- இளமை, ஈண்டு ஆகுபெயராய் அதனையுடைய மனைவிமேல் நின்றது; தளிர் அன்ன மனைவியை என இயையும்; “மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர்” (முருகு 143-4) என்பதனால், மாந்தளிரை யுரைத்தாரென வறிக.

  89. உள்ளப்புணர்ச்சியை நீக்கி மெய்யுறு புணர்ச்சியை யுணர்த்துதற்கு மெய்யுற முயங்கி யென்றார். விடன் என்றற்கு“விடயபரனான புருடன்” என்று உரைகூறும் திறமறிக.

  90. “கொம்மை வெம்முலைக் கோற்றொடிக் கொடிச்சியை” (தணிகைப் புரா.1) என்பதனால் கொம்மை இப்பொருட்டாதலறிக.

  91. அம்முலைப்பாலைத் தந்து - உ. வே.

  92. அன்புடையனானவாறு- உ. வே.

  93. “குணங்கணான்குமுண் டெனினுமுக் குற்றமன் னுளத்தி, லுணர்ந்த ஞானிக ளுள்ளம் வேறாகு மென் றுணர்க. மணந்த மாதினைத் தழீஇ மன மயக்க முற்றவனே, அணைந்த தன்மகட்டழீஇ யீன்ற வன்னை யென்றுணர்ந்தான்” (குறுந்.43) என்று பிறரும் கூறுதல் காண்க.

  94. “நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யவிரி தழ்புரையும், மாசில் அங்கை………. புதல்வனை” (அகம் 16) எனச்சான்றோர் கூறுதல் காண்க.

  95. குழவியின் செங்கையைத் தாமரையின் செந்தோடொப்பதெனச் சிறப்பித்துக் கூறுகிறது, தாயின் கொங்கைக் கருங்கண்ணைத் தைவந்த மாத்திரத்தே அத்தாயின் உள்ளத்தே அன்பைப் பெருக எழுப்பிப் பாலைச் சொரி விக்கும் சிறப்புக் குறித்து.

  96. செங்கை, தைவர, மனம் நெகிழ்பு உருகுதலின், அருவியின் பால் சொரிதலானா என்றியையும், தடையின்றிப் பீறிட்டுக் கொண்டு சொரிதலின், பெருவரை கான்ற சிறு வெள்ளருவியைக் கூறினார்.

  97. அறிவுகெட்டு - உ. வே. குழவியின் செங்கை வருடியவழித் தாயின் மனம் நெகிழ்புருகியதே யன்றி அறிவு பிறழ் வெய்தியதில்லை; ஆடவன் வருடுங்கால் அறிவுமயங்குதலின், அவன் கையினை விதந்தோதாராயினர்.

  98. இருவர் சரீரமும் ஒன்றாய தன்மைபோல - உ. வே.

  99. கையைக் கவர்ந்து - உ. வே.

  100. இப்பகுதி, “ஆனந்த வெள்ளத் தழுந்துமோ ராயிரீருருக் கொண்டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்” (305) என்ற திருக்கோவையாரையும் அதனுரையையும் நினைப்பித்தல் காண்க. பட்டினத்தாரும் இன்பத்திடை அன்பாற் கலத்தலை வற்புறுத்தி, “இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி” (உடற். வண்) என்பர்.

  101. இத்தன்மையை, “பருகுவன்ன காதலொடு திருகி, மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும்” (அகம்305) என்று சான்றோர் கூறுப. அறிவு பிறழ்ந்தமையின், ஓருயிர் மாக்கள் என்பது குறிக்கத்தக்கது.

  102. நாவிற்கு விளக்கம் அறங்கூறுதலே யாதலின், அறங்கரை நா என்றார்; பிறரும் “அறந்திகழ் நாவின் அந்தணன்” (மணி.) என்றல் காண்க.

  103. தருமசாத்திரங்களை அநந்தரம் ஓதிக்கொண்டிருக்கும் நாவையுடைய - உ. வே.

  104. அந்த ஞானிகளின் அறிவு வேறுபட்டுக்காண் இருக்கும் - உ. வே. அப்பியந்தர சுத்தியால்- உ. வே.

  105. இவ்வாறே, “பிறரறிவால், தெரிதந்திட வரிதாம்வகை திரியுந் தெரிவுறுதற், கரிதென்றரு மறையோதிய தறிவாசற வறிவான்” என்று (குறுந்.47) பிறரும் கூறுதல் காண்க. இனி, அருணந்தி சிவனார், இந்த ஞானவான்களின் இயல்பை, “தேசமிடங் காலந்திக் காசனங்களின்றிச் செய்வதொன்று போற் செய்யாச் செயல தனைச் செய்தல், கூசல்படு மனமின்றி யுலாவல் நிற்றல், உறக்கவுண்டி பட்டினியிருத்தல் கிடத்தல், மாசதனில் தூய்மையினில் வறுமை வாழ்வில் வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தில் ஆசையினில் வெறுப்பிலிவை யல்லாது மெல்லாம், அடைந்தாலும் ஞானிகள் தாம் அரனடியை யகலார்” (சிவ. சித். சூ. 8:33) என்பது காண்க.

  106. இவ்வாறே வடமொழி, நூல்களும் “ராகீ கவ்சித் விரக் தோரன்ய: க்ருத்தோரன்ய: சாந்திமான் மர: ப்ராரப்தகர்ம நாநாத்வாத் ததம் லக்ஷ்ம நியாம யேத்” என்று கூறுகின்றன.

  107. இத் தனிச்சீர் அச்சுப்பிரதியில் இல்லை.

  108. காளைக் கயற்றுணி- பா. வே.

  109. யீர்ப்ப- பா. வே.

  110. யடுக்கி- பா. வே.

  111. மணிகெழு திணிதோள்- பா. வே.

  112. னொருவ- பா. வே.

  113. இத் தெள்ளாத் தெள்ளிய வென்பது “தெள்ளிய தெள்ளா” என அச்சுப்பிரதியில் மாறி நிற்கின்றது.

  114. மண்ண - பா. வே.

  115. விழைவி றுகடீர்- பா. வே.

  116. அறிவறி வாராஅச் செறிமல- பா. வே.

  117. அரும்பலர்ந்த.- உ.வே.

  118. ஆய்தல் ஈண்டு மென்மை மேற்று; “ஆயிதழ்த் தண்ணறுங் கழுநீர்” (மதுரை. 550) எனவருதல் காண்க. காமவேட் கையால் வெதும்புங்காற் சிவந்து தோன்றும் கண்கட்குக் கழுநீர் ஏற்ற உவமையாதல்பற்றி, அரும்பவிழ் கழுநீர் ஆயிதழன்ன என்றார். அரும்பவிழ் கழுநீர் எனவேதேன் நிறைந்திருத்தல் பெற்றாம்; ஆகவே, அதுபோன்ற கண்ணுடையாள் உள்ளத்தே காமவேட்கை நிறைந்திருக்கு மாறறிக. இதனை “உள்ளக நறுந்தா துறைப்ப மீதழிந்த, கள்ளுக நடுங்குங் கழுநீர் போல” (சிலப். 5: 235-6) என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரைக்கும் உரையாலு மறிக.

  119. அழகிய - உ. வே.

  120. கருங்கயல் நெடுங்கண் எனக்கிடந்தவாறே கொண்டு, பெரிய கயல் மீனைப் போன்ற நெடிதாகிய கண்ணென வுரைத்த உரைவேறுபாடு முண்டு.

  121. மையுண்டல் கண்ணிற் கியல்பாதலின், கருங்கண் என்றாரென்று மாம்; “கழுநீ ருண்கண் கடையி னோக்கி” (பெருங்.1: 4: 43) என வருதல் காண்க.

  122. கண்ணாகிய அம்பினாலே ஆடவர் நெஞ்சைப் போழ்ந்து வேட்கைப்போர் விளைத்தல்பற்றி, நெடுங்கண் வாளியர் என்றார்.

  123. நச்சம்பையுடைய மாதர்கள் - உ. வே.

  124. அம்புக்கு நுனியில் நஞ்சு தோய்த்தல் மரபு; “நச்செயிற்றம்பு தின்ன நாளிரை யாகலுற்றார்” (சீவக.2303) என்று தேவரும் கூறுவர்.

  125. முழுமணியாகிய முத்தை - உ. வே.

  126. இடமறப் பொடிப்ப - உ. வே.

  127. “பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய. ஏவுண்ட நெஞ்சு” (சீவக. 1965) என்பதனால்,புருவநெரிப்புக் காமக்குறிப்பாதல் பெறப்படும்; காமக்கூட்டத்தை வேண்டி, அதனைப் புருவநெரித்து நோக்கும் பார்வையால் வெளியிடு வது பற்றி, ஒடுங்குநிமிர் புருவம் கொடுஞ்சிலை துரப்பினும் என்றார். தேவரும் “ஏநீரிருபுருவம், ஏறியிடைமுரிந்து நுடங்கப் புல்லி” என்றாராக, “ஏநீர் இருபுருவம், மேல் தன்னைப் புணர்ச்சியிலே ஏவுகின்ற புருவம்” என்று நச்சினார்க்கினியர் உரைப்பது காண்க. (சீவக. 1354 உரை).

  128. காம்பும் புறவிதபம் பிற கோதுகளும் களைந்து ஆய்ந்த இதழ்களே பரப்பிய அமளியாதலின், சுரும்பு துரந்தமைத்த அமளியென் றொழியாது “திருந்து மலரமளி” யென்றார். “சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை” (சிலப்.2:28) யாயினும், ஆண்டு எழும் நறும்புகையால் சுரும்புகள் துரத்தப்படுமென வறிக.

  129. பகைவரைக்கொன்று அவருடலைப் பருந்தும் கழுகும் உண்டு பசிதீர்வித்தல்பற்றி, வேலை பருந்து பசிதணிக்கும் வேல் என்றார்; “பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர் பலரே” (புறம்.179) என்றும், பருந்தளிக்கும் முத்தலைவேல்” (சிதம். செய். 82) என்றும் சான்றோர் கூறுப.

  130. சத்துருக்களின் வலியைக் கொடுக்கிற அதிபலம் - உ. வே.

  131. மைந்துண்ட மைந்த னென்றும், கனற்றக் கன்றிய தின்றெனில் என்றும் முறையே முன்னும் பின்னும் விசேடித்தமையின், சிந்தை யென்பதற்கு, “முன்போகங் கொண்டதனாலே காமவிகாரம் தீர்ந்த மனம்” என்று உரை கூறினார்.

  132. காமாக்கினியாலே கனலக் கன்றுத லில்லையாயின்- உ. வே.

  133. ந+பிராமணன், அப்பிராமணன் என்று வருதல்போல, ந+காமன் என்பது அகாமன் எனவந்தது.

  134. “பலவின் முட்பொதி குடக்கனியொடு” (மீனாட்சி. பி. 6:2) என்றும், பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை” (திருவாரூர் நான் 5:6) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  135. முட்புற முதிர்ந்து பழுத்த பொன்னின் நிறம் போன்ற பலாச் சுளையும் - உ. வே.

  136. மலைவாழை வகைகளில் ஒன்று; தாறொன்றுக்கு இருநூறு முதல் நானூறு பழம் வரை இருக்குமென்றும், இது மிகவும் உயர்ந்த வகையென்றும், கொங்குநாட்டுக் கொல்லிமலை, பச்சைமலை முதலிய மலைகளில் நன்கு விளைவதென்றும் சேலம் ஜில்லா கெஜட்டீர் கூறுகிறது.

  137. இதனைக் கம்பர், “காரும் வார்சுவைக் கதலியின் கனி” (வாலிவ. 57) எனச் சிறப்பித்துள்ளார்.

  138. இதற்பறவையின் ஊனுணவு “வீரிய விருத்தி” பண்ணும் என்று சித்தநூலார் கூறுப.

  139. உட்பீலி- உள்ளீடாகிய தசை. வாளை மீனின் உள்ளீடாகிய தசை பீலிபோறலின், பீலியெனப்பட்டது.

  140. செம்மறிப் புருவை- செம்மறியாடு; “குரூஉமயிர்ப் புருவை யாசையினல்கும்” (ஐங். 238).

  141. செம்மறிப்புருவையின் கொழுந்த மாங்கிசத்திலே மிள குடைத்தாகிய ஆணமும்- உ. வே. “சர்க்கரைக்கட்டிக்கு ஆணமேதுக்கு” என்பது பழமொழி, ஆணம், சுவையுள்ள குழம்பு.

  142. பீலிமுருந்து- மயிலிறகின் அடி; “முருந்து நிரைத்தன்ன பல்லர்” (கலி.103) என்பதற்கு உரைகண்ட நச்சினார்க் கினியர் “முருந்து நிரைத்தாலொத்த பல்லினையுடையர்” என்றது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  143. குன்றிலே உ. வே.

  144. நறியநெய்யானது அருவிபோலச் சொரிய - உ. வே.

  145. அயிர் என்பதற்கு நச்சினார்க்கினியரும் கண்ட சருக்கரை (மதுரை 625) என்றே உரை கூறியிருக்கின்றார்.

  146. இந்த நெய்புறம் போகாது தடுத்தற்கு வெள்ளிய கண்ட சருக்கரை - உ. வே. இந்த நெய்க்குப் பெரிய கரையாகச் சாம்புறாணிக் கண்டசர்க்கரை வளைமுறியைப் போத அடுக்கினவிடத்து- உ. வே.

  147. திருத்திவர- திருப்தியுண்டாக.

  148. பெரும்போருடற்றி வென்றி மிக்குவரும் உடல் வலிபடைத்த ஒருவன், என்றது அத்தகையோன் மிக்கவுணவு கொள்வனென்பது இயல்பாதலின், அது தோன்றவே, மண்டமரட்ட வலிகெழு திணிதோ ளொருவன் என்றார். ஒருவனாகிய புருடனென்றது, துணையின்றியே தானேவென்றி யெய்தும் பெருவிறலென்றற்கு. இது “ஒரு நீயாகித் தோன்ற” (முருகு.) என்றாற்போல்வது.

  149. பூசல்களையெல்லாம் - உ. வே.

  150. சில - உ. வே.

  151. எவனென்னும் வினாச்சொல் என்னென்றாகி இன்மை குறித்து நின்றது; “கற்றதனாலாய பயன் என்கொல்” (குறள் 2) என் புழிப்போல.

  152. இவ்விருதிறவரும் போல - உ. வே.

  153. உள்ளத்திலே தெரிப்பறத் தெரித்துச் சிவபோகத்தைப் புசித்திருக்கிற ஞானவான்கள்- உ. வே.

  154. உள்ளுதலும் நுகர்ச்சியாமாதலின், உள்ளவும் படுவ துளதோ என்றார், “பேதமிலா வோருணர்விற் பெரியவ” (1689) ராகிய நாவரசர் திருமுன், “மாதரவர் மருங்கணைய வந்தெய்தி மதன வசக்காதலர் புரிந்தொழுகுங் கைதவங்கள் செய்திடவும்” அவர் “சித்திநிலை திரியாது செய்பணியின் தலை நின்றார்” (1687) என்று சேக்கிழார் சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளுவது காண்க.

  155. அப்பியந்தர வேறுபாடு - உ. வே.

  156. பேரியாற்று என்புழி ஒப்புப் பொருட்டாய இன்னுருபு தொக்கது.

  157. பெரிய கங்கையாற்றுப் பெருக்கின் திரையையுடைத்தான இனிய நீரென்று மொழிந்து கொண்டு உ.வே.

  158. கடல்கள் ஏழென்றும் அவற்றுள் நூயநீர்க்கடலென்றும் கூறுப; “பரவுமிவ் வுலகி லுப்பால் தயிர் நெய்யே கன்ன, விரதமாமது நீராகும் எழுகடல்” (கந்தபு. அண்ட. 20) என வருதல் காண்க.

  159. தலைமையான நீர்மையையுடைய மண்ணையிட்டு- உ. வே.

  160. மண்- உவர்மண்; பொருள்களைத் தூய்மை செய்தற்குப் பயன்படுவதுபற்றி

  மண்ணாயிற்றெனவறிக.

  161. ஒன்னென்புழி உம்மை விகாரத்தாற் றொக்கது.

  162. கொண்டுபோமளவும் - உ. வே.

  163. சின்னாள் மண்ணியவழி மனத்தே அமைதி தோன்றி விடுமாதலின், அதனை நீக்கற்கு, பண்பட என்றார். மாசற மண்ணினும் எனவே புறவுடலைத் தூய்மை செய்யுமாறு பெறப்படும்.

  164. பதியவிருந்து- உ. வே.

  165. புறமாசிலிருத்து மனமாசினை வேறுபடுத்துக் காட்டுதற் பொருட்டு ஆசு அற நிவந்த உள்ளம் என்றார்.

  166. “புறந் தூய்மை நீரா னமையும்” (குறள்.) என்றமையின், மேருமலையளவிற்றாய மண்கொண்டு தூநீர்க் கடலில் வாழ்நாள்முழுதும் தேய்த்துத் தூய்மை செய்தலை மிகுத்துக் கூறினார். இதனால், வெறும் புறத்தூய்மையால் அகத்தூய்மை எய்தாது என்பது கருத்தாயிற்று.

  167. வானத்தவர்க்கும் தாம் நுகரும் நல்வினைப்போகத்தின் முடிவில் பிறப்புண்டாதலின் பிறப்பினை யில்லையாக்கும் அவாவின்மைக்கண் அவர்கள் விருப்புண்டாதல் பற்றி, வானத்துறைஞரும் விழையும் விழைவில் என்றார். விழைவின்மை யெனற்பாலது ஈறுகெட்டு விழைவில் என நின்றது. “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்”(குறள். 362) என்பது காண்க.

  168. பிறத்தற் கேதுவாகிய மலமாசுகளைப் போக்குதலின், அவாவின் மையை மாமண் ணென்றதனோ டொழியாது துகடீர் மாமண் என்றார்; “தூஉய்மை யென்ப தவா வின்மை” (குறள்.364) என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.

  169. அறிவறி வராஅச் செறிமல வுவர்நீர் என்று பாடங்கொண்டு, “கரணவறிவாலே கண்டறியவாராத திணிந்த மலகன்ம மென்னும் மலமூத்திர மிரண்டன் துர்நாற்றத்தையும்” என்று கூறும் உரை வேறுபாடு முண்டு.

  170. அறிவு அறல்- அறிவு அற்றுப்போதல்; அஃது இல்லையாதல் அறிவாகிய தொழில் நிகழாமைபற்றி, அஞ்ஞானத்தை அறிவறல் என்றார். அதற்குக் காரணம் மலமாதலின், அறிவறல் செறிமலம் என்றார்.

  171. அஞ்ஞானத்தை மலம் என்றமையின். அதன் விளைவாகும் உவர்நீர் என்றார்.

  172. பிறவிக்கேதுவாகிய மலமாசுகளைத் துடைத்துக்கொண்ட வழி ஆன்மா சுத்தியடைந்து திருவருள் ஞான வின்பத்தை நுகர்தற்குச் சமைவது குறித்து மாசற மண்ணல் மன்றல் என்றார். “மன்றல் தரமணந்து வாழ்” (துகளறு. 55) என்றார் சான்றோரும்.

  173. சிறிதுமில்லாத சுத்தான்மாக்களாகிய பெரியோர்கள்.

  174. சுத்த சலசமுத்திரம் அறுபத்துநான்கு நூறாயிரம் யோசனை யளவிற்றென்பதைச் சிவதருமோத்தரம் “எண்ணுக யோசனை யெட்டெட்டிலக்கமென வதற்கப்பால் அண்ணிய புட்கரணிதலத் தகலத்தை யதற்கப்பால், அண்ணிய சுத்தோதகத்தினகலமு முன்னறைந்தபடி திண்ணியமால் வரையுமினி யிவற்றினுக்குத் தெரிப்பாமே” (கோபுர.69) என்று கூறுவது காண்க.

  175. கிரியாபாதம் இந்த ஞானாமிர்தத்தின் ஒருபகுதியென்று சிவஞான பாடியத்தால் அறியலாம். இப்பகுதி இப்போது கிடைத்திலது.

  176. சந்தோக்கியோப நிஷத்-“யதா புஷ்கர பலாச ஆபோ நச்லிஷ்யந்தரவ மேவம் விதி பாபம் தர்ம நச்லிஷ்யதே” என்றும் சிவதருமோத்தரம்;-

  பத்மபத்ரம் யதா தோயை; ஸ்வஸ்தை ரபி ந லிப்யதே சப்தாதி விஷயாம் போபி ஸ்தத்வத் ஜ்ஞானம் நலிப்யதே” என்றும் இக்கருத்தையே எடுத்தோதுவது காண்க.

  177. யாணுற வீக்குநர்- பா. வே.

  178. பெரும்பாலும் எண்ணெய், நீர் முதலியவற்றோடு உறைத்துக் கொடுக்கப்படுவதுபற்றி, மருந்துக்கு உறை என்பது பெயராயிற்று.

  179. கட்செவியென்பதற்குக் கண்ணையே செவியாகவுடைய பாம்பு எனக்கூறப்பட்டுவரும் உரைக்கு வேறாக இவ்வுரை காரர் கூறும் பொருள் இக்கால உயிர் நூலாராய்ச்சி யாளர் கூறும் பொருட்கு ஒத்திருத்தல் காண்க.

  180. கறை- ஈண்டுக் கருமை நிறத்தின்மேல் நின்றது; “கறையணற் குறும்பூழ்” (பெரும்.205) என்புழிப் போல.

  181. பல்லின் மேற்பகுதியிலுள்ள பையில் ஊறி நிற்கும் நஞ்சு பல் புதைந்த விடத்துச் சென்று சேர்தற் கேற்ப உள்ளே புழையுடைமைபற்றி, பாம்பின் எயிற்றைக் கடுவொடுங் கெயிறு என்றார்; “கடுவா டொடுங்கிய தூம்புடை வாலெயிறு” (முருகு.48) என வருதல் காண்க.

  182. விடந் தங்கி யிராநின்ற- உ. வே.

  183. தீண்டினாலும் - உ. வே. வடுவுறக் கடித்தாலும்- உ. வே.

  184. கிழித்தவழி யெய்தும் காரியத்தை விளைவியாமையின், காரணவினை செய்யாமையா யொழிதல் பற்றி, கிழியாப் பண்பிற்று என்றார்.

  185. ஈண்டுக் கூறப்படும் இக்கருத்தே, “அங்கித் தம்பனை வல்லார்க்கனல் சுடாதாகும். ஒளடத மந்திர முடையார்க் கருவிடங்கள் ஏறா, எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக், கிருவினைகள் சென்றணையா” (சிவ.சித். 10:6) என்று கூறப்படுதல் காண்க.

  186. அழகையும் - உ. வே.

  187. உயரிய வென்பது செய்யியவென்னும் வினையெச்சமாய் விடுபு என்னும் வினை கொண்டது; பெயரெச்சமன்று.

  188. தாமரைத் தண்டு உள்ளே புழையுடைத்தாதலின், அதனைப் பிறவுயிர்கள் எளிதிற்பற்றி யூறு செய்யாவண்ணம் முட்கள் பொருந்தியிருத்தலின், முட்டாட்டாமரை யென்பது வழக்காயிற்று. மிக்க நீரைத்தாங்குதற் கேற்ற கொழுமையும் அகலமும் உடைத்தாயினும் அந்நீர் சிறிதும் ஒட்டா தாயிற் றெனத் தாம் கருதியதனை வற்புறுத்தற்கு, கொழுமடலகலிலை யென விதந்தோதினார்; “விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி” (குறள் 13) என்றாற்போல.

  189. முள்ளானது தாளிலே யுண்டான - உ.வே.

  190. கொழுவிதா யகன்ற - உ. வே.

  191. தொத்துதல்- ஓட்டுதல். “பாசடை நீரிற் பற்றுறா ததுபோற் பற்றிலார் பரமயோகிகளும்” (குறுந்.52) என்று பிறரும் கூறுதல் காண்க.

  192. தொத்தாத; தொங்காத- உ. வே. தொத்தாத வலிவு போலவும் - உ. வே.

  193. காரி- நஞ்சு; “பேரீசை நவிர மேஎ யுறையும். காரியுண்டிக் கடவுள தியற்கையும்” (மலைபடு. 82-3) எனவருதல் காண்க. கை தொடல் - உண்ணுதல். (ஞானா 42:3 உரை) ஈண்டும் இக்காரியை மைந்தின் வெந்திறற்காரி யென மிகுத்தோதியது மந்திர முதலியவற்றின் சத்தியால் இம்மைந்தும் திறலும் பயன்படா தொழிதலை வற்புறுத்தற்கு.

  194. பருகினாலும் - உ. வே.

  195. மிக்க நீரையுடைத்தாகிய சமுத்திரத்திலே- உ. வே.

  196. உப்பிட்ட வுணவு சுவை மிகுதலின், அச்சுவையை மிகுதிப் படுத்தினது பற்றித் தீஞ்சுவையுப்பு என்றார்; புலவியாற் காமவின்பஞ் சிறப்பது குறித்து அதனை உப்போடுவமித்து, ஆசிரியர், “உப்பமைந்தற் றாற்புலவி” (குறள். 302) என்பது காண்க. அளவாய்க் கலந்தவழித் தான் கலந்து நின்ற பொருளின் சுவையை மிகுவித்தலும், மிக்கவழித தன்சுவையைத் தோற்றுவித்தலும் உப்புக்கியல்பு.

  197. ரசத்தையுடைய- உ. வே.

  198. “வருதார் தாங்கிய கிளர்தா ரகலத், தெறிவே லிளைஞர் போலப் பொறிவாழ் புலப்பகை தாங்கிய பிறப்பற எறியும், அறப்பேர் வாழ்க்கை” (ஞானா.5: 7-10) யுடையோர் ஞானவான்களென் ஞானியரை வீரராகக் கூறிளமையின் ஈண்டும், “ஞான மாக்கழல் மாணுற வீக்குநர்” என்றார். ஞானியரை வீரராகக் கூறுவது, “ஈரவான்பினர் யாதுங் குறைவிலார். வீர மென்னால் விளம்புந் தகையதோ” (பெரியபு. திருக்கூட்.9) என்பது காண்க. யானையது மறம் அதன் மதவொழுக்காலும், வீரரது மறம் கழல் யாப்பாலும் விளங்கும்; யானைமுகக் கடவுளைக் கூறுமிடத்து ஞானமறந் தோன்ற, “ஞானமா மதம் தருக்கி” (ஞான.2:4) என்றாற்போல, ஈண்டு, “ஞானமாக்கழல் வீக்குநர்” என்றார்.

  199. வளப்பமுண்டாக - உ. வே.

  200. விடயவேலைத் தடையின்று படிதலை, “ஓசை கேட்டிட வச்செவியறு சுவையு முண்ண நாவுடலுற்றதையறிய, வாசமூக்குயிர்ப்பருவு கண்காணமற்று மெக்கருமமுஞ் செய்ய, ஆசுடைப் புலன் களனுபவித்திடினு மப்பின் மூழ்கிடினு மம்புயத்தின, பாசடை நீரிற் பற்றுறா ததுபோற் பற்றிலார் பரமயோகிகளே” (குறுந்.52) என்று பிறரும் கூறுதல் காண்க.

  201. தடுக்கவொண்ணாத- உ. வே.

  202. நித்தியோபாதையை - உ. வே.

  203. திறனவும்- பா. வே.

  204. சுடரிற் சுடர்ப- பா. வே.

  205. தழீஇய - பா. வே. கொளீஇய நெறியினோரே என்பது செப்பறைப் பிரதியிற் காணும் பாட வேறுபாடு.

  206. தகித்து ஒளிறுவர்- பா. வே.

  207. பூக்கமழ் பாணி யென்றதனால் தீநாற்றம் கமழும் நோக்கரும் நாரம் என்று இயைத்துக்கொள்க; “ஒன்று நின்றே ஏனையது முடிக்கு”மென்பவாகலின் (தொல். சொல். சேனா. சூ. 18).

  208. ஊத்தைப் பள்ளத்தினீரும்- உ.வே.

  209. இக்கருத்து,

  “ஸரர்யோ யதா ஸர்வலோ தஸ்ய சக்ஷீ; ந லிப்யதே சதக்ஷீ நலிப்யதே சாக்ஷீஷைர்யா ஹய தோஷை”ஏகஸ்ததா சர்வனூபதாந்தராத்மா நலிப்யதே லோகது: கேந பாஹ்ய:” (வல்லி 5. சுலோ11) என வரும் கதோப நிடத்திலும் காணப்படுகிறது.

  210. அகில் கருநிறத்ததென்பது, “புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது” என்பதனாலு மறியப்படும், வயிர மேரிய சந்தனக்கட்டையும் கருத்திருக்கும்.

  211. இது சில ஏடுகளில் இல்லை.

  212. காட்சிக் கினிமையும் ஊற்றுக்கின்னாமையு முடைத்தாதலின், காஞ்சொறி முதலியவற்றை, “காண்டகு தீண்டத் தகா அத்திறத்த” என்றார்.

  213. புகைக்கொடி யெடுத்தெனவரும் குறிப்புருவகம் பகையரசர் கொடியுந் தானையுங் கொண்டு பகைப்புலத்தை வளைத்து எரியூட்டலைக் குறித்து நிற்பது காண்க.

  214. அக்கினியுவமம் தொழிற்கருவியாலும் ஞானவான்கள் குற்றப்படா ரென்பதை வற்புறுத்துகிறது.

  215. ஞானவொளியொடு பொருந்திய கன்மச்சேதம் பண்ணின- உ. வே. அறிவனர்க் கொளீஇய நெறியினோர் எனற பாடத்துக்கு ஞானவான்களாலே கன்ம க்ஷயம் பண்ணின முறைமைமையுடையோர் என்றும், அறிவனற்கு அழீஇய நெறியினோர் என்ற பாடத்துக்கு ஞானவனலாலே அஞ்ஞான விருட்

  குறும்பைக் கெடுப்பதாகிய கன்மச்சேத உபாய முடையோர் என்றும் கூறிய உரை வேறுபாடு உண்டு.

  216. ஞானத்தை நெருப்பாக வுரைத்தல் அறிவு நூல் வழக்கு: “யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யானென்னும், இக்கோணை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்து” (சிவ. சித்தி. 10: 2) என வருதல் காண்க.

  217. “விடயவேலைத் தடையின்று படியினும் தீதொடு படியுநரல்லர்” (ஞானா.44: 14.5) என்றாராதலின் தீதொடு படாது அவர் விளங்குந்திறம் இன்னதென்றற்கு, ஈண்டுச் “சுடர்ப” என்று ஞாயிறு, நெருப்பு என்ற இரண்டின்கண் வைத்து உவமித்து விளக்குகின்றார்.

  218. இக்குறிப்பு அச்சுப் பிரதியில் இல்லை. இவ்வகவல் முதற் கொண்டு ஆறு அகவல்களின் உரையில் இலக்கணக் குறிப்புச் செப்றைப்பிரதியொன்றில் தவிர ஏனையவற்றில் காணப்படவில்லை.

  219. பிறந்தை- பிறப்பு. “இரந்து குறையுறினும் பிறந்தை யெந்திறம், மறந்தும் நோக்காது” (ஞானா. 53; 21-2) எனப்பிறாண்டும் வருதல் காண்க.

  220. திவாகரற் றொழிலு முண்டவனே தவாது- பா. வே.

  221. செல் காலை- பா. வே.

  222. சங்கற்பத்துக்கு எல்லையின்மையின், அதனைக் “கரை காண் கல்லா அளக்கர்” என்றார்; “சங்கற்ப சாகரம்” என்றாற் போல.

  223. செய்தியும்- உ. வே.

  224. வேறுபாடு சொல்ல - உ. வே. நொடித்தல்- சொல்லுதல்; “நொய்தின் மனை யெய்தி இது செய்கென நொடித்தான்” (சீவக.589) என வருதல் காண்க.

  225. பிறப்பு என்பதன் திரிபாகிய பிறந்தை யென்பது ஈண்டு அதற்குக் காரணத்தின்மேல் நின்றது. புறம், புறந்தை யெனத் திரிந்தது போல, பிறப்பு பிறந்தையென வந்தது; “புன்னையங் கானற் புறந்தை முன்னுறை” (அகம். 100) என வருதல் காண்க.

  226. ஈடணாத்திரயம்- மூவகை யீடணைகள்; அவை மண்ணாசை, பொன்னாசை. பெண்ணாசை யென்பன.

  227. மாட்சிமைப் பட்டோரது வலிமையாகிய செய்தியானது - உ. வே.

  228. ஏறிட்டுக் கொண்ட- உ. வே.

  229. பார்ப்பனவாகையாவது, “கேள்வியாற் சிறப்பெய்தியானை வேள்வி யான் விறன்மிகுத் தன்று”

  (பு. வெ. மா. 8: 9) என்ப; “ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள், வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்- ஏதம்,சுடுசுடா தானாகிச் சொல்லவே வீழ்ந்த, விடுசுடர் கேள்வி யகத்து” எனவரும் உதாரண வெண்பா இதனை விளக்கி நிற்கிறது.

  230. சதுரமும் முக்கோணமும் அரை வட்டமுமாக அமைந்த குண்டங்களில் தீயோம்புவதுபற்றித் “தொழில் வேறு பாடான அக்கினி மூன்று” என்றார். இம்மூன்றும் ஆகவனீயம், காருக பத்தியம் தென்றிசையங்கி யெனப்படும்; “அந்தியந்தண ரருங்கடனிறுக்கும் முத்தீ” (புறம்.2) என்றும், உருகெழுமரபிற் கடவுட் பேணியர், கொண்ட தீயின் சுடரெழு தோறும், விரும்பு மெய் பரந்த பெரும் பெயராவுதி” (பதிற். 21) என்றும் வருதல் காண்க.

  231. விபதேசத்தையுமுடைய - உ. வே.

  232. பலத்தைப் புசிப்பானாக விருந்த அழகு - உ. வே.

  233. “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தன்” என மணிவாசகர் கூறுவது

  (திருவாச. அச்சோ.1.) ஈண்டு நினைவு கூரத்தக்கது.

  234. அகங்கரித்துக் கொள்ளாமையாலே அதிற்பலம் யாவருக்கும் சித்தியாமை யாவருமறிய- உ. வே. அதிற் பலம் அவர்களுக்குச் சித்தியாவது யாவருமறிய ஒளியுடைத்தாக வோங்கிப் பெருமைய தாயிருப்பதை யொக்கும்- உ. வே.

  235. பிறர்பொருட்டுச் செய்யப்பெறும் வேள்விக்கண், வேள்வி யாசான் முதலியோர் வேள்விப் பயனைத் தாம் விரும்பாது வேட்பிப்போர்க்கு எய்துமாறு விரும்புவது போல இந்த ஞானவான்கள் செய்கையும் “நிஷ்காமிய” மாயிருக்கு மென்பதாம். எனவே, விடயத்திற் படிந்த வழியும் கருவி கள் அவற்றிற் படிவதேயன்றி, அவர் மனம் அவ்விட யத்திற் றோய்வதிலர், “ஏதுந் திருவருளினிச்சையா மென்றென்றெப், போதும் பொருந்தும் புனிதர்பால்- தீதுநெறி, செல்லுமோ செல்லாதே” (உடல் பொய். 14) என்று தாயுமானார் கூறுமாறு காண்க.

  236. இவ்வுலகிற் செல்வமுடையோர் சிலர்; இல்லாதவர் பலர்; “இலர் பலராகிய காரணம்” (குறள். 270) என்பது காண்க. இரவிற் செல்வர், கள்வர் முதலாயினாரா லுண்டாகும் அச்சமும் உழைப்பின்மையால் உறக்க மின்மையுங் காரணமாகப் பகற்போதுவர உவப்புக் கொள்வராதலின், ‘உவந்திசினோர் பலர்” என்றார். பலரென்றாராயினும் துனிகூர்ந்திசினோர் அவரினும் பலரென்றமையின் சிலராதல் பெற்றாம்.

  237. துனிகூரும் பலர்-இல்லாதவர்; உழைப்பு மிகுதியும் வறுமைத் துயரும் துன்பம் செய்தலின், பகற்போதினை வெறுப்பவர் பலராதல் பெறப்படுதலால் “துனிகூர்ந்தி சினோர் மிகப்பல” ரென்றும், அவரோடு கள்வரும் களவிலொழுகும் காதலிளையரும் சேர்தலின் நனிமிகப் பலர் என்றும் கூறினார்.

  238. இக்கருத்தையே பிறரும், “நிவந்த வெங்கதிர்க் குளைவுறச் சிலர் நெஞ்சு மகிழத் திவந்த னூடுமாம் இன்ன அவை சிந்தியான்” (குறுந்தி. 44.) என்பது காண்க.

  239. ஊழ்முறையது என்றும் நினையாதே- உ. வே.

  240. நினைத்தவழி இருவர்பாலும் விருப்போ வெறுப்போ நிகழு மாதலின் வாய்மை குன்றா ஞாயிற்றுக்கு அவையிரண்டும் இலவென்றற்கு உன்னாதேகும் என்றார்.

  241. சாத்திரங்களை யுணரும் ஞானவான்கள்- உ. வே.

  242. கரும்பின் சிலைபொழிகணை யென்ற குறிப்பால், மழைமுகில் சிலை குலவி மழைத்தாரைகளைப் பொழிவது போலக் காமன் தன் சிலை குணித்து மலர்க்கணைகளைப் பொழிவது பொருளாகக் கொள்க.

  243. “நிலைதொலை வெய்தினும்” என்றதனால் தொலையாமை துணி பென்க.

  244. பாவம் என்னும் வடசொல்லடியாகப் பிறந்த பாவிய ரென்பது பாவத்தையுடையரென்னும் பொருடந்து நின்றது. அருமை, சலியாமை மேற்று, “எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும், முத்தர் மனமிருக் கும் மோனத்தே” என்றும், “நெடுந்தகை நீயென்னையாட் கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு, விடுந்தகையேனை விடுதி கண்டாய்” (திருவாச. நீத்தல். 12) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  245. வன்னெற் றொலிப்ப- பா. வே.

  246. தழங்குரன் முரசம்- பா.வே.

  247. நெடிது நினைந்திருந்தனர் மாதோ- பா. வே

  248. ஞானசித்தரது ஞானபாவக வரிட்டஞ் சொல்லியது என்று செப்பறை ஏட்டுப்பிரதி கூறுகின்றது.

  249. வாகையின் வெண்ணெற்றுப்பறைபோல ஒலிக்கு மென்பதை, “ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி, வாகை வெண்ணெற் றொலிக்கும்” (குறுந். 7) என்பதனாலுமறிக. “வாகை விரிந்த வெண்ணெற்றொலிப்ப மயங்கிருள்கூர் நடுநாளையாங்கே, கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித்தாட” (திருவாலங். மூத்த. 3) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

  250. பல்லியம்- தண்ணுமை முதலிய பலவாகிய வாத்தியங்கள்.

  251. “தழங்கு குரல் முரசம் காலையியம்ப” (ஐம். 448) என்று சான்றோர் வழங்குப. இது “தழங்குரல் முரசம்” என வழங்குவது முண்மையின், தழங்குரன் முரசமென்ற பாடமும் பொருந்துவதாம்.

  252. “வெவ்வாயோரி முழவாக விளிந்தாரீமம் விளக்காக, ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல்போனுடங்கிப் பேயாட, எவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட” (சீவக. 309) என்றார் பிறரும்.

  253. பேய்கள் இருக்கும் கூத்தாட்டவைக்கு வேகிற பிணத்தின் தீவட்டியாயிற்றென்க.

  254. இவ்வாறு பேய்கள் ஆடுங்கூத்தைக் காண்போர் அஞ்சி இறந்து படுவரென்பது தோன்ற, மணிமேகலை, “கருந்தலை வாங்கிக் கையகத்தேந்தி, இரும்பேருவகையில் எழுந்தோர் பேய்மகள், கண்தொட்டு உண்டு கவையடி பெயர்த்துத், தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக் கண்டனன்……….வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத்தேனெனத், தம்மனை தன்முன் தன்மெய் வைத்தலும்” (6:120-31) என்று கூறுகிறது.

  255. உலகிற் வாழ்வோரெல்லாரும் முடிவில் அடையும் இடம் சுடுகாடாதலின், அதனைப் “பதி” யென்றார். ஒருவன் என்பது “உயிர்நீத் தொருமகன் கிடந்தான்” என்பதுபோல நிற்கிறது.

  256. இதனாற் பிணத்தைச் சுமக்கிற ஒருவற்கும் அப்பிணத்துக்கு முள்ள தொடர்பே தம்முடம்புக்கும் உயிர்க்குமுள்ள தொடர்பாகக் கருதி ஞானவான்கள், அதனை விரையக் கழித்தலையே கருதியிருப்ப ரென்பது பெற்றாம். “மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப் பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை” (குறள். 345) என்று சான்றோர் கூறுவது காண்க.

  257. மனவாசகங்கட் கதீதமாய்க் கடந்துள்ளதான - உ. வே.

  258. பரமானந்தப் பெருவெள்ளமாகிய முத்தியைக் கிட்டும் நாள் உ. வே.

  259. இம் முத்தியையே அருணந்தி சிவனார், “மனத்தினான் வாக்கால் மற்றும், குறைவிலா வள்வினானுங் கூறாணாதாகி நின்ற, இறைவனார் கமலபாதம்” (சிவ. சித்தி. சுபக். பாயிரம்.6) என்றார். அறத்தைப் “புரைதீர்ந்த நன்மை” (குறள். 292) என்று சான்றோர் கூறினாராகலின் அந்த அறத்தின் மேல்விளைவாகிய பேரின்ப வீட்டை “இணையில் இன்பத்து நன்று” என்றார்.

  260. நன்றாக - உ. வே.

  261. உடம்பின் தொடர்பாகிய குற்றத்தை “வடு” வென்றார் புண் ஆறினும் வடு நீங்காதவாறு போல, உடம்பாலெய் தும் இன்பத் துன்பங்கள் நுகரப்பட்டுக் கழியினும், உயிர்க்கதன் பாலுள்ள காதல் பெரிதாதலின் நீங்காமை பற்றி, அதனின் நீங்கி “இணையிலின்பத்து நன்று” எய்துத லாகிய சிறப்பினை நல்குதலின், “ஞானத்தை”ச் சிறப் பென்றார். “சிறப்பென்பது வீடு பேற்றுக்குமுரித் தென்பது”

  சிறப்பினுஞ் செல்வமு மீனும் (குறள் 31) என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையாற் றெளியப்படும்.

  262. குற்றமற்ற ஞானக்காட்சியால் விளக்கமுற்றோர்- உ. வே.

  263. அரிதுதுற் - பா. வே.

  264. அயின்றதற்கருமை சாலத் - பா. வே. குரிமை சான்ற - பா. வே.

  265. திரியாவுள்ளத் - பா. வே.

  266. அளியவு முடைய தொன்றுளதே விளியாது - பா. வே.

  267. “சிவஞானிகளிடத்திலே கன்மங்கள் வந்து தாக்கினாலும், அதனால் வருந்தார்கள்” என்பதற்கு மதுரைச் சிவப்பிர காசர். “மண்வினை மாக்கள்…………உடையரோமற்றே” என்பதை யெடுத்துக் காட்டுவர் (சிவப். 90 உரை.)

  268. தீர்த்தம்- பா. வே.

  269. நஞ்சில்வழிப் பாம்பின் சினம் வெஞ்சினமாதலின்மையின் “நஞ்சு வீற்றிருந்த வெஞ்சினைப் பகுவாய்” என்றது “வெஞ்சின நஞ்சு வீற்றிருந்த பகுவாய்” என மாறப்பட்டது.

  270. “நிற்க” என்பது, “அளவறிந்தார் நெஞ்சத் தறம் போல நிற்கும்” (குறள் 288) என்புழிப் போல நிலைபெற நிற்றலைக் குறித்து நிற்கின்றது.

  271. வடிவையுடைய - உ. வே.

  272. புறச்சுத்திபண்ணுதற்குப் பாம்பு தோலுரிக்கும் செய்தியை உவமையாகக் கூறும் திறம், “படநாகந் தோலுரித்தாற் போற் றுறந்து கண்டவா மெய்பனிப்ப நோற்றிட், டுடனாக வைம்பொறியும் வென்றார்க்கு” (சீவக.1546) எனத் திருத்தக்கதேவர் பாலும் காணப்படுகிறது; “நாகந்தோலுரித்தாற் போற்றுறந்து” என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் “நாகந்தோலுரிக்கும்போது நஞ்சும் காலும்” என்பதனால், அகச்சுத்தியுண்டாதலும் ஈண்டே துணியப்படும்.

  273. கருங்கைக் கொண்மூ வென்றது யானைக்கு வெளிப்படை; கொண்மூ- மேகம் மழையால் நிலத்தைச் சேறுபடுத்துவது மேகத்தின் செயலாதலை, “சேறுசெய் மாரியி னளிக்கும்” (பதிற்.65) என்று சான்றோர் எடுத்தோது மாற்றாலு மறிக. நிலஞ்சேறு படுத்த என்பது கொண்மூவிற்கும் இயையுமாறறிக.

  274. “வெஞ்சின வேழமுண்ட விளங்கனிபோன்று நீங்கி, யெஞ்சினான் போல நின்றான்” (சீவக. 1122) என்று திருத்தக்க தேவரும் கூறுதல் காண்க. “தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளிலே போல்” (சீவக. 232) என்பதன் உரையில் நச்சினார்க்கினியார், “வேழம் வெள்ளிலுக்கு வருவதொரு நோய்” என்றும், “குருதிக் கோட்டுக் குஞ்சத நகரம் (சீவக.2182) போல வேழத் திற்குக் கை அடை” என்றும் கூறுவன ஈண்டு நோக்கத் தக்கனவாம். அயின்று, காரணப் பொருட்டாய செய்தெனச்சம்.

  275. உண்பனவுண்டு வுடுப்பனவுடுத்து உலகர்போலவே யொழுகு தலின், ஞானவான்களின் ஞானநிலை பிறர்க்கறியவாரா தென்றற்கு, தெரியாத் தேர்ச்சி யென்றும், தேர்ச்சியின் பயன், தேர்ந்ததனை மேற்கொண்டு கடைப்பிடித்தொழுகுதலாதலால், கன்மச் சேதவுபாயத்தை, தேர்ச்சி யென்றும் தீராவுள்ள மென்றும் கூறினார்.

  276. வினை தன்னைச் செய்த வினைமுதலைப் பற்றா தொழிவதில்லை யாதலின், அதனைப் பிறழாவினை யென்றும், அதனைப் பிறழ்ந்து கெடச் செய்வது ஞானத்தின் பெருமையாதலின், பெரியோர் விட்டனர் என்றும் கூறினார். “கழலா வினைகள் கழற்றுவ காலவனங் கடந்த, அழலா ரொளியன காண்க வையாற னடித்தலமே” என்று நாவரசரும் கூறுதல் காண்க.

  277. விடாத தொன்றுண்டு - உ. வே.

  278. இதனையேமுன்பு, “போகாதம்ம புராதனம்” (ஞானா. 41-15) என்று கூறியிருத்தல் காண்க.

  279. ஒருவிய ஆங்கும், ஒருவியாங்கும் என நின்றது; கண்ட ஆங்கு, கண்டாங்கு எனவருதல் போல.

  280. ஈண்டுக் கூறப்படும் கருத்தே, “முற்செய்வினை யிங்குத் தங்கிப் போம் பாத்திரமும் குலாலன் வினைதவிர்ந்த சக்கரமும் கந்தித்துச் சுழலுமாபோல், மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா மலங்களும் பின் காய மொடு மாயு மன்றே” (சிவ.சித்தி. சூ. 10:6) என்றும், அவ்வாறே பெரியோர்களும் வாசனை காரணமாய்ச் சுற்றி விடப்பட்ட (குலாலன்) சக்கரம்போலச் சிறிதுகாலம் ஆன்மா சரீரத்தை வகித்துக் கொண்டிருக்கின்றானெனக் கூறுகின்றனர்” (தத்து. சங். 38. உரை) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  281. “இங்குளி வாங்குங்கலம் போல ஞானிபால், முன்செய் வினைமாயை மூண்டிடினும்” (சிவ. போ. சூ. 10. அதி.2. உதா. 3) என்றும், “தன்பால் வைத்து எடுக்கப்பட்டொழிந்த காயத்தினின்றும் அதன் வாசத்தை வாங்கிக் கொள்ளும் பாத்திரத்தில் அவ்வாசம் மங்கிப்போய் மெலிதாய்க் கந்திக்குமாறு போல நானவ னென்றெண்ணிச் சிவோகம் பாவனை செய்தறியும் ஞானிக்கு நாடுமுள முண்டா தலுண்மையின்” எனவரும் சிவஞான பாடியப் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கற்குரியன.

  282. “இங்காங்” (14) கென்புழி ஆங்குபிரித்துக் கூட்டப்பட்டது.

  283. நான் எனதென்னும் பற்றுக்கள் ஈண்டு உயிர்ச்சார்பு பொருட்சார் பெனப்படுகின்றன. “தந்த துன்றன்னைக் கொண்ட தென்றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர், அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்ற தொன்றென்பால்” (திருவா. கோயிற். 10) என்றும், “அடியேன் உண்ட வூன் உனக்காம் வகை யெனதுள்ள முள் கலந்தெழு பரஞ்சோதி” (திருவிசை. கருவூர். கங்கை. 6) என்றும் வருவனவற்றால் அவையிரண்டும் அச்சான்றோர்பால் இருப்பது போலத் தோன்றினும் அவை பற்றெனப்படாமை யாவரும் அறியு முண்மையாதலின், உடையதை யுடையரோ என்றார். ஓகாரம் எதிர்மறை யாகலின், உடையரல்லர் என்பதாம்.

  284. புறப்பற்றாகிய - உ. வே. அவாவாகிய - உ. வே.

  285. இனி, அவர் உடையதுதான் யாதெனின், “அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்” என்ற ஆனந்தமே யென்பார். உடையதை உரையளந் தறியாத், திரையருந் திருத்தப் பேரானந்தப் புணரிஓராங்குப் படிதல் என்றார்.

  286. இது ஞானவான்களுக்குப் பெந்தமில்லையாயினும் பாத்திர விசேடத்தால் உண்டென்று சொல்லியது- செப்பறைப் பிரதியிற்கண்ட பாட வேறுபாடு.

  287. நஞ்சுடைமை பாம்புபிறர் கண்ணிற்படில் கொலையுண்டற்கும் பிறரைத் தீண்டின் தீண்டப்பட்டார் கெடுதற்கும் காரணமாவது போல, இப்பாம்பன்னோர் பெறும் உபதேசமும் கேட்டுக்குக் காரணமா மென்பது குறிக்கத்தக்க தாம்.

  288. பசுவுண்ணும் நீர் பாலாய்ப் பிறர்க்கும் பயன்படுவதால், அது பலராலும் போற்றப்படுதற்குக் காரண மாவது போல, பசுவைப்போலும் சான்றோரது ஞானம் பலராற் பரவப்படும் சிறப்பும் பெறுமென்பது பெறப்படும்.

  289. ஞானவான்கள் பிறர்க்குக்குடியாகாது, பிறர்பால் அருள் கொண்டு அவரை ஆளுமாறு விளங்குதலின், வேந்தர் எனப்பட்டார். “நாமார்க்கும் குடியேல்லோம்” என அந்நல்லோர் கூறுமாறு காண்க.

  290. உபதேசப் பயன் ஞானமாதலின், ஞானமென்றார். ஞானம் வீடு பேற்றுக் கேதுவாதலின், வீடு என்றார் “விரும்புவார் வினைவீடே” (ஞானசம்பந். திருவோத். 11) என்றாற் போல.

  291. தமது கொடுமை புறத்தே தோன்றாவகை மறைத்து வைத்து ஞானம் பெற்ற பின்னர்ப் புலப்படுத்து தலின், அபக்குவரை வஞ்சர் என்றும், அவர் பெற்ற உபதேசம் தான்பட்ட இடத்தியல்பாற் கெட்டதேயன்றி ஞானப் பண்பிற் றீராமையின் ஞானம் என்றும் கூறினார்; பால் கெடினும் நிறப்பண்பு கெடாமை போல.

  292. கிருத்துமர்- கிருத்திருமம் செய்பவர். வஞ்சகர்- உ. வே.

  293. அல்லாதார்க்குச் செய்யும் உபதேசம் எல்லோரையும் கெடுக்குமென்பதை, திருமூலனார், “கற்பாய குற்றங்க ணீக்காமற் கற்பித்தால், தற்பாவங் குன்றுந் தனக்கே பகையாகும், நற்பா லரசுக்கும் நாட்டுக்கும் கேடேன்றெ, முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே” (திருமந். 2047) என்பது காண்க. கெடுத்தற்குக் குற்றமான வேதுவாய் முடியும் - உ. வே.

  294. இது சில பிரதிகளில் இல்லை.

  295. இத்தொடர் செப்பறைப் பிரதியொன்று தவிரப் பிற வற்றில் சிதைந்து காணப்படுகிறது.

  296. இங்கே, “இவை பத்தொன்பதும் கன்ம க்ஷயம்” என்றொரு தொடர், செப்பறைப் பிரதியிற் காணப்படுகிறது.

  297. திருவை- பா. வே.

  298. அரவா ரளையை- பா. வே.

  299. என்புத் தூர்வையை- உ. வே. இறப்பின் கேதனமிதனை அச்சுப் பிரதியிற் காணும் உரைவேறுபாடு.

  300. “வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ” *(பட்டி, திரு விடை. 13). தன்பாற் கிடந்துறங்கும் மக்களை விடியலில் வெளிப்படுத்தும் படுக்கைபோல, திரையும் நரையும் முதுiமக்கண் வெளிப்படுப்பது பற்றி, உடம்பை, திரைப் பெருஞ்சேக்கை என்றார்.

  301. கருவியாலே - உ. வே.

  302. திரைதல்- தோல் சுருங்குதல்.

  303. புன்புலவு வாரியை யென்பால் புன்புலவாரியை என்றார். புலால் நாறும் இயைபுபற்றி இங்ஙனம் கூறினார். “புலவுக் கடல்” என்றும், “புன்புலால் யாக்கை” யென்றும் சான்றோர் பலரும் கூறுப. “பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை” என்பர் ஒளவையார்.

  304. பெயர் பேரென வருதல் போல வியர் வேரென வந்தது, “புறம் வேரார்” (குறள். 487) என்றாற் போல. விளைவு என்றது ஈண்டு ஆகு பெயரால் விளை நிலத்தின் மேற்று.

  2.“மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது”(புறத் 412) என்றும், இவ்வுடம்பு இன்பத்துக்காம்” (புறத். 413) என்றும் கூறுபவாதலின், நசைக்கின் செவிலி யென்றார். “பற்றின் பற்றிடம்” (4:116) என்பது மணிமேகலை.

  3.  ஆசையை யினிதாக வளர்க்கும் செவிலித்தாயை-

  4.  “தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி, நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழ்வும் பட்ட, இனையவுடம்பு” (புறத். 413) என்று பிறரும் கூறுப.

  5.  புண்ணால் சீரழிக்கப்படும் அழகினை- உ. வே. புண்ணிடத்தே அழுக்குச் சொரிவதுபோல. “ஒன்பது வாயில்கள் தோறும் உண்ணின்று அழுக்குச் சொரிய உடம்பெனத் தோன்றி உருவு தெரிப்பதுபற்றி, புண்ணின் பொற்பு என்றார்.

  6.  உடம்பாலுறகின்ற இன்பத்தால் அதுவே தானெனக் கருதிய வழி, அக்கருதினோரைத் தன் நலம் குறித்துக் கொடுஞ் செயலனைத்தும் செய்விக்கும் இயல்புபற்றி, உடம்பை, ஒருபெண்ணாக உருவகம் செய்து கொடுமைக் கோதை யென்றார் எனினுமாம்.

  7.  கொடுமைகளாலே தொடுத்த அணங்குபோல் வதனை- உ. வே.

  8.  “செற்றச் சேக்கை” யென்றார் சீத்தலைச் சாத்தனார். (மணி.4: 117).

  9.  ஆரவாரத்தை - உ. வே.

  10. மாசு- விருப்பு வெறுப்பாகிய குற்றம். விருப்புள்வழித் தட்பமும், வெறுப்புள்வழி வெப்பமும் கொண்டு முகம். ஒளிர்தலின், மாசின் தேசை என்றார். தேசு- ஒளி.

  11. வழும்பின் கூரையை - உ. வே.

  12. “புன்புறந்தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந் திட்டொன்பது வாயிலாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்” (சீவக. 1558) என்று திருத்தக்கதேவர் கூறுவர்.

  13. காமம் வெகுளி முதலியன பெருகுதற்கு ஆக்கந் தருதலின், உடம்பை, துகனின் துப்பு என்றார். துப்பு, வலி. காப்பியக் கவிகள் காம எரி எழ விகற்பத்திட்டார் இறைச்சிப் போரிதனை என்றான்” (சீவக. 1585).

  14. எல்லா நோய்கட்கும் காரணமாதலின், பிறப்பினை, பெருநோய் என்றார்.

  15. மிக்க வியாதிகள் தங்கும் ஒதுக்கிடத்தை- உ. வே.

  பிறப்புக்கு உற்பவமாயிருப்பதோர் வீட்டை- உ. வே.

  16. கம்- மேகம். ஈண்டு அம்மும் அத்தும் பெற்று உருபேற்றுக் கமத்தை என நின்றது.

  17. கொண்டலை- உ. வே.

  18. பிள்ளைப் பருவத்தும் முதுமைப் பருவத்தும் பற்களுக்கு உதிர்தல் இயல்பாதலின், இறும் பல் என்றார்.

  19. பிறர்க்குத் தீங்கு செய்வது குறித்துப் போர்வீரர் சென்று தங்கும் பாசறையை, புழுவுறையும் உடம்புக்கு உவமை கூறினமையின், புழுக்கள் நோய் விளைவிப்பான் நிறைந்திருத்தலை யறியலாம். மயிர்க்கால் தோறும் அழுக்கே வெளியாதலின் அழுக்கார் உருவை என்றார்.

  20. நிரப்பப்பட்டதாகிய சொரூபத்தை - உ.வே.

  21. இந்திரியமைந்தினையும் புறக்கருவியென்றும், மனமுதலிய அந்தக் கரணங்களை அகக்கருவி யென்றும் கூறுபவாவதலின், கரணங்களைப் பாகராக்கியும், அவற்றின் வழி நிற்கும் புறக்கருவிகளை யானையாக்கியும் கூறினார். “வாயாதி சோத்திராதி புறத்துவாழ் கருவியாகும், ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவியாகும்” (சிவ. சித்தி. 2; 63) என்றார் சான்றோரும். இந்திரியக்காட்சிக்கும் தன் வேதனைக் காட்சிக்கும் இடையே மானதைக் காட்சியை வைத்ததும் இக்கருத்தே பற்றியென அறிக. இனி, இந்நூலாசிரியாரும்”இந்திரியங்களைப் பரிசனமாக்கி, அந்தக் கரணங்களை அமைச்சராக்கி “நீதி சிந்தித் தாய்ந்து துணிந்து செயற்படு மந்தக்கரண வமைச்சரும்” (ஞானா 16: 29-30) என்பது காண்க. மனம் இந்திரியங்களைத் தொழிற்

  படுத்தும் என்ற கருத்தால் இவர் கூறுவதுபோல, மிருகேந்திரமும்.

  “தேவப்ரவர்த்தகம் சீக்ரசாரி ஸிங்கல்பயதி க்ஷிமன: சப்தாதி விஷயக்ராஸகா: ச்ரவணாதய:” (XII :7) என்று கூறுகிறது.

  1.  அகத்தே ஒடுங்கியிருந்து செயற்கொடுமையால் தனது உண்மையைப் புலப்படுத்தலின், வஞ்சத்தை அளையிலொடுங்கும் பாம்பென்றார்.

  2.  கிருத்திருமமாகிய- உ. வே.

  3.  நுரையை வாயாலே அருவிபோல்- உ. வே.

  4.  வழுவை- யானை.

  5.  குறும்பு - அரண்; “நணீ நணி யிருந்த குறும்பல் குறும்பின் ததும்பவைகி” (புறம். 177) என வருதல் காண்க.

  6.  புரை- உயர்வு ஈண்டு உயர்ந்த இடமாகிய மலை குறித்து நின்றது.

  7.  கடலுக்கு விரிந்த இடமாகிய வதனை- உ. வே.

  8.  தூர்த்த குணத்தாலே - உ. வே. மிக்க காமமே சான்றோராலும் பிறராலும் அருவருக்கப்பட்டு அலர் தூற்றப்படுவதென்பது இதனால் துணியப்படும்.

  9.  “அவலக் கவலை கையாறழுங்கல், தவலா வுள்ளந் தன்பாலுடையது” (மணி4: 116) எனப் பிறரும் கூறுதல் காண்க.

  10. சிறுமுள் தைப்பினும் நோய் பெரிதாதல் பற்றி, அஞ்சிக் காக்கப்படுவதால் நாமத் தரணை என்றார். “எந்தை யுள்ளடி முள்ளும் நோவ வுறாற்க தில்ல” (புறம். 171) எனச் சான்றோர் வாழ்த்துமாறு காண்க.

  11. அச்சத்துக் கிலயமற்ற விருப்பிடத்தை- உ. வே.

  12. அழகிய பெருமையையுடைய தெய்வீகத்தை- உ. வே.

  13. ஏமாப்பு- செருக்கு; “ஏமாப்பேம் பிணியறியோம் பணிவோமல்லோம்” (திருநா. மறுமாற். 1) என்புழிப் போல.

  14. ஏசறவாகிய மான்- உ. வே.

  15. தீமைத் திறலை யென்புழி வந்த தீமையை மெய்யாற் செய்யுந் தீமை என்றமையின், ஈண்டு மனத்தோடம் என்றார்.

  16. அழகையும் பெருமையையு முடைய சமுத்திரத்தை- உ. வே.

  17. சழக்குக்குச் சுதேசத்தை- உ. வே.

  18. மறப்பின் என்பது மறைப்பின் என்று பாடமிருக்கின் அஞ்ஞானமென்று கூறும் பொருள் சிறக்கும்.

  19. காரணமாகிய மாயை என்றும் நிலைபேறுடையதாகலின், ஒண்டிறல் மாயை என்றும், அதன் காரியமாக, தனுகரண புவன போகம் என்னும் வகையுண்டாதலின், மாயா வினைய தாய தேயாத் தனுகரண புவன போகமெனும் வகை என்றும் கூறினார்.

  “லயாவஸ்தா யதா ப்ராப்தா ததோதஸ்விந்நரூபிணீ

  தார்யாபாவம் ததுதாஸீநா ஸாம்யாவஸ்தா ததைவஹி

  என்று பிறரும் கூறுப.

  20. வகைகளில் ஒன்றாகிய தனுவின் வேறுபாட்டை- உ. வே.

  21. தேகத்தை வேறாகக் காண்டலே அஞ்ஞானமாகிய குற்றம் நீங்குதற்கேதுவாமென்பதை தேவீகாலோத்ரம் கூறுகின்றது, திருமூலரும் “தன்னை யறிவ தறிவமைய ஃதன்றிப், பின்னையறிவது பேயறிவாமே” என்பர்.

  22. துனிது என்று பாடமாயின், துன்னிய தென்பது துனிதென வந்தது செய்யுள் விகாரம். துனி என்று அச்சுப் பிரதி கொண்ட பாடமே கொள்வதாயின், நணியது “நணி” (ஐங். 20) என்றும், அணியது “அணி” (தோல். எழுத். நச். 236) என்றும், வருதல் போல அத்துன்னியது துனிதென வந்ததென்று கொள்ளப்படும்.

  23. களக்கொள- பா. வே.

  24. வெறியிவ- பா. வே.

  25. “ஞானாமிர்தத்தார் பந்தம் போகம் போக நிறுத்தலும், வந்தது மாயை வினைமலம் என்றாராகலின், பந்தம் செய்யும் மாயை வினைமலம் என்றாராகலின், பந்தம் செய்யும் மாயை நிலைபெறும்படிக் காத்தல் மறமேயன்றிக் கருணை என்பது மிகையாம் போலுமெனின், காத்தல் போகம் துய்ப்பித்தல்; போகம் புசிக்கவே மலபாகம் வருமாகலின், காத்தல், போகம் துய்ப்பித்தற் காரணமாகலின் கருணையேயாம்; ‘அருத்தி யறுத்து மலமுதிர் வித்து’ (சிவ. சித். சூ. 8-10) என்றார் வழி நூலாசிரியரும்” என்று சிவப்பிரகாசச் சிந்தனையுரைகாரர் இவ்வடியினை எடுத்து ஆராய்கின்றார். (சிவப் . 18. உரை).

  26. மலத்திற்- பா. வே.

  27. நிறுத்துவதாய்- பா. வே.

  28. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை

  29. விரும்பினை- பா. வே.

  30. ஈண்டு ஆன்மாவென்பது உடம்பொடு கூடியிருக்கும் உயிர் களை, சாதலும் பிறத்தலும் இளைத்தலும பெருத்தலும் உடம்புக்கேயாதலின்;

  31. அதற்கு மாறாய- உ. வே.

  32. சாதல் பிறத்தல் போல, நோய், வறுமை, துன்பம் முதலிய காரணவகையானன்றி, இயல்பாகவே இளைத்தலும் பருத்தலும் வளர்தலும் தேய்தலும் உண்டென்றும் அவற்றிற்குக் காரணம் பிறந்து வாழும் இடம், அவ்விடத்தின் தட்ப வெப்பநிலை முதலியனவா மென்றும் ஸ்டாக்கார்டு (stockart) முதலிய உயிர் நூலாராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

  33. உயரவளர்ச்சி இருபது முதல் இருபத்தைந்து வயது வரை என்றும் குறுக்கு வளர்ச்சி முப்பத்தைந்து வரை என்றும் உயிர் நூற்பேராசிரியர் சேஷையா (prof. seshiyah of the Annamalai University) முதலிய ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

  34. விண்ணப்பஞ் செய்யும்- உ. வே.

  35. இச்சொல் சில ஏடுகளில் இல்லை.

  36. கேட்ட பொருள்: சாதல், பிறத்தல், இளைத்தல்.

  37. “ஆன்மாவிற்குச் சடத்தன்மையுண்டென்று கூறின், கட முதலிய சடப்பொருள்களில் ஞானத்திற்குச் சமவாய சம்பந்தம் பொருந்தாதாம்; ஆகவே ஆன்மா தேக முதலிய சடத்தின் வேறென்றறிக” என்பர் அகோர சிவாச்சாரியார்.

  38. “போகமாவது சுகதுக்கங்களை யறிவிக்கும் புருடனுடைய ஞானமென்று சுவாயாம்புவத்திலும் கூறப்பட்டிருக்கிற” தென்று போககாரிகையுரை (சூ. 4) கூறுகின்றது.

  39. வந்து கூடிற்று- உ. வே.

  40. இம் மூன்றன் இயல்புகளையும் சருவ ஞானோத்தராகமம் திரிபதார்த்த விசார பிரகரணம் சுலோகம் 32 முதல் 37 வரை காண்க. போகத்துக்குப் போக்கியமான உடம்பு மாயா காரியமாதலினாலும், போக நுகர்ச்சியால் கன்மமலம் பெறப்படுதலாலும், இம்மாயை கன்மங்களின் தொடர்பே மலமறைப்பை நீக்குதற்காதலினாலும் மாயை வினைமலத்து என்றார். “கதிதருங் காழிமன் காட்டுமப் பாசங்கள் மூன்றவைதாம், பொதிதரு மாணவம் போகஞ் செய் கன்மமு மாயையுமாம்,முதியது தானொன்று முன்பி னில்லாதது சேதனன்கண், அதிக மறைப்பன வாயிரகோடி விருத்திகளே” (தத்துவ விளக்கம் 19) என்று பிறரும் கூறுதல் காண்க.

  41. மாயை நித்தப்பொருளாதலின் அந்தமில் மாயை என்றும், அதன் காரியமாகிய தேகத்திலே தங்கிச் செய்துகொண்ட வினை, தேகத்திற் கிடவாது உயிரினைப் பிணித்துக்கொண்டு அது புக்குழிப் புகுதல்பற்றி, அதனைப் பந்தம் என்றும் கூறினார். “பந்தந் தந்த பரஞ்சுடராய்” (கந்த. வெண். 3) என்று குமரகுருபரரும் கூறுதல் காண்க.

  42. மறைத்துப் புசிப்பித்தலாவது; நுகரப்படும் சுகதுக்கங்களையன்றிப் பிறவற்றை நோக்காவண்ணம் மறைத்து நிறுத்துதல்; அஃதாவது இனிய பொருளொன்றின் இனிமைச் சுவையி வீடுபடுங்கால், பிறவற்றை நோக்காதொழி கின்றோ மன்றோ? அந்நோக்காமைக் கேது ஆணவமல மறைப்பென வறிக. “விருத்திகளான் மறைக்கின்ற வவ்வாணவம் வெங்குருமன், கருத்திய னூன் முறைதேரிற் கலந்துடனா யணுவை, யருத்திய நஞ்சென்ன மோகஞ் செய் தாசை யனுபவத்திற், பெருந்திடச் செம்பினிற் காளிதம்போலப் பிணைந்துளதே” (20) எனத் தத்துவவிளக்கமுடையார் கூறுமாற்றாலறிக.

  43. அதுவாய்; அதுவதுவாய்- உ. வே.

  44. போகநுகர்ச்சியால் மேன்மேலும் வினைகள் ஈட்டப் படுதலின் கன்மத் தொடர்பு அருமையின், ஏகற்கொல்லா தாகி யென்றும், போக நுகர்ச்சியின் விளைவாகிய விருப்பு வெறுப்பு அகங்காரமாதலின், அதனை வேகம் என்றும், அதுவே வினைத்தொடர்பு கோடற்கு எதுவாதலால் அதனை அறக்கெடுக்கும் நெறி விருப்பு வெறுப்பில்லாத நடுநிலைக் கொள்கையாய் இன்பம் பயக்கும் நன்னெறியாதலால், அதனை இன்னெறி யென்றும் கூறினார்; “வேண்டுதல் வேண்டாமையிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும் பையில” (குறள்.4) என்று சான்றோரும் கூறுதல் காண்க.

  45. ஆணவமலத்தால் மறைப்புண்ட உயிர்க்கு மாயை கன்மங்களின் தொடர்பு அம்மலத்தைப் போக்குங் குறிப்புடைய தாகும்; இதனைத் திருமூலர், “நேசாய ஈசனும் நீடாணவத்தரை, ஏசா மாயாள் தன்னாலே எழுப்புமே” (திருமந் 2163) என்பர். மாயை கன்மங்களாகிய பாசத் தொடர்பைக் கண்டு கழித்தவழி, “மலக்கலப்பாலே மறைந்தது ஞானம்” (2213) என்ப துணர்ந்து, பதியுண்மை யறிவால் அம்மறைப்

  பினின்றும் நீங்குக என்பது கருத்து. “மலமடைய மாயா தனுவிளையும்” (உபாயநிட். 39) என்பர் பிறரும்.

  46. வருத்தமே மிகுதியும் பயத்தல்பற்றி, உடம்பைச் சிறப்பில் ஆகத்தில் என்றார்.

  47. வருத்தத்தைத் தரும் தன்மை யுடைத்தான- உ. வே.

  48. முற்பிறப்பில் செய்யப்பட்டு எடுத்த உடம்பை விடாது பற்றித் தன்பயனை விளைவித்து நிற்பதுபற்றி, பிரார்த்தம் வாசனை எனப்பட்டது.

  49. அமல விமல வென்பதிலுள்ள விமல வென்பதை விளியாக் காது, விருப்புக்கு விசேடணமாக இயைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது.

  50. சமாதியாவது “நாலிருவழக்கிற் றாபதப் பக்கத்” (தொல். புறத். 20) துள் ஒன்றாகவும் காணப்படுகிறது. “ஆங்கனம் குறித்த ஆய் முதற் பொருளொடு, தான் பிறனாகாத தகையது சமாதி” (நச்சி. உரை. மேற்.) எனக் காட்டப்படுகிறது.

  51. பதியுண்மையறிந்து அதனோடு இயைந்திருக்கையாவது சிவயோகம் எனப்படுவது. பதியுண்மை யறிவு சிவதரி சனமாகும். சிவரூபசிவதரிசனங்களால் ஆன்மா, மலத்தின் நீங்கித் தன்னுள்ளே சிவத்தைக் கண்டு இன்புற்று, சிவயோகத்தால் அந்தச் சிவத்தோடு இயைந்து நிற்கு மென்ப; இவற்றின் இயல்புகளைச் சீகாழித் தத்துவநாதர் அருளிச்செய்த உண்மைநெறி விளக்கத்துட் காண்க.

  52. இது அச்சுப்பிரதியில் இல்லை.

  53. இக்குறிப்பு அச்சுப்பிரதியிலன்றிப் பிறவற்றில் இல்லை.

  54. நிலைஇ - பா. வே.

  55. கழறினை யென்று பாடங்கொண்டு மிகவும் அருளிச் செய்தாய் என்று உரை கூறுகின்றது செப்பறைப்பிரதி.

  56. மன்னிய- பா. வே.

  57. உடையா வூண்டா - பா. வே.

  58. நொத்து- பா. வே.

  59. “மலத்தின் சத்தியாகிய காரிய மழியும், நித்தமாகிய காரணம் அழியாது” என்பதற்கு “விடங்கெழு……….தகையே” என்ற பகுதியை மதுரைச் சிவப்பிரகாசர். (சிவப். 88 உரை) எடுத்துக்காட்டுவர்.

  60. குடங்கரிற் கலங்கல் நீரின்- பா. வே.

  61. அணைந்த மாறென விணையிறந்த கன்ற- பா. வே.

  62. தீர்த்தனர்- பா.வே.

  63. த்ரீ பதார்த்தம் சதுஷ்பாதம் மஹாதந்த்ரம் (2;2) எனமுதற்கண் மிருகேந்திரத்திற் கூறுதலினாலும், அதனையே மேற்கொண்டு இந்நூலாசிரியர் ஈண்டுக் கூறுவதனாலும், தலைநனிநிறீஇ என்றார். இக்கருத்தை ஆசிரியர் உமாபதி சிவனார் பவுட்கரவிருத்தி உரையில் எடுத்துக்காட்டியிருப்பது காண்க. பொருள் ஏழாக வகுத்துரைக்கும் சுவாயம்பு வாகமத்திலும் இம்மூன்றுமே பொருளாகக் கொண்டு இவை அனாதி நித்தமென்று கூறியிருப்பதாகத் தத்துவத்திரய நிர்ணய வுரை (சு. லோ.2) யாலும் தெரிகிறது. திருமூலனாரும், “பதி பசு பாசமெனப் பகர் மூன்றிற், பதியினைப் போற்பசு பாசமனாதி” (திருமந். 115) என முதற்கண் கூறியருளுவது காண்க.

  64. நிலைஇ யென்ற பாடத்துக்கேற்ப “மிகவும் நிலைபெற வருளிச் செய்துவைத்து” என்னும் உரை வேறுபாடு முண்டு.

  65. “மாயா வினையதாயதேயாத், தனுகரண புவனபோக மென்னும் வகையறி நனிதுனி தினிதுகவே” (ஞானா.50) என்பதனால் மாயாமல நீக்கமும், வேகத்தியாத்தலைத் துடைத்தல் இன்னெறி (ஞானா.51 14-5) என்பதனால் கன்மமல நீக்கமும் இறையுண்மைபார்த்தலிற் பறிமலம் (ஞானா. 51 15-6) என்பதனால் ஆணவமலநீக்கமும் கூறவே, இவை நீங்காவிடத்து வீடு பேறின்மை பெறப்படுதலால், உடையா தாயி னொருபெரும் பாசம் அடையா வீடு என்று மாணவன் கொண்டெடுத்து வினவுகின்றான் “சோதித்தகாயத் தொடக்கற்றால் தொல்லை மலம், சேதித்த தாகுமெனச் செப்பும் நூல்” (உபாய நிட்டை 18) என்று சான்றோர் கூறுதல் காண்க. “அமைந்த மாயேயம் கன்ம மாமல மூன்றும், மாயாதாகவே யார்ச்சன மாயையின், உற்பவந்தீரா வொழுகு மொன்றொன்று, நிற்சம மாயினல்லது நிற்பெறல், இல்லென் மொழிந்த தொல்லறம் தனக்கும், ஏயாதாகும்” இருபா 10 12-18) என்று பிறரும் கூறுப.

  66. பாசச்சேதம் பண்ணப் படாதாயின்- உ. வே.

  67. இது வரத என்பதனைச் சாரவைத்து உரை கூறப்படுவதுமுண்டு.

  68. ஆசிரியன் கூற்றுத் தனக்கு முன்னொடுபின் முரணுமாறு தோன்றக் கண்டு மலைவுதீர வேண்டுங் கருத்தால் வழிபாட்டு முறைமை பற்றி, மதியோர் வரத என்றதனோமொழியாது, அருளோய் என்று மறுபடியும் வேண்டுகின்றான். அருளோய் என்றது குறிப்பால் ஆசிரியருக்குச் சினமுண்டான எதிர்பார்ப்பதை விளங்குகிறது. அருணந்திசிவனார் சினமுண்டாதலை எதிர்பார்த்து “சீறிய ருளல்” (இருபா. 2: 17) என்றும், “மாறுகோள் கூறல் போலும்” (4:91) என்றும், “தோரா துரைப்பன் றெரு மரலுளத்தொடு, பேரா தருளுதல் பெரியோர் கடனே” (16: 1-2) என்றும் கூறுதல் காண்க.

  69. சுவவசன விருத்தமாவது என்தாய் மலடி என்பது போலும் வழுவுரையாகும்; “சுவவசன விருத்தம் சொல் மாறி இயம்பல், என்தாய் மலடி யென்றே இயம்பல்” (மணி. 29:160-1).சாத்திரத்துக்குப் பூருவா பரவிருத்தமாவது முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது; இஃது ஆகமவிருத்தமென்றும் கூறப்படும்.

  70. விருத்தமும் வருவனவாய் இருந்தன- உ. வே.

  71. “தேற்றேகாரம் தொக்கது” என்றொரு குறிப்புப் பெருமண்டூர்ப் பிரதியிலுள்ளது.

  72. வாதியாமை காண் உள்ளது- உ. வே.

  73. மாமலை யன்ன மரம் எனச் சிறப்பித்தது, கனலின் ஆற்றலை விளக்கி நிற்கிறது.

  74. தாமரையன்ன கையென்றோழியாது, தளிர்க்கையென மிகுத்துக் கூறியது, அத்துணைப் பேராற்றல் படைத்த தாயினும் கடுங்கனல் மந்திரசத்தியால் தடுப்புண்டு எரிக்க மாட்டாது கழியுமென்பதைச் சிறப்பித்து நிற்கிறது. “அங்கித்தம்பனை வல்லார்க் கனல் சுடாதாகும்” (சிவ. சித். சூ. 10-6) என்று அருணந்தி சிவனாரும் விளக்கிக் கூறுவது காண்க.

  75. சுத்தராமாறில்லையோ- உ. வே.

  76. இங்குக் கூறப்படும் கருத்தைச் சருவஞானேத்தராகமம்

  “ரஸவித்தம் யதா தாம்ரம் ஹேமத்வம் ப்ரதித்யதே

  ததாத்மா ஜ்ஜானஸம்பந்தாத் சிவத்வம் ப்ரதிபத்யிதே

  (1:6) என்று கூறுகிறது. இங்கே களிம்பை, புன்புறக் களங்கம் என்றாற் போல சருவ ஞானோத்தரம்

  “தாம்ரஸ்ய மலம்…………(1:11) என்றே கூறுதல் காண்க செம்பின் வெட்டுவாய் தோறும் கலந்திருத்தல் பற்றிக். களிம்பினைச் செறிந்த களங்க மென்றும் செம்பு பொன்னாக வேதிக்கப்படுங்கால், அதனோடு பிரிப்பற நிற்கும் இக்களிம்பு வேறாய்ப் பிரிந்துபோதலின், புன்புறக் களங்கம் என்றும் கூறினார். “செம்பிற்காண லுறுங்களிம்பு இரத குளிகை பரிசிக்கக் கழியும் செம்புரு நிற்கக் கண்டோ மன்றே தாணுவின்றன் கழலணையத் தவிருமலம் தவிர்ந்தாற்றான் சுத்தனாயிருக்கை” (சிவ. சித்தி. 11:5) என்று சான்றோர் உரைப்பது காண்க.

  77. பொல்லாத களிம்பு - உ. வே.

  78. சித்து நீர்- இரசம். இரசத்தால் வேதிக்கப்பட்ட மாத்திரை செம்பு பொன்னாய்விடுவது ஒருதலையாதல்பற்றி, செறிந்தது என்றார்.

  79. இரத குளிகை தாக்கினால் பொன்னானவாறு போல - உ.வே.

  80. “மலத்தினோடும் வியாபி கேவலத்தி லான்மா” (சிவ. சித். 4: 38) என்றும், பவுட்கராகமப் பசு படலத்தின்கண் பசுவுக்கு இலக்கணம் கூறுமிடத்து, “…….வ்யாபத்………….வ்யாபகத்வே ஹ்யணோ ஸ்ஸித்தே தர்ம வ்யாபகதா பரூவத் அன்யத் ராறுபலப்தஸ்ய தேஹாத்வ்யா பகதாகுத்” (சூ.105) என்றும் கூறி வற்புறுத்துவது காண்க.

  81. மானதமா யுச்சரிக்க - உ. வே.

  82. உடம்பின் ஓரிடத்தே புக்க நஞ்சு உடலெங்கும் பரவித் தன் கொடுமையை மிகவிரைவில் பரப்பும் ஆற்றலுடைமை தோன்ற, விடங்கெழு பெருவலி என்றார்.

  83. விடம் எனவே பெரும்பாலும் அது பாம்பின் விடமெனவே கருதப்படுவதலாலும், அப்பாம்பு தீண்டுவதும் பெரும பான்மையும் காலிலாதலாலும், பாதாதி கேசமளவும் கலவாமல் என்று உரை கூறுகின்றார்.

  84. சோவியாதவாறு போலவாம் - உ. வே.

  85. நோயெல்லாம் உடம்பினையே பற்றி நின்று, அஃது உள்ளளவும் இருப்பனவாதலின், நித்திய நோய்கள் என்றும், நோய் தோன்றுங்கால் உடலோடு பிரிப்பறக் கலந்து நிற்கும். உயிர் தனக்குத் தோன்றியதாகக் கொண்டு தனது சிற்சத்தியொடுங்கி நோயே பட்டொழி தலின், ஞானத்தையே குறித்துக் கொண்டிருக்க வொண்ணா தென்றும் கூறுகின்றார். பசிநோ யுற்றபோது மான முதலிய நற்குணமெல்லாம் பறந்துபோவது இதற்குப் போதிய சான்றாகும்.

  86. குடம் என்பது குடங்கர் எனவும் வரும்; “குண்டமுற்ற குடங்கர் கொணர்ந்திடா” (கந்தபு. தேவகிரி.24) என வருதல் காண்க.

  87. இல்லம் - தேற்றாமாம். கலங்கல் நீரைத் தேற்றின் விதையிட்டுத் தெளிவித்தலை, “இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றாள்” (கலி. 142) என்பதனாலறியலாம். கொங்கு வேளிர், இவ்வாறு தெளிவிப்பது கம்மியர் தொழில் என்பார், “இல்லின் படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக், கலுழி நீக்குங் கர்மியர்போல” (பெருங் 1:35; 217) என்பர்.

  88. இணங்கு - ஒப்பு. “இணங்குமலர்” என்றாற்போல.

  89. தெளிவுண்டாயிருப்பர்- உ. வே.

  90. ஈண்டுக் கூறிய கருத்துக்களையே, அருணந்தி சிவனார், “தெரிவரியமெய்ஞ்ஞானம் சேர்ந்தவாறே சிவம்பிரகாசிக்கு மிங்கே சீவன் முத்தனாரும், உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும் ஒள்ளேரியினொளி முன்னர் இருளும் தேற்றின், வருபரல்சேர் நீர்மருவுகலங்கலும் போலாகி மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம், திரியு மளவும் முளதாய்ப் பின்பு காயம் சேராத வகைதானும் தேயுமன்றே”

  (சிவ. சித்தி. சூ. 1: 14) என்று கூறுகின்றார்.

  91. பேரியற் கிழவ- பா. வே.

  92. தருமத் திறைவ- பா. வே.

  93. தெரிய - பா. வே.

  94. செருக்கும்- பா. வே.

  95. இன்னாதே, பேஎயோ டானும் பிரிவு- பழமொழி 126

  96. னறீஇ யாரும்- பா. வே.

  97. வளைஇய- பா. வே.

  98. மழுங்க- பா. வே.

  99. தாளி னீழலம் - பா. வே.

  100. யெற்றிறம் - பா. வே.

  101. தண்டாச் சீற்றத்து- பா. வே.

  102. நிறைந்த நாயனார் சீர்பாதமல்லது மற்றொரு பற்றுண்டோ- பா. வே.

  103. சருவைசுவரியங்களையும் உடையனாகையால்- உ. வே. பரஞானமாகிய சிவஞானத்தால் விளைவது சிவபோக மாதலின், அதனைப் பெண்ணாக வுருவகஞ்செய்து “செல்வி” யென்றும், அச்செல்விக்குச் செல்வமாவது சருவஞ்ஞத்துவமாதலின் அதனைத் திருவென்றும் கூறினார். “நுண்ணுணர் வின்மை வறுமையஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி. 251) எனப் பிறரும் கூறுதல் காண்க. திரு ஞானத்தின் மேலும், செல்வம், ஞானத்தால் விளையும் இன்பத்தின் மேலும் நிற்றலைத் “திருவே யென்செல்வமே” (திருநா. 261: 1) என்றும், - செம்மையே யாய சிவபதம் அளித்த செல்வமே” (திருவா. பிடித்.3) யென்றும் சான்றோர் கூறியருளுமாறு காண்க.

  104. மோக்ஷலக்ஷ்மியாகிய- உ. வே.

  9.  அறிவுடைமையாகிய வுயர்ந்த கலைமகட்கு நாயகனே- உ. வே. பரஞானமாகிய சிவஞானத்தின் பயன் பிறப் பறுத்தலும், அபர ஞானமாகிய கலை ஞானத்தின் பயன் எளிதில் உணர்தற்கரிய பொருள்களின் மெய்ம்மைத் தன்மையை உணர்தலுமாதலின், கலை ஞானத்தை புலமை சான்ற கலைமகள் என்றும், மெய்ம்மை யுணர்வைப் புலமை யென்றும் கூறினார்; “சிவனடியே சிந்திக்குந் திருப் பெருகு சிவஞானம், பவமதனை யறமாற்றும் பாங்கினி லோங்கிய ஞானம்” என்றும், “உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்” என்றும் (பெரியபு. திரு ஞான. 70) சேக்கிழார் சுவாமிகள் விளக்கியருளுமாறு காண்க.

  10. ஜ்ஞானம் த்விவிதமாக்யாதம் பரம் சைவாபரம் ததா

  பரம் சைவாபபாநாக்யமபரம் சாஸ்த்ர முத்தமம்

  என்பதனால் பரஞான அபர ஞானங்களின் இயல்புணரப்படும்.

  11. வீரமாவது பகையை வென்று கொள்ளும் வெற்றிமேல தாயினும், புலப்பகையை வெல்லும திறமே சீரிய வீரம் எனப்படுதலின், அவ்வீரத்தை வீரிய மடந்தை யென்றார். திரு வாதவூரரை, “புவிநடையாம் துன்பட்ட வீரர்” என்று இராமலிங்க வடிகளும் கூறுவர்.

  105. தவத்தின் விளைவு இருமையும் செல்வமுடைமையாதலின், தவமாகிய செல்வி யென்கின்றார்; “மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்” “இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலாதவர்” (குறள் 270) என்றும் சான்றோர் கூறுப.

  106. துறைவ என்றதனால், அதற்கேற்பப் பிறவிக்கடலும் அதன்கண் மூழ்குவோரை

  யெடுத்தலும் வருவிக்கப் பட்டன. தருமம் புணையெனக் கொள்க.

  107. பிறவியாகிய பகையை, அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ, ஞானவொள்வாட் பூமுக மழுந்தக், கொன்று சினந்தணியாத அன்றிய சீற்றத்து, மறவனை” (ஞானா.53: 1-47) என்று கூறுகின்றாராதலின், நீ அருளோனாவதை யெவன் என்றார்; இது பழிப்பது போலும் புகழ்ச்சி.

  108. இது சில பிரதிகளில் இல்லை.

  109. பேயினை இதுகாறும் பிறர் சொல்லக் கேட்டதுண்டே யன்றி யாரும் கண்ணிற் கண்டதில்லை யாதலால், “காணாராயினும்” என்றார். “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்னும் பழமொழியும் பேய் கண்ணிற் காணப்படாமையையே வற்புறுத்துமாறு காண்க.

  110. பேயோடாயினும்- உ. வே.

  111. கூடிப்பிரிந்தால் துன்பமுண்டாக்கு மென்று- உ. வே.

  பிரிவு இன்னாதென்று - உ. வே.

  112. “பேயோடேனும் பிரிவொன்றின்னா தென்பர் பிறரெல்லாம்” (சுந்த. ஆரூர். 9) என்றும், “பிரிவுசெய் தாலரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி” (திருக். 144) என்றும் சான்றோர் கூறுதலின், “மதியோர் அறைப” என்றார்.

  113. இச்சொல் சில ஏடுகளில் இல்லை.

  114. அனாதியே ஒருபடித்தாக என்னில் வேறுபாடற- உ. வே.

  115. பிறப்புக்கேதுவாகிய ஆணவமும் கன்மமும் அனாதியே தொடர் புற்றவையாதலின், “தொன்முதுநாள்” என்றார். தொன்மையும் முதுமையும் ஒரு பொருளவாய்த் தம்மில் இயைந்து தொடர்ந்து அனாதியென்னும் பொருள் பயந்தன. அத்துவிதத் தொடர்பாதலின், “வேறுபாடற மருவி” யென்றுரைத்தார்.

  116. மருவினதன்மை- உ. வே. உயிரையும் அது செய்யும் வினையையும் அறிந்து வினைப்பயனைக் கூட்டும பாலறிதெய்வ மாதலால் (தொல். சொல். 58) அவனன்றிப் பிறர்க்கு அறிவரிதாதலின், அன்னதாய பிறவி என்றார்.

  117. தன் வளைப்புக்குள் அகப்படாதது யாதுமில்லை யென்பது படப் போக்கொழிய வளைஇ என்றார். நால்வகைத் தோற்றத்தையும் பகைவ ரூராக்கி, ஆங்கே இருந்து கொண்டு குறும்புசெய்யும் பாசத்தைப் பகைவராக்கி, பாசச்சேதத்தை ஞானவேந்தன் செய்யும் போராக வுருவகம் செய்தலால், போக்கொழிய வளைஇ எனக் குறிப்பித்தார்.

  118. பொலிவு பொருந்திய முகம் குளிக்கச் சங்கரித்தும் - உ. வே.

  119. அன்றுதல்- மாறுபடுதல் “அன்றிய வமணர்கள்” (ஞானா. 113:10) எனச் சான்றோர் வழங்குமாறறிக ஏனைய வாள் போலத் தீட்டலும் வடித்தலும் வேண்டாமையின் ஞான வொள்வாள் எனப்பட்டது. பூ, கூர்மை. சாணை பிடித்த கத்தியின் வாயில் தோன்றும் பொருக்குகளை (புகர்) நாவிதர் பூவென்பர். போர்வினையாக உருவகஞ்செய்து கொண்ட மையின், பாசச்சேதத்தை, பூ முகம் அழுந்தக் கொன்று என்றும், அவ்வினைக்கு மாண்பாதலின் மறமிகுதியை. சினந்தணியாது அன்றிய சீற்றத்து மறவனை என்றும் கூறுகின்றார். இம்மறச் செயலையே, “மெய்ப்படு பேருணர் விசைய மள்ளர், பூமுகஞானப் புகர் வாளேந்தி ஐம்புலன டக்கி யறுபகை ஒட்டி, இருவினை வீட்டியொருவழிக் கொளீஇய (ஞானா. 67) எனப் பிறாண்டு மோதுப.

  120. அளவில்லாத - உ. வே.

  121. “புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று, வனசங்காள் செய்தவம் நீர் வாழியரோ வாழி” (சிதம் செய். கோ. 12) என்று குமரகுருபர சுவாமிகள் கூறுவது இப்பகுதியோடு ஒப்புநோக்கற்குரியது.

  122. வனம்- நீர். நீரில் தோன்றும் பூ வென்னும் பொருட்டாய்த் தாமரைக்குப் பெயர்: அம்புசம், பங்கசம் என்பன போல தாமரை தன்பூ இவனது திருவடியின் நலம் பெறல்வேண்டி தாமரை போலும் திருவடி யென்றொழியின், உவமம் பொருளினு முயர்ந்ததாமாகலின், தாமரைக்குத் திருவடி யினும் ஏற்றமில்லை யென்பது தோன்ற இங்ஙனம் கூறினார். ‘பிறர்க்கு நீவாயினல்லது நினக்குப் பிறருவம் மாகா வொருபெரு வேந்தே” (பதிற், 73) என்று பிறரும் கூறுதல் காண்க.

  123. தலைமகனொருவனது அருள்பெற்று வாழ்வோரை அவன் தாணிழலில் வாழ்வோர் என்பது பண்டையோர் வழக்கு; “அஞ்சலம் யாமே வென்வேல், அருஞ்சமம் கடக்கு மாற்றலவன், திருந்து கழனோன்றாள் தண்ணிழலேமே” (புறம். 397) என்றும், “யானே பெறு கவன் தாணிழல் வாழ்க்கை” (புறம். 397) என்றும் வருதல் காண்க.

  124. “பிறந்தை யினத்தின் மாண்டோரீடே” (ஞானா. 46: 8-9).

  125. ஒழிவற நிறைந்த ஒருவன், மதிசேர் செஞ்சடை யொருவன் என இயையும் மதிசேர் செஞ்சடை யொருவன் என்பது, “பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார்” (ஞானசம். 79:3) என்பதை நினைப்பித்தல் காண்க.

  126. ஒழிவற நிறைந்த ஒருவன் என்றாற்போல, அருணந்தி சிவனாரும் “செறிவொழியாது நின்ற சிவன்” என்றும், பட்டினத்தடிகள், “எவ்வகை யளவினிற் கூடிநின், றவ்வகைப் பொருளும்நீ யாகிய விடத்தே” திருவொற்றி. ஒருபா. 1: 29-30) என்றும் கூறுதல் காண்க. ஒருவன் என்பது பார்க்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிற்கும் பொதுமை குறித்து நின்றது; “அது அவள் அவனென நின்றமை, யார்க்கும் பொது நிலை யானென வுணர்த்திய பொருளே” (ஒற்றி. ஒருபா. 6: 56) என்பர்பட்டினத்தடிகள்.

  127. சடசித்துக்களெல்லாம் பரிபூரணமாய் நிறைந்த- உ. வே. பிறையைத் திருச்சடாபாரத்திலே யுடையனாய் உவமனில்லாத நிரஞ்சன நாயனார் சீர்பாதமல்லது- இது செப்பறை ஏட்டில் கண்டது. ஒழிவற நிறைதற்கு இடம் கூறுவார், பொருள்கள் சடப்பொருளும் சித்துப்பொருளுமென இரண்டாய் அடங்குதலின், அவற்றை விதந்து சடசித்துக்களெல்லாம் என்றார்; “புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம் நான்காய், அவை யவை சேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்” (ஞானசம். 129-7) என்பதனால் சடப்பொருளினிறைவும், உரைசேருமெண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம், நிரைசேரப் படைத்த வற்றின உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (ஞானசம். 132-4) என்பதனால் சித்துப் பொருளினிறைவும் உணரப்படும்.

  128. ஏகனாகிய கருத்தாவினுடைய சீர்பாதம் - உ. வே.

  129. “சரண்புகுந்தார் தமைக்காக்குந் தன்மையினான்” (ஞானசம். 176-2) என்பதனால் அவன் பாதம் புகலிடமாதல் ஒரு புடை நிற்க, “தம்மைப்போலத் தம் மடியார்க்கும் இன்பளிப்பவ” (ஞானசம். 238-2) ராதலின் பெரும்புகல் என்றார்.

  130. மடம்படு ஞான- பா. வே.

  131. யுடம்பெறி- பா. வே.

  132. வளிவரை- பா. வே.

  133. தெய்த்தனையாயி- பா. வே.

  134. புடைத்து- பா. வே.

  135. நீதியாத் தனாது- பா. வே.

  136. வளைவா யமையா மணிமருள் குடத்து (ஞானா. 17:12)

  137. பகுவாய் வாளையென்பது அச்சுப்பிரதியிற் காணும் பாடவேறுபாடு.

  138. ஞானா: 53: 23-4.

  139. உயிர்கட்குப் பிறப்பிறப்புக்கள் தொன்மையவாதலின், பிறப்புக்கு ஏதுவாகியவுணர்ச்சியை யெழுப்பும் காமமும் மறு பிறப்புப்போலத் தொன்மை யுடைத்தாதல் பற்றிக் காமனை, தொன்முது கடவுள் என்றும், இறைவன் நுதல் விழியால் அழிந்தது காமனது உடலேயன்றி உயிரன்மை யின், முதுகடவு ளென்றும் கூறினார். “கொல்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்” (நன். மயி. 343) என்றாற்போல, மீனக்கொடி கொண்டு எழுதலால், வன் மீனாணை கூறப்பட்டது. “மீனேறுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பின், தானேறனையா னுளன்” (சீவக.6) என்று பிறரும் கூறுப.

  140. காமதேவனை,“வன்மீனாணைத் தொன்முது கடவு” ளெனச் சிறப்பித்தது, இத்துணைச் சிறப்புடையனாயினும் அவனாணை இவ்வாசிரியன்பால் செல்லாதாயிற்றெனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு.

  141. திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களும், வசிட்டன், மரீசி, அகத்தியன், அத்திரி, கோதமன், காசிபன் முதலிய முனிவர்களும் பிறரும் காமனது வன் மீனாணைக்கு அடங்கி யொழுகியதனால் அவன் கொற்றத்தை வலம்படு கொற்றம் என்றார். இதனைக் கந்த புராணக் காமதகனபடலத்தில் அவன் கூறும் கூற்றுக்களால், (10- 18) அறிக. சிவன்பால் இவனதாணை சொல்லாமையை, “நின்றடர்த்

  திடுமைம்புல னிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை, வென்றடர்த்தொருபால் மடமாதை விரும்பு தலென்” (ஞானசம். 186-8) என்றும், “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே” (ஞானசம். 383-7) என்றும் ஆளுடைய பிள்ளையார் அருளுமாற்றானறிக.

  142. குணமென்னுங் குன்றேறி நின்றாராயினும் தீங்குசெய்வோர் பால் சிறிது சினந்தோன்றுவதும் மறு கணத்தே யஃது அழிவதும் இயல் பாதலின், காமன் வெற்றியைக் கெடுத் தற்குத் தோன்றிய செற்றம் மறு கணத்தே கெட்டதை, அடங்கருஞ் சீற்றத் திடங்கெடக் கடக்கும் என்றார். “கடக்கும் ஞானம்” என இயையும்

  143. நில்லாதபடி- உ. வே.

  144. அடங்கருஞ் சீற்றத்துக்கு இடந்தருவது அறியாமை யாதலின், அதுபற்றி, மடம்பறி ஞான என்றார்.

  145. இக்கருத்தே கொண்டு இளங்கோவடிகள், “கடுங்கால் நெடுவெளியிடுஞ் சுடரென்ன, ஒருங்குட னில்லா வுடம் பிடை யுயிர்கள்” (சிலப். 10: 174-5) என்பதும், இதற்கு உரைகண்ட அடியார்க்கு நல்லார், “விளக்கு உவமித்தார். நினைவற அழிதற்கும் புக்குழிப் புலப்படாமைக்கும்” என்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன.

  146. எறிவளி வரை நில்லாது என்று பாடங்கொண்டு, “அடிக்கிற காற்றினளவும் நிலையாது” என்று அச்சுப்பிரதி கூறுகின்றது.

  147. தெரியும்படியாக - உ. வே.

  148. ஞானானந்த சொரூபியான பதியுண்மையை - உ. வே.

  149. பதிப்பொருள் நித்திய ஞானானந்த சொரூபமானது என்பதனை, “ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்த வடியார், ஞானமிக நின்று தொழ நாளு மருள் செய்ய வலநாதன்” (ஞானசம். 329: : 3) என்றும் “ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (ஞானசம். 69: 3) என்றும் கூறுதல் காண்க.

  150. ஏய்த்தல் ஈண்டு இளைப்பின் மேற்றாய் இறப்புக்குறித்து நின்றது.

  151. பதியுண்மை யறியாவழி மலமறைப்பு இறுகி நிற்குமாறு பெறப்படுதலானும், அது நீங்குதற்குரிய பாகம் வருமளவும் வினைத்தொடர்பு இடையறாமை ஒருதலையாதலானும், மொய்த்தன வல்லவோ என இறந்தகாலத்தாற் கூறினான். “மலஞ்செய்த வல்வினை நோக்கி உன்னை வாழ்த்துவனே” (விநாயகர். திருவிரட்டை.8) என்று நம்பியாண்டார் நம்பி கூறுதல் காண்க. வினைத் தொடர்பே பிறவிக்கு ஏதுவாதல்பற்றி ஞானசம்பந்தர் முதலாயினார் இறைவனை வழிபட்டார் வினையினின்றும் வீடு பெறுவர் எனப் பலவிடத்தும பன்னிப்பன்னிப் பேசி யிருப்பது காண்க. “விடையான் அடியேத்த மேவா வினை தானே”; “கலையானடியேத்தக் கருதா வினைதானே”; “தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே”; “கறையார் மிடற்றானைக் கருதக்கெடும் வினையே” (ஞான. 89: 1-9) என்பன காண்க. “ஈனமாம் வினையிரண்டாம் இருவினையாலுடம்பாம், ஊனமாருடம் பாலூழாம் ஊழினாலாகா துண்டோ” என்றார் பிறரும்.

  152. “செனன………….மாகிய” இப்பகுதி சிலபிரதிகளில் இல்லை.

  153. “அவாவென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவா அப் பிறப்பினும் வித்து” (குறள். 361) என்றார் திருவள்ளுவனார்.

  154. மொய்த்த என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை” (குறள் 59) என்றாற்போல.

  155. எனக்குக் கூடுவன - உ. வே.

  156. வெள்ளெருக் கரவும் விரவுஞ்சடைப், புள்ளிருக்கு வேளூரான பொற்கழல், உள்ளிருக்கு முணர்ச்சி யில்லாதவர், நள்ளிருப்பர் நரகக் குழியிலே (திருநா. 193: : 1) என்னும் மகாவக்கியத்தின் படி எண்ணிறந்த…………” என அச்சுப்பிரதியில் உரை வேறுபாடு காணப்படுகிறது.

  157. எதனை யென்பது, அன்பெறாது எத்தையென நின்றது. இது சில ஏடுகளில் இல்லை.

  158. மானின் குளப்படி நீரைச் “சுத்தி காரியத்துக்குப்”பயன் படுத்துவது மரபு.

  159. இதனால் நல்லறிவினனாகிய மாணவன் தன் சிறுமையும் ஆசிரியனது ஞானப்பெருமையும், அவனுரைத்த உரைப் பொருளின் பெருமையும் புலப்படுத்தினான்.

  160. ஈண்டு நிகழும் நிகழ்ச்சியனைத்தும் துகனறு போதம் கூறிய இலக்கணத்திற்கு இலக்கியம்போல நிற்றல் காண்க. பதியுண்மை அறிதற்குரிய பரிபக்குவமும் ஆசிரியனிடத்தில் அயரா அன்பும் மீதூர்தலால் மாணவன்பால் கண்பனி தூங்கல் முதலிய மெய்ப் பாடுகள் தோன்றுகின்றன. இது சத்திநிபாதத் தன்மையுற்றோர்க் குண்டாவதாகலின்.பதியுண்மை யறிதற்குச் சமைந்த மாணவன் சத்திநிபாதம் உற்றவாறு இதனால் உணர்த்தியது மாயிற்று. இதனை, “மாசிலாமணித் தேசிகராய, சாற்றுவன் கேண்மதி மாற்ற மொன் றுளதே, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் வார. மொழிதடுமாற முழுவலன் பளைப்பச் சத்திநிபாதத் தன்மை வந்தடைந்தோர்க், கப்பொருள் புரிதற் கதுபொழு தாகலின், மெய்ப்பொருளுணர்த்துதல் வியப்பெனப் படாதே” (பண்டா. 17: 24-30) என்று குமரகுருபரர் கூறுவதும்,சத்திநிபாதத் துத்தமர்க்கு மெய்ப்பொருட் காதலுற்ற விடத்து இம் மெய்ப்பாடுகள் தோன்று மென்றும், அவை. “வேர்க்குங் கண்ணீர் ததும்பும கம்பிக்கும் மெய்நடுங்கும், வார்த்தை நழுவு மனம் பதறும் கார்க்கத மாய்க், காந்து முரோமாஞ் சலியாகும் காதலித்தார்க், கேய்ந்த குணங் காணிவையெட்டும்” (ஒழிவி. சத்தி. 10) என்று ஒழுவி லொடுக்க முடையா ருரைப்பதும், “இரவுபக னீழல்போ லிட்ட பணிசெய்து, குரவர்புகழ் வாயாரக் கூறித்- திருமுன், விழுந்துவிழி நீர் பொழிய மெய்விதிர்த்து நின்று, தொழுந்தவத்தோர் காணுஞ்சுகர்” (துகளறு. 84) என்று காழிச்சிற்றம் பல நாடிகள் கூறுவதும் ஒப்பு நோக்கற்பாலன.

  161. தானென்னும் முதல் கலங்கி- உ. வே.

  162. கழன்ற நெஞ்சுடனே - உ. வே.

  163. சீடனே நோக்கி - உ. வே.

  164. “காதலித் தேத்திய மெல்லினத்தார் பக்கல்” (ஞான. 267-2) மேவும் இயல்பினன் இறைவன் என்பவாகலின், அவரது சிவத்துவத்தைப் பாவிக்கும் பாங்குடைய ஆசிரியர் மாணவனது அயரா அன்பினைக் கண்டளவே அருணிறைந் தவசமாதல் பெறப்படுதலால், தானும் யாதுமாகாது என்றார்.

  165. “இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதி பலவும், தன்னவுருவாமென மிகுத்ததவன் நீதியொடு தானமர்விடம்” (திருஞானசம். 329-3) எனத் திருஞான சம்பந்தர் கூறுதல் காண்க. இன்ன பரிபக்குவமுடைய மாணவற்குச் சிவஞானமருளுவது முறையாதலாலும், சிவத்துவத்தைப் பாவித்துத் திருப்பார்வையால் தீக்கை செய்தே அதனை யருளவேண்டியிருத்தலாலும் “நீதியால்” “மெய்த்தகு குருபரம் பரன தருளின் செவ்வி வம்பறு சம்பிரதாயத் தஞ்சுடருற்றகாலை” (ஞானா.8) என்றும், “சத்திபதிப்பிற் சம்பிரதாயந் தொத்துவது” (ஞானா. 69) என்றும் கூறுமாறு காண்க.

  166. முறைமையாலே என்பது சில ஏடுகளில் இல்லை.

  167. அருணோக்கம் பாலிக்கு மளவில் - உ. வே.

  168. பேசுதற்கேற்ற வாயில்லாதானை ஊமையென்றாற்போலத் தன்னுள் நிறைந்திருப்பதனை வெளிப்படுத்தற் கேற்ற வாயில்லாத குடம் ஊமைக் குடமெனப்பட்டது. (ஞானா17: 12 அடிக்குறிப்புக் காண்க.) “இறைவன் மோன முத்திரை யத்தனாய்த் தானே யிருந்து காட்ட, ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமான ஒளிமாணாக்கர்க்கு” (முருகு. நச். 11-2 உரை) நிறைதல் பற்றி, ஈண்டு இது கூறப்பட்டது போலும்.

  169. ஊமைக்குடத்து நிறைந்த இனிய நீர் போலவும் - உ. வே.

  170. “தீம்பெரும் பொய்கை யாமை யிளம்பார்ப்பு, தாய் முகனோக்கி வளர்ந்திசினாங்கு” (ஐங்.44) என்றும், “நிறைச்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த, கோட்டுவட் டுருவின் புலவுநாறு முட்டைப் , பார்ப்பிடனாகு மளவைப் பகுவாய்க், கணவ னோம்பும்” (அகம். 160) என்றும் சான்றோர் கூறுப.

  171. “சூரியகாந்தக் கல்லினிடத்தே செய்ய, சுடர்தோன்றியிடச் சோதி தோன்றுமாபோல், ஆரியனாம் ஆசான்வந்தருளால் தோன்ற, அடி ஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத், தூரியனாம் சிவன் தோன்றும்”(சிவ. சித். 8: 28) என்று அருணந்தி சிவனார் கூறுவதும் “சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே, சூரியகாந்தஞ் சூழ் பஞ்சைச் சுட்டிடா, சூரியன் சன்னிதியிற் சுடு மாறுபோல், சூரியன் றோற்ற முன்னற்ற மலங்களே” (திருமந். 117) என்று சான்றோர் கூறுவதும் ஈண்டு ஒப்புநோக்கற் பாலன.

  172. நின்மலதுரியத்துக்கும் அப்பாலாதல்பற்றியே நாவரசரும், “அப்பாலுக் கப்பாலுக் கப்பாலானை” (240: 4) என்பது காண்க.

  173. ஏனைப் பசுபாசவிலக்கணங்கள் அவ்விரண்டன் ஞானமாய்ப் பரம்பரனைக் காண்டற்குத் துணைசெய்யாமையின், பதி ஞானத்தையே ஈண்டுத் ‘தூய்மை’ யென்றார். “நீறார்திரு மேனிய ரூனமிலார் பால், ஊறார் சுவை யாகிய வும்பர் பெருமான்” (ஞான. 33:6) என்பதும் இக்கருத்தே கொண்டதாம்.

  174. பதித்துவத்தைப் பிரகாசிப்பித்தான்- உ. வே. அப்பதியுண்மையை உபதேசித்தான் - உ. வே.

  175. இவ்விடத்தே, “இவ்வளவும் பசுபாச விலக்கணம்” என்றொரு தொடர் அச்சுப்பிரதியிலுள்ளது. இளியென்பது “இசையொலிக்கும் யாழின் இளியென்னும் நரம்பு” என்பர் நச்சினார்க்கினியர்

  (சீவக. 1537 உரை).

  176. இப்பாட்டின் கருத்தும், “பரமசிவன் சதாசிவனென் பதிக்கு மேலோன் பகர்நிரஞ் சனன்நிரா மயனிரா தாரன், தரு வருண ரூபமிலான் சருவஞ்ஞன் காந்தன் சருவபரிபூரணன் சர்வான்மாவாயிருப்போன், அருள்சர்வ தோமுகன் சிந்தி யனறிவுக் கெட்டான திசூக்குமன் னிராலம்ப னென்று முள்ளான், ஒருவன் சத்தியினன் வியாபக னப்பிரமேயன் உவமையிலான் திலதயிலத் துட்புறம் பொத்துறைவோன்” (சர்வா.9) என்பதன் கருத்தும் ஒத்திருத்தல் காண்க.

  177. விரங்கும், விளங்கும்- பா. வே.

  178. மொருவிய- பா. வே.

  179. புரைதீர்- பா. வே.

  180. அகன்றோன்- பா. வே. பரந்தோன்- பா. வே.

  181. மிடும்பையு- பா. வே.

  182. யாதும்- பா. வே.

  183. புனிதன்- பா. வே.

  184. துரியமுங் கடந்த தூயோன்- பா. வே.

  185. கரைக்கறையம்பி- பா. வே.

  186. பூமியில் அடங்காத; மூவுலகிலுந்தான் அடங்காத- உ. வே.

  187. “மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத், தாவிய சேவடி” (சிலப். ஆய் குர) என்று இளங்கோவடிகளும் கூறினர்.

  188. “புவ்வத் தாமரைப் புரையுங் கண்ணன்” (15;49) என்பது பரிபாடல்.

  189. ‘தாமரைபயந்த தாவிலூழி நான்முகவொருவன்’ (முருகு. 164-5).

  190. “கண்ணன் கடிமாமலரில் திகழும், அண்ண லிருவர் அறியா இறை” (153:9) என்று ஞானசம்பந்தர் முதலாயினர் கூறுப. “அனைத்துயிர்களுமாந் தன்மையும் விண்ணோ ராற்றொழுதகைமையுமரனே, உனக்குரைத் தயன்மான். முதலியோருனது விபூதி யென்றோதியுன் பெயர்கட், கினப்பொருளுரைக்குங் கடமையாலுன்ற னிறைமையே குறித்துநின்பெருமை, சினத்தொகையகலத் தேற்று மாலதர்வ சிரோப நிடதமுழுவதுமே” (சிவதத். 23) என்று சிவஞான யோகிகள் எடுத்துக்காட்டுவது காண்க.

  191. முறைமையையுடையவன்- உ. வே.

  192. கோக்ஷிக்கப்பட்டவனாகிய- உ. வே.

  193. இக்கருத்தையே திருநாவுக்கரசர், “விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணுநிலனும், திரிதரு வாயுவல்லர் செறிதீயுமல்லர் தெளிநீருமல்லர் தெரியின், அரிதரு கண்ணியாளை யொரு பாகமாக வருள்காரணத்தில் வருவார்” (8:2) என்று கூறுதலும், கந்தபுராணமுடையார் “மூலமாகிய தத்துவ முழுவதுங் கடந்தும், ஏறுயர்த் திடு, தனிமுதல்வனன்றி வேறார்” (மகேந். சூரனமைச்சு. 131) என்பதும் சருவஞானோத்

  தராகமம், “ஸர்வதத்வ வ்யதீதஸ்ச வாங்மனோநாமவர்ஜித்:” (11:5) என்று கூறுவதும் ஒப்பு நோக்கற்பாலன. இங்ஙனம் தத்துவா தீதனாயிருப்பது கொண்டே அருணந்தி சிவனார் “மெய்தரு சைவமாதி இருமூன்றும் வித்தையாதி எய்துதத்துவங்களேயும் ஒன்றுமின்றெம் மிறைக்கே” (சிவ. சித். 2:73) என்றார்.

  194. அப்பாலாயிருக்கும் அதிசயத்தையுடையோன்- உ. வே.

  195. “ஏவ பகவான் வ்யாபீ” (1:47) என்று சருவஞானோத்தரம் கூறுகிறது.

  196. “வர்ணரூப விவர்ஜித:” (1:45) என்பது சருவ ஞானேத் தரம். “அவனருளே கண்ணாகக் காணில்லால், இப்படியன இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென் றெழுதிக் காட்டொணாதே” (திருவினா 10) என்று திருநாவுக்கரசர் கூறியருளுவர்.

  197. வண்ணங்களில் ஒருநிறமும்- உ. வே.

  198. “அதீந்த்ரிய:” (1:46) என்பது சருவஞானோத்தரம்.

  199. “தனக்குவமையில்லாதான்” (குறள் 7என்றும், “நௌபம:” (சருவஞானோ. 1:47) என்றும், “தாயவன் உலகுக்குத் தன்னொப்பில்லாத் தூயவன்” (ஞானசம். 113:2) “ஒருவராலுவமிப்பதை யரியதோர் மேனியர்” (ஞானசம். 242:6) என்றும் வருவன பலவும் காண்க.

  6.“யானெனதென்னும் செருக்கறுப்பான்” (குறள் 346) என்ற விடத்தும் யானென்பது இப்பொருளே கருதப் பட்டது காண்க. எனதென்னும் புறப்பற்றுக்கும் யானென்னும் அகப்பற்றுக்கும் முதலாதலின், அதனையே யெடுத்தோதினார்.

  7.  யானென்று மகங் காரணமாக வருவது - உ. வே.

  8.  அக்காரணமில்லாமையால் - உ. வே.

  9.  “ஒருநாமமோருருவ மொன்றுமில்லாற் காயிரம், திரு நாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” (திருவா. திருத்தெள்.1) என்று மணிவாசகர் கூறுமாறு காண்க.

  10. பெயரில்லா தோன்- உ. வே.

  11. நாதன் (நாத:) என்ற சொற்கு வடநூல்கள் “எஜமானன், ரக்ஷகன், பிரபு” என்ற பொருள்களைக் கூறுதலின், இவ்வுரைகாரர் “சருவகருத்தாவாயிருப்போன்” என்று கூறுகின்றார். “நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க” (திருவாச. சிவபு. 1) என வருதல் காண்க.

  12. ஆமயம்- நோய்; “ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்” (தாண்ட. தனி.1) என்று திருநாவுக்கரசர் கூறுதல் காண்க. பற்றினால் நோயுண்டா மென்பதை, “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” (குறள் 341) என்பதனாலறிக.

  13. ஒன்றிலும் பற்றில்லாமை என்றவேது சில ஏடுகளில் இல்லை.

  14. காலமாயிருத்தலாவது கலையித்திரி யென்னும் சத்தியோடு கூடிக் காலத்தானமாய் நிற்பது. இனி, காலகாலன் என்பதற்குச் சிவஞானமுனிவர், “கால வரையறையைக் கடந்து காலத்தினையுந் தோற்றித் தொழிற்படுத்துவோன்” என்பர். (சிவ. பாடி. 2:2 காலதத்துவம்).

  15. “அளவியை யார்க்கு மறிவரியோன்” (திருக்கோ. 10) திருவாதவூரடிகள்.

  16. “அந்தமுமாதியு மகன்றோன் காண்க” (திருவண்ட. 51) என்பதும் காண்க.

  17. மகானாயிருப்போன்- உ. வே.

  18. ஆகுலம்- கலக்கம்; “சிந்தாகுல முற்றென்னோ வென்னை வாட்டந் திருத்துவதே” (திருக்கோ. 12) என்று சான்றோர் வழங்குப.

  19. பங்கு- பாகம். நீலமேனிவாலிழை பாகத்தனாயினும் பெண்ணாணெனப் பாகம் செய்யப்படா னென்றற்கு, “நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரும் “ஆணும் பெண்ணுமா யடியார்க் கருணல்கிச், சேணின்றவர்க்கின்னுஞ் சிந்தை செய வல்லான்” (84;5) என்றும், “ஆணும் பெண்ணுமென நிற்பரேனும் ஆரவாரமாப், பூணுமேனும் புகலூர் தனக்கோர்

  பொருளாயினான்” என்றும் திருஞானசம்பந்தரும் கூறுவன ஈண்டு ஒப்புநோக்கத் தகுவனவாம். கண்டிக்கப் படாதோன்- உ. வே.

  20. கம்பம்- நடுக்கம்.

  21. சஞ்சலம்- சலனம்.

  22. அனாதியே மலத்தி னீங்கிளோன்- உ. வே. “வான்கெட்டு மாறாத மாய்ந்தழனீர் மண்கெடினும் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்” (தெள்ளே. `8) என்று மணிவாசகர் இதனை விளங்கவுரைத்தருளுமாறு காண்க.

  23. “சுத்திதரித்துறையும் சோதி” (ஞானசம். 89-10) என்பர் ஞானசம்பந்தர்.

  24. “தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன் (மறுமாற்.1) என்பர் நாவரசர். ஒருவரேவலும் பிறர்க் கேவல் செய்தலுமில்லாதோன்- உ. வே.

  25. “பந்தமும் வீடுமாய பதபதார்த்தங்களல்லான்” (சிவ. சித்தி. 1: 44) என்பர் அருணந்தி சிவனார்.

  26. “வேண்டுதல் வேண்டாமையிலான்” (குறள் 4) என்றும். “வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதலிலாமை யானும்” (சிவ. சித். 1:45) என்றும் சான்றோர் கூறுப.

  27. “நோக்காதே யெவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாதொன்றும் நுணுகினானை” (225:5) என்று நாவரசர் உரைத் தருளுவர், பிறரும், “கண்முதற் புலன்களாற் காண்டலில்லவன்” (குறுந்தி. 367) என்பர்.

  28. சமர்த்தனன்- உ. வே.

  29. “நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை, பாதியர் பராபரர் (169:7) என்று ஞானசம்பந்தர் சுருங்கவுரைப்பர்.

  30. அளக்கலாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானுமியானு மாகின்ற தன்மையனை” (312:7) என்பர் திருநாவுக்கரசர்.

  31. “துரியங்கடந்து துரியாதீதத்தே அரிய வியோமங் கொண்டம்பலத் தாடும், பெரிய பிரானை” (திருமந். 2454) என்று திருமூலனாரும் துரியமும் இறந்த சுடரே போற்றி போற்றி 195 என்று திருவாதவூரரும் கூறுப.

  32. அவத்தைகளில் நின்று காணும் ஆன்மாவின் காட்சிக்கு அப்பாலிருத்தலின், “தூயோன்” என்றார்.

  33. ஒன்றுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த அண்டப்பகுதி, “இன்னுழை கதிரீன் துன்னணுப் புரையச், சிறியவாகப் பெரியோன்” (அண்டப். 5-6) என்று மணிவாசகரும், “அண்டங் களெல்லா மணுவாசு வணுக்களெல்லாம், அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்” (திருவிளை- கட- வா) என்று பரஞ்சோதி முனிவரும் கூறுதல் காண்க.

  34. “அண்டமா யாதியாய் அருமறையோ டைம்பூதப், பிண்டமாய் (நாவ. 7:4) நிலவுதலின், அண்டமாய் நுணுகு மிடத்து அவற்றோடு ஒன்றித்தானும் நுணுகுதல்பற்றி உடனின்று நுணங்கிய என்றும் பெரியதிற் பெரிய தாயும் சிறியதிற் சிறியதாயும் பெருகியுஞ் சிறுகியும் தோன்றும் சீர்த்தி அவற்கன்றிப் பிறர்க்கின்மையின், “தண்டாச் சீர்த்தி” யென்றும் கூறுகின்றார்.

  35. அவற்றுடனின்று செலுத்திய அளவிறந்த கீர்த்தியையுடையோன் - உ. வே.

  36. பிறகடல்களெல்லாம் பிறவாறு கடத்தற்குரியவாக, நூற்கடல் ஓதியுரைத்தே கடத்தற் குரியதாதல்பற்றி, உரைதருபுணரி யென்றார். கரைகரை யம்பி யென்றவிடத்துக் கரைதல், “கலங்கரை விளக்கம்” என்புழிப்போல நின்றது.

  37. காட்சி, அனுமாதனம், ஆகமம், அபாவம், அருத்தாபத்தி, உவமை என்ற ஆறும் சட்பிரமாணமாம். “அளவை காண்டல் கருதலுரை அபாவம் பொருளொப்பாறென்பர்” (சிவ. சித். அளவை 1) என்று அருணந்தி சிவனார் கூறுவது காண்க. இவ்வாறு ஆறளவை கொள்பவா பட்டாசாரியன் நெறிநிற்பவர்; மீஞ்சகரென மணிமேகலை (27, 5-8) கூறுகிறது.

  38. பசுபாசப் பொருள்கள் ஓராற்றால் அளவைகளால் அச்சுப் படுமாயினும், பதிப்பொருளாகிய பரமசிவன் அவற்றிற் ககப்படாமை பற்றி “சேட்பட வகன்றனன் சிவன்” என்றார். சேட்பட வகலும் சிறப்பினால் அவனை அளவைகளாற் காணமுயல வேண்டா என்பதற்காகவே ஞானசம்பந்தர், “ஏதுக்களாலு

  மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா” (312:5) என எடுத்தோதினர். ஸ (சிவம்) ஏவபகவான் வ்யாபீ ஹ்யப்ரமேயோ ஹ்ய நெபம: (1:47) என்றும் நிர்விகல்பம நிர்தேச்யம் ஹேதுத் ருஷ்டாந்தவர்ஜிதம்” (2::6) என்றும் கூறுவது காண்க.

  39. பூட்கைத் தென்ன- பா. வே.

  40. அருள்கென விலகிய - பா. வே.

  41. ஞானா. 55:25-6.

  42. வியாத்தி வியாபகஞ் சொல்லியது- பா. வே.

  43. யாசிரியத்திற்- உ. வே.

  44. இனிதாக அவனை ஆராய்தலாவது: அவனையறிந்து கோடல் வேண்டுமென்னும் உண்மையன்புடன் அவனையுள்ள வாரறிவிக்கும் உண்மை நூல்களைக் கேட்டு ஆராய்ந்து தெளிதல். அந்நூல்கள், “பதி பசுபாசந் தெரித்துப் பரசிவனைக் காட்டும் நன்மார்க்க ஞானத்தை” (சிவ. சித். 8:22) யுணர்தற்குத் துணையாகும் சைவநூல் களாகும். இதனை,“வேதாந்தத் தீதில் பொருள் கொண்டு ரைக்கும் நூல்சைவம்” (சிவ. சித். 8:15) என்பதனாலுமறிக.

  45. இப்பிரபஞ்சத்தில் எவ்வியல்பாய் நின்றான் என்று சில ஏடுகளில் உரை வேறுபாடு காணப்படுகிறது.

  46. “உள்ளுமோர்புறமது மொருதனக்குளதன்றி, ஒள்ளிதா மணியொளி மலர் மணமுறை பொருடா, னெள்ளு மெண்ணையும் யாக்கையுமாவியு மெனவே, நள்ளுமேலுளுங் கீழுளும் நின்றனனாதன்” (குறுந்தி. 366) என்று பிறரும் கூறுதல் காண்க.

  47. புதுமை பொருந்திய சோதியும் - உ. வே.

  48. “மதியிற் றண்மை வைத்தோன்” (திருவண்ட. 21) நிலவைப் பொழியும் - உ. வே.

  49. “தீயின் வெம்மை செய்தோன்” (திருவண்ட, 22) என்பது திருவாசகம். “விறகிற் றீயினன் பாலிற் படுநெய் போல், மறைய நின்றுளன் மாமணிச் சேதியான்” (204:10) என்று நாவரசர் கூறுப.

  50. “அதுபழச் சுவையென அமுதென அறிதற்கரிது” (திருவா, 20:: 7) என்ப.

  51. “உடல் வரையின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன்” (363-1) என்று ஞானசம்பந்தப் பெருமான் குறிக்கின்றார். உடல் முழுதும் பரந்து நிற்கும் உயிர் முழுதும் தான் பரந்து நிற்பவன் என்பது தோன்ற, “ஆருயிர்” என்றார்.

  52. தேகமும் தேகியும் போலவும்- இது செப்பறை யேட்டிற் கண்ட உரை வேறுபாடு.

  53. “உரையினா ருறு பொருளாயினான்” (292.4) என்று ஞானசம்பந்தர் கூறுவர்.

  54. “யாவுளும் எள்ளு மெண்ணெயும் போனின்ற வெந்தையே” (திருவா. 5:46) என்று திருவாசகமும், “பஹிரந்தர் வியாகேந் திலதைலமிவஸ்தித:” (1;47) என்று சருவ ஞானேத்தரமும் கூறுகின்றன.

  55. “பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினி னாற்றத்தோடு, நாவினிற் பாடல்கள் நள்ளாறுடைய நம்பெருமான்” (7:4) என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

  56. இவன் வியாபித்திருக்கிற படிக்கு வியப்பாகிய திட்டாந்தம்; வியப்பைத் தரக் கூடியதான திட்டாந்தம்- உ. வே.

  57. இவை யொன்பதுமேயோ எத்தையென்று சொல்வோம் - உ. வே.

  58. “ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணான் குணமூன்றாய், மாறா மறை நான்காய் வருபூதம் மவை யைந்தாய், ஆறார் சுவையேழோசையோ டெட்டுத் திசைதானாய், வேறாயுடனா னானிடம் வீழிம் மிழலையே” (11:2) என்று ஞானசம்பந்தரும் “அவையே தானேயாயிருவினையின்,. போக்கு வரவு புரிய வாணையின், நீக்கமின்றி நிற்குமன்றே” (சிவ. போ. சூ. 2) என்று மெய்கண்ட தேவரும், “உலகெலாமாகி வேறாயுடனுமா யொளியா யோங்கி, அலகிலாவுயிர்கள் கன்மத் தாணையிலமர்ந்து செல்லத், தலைவனா யிவற்றின் றன்மை தனக் கெய்தலின்றித் தானே, நிலவு சீரமலனாகி நின்றன னீங்கா தெங்கும்” (சிவ. சித். சூ. 2:1) என்று அருணந்தி சிவனாரும் கூறுப.

  59. வியாபித்திருக்கச் செய்தே வியாத்தியிருக்கிற வீரியமும் - உ. வே.

  60. வாள்- ஒளி; “வாள் அவிரங்களம்” (ஞானா. 7) என்புழிப் போல.

  61. பளிங்கும் திங்கள்போல ஒளிவிடுவதாயினும் மறுவுடைமையால் அதனொளி, மறுவில்லாத பளிங்கின் ஒளிக்கு நிகராகாமை காட்ட மதிமாசூர என்று சிறப்பித்தார். கிரணாகமம், பதியையும் ஆன்மாவையும்பற்றிக் கூறுமிடத்து, “விசுத்தர் ஸ்படிக: கஸ்மாத தாம்ரம் ஸகாஞ்சிகம்” என்று கூறியதும் இந்நூலாசிரியர், “சீருணந் திகழொளிப் பளிங்குபோலப், புகழருமிறை புற்கலனுக் கென்றனன்” (ஞானா.9) என்றும் கூறியது போல ஈண்டும், ஒளிகால் பளிங்கின் பூட்சித்து என்கின்றார்.

  62. இக்கருத்தையே உமாபதி சிவனார், “பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை, மன்னிலங் கியல்பும் தந்த வளரொளி போலவையும், தன்னகம் பயிலும் நற்சிற்சடங்களின் தன்மை தாவா நன்னலம்பெற நிறைந்த ஞானமே ஞானமென்பர்” (சிவப். 69) என்றும், திருநெறி விளக்க முடையார், “பற்றிய நிறங்களாகும் பளிங்கின தொளியும்பற்றி, நிற்றலையளிக்கும் வெய்யோனீ டொளியதுவும்போல, முற்றுலகதற்குச் சார்வாய் முயற்றி னும் முந்நீர் விண்போற், சிற்றினிற் (சித்தினிற்) சடங்கள் தோயா என்பர் சிற்சத்தி சேர்ந்தோர்” என்றும், சதுர்த்த சங்கிரக முடையார் “பன்னிறப் பனிங்கிற் பற்றிடப் பற்றாப், பொன்னொளி போலு மன்னருள்” என்றும் கூறுப.

  63. சந்திரன் களங்கமுடைத்தாக ஒளியை வீசுகின்ற பளிங்கினது; சந்திரனிலும் மிக்க வொளியை யுடைத்தாய் அடுத்ததன் நிறங்காட்டுமதல்லது தன்னொளி தோன்றாத பளிங்கினது - உ. வே.

  64. செய்தி போல்வதாம் - உ. வே.

  65. இதனுண்மை குருமுகமாக வறிந்து கொள்க என்றொரு வாக்கியம் அச்சுப்பிரதியில் இங்கே காணப்படுகிறது.

  66. தம்பிரானே- உ. வே. இவ்வாகமங்ளெல்லாம் சத்தி நிபாதர்க்கேயன்றி மயக்கத்தால் உலகில் நில்லாதவற்றை நிலையின என்று கருதி மயங்குவோர் பொருட்டாதலால், மருள்கெட விலங்கிய

  மறை யென்றார். உயிர்களிடத்தே முதல்வன் கலந்து நிற்கும் இயல்பைக் கல்லாரறியாராதலின் அவர் பொருட்டு இவற்றைச் செய்தல் வேண்டுவதாயிற்றென்பதுபட, திருமூலனார், “வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார், அல்லாதவர்கள் அறிவுபல என்பர், எல்லாவிடத்து முன்னெங்கடம்மிறை, கல்லாதவர்கள் கலப்பறியாரே” (திருமந்:311) என்றும், “ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே” (திருமந். 242) என்றும் கூறுதல் காண்க. ஞானசம்பந்தரும், “விழையா ருள்ளம் நன்கெழ வேதமாறங்கம் பிழையா வண்ணம் பண்ணியவாற்றால் பெரியோரேத்தும் பெருமான்” (42.7) என்பதும் ஈண்டுக் கருதத்தக்க தாகும். ஈண்டு, “பவபந்த விமோக்ஷார்த்தம் பரமம் ஸர்வதோ முகம் (2;3) எனச் சருவஞானோத்தரம் கூறுவது எண்ணுதற் குரித்து.

  67. புலன்- ஈண்டு அறிவின்மேற்று, “புலவரை யிறந்த புகழ் சால்தோன்றல்” (புறம்.21) என்றாற்போல. புலப்படுதல்- அறிவிற்கு அகப்படுதல்.

  68. இப்படியானா லெனக்குப் புலனல்லவாயிருந்தது; அறியுமுபாயமருளிச் செய்யவேண்டுமென்று -உ.வே.

  69. இப்பாட்டின் பொருளையே சுருக்கமாகச் சிவஞான பாடியத்தே சிவஞான முனிவர் கூறுகின்றார்; அது வருமாறு:- “இனி, குடத்தையும் அதனை வனையும் குயவனையும் ஓரிடத்து ஒருங்கு கண்டான், அல்லுழிக் குடத்தைக் கண்டு, இதுவும் வனைதற்கு ஒரு கர்த்தாவை யுடைத்தென அனுமித்துணர்வது போல, இவ்வுலகம் படைத்தற்கு ஒரு கருத்தாவுண்டென வழியளவையான் உணர்தற்கு முன்னோ ருலகத்தையும் அதனைப் படைப்பானொரு கடவுளையும் ஒருங்கு கண்ட தின்மையின், அவினாபாவம் அறிதல் கூடாமையின், அனுமானமே ஈண்டைக் கேலாதென்றாய் ஈண்டு வினாவுதும் அட்டிலிற் புகையும் தீயும் ஒருங்குடன் கண்டான்.மற்றோரட்டிலிற் புகை கண்டவழி, ஆண்டுத் தீயுண்டெனத் துணிதல் கூடும். மலைமேற் புகை கண்ட வழி, ஆண்டுத் தீயுண்டென அட்டிலிற் புகையை யெடுத்துக் காட்டித் துணிதல் கூடாதாகல் வேண்டும்; என்னை? சிறிதாகிய அட்டிற் புகைக்குப் பெரிதாகிய மலையிற் புகை வேறுபாடுடைமையான், ஆண்டுத் துணிபு நிகழ்ந்தவாறு என்னை யென்பது. ஆண்டுத் துணிபு நிகழா தென்பையாயின், நீஅனுமானங் கொண்டவனல்லை. வேறு பாடுடைத்தாயினும் புகை யென்னும் சாதி சாமானியம் பற்றித் துணிந்தேன் என்பையாயின், ஈண்டும் அஃது ஒக்கும். செயப்படு பொருளையும் செயலையும் செய்வோனையும் ஒருங்குடன் கண்டவன், அல்லுழிச் செயப்படு பொருளைக் கண்டவழிச் சாதி சாமானியம்பற்றி, இதுவும் செய்வோனை யுடைத்து என்று அனுமானத்தால் துணிதல் பொருந்தும் என்றொழிக” (சிவ. பாடி. சூ. 1. அதி.2)

  70. கிரிவளர் தூம மதனி லெரிவளர், அட்டி லொண்புகை யயலெனவுணர்ந்து மொட்டினை- பா. வே.

  71. தென்னை விசேட மென்னி னன்னோ, காட்சிய தலதிலைச் சமனிய மாட்சிய- என இவ்வாறு இவ்வடிகள் அச்சுப்பிரதியிற் காணப்படுகின்றன.

  72. னென்றோ- பா. வே.

  73. பூவும் பூதரமு முதலவாகிய பிரபஞ்சம் என உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அனமொழித் தொகையாய், உடைத்தென்னும் ஒருமை வினைகொண்டது; “பூதாதி” (சிவ. போ. சூ. 1:2 வெ.1) என்பதுபோல.

  74. இப்பிரபஞ்சத்தில் கணந்தோறும் இடையறாத தோற்றமும் நிலையும் இறுதியும் காணப்படுதலின், செய்வோனுக்கும் செய்கை இடையறாமை பற்றி,ஓவற உஞற்றும் ஒருவன் என்றும், பிரபஞ்சம் பெரிதாயினும், செய்வோன் ஒருவனே என்றற்கு ஒருவன் என்றும் கூறினார்.

  75. பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய ஆகமங்களெல்லாம் இப்பிரபஞ்சம் கடம்போலக் காரியப் பொருளாதலின், செய்வோனையுடைத்தென்றே கூறுதலின், இவற்றை மேற்கொண்டு கூறும் இவ்வாசிரியரும் இப்பிரபஞ்சம் செய்வோனொருவனை யுடைத்தென மேற்கொள்ளுகின்றார்.

  76. “காரியம் காசினி யாதி ஏரியல், ஈசன் கத்தா” (ஞானா.18) என்றாராகலின், ஆண்டுப் பக்க தருமமாக வைத்தோதிய காரியத்துவத்தை ஈண்டு ஏதுவின்கண் வைத்து, முதல்வன் உண்மையைச் சாதிக்கின்றார். இவ்வாறு பிரபஞ்சம் காரிய மென்பதை முன்பே கூறினமையின், ஈண்டு அதனைக் கூறாராயினர். இனி மெய்கண்டதேவர், பிரபஞ்சத் தொகுதி காரியமென்றும், அதனால் அஃது செய்வோனை உடைத்தென்றும் கூறுவாராய், அவனவளது வெனுமவை மூவினைமையின், தோற்றிய திதியே என்றும், அந்தமாதி யென்மனார் புலவ ரென்றும் கூறியருளினாராக, அருணந்தி சிவனார், அதனை விளக்கி, “ஒருவனோ டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலகமெல்லாம், வருமுறை வந்து நின்று போவது மாதலாலே, தருபவனொருவன் வேண்டும்” என்பாராயினார்.

  77. காரிய ரூபமாயிருத்தலால்- உ. வே.

  78. “கார்யதா சாஸ்ய விச்வஸ்ய ஸபாகதவாத் கடாதிவத்

  வ்யோமாதி ரபி ஸாம்சோரபி ஸகுணத்வாத் யதா கட;”

  (பௌட். 1. 92-93) என்றும், “விச்வம் ஹி க்ரியா சக்தியதிஷ்டித காரண ஜன்யம் கார்யத்வாத் கடவத்” (மதங்கம்) என்று கடத்தையே திட்டாந்தமாகக் கூறுகின்றன.

  79. “அந்நுவயத்தின் மாத்திரம் வியாத்தியுடையது கேவலாந் நுவயி; அஃதெங்ஙனம் எனில், ‘குடம் அபிதேயம், பிரமேயத்தன்மையால், ஆடைபோல’ எனவரும்; ஈண்டுப் பிரமேயத்தன்மை அபிதேயத் தன்மைகட்கு வெதிரேக வியாத்தியின்று, எல்லாப் பொருளும் பிரமேயமும் அபிதேயமுமாதலால், பிரமேயம் அளவையால் அளக்கற் பாலது; அபிதேயம் பெயரிட்டு வழங்கற்பாலது” (தருக்க. சங். 53 அன்னம்).

  80. இங்கே கூறியவாறே மிருகேந்திரம்

  “அதோபலப்ய தேஹாத வஸ்து தார்யத்வதர்மதம்

  கர்த்தார மஸ்ய ஜாநீமோ விசிஷ்டமனு மானத:”

  (iii -1) என்று கூறுகிறது.

  மேலே நிகழும் கடாவிடைகளால் தொடக்கத்தே இசையாமை பெறப்படுதலின், இசைந்தால் என்று உரை கூறுகின்றார்.

  81. செய்தனவேயன்றிச் செய்கின்ற குடத்தையும் செய்பவ னாகிய குயவனையும் தொழில் நிகழ்ச்சிக்கண் காண்பது தோன்ற, ஒருங்கு கண்டோன் என்றொழியாது, ஒருங்குடன் கண்டோன் என்றார்.

  82. வேறிடத்திலே காணப்படுவன முன்கண்டவற்றின் வேறாய் மாறுபட்டிருந்த வழி, அனுமானம் இனிது நிகழாமையின், இகலிரிகுடம் என்றார்.

  83. அளவிறந்த பல- உ. வே.

  84. ஒருவன் என்றவிடத்து ஐயுருபு தொக்கது “ஐகார வேற்றுமைத் திரிபு” (தொல். எழுத். 157).

  85. இவ்வண்ணமே மிருகேந்திரமும்,

  “ஸம்பந்தாக்ரஹனாத் பாதா மானஸ்யாப்யேதி கஸ்யசித்

  ஸா பிரஸ்யாபி தூமாக்ன்யோ: கிரௌ மாஹாநஸாதித:”

  (iiin.6)என்று கூற, இதற்கு உரைகண்ட நாராயண கண்டர் ஈண்டுக் கூறப்படும் கருத்துக்களையே உரைக்கின்றார்.

  86. இஃதெனற்குரிய ஆய்தம் விகாரத்தாற் றொக்கது; “புண்ண துணர்வார்ப்பெறின்” (குறள் 257) என்புழிப்போல.

  காட்சியளவையாலே சீடன் செய்துகொண்ட வேண்டு கோட்கு விளக்கம் கூறுகின்றாராகலின், காட்சி யளவையை என்றார். நில்லாமையை இயல்பாகவுடைய பொருளை, “நின்றதில் பொருள்” (ஐங். 336) என்றாற் போலக் காட்சியாலளக்கப்படும் அளவையைக் “கண்டது” என்றாரெனவறிக. மானம்- அளவை; “கதிர்முலைகள் மானக் கனகந்தரும்” (திருக்கோ. 335).

  87. அனுமானமல்லக்காண் என்பது சில ஏடுகளில் இல்லை.

  88. “இதற்கியா னனுமானாதி யெடேன்” (சிவ. சித். 1:2) என்ற அருணந்தி சிவனார் உரை ஈண்டு நினைவுக்கு வருமாறு காண்க.

  89. மலையிடத்தே மூங்கில் தம்மில் இழைதலால் தீப்பிறத்தலை, “ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉம், குன்று” (ஐங். 307) எனவும், கடுத்தெழுந்த காம்புத்தீ, மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழல்” (கலி. நெய். 33) என்றும் வருதலாலறிக.

  90. “அட்டிற்புகையும்” (சிலப்.13: 122) உணர்ந்தென்புழி உம்மை தொக்கது.

  91. திட்டாந்தமாகக் கூறல் - உ. வே.

  92. முதலது உண்டாயதென்னும் பொருளது; மற்றது உடன் பட்டனையென்னும் பொருளது. மலையிலெழும் தீ நெடிது பரந்து எரியுமாதலின் அருகிற் சென்று காண்டல் முடியா தாகலின் சேய்மையிலிருந்தே புகை நோக்கி உணர்தல் வேண்டுவதாயிற்று.

  93. விசேடம் என்றது சிறப்பறிவு; சாமானியமென்றது பொது அறிவு. சாமானியமாக எல்லா அடுக்களையிலும் எரியும் நெருப்பும் புகையும் கண்ட அறிவால், விசேடமாக மலையிடத்து நெருப்புண்மையைப் புகையாகிய சாமானியத் தால் அறிகுவனென்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினார்.

  94. வளைவிற்குட்பட்டவை உரைகாரரால் வருவித்துரைக்கப்படுகின்றன.

  95. மலையிடத்துப் புகையும் அட்டிற்புகையும் கண்டு ஒன்றற் கொன்று விசேட சாமானியமாதலைக் கூறி, உலகத்தைப் பண்ணுஞ் செயலை இவ்விசேட சாமானியங்களில் எதனாற் கொள்வ தென்பார், “நீ கொள்ளுமது யாது சொல்வாய்” என்று உரைக்கின்றார்.

  96. விசேடம் கோடற்குரித் தென்றற்கு ஏது, “உலகத்தைப் பண்ணுஞ் செயல் பெரிது” என்பது.

  97. அக்கொள்கை காட்சியளவையே மேற்கொள்வதென்பமாய் உலகாயதன் மதமாய் முடிதலின், அன்னோ என்றார்; மாணவன், பதியுண்மை யறியும் வேட்கையனாதலால், புலனோடு புணராது அருளுமின் அடிகள் (ஞானா - 56) என்றும், “கண்பனி தூங்க மெய்ம்மயிர் பொடித்துதைத் தன் முதல் கலங்க, இழந்த நெஞ்சமொடு இறைவன்பாதம் ஓதினன் வீழ” (ஞானா 54) என்றும் கூறியிருத்தல் காண்க. உலோகாயதர் காட்சியொன்றே அளவையாகக் கொள்வரென்பதை. மணிமேகலை

  யாசிரியர் “பாங்குறுமுலோகாய மேத” என்பதுமுதல் ‘இவையே யிப்போ தியன்றுள வளவைகள்’ என்பது வரை (27: 78- 85) கூறியவாற்றானும், “ஈண்டளவை காட்சி மனமாதியிரு மூன்றாய், வேண்டுமனுமான முதலான பல வேண்டா” (சிவ. சித். பா. 13) என்று அருணந்தி சிவனார் கூறு மாற்றானுமறிக. அவன் நிரீசுவரவாதி யாதலால், அவன் கொள்கை தோன்றுதற் கிரங்கினார்; “கன்மம் உயிர் இறைவேறுண்டென்று செப்பிடுமவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்றமென்னோ” (சிவ. சித். பர. 17) என அவ் வுலோகாயதன் கூறுவது காண்க.

  98. தொடங்கிய வினையொன்று வென்றியுற முடிந்து கருதிய பயனை விளைத்தாலன்றி மாண்புடைத் தெனற்காகாமையின், மாண்வினை என்று சிறப்பித்ததனால், “காரியமாகிய உருவப்பொருள்” உண்டாகியிருப்பது பொருளாகக் கூறப்பட்டது. வினையென்பது ஆகுபெயர்.

  99. இக்கருத்தே, “விச்வம் ஹி க்ரியா சக்த்யதிஷ்டித காரண ஜன்மம், கார்யத் வாத் கடவத்” என மதங்காகமத்தும் கூறப்படுவது காண்க.

  100. சொல்லத் தகுங்காண்- உ. வே.

  101. இதுகாறும் கூறியவாற்றால், செயப்படு பொருளெல்லாம் காரியமாய் உருவமாயிருத்தலால், அவற்றின் வழியே செய்வோனொருவனுண்மையை ஏற்றுக் கோடலமையும்; ஆகாய முதலியன அருவப் பொருளாதலின், அவற்றைக் காரியமென்றும் அவற்றைச் செய்வோனொருவனுண் டென்றும் கோடல் யாங்ஙனம் என்றற்கு, “மாகமாதிய வினையாகெற்று” என்றான். ஆகு, ஆகுதல்; “ஆகுவினை” (அகம்.262) என்புழிப் போல.

  102. வினைப்பட்டமை - உ. வே.

  103. விண்ணப்பம் செய்தால் - உ. வே.

  104. இக்கருத்தையே பௌட்கராகமம். ‘……கார்யதா சாஸ்ய விச்வஸ்ய ஸபாகத்வாத் கடாதிவத்….’ என்று கூறுகிறது. ஈண்டுச் சிவஞானபாடியம், “உலகம் தோன்றி நின்றழியும், அவன் அவள் அது என்று இவ்வாறு பகுக்கப் படும அவயவப் பகுப்புடைமையின், ஆடைபோலும் என்னும் அனுமான

  முகத்தானே மூவினையுடைமை துணியப்படுமென்பதாயிற்று” (சூ. 1, அதி.1) என்பது ஒப்பு நோக்குக.

  105. அது பாகமாகிய நான்கு தத்துவமும் வாயு, தீ, நீர், நிலம் என்ற நான்குமாம். இந் நான்கிலும் சத்ததன் மாத்திரை யாகிய ஆகாயத்தின் கூறு கலந்திருத்தல் பற்றி, இவை ஆகாயத்தின் பாகமாகக் கூறப்படுகின்றன.

  106. செயப்படுபொருளாயே யிருக்கும் - உ.வே.

  107. குணமுடைத்தாகலானும் - உ. வே.

  108. பிருதிவி சத்தம் முதலிய ஐந்து குணங்களையுடைய குணப் பொருளாதலாலும், ஆகாயமும் அவ்வாறே சத்த குணத்தையுடைய குணிப்பொருளாதலாலும், ஆகாயமும் பிருதிவி தத்துவம்போல உருவ முடைத்தாம் என்றார்.

  109. ஆகாசம் முதலிய தத்துவங்கள் முதலியன முறையே சத்தம் பரிசம், உருவம், இரதம், கந்தம் என்ற தன்மாத்திரை யைந்தன் காரியமாய்த் தோன்றியனவாதலின், இவை ஆதிய என்றும், காரியமெனவே அழியு மென்றும் கூறினார். திருஞானசம்பந்தரும் “இருநிலனது புனலிடை மடிதர எரியதுபுக எரியது மிகு பெருவளியினிலடைதர வளிகெட வியனிடை முழுவது கெட இவர்களுடல் பொறையொடு திரியெழி லுரு வுடையவன்” (22: 7) என்று இவற்றிற்கு ஒடுக்கங் கூறுவது காண்க.

  110. என்று கொண்டு சொல்வாயாக- உ. வே. ஈண்டுக் காட்டப்பட்ட ஆகாயம் பொருளாக வெழுந்த கடாவும் விடையும், பௌட்கரத்தில்“வ்யோமாதிரபி ஸாம்சோபி ஸகுணத்வாத்யதா கட: விவாதாத் யாஸிதம் தஸ்மாத் ஜகத் கர்த்ரு புரஸ்ஸரம்” என்று கூறப்பட்டிருக்கின்றன.

  111. நீதிய னெவன்பதி யேற் கோதமல, நேகாந்திக- பா. வே.

  112. நின்ற- பா. வே.

  113. துரையா டுநரிலர்- பா. வே.

  114. மயலற- பா. வே.

  115. முரண்மிகு சேதனன்- பா. வே.

  116. செய்திக் கோதிடின்- பா. வே.

  117. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை.

  118. பொன்றா- பா. வே.

  119. குன்றாத்- பா. வே.

  120. கர்த்தா வாயுள்ளோனே -உ. வே.

  1.உணர்வதென்பது உணர்வதற்குக் கருவியாகிய அளவைமேல் நிற்றலின், அளவைகளை என உரை கூறினார்.

  2.  அறியக் கடவோர்க்கு அறியும் பொருள்கள்- உ. வே.

  3.  ஞானா, 55: 25 உரை காண்க.

  4.  சட்பிரமாணங்களாலே அறிவிக்க அவ்வகையால் அறியலா மாதலாலே- உ. வே.

  5.  அளவைகளானும் பொருந்துமாற்றானும் உண்மையுணர்தலே நன்னெறி யாதலால், அளவையினுணர்த்த வுணர்தல் வேட்கையென் என்றான். அளவைகளையும் பொருந்துமாற்றையும் திருவள்ளுவர் “நல்லாறு” (குறள் 242) என்பர். இவ்வாறே பௌட்கரம் மகரிஷிகள் உரையில் வைத்து “யாங்கள் அளவைகளானும் பொருந்து மாற்றானும் உண்மை யுணரும் இயல்பினோ மாதலால் , இப்பதிப்பொருள் உணர்த்தப்படவேண்டும்” என்ற கருத்துபட, “ப்ரமாணை ரபி வக்தவ்யோ யுக்தி போத்யா ஹிஸாதவ:” (1-79) என்று கூறுகிறது.

  6.  இது சில ஏடுகளில் இல்லை.

  7.  இதனை பௌட்கரம், “அசேதநம் ஜகத்ஷப்ரா: சேதநப் ரேரணம் விநா ப்ரவ்ருத்தௌ வா நிவ்ருத்தௌ வா ந ஸ்வதந்த்ரம் ரதாதிவத்”

  8.  விநா என்பது எதிர்மறைப் பொருட்டாய வடசொல். இராமம் விநா, இராமேண விநா, இராமாத் விநா என முறையே 2,3, 5ம் வேற்றுமைகளில் வரும் என்ப.

  9.  பிரவிர்த்தி நிவிர்த்தி யெய்துதல் கூடாதென்று நிச்சயித்துக் கொள்க; இது ஏது- உ. வே.

  10. மிகுதியையுடைய- உ. வே.

  11. இதனை, “யோத்ர ப்ரவர்த்தக ச்சக்த: ஸபதி: பரிபட்யதே” (1-80) என்று பௌட்கரமும் கூறும்.

  12. இஃது உபநயம்; இது தான் எஞ்சியது என்றொரு தொடர் அச்சுப்பிரதியிற் காணப்படுகிறது.

  13. பசுவின்பால் கன்றை வளர்ப்பது போல அசேதனமான உலகமே பிரவிர்த்தி நிவிர்த்திகளைச் செய்யும்; இதற்கொரு முதல்வன் வேண்டாவே” யென்ற கருத்தால், “அநேக விதத்தாலே அசேதனம் பிரவிர்த்தி நிவர்த்தி யெய்தி நிற்றல் கூடும்” என்றான். “பால் சுரந்து கன்றினை வளர்ப்பவும், காந்தம் இரும்பை வலிப்பவும் கண்டாமாகலின் சடத்துக்குஞ் செய்தியில்லை யென்பது பொருந்தாது” என்று சிவஞானபாடியத்தும் இது காணப்படுகிறது.

  14. ஈண்டுக் கூறப்படும் கருத்து, பௌட்கரத்தில், “நாநை தாந்திகதா ஹேதோ: க்ஷீரே வத்ஸவிவ்ருத்திதே சேதநே ந தவாம் யஸ்மாதி ப்ரவ்ருத்தம் வத்ஸ வ்ருத்திதம் த்ருதாத் தேஹாத் ப்ரவர்த்தேத ப்ரவ்ருத்தஸ் சேத் ஸ்வத: பய: நச ப்ரவர்த்ததேயங்மாத் சேத நா பேக்ஷிதா ஸ்திதா” (1. 81-2) என்று காணப்படுகிறது. சிவஞான பாடியத்தில், இச் செய்தி, “பால் சுரந்து கன்றினை வளர்ப்பவும் காந்தம் இரும்பை வலிப்பவும் காண்டலிற் சடமும் கூட்டுவானை யின்றியமையும் என்பது பொருந்தாது: பால் சுரந்து வளர்க்குமாயின் உயிர் நீங்கிய ஆவின் முலையினும் பால் சுரத்தல் வேண்டும்; அஃது இன்மையின் சேதனமாகிய ஆவையின்றி அமையாமை யுணர்க” (சூ. 1. அதி. 2) என்று காணப்படுகிறது.

  15. “நாப்யயஸ்தாந்தேந வ்யபிசார: தத்ராபியோக்த்ரதிஷ் டிதத்வ ஸத்பாவாத் உபயோரபி பக்ஷகோடி நிவேசஸம் பவாத்ச ததுக்தம் ஸ்ரீபௌஷ்கரே- “நாப்யயஸ்காந்த த்ருஷ்டாந்தஸ்ஸ கதாசித் ப்ரவர்த்ததே அயஸ்காந்தோபி யோக்தாரம் அபேக்ஷ்யைவ ப்ரவர்த்தக; அயஸ்காந்தோபி யோக்தாரம் அபேக்ஷ்யைவ ப்ரவர்த்தக; கிம்ச பக்ஷீக்ருத: ஸோபி ஜடஸ்ஸன்ய: ப்ரவர்த்ததே ஸ்வப்ரவ்ருத்தௌ பராபேக்ஷம் அசேதநமத: ஸ்திதம்” என்று சிவாக்கிர பாடியம் கூறுவது காண்க.

  16. மட்டிடப்படாத அறிவையுடைய பரமசிவன் - உ. வே.

  17. ஈண்டுக் கடாவிடைகளால் விளக்கிய கருத்தையே சிவஞானமுனிவர், பாடியத்தின்கண், “வினையே யமையும் இறைவன் வேண்டாவெனின், - அற்றன்று: வினையும் மாயை போலச் சடமாகலின், கூட்டுவானையின்றி யமையா தென்க; பால் சுரந்துகன்றினை வளர்ப்பவும், காந்தம் இரும்பை வலிப்பவும், காண்டலிற்சடமும் கூட்டுவானை யின்றி யமையுமென்பது பொருந்தாது; பால் தானே, சுரந்து வளர்க்குமாயின் உயிர் நீங்கிய ஆவின்முலையினும் பால் சுரத்தல் வேண்டும். அஃதின்மையிற் சேதனமாகிய ஆவையின்றி யமையாமை யுணர்க. காந்தம் இரும்பை வலித்தலும் அவ்விரண்டனையும் இயைவிக்கும் சேதனனை யின்றியமையா வென்க” (சிவ. போ. பாடி. சூ. 1:அதி.2) என்பர். “கர்மசித்ரஹிதம்தஸ்மாத் யோஜகம்ததபேக்ஷதே யோஜகஸ்ஸ மஹேசான: ஸ்வேச்சயா பலவான் யத: என்று பராக்கிய ஆகமம் கூறுகிறதென்பர்.

  18. இனி, சிவஞானமுனிவர், “அற்றேல், உயிர்கள் சேதன மாகலின், அவையே யமையும், இவற்றின் வேறாய் இறைவனுண்டென்பதற்குப் பிரமாணமில்லை யெனின்” -என ஆசங்கிக்குமாறு காண்க இக் கருத்தே பவுட்கரத்திலும்:- “ஏவம் சேத் சேதநாஸ்ஸந்தி புருஷாஸ்ஸர்வஸம்மதா: தேஷாமேவாஸ்தி கர்த்ருத்வம் கிமந்யேந பதேச்வரே” (பவுட் 1.85) என்று கூறப்படுகிறது.

  19. ஈண்டு ஆசிரியன் விடுக்கும் விடையினையே, மேலே “இறை வனுண்டென்பதற்குப் பிரமாணமில்லை யெனின் “என் றெழுப்பிய கடாவிற்கு விடையாகச் சுருக்கமாய், “அற்றன்று, உயிர்கள் மலத்தாற் கட்டுற்றுச் சுதந்தர மின்றித் தம்முடைச் செயற்கும் குடம் போல வேறொரு கருத்தாவையவாவி நிற்றலானென்பது” (சிவ. பாடி. 1:2) என்பர். “அஜ்ஞோ ஜந்து ரனீசோரயம் ஆத்மா யஸ்மாத் த்விஜர்ஷயா: ஸோரபி ஸாபேக்ஷ ஏவ ஸ்யாத் ஸ்வப்ரவ்ருத் தௌ கடாதிவத் ‘இஷயதே ஸகதம் கர்தா கர்தா தஸ்மாத் மஹேச்வர: (1. 86.87) என்று பவுட்கரம் கூறுகிறது. மேலும், “கிம் காரணம் ப்ரஹ்ம குத: ஸ்ம ஜாதா: ஜீவாமகேந க்வ ச ஸம்ப்ரதிஷடா அதிஷ்டிதா: கேந ஸூகேதரேஷூவர்த்தாமஹே ப்ரஹ்மவிதோ வ்யவஸ்தா: என்று கேட்டுக்கொண்டு இவற்றிற்கு விடையாக, “காலஸ்வபாவோ நியதிர்யத்ருச்சா பூதாநியோநி: புருஷ இதி சிநத்யம் ஸம்யோக ஏஷாம் ந த்வாத்ம பாவா தாத்மா ப்யச: கதுஸூ: கஹேதோ:” என்று சுவேதா சுவதரம் கூறுவதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  20. ஆசு இல் என்பது ஆசு இன்றாக எனப்பிரித்துப் பொருள் கூறப்படுகிறது.

  21. இவ்வுரைப்பகுதி சில ஏடுகளில் இல்லை.

  22. “கண்ணிறைந்த கடிபொழி லம்பலத், துண்ணிறைந்து நின்றாடுமொருவனே” (திருநா. 115;8) என்று அருளிச் செய்ய- இஃது அச்சுப்பிரதியில் காணப்படுகிறது.

  23. பொன்றா என்று பாடங்கொண்டு, அதனை வீடடைபவரென்பத னோடியைத்து, அழியாத முத்தராயிருப்பாராலே யென்று உரை கூறிய ஏடும் உண்டு.

  24. இது சில ஏடுகளில் இல்லை.

  25. இதனைச் சிவஞானமுனிவர், “அற்றேல், மலம் தீர்ந்த முத்தரே அமைவரால் எனின்- நன்று சொன்னாய்; முத்தராவார் ஆதிமுத்தரோ? அனாதி முத்தரோ? கூறுவாயாக” என்பர்.

  26. “அனாதி முத்தரெனின், அதுவே எமது சித்தாந்த மாகலின் சித்த சாதனம்; ஆதி முத்தரெனின் அவருக்கும் முத்தியளிப்பவன் முன்னரேயுளனாதல் பெறப்படு மாகலின், அனாதி முத்தனாகிய இறைவன் உண்டென்பது தெற்றென வுணர்க” (சிவ. பாடி. க. 2) என்பர் சிவஞான முனிவர். ஈண்டு நிகழ்த்தப்படும் கடாவிடைகளையே பௌட்கரம், விமுக்தாஸ்தர்ஹி கர்த்தாரோ பவெயுரிதிசேன் மதி:

  கிமாதி முக்த: ஸ்யத் கர்த்தா நாதி முக்தோபித வா த்விஜா:

  அனாதி முக்தஸ்சேத் கர்த்தா ஸித்தா ஸாதனதா ததா

  ஆத்யஸ்சேன் முக்தி தஸ்தஸ்ய கர்த்தா ப்ராகேவ ஸித்யதி

  அன்யதாயம் கதம் முக்தோ பத்தஏவ ஸதா பவேத்

  நமோக்ஷம் யார்தி புருஷா: ஸ்வஸா மர்த்யாத் கதாசன

  முக்த்வா ப்ரஸாதம் தேவஸ்ஹ சிவஸ்யாசிவ ஹாரிண:

  *(87-90) என்று கூறுகிறது.

  27. முத்தி ஒன்றாது எனவே, முத்தான்மாக்களுக்கு மேலாக அவர்கட்குரிய சிவபோகம் விளைத்து நிற்கும் முதல்வன் உண்டென்றும் அவனே சிவன் என்றும் கூறியவாறாம்; இதனை மிருகேந்திரம், கார்யம் ந ஸ்திதி ஜன்மாதி பீ ஜஸ்ய ப்ரக்ருதேரணோ:

  பாரிசே ஷான்ம ஹேசஸ்ய முக்தஸ்ய சிவ ஏ வ ஸ; ” என்று கூறுதலாலறிக.

  28. “அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கி ஞானம், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (132: 6) என்று ஞானசம்பந்தர் கூறுவதும், நாவரசர், “உறவுக்கோல் நட்டுணர்வுக் கயிற்றினால், முறுக வாங்கிக் கடைய முன்னிற்குதே” (204: 10) என்பதும் இக்கருத்தை வலியுறுத்துவது காண்க.

  29. ஒழியாமலே - உ. வே.

  30. பாசத்தைச் செறுதற்குரிய பெருந்தகையைச் செற்ற பெருந்தகை என்றார்; இஃது உபசாரம்.

  31. இதன் உரை ஏடுகளில் சிதைந்திருக்கிறது.

  32. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை.

  33. இது கேவலான்னுவய வெதிரேகியனுமானத்தாற் பதி சாதகம் கூறியது- பா. வே.

  34. செயலாயுள்ள வெல்லாம்- உ. வே.

  35. செய்யப்படும் வினை முழுதும் செய்வோன் ஒருவனையின்றி நிகழாமை யாவரும் நன்கறிந்த தொன்றாகலின், அதனைப் பக்கமாகக் கொண்டு எல்லாத் தொழிலும் இறைவற் குறித்த என்கின்றார். “கர்மசித்ரஹிதம் தஸ்மாத் யோஜகம் ததபேக்ஷதே; யோஜகஸ்ஸ மஹேசான: ஸ்வேச்சயா பலவான் யத:” என்று பராக்கியமென்னும் ஆகமம் இதனையே கூறுவது காண்க.

  36. இவை செப்பறைப் பிரதியில் உள்ளன. எல்லாக் காரியங்களும் ஒருபடித்தாயின்றி ஒவ்வொன்றும் வேறு விதமாய் இருப்பது ஈண்டு ஏதுவாகக்கொள்ளப்படும். குணமும் காரியமே என்று சாதித்தற்குச் சான்றோரும், இந் நின்றுழி நில்லாத் தகைமையினையே- “அசேத நானேகத்வாத் குணா: தார்யமிதாஹ்ரு தம்” (பௌட். 6-25) என எடுத்தோது கின்றனர்.

  37. ஒருபடித்தாய் நிற்கப்படுவது - உ. வே.

  38. ஒருவராற் செய்யப்படுங் காரியமன்றுகாண் - உ. வே.

  39. மையுகும்- பா. வே.

  40. மெல்லிய- பா.வே.

  41. மெல்லாச்- பா. வே.

  42. தன்றனதாக- பா. வே.

  43. முதல- பா. வே.

  44. மிரித்திக லிரிந்த- பா. வே.

  45. நல்லோன்- பா-வே.

  46. இவ்வடி எல்லாப்பிரதிகளிலும் ஈசனாக வியையும் என்றே காணப்படுகிறதெனினும், உரை நோக்கி இவ்வாறு கொள்ளப்பட்டது.

  47. அறியுங்காலே- பா. வே.

  48. ஞானா. 57

  49. விந்து- சுத்தமாயை; சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை யென்ற மூன்றும் முறையே விந்து, மோகினி, மான் என்ற பெயர் கொண்டு பிரபஞ்சத் தோற்றத்துக்கு முதற்காரணமா மென்பதை, “சகத்தினுக் குபாதானங்கள் விந்து மோகினி மான் மூன்றாம்” (சிவ. சிர். சூ1:57) என்றும் “துன்பத்தோடு விரவுதலின்றி இன்பமாத்திரையே பயத்தற் கேதுவாயது பற்றி சுத்தமாயை யென்றும் சான்றோர் கூறுப. சுத்தம், அசுத்தமென வேறுவேறு பெயர் கூறப்பட்டதாயினும், மாயையொன்றே யெனக் கொள்க; இதனைச் சிவஞான முனிவர், “கன்மமொன்றே சுத்தகன்மம் அசுத்தகன்மம் என்று இருவகைப்பட்டவாறு போலப் பயத்தல் விசேடத்தானும் அறிவித்தல் விசேடத் தானும் சுத்தமாயை அசுத்தமாயை யென்று இருவகைப் பட்டு நிற்கும்” என்று சான்றோர் உரைமேல் வைத்தோதுவது காண்க. சிறப்புடைமை பற்றி, விந்து என விதந்தோதினாரெனவறிக. “அசுத்தமாயை முதற் காரணமா

  கிறதில்லை” (இரத். சூ. 48) என்று கூறுபவாதலின், சுத்தமாயையே ஈண்டுக் கூறப்பட்டது.

  50. சிவதத்துவத்தினுடைய கலக்கத்திலே யுண்டானது -உ.வே.

  51. இவ்வுண்மை குருமுகமாக அறிக என்றொரு குறிப்பு ஈண்டு அச்சுப்பிரதியிற் காணப்படுகிறது.

  52. இந்தச் சுத்தமாயை பரமசிவன் சிற்சத்தியால் கலக்கப் பட்டுத் தொழிற்படுவதாகலின், சேதனமன்மையின் என்றார்.

  53. இவ்வாசங்கையினையே அருணந்தி சிவனாரும், “தோற்று வித்தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கண் மூன்றும், போற்றவே யுடையன் ஈசன் புகுந்தது விகார மென்னின்” (சிவ.சித். க. 33) என்பர். பௌட்கரத்தும் இது, பிந்த்வவஸ்தா விசேஷேண கிவபேதஸ்த்வ- யோதித: பிந்தோரசேதநத்வேன ப்ரவ்ருத்தி: ஸ்வத ஏவ ந கர்த்தா சேத் ப்ரவ்த்யர்த்தம் விகாரீஸ்யாத் ததா கிவ: ஏவம் விரோத ஆபன்னே பரிஹாரம் வதேச்வர” (1:7-8) என்று கூறப்படுதல் காண்க.

  54. விகாரமுடைத்தாகவே - உ. வே.

  55. குற்றத்தைச் சொரிகின்ற - உ. வே.

  56. பன்னுவ மன்னோ என்பதைப் பன்னுவம் அன்னோ என்று கொண்டு ஐயோ வென்று கூறும் உரை வேறு பாடும் உண்டு.

  57. மிக்கிருக்கின்ற அச்செயல் இருவகைப்படும்- உ. வே.

  58. “கர்த்ருத்வம் த்விவிதம் விப்ரா: ஸங்கல்பாத் கரணாதபி” (சூ. 29) என்று பௌட்கரம் கூறும். சங்கற்பத்தொடு கரணத்து என்புழி, ஒடு, எண்ணுப்பொருட்டு. அத்து, இருவழியும் அசைநிலை, “அரவழங்கும் பெருந்தெய்வத்து வளை ஞரலும் பனிப்பௌவத்து” (பதிற். 51) என்பவற்றின் உரையில் பழையவுரைகாரர், “தெய்வத்து, பௌவத்து என்னும் அத்துக்கள் ஈண்டுச் சாரியைப் பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலை யெனப்படும்” என்று கூறுவது காண்க. “இஃது இவ்வாறாகவென எண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம் கரணத்தாற் செய்வ தூஉமென வினைமுதல் இருவகைப்படும்” என்றுசிவஞான சுவாமிகளும், “கர்த்திருத்துவமானது கரண வியாபாரத் துடன் கூடியதென்றும், சங்கற்பமாத்திரமென்றும் இரு வகைத்தாம்; இதில் கரணவியாபாரத்துடன் பண்ணுவது குலாலாதிகளுக்கே. இனி, சங்கற்ப கர்த்தி ருத்துவம் மனோசங்கற்பமென்றும் சன்னிதியென்றும் இருவகைத்தாம்; இதில் மனோவியாபார கர்த்திருத்துவம் பிரமாதிகளுக்கு; ஈசுவர கர்த்திருத்துவமாவது சன்னிதிமாத்திரமே” (சிவநெறி. 34 உரை) என்று ஸ்ரீநந்தி சிவாக்கிரயோகிகளும் கூறுவர்.

  59. “குயவன் கரணத்தாற் செய்வதன்றிச் சங்கற்ப மாத்திரை யாற் செய்யமாட்டான்” (சிவ. பா. 1:2) என்று சிவஞானமுனிவர் கூறுவர். இவ்வாறே மோக்ஷகாரிகை யுடையாரும், “தனது இச்சையின் வழிக் காரியத்தைச் செய்பவராயும் அளவற்ற ஐசுவரியத்தை யுடையராயு முள்ள பரமசிவன் போகிகளினுடைய போகத்தின் பொருட்டுத் தனது சத்திகளால் மாயையைக் கலக்கி உலகத்தை விசித்திரமாகச் செய்கின்றார்” (மோக்ஷ. 1,2) என்று கூறுகின்றார்.

  60. ஒளியுடைத்தாகிய நிர்மிதமான பொழுதே செய்ய மாட்டான்- உ. வே. “ந ஹி ஸங்கல்ப மாத்ரேண குலாலை: க்ரியதே கட: (பௌட் 1, 29) எனச் சிவாகமம் கூறுகிறது.

  61. அழகிதாகக் கலக்கா நிற்பன்- உ. வே.

  62. ஒழியான்- உ. வே. “சிவ: ஸங்கல்பமாத்ரேண பிந்து க்ஷோபகயோயத: ந வ்யாபார விசேஷேண யேநாயம் விக்ருதோ பவேத்” (1.30) என்பது பௌட்கரம்.

  63. அத்துவா மூர்த்தியென்றும், மந்திரமூர்த்தியென்றும், பஞ்சமந்திர மூர்த்தியென்றும் ஆகமங்கள் கூறுவதுபற்றி, ஆகம் எவையும் என்றார்.

  64. அத்துவா மூர்த்தி, மந்திரமூர்த்தி யெனக் கூறுவது உபசார மாதலின், சேர்தல் செல்லான் என்று உரைக்கின்றார். இதனை அருணந்தி சிவனார் “அத்துவா மூர்த்தியாக வறைகுவ தென்னை

  யென்னின்” என்றும் “மந்திர மத்துவாவின் மிகுத்தொரு வடிவாகத் தந்ததென் அதனுக்கென்னின்” என்றும் “மந்திரமதனிற் பஞ்சமந்திரம் வடிவமாகத் தந்திரம் சொன்னவாறிங்கென்னெனின்” என்றும் (சிவ. சித். 1:56, 57, 59) தடைவிடையாகக் கூறுவது காண்க. மந்திர ரூபங்களை இறைவனுக்கு உபசாரமாகக் கூறுவதை மிருகேந்திரத்தும், அதனை யெடுத்தோதும் சிவாக்கிரபாடியத்தும்,

  “பஞ்ச மந்த்ராத்மக தேஹஸத்பாவாத்ச ததுக்தம் - ஸ்ரீ மந்ம்ருகேந்த்ரே- “மலாத்யஸம் பவாத் சோக்தம் வபுர்நைதாத்ருசம் விபோ: தத்வபு: பஞ்சபிர் மந்த்ரை: பஞ்சக்ருத் யோப யோ கிபி: ஈசதத்புருஷா கோர வாமா னாஜர்மஸ்தகாதிகம் இதி (சிவாக்கிரபாடியம் பிரதம சூத்ரம். மந்திர தேக நிரூபணம்) என்றும், இத்தம் சக்தி; குர்வந்தீதேஹ க்ருத்யம் தேஹாயாவாத் உச்ய தேஹசப்தை:” (மிருகே. 3-13) என்றும் கூறப்படுதல் காண்க.

  65. அநந்தர் முதலிய வித்தியேசுரர் மந்திரேசுரர் முதலாயினார் அதிகார பலமுடையராதலின் விமலம தாக என்றும், சந்நிதியென்றும் சங்கற்பவகையால் எல்லாம் செய்யும் இறைவனாதலின், நல்லியல் என்றும், அனாதியேமலாகிதனாதலின் அமலன் என்றும் கூறுகின்றார். இதுஞாபகம்.

  66. எல்லியல் என்று கொண்டு, ஒளியையுடைத்தாகிய என்று உரை கூறும் பிரதியுமுண்டு.

  67. உலகிற் பல செயல்களைச் செய்தொழுகுமிடத்து உருவமுடைமை தடையாயிருப்பது, ஒற்றறிதலாகிய அரசியலறம்புரிவோர் செய்திக் கண் நன்கு விளங்குவது பற்றி, யாவும் தீதுக வியற்றல் போகலர் என்றார். ஈண்டுக் கூறப்படும் இக்கருத்தையே சிவஞான முனிவர் “உருவமாவது எல்லாத்தொழிலும் செய்யும் ஆற்றலைத் தடுப்பதாகலின், முதற்கண் இறைவன் அருவம் உருவமென்னும் இருவகை வடிவு

  மின்றி நின்றே தனது சத்தியால் விந்துவைக் கலக்கி நாத முதலியவற்றைத் தோற்றுவித்துப் பின்னர்த் தனது இச்சை வயத்தால் வடிவமும் கொள்வனென் றுணர்க” (சிவ. பா. சூ. 1. அதி. 1) என்றும், பௌட்கரம் “யஏவோபாதி மந்தஸ்தே விக்ருதா: கார்யஜன் மநி” (1. 31) என்றும் கூறுதல் காண்க.

  68. சரீரம் ஏகதேசப்பட்டமையாலே அவர் கரணங்களாலே ஒன்றைச் செய்வதன்றி அனைத்தையும் குற்றமறச் செய்ய மாட்டார்- உ. வே.

  69. உருவுடையாரைப் போலக் கரணங்களைக் கொண்டு செயற் குரியவற்றை அவ்வுருவிலார் செய்தற் காகாதெனக் கருதுதல் கூடாதென்றற்கு, இயற்ற வல்லோரல்லர் என்னில் என்றார். எனவே அவர் எல்லாஞ் செய்ய வல்ல வராம் என்பதாம் என்னல், மகனெனல் (குறள். 196) என்றாற் போல எதிர்மறை.

  70. தடையாகுமென்பதற்கு எனற்பாலது தடுத்தற் கென நின்றது. உருவமுடைமையாகிய உபாதி எச்செயலையும் செய்தற்குத் தடையாமென்பதைப் பௌட்கரம்,

  “கர்த்ருத்வ ப்ரதிபந்தத்வாத் உபாதே:” (1.33) என்று கூறுதலாலறிக.

  71. ஒரு சந்தேகமுமில்லை- உ. வே.

  72. ஆகம் மேவுநர் யாவும் தீதுக வியற்றல் போகலர் என்றும் இல்லோர் இயற்றவல்லோ ரல்ல ரென்னல் என்றும் கூறியனவே அமையுமாயினும், மீட்டும், ஆகம் எல்லாம் செய்தியைத் தடுத்தற் கையமின்று அஃதின்றேல் எவையும் இயற்றற் கொன்றும் குன்றா தென்றது, இறைவற்கு அருவமே வேண்டுவ தென்பதனை யாப்புறத்தற் கெனவறிக. இதனைப் பௌட்கரம்.

  “கர்த்ருத்வ ப்ரதிபந்தத்வாத் உபாதே ஸ்தத்வயோகத: பவேத் ப்ரத்யுத கர்த்ருத்வம் ப்ராசுர்யாய முனீச்வரா: (1-33) என்று கூறுகிறது.

  73. ஒருவன் ஒன்றைச் செய்தற்கு அவனது உடம்பு, முதல் துணை நிமித்தமென்ற மூவகைக் காரணங்களுள் ஒன்றாதலின், தன் தனுவாக என்றும், “உணர்வுடைய வொருவன் என்பதுபட ஒருவன் என்றும் கூறினார். போகிய தேகன் என்பது “சென்று சேர் கல்லாப்புள்ள………..வியன்குளம்” (அகம்.42) என்பது போலும் பண்மைத் தமிழ்வழக்கு “அதே ஹஸ்யாபி கர்த்ருத்வம் ஸ்வதேஹப்ரோணே யதா” என்று பௌட்கரம் (1:33) கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

  74. ஒவ்வொன்றைச் செய்ய முயற்சிபண்ணுகிற அறிவன்- உ. வே.

  75. இக்கருத்தையே சிவஞானமுனிவர் “முத்தொழில் செய்யும் இறைவன் உருவுடையனாதல் வேண்டும்உடம்பின்றி வினை செய்தல் கூடாமையான் எனின், - அற்றன்று; தன்னுடம்பினை இயக்குவ தாய வுயிர்க்கு வடிவின்மையின், இறைவனும் அவ்வாறு உருவின்றி நின்றே உருவாகிய உலகத்தைத் தொழிற்படுத்தல் அமையு மென்க” என்றும், மோக்ஷகாரிகைக்கு உரைகண்ட பட்டராம கண்டர் “ஈசுவரனுக்குக் காரியமிருத்தலால் சரீரமு மிருக்கவேண்டுமெனில், இந்தச் சங்கை பொருந்தாது; குயவன் முதலியவர்களுக்கும் தனது தேகத்தைத் தொழிற்படுத்தும காரியம் வேறொரு தேகத்தைக் கொண்டு நிகழ்கிறதாகக் காணப்படுகிறதில்லை; அதுபோல், தனது சரீரமான வுலகத்தைத் தொழிற்படுத்துவதற்கு வேறொருசரீரம் ஈசுவரனுக்கு வேண்டியதில்லை” (மோக்ஷ. சூ. 1-2) என்றும் கூறுவது காண்க.

  76. மலத்தான் மறைப்புண்டு அருவாய்க் கேவலத்திலிருந்த உயிர் சகலத்தே வினை செய்து அம்மறைப்பின் நீங்குதற் பொருட்டு உருவுடைய உடல் முதலியவற்றோடு கூடி நிற்கும் என்பது தேற்றமாதலின், மெய்யுட னியைவோர்க் கல்லது வினையுய்யாது என்றார். இறைவற்கு உருவுண் டென்னின் வற்புறுத்து

  கின்றாராதலால், மெய்யாகிய வுருவோடு இயைந்தாலன்றி அவன் படைத்தல் முதலிய வினை செய்தல் கூடாதென்றற்கு, மெய்யுட னியைவோர்க் கல்லதை வினையுய்யாதென்னின் என்றார். “இயை வோற்கல்லதை” யென்னாது இயைவோரெனப் பலராகிய பிறர்மேல் வைத்தோதியது, இறைவன் மெய்யுடைய னெனல் பொருந்தாமையின் என்றறிக.

  77. “இறைவன் உருவமுடையனேயென்னில், உருவமெல்லாம் காரியப்பொருளாகலின் அவ்வுருவினைத் தருவான் வேறோர் இறைவன் வேண்டும்; வேண்டவே, அவனுக்கும் வேறோர் இறைவன் வேண்டுமென்று அநவத்தையாய் முடியும்” என்று சிவஞானமுனிவர் கூறுமாறு காண்க. மிருகேந்திரம்,

  “கார்யம் சரீரயுக்தேந கர்த்ரா வ்யாப்தம் ஸதேவ யத் லோகே வபுஷ்மதோ த்ருஷ்டம் க்ருத்யம் ஸோப்யஸ்மதாதி வத் (iii .7) என்றும் பௌட்கரம்,

  “ஸதே ஹஸ்யாபி கர்த்ருத்வம் ஸர்வத்ராபி யதிஷ் யதே” (1-35) என்றும் கூறுகின்றன.

  78. அதற்கு முன்னர் ஒருவனுளனாகக் காட்டும்- உ.வே.

  79. கடைபோகாமையே ஈண்டுப் போகாதாதலின் எனப் பட்டது. முடிவு காண்பதாவது மூலமான ஓர் பரமான்மா வுளன் என்பது காண்டல்.

  “தத்தேஹஸ்யாபி கார்யத்வாத் வ்யாப்தம் கர்த்ரந்தரேண தத்

  தஸ்யாதே ஹாதயோ ப்யேவம் இத்யவஸ்தான கர்த்ருசித் என்று பௌட்கரம் கூறுகிறது.

  80. முதற்கு முதல் அதற்கு முதல் என அனவத்தையாகிய குற்ற முண்டாவதல்லது முடிவுபோகச் சொல்லாதாகையால்- உ. வே.

  81. சொல்லவொண்ணாததாய் முடியுமாதலால்- உ. வே.

  82. பஞ்ச கிருத்தியத்துக்குக் கடவவான- உ. வே.

  83. முதல்வன் சத்திவியாபாரங்களை மேற்கொள்ளுமிடத்து நாத மூர்த்தம் விந்து மூர்த்தம் முதலியவற்றைக் கோடலின் எல்லா ஆகமும் என்றதற்கு விந்துநாத முதலான தேக மெல்லாம்” என்று உரைத்தார். விந்துமூர்த்தம் விந்து தத்துவபுவனத்தை விரும்பித் தீக்கையுற்றோர் வழிபடுவது; நாதமூர்த்தம், சிவதத்துவத்தை விரும்பிச் சிவதீக்கை யுற்றோர் வழிபடுவது.

  84. “முதல்வன் தன் சத்திவியாபாரங்களை யொழித்துப் பகுப் பின்றித் தானேயாய் நிற்கும் தன்மையையே ஈண்டு இணையிறந்த செல்லா நல்வலி சிறந்த வல்லோன்” என்றார். “பேசரிய வுயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போக மவையளித்துப் பிறப்பினையு மொழித்திட் (சிவ. சித். பர. 3) டாசகற்றும் சிறப்புப்பற்றி, அருட்சத்தியை நல்வலி யென்றும் “எத்திறம் நின்றானீசன் அத்திறம் அவளும் நிற்ப” (சிவ. சித். 2. 75) ளாதலின் நல்வலி யென்பவர் செல்லா நல்வலி யென்றும் கூறினார். செல்லாமை- கெடாமை, “செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட, கல்லேசு கவலை” (மலைபடு 388.9) என்புழிப்போல, நல்வலி யென்ற அருட்சத்தியைத் தன் கண் ஒடுக்கிப் பகுப்பின்றித் தானேயாகிய சிறப்புக்குறித்து, சிறந்த வல்லோன் என்றார்.

  85. நல்ல சத்தியுடன் கூடிய- உ. வே.

  86. பல ஆகமங்களையும் கற்று அக்கல்வியறிவின் பயனாக மெய்யுணர்வு கைவரப்பெற்றார் உள்ளதன் உண்மையை யுள்ள வாறே யறிந்து உரைக்கும் ஒட்பமுடையராதலின் அவரை, ஆசின் றாயுநர் என்றும், ஆராய்ச்சி யில்வழி இக்கூறிய வண்மை புலனாகாமை தோன்ற, ஆயுங்கால் என்றும் கூறினார். ஈண்டு முடித்துக்காட்டும் கருத்தையே பௌட் கரம்.

  “தத: ப்ரதம ஸ்ருஷ்டேஸ்து ஸமஸ்தோபாதி வர்ஜித: கர்த்தா மஹேச ஏவேஷ்ட; ப்ரவ்ருத்தா சே ஷ சக்திக:” (1:37) என்று முடித்துக் காட்டுகின்றது. ஆயுநர் ஆயுங் கால், வல்லோன் ஈசன் ஆகல் இயையும் என முடிக்க.

  87. இதனை- உ. வே.

  88. வீழ்நிலைப் படலமும், கீணிலைப் படலமும்- பா. வே.

  89. ஆண்டை- பா. வே.

  90. யாணுற விலகா- பா. வே.

  91. திகலிரி- பா. வே.

  92. முதறுரந்- பா. வே.

  93. பிரத்தியட்ச மாகாம னின்ற காரண மென்னென்று- பா. வே.

  94. ஏணி- எல்லை. “நளியிரு முந்நீ ரேணியாக” (புறம். 35) என்று சான்றோர் வழங்குதல் காண்க. நிலவுலகிற்குக் கீழுள்ள தலங்களுள் ஏனையெல்லாவற்றிற்கும் மேலுள்ள தும் நிலவுலகையடுத்துக் கீழுள்ளதுமாகியது ஆடகேசுர புவனமென்றும், எல்லாவற்றிற்கும் கீழாய் அண்டகாடா கத்தை யடுத்திருப்பது காலாக்கினி உருத்திர புவனம் என்றும் கூறுப. இவற்றின் இயல்பைச் சிவதருமோத்தரக் கோபுர வியலினும், கந்தபுராணத்து அண்டகோசப் படலத்திலும், சிவஞானபாடியத்து “அண்டங்களின் இயல்பு” (சூ. 2, அதி. 3) கூறும் பகுதியிலும் காண்க.

  95. எண்ணிறந்த - உ. வே.

  96. மேலே எண்ணிறந்த- உ. வே. சொர்க்க முதலாகிய லோகங்களையும் - செப்பறையேட்டில் கண்ட உரை வேறுபாடு.

  97. நிவிர்த்திகலை முதலாக ஒன்றற்கொன்று உயர்ந்து செல்லும் ஐவகைக் கலைகளுள் எல்லாவற்றிற்கும் உயர்ந்ததாகிய சாந்தியதீத கலையில் அடங்கிய புவனங்கள் பதினைந்தில் எல்லாவற்றிற்கும் உயர்ந்து உச்சியில் இருப்பத அநாசிருதை யென்னும், புவன மாதலான், அநாசிருத புவன முதலாகிய உலகங்கள் என்றார். நிலவுலகத்தை யடுத்துக் கீழ்க்கீழாக இருக்கும் ஆடகேசுரபுவனம், கூர்மாண்ட புவனம், காலாக்கினிருத்திர புவனம் என்ற மூன்றையும் கீழ்நிலைப்படலம் என்றாராகலின், நிலவுலகத்துக்கு மேலுள்ள புவனங்களை வேறுபடுத்துக் காட்டற்கு உம்பர் போகிய உயர்நிலையுலகம் என்றார். ஒன்றன்மேலொன் றாதல் தோன்ற, உம்பர்போகிய என்பதும், அவை இன்ப நுகர்ச்சிக்குரியவாதல் தோன்ற, உயர்நிலை யுலகம் என்பதும் குறிக்கத்தக்கனவாம். “நிலமமர் வையத் தொருதா மாகி, உயர்நிலை யுலக மிவணின் றெய்தும் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற், பெரியோர்” (மதுரை. 470-73) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  98. மூன்று தண்டாக் காலமும் என்பது தண்டாக் காலம் மூன்றும் என இயைந்தது. “காலந் தாமே மூன்றென மொழிப” (வினை.2) என்றார் தொல்காப்பியனாரும். கால தத்தவம் ஒடுங்குமிடத்து மாயையிலும், அம்மாயை சத்தியிலும், அச்சத்தி தன்னிலும் ஒடுங்க ஒடுக்குதலின், மூன்று தண்டாக்காலமும் உளப்படப் பொதிந்து என்றார்.

  99. இங்ஙனம் காலம் முதலியன தன்கண் ஒடுங்கத் தான் அவற்றிற்கு மேலாய் நித்தனாயிருத்தலின், நித்தத்துவம் முதல்வற்கு உரித்தாதல் பெறப்படுவதுபற்றி, நிலைக்குரி மரபின் என்றார். சிவஞான

  முனிவரும், “காலவரையறை யின் அகப்படாது நிற்பதே நித்தப் பொருளெனக் கொள்க; இங்ஙனமாகலான் காலம் நித்தமாகாமை பற்றி நித்தப் பொருளுண்மைக்கு இழுக்கின்மையுமறிக” (சிவ. பா. சூ. 2: 2) என்பர்.

  100. அவத்தைப்படாத தவசிகட்கு - உ. வே.

  101. இப்பகுதியின் உரை ஏடுதோறும் வேறு வேறாகப் பிழை மலிந்தும் சிதைந்தும் உள்ளது.

  102. “ஊனத்திரு ணீங்கிட வேண்டின், ஞானப்பொருள் கொண்டடிபேணும்” (ஞான. 38.3) என்றும், “ உடம்பெனு மனையகத்துளுள்ளமே தகளியாக, மடம்படு முணர் நெய்யட்டி மதியெனுந் திரிமயக்கி, இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கிற், கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே” (திருநா. 75.4) என்றும், “மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினையென், தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே” (திருவாய் 4:7:10) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. நாட்டத்துக் கெனற் பாலது நாட்டக்கென வந்தது.

  103. தவத்தின் சார்வாகிய முதற் பொருள் யாணர்த்து என முடிக்க. ஆதலால் என்பது வருவிக்கப்பட்டது. முதல்வனைத் தவத்தின் சார்வு என்ற இதனைச் “சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின்”

  (குறள். 359) என்பதனோடு ஒப்பு நோக்குக. யாணர், புதுமை (தொல். உரி. 81).

  104. விளியாத முறைமையதாதலாலே- உ. வே.

  105. “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை” யென்பவாதலின், இணையிரி நோக்கம் காணான் என்றும், குருடர்கட்குக் கண்ணாகிய வுறுப்பிருப்பினும், காணும் பகுதியின்மையின், நோக்கம் காணான் என்றும் கூறினார்.

  106. இரியவும் எனற்குரிய உம்மை விகாரத்தால் தொக்கது.

  107. தன் ஒளிக்கதிர்களை நிலவுலகெங்கும் இருளறக் கெடுமாறு பரப்பி வந்தானாயினும் குருடற்குப் பயனில்லை யென்பது தோன்ற, இருளற விரிய விரிகதிர் பரப்பிய பருதி வானோன் என்று விதந்து கூறினார்.

  108. ஆதித்தனாகிய தேசவனை- உ. வே. தேசனை, தேசவனை- உ. வே.

  109. கேவலான்னுவய வனுமானம்- உ. வே.

  110. “இறைவனைக் காணவல்லோரில்லை; ஞானக் கண்ணுடை யோர்க்கன்றிக் காணப்படாப் புதுமையுடைமையான்; பருதிவானோனைக் குருடன் காணாதவாறு போல” என மேற்கோளும், ஏதுவும், எடுத்துக்காட்டும் எதிர்மறை வாய்பாட்டான் ஓதப் படுதலால், கேவல வெதிரேகியனு மானம்” எனப்பட்டது. ஈண்டுக் காட்டப்பட்ட கருத்தையே அருணந்தி சிவனார், “எங்குந்தான் நிறைந்து சிவனின்றானாகில் எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில், இங்குந்தா னந்தகருக் கிரவியிருளாகும், ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்” (சிவ சித். 11. 8) என்பர்.

  111. “காட்சி முதலிய வளவையு மளவறச், சேட்பட வகன் றனன்” (ஞானா, 55:25:6) என்றாராகலின், ஈண்டும் அளவை யுடைதர என்றார்.

  112. “ஒழிவற நிறைந்த வொருவன்” (ஞானா. 55:7) என்று முன்பும் கூறியிருப்பது காண்க.

  113. இது சில ஏடுகளில் இல்லை.

  114. பீடிக்கப்பட்ட: அனுசரிக்கப்பட்ட- உ. வே.

  115. பேய்க் கோட்பட்டவன், தான் செய்யத்தகுவனவற்றைச் செய்யாது, அல்லாத ஒவ்வாச் செயல்களைச் செய்தலின், திரிந்த ஆள்வினை யென்றார்; பேய்க் கோட்பட்டான் பால் உண்டாகும் செயல்களை மதுரை சிவப்பிரகாசனார் “புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய அலகையேபோல், அகிலமு முணருமீசன் அருள் உயிர் மேவலாலே” (சிவப். 76) எனக் கூறும் சிவசமவாத வுரைப்பகுதிக் கெழுதிய உரையில் “பேய் பிடியுண்டவன் இன்னான் இன்ன பண்டங் கொண்டு வருகிறானென்றும் இந்நாள் மழை பெய்யு மென்றும், நெருப்பை மிதித்து நின்றாடியும், சுடுகிற பாற்சோற்றிலே கையையிட்டுத் துழாவியும் நிற்பன்” என்பர்.

  116. இறைவன் எங்கும் நிறைந்திருத்தல்பற்றி, மாட்சியின் நின்றனன் என்றார். “பண்ணையு மோசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும் போல் எங்குமாம் அண்ணல்” (சிவ. போ. 2. 1:3) என்று மெய்கண்ட தேவரும் அருளுப. ஞானபூசைத் திருவிருத்தமும், “நாதன் மேலுகந்த மலரொதுக்கி யருவநோக்கி விமல னிறை வுணர்ந்து எவையும் மேனியான சீலமும் இங்கு அருவு திருவுருவமான சிறப்பும் உணர்ந்து இலிங்க சுத்தி சேர்த்திடாயே” (11) என்று கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.

  117. இன்றியமையாது- உ. வே. ஈண்டு அலகையுவமம், இறைவன் காணப்படாது நின்றே எல்லாவற்றிற்கும் பரம காரணனாக விளங்கும் இயைபுணர்த்தி நின்றது: சிவசமவாத மன்று.

  118. அறுதியாக - உ. வே.

  119. ஒருப்பட்ட மனத்தையுடைய னாயிருந்துணர்ந்து- உ. வே.

  120. இவை அச்சுப்பிரதியில் இல்லை.

  121. மூர்த்தங்கரைகழி; மூர்த்தி கறையறு- பா. வே.

  122. னாயினும் பொருவிரியின் றொழில் - பா. வே.

  123. ணெற்றேற் சொற்றரு- பா. வே.

  124. தரை- பா. வே.

  125. செய்தியி னுவமையில்- பா. வே.

  126. தொழில்கள்- பா. வே.

  127. மருவுரு வுருவிலி- பா. வே.

  128. னென்றி வரம்ம - பா. வே.

  129. சிவன் இறையாகான் என்பதற்கு வடிவின்மையும் அதுவே யேதுவாகக் கரணமின்மையும் என்ற இரண்டினையும் “விந்தவவத்தை” (ஞானா. 60) என்ற அகவற்கண், “பொங்கிய வினையிரு வகைத்துச் சங்கற் பத்தொடு கரணத்து அலர்கடம் குலாலன், ஏற்படு சங்கற்பத்தின் முற்பட இயற்றலன் சங்கற்பத்தின் மயக்கற விந்துவைத் துயக்கறக் கலக்கல், செய்வன்” என்றும், “ஆக மெல்லாம் செய்தியைத் தடுத்தற் கைய மின்றஃ, தின்றே லெவையு மியற்றற் கொன்றும், குறை விலன்” என்றும் பொதுப்படக் கூறி விலக்கினாராயினும், ஈண்டு, அமூர்த்தனாயிருந்தே பிரபஞ்சத்தைத் தன் சக்தி களாலே செய்வனெனச் சாதிப்பதுபற்றி மீட்டும் எடுத் தோதுகின்றார். உருவின்மை ஏதுவாக முதல்வனது முதன்மையை மறுக்கும் கூற்றுக்களைஅருணந்தி சிவனாரும், “அருவுரு வீனாதாகும் விகாரமும் அவ்விகாரத்தின் வருவதுமில்லை யென்னின்” (சிவ. சித். 1:28) என்று எடுத்தோதுவது காண்க. மூர்த்தியன்மை ஐந்தொழிற்குக் கருத்தாவாந்தன்மைக்கு இடையூறெனக் கருதும் இது “ஸதேஹஸ்யாபி கர்த்ருத்வம் ஸர்வத ராபி யதீஷ்யதே” (1.36) என்று பௌட்கரத்திலும், கரணமின்றிச் செயலில்லை என்னு மிது. “ந த்ருஷ்மா அகசணா க்ருதி: (3-3) என்று மிருகேந்திரத்திலும் காணப்படுகின்றன.

  130. இவ்வாறே, “ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும், காலமே போலக் கொண்ணீ நிலைசெயல் கடவுட் கண்ணே” (சிவ. சித்தி. 1:30) என்று அருணந்தி சிவனாரும் கூறுவர். சிவாக்கிரயோகிகள், சிவநெறிப் பிரகாசத்தில், “காலம் போல் வடிவிலதாய் உருவாதி யாக்கிக் காயவனல் போல்வினையின் கரணங்கள் தம்மை, ஏலவே பாகமுறச் செய்து காயத், தெழிற்கிரியை யான் மாக்கள் இயற்றல் தன்னைப் போலவே சராசரங்கள் தம் முள் நின்று, புரிந்திடுவன் பிரேரகத்தைப் புனிதன் தானும்” (34) என்பர். காலம் அவ்வக் காலத்திற்குரிய பயன் தரும் திறத்தை, பௌட்கரம்,

  “நா காலே ஜாயதே கஸ்பித் நாகாலே ம்ரியதேபிச

  சக்ராதிவத் கடோத்பத் தௌ தஸ்மாத் கால: ப்ரவர்த்தக:,

  என்று கூறுவது காண்க. இனி சதமணிமாலை யுடையாரும்’ இக்கருத்தையே, “உருவிலி யாயுங் காலம் உதவுறு பயன் கடாங்கு மருவரும் இறைவன் தானும் வடிவில னாயிருந்தும் விரிவுறும், உலக மாக்கும் விளங்குதன் இச்சையால் என்று ஒருவிய மலமுடைப்பே ருணர்வினர் உரைப்பர் அன்றே” (14) என்று கூறுகின்றார்.

  131. மூர்த்தியல்லாமையின் - உ. வே.

  132. அவ்வக் காலத்திற் கடுத்த பிரயோசனங்களைக் கொடுத்து நிற்குமாறு போல- உ. வே.

  133. கரண ரகிதனா யிருந்தா னாயினும்- உ. வே.

  134. இனி. சங்கற்பத்தால் படைப்பாதி தொழில் செய்தற்கு இச்சை சிறந்தமையின் பொருவிரி இச்சை யென்றார். இச்சையாவது “உயிர்க்கருள் நேசமாகும்” (சிவ. சித். 1:63) என்றும், “இச்சையு யிர்க்கிரங்கல்” (துகளறு 41) என்றும் சான்றோர் கூறுவராயினும், ஈண்டுச் சங்கற்பத்துக் கேதுவாய் நின்றது “சத்திரூபமான அவருடைய மனத்தில் தோன்றுகின்ற கிரியாசத்தியே இச்சையாகும்” என்று மோக்ஷகாரிகை யுரை (சூ. 1) கூறுவது காண்க. மிருகேந்திரம் “தரணம் ச நேச்சா சக்த்யன்யா சக்தி.” (3.4) என்று கூறுகிறது.

  135. இச்சை, செயற்குக் காரணமாமேயன்றிச் செயற்படாது என்று ஆசங்கிக்கின்றா னாதலின், இச்சை ஆங்கு நற்றொழில் நயவாது என்றான்.

  136. நல்ல கிருத்தியாய் முடியாது- உ. வே.

  137. தாம் எண்ணிய மாத்திரையே அணுப்போற் சிறுகலும் மலைபோற் பெருகலும் வுருவேறு கோடலும அருவுருவாதலும் பிறவும் செய்பவாதலால் ஒண்டிறல் யோகர் போல என்றும், யோகக்கலையில் துறைபோயினார்க்கன்றி ஒள்ளிய திறமுண்டாகாமை தோன்ற, யோகக்கலைத்துறை நீந்திய ஒண்டிறல் யோகர் என்றும் கூறினார். நீந்திய வென்றதனால் அக்கலை கடல்போலும பெருமையுடைத்தாதல் பெற்றாம். “பெருங்கடவுள் தானும் எண்ணிய யோகசித்தர் போலுரு விசைப்பன் காணேன்” (சிவ. சித்தி. 1:39) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  138. மிக்க வலியையுடைய- உ. வே.

  139. குறையாத- உ. வே.

  140. இச்சா சத்திக்குக் கெடுதலாவது, எண்ணிய எண்ணி யாங்கெய்தாமை. கெடாத இச்சாசத்தி யெனவே. கெடு திறமுடைய இச்சை உண்டென்றும், அஃது அக்கருத்தாவுக் கில்லை யென்றும், எனவே, ஆன்மாவின்பால் அஃதுண்டென்றும் உணர்க. “சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனையொப்ப னாவனென் றிடினனாதி மலமிவற்றினை மறைக்கும், காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்” (சிவ. சித். 1:64) என்பது காண்க. சத்தி, இச்சா ரூபமென்றும், யோகிகட்கு யோக சத்திபோல முதல்வனுக்குச் சத்தி கரணம் என்ற கருத்துப் படக் கிரணாகமம் “இச்சைவ தரணம் தஸ்ய யதா ஸத்யோகி னோ மதா” என்றும் கூறுகின்றது.

  141. இதனால் ஒண்டிறல் யோகசித்தர் தமது இச்சாசத்தியால் அட்டமா சித்திகளைச் செய்து அச்செய்கையால் விருப்பு வெறுப்புடையராத லறிக. இறைவன் யோகர் போல்வனெனில், அவர்களில் ஒருவனாய், அவர்க்கெய்தும் விருப்பு வெறுப்பு முதலியன தானும் எய்துவன் என்று கொண்டு, இறைக்கு இவண் எற்றெனில் என்றார்; இவ்வண்ணம் என்பது இவண் என்றாகி, யோகர்க்குரிய விருப்பு வெறுப்புக்களை யுணர்த்தி நிற்கின்றது. “வித்தக யோகசித்தர் வேண்டுருக் கொள்ளுமாபோல்; உத்தமன் கொள்வனென்னி னவர் களி ளொருவ னாவன்” (1:10) என்பது சிவஞான சித்தியார்.

  142. விளங்கக் காணத்தக்க கரணமொன்றும் காந்தக்கல்லிடத்தே காணப்படாமையின், எல்லேய் புலமின்றாயினும் என்றும், இருப்புத் தூளின் வலிமுற்றும் இல்லையாமாறு தன்பால் ஈர்த்துக் கொண்டமை பற்றி தாளற வாங்கிற்று என்றும், ஈர்த்த காலையும் அக்காந்தக் கல்லிடத்தே விகாரமொன்றும் தோன்றாமையால் நலமலி கட்டகம் என்றும் கூறினார்.

  143. இருப்புத்தாளைச் சுழல் விழுத்தது: சுழற்றிப்பறித்தது- உ. வே.

  144. அதன்பால்- அக்காந்தக்கல்லினிடத்தே.

  145. இல்லையாகவும்- உ. வே.

  146. காந்தசத்திபோல இறைவனது சத்திசங்கற்பத்தால் முத்தொழில் நிகழுமென வற்புறுத்தற்கு, அது வந்த செய்தியின் என்றார். “சத்தியின் வேறென் றெண்ணச் சார்கர ணமுமீங்கில்லை. சித்தின் வேறாய சித்தாம் சக்தியுந் தெரியினில்லை, இத்திற மதனா லந்த வேகமாங் கரணந்தானே, வைத்த பல்வினையான் ஞானக் கிரியையின் மருவிநிற்கும் “(13) என்பது கிரணாகமசூத்திரப் பொருளெனச் சதமணிமாலை யுடையார் கூறுகின்றார்.

  147. தன்மைபோல- உ. வே.

  148. நானாவிதமா முருவமாகிய பிரபஞ்சத்தைப் பஞ்சகிருத்திய மானது - உ. வே.

  149. பிரபஞ்சத்துக் கிருத்தியமாவது தோன்றுதல், நிலைபெறுதல் முதலியன.

  150. சத்தியொன்றே ஞானம் இச்சை கிரியை யெனத் தொழில் வேறுபாடுடைத்தாய்ப் படைத்தல் முதலியன செய்தலின், அதுபற்றி அச்சத்தியை ஒன்று என்றார். “ஒன்றதா யிச்சா ஞானக் கிரியையென் றொரு மூன்றாகி, நின்றிடுஞ் சத்தி” (சிவ. சித். 1.63) என்பது காண்க.

  151. பிரபஞ்சத்தை- உ. வே.

  152. நிமித்த காரணமாகிய ஒரு கருத்தா உண்டாக்கவேண்டும் - உ. வே.

  153. இதனால், பிரபஞ்சத்துக்குக் காரணமாகிய மாயையிடத்தே தோற்றம் முதலியவற்றை யுண்டுபண்ணும் சத்தி உண்டு எனக் கூறியவாறாம். இவ்வாறே, மோக்ஷகாரிகையுடை யாரும், “பராசத்தியான இச்சாசத்தியே நிச்சயமாய்க் காரணமாயிருக்கின்றது; ஈசுவரன் இல்லை” (சூ. 15) என்று பிறர் கூறும் பக்கமாகக் காட்டுகின்றார்.

  154. கருமம்- தொழில்; மேலே பிரபஞ்ச கிருத்திய மென்றதும் இது, இஃது ஆகுபெயராய், அதற்கேதுவாகிய சத்திமேல் நிற்கிறது. மாயையினிடத்துக் கலக்கத்தால் பகற்காலமாகிய சிருட்டி காலத்தில் அந்தச் சத்தி தொழிற்படுகின்றமை யாலும், இராக்காலமாகிய பிரளயகாலத்தில் மாயை யினிடத்துத் தொழிற்பாடின்றி யிருக்கின்றமையாலும் அந்த இச்சாசத்தியே நிச்சயமாயிருக்க ஈசுவரன் எதற்காக வேண்டும் (மோக்ஷ. சூ. 15-17) என்று சான்றோர் பிறர் கூறுவதாக எடுத்தோதுப.

  155. கன்மமே - உ. வே.

  156. “கர்ம சித் ரஹிதம் தஸ்மாத் யோஜகம் ததபேக்ஷதே” என்று பராக்கியம் கூறுவது காண்க. கருமம் கருத்தா வாதல் கூடாதென்பதை “எல்லாத்தொழிலும்” (ஞானா. 59) என்ற திருவகவலால் வற்புறுத்தியுள்ளா ராகலின், ஈண்டுக் கோதில் அசேதனம் என்றொழிந்தார், இவ்வாறே, மோக்ஷகாரிகைக்கு (சூ. 17) உரைகண்ட பட்டராம கண்டர், “சடத்திற்குத் தானாகவே தொழிற்

  படவும், தொழிற்படாமலிருக்கவும் சாமர்த்தியம் கிடையாதென்பது முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது; ஆகையால், வேறு வழி யாகப் பொருந்தாதது கொண்டு முற்றறிவுடன் கூடின் பரமேசுவரனே மாயையைத் தொழிற்படுத்தும் விஷயத்தில் கருத்தாவாவன்” என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது.

  157. சத்திகளின் தொழிற்பாடு சிறிதுமின்றித் தன்பால் ஒடுங்கி நிற்பச் சாந்தமாயிருக்கும் இலய சிவனைச் சாந்தனென்றும் நிட்களனென்றும் கூறுபவாதலின் சாந்தனாகிய சிவன் நிட்களமா யிருப்பர் என்றார்; “சக்தோயம் சக்தயோ யஸ்மாத் உத்யோகாதி க்ரியா ச்யுதா: சிவ ஏவா விதிஷ்டந் தே நிஷ்கல ஸ்ச ஸ ஏ வ து (1.22) எனப் பௌட்கரம் கூறுதல் காண்க. இவ்வாறே நிட்களம் சகளம் நிட்கள சகளம் மூன்றையும் சுப்பிரபேத மென்னும் ஆகமம், “தச்சரீரம் த்ரயா ஜ்ஞேயம் நிஷ்கலம் ஸமலா கலம் ஸகலம் ச ததா ஜ்ஞேயம் த்ரிவிதம் து விசேஷ்த:” என்பது முதலிய சூத்திரங்களாற் கூறுவது காண்க.

  158. சகளநிட்களமாயிருப்பர்- உ. வே.

  159. மேம்பட்ட கோட்பாட்டையுடைய கீர்த்தியாலே திவ்யாகமங்கள் நிச்சயமாக இவர்கள் மூவரும் கருத்தாக்க ளென்று சொல்லா நின்றன என்றவாறு- செப்பறையேட்டில் கண்ட உரை வேறுபாடு.

  160. சிவன், சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுரன் என ஐவராகக் கூறவேண்டியிருக்க, ஈண்டு சத்தியைச் சிவத்துள் அடக்கியும், சுத்தவித்தையை ஈசுரத்துள் அடக்கியும் கூறலால், இவர் மூவர் என்று ஓதுகின்றார். “சிவம் சத்தி சதாசிவம் ஈசுரம் சுத்தவித்தை என்னும் இவை ஐந்தும் இலயம் போகம் அதிகாரமென மூன்றாயடங்குதல் பற்றிச் சுத்த தத்துவ மூன்றென்றும் சிலவற்றிற் சிவம் சத்தி சதாசிவ மூன்றுஞ் சிவனால் அதிட்டிக்கப்படுதலின் ஒன்றாக வைத்து, ஈசுரமும் சுத்தவித்தையும் அளந்த தேவர் முதலியோரான் அதிட்டிக்கப்படுவன என வேறு வைத்தெண்ணி மூன்றென்றும், அதிற் சிலவற்றின் ஈசுரமும் சுத்த

  வித்தையும் சிவன் ஏவல்வழி நிற்போரான் அதிட்டிக்கப்படும் தன்மையான் ஒன்றென வைத்து எண்ணி நான்கென்றும், சிலவற்றிற் சத்தி தத்துவம் சிவதத்துவத்தின் வேறன்மையான் ஒன்றென வைத்தெண்ணி நான்கென்றும் கூறப்படும்; வகையான் அங்ஙனம் கூறினும் விரியான் ஐந்து என்றலே அவற்றிற்கெல்லாம் கருத்தாகலின் மாறு கோளின்மை யுணர்க” - சிவ. பாடியம் சூ. 2. அத். 2.

  161. இவ்வாறு ஆகமங்கள் மூவராகக் கூறும் திறத்தை அகோர சிவாச்சாரியார். தத்துவத்திரைய நிர்ணயவுரையில் “நூல்களில் அதிகார சிவம், போக சிவம், இலய சிவ மென்னும் சிவபேதங்கள் காரியபேதம் பற்றி உபசார மாகக் கூறப்பட்டனவேயன்றி உண்மையிற் கூறப்படவில்லை யென்றும், ஈசுவரன். சதாசிவன், சாந்தன் என்னும் பேதமும் காரிய தேசம்பற்றியே சம்பவித்தன என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க” என்று கூறுகின்றார்.

  162. மல்கினும்- பா. வே.

  163. செயலிலன்- பா. வே; திரிந்திலன்- பா. வே.

  164. டிரணம்; டிரணை- பா. வே.

  165. யறிவிற்- பா.வே.

  166. தொரு பெரு மராகம்- பா. வே.

  167. செறிந்தும்- பா. வே. சிறந்தும்- பா. வே.

  168. திருவிரி- பா. வே.

  169. விந்து- பா. வே.

  170. மற்றெதுபோற்- பா. வே.

  171. சாலு மெனிற்- பா. வே.

  172. விரவி முட்ட- பா. வே.

  173. மறைப்பது போல- பா. வே.

  174. ஆடா தாகி- பா. வே.

  175. றோன்றல வலர்வா- பா.வே.

  176. சிவணலும்- பா. வே.

  177. வருமற்- பா. வே.

  178. இஃது அமூர்த்தனே கர்த்தா என்று சாதித்தது- பா. வே.

  179. தாமரையை அலர்த்துதல், ஆம்பல் முதலியவற்றைக் கூம்பு வித்தல், பறித்துள்ளவற்றை உலர்த்துதல் முதலிய மூவகைச் செயல்களையும் தன் கிரணங்களைக் கொண்டு செய்யினும் பகலோன் விகார மடைதல் இல்லையாதலின், சுடரவன் விகாரமடையான் என்றார்; இக்கருத்தையே, “தோற்றுவித் தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும், போற்றவே யுடைய னீசன் புகுந்தது விகார மென்னில், சாற்றிய கதிரோ னிற்கத் தாமரை யலரும் காந்தம் காற்றிடுங் கனலை நீரும் கரந்திடுங் காசினிக்கே” (சிவ. சித். 1:33) என்று அருணந்தி சிவனாரும், “விகாரங்கள் மருவான் வானின், முந்திரவி யெதிர்முளரி யலர்வுறுமொன் றலர்வான், முகையாமொன் றொன்றுலரு முறையினாமே” (சிவப். 17) என்று உமாபதி சிவனாரும், “சீலமோ திரிவில்லை கதிரோன் முன்னர்ச் செய்தி கமலாதிகள் பாற் றெரிந்து கொள்ளே” (சிவநெறி 34) என்று சிவாக்கிரயோகிகளும், “உருக்குதல் நவனீதாதி யுலர்த்துத லீரமண்ணும், விரிக்குதல் கமலமாதி வெறிகமழ் குவளை, மற்றும், சுருக்குத லென்ற விந்தத் தொழில் விதமில்லா னேனும், அருக்கனேயவற்றிற் கேது சடச்செயற் கனாதி முத்தன்” (சிவதரு. சிவஞானயோக.

  &nbsp;

  12. என்று மறைஞானசம்பந்தரும் “பரமசிவனும் தான் ஒரு விதமான விகாரமில்லா தவனாயிருந்தும், மேலே கூறப்பட்ட முறையாகத் தோன்றுவனவாயும் அவத்தை வேறு பாட்டால் உண்டானவையாயும் இருக்கும் படைத்தல் முதலிய காரியங்களைச் சூரியன் விகார

  மற்றவனாயிருந்து தாமரைகளை மலரச் செய்வது போலச் செய்கின்றான்” (இரத். சூ. 308. 9) என்று சீகண்டரும் கூறுதல்காண்க. இக்கருத்தையே பௌட்கரமும்,”

  “யதா ர்த: பங்கஜம் நித்யம் போத ஸம் சோஷணாதிபி:

  கர்மபிர் போததேத்யாக்யாம் லபதே த்ர ததா சிவ;”

  (1.17) என்று கூறுகிறது.

  &nbsp;

  1.  ஒளியையுடைத்தாகிய தாமரைமொட்டை- உ. வே.

  2.  உலத்தவும்- உ. வே.

  3.  சுடரவன் சத்தியாய் மலர்வித்தல் முதலிய மூவகைத் தொழில்களையும் செய்து அவற்கு அழியாப் புகழைப் பயத்தலின், கொற்றக்கிரணம் எனச் சிறப்பித்தார். இனி, வானிலும் மண்ணிலுமுள்ள ஏனை ஒளிகளை யொடுக்கித் தன்னொளியே திகழ நிற்றல்பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம்.

  4.  செய்யாநிற்பன்- உ. வே.

  5.  உடம்பையுடைய உயிர்கள் எத்துணை வலிவுடையவாயினும், கூற்றுவன் முன்னின்று வேற லரிதாகலின் அரணமில் கூற்று என்றார். பிறரும், “மருந்தில் கூற்றம்” (புறம். 3) என்ப. ஆசிரியர் தொல் காப்பியனாரும் “மாற்றருங் கூற்றம்” (தொல். புறத். 24) என்பது காண்க. ஈண்டுக் குறிக்கப்படுவது மார்க்கண்டற்காகயமனைக் காய்ந்த வரலாறு.

  6.  சுடரவன் கிரணத்தைக் கொற்றக் கிரணம் என்றாராக லின், அதற்கியைய. இறைவன் சத்தியை, முரியாச் சத்தி யென்றார். மோக்ஷகாரிகை யுடையாரும், “ பரம சிவனுடைய சத்தியொன்றே சருவ ஞானக்கிரியா ரூபமாக விருக்கின்றது” (சூ. 25) என்பர். அவர் சிவனென்னும் சூரியனுடைய சத்தி ரூபமான கிரணத்தால் விளக்கஞ் செய்யப்பட்ட அறிவென்னும் கண்ணால் ஆன்மா சிவனைப் பார்க்கின்றான்” (சூ. 111) என்றது கொண்டு, இவரும் சிவசத்தி கட்கு முறையே சூரிய கிரணங்களை உவமம் கூறுகின்றார். மதங்கமும், “அத பத்யுரதிஷ்டானம் ஸ்வ சக்தி: கிரணாத் மிகா” என்று கூறுவது காண்க.

  7.  வெயிலானது- உ. வே.

  8.  அழகிதாக உருகப் பண்ணவும்- உ. வே.

  9.  இவ்வுவமையே, “எவ்வாறு சூரியனானவன் ஒருவிதமான விகாரம் அற்றவனாயிருந்தும், விருப்பு வெறுப்பற்று, மெழுகை உருகவும் மண்ணை உலரவும் செய்கின்றானோ, அவ்வாறே பரமசிவனும் தான் ஒருவிதமான விகாரமற்ற வனாயிருந்தும் புண்ணிய பாவரூபமான வினைகளின் ஒப்பை அடைந்த ஆன்மாக்கட்கு மோட்சத்தையும், அந்த இருவினை யொப்பைப் பெறாத ஆன்மாக்களுக்குப் பந்தத்தையும் செய்கின்றான்” (இரத். 310, 311) என்றவிடத்தும் காட்டப்படுகிறது.

  10. சிவஸ்ய ஸமவேதா யா சக்தி: (பௌ. 7) என்றும் “சிவனோடு பிரிக்கமுடியாத சமவாய சம்பந்தத்திலிருக்கும் சமவேதசத்தி” யென்றும் சிவ சமவேத சத்தி யென்றும் சான்றோர் கூறுவதுபற்றிச் சென்றகல் பறியாச் சத்தி யென்றார். “ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” (சிவ. போ. சூ. 2) என்பது நினைவு கூர்க.

  11. ஒருநாளிலே- உ. வே.

  12. மாயாமல காரியமாகிய உடல் கருவி யுலகுகளால் பிணிப் புண்டாலன்றி ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியும் மல நீக்கமும் கைகூடாவாதலின், ஆன்மா உடம்பிடை யுலகில் தோன்றுதல் நிலைபெறுதல் முதலிய செயல்களைப் பிணித்தல் என்றும், ஒடுங்குதலைப் பிணியவிழ்த்தல் என்றும் கூறுகின்றார். “மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளான் முன்னே, துன்னிய மலங்களெல்லாம் துடைப் பதும் சொல்லலாமே” (சிவ. சித். 1:36) என்று ஆசிரியர் அருணந்தி சிவனாரும் கூறுமாறு காண்க.

  13. சிருட்டியும் திதியும் சங்காரமும்- உ. வே.

  14. அத்தன்மையாகிய சத்தி; அத்தன் றன்மையாகிய சத்தி- உ. வே.

  15. ஏனை ஞாயிறு திங்கள் முதலிய ஒளிப் பொருள்களால் உவமித்துக் கூறமுடியாத பேரொளியுடைமை தோன்ற, பொருவொடு போகா ஒளியொடு பொருந்தி என்றார்.

  இச்சத்தி, “பிறபொருளைத் துணையாகக் கொள்ளாது; அதுபற்றியே சுயம்பிரகாசமானது” (சூ. 183) என்றும், “இந்தச் சிற்சத்தியானது ஒளி ரூபமாயும், சடப்பொருளாகாது அறிவுடைப் பொருளாயும் இருப்பதால் உண்டு பண்ணப்படுவதில்லை” (சூ. 194) என்றும் இரத்தினத் திரயம் கூறுவது காண்க. பௌட்கரம். “சக்திருக்த விகல்பா ஸா மஹதீ மூர்த்திரை ச்வரீ” என்று கூறும்.

  16. ஈண்டுக் கூறப்படும் அளவற வகறல், சலனமின்மை, நிலை பேறு உடைமை, மறைப்பின்மை, பெருமை, உருவின்மை, அராகமாதிய வளையாமை என்பனவற்றை இரத்தினத்திரயமுடையார்,

  “நித்யைஷா சேஷகார்யாணாம் காரணத்வா த் யதே ச்வரI : ஸத்வே காரண் சூன்யத்வாத் அபி பிந்து வதிஷ்ய தே”

  ததா ஹி தாம் ஸமாச்ரித்ய ஸந்தோன்யே சாச்வத: ஸதீம் II என்பது முதலியவற்றால் விளக்குகின்றார்.

  2.  வெருவப்படத்தக்க- உ. வே.

  17. இது அச்சுப்பிரதியில் இல்லை.

  18. “கிரியர் ஞானசொரூப மாயிருக்கிற சிவ சத்தியின் இலக்கணம் கூறினார்: இனி, இவ்வாசிரியர் இச் சிவசத்தி, கிரியாஞானரூபமான இரண்டாம் என்றும், இவ்விரண்ட னுள் ஞானசத்தியால் அறிவதும், கிரியாசத்தியால் உலகினைச் செய்வதும் செய்கின்றான் என்றும் கருதுபவ ராதலின், அதற்கேற்பக் கிரியாசத்தி தொழிற்படும் திறத்தை இது முதல் கூறுகின்றார்” என்றொரு தொடர் இங்கே ஏடுகளில் காணப்படுகிறது.

  19. பஞ்சபூதங்களும் தோன்றும் படிக்கு உபாதானமான அசுத்தமாயையை ஐம்பூதம் என்றது அன்மொழித் தொகையாகு பெயர்- பெருமண்டூர்ப் பிரதி.

  20. இச்சிவதத்துவ நிகழ்ச்சியை இரத்தினத்திரய முடையார் பிறர் மதம் கூறும் முறையில்வைத்து, “அந்த ஐந்து சிவதத்துவங்களிலும் மகான்களான விஞ்ஞான கேவலர் களுக்குப் பரமசிவன் தன்னை விட்டுப் பிரியாத கிரியா சத்தியால் விசித்திரங்களான புவனங்களையும், இயல்பாகவே அழகுவாய்ந்த நாயகிகளையும், மிகுதியான போகங்களை யும், அப்போகங்களுக்குச் சாதனங்களான அழிவற்ற தனுகரணங்களையும், நாத முதலியவற்றையும் தோற்று விக்கின்றார்” (சூ.103:2) என்று எடுத்தோதுகின்றார்.

  21. முதல்வன் தனது சத்தியைக் கொண்டு பஞ்சகிருத்தியம் செய்வன் என்பதை, மிருகேந்திரம்,

  “ஸ இத்தம் விக்ரஹோனேன கரணந அஹதௌ ஜஸாI;

  கரோதி ஸர்வதா க்ருத்யம் யதா யதுப பத்யதே

  (4.1) என்று கூறுதலாலும் அறியப்படும்.

  22. சிற் சத்தியாதலின் ஆசை உய்யாது என்றார். இந் நிலை இலயாவத்தைக் கண்ணதாம்; இதனைப் பௌட்கரம், “லயாவஸ்காம் யதா ப்ராப்தா ததோதாஸீத ரூபிணீ (1. 40) என்றும், ஒளிமுகமாகி யிருத்தலை, ஜ்ஞான க்ரியாத்மிகா ஸாபி நித்யாநித்யோதித ப்ரபா; ஸா பராபி முகீ ஸர்வபந்த லேச் விவர்ஜிதா” (1;39) என்றும் கூறுகின்றது.

  23. துக்கமென்பதேயின்றி இன்பமே நிறைந்த நிலையாதலின், மேலாய் முடிந்த எல்லை என்று ஒழியாது, திருவாய் எல்லை என்றார்.

  24. ஒருவாது எனற்பாலது ஈறு கெட்டு நின்றது.

  25. “இந்தச் சத்திகளைவிட்டுச் சிவன் நீங்கியிருப்பன்; அஃதாவது அவை தொழிற்படாது தன்பால் ஒடுங்க நிற்பன்; அச்சத்திகளோ சிவனைவிட்டுத் தனித்திருப் பதில்லை” இரத்தினத்திரயம் கூறுகிறது.

  26. சூக்குமமாய்க் கொண்டு; சூக்குமமாகிய- உ. வே.

  “சக்திரப்ரதிகோதார மரீசி நிசயாத்மிகா

  நித் யோதிதானச்சின்னா நிர்விகல்பஸ்வரூபிணீ

  நிராவரண- நிர்த்வந்த்வ- நிருபாதான வைபவா

  விவிதோ பாதி ஸம்பேத விவர்த்தபிதுரோத்யா

  ப்ரபஞ்சாதி பிந்துவ்யஸ்த படீயஸீ

  பராநபேக்ஷாநந்யா த்மப்ரகாசா ஸர்வதோமுகீ

  ஆதி மத்யாந்த ரஹிதா ஸர்வபந்தன I

  காஷ்டா நிஷ்டா பரா ஸீக்ஷ்மா வஸ்துமாத்ர- திலாலஸா II

  மதிரேவ மதாம்லான மஹிமா பரமேஷ்டின: II

  என்பது (சிவாக்ர. 186) இரத்தினத்திரயம்.

  27. இணங்குதல் கூடுதற் பொருட்டு; “இணக்க மறிந்து இணங்கு” என்றாற்போல.

  28. வணங்காமை, “வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை” (பதிற் 48:9) என்புழிப் போல.

  29. சிவ தத்துவத்தினுடைய- உ. வே.

  30. “விந்துத் தான் பால் வைகரியாதி………..முந்திடும்” (சிவ. சித். 1: 19) என்று அருணந்தி சிவனாரும் கூறுவர். பவுட்கராகமமும் வைகரியால் வாக்குகள் சுத்தமாயையி லிருந்து தோன்றுவனவே என்பதை பிந்து படலத்தில் விரிவாய்க் கூறுகிறது.

  “ஜாயதேத்வா யத: சுத்தோ வர்த்ததே யத்ர லீயதே

  ஸ பிந்து: பர நாதாக்யே நாதபிந்த்வர்ண காரணம்

  என்று இரத்தினத்திரயம் (சிவாக். பக். 200) கூறுகிறது.

  31. “வாக்கு நான்கு வகையில் சோத்திரவிடயமான முட்டை யினின்று மயிற் குஞ்சு புறப்பட்டாற் போன்ற பிருதிவியின் கூறாகிய வைகரியும்……..அப்பு முதல் புருடன் வரையான தத்துவத்துக் காகிய மத்திமையும்…….முதல் மாயை. வரையான தத்துவத்துக் காகிய பைசந்தியும், சுத்த வித்தை முதலான சுத்தாசுத்த அத்துவாவுக் காகிய சூக்குமையும் இவை தோற்றுவித்தல் காரணமாக வந்து” என இப்பகுதி செப்பறையேட்டில் சிதைந்து காணப்படுகிறது.

  32. இச்சாஞானக் கிரியாரூபியான ஆன்மாவை அசேதனம் கிடப்பித்து விகாரம் எய்துவிப்பது போலக் காரணரூபமா யிருக்கும் விந்துவைக் கலக்கிக் காரியப் படுத்துவது பற்றி விகாரித்தது என்றார்; “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉமெல்லாம் மழை” (குறள். 20) என்புழிப்போல மறுதலைத் தொழிலுமாம். சதஸ்ரோ வ்ருத்தய ஸ்தஸ்ய யாபிர்வ்யாப்த: த்ரிதாணவ: வைகரீ மத்யமா பிக்யா பச்யந்தீஸூக்ஷ்ம ஸம்ஜ்நித:

  என்று இரத்தினத்திரயம் கூறிற்று.

  33. கர்ச்சித் தெழுகிற- உ. வே.

  34. கோஷித்த வாறுபோல- உ. வே.

  35. “எவ்வாறு சமுத்திரமானது சூரியனுடைய சந்நிதானத்தில் சந்திரனுடைய சேர்க்கையால் அசைகின்ற அலைகளால் ஆகாயத்தைச் சத்திக்கச் செய்து விகாரத்தை அடைகின்ற தோ, அவ்வாறே விந்துவும் புதிதான விசேடத்தால் வியாபிக்கப்படாத பரமசிவனுடைய சந்நிதானத்தில் அழிவற்றதாயும் பரமசிவனுடைய மகிமை ரூபமாயு முள்ள சிற்சத்தியின் சேர்க்கை விசேடத்தால் அணுசம்பந்தமான அறிவென்னும் ஆகாயத்தை விசித்திரங்களான நாத முதலிய விருத்திகளால் அடிக்கடி நிறையச் செய்து விகாரத் தை அடைகிற தென்பதாம்” (இரத். 185-7).

  36. “சிவனிடம் சமவாய சம்பந்தத்திலிருக்கும் சத்தியானது ஒன்றேயாகும்: அஃது உபாதி வேறுபாட்டால் இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்று தருமத்துடன்கூடி மூன்று விதமாய் இருக்கின்றது” (இரத். 180) இலய முதலிய அவத்தைகட்கு இச் சத்தி காரணமென்பதைப் ; பௌட்கரம்.

  “லயாதிகோ ப்யயம் பேத: சக்தித ஸ்து தத: ஸ்தித:

  பிந்து க்ஷோ போ யத: சம்போ: சத்தே ரேவ ப்ரவர்த்தித: (1;3*) என்று கூறுதல் காண்க.

  37. இயற்றுகை இயல் பென்னுமிடத்து - உ. வே.

  38. அலர்தல் இப்பொருட்டாதலை “அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும்” (அறநெறி 19) என்பதனாலும் அறிக.

  39. “எவ்வாறு ஒரே சூரியனுடைய சத்தியானது நீரைக் கொடுத்தல் இழுத்தல் என்னும் காரிய வேறுபாட்டால் வேறுபாட்டை அடைந்திருக்கின்றதோ, அவ்வாறே விவர்த்தமற்றதாயும், பலத்துடன் கூடியதாயும் உள்ள சிவசத்தியும் தான் ஒன்றாயிருந்தும் காரியவேறுபாட்டால் வேறுபாட்டையடைகின்ற தென்பதாம்” (இரத். 188:9) அருணந்தி சிவனாரும் “சத்திதான் பலவோவென்னிற் றானொன்றே அநேகமாக வைத்திடும் காரியத்தான்” (சிவ. சித். 1:61) என்று கூறுவர். ஈண்டுப் பன்மை யாகக் கூறிய சத்தி வகைகளைச் சிவஞான முனிவர், பாடியத்தின்கண், “தீயின் சத்தியொன்றே சுடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபாட்டால், சுடுஞ்சத்தி. அடுஞ்சத்தி, என்றற்றொடக்கத்துப் பல வேறு பாட்டாற் பராசத்தி திரோதானசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்திஎனப் பஞ்ச சத்திகளாயும், முறையே ஐந்தும் நான்கும் எட்டும் பதின்மூன்றும் எட்டுமாகிய கூறுபாடுடைய, ஈசானமுதற் சத்தி யோசாத மீறாகிய (ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என்ற) பஞ்சசத்திகளாயும், ஆரணி சன்னி முதலிய மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி பிரதிட்டை முதலிய பஞ்சசத்திகளாயும், வாமை, சேட்டை முதலிய அட்டசத்திகளாயும், பரவாகீசுவரி, அபரவா கீவரி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி என்று எழுவகைச் சத்திகளாயும் அத்தியான்மிகமான உன்மனை சமனை முதலிய கலைகளாயும் இன்னும் பலவேறு வகைப்பட்டும் நிற்கும்…………இவற்றினியல்பெல்லாம் ஆகமங்களுட் காண்க” (சிவ. பாடி. சூ. 2: அதி. 4) என்று எடுத்தோதுவர்.

  40. இப்பகுதியின் உரை’ “இவையுடையனாகத் தோன்றினாற் போல ஏகசத்தியே பல போலத் தோன்றா நிற்கும்; விரிந்த பிரகாசமுடைய பரமசிவனுடைய இச்சாசத்தி இவ்வண்ண மிருக்கும்” என்று அச்சுப்பிரதியிற் காணப்படுகிறது.

  41. கிரியா சத்தியால் முதல்வன் பிரபஞ்சத்தை இயற்றுவன் என்ற கருத்தால், காரியத் திசைந்த பேரிசைப் பெருவலி என்றும் ஞானசக்தியின் வேறு என்னும் கருத்தினராதலின்; கிரியாசத்தியை, அறிவின்று என்றும் கூறினார்.

  42. அறிவின் றறிவரை யொத்து என்று பாடங்கொண்டு அதற்கேற்ப, “அறிவின்றியிருந்தும் அறிவுடையாரைப் போன்று” என உரை கூறுகிறது செப்பறை யேட்டுப் பிரதி.

  43. ஞானமும் கிரியையுமாகிய சத்திகள் முதல்வனை இன்றி யமையாவாகலின், பிரிவின்று என்றும், இருந்தொழில் இலது என்றும் கூறினார்.

  44. இக்கருத்தையே, இரத்தினத்திரயம் என்னும்நூலும், “சாத்திரங்களாலும் உலகத்தி லுள்ளவர்களாலும் இஃது இதனுடைய காரியமென்று எந்தக் காரியம் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றதோ, அந்தக் காரிய மனைத்தையும் எண்ண முடியாத மகிமையையுடைய சிற்சத்தியே செய்கின்றது” (சு. 191) என்று கூறுகிறது. எவ்விடங்களிலும் - உ. வே.

  45. “எவ்வாறு மனதினால் கவர முடியாத மகிமையையுடைய கற்பக விருக்கமும் சிந்தாமணியு மென்னும் இரத்தினமும் தான் ஒரு பொருளாக இருந்து கொண்டே அநேக விதமான விரும்பப்படும் பொருள்களைப் பிறருக்குக் கொடுக்கின்ற னவோ, அவ்வாறே மதிக்க முடியாத பரமசிவனுடைய சிற்சத்தியும் ஒருவிதமான விசேடமு மற்றதாய் ஒரு பொருளாக இருந்து கொண்டே எல்லாப் பொருளையும் தோற்றுவிப்பதில் சாமர்த்தியமுடையதாகின்றது” (இரத். 192- 3)

  46. கிரியாசத்தியைச் சிற்சத்தி என்னாது அறிவின்று என்றும், அறிவின்றாயினும் அறிவதை யொத்து அருந்தொழில் சிவணும் என்றும், அஃது என் போல வென்னில், சிந்தாமணி என்றும், அஃது என் போல வென்னில், சிந்தாமணி கற்பகம் இவைபோல என்றும் கூறிய கருத்துக்கு அடிப்படையான கிரியாசத்தி சடம் என்பதனைச் சிவஞான முனிவர், “சைவாகமங்களெல்லாம் சுத்தமா யையைத் தாதான்மிய சத்தியன்று, பரிக்கிரக சத்தியென்று ஓதுதலின், அவற்றொடு முரணுதலானும், தாதான்மிய சத்தி சித்தாவதன்றிச் சடமாதல் பொருந்தாமையானும், கிரியாசத்தி ஞானசத்தியின் வேறன்மை யானும்………….அது பொருந்தாதென மறுக்க” (சிவ. பாடி. சூ. 2. அதி. 2. முதற்காரண முடிபு) என்பர்.

  47. அரனுடை ஞானப்பெருவலி, படர் அடு ஞானப் பெருவலி, பன்னா அளவில் ஞானப் பெருவலி யென இயையும்.

  48. இந்த ஞானசத்தியின் இயல்பை அருணந்தி சிவனார், “சத்திதான் பலவோ வென்னிற் றானொன்றே யநேகமாக, வைத்திடுங் காரியாத்தான் மந்திரி யாதிக்கெல்லாம், உய்த்திடு மொருவன் சத்தி போலா னுடைய தாகிப், புத்தி முத்திகளை யெல்லாம் புரிந்தவ னினைந்த வாறாம்; சத்திதன வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும், உய்த்திடு மிச்சை செய்தி யிவைஞானத் துளவோ வென்னின், எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி, வைத்தலான மறைப்பில் ஞானால் மருவிடும் கிரியை யெல்லாம்; ஒன்ற தாய் இச்சாஞானக் கிரியையென்றொரு மூன்றாகி, நின்றிடுஞ் சத்தியிச்சையுயிர்க்கருள் நேசமாகும், நன்றெலா ஞான சத்தி யாலளந் தறிவனாதன், அன்றருட் கிரியை தன்னா லாக்குவ னகில மெல்லாம்” (சிவ. சிந். சுபக். 81-3) என்று கூறுகின்றார்.

  49. துன்பவிளைவிற்றாய காமத்தின் நீக்கி அழிவில் இன்பம் விளைக்கும் சிறப்புத் தோன்ற, நலந்தரு காமம் என விசேடித்தார்.

  50. ஆன்மாக்களின் பக்குவானு குணமாக நன்மையாகத் தருகிற- உ. வே.

  51. வேண்டின பொருள்களை- உ. வே.

  52. ஞானமின்றிக் கிரியையும், கிரியையின்றி ஞானமும் பயனில்லை யாதலின், (ஞானப் பெருவலி கிரியையின் நயந்து நல்கும் என்றார். (இரத். சூ. 127-8.)

  53. கொடுத்துக்கொண்டு - உ. வே.

  54. எனவே, ஞானமும் கிரியையுமாகிய சத்திகள், முதல்வனிடத்துச் சமவாய சம்பந்தம் உடைய வென்றும், கிரியை ஞானத்தின் வேறென்றும் கொள்ளின், கிரியை சடமாய் அதுவே ஏதுவாக அதனோடு சமவாய சம்பந்த முறுதலின் முதல்வனும் சடமாய் ஆகமங்களோடு முரணு தலின், பொருந்தாது எனச் சிவஞான முனிவரும் அவர்க்கு முன்னைய ஆசிரியரும் மறுத்தனர்;

  அநயோர்ஜ் ஞானயோர் ஹேது ரவிசேஷாத் மிகா சிதி: (பதி: 44) என்று பௌட்கராகமம் கூறுவது காண்க.

  55. குத்தகும்; குத்தரும்- பா. வே.

  56. மற்றும்- பா. வே.

  57. மிடையின்- பா. வே.

  58. “இன்றியமையாச் சிறப்பினவாயினும்” - குறள் 961

  59. வாறும், மாறாம்- பா. வே.

  60. மார்த்தாண்டனென்- பா. வே.

  61. தயனும்- பா. வே.

  62. றோதிறம்- பா.வே.

  63. னிடத்தொன் றருந்தொழில்- பா. வே.

  64. நீதி யில்லை- பா. வே.

  65. இணர்மலர்- பா. வே.

  66. நறு நிழல்- பா. வே.

  67. கண்டது மிலமே- பா. வே.

  68. வருந்தினை மறுகின்- பா. வே.

  69. தன்னதோர்- பா. வே.

  70. காரணா காரணம்- பா. வே.

  71. சிவன் சருவத்தையும் செய்கை ஒரு காரணத்தைக் காட்டுமென்று வினவ, சிவன் செயல் அகாரணாற் காரணமாய்த் தான் அவிகாரியாய் இருப்பானென்று சாதித்தது- பா. வே.

  72. மேவிய என்பது மேய என நின்றது; “மாயோன் மேய காடுறை யுலகம்” (தொல். பொ. 5) என்றாற்போல. “நல்லுயிர் அனைத்தும்” என்றதற்கேற்ப, பலவருக்கத்து நல்ல பிராணிகள் என்றார்.

  73. ஆன்மாக்களும்- உ. வே.

  74. நாரமேயாயின், நல்லுயிர் எனப் பிரித்துக் கூறலாகாமையின், நாரமன்றே என்றும் நாரமல்லவாயினும் அந் நாரத்தை இன்றியமையாவென்றற்கு, நாரமின்றின்றே என்றும் கூறினார். கூறவே அந்நல்லுயிர்கட்கு நாரம் ஆதாரமென்ற வாறாயிற்று.

  75. மண்ணின் காரியமான குடம் சுடப்பட்டு உருமாறிய வழி காரணமாகிய மண்ணின் வேறுபட்டுத் தோன்றுவது போல இந்நல்லுயிரும் நாரத்தின் வேறாயினும் அதன் காரியமாதல் கூடும் போலும் என்றெழும் ஐயமறுத்தற்கு, நாரச் செய்தியுமன்று என்றார். செய்தி- காரியம்.

  76. செய்தியு மல்ல- உ. வே.

  77. நாரமும் நல்லுயிரும் முறையே ஆதாரவாதேயங்களாய் இயைபுற்றிருப்பினும், ஆதாரமாகிய நாரத்துக்கு அவ்வாதே யங்களாற் பயனின்மை தோன்ற, நாரம் ஆருயிர்க்கல்லது உயிர் அதற்குதவும் பேருபகாரமும் இன்று என்றார். பேருபகாரம், பெயரளவிற்றாய சிற்றுதவி யென்பது பட நின்றது. “நீரின்றமையாதுலகு” (குறள் 20) என்பதனால், நீர் ஆதாரமாதல் தெளிக.

  78. அந்த உயிர்களுக்கு - உ. வே.

  79. இஃது அச்சுப்பிரதியில் இல்லை.

  80. பல்லுயிர்க்கும் தான் ஆதாரமாயிருந்தும் அது குறித்துச் சிறிதும் அகங்கரியாமை விளக்குவார். ஆருயிர்க்கபயம் அறன் மற்று உள்ளாது என்றார். ஈண்டுக் குறித்த நாரத்தை அருட்கடலாகிய பதிப்பொருள் என்றும் நல்லுயிரனைத்தும் பசுவாகிய ஆன்மாக்களென்றும் கொண்டு நாரத்துக்குக் கூறிய இயல்பனைத்தும் பதிப்பொருட்கும் கூறிக் கொள்க.

  81. இவ்விடத்தே, “இது பதியுளபோதே வேறாம் பசுபாசம் இரண்டுக் கிந்தப், பதியறி வசைவுண்டாகப் பண்ணிடும் என்பதற்குத் திட்டாந்தமெனக் கொள்க” என்றொரு தொடர் அச்சுப்பிரதியில் மட்டும் காணப் படுகிறது. பதிப்பொருளும் ஆன்மாவும் வேறாயினும் அவைமுறையே ஆதார வாதேயங் களாயிருத்தற்கும், பதிப்பொருள் சுபாவ நின்மலனாதற்கும் திட்டாந்த மெனக் கொள்க என்றொரு தொடர் இங்கே ஏடுகளிற் காணப்படுகிறது.

  82. “அகலிரு விசும்பிற்பாயிருள் பருகி” (பெரும்பாண்1) என்புழி, அகலிருவிசும்பு என்றதற்கு ஆசிரியர் நச்சினார்க் கினியார் “தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்” என்று உரை கூறுகின்றார்.

  “தமாதமா தவ்யாபாரோ யஸ்மின்ஸதிங்கு ணாம்பவேத் தத்தேதி பூதமாதாசம் இஷ்யதாம் முனிபுங்த- ஹ: (Vi .280) என்று பௌட்கரம் கூறுகிறது.

  83. ஆகாயம் ஏனையவற்றின் இடையிருத்தலைச் சிவஞான பாடியம், “நீரகத் தியங்கு முயிர்கட் கிடங்கொடுத்த லுண்மையான் ஆண்டு வெளியுண்டு” என்பது பெறப்பட்டது என்பது காண்க.

  84. ஏனையவற்றின் பரமாணுக்கள் வளர்ந்து உருப்பெறுதற்கு ஆகாயம் இடமாதலைப் பரிபாடல் ‘கருவளர் வானத் திசையிற் றோன்றி, உருவறி வாரா வொன்ற னூழியும்” (2:5,6) என்பதனாலும் “தன்குணமாகிய ஒலியுடனே தோன்றி உருவு காணப்படாத வளி முதற் பூதங்களின் பரமாணுக்கள் வளர்கின்ற வானம்” என வரும் அதன் உரையாலு மறிக.

  85. உருவறி வாராத பரமாணுக்கள் வளர்ந்து விளக்கமுறுங் காறும் ஆகாயத்தின்கண் வேறறியாவா றிருத்தலின், இரு வேறிசையா தொருவழிச் சிவணி யென்றும், இருப்பினும் அவை ஆகாயமாகாது வேறென விளங்குதலின், என்றுந் தானவை ஒன்றாவாறாம் என்றும் கூறினார்.

  86. இத்தொடர் சில ஏடுகளில் இல்லை.

  87. அழகையுடைத்தாய்- உ. வே.

  88. இக்குறிப்புச் சில ஏடுகளில் இல்லை.

  89. உயிர்கட்குத் தாம் செய்யும் தொழில் வாயிலாகவே போக நுகர்ச்சி கை கூடுமாகலின், இனி தியற்றும் மன்னுயிர் என்றார்.

  90. உயிர்கள் தமக்குரிய தொழில்களைச் செவ்விதின் ஆற்று முகத்தால் மாசொழிந்து உய்தி பெறும் பொருட்டு நாடோறும் தவறாது போந்து விளக்கம் செய்தலின், அவற்கு இவ்வுயிர்களோடு எவ்வாற்றாலேனுந் தொடர்புண் போலும் எனும் ஐயமறுத்தற்கு, மன்னுயிர்த் தொடக்கு அம்மார்த்தாண்டற்கு இன்று என்றார்; இவ்வாறு இயைபின்றி யிருந்தும் தம் பொருட்டு இருள்கடிந்தெழும் ஞாயிற்றை அறிஞர் தொழுகின்றன ரென்பது தோன்றவே, சான்றோரும், “பலர் புகழ் ஞாயிறு” (முருகு 2) என்றும், “உலகு தொழத் தோன்றி, வயங்குகதிர் விரிந்த வுருகெழு மண்டிலம்” (அகம் 263) என்றும், “பேராழி யுலகனைத்தும் பிறந்த கலியிருணீங்க, ஓராழி தனை நடத்து மொண் சுடரைப் பரவுதுமே” (கலிங்க. தாழி. 7) என்றும் கூறுவாராயினர்.

  அரத்தே தின சேஷ்டாநாம் ஸந்நிதேரூபதாரக:

  (1:34) எனப் பௌட்கரமும் கூறிற்று.

  91. நான்காகத் தொழில்புரியும்- உ. வே. “அழகிதாகத் தொழில பண்ணும் ஆன்மவர்க்கத் தொடக்குகள் ஆதித்தனல்ல” - இது செப்பறையேட்டிற்கண்ட உரை வேறுபாடு.

  92. ஏவு திறம்படர்வானாயின் அவன் தோன்றுதற்கு முன்பே “பொறி மயிர் வாரணம் வைகறை யியம்ப, யானையங் குருகின் சேவலொடு காமர். அன்னங் கரைய அணிமயி லகவ, பிடிபுணர் பெருங்களிறு முழங்க” (மதுரை. 673-6) நிகழும் நிகழ்ச்சிகள் வேண்டாவாம் என அறிக.

  93. விலையுடைத்தாகிய சயனத்தினின்றும்- உ. வே.

  94. இருக்கருத்துப் பற்றியே, இளங்கோவடிகள், “புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்கு கதிர்க் கழனியும் புள்ளெழுந்தார்ப்பப், புலரி வைகறைப் பொய்கைத் தாமரை, மலர்பொதி யவிழ்தத வுலகு தொழு மண்டிலம், வேந்து தலை பணிப்ப வேந்து வாட் செழியன் ஓங்குயர் கூட லூர்துயி லெடுப்ப” (சிலப். 14: 1-6) என்றார்.

  95. இதனால், பகலோன் இருளை நீக்கித் தரும் உதவிகொண்டு உயிர்கள் தமக்குரிய தொழில பலவும் செய்து வாழ்தல் போல, சிவசூரியன் அருளொளியால் மலமறைப்பினை நீக்கிக் கலை முதலிய தத்துவங்களைக் கிளரச் செய்வதால். உயிர்கள் அவ்வுதவிகொண்டு திருவருள் ஞானம்பெற்று உய்தற்குரிய தகுதிப் பாடுடையரென்பதும் பெறப்படுகிறது.

  96. இக்குறிப்புக்கள் சில ஏடுகளில் இல்லை.

  97. அழகிய பெடையும்- உ. வே.

  98. பாதவும் படைத்தாயின், அதுபோலவே பாதவமாயிருத்தல் வேண்டுமாதலின், பாதவம் படைத்தததன் றாயிற்று. ஒளி பரவுதற்குரிய அந்நிழலிடம் பாதவத்தால் மறைக்கப்பட்ட மையின் ஒளி யில்வழித் தோன்றும் இருளே நிழலாயிற் றென்க, அதனாற்றான், பாதவமின்றேல் நிழல் காண்டலும் இலம் என்றார்.

  99. இக்குறிப்புக்கள் சில ஏடுகளில் இல்லை.

  100. இக்குறிப்புக்கள் சில ஏடுகளில் இல்லை.

  101. வருத்தினம் மறுகும் என்பது வருத்தின மறுகும் என நின்றது. மறுகும், கும்மீற்றுத் தன்மைவினை பிறவினைப் பொருட்டு. என்னாது- என்று கருதாது; ஆயினும் என்பது வருவிக்கப்பட்டது.

  102. இக்குறிப்புச் சில ஏடுகளில் இல்லை.

  103. “உலகெல்லாம் சோதியாய் நிறைந்தான் சுடர்சோதியுட் சோதியான்” (ஞானசம். 142:7) என்றும் “சோதியே சுடரே சூழொளி விளக்கே” (திருவா. அருட்.1) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  104. திக்குகள் பத்தாவன; வடக்கு,வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என்ற எட்டும், மேல், கீழ் என்ற இரண்டுங் கூடப் பத்தாதல் அறிக. உலகம் பதினான் கென்றது, மேலேழும் கீழேழுமாகிய பதினான்கினையும்.

  105. எண்ணிறந் தளத்தற் கரிய- உ. வே.

  106. ஒருமை பன்மையென்னும் வழக்குப்பற்றி, மூன்றாகிய காலத்தை, பலவெனக் கொட்புறுகாலமும்” என்றார்.

  107. இக்கருத்தே தோன்ற, நாவரசரும், “சேயவலகமும் செல் சார்வு மானானை” (iv 19:3) என்றும், “மனத்தினுட்போகமாகிச் சினங்களைக் களைவர்” (iv .32:9) என்றும் கூறுவர்.

  108. சருவான்மாக்களையும் போகம் புசிப்பித்தற்கு இன்றியமையாமைக்குத் தனக்கே முற்றூட்டாக வுரித் தாகிய பொருளாய் நின்று- இது செப்பறையேட்டிலும் பெருமண்டூர் ஏட்டி லும் உள்ள உரை வேறுபாடு.

  109. பற்றுளதாயின் தூயனல்லனாய் விடுவ ரென்பது கருத்து. இறைவனைத் திருவள்ளுவரும், “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்றும், “பற்றற்றான் என்றும் கூறுதலாலும், “புவி முதலைம் பூத மாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம் நான்காய், அவையவை சேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்” (129;6) என்று ஞானசம்பந்தரும் “விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணு நிலனும், திரிதரு வாயுவல்லர் செறிதீயுமல்லர் தெளிநீருமல்லர் தெரியின், அரிதரு கண்ணி யாளை யொருபாகமாக அருள் காரணத்தின் வருவார்” (8:2) என்று நாவரசரும் கூறுதல் காண்க.

  110. இராமலிங்க அடிகளும் இக்கருத்தைவாங்கி “கருணை நிறைந் தகம்பு றமுந் ததும்பி வழிந்து உயிர்க் கெலாம் களைகணாகித் தெருணிறந்த வின்பநிலை வளர்க்கின்ற கண்ணுதலோய்” (மகாதேவ. காப்பு) என்று கூறுவர்.

  111. தன்னம் -சிறிது; “தன்னஞ்சிறிதே துயின்று தாழ” (சீவக 2023) என்றார். அனுப்புதைக்கவும் இடனின்றி எங்கும் குறைவிலா நிறைவாய் நிலவுவது பற்றியே தன்னமோர் குறையின்று என்றார்; குறைவிலா நிறைவே” (146.4) என ஞானசம்பந்தரும் “குறைவிலா நிறைவே” யென்றும், “நிரந்த வாகாய நீர் நிலந்தீ காலா யவை யல்லையா யாங்கே, கரந்ததோ ருருவே” (கோயில் 5,6) என்று மணிவாசகனாரும் கூறியருளினர்.

  112. தானொரு குறையு மின்றியே- உ. வே. 6. திருஞான 131: 10. இது சில ஏடுகளில் இல்லை.

  113. “அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கி ஞானப்புகலுடையோர் தம் முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (132:6) என்று ஞானசம்பந்தரும் அருளுவர். “தொண்டர் அகமலாற் கோயிலில்லை” (40:*) என்பர் நாவரசர்.

  114. “பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினின் னாற்றத்தோடு, நாவினிற் பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான் இது என்கொல்” (7:4) என்று ஞானசம்பந்தரும், “பூவில்வாசனை” என்று நாவரசரும், “பூவில் வாசத்தை” என நம்பியாரூரரும் “நறுமலர் எழுதரு நாற்றம் போற் பற்றலாவ தோர் நிலையிலாப் பரம் பொருள்” என மணிவாசகரும் கூறியருளுதல் காண்க.

  115. “உம்பராலும் உலகின் னவராலும், தம் பெருமை யளத்தற்கரியான்” (ஞான. 29:5) என்று சான்றோர் கூறுதலின், என்னதென்றிசைக்குவ மென்றார். மணிவாசகனார், “வானாகி மண்ணாகி வளியாகி தீயாகி, ஊனாகி யுயிராகி யுண்மையுமாய் இன்மையுமாய்க், கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென் சொல்லி வாழ்த்துவனே” என்றும் நாவரசர், “உன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால் ஏழையே னென் சொல்லி யேத்துகேனே” என்றும் உரைத்தருளுவது காண்க.

  116. னிமல மாய- பா. வே.

  117. திருந்தது பெருந்தகை- பா. வே

  118. போகியது- பா. வே.

  119. வவிச்சைக் கிறைவன்- பா. வே.

  120. எய்திய செய்தியினெய்த தூய- பா. வே.

  121. சுத்தன் எத்தகை யனந்தன்- பா. வே.

  122. டொத்தா மாறென்; டொத்தா மாறேன; டொத்த வாவென- பா. வே.

  123. ஞானா. 64: 42-3.

  124. அடியேனுக்கு உவமையில்லாத கருத்தாலே- உ. வே.

  125. கலை- கலா என்பதன் றிரிபு; உடம்பு என்பது இதற்குப் பொருள் முண்டகோப நிடதம்(6: 7) காண்க.

  126. தரிசனத்துக்குக் கிட்டானாம்- உ. வே.

  127. நலமலி புற்கலன் என்பது வஞ்சப்புகழ்ச்சி; பந்தம் துக்க காரண மாதலின் நலமாகாதென்க.

  128. பெத்தனாம்- உ. வே.

  129. கழித்தற் கருமைபற்றி, நிலை மலி கலை யென்றார்; நாவரசரும் “துறக்கப்படாத உடல்” (4.114:8) என்றும், “துறவா ஆக்கை” (7.42:2) என்றும் கூறியருளியது காண்க.

  130. முதல்வனது தேகாதேக நிலையினை வினவுதலின், அவனைக் காண்டற் கெழுந்த வேட்கையன் சீடன் என்றறிந்து விடை யிறுத்தலின் பன்னும் நிட்களம் என்றார். புலனலன் என்றானாதலின், அவனையே மேற்கொண்டு, புலனாகாத திருவுருவம் நிட்களம் என்பார், பன்னும் நிட்களம் என்றார்.

  131. கழித்தற் கரிய தேகத்துடனே- உ. வே.

  132. பாச பந்தத்தினால் உண்மை ஞானமின்றிப் பசுபாச ஞானங்களே பற்றி மேன்மேலும் பிறப்பிறப்புக்களில் அலமந்து அவற்றையே நச்சிப் பசுத்தன்மையி னீங்காது. கிடந்த சீவனுக்கு, உண்மை ஞான நெறியில் விருப்பும் ஏனையவற்றில் வெறுப்பும் உண்டாவது காணுமிடத்து, அவன் பாற் சத்திபதிந்துள்ளமை வெளிப்படுதலால், பசுவுக்கு அமலன் சத்தி ஒசியாதுற்ற வுண்மை யானும் என்றார். சத்திநிபாத முற்றார்க்கு முத்தியில் விரும்பும் சமுசாரத்தில் வெறுப்பு முண்டாமென்பதை பக்திஸ்ச சிவபக்தேஷூ ச்ரத்தா தச்சாஸதே விதொ I

  அநேநானுமிதி: சிஷ்ட ஹேதோ: ஸ்தூள - தியாமயி

  (எ .5)என்று மிருகேந்திரம் கூறுவதனால் அறிக.

  133. இந்த நிட்களம் என்ற சொல் சில ஏடுகளில் இல்லை.

  134. முத்தனான தன்மையாலும்- உ. வே.

  135. மந்திரவலியினானும் எனப் பின் வந்த அடையால் அவன் என்பது அம்மந்திரத்தைச் செலுத்தும் வாதி யென்பது பெறப்படுதலின், அவன் என்று சுட்டி யொழிந்தார்; “அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்” (தொல். சொல். சேனா. மேற். ) என்புழிப் போல ஈண்டு இயற்பெயர் உய்த்துணர நின்றது. இதனாற் சத்தியுண்மை துணியப்பட்டது.

  136. சத்தியோடு கூடியிராநின்ற நித்தமாகிய நிட்களத்தை நிச்சயித்தறியக் கூடும்- உ.வே. இப்பொருள்கள் இவன் சந்நிதியிலே- உ. வே. சில ஏடுகளில் தன் வலியின் தொக்க என்பதற்கு உரையேயில்லை; “நிச்சயித்தாற் போல நித்திய நிட்களத்தை யறியக்கூடும்” என்று காணப்படுகிறது.

  137. சத்தியானது தன்பால் ஒடுங்க நிற்கும் சிவன் அந்நிலையில் லய சிவன் எனப்பெயர் பெற்று நிஷ்களமாயிருப்பன் என்று பவுட்கராகமம் (பதிபட. சு. 22) கூறுதலின் “இப் பொருள்கள் சிவசத்தி சந்நிதியிலே முடிந்தன” என்று உணருங்கால் அச்சத்தியோடு கூடி அது தான் பாலொடுங்க விளங்கும் சத்திமானாகிய நிட்களசிவம் உணரப்படுமாதலின், அறிதல் கூடும் என்று உரை கூறப்பட்டது. நிட்களத் திருமேனி, அருவத்திருமேனி, இறைவற்கு மூவகைத் திரு மேனியுண்டென்பதை “அருவமு முருவாரூப மானதுமன்றி நின்ற உருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக குள்ளவாமே” (சிவ. சித். 1:38) என்பதனாலறிக.

  138. வசிபடுதல் இப்பொருட்டாதலை, “பசுகரணங்க ளெல்லாம் பதிகரணங்களாக வசிபடுமடியார்” (தணிகை. பாயி. 15.) என்பதனாலுமறிக.

  139. சகலன்- உடலோடு கூடியவன். வசிபடு என்ற விசேடணம் கலையை விசேடிக்கின்றது; அருவத்திருமேனிக்கேயாயின், தன்னையின்றிமையாது நிற்கும் சத்தியே திருமேனியாகக் கொண்டிருத்தலின், அதனை யவ்வாறு சிறப்பித்தா ரென்றுமாம். (மிருகேந். பதிலக்ஷண. 8. 14) இதுவும் உபசாரமென்ப.

  140. வசியென்பதற்கு வசீகரமென்னாது வசித்வம் என்று கோடலு மொன்று; “வசித்வம் ஈசனுக்கு ஐஸ்வர்யம்” என்ப; இதனை, “வசித்வ மபராதீனம் (1.60) என்பதற்கு உமாபதி சிவனார் குறித்துள்ள உரை காண்க.

  141. அத்திருமேனி மந்திரத் திருமேனியெனப் பின்னர்க் கூறுதலின், மாயாகாரியமாயின் துகள்தொகும்; அன்னது அன்று என்றற்கு, மாயை யவயவ மாட்டி யென்றார்; அருணந்தி சிவனாரும், “மாயை தரன் மலத்தைப்பற்றி வருவதோர் வடிவமாகும், ஆயவாணவ மகன்ற வறிவொடு தொழிலை யார்க்கும், நாயகனெல்லா ஞானத் தொழின் முத னண்ணலாலே, காயமோ மாயையன்று காண்பது சத்திதன்னால்” (சிவ. சித்தி. 1;41) என்று கூறுவர்.

  இக்கருத்தையே மிருகேந்திரம்

  ‘மலாத்யஸம் பவாத் சாக்தம் வபுர்நைதாத்ருசம் ப்ரயோ: (3.7) என்று கூறுகிறது.

  142. மாட்டி- மாள்வித்து என்னும் பொருட்டு.

  143. சிவசத்தி பேரொளியுடைய தாதலின், எல்லிய என்று சிறப்பித்தார். “ஆதியுமந்தமுமில்லா வரும் பெருஞ்சோதி” (திருவா. திருவெம்பா.1) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  144. இம்மந்திரதேகமும் இறைவனுக்கு ஐந்தொழில் நடத்துதற் பொருட்டென்று மிருகேந்திராகமம், (சு. 9) கூறிற்றாயினும் “வரங்களினால் தியானிக்கு மவர்களைப் போஷிக்கிற படியால்” ‘வபு:’ (மிருகேந். 3:8) என்றமையின், அதற்கேற்பவே, இருந் தியானத் திருத்தனன் பெருந்தகை என்றார். உயிர்கட்கு இன்பஞ் செய்தற் பொருட்டு உமையொடு கூடியிருக்கும் பரமனை ஞானசம்பந்தப் பிள்ளையார் “பெண்ணினல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே” (5:1) என்றது ஈண்டு இவ்வாசிரியர்க்கு எத் துணையருள் செய்துளதென்பது குறிக்கற்பாற்று. இந்த மந்திரதேகத்தின் பொதுவியல்பை.

  “பஞ்ச மூர்த்திமயீ சுப்ரா நித்யா ஸகலநிஷகளா

  மூர்த்தி: ஸதாசிதீ ஜ்நேயா ஸர்வகார்யப்ரவர்த்திகா

  என்று கூறி, ஈசானத்தை தலையிலும், தற்புருடத்தை முகத்திலும், அகோரத்தை இதயத்திலும், வாமத்தைக் குஹ்யத்திலும், சத்தியோ சாதத்தைப் பாதத்திலும் கொண்டு, ஆரணி, ஜனனி, ரோதயித்திரி என்ற முச்சத்திகளை இந்திரியங்களாகக் கற்பிக்கப் பட்டுளதென்பது ‘ஈசான செதரீ ஸா ச புடவக்த்ரா தோர ஹ்ருத்ஸ்தலா வாமகுஹ்யாச ஸத்யாங்கீ ஹாரிணீ ஜநநீ ததா

  ரோதயித்ரீ திஸ்ருபி: சக்திபி: தல்பிதேந்த்ரியா I

  (1:56) என்று பௌட்கரம் கூறுகிறது.

  1.  இவ்வாறே அருணந்தி சிவனாரும், இறைவன் திருமேனி கோடற்கு “பெருங் கடவுள்தானும், எண்ணிய யோக சித்தர் போலுருவிசைப்பன் காணே” (சிவ. சித். 1 : 39) என்பர்.

  2.  உருவுடையானுமல்லன், அருவுமல்லன் என்று மேலே கூறினமையின், “இங்ஙனம் கூற” என்றார். எனவே, பாரிசேடத்தான் பெற வைப்பார்போல நின்றது விந்து என்றதற்கு நின்ற திருமேனி உருவும் அருவுமாகிய சகள நிட்கள மென்றார். “அருவமுமுருவாரூப மானதுமன்றி நின்ற உருவமுமூன்றுஞ் சொன்ன வொருவனுக் குள்ளவாமே” (சிவ. சித்தி. சூ. க:38) என்பது காண்க.

  3.  ஆயுமிடத்து மந்திர மூர்த்தியாய்ச் சகளப்படுதல் விளங்கு தலின், ஆயின் என்கின்றார்.

  4.  சகளமானபடியைச் சொல்லின்- உ. வே.

  5.  “ஏகதேச வறிவைச் செய்தல் ஏகதேசப்படும் தகுதியையுடைய பொருட்கே யன்றி ஏனையதற் குரித்தன்று; வியாபக வறிவைச் செய்தல் வியாபகப் பொருட்கேயன்றி ஏகதேசப் படும் தகுதியுடையதற்கு உரித்தன்றாகலான், ஏகதேசத்திலறியும் பசுக்களுக்கு ஏகதேசப்படும் மாயையே உருவமாயிற்று (சிவ. சித்தி 1:41 சிவ உரை) வியாபகமாயறியும் பசுபதிக்கு ஏகதேசப்படும் அம்மாயை உருவமாதற் கின்மையின், இவணம் இருங்கலை போகிலன் என்றார். நாவயவஸ்தநோ (119.9) என மிருகேந்திரமும் கூறுதல் காண்க. வியாபகமாயறியும் தகுதிப்பாடுடையன் என்பது தோன்றவே, ஆசிரியர், பெருந்தகை என்றாரெனவறிக.

  6.  ஞானசாதகமா யிருக்கின்ற- உ. வே.

  7.  இலக்கில்லை யாயின்- உ. வே.

  8.  யோகப் பெருந்துறைபடியும் பெருமக்களுக்கும் முதற்கண் ஆதார யோகமும் பின்னர் நிராதார யோகமும் வேண்டி யிருத்த லாலும், ஆதார யோகத்துக்கு வேண்டும் இலக்கும் இறைவன் சசளீகரித்தே அருளுதல் வேண்டுமாதலாலும், இலக்கம் இன்றெனிற் பொருந்தாது என்றார். இதனைச் சான்றோர் “ஆகமங்களெங்கே அறுசமயந் தானெங்கே, யோகங்க ளெங்கே யுணர்வெங்கே- பாகத்து, அருள் வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெரு வடிவை யாரறிவார் பேசு (களிறு.5) என்ப. இலக்க மென்ற சகள நிட்கள வடிவமாவது, “ஆக்கி யொரு பொருளை யாதாரத்தப் பொருளை நோக்கி” (மேற்படி 23) என்புழி ஓதப்படும் பொருள் என அறிக.

  9.  விந்து நாத தரிசனமாவது பரவிந்து பரநாத தரிசன மாம்; இதனை “திருச்சிலம் போசை யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற” (திருவுந்தி. 17) என்பதனாலும் அதனுரை யானுமறிக. ஈண்டுக் கூறப்படும் சிவயோகிகள் ஆதாரயோகம் கைவர நிராதார யோகத்தைச் செய்வர்.

  10. சிவஞானிகளுக்கு- உ. வே.

  11. யோகியர்க்கு அருள்செய்வது குறித்தே இறைவன் சகளீகரித்தான் என்பது தோன்ற, ஞானசம்பந்தர், “பத்திப் பேர் வித்திட்டே பரந்தவைம் புலன்களவாய்ப், பாலே போகா வித்திட்டே பரந்தவைம் புலன்களவாய்ப், பாலே போகா மேகாவாப் பகையறுவகை நினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள் வாய் மூடா வாடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச் சித்திக்கே யுய்த் திட்டுத் திகழ்த்த மெய்ப் பரம்பொருள், சேர்வார் தாமே தானாகச் செய்யு மவன்” (126.7) என்று கூறியருளுவது காண்க.

  12. இது சில ஏடுகளில் இல்லை.

  13. “ஆக்கப்படாத பொருளா யனைத்தினிலும், தாக்கித் தானொன்றோடுந் தாக்காதே- நீக்கியுட னிற்கும் பொருள்” (களிறு. 26) என்று சான்றோர் கூறுதல் காண்க.

  14. பூரியர்கண்ணும் இருத்தற்கரிய பொருட்செல்வமே நன்னெறியில் தன்னைச் செலவிடுவார்க்குப் பொன்றாப் புகழ் பயக்கின்ற தாயின், என்றும் ஞானத்தால் உயர்ந்தோ ரிடத்தே நிலைபெற நிரம்பியிருக்கும் செல்வத்துட் செல்வ மெனப்படும் அருட்செல்வத்தைப் பிற ஆன்மாக்களின் உய்தி குறித்தே கொண்டிருக்கும் முதல்வற்குச் சீர் மிருதல் ஒருதலையாதலின், அருட்கடன் பூண்டு சீர் மிக உயர்ந்தனன் என்றார்; ஞானசம்பந்தரும், “அவ்வதிசை யாருமடி யாருமுள ராக வருள் செய்தவர் கண்மேல், எவ்வ மற வைகலு மிரங்கி யெரியாடு மெமதீசன் (328.7) என்றும் “நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையினான்” (281: 10) என்றும் கூறியருளுவது காண்க.

  15. அளவிறந்த அரிய ஆன்மாக்களுக்கு- உ. வே.

  16. நல்ல அதிசயமாக என்றதொடர் சில ஏடுகளில் இல்லை. விரும்பினனல்லவோ- உ. வே.

  17. ஈசுர தேவரிடத்தும் எனச் செப்பறையேடு கூறுகிறது.

  18. பரமசிவனைச் சகளநிட்களமான சதாசிவனென்றும், சகள மான மகேசுரனென்றும் நிட்களமான சிவனென்றும் இந்நூல் கூறிற்றாக, சருவ ஞானோத்தரம், அதிகாரம் போகம் இலயங்களை யின்றித் தன்னியல்பில் நிற்பது சிவனெனவும், இவ்வதிகாரங்களைச் செய்து நிற்பது பதியெனவும் கூறுகிறது. அதனை, பதி: சக்திம் விதோ ஜ்ஞேய: ஸ்வாதிகார பதே ஸ்தித:

  சிவ; சக்தித்ருச: ப்ரோக்தோ யோதிகார விவர்ஜித:

  (சருவ ஞானா. 1;3) என்பதனாலறிக.

  இனி, இம் மூவருவும் ஆன்மாக்கள் எண்ணிப்பூசித்து வழிபடுவதற்காக முதல்வன் கொள்வன் என்ற கருத்தைச் சிவாக்கிரயோகிகள், “உணரின் மூன்றும் ஈனமாம் நம் பாசமொழிக்கப் பாவித்திடப் பூசித்திட வணங்கி யேத்த வென்றே” (சிவ. நெறி. 92) என்று கூறினர்.

  19. தொலையா மாயை யென்றிபுழித தொலையாமை இன்பவியல்பு குன்றாத தூய்மை குறித்து நின்றது; அஃதாவது துன்பத்தோடு விரவுத லின்றி இன்பமாத்திரையே பயத்தற் கேதுவாதல்; இன்பமே பயப்பது துன்பத்தோடு விரவுவ தாயின், அதன் இயல்பு தொலைதலின், சுத்தமாயை தொலையா மாயை எனப்பட்டது.

  20. சுத்தாவத்தை முதலாகிய- உ. வே. சுத்தவித்தை முதலிய தத்து வங்களடங்கிய சுத்தாத்துவாவை- உ. வே.

  21. முதலாகிய- முதற்காரணமாகக் கொண்ட சுத்தாத்துவா என இயைத்துக்கொள்க. சுத்தாத்து வாவுக்குச் சுத்தமாயை முதலாதலை, “வித்தைகள் வித்தையீசர் சதாசிவ ரென்றி வர்க்கு வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள், தத்துவம் சரீரம் போகம் காணங்கடாமெலாமும், உய்த்திடும் வைந்தவந்தான் உபாதான மாகி நின்றே” (சிவ. சித். 1:25) என்று அருணந்தி சிவனார் கூறுதல் காண்க, இவ்வத்துவாக்களின் இயல்புகளை மிருகேந்திர அத்துவப்பிரகரணத்துட் காண்க.

  22. “சுத்தாத்துவா விஷயத்தில் சிவன் கருத்தா; அசுத்தாத்துவா விஷயத்தில் அனந்தேசர் கருத்தா” என்னும் இது கிரணாக மத்துட் கண்டது; இதனைக் கிரணாகமம், சுத்தாத்வனி சிவ: கர்த்தா ப்ரோக் தோரானந் தோரஸீத: ப்ரபுII: என்று கூறுகிறது. சதமணிமாலை யுடையார் இதனை, “சுத்தமா மத்துவாவிற் கிறைவனா மெய்த்த சீர்ச்சிவனென் பர் விழுமியோர், சுத்த னாகு மனந்த னசுத்தமா, வைத்த மாயையின் மன்னவ னாகுமால்” (29) என மொழி பெயர்த்துரைப்பர்.

  23. மிக்க பூபதி என்று தொடங்கிக் கூறுவனவற்றால் அனந்த தேவர் இயல்பு கூறுகின்றார். தலைமை வைக்கும் பூபதி தன் மாட்டாமையால் வைப்பானாயின் அஃது ஒவ்வாதொழியு மாதலின் மிக்க பூபதி யென்று சிறப்பித்தார்; இன்றேல் வைப்பவன்பால் மாட்டாமையும் வைக்கப் பெறுபவன் பால் வல்லமையும் உளவாய் ஒவ்வாமை பயத்தல் காண்க.

  24. அனந்ததேவராவார் “விஞ்ஞானகலர் பிரளயாகலரிற் பசுத்துவநீங்கி முத்தராய் அதிகாரமல வாசனை மாத்திர முடைமையான் முதல்வன் ஏவல் வழி நின்று ஐந்தொழில் நடாத்துவோர்” (சிவ. பாடி. 2:2) என்பர். எனவே இவர் முதல்வன் ஏவல் வழி நிற்பது தோன்றற்கு, ஈண்டு ஆசிரியர், சிவன்வலி யவமற வுணர்த்த உணர்பவ ரென்றா ரெனக் கொள்க.

  25. அழிவுபடாதே குற்றமற- உ. வே.

  26. இவர்களும் முதல்வனருளால் அவனைப்போல எக்காலத்தும் எப் பொருளையும் விளங்க அறிந்தியற்றுமாறு தோன்ற எவையும் இனிது ஐயமின்றறிந்து என்றார்.

  6.சுத்தமாயை முதற்காரணமாக அமைந்த தேகமும் கரணங்களுமுடையராதலால், அவரைத் தூய ஆகனாகி யென்றார். பவுட்க ராகமம், அனந்ததேவருடைய தனுகரணாதிகள் சுத்தமாயையை முதலாகக் கொண்டன என்றற்கு

  கர்த்துர் தேஹேந்த்ரியாதிகம்

  யது ளதான தோஜாதம் ஸபிந்திரிதி தம்யதாம். (பவுட் .2:13) என்று கூறுகிறது.

  7.  சர்வஞ்ஞத்தையும்- உ. வே.

  8.  சுத்தபுவனத்தில் சுத்த தனுவும் கத்தகரணமுடையராய்ச் சுத்த போகங்களைத் துய்க்கும் அனந்த

  தேவருக்கு அறிய வாராதனவும் குற்றமறச் செய்யமாட்டாதனவும் இலவாயினும், ஆயா ஞானம் நலங்கொள விரிந்துயர்ந்து என்றும், ஊனமதகல எவையும் செய்வன் என்றும் மிகுத்துக் கூறியது, அசுத்தமாயையைக் கலக்குதற் குரிய அதிகார மலமுடையராதலை வற்புறுத்தற்கென வறிக. பவுட்கரம்,

  கிம் சருத்ராணவோ யேந பத்யந்தே யத்ர வா ஸ்திதா:I

  விமுச்யந்தே யதோ வாயம் ஸபிந்துரிதி தம்யதாம்

  (2:2) என்று இதனைக் குறித்துரைப்பது காண்க.

  9.  புலன்கள்- பா. வே.

  10. பொறிகொள்ளவைச் செறிதலின் வெறிகொள் எனற் பாடவேறுபாடு அச்சுப்பிரதியிலுள்ளது. பொறிகொள் பிறவறச் செறிய வெறிகொள்- பா. வே. பொறிகோட் பிறவோ வறியாச் செறியா- பா. வே. இவ்வடிகள் ஏடுதோறும் மாறுபட்டுக் கிடக்கின்றன.

  11. முணர்க- பா. வே. முணர்வின்- பா. வே.

  12. பண்ணிய- பா. வே.

  13. என்னதான - பா. வே.

  14. தானம்- பா- வே.

  15. வலியி னமரு மந்தமில்- பா. வே.

  16. ணெண்செய- பா. வே.

  17. கறையிலன்- பா. வே.

  18. னுரவுவன்- பா. வே.

  19. முன்னே, தூய வாக னாகி யாயா ஞானம் எவையும் நலங்ககொள (ஞான. 65: 41.2) என்று கூறினாராகலின், அதனை மேற்கொண்டு ஆகம் மேவின் யாவும் அறிவொடூ படா என்று மாணவன் கேட்கின்றான். பௌட்கரம்.

  கார்யம் சரீரயுக்தேன கர்த்ராவ்யாப்தம் ஸதேவ யத்

  லோகே வபுஷ்மதோ த்ருஷ்டம் க்ருத்யம் ஸோப்ய

  ஸ்மதாதிவத் II (3:7) எனவும் கூறுவது காண்க.

  20. அறிதல் கூடாதாம்- உ. வே.

  21. பயத்தை யுண்டாக்குகிற மாயாகாரியமான தேகமாதலின் - உ. வே.

  மாயாகாரியமான வுடம்பு விளக்காய் அறிதற்குத் துணை செய்வதாதலின், எறிகொள் மாயை என்றார்; மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல், ஆய தா மொன்றை” (சிவ. போ. 4;5) என்று சான்றோர் தெளிவிக்குமாறு காண்க.

  22. உய்த்தல் செல்லா என்றார், மாயா காரியமாகிய அவை வியாபக மின்றி ஏகதேசமாய் நிற்பனவாதலின் மாயாகாரிய தேகம் வியாபகமன்றென்பதை, மிருகேந்திரம்,

  ஸர்வதோயுக பத் வ்ருத்தே: அனுத்பாதாத் அஸர்வகம் I

  பின்னஜாதீய மப்யேகபலம் தீபாங்கவஸ்து வத் II (12-32) என்பது காண்க.

  23. அப்புலன் என்றவிடத்து எச்சவும்மை தொக்கது. மாயா காரியமான பொறிகளும் புலன்களும் வியாபகமல்ல வென்பது வற்புறுத்திய வாறாம்.

  24. போகிய நாமம்- உயர்ந்த நாமம்; “போகுயர் மதி” (சீவக, 705). என்றாற்போல. அனந்த

  தேவரென்னும் பெயரே அவரது முடிவில்லாற்றலையுணர்த்துதலால் அவர் எல்லாம் அறியக் கூடுமென்து தோன்ற நிற்பதுபற்றி, நாம விசேடத்தை ஏதுவாக்கி, எய்தவ உளதெனில் என்றான். அதனை மறுத்து. அனந்ததேவரென்னும் நாம விசேடத்தால் அண்மையிலிருப்பவற்றை இனிதறியும் ஏனோர் போலாது சேய்மையிலுள்ளவற்றைக் கடிதினுணரும் வன்மை யுடையரென்றுபடுவதல்லது. சருவஞ் ஞத்துவமுடைய ரென்பது கூடா தென்பான் உரை முதல் விடயம் விரைவினொடுணர்வன் என்றான்.

  25. லறியக் கூடுமென்பாயாகில்- உ. வே.

  26. அனந்தேசுரர் திருமேனிக்கு உற்பத்தி சொல்லப்பட்டது- உ. வே.

  27. முன்னே, தூய ஆகனாகி (ஞானா. 65:41) என்று கூறியிருப்பது காண்க. இதனைப் பெயர்த்தும் கூறியது “வினைத்தொடர்பு ஏயாமை வற்பறுத்தற்கு. பவுட்கரமும், கிம் ச கர்மோத்திதா ஸ்ஸர்வே புஷ்கலா: சுத்தவர்த்மநி

  கதம் தர்மானு ஸாரேண மாயாபரிணதெள் ஸ்திரித: (2,8) என்று கூறுகிறது.

  28. அனந்ததேவர் முற்றறிவுடையரென்பது

  சுத்தாத்வ வர்த்தின: ஸர்வே ப்ரபுத்தா: சிவதேஜஸா

  (பவுட்.2 :7) என்பதனாலும் விளங்கும்.

  29. ஒழிக்கமுடியாது காண்- உ. வே.

  30. அனந்ததேவர் தேகம் கருவி முதலியவற்றோடு கூடியிருந்த போதிலும் அவற்றால் தாம் அறிவாற்றல் குறைவெய்தார் என்பதைப் பாம்பின் விடவுதாரணத்தால் விளக்குகின்றார்.

  31. வாதிக்குமதில்லை-உ. வே.

  32. இவ்வாறே பவுட்கரம், “தேஹேந்த்ரியாதிமந்தோபி நாபுத்தாஸ்தேஷீதே புன: 1 (2,8) என்றும், சுப்பிரபேதம், ததா தத்ரைவ ந கர்மபோக வைசித்ர்ய காரணம் சுத்த வர்த்மனி என்றும் கூறுகின்றன.

  33. திருமேனியும் சுவேச்சா விக்கிரகமாயிருக்கும்- உ. வே.

  34. சின்னம்- சிறிது: “சின்னஞ் சிறுத்தவிடை” என்று பிற்காலத்தவர் சிறுமைப் பொருளில் இச் சொல்லை வழங்கி யுள்ளனர்.

  35. சீந்திற்கொடி மிகப்புல்லிதாயினும் தன்னருகே தனக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் மரமுற்றும் பரவிப்படரும் இயல்பிற்றென்பதை காட்டுட் செல்வோர் இன்றுங் காணலாம்.

  36. பரிணமித்தல் -சூழப் படர்ந்து கொள்ளுதல்.

  37. சீந்திற் கொடி தனக்குப் பற்றுக் கோடாய மரத்திற் படரு மாற்றல் பெருகித் தலைமை கொள்ளுமாறு போல, மந்திரேசரும் சிவசத்தியாகிய பற்றுக் கோட்டினால் அசுத்தாத்துவாவுக்குக் கருத்தாவாயிருக்கும் தலைமை யெய்துகின்றனர் என்பதற்கு தான் முதல் கூடலின் என்றார்; முதல் என்றது ஈண்டுச் சிவசத்தி “அசுத்தாத்து வாவுக்குக் கருத்தாவாயிருப்ப” ரென்பது உவமையாற் பெறப்பட்டது. அனந்ததேவரையே ஈண்டு மந்திரேசன் என்றார், இவர் முதலிய எண்மர்களும் வாமை முதலிய ஒன்பது சத்தி களோடு கூடி ஏழு கோடி மந்திரங்களைப் பரிவாரமாயுடையராதல் பற்றி. இதுபற்றியே இவர்கள் “மந்திர மஹேஸ்வரர்” என்று ஆகமங்களிற் கூறப்படு கின்றனர். இவ்வனந்தர் முதலிய எண்மர் இயல்புகளையும் மிருகேந்திரம், பவுட்கரம் முதலிய ஆகமங்களுட் காண்க.

  38. “தூயசிவ தத்துவத்து வழங்கா நின்றோர் துடக்குமுடம் பிந்தியங்களுடையரேனும். மேய சிவ னொளியாற் பேரறிஞராவர் வேறுளர் போல் அஞ்ஞான முடையராகார்” (44) என்று சிவப்பிரகாசவிகாசம் கூறுவதும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

  39. இத்தொடர் சில பிரதிகளில் இல்லை.

  40. இக்கருத்தையே பவுட்கராகமம் “தேஹேந்திரியாதி மந்தோபி நாபுத்தாஸ் தேஷூபுன:” என்று கூறுவது காண்க.

  41. முதல்வன் சத்தி வழி நின்று அநந்ததேவர் கலக்கக் கலக்குண்ட அசுத்தமாயையினின்றும் காலதத்துவம் தோன்றுதலின், “ஆண்டகை வலியின் காண்டகு காலம்” என்றார். “மாயையிற் காலமோடு நியதி பின் கலாதி தோன்றும். ஆயவக்கால மூன்றாயாக்கியு மளித்தும் போக்கிக் காயமொடுலகுக்

  கெல்லாம் கால சங்கையினைப் பண்ணி, நாயகனாணையாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம்”(சிவ. சித். 2:54) என்றும். “நிகழ்தனது சத்தியியக்குறு மனந்ததேவன், மறுவறு மொண் சத்திகளா லவற்குபாதானம், மாயைதனைக் கலக்குமென வகுத்தன வாகமங்கள்; கலங்கலுறு மதுகிருத கீட நியாயத்தால், கவின்ற தனதேக தேசம் பரிணாமீப்ப, விலங்கமுதல் வருங்கால நியதிகலை யென்ப” (சிவப். விகா. 55-3) என்றும் சான்றோர் கூறுப.

  42. சென்றார் போல- உ. வே.

  43. மிகத் தூயதாகிற சிவசத்தியோடு கூடுதற்கேற்ற தூய்மையும் வன்மையுமுடைய சுத்தமாயையாலியன்ற தனுகரணங்களை யுடைமைபற்றி, “வலியின்நிலை மாண்டவாகம்” என்றார்.

  44. அவனது அமலம் என்பதற்கு அவனது திருமேனி அமலமாதல் போல அமலமாம் என்பது பொருள். அமல முடையதனை அமலமென்றார். அமலம்- மலபந்தமில்லாதது, சுத்தமாயையை முதற் காரணமாகக் கொண்டதனால் “அவனது அமலம்” என்றார். இதனைப் பவுட்கராகமம்.

  ‘கிம் ச மாயாத்யுபாதானம் தேஹேந்த்ரிய கரம் ந்ருணாம் I

  க்ஷூப்த தத்கார்யகரம் தஸ்ய கர்த்து: தேஹேந்த்ரியாதிகம்

  யதிபாதானதோ ஜாதம் ஸபிந்துரிதி கம்யதாம் II

  என்று கூறுவது காண்க. முன்னே கொட்டைப் பாசியைக் காட்டியது இவ்வனந்தர் தேகேந்திரியங் களோடு கூடிய வழியும், அவற்றால் விசாரமுடையரல்லர் என்றற்கும், அசுத்தமாயையைக் கலக்குமுகத்தால் அதிற்றோயினும், அதனாற்பற்றப்படுதல் இலரென்றற்கு, தாமரையைக் காட்டியதென்றும் அறிந்து கொள்க.

  45. இது சில ஏடுகளில் இல்லை. ஈண்டு இஃது இசையெச்சம்.

  46. சிவசத்தியோடே கூடுதலாலென்பதும் பல ஏடுகளில் இல்லை; செப்பறையேடு ஒன்றில் தான் காணப்படுகிறது.

  47. அழகிய ஞானமும்- உ. வே.

  48. மேம்பாடான சத்தியும்- உ. வே.

  49. அனந்ததேவரின் கீழ்நிலையிலுள்ள ஞானவான்கட்கும் யோகிகட்கும் முறையே உண்மை ஞானமும் காயசித்தியும் எய்துவது காட்டி, மேனிலையிலுள்ள அவர்க்கு இவை எளிதில் கைவரப்பெறுவதில் தடையேதுமில்லை யென்பதை வற்புறுத்தற்கு, தீதின்றறி என்றார்.

  50. அனந்த தேவர்க்குத் தீதில்லை; தடையில்லை- உ. வே.

  51. முன்புபோல் வலிபெற்றது- உ. வே. மருந்தால் நோயுற்ற வுடல் பண்டை வலிபெறுமெனும் இக்கருத்தையே ‘மருந்தி னாற்றலின் மிக்க வலிவரும், அரந்தை நோயிற்ற வர்க்கது போலிறை பொருந்து சத்தி பொருந்தி லளவிலா, திருந்த வாற்ற லிசையுமுயிர்க்கரோ” (70) எனச் சதமணிமாலை கூறுகிறது. இது கிரணாகமத்துட்கண்டது.

  52. அனந்தர் முதலிய எண்மரும் தத்தம் “அதிகாரமல விசேடத்தால் தம்மில் தாரதம்மிய முடையராயினும் சர்வஞ்ஞத்துவம் முதலிய குறைபாடிலர்” என்று ஆகமங்கள் கூறுவதால். மிடல் அதனில் குறையிலன் என்றார். மிடல் குறையிலன் என்றதனால், மந்திரங்களால் வேறு பாடுடைமை துணியப்படும்.”

  ஸர்வஜ்ஞத்வாதி யோகேரபி நியோஜீய -த்வம் மலாம்சத: I

  பரஸ்பரம் விதிஷ்யந்தே மந்தராஸ் சைவ மித: ஸ்திதா: II

  (4:5) என்பது மிருகேந்திரம்.

  53. இவர் சத்திக்குக் குறைவில்லை- உ. வே.

  54. இந்த அனந்தேசுரர் இயல்பைப் பௌட்கரம்,

  யேப்ரோக்தா ஸ்தத்வ மைசாநம் விசேஷேண க்ரியாதிகா: I

  அதிகார குணோபேதா: மஹாந்தஸ் சக்ரவர்த்தின: II

  அஷ்டாவனந்தசூ க்ஷ்மாத்யா யதாபூர்வம் குணாதிகா: I

  அதிஸௌந்தர்ய லாவண்யா அக்ஷீண-மனஸ: ஸதா II

  (4:53:4) என்று கூறுதல் காண்க.

  55. “அவர்கள் தம்முள். விஞ்சுதொழில் ஞானவனந் தேசர் தம்மை மேவுவித்து மகேசுரதத் துவத்ததிபராக. எஞ்சலிலா வதிகார ‘சத்தியவர் பாலி விருத்தித்தா னிரண்டறவே யிசைந்து நின்று, நஞ்சனைய வதோமாயா காரியத்தைப் பரிய” (சிவ. நெறி. 91) என்று சிவாக்கிரயோகிகள் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

  56. மென்றிக் - பா. வே.

  57. பரியத் தாதுகு பைங்கணை - பா. வே.

  58. யாவருங் - பா. வே.

  59. மாறுந்- பா. வே.

  60. லுமிழ் பெரும் புலனும்- பா. வே.

  61. செவ்வி- பா. வே.

  62. ஒரு பெரும் புலனும்- பா. வே.

  63. மெய்ப்படு பேருணர்- பா. வே.

  64. ஞானா. 65: 6-9.

  6.சிவ போகம்- பா. வே.

  7.  வாசகரகிதமெனக் - பா. வே.

  8.  “கோங்கின் குவிமுகி ழிளமுலை” (முருகு 34-5) என்று சான்றோரும் கூறுப.

  9.  வளப்ப முடைத்தாகிய- உ. வே.

  10. யிகழ்ந்து-உ. வே.

  11. கயல்போற் பிறழும் கண்ணிணையை அதனொடு மலைப்பது போலக் கூறுதலின், கயன் மலைப்பன்ன கண் என்றார்; பிறரும் “மதர்கயன் மலைப்பி னன்ன கண்” (அகம் 140) என்றும், “கயல் மலைப்பன்ன கண்ணினை” (யாப் வி. 39. உரைமேற்.) என்றும் கூறியிருத்தல் காண்க. நோக்கத் தால் மானை ஒத்தல் பற்றி, மான் நிறக் கண் என்றார்; மான் பிணையின் வெருவிய நோக்கத்தை மகளிர் நோக்கிற்கு உவமஞ் செய்தல் சான்றோர் இயல்பு. தம்மையும் தம்முன்னிருந்த சமணரையும் கண்டு அஞ்சி நோக்கிய மங்கையர்க் கரசியாரைத் தெருட்டலுற்ற ஞானசம் பந்தப் பிள்ளையார், “மானி னேர்விழி மாதராய்” (297:1) என்று உரைத்தருளுவது காண்க.

  12. கயலை யொத்த- உ. வே.

  13. மானோக்கத்தைக் கெடுத்த- உ. வே.

  14. பின்னுதற்குச் சிக்கறுத்து நீவிய கூந்தல் என்றற்கு, பின்னுவிட நீவிய கூந்தல் என்றார்; அது செய்த வழிக் கூந்தலின் கருமை விளங்கிப் புயலினை நினைப்பித்தலின், புயலெனப் பின்னுவிட நெறித்த கூந்தல் எனப்பட்டது. “பின்னுவிட் டிருளிய வைம்பால்” (கலி.59) என்றும், “ஐதாக நெறித்தன்ன அறலவீர் நீளைம்பால்” (கல்.32) என்றும் வரும் வழக்குகளைக் காண்க.

  15. நீலமேகத்தின் நிற மென்னும் படியாக- உ. வே.

  16. மார்பிடத்தே தோன்றும் சுணங்கு பொன்னின் நிறத்தை யுடைமை பற்றி, பொன்னென என்றும், சுணங்கு தோன்றுதலை அரும்புத லென்னம் புலனெறிவழக் குப்பற்றி, அரும்பிய சுணங்கு என்றும் கூறினார்; ‘பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய, நன்னிறத் தெழுந்த சுணங்கு” (அகம் 319) என்றும் “குரும்பை மென்முலையரும்பிய சுணங்கின்” (அகம் 253 ) என்றும் வருமாறறிக.

  17. ஒளியுண்டாகப் பரந்த சுணங்கும்- உ.வே.

  18. நிதம்பப் பிரதேசமும்- உ. வே.

  19. கண்ணையு மனத்தையும் கவற்ற- உ. வே.

  20. கண் காண்டலும் மனம் நிளைத்தலுமின்றிக் காமவின் பத்திற் களித்துத் தடுமாறுதலின் தொழிலிழிந்து மயங்கி என்று உரை கூறினார்; நினைவின்மை கூறவே காமவின்பம் உரைக்கப் படாமைக்கு ஏது கூறியவாறாயிற்று; இவ்வாறே காமக்கடலுள் மூழ்கித் தடுமாறும் சீவகன், “பண்ணுலாங் கிளவிதன் பாவையேந்தல் குல், வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகில் உண்ணிலாய்ப் பசுங் கதிருமிழ்வ பாவியேன், கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே” (சீவக 1481) என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

  21. இலங்கு மணிமேகலை- ஒளியுடைத்தாகிய மேகலா பரணமும் - உ. வே.

  22. சர்க்கரைப் பாகினைப் பாகென்றும். அதனினிமை சொல்லிடத்துத் தோன்றுதல் கொண்டு பாகொத்த இன்றீங் கிளவி என்று கூறுவது வழக்காயிற்று. பாகு போலும் சுவையுடைய சொல்லைப் பாகென்றே ஒற்றுமையுறக் கூறலுற்று, “பெட்ட வாய்மொழிப் பெரும் பாகுதிர” (பெருங்.1: 40. 174) என்று கொங்கு வேளிர் உரைத்தார்.

  23. “தேதாவென வண்டொடு தேன்வரி செய்யப், போதார் குழலாள் புணர்மென் முலைபாயத் தாதார் கமழ்தார் மதுவிண்டு துளிப்ப ஈதா மவரெய் தியவின்ப மதே” (சீவக. 1066) என்று பிறரும் கூறுதல் காண்க.

  24. மகளிர்க்கு உயிரினும் நாண் சிறந்தமை பற்றி, தண்டா நாணும் என்றும், “பெருமையும் உரனு மாடூஉமேன” (தொல். பொ. 98) என்பதனால் தண்டா நிறையும் என்றுங் கூறினார். ஆடவரினும் மகளிர்க் குண்டாகும் நாண் மெலிவு நன்கு புலனாதலின், நாணீங்கல் முற் கூறப்பட்டது. தலைமைபற்றி நாணும் நிறையுங் கூறினாராகலின், ஏனை மட முதலியனவும் அறிவு முதலியனவும் கொள்ளப்பட்டன.

  25. காமப் புணர்ச்சிக்கண் மகளிரணியும் கோதையும் மேகலையும் துகிலும் நீங்கிச் சூழ்ந்த வண்டினம் முரலு மென்பதை, “பரிந்த மாலை பறந்தன குங்குமம், கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின், அரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம், பிரிந்த வண்டிளையார் விளையாடவே” (சீவக. 1349) என்று பிறகும் கூறுதல் காண்க.

  26. ஆபரணங்கள் தம்மிற் கலாவிச் சிதைய- உ. வே.

  27. ஈண்டுக் கூறப்படும் கருத்தை, “அற்புதமாகிய வனுபோகக் காமம் போற், கற்பனையின்றிக் கலந்து நின்றானே” மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய. சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனோ” (திருமந். 2943. 2944) எனவருவனவற்றாலும். “மோகித்த காமத் தின்கண் முயற்சியிற் சுகமுந் தண்ணீர், தாகித்த தாகந் தானும் தாகித்தா னறிவதல்லால், ஏகத்த பொருளதாகி யிடைவிடா தமுத மூறும், போகத்தை நுகர்வதல்லாற் போதத்தாற் புகலலாமோ” (பெருந். 2023) என்பதனாலு மறியலாம்.

  சொல்ல வொண்ணாமைக்குரிய இயல்பை, இராமலிங்க அடிகள் “மனையணைந்து மலரணைமே லெனையணைந்த போது மணவாளர் வடிவென்றும் எனது வடிவென்றும், தனை நினைந்து பிரித்தறிந்த தில்லையடி யெனைத்தான், சுற்றுமறி யேனெனில்யான் மற்றறிவதென்னே, தினையள வாயினும் விகற்ப வுணர்ச்சி யென்பதிலையே திருவாளர் கலந்தபடி செப்புவ தெப்படியோ, உனையணைந்தா லிவ்வாறு நான் கேட்பே னப்போ, துன்னறிவு மென்னறிவு மோரறி வாங்காணே” (. 82.16) என்று மகளிர் இருவர் கூற்றில் வைத்துரைப்பது காண்க.

  28. தெண்டிரை யென்பது ஆகு பெயராய்க் கடல் குறித்து நின்றது, அமிழ்து படு தீஞ் சொல் என்புழிப் படுசொல் உவமங் குறித்து வந்தது; “இளிபடு மின் சொல்” (ஞானசம்.2:68.3) என்றாற்போல.

  29. எல்லா நலங்களினும் தலையாய நாநல முடைமை பற்றி, தீஞ் சொல்இமிழ் பெரும் புலன் என்றும், எல்லாச் செல்வங்களினும் தலையாய கேள்விச்செல்வம் தருதல் பற்றி நிமிர்ந்த இருபெரும் புலன் என்றும் சிறப்பித்தார்; (குறள். 641:411) காண்க.

  30. ஒரு காலே- உ. வே.

  31. அழகிதாக என்றுரைத்தது, அவ்விழவால் மெய்வனப்புக் குறையாமை யுணர்த்தற்கு எனக் கொள்க.

  32. உடலசைவாலும், முகக்குறிப்பாலும், கைகளாலும் தன்னுள்ளத் தெழுந்த கருத்துக்களைத் தெரிவிக்கும் சிறப்புப் பற்றி, ஊமனை, மெய்யுரை பெறூஉஞ் செவ்வியாளன் என்றார், “கையினாற் சொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்” (சீவக. 997) என்று பிறர் கூறியது, கூற்று நிகழ்த்துவோள் தன்னை யவலித்துக் கூறும் அமைதி பற்றி யெனவறிக.

  33. ஊமன் கண்ட கனவு முற்றும் பிறர் விளங்க அறியுமாறு உரைக்கவும் கேட்கவும் படாதென்பதுபற்றி, கனாத்திற னல்லதை வினாத்திறம் இல்லை என்றார்.

  34. இவ்வுரை சில ஏடுகளில் இல்லை. சொல்லும் வேறுபாட்டை யுடையதோ- உ. வே.

  35. அற்றேல் “ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாட்கள்” (பெரிய.1.1.3.) என்றாற்போலப் பயனின்றிக் கழியும் போலும் என்பதனை விளக்கி, அது ஞானவான்களாலே எய்தப்படுமென யாப்புறுத்தற்குப் பிறிது என்றார். அருணகிரியாரும் இந்த ஞானவின்பம் எளிதில் கேட்கவும் சொல்லவும் படாத தென்பதனை, “மக்கட்குக் கூறரிதானது, கற்றெட்டத்தான் முடியாதது, மற்றொப்புக்கியாது மொவ்வாதது -மனதாலே; மட்டிட்டுத் தேடவொணாதது, தத்வித்திற் கோவைபடாதது, மத்தப் பொற் போது பகீரதி- மதி சூடும்; முக்கட் பொற் பாளருசாவிய, அர்த்தக்குப் போதகமானது, முத்திக்குக் காரணமானது- பெறலாகா; முட்டர்க் கெட்டாதது நான் மறையெட்டிற்றட்டா தெனவே வரும்” என்றோதி, எனவே அதனால் நாம் அதனைப் பெறலரிது போலு மென்பாரை மறுத்து, பெறற் குரியதே யென்பாராய், “முற்பட்டப் பாலையிலாவது- புரிவாயே” (திருப்புகழ். 489) என்று கூறுதல் காண்க.

  36. உண்மை ஞானத்தைப் பேருணர் வென்றார், அதனிற் பெரியது பிறிதியாதும் இல்லையாதலால்; “அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும், பொருளிற் றலையிலது போல்” (திருவருட். 31) என்பது காண்க.

  37. கல்வி கேள்விகளால் பேருணர்வு உடையாராயினும், சிவபோக முண்மை தேர்ந்து அதனைப் பெறற்குக் கருதாத வழி வசையே பெறுவாராதலின், வசையில் பேருணர் விசைய மள்ளர் என்றார்; திருவள்ளுவரும், “கற்றதனாலாய பயனென் கொல்வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள்.2) என்றமை காண்க.

  38. கவசமில்வழிப் பகைவர் எறியும் படை எளிதிற் றாக்கித் தீங்கு செய்வதுபோல, வெகுளியுந் துன்பமும் தாக்கி மெய்யுணர்வைச் சிதைத் தழிக்கு மாதலின், பொறைப் பெருங்கவச மென்றார்.

  39. செயல்தீர் கழல்- செயலின்மையாகிய கழல்; அஃதாவது சுன்மச் சேதவுபாயமென மேலே கூறியது. தீர், முதனிலைத் தொழிற்பெயர்.

  40. நீத்த கயந்தலை யென்பது “பொச்சாவாக் கருவி” (குறள் 537) என்றாற்போல நின்றது. கயந்தலை- பெரிய தலையையுடையயானை)

  3.ஒழித்தலென்னும் விரதமாகிய யானையை யூர்ந்து- உ. வே.

  4.  துணையின்றாங் கென்று கொண்டு துணைவேண்டாமை யாகிய படையே துணையாக வுடையரான விடத்து- உ. வே.

  5.  உயர்வற வுயர்ந்த வீரர் துணை வேண்டாது தமித்துச் செல்லும் பான்மைய ராதலின், துணையின் றென்றார்; “கூட்டொரு வரையும் வேண்டாக் கொற்றவன்” (கம்ப. கிட். வாலி வதை என்று கம்பரும் ‘செருவில் ஒருவ” (முருகு. 262) என நக்கீரரும் கூறுதல் காண்க.

  6.  இறைவனுக்கு ஞானமே வாளாகச் சான்றோர் கூறுவது பற்றி, இவரும் ஞானப் பூமுகப் புகர்வாள் என்றார்; “ஞானவாளேந்து மையர் நாதப் பறையறைமின்” (திருவா 46.1) என்று மணிவாசகர் கூறுவர்.

  7.சிவநெறி யொன்றையன்றி வேறு நெறி அப்பெருமக்கட்கின்மையின், ஒருவழிக் கொளீஇய உள்ளம் என்றார்; ‘ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” (ஞான. 1.11) என்று ஞானசம்பந்தரே கூறுதல் காண்க.

  8.  பரமேசுவரர் துதி யொழிய அல்லாதவற்றைக் கெடுத்து- இவ்வுரை வேறுபாடு செப்பறை யேட்டில் கண்டது.

  9.  உள்ளத்தை ஒருநெறிப் படுத்திஞானம் கைவரப் பெற்ற பின்னரும் தாங்கி நிற்கும் உடம்பின் தொடர்பால் வேறு உணர்வுகள் தாக்கு மாதலின், அவற்றை வேரொடுங் கெடுப்பது தோன்ற, உணர்வுசூழ் ஒடுக்கி யென்றும், அவரால் உணரப்படுவது சிவ போக மொன்றே யாதலின், உணர்வது உணர்வின்பாலே யென்றும் கூறினார். இவ்வாறு உள்ளி யுணர்ந்த உணர்வின் நலத்தை மணிவாசகர் “இன்பம் பெருக்கி யிருளகற்றி யெஞ் ஞான்றும், துன்பந்தொடர் வறுத்துச் சோதியாய்- அன்ப மைத்துச் சீரார்பெருந் துறையான் என்னுடைய சிந்தையே, ஊராகக் கொண்டான் உவந்து” (திருவா 47.11) என்றும், திருமூலர், “ஒன்றி நின்றுள்ளே யுணர்ந் தேன்பராபரம், ஒன்றி நின்றுள்ளே யுணர்ந்தேன் சிவகதி, ஒன்றி நின்றுள்ளே யுணர்ந்தேன் உணர்வினை, ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே” (திருமந். 2954) என்றும் கூறுகின்றனர்.

  10. உணர்வும் வகைகளை- உ. வே.

  11. ஓகாரம் எதிர்மறை-உ. வே.

  12. நீனிடை- பா. வே.

  13. முடைத் தோன்- பா. வே.

  14. துயர் வறுபாவ மொழித்த பாவத்- பா. வே.

  15. தணித்தோன்- பா. வே.

  16. சிரயங் குற்றோன்- பா. வே.

  17. குறிப்புடனதனால்- பா. வே.

  18. ஆடாவுலக- பா. வே.

  19. ஞானா.67:29

  20. தரிசனமல்லாமையாற் - பா. வே.

  21. ஆன்மவறிவாலே பாவிக்கப்படுவ னென்று சொல் லியது- பா. வே.

  22. சமயவறங்களை யுரைக்கும் சான்றோரை “அறவோர்” என்றும், சமய நெறியை அறமென்றும் கூறும் வழக்குப் பற்றி, ஈண்டுச் சமய வுண்மை யுரைக்கும் ஆசிரியனை, அறவ என்றான், “அங்கையிற் பாத்திரங் கொண்டறங் கேட்கும், இங்கு இணையில்லாள்” (மணி. 25: 9-10) எனச் சமயநெறி அறமென்று வழங்கப்படுமாறறிக.

  23. சகளமாவது உருவத் திருமேனியாதலால், சகளம் கட் காண்தகுதித் தாமென்றும், அதனால் தியானம் எளிதில் அமையும் என்பது பற்றி, துகளில் தியானம் துறவாது என்றும் கூறினான். துறத்தல், நீங்குதல், கண் முதலிய பொருள்களாற் காண்டல் முதலிய தொழில் நிகழ்ச்சியால் மனம் ஒன்றா தொழியும் குற்ற முண்டாதலின் துகளில் தியானம் என்று சிறப்பித்தார். கேள்வி சிந்தனை தெளிதல்களின் பயன் தியானம் என்பர். “எண்ணா யிரத் தாண்டு யோக மிருக்கினும், கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை, உண்ணாடி யுள்ளே யொளிபெற நோக்கினாற், கண்ணாடி போலக் கலந்து நின்றானே”(திருமந். 603) என்பதனால் தியானத்தின் சிறப்புணரப்படும்.

  24. நிட்களம் என்றருளிச் செய்ததை அகவல், 62ல் காண்க.

  25. கண்டு பயனெய்துதற்குரிய உறுதிப்பொருள் காணப்படாதாயின் அதனால் உறுதி யெய்து தற்குரியோர் அச்சமும் அவலமும் உறுவது இயல்பாதலின், உட்கவோடியது என்றான்; “உண்டொ ரொண்பொரு ளென்றுணர் வார்க் கெலாம், பெண்டி ராணலி யென்றறியொண்கிலை, தொண்டனேற் குள்ளவா வந்து தோன்றினாய், கண்டுங் கண்டிலே னென்னகண் மாயமே” (திருவா. திருச். 42) என்று மணிவாசகரும், ‘தேடிக்கொண்டு திருவாய்மூர்க் கேயெனா, ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ” என்று திருநாவுக்கரசரும் வருந்தியுரைக்குமாறு காண்க.

  26. பாவனைக்கெட்டாதாயின், பாவக மாத்திரையாய்ப் பயன் படாமையின் ஆவகையரிது என்றான்; “பாவனா தீத மெனிற், பாவகமாம் அன்றென்றிற் பாழதுவாம்” (சித்தாந்தப் பஃறொடை 604 சிவ. போ. 6:2, 3) என்று சான்றோர் கூறுப.

  27. இத்தொடர் சிலஏடுகளில் இல்லை.

  28. மனம் இனிதாகப் பொருந்தி யறிவாயாக- உ. வே.

  29. எப்போதும் எல்லாப் பொருள்களிலும் தூய்மையாக ஒளிர்வது பற்றி, முதல்வனை விமலன் என்றார்;

  “ஞ்ஞானமாபாதி விமலம் ஹ்வதா ஸர்வவஸ்திஷூ” (5:16) என்று மிருகேந்திரம் கூறுதல் காண்க.

  30. வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினும், தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையன்”(திருவா. தெள்ளே.) என்ப.

  31. திரிதலின்றி- உ. வே.

  5.  செய்தியையுடையோன்- உ. வே.

  32. “குணங்கள் தாம் இல்லா இன்பமே” (கோயில்4) என்று திருவாசகமும்” ………….ஸூத்ருப்தம் நிர்குணம் சாந்தம் தத்வாதீதம்……..

  (7, 19) என்று சருவ ஞானோத்தராகமும் கூறுதல் காண்க.

  33. “இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது”(ஞான. 329.4) என்று சான்றோர் கூறுப. செப்பறையேட்டில் ஈண்டுக் காணப்படும் பதவுரையில், “இலன் உரு” என்றே பிரித்து நிறுத்தி “அருவாயிருப்போன்” என்று உரைகூறப்பட்டுள்ளது.

  34. அறிவு என்றது ஈண்டு அறியப்படும் பொருண்மேனின்றது. இறைவனுக்குத் தெரியாமே ஒரு பொருளும் இல்லை யென்பது கருத்து. அறியாப்பொருளை அறிதற்கண் அனைவர்க்கும் விருப்ப முண்டாதல் இயல்பாதல்பற்றி, அறிதலில் விருப்பும் என்று உரை கூறப்பட்டுள்ளது.

  35. அறியாமை யென்பதற்கு அறிதலாகிய தொழிலைச் செய்யாமை என்று பொருள் கொள்க; “கல்லாமை” என்பதற்குப் பரிமேலழகர் உரைக்கும் உரை காண்க.

  36. அந்தக்கரணங்களையுடையார்- உ.வே.

  37. வேண்டுமதில்லை -உ.வே.

  12.ஒழிந்திருப்பானுமல்லன்- உ. வே. இக்கருத்து, “ஒன்று நீயல்லை அன்றி யொன்றில்லை யாருன்னை அறிய கிற்பாரே” (கோயில் 7) என்ற திருவாசகத்தை யுட்கொண்டு நிற்கிறது. “வேறாயுடனானானிடம் வீழிம்மிழலையே” என்பர் ஞானசம்பந்தர்.

  இதனைத் தேவிகலோதத்ரம் “த்ருதானி சாவரம் ஸ்திர ஜங்கமானி யாவந்தி சான்யான்ய ஹமேவதாநி” என்றும், “விச்வாத்மகம் ஸததமனந்தமீசம்” என்றும் கூறுதலாலும் அறிக.

  1.மனத்தின் சங்கற்பத்தால் விளைவனவாதலின், ஈடணைகளைச் சங்கற்ப மென்றொழிந்தார்.

  2.  சகலமெனவே கலையும் கேவலமும் அடங்குமாயினும், அவத்தையாம் இயைபு தோன்றவும்; கேவலம் தன்பால் அடங்கவும் சகலம் என்றும், தூலசூக்கும தேகமெல்லா மடங்க, கலை யென்றும் பிரித்தோதினார்.

  3.  ஈடணாத்திரயங்களுக்குங் கண்டிக்கப்படுதலும் கண்டித்த பொருள்களிற் கூடாமையும் இவை தூரத்தனவாகக் கெடுத்துக்கொண்டிருப்போன்- உ. வே.

  4.  வாளாது அபாவன் என்ற வழி அந்துவித பாவனையும் பயனில் செயலாம் என்பதுபட்டுக் குற்றமாய் முடிதலின், விதியால் அபாவன் என்று சிறப்பித்தார். அத்துவித பாவனையின் நலத்தைச் சருவ ஞானோத்தரத்துப பரமாத்ம பிரகாணத்துட் காண்க.

  5.  அபாவனவனை யென்றுகொண்டு, “கரணவறிவாற் பாவிக்கப்படாதவனை யென்றும், பாவா

  பாவத்து என்பதற்குக் கருவிகளோடுகூடி நின்று இயற்றும் பாவனை சகல மாதலினாலும், கருவிகள் நீங்கி நின்று பாவிப்பது கேவல மாதலினாலும் இவ்வாறு பாவனைக் கெய்தாதவனைப் பாவனைக் குள்ளா

  யினானாகப் பாவிப்பது பயனில் செயலாக லானும் என்றும், உயர்வறு அபாவ மொழித்து என்பதற்கு இத்திறத்துத் தாழ்ந்த பாவனைகளை யொழித்து என்றும், அரும்பாவத்துற்றோன் என்பதற்கு, அநந்நியமாய்த் திருவருளினாற் பாவிப்போருடைய அரிதாகிய பாவனையிலே நின்றோனென்றும் ஏனாதிவாடி ஏடு கூறுகிறது.

  6.  பாவனை யாவது மனமுதலிய கருவிகொண்டு செய்யப்படுதலால் பாவிக்கப்படும் பொருள் அசத்தாதலின் பாவத்தை விலக்கினார். அருவாதலின், பாவனைக்கெட்டாதவன் என்று பாவிப்பது பயனில் செயலாம் என்பதுபற்றி, உயர்வறு பாவம் என்றார். “பாவிக்கின் மனாதிவேண்டும் பயனிலை கரணநீத்துப், பாவிப்பன் என்னிலென்ன பழுதுள, பாவகத்தால் , பாவிக்கவொண்ணானென்று பாவிப்பன் என்னின் நீயென்” (சிவப். 86) என்றார் பிறசான்றோரும்.

  7.  கரணத்துடன் அளவைகளாலே- உ. வே.

  8.  கரணாதீதமான அரூபவறிவாலே- உ. வே.

  9.  ஊனினுள் ளுயிரைவாட்டி யுணர்வினார்க் கெளியராகி, வானினுள் வானவர்க்கும் அறியலாகாத வஞ்சர், நானெனில் தானேயென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள், தேனுமின்னமுதுமானார்” (29;1) என்று திருநாவுக்கரசர் கூறுதல் காண்க.

  10. முதல்துணை நிமித்தமென்ற ஏது மூன்றனுள், தனக்கு உருவம் இன்மையின் முதலும் துணையும் இலவாதலின், நின்ற நிமித்தம் நோக்கிய வழி, தான் உலகுயிர்கட்கு நிமித்த காரணமாவதன்றித் தன்னை நியமிக்கும் நிமித்த காரண மில்லாமை பற்றி ஏது செற்றோன் என்றும் முக்காலமும் மாயாகாரிய மாதலின், அதற்கு அப்பாற்பட்ட தனக்கு அக்காலம் கீழ்ப்படுதலின், காலம் செற்றோன் என்றும் கூறினார். ஆகமங்கள் காலாதீதன் என்று கூறும். “நித்யம் காலானவச்சேதாத்” என்பது மிருகேந்திரம்; “கால மூன்றையுங் கடந்த கடவுள்” (திருவிடை. மும். 22;4) என்று பட்டினத்தடிகளும் கூறுவர்.

  11. வேண்டுதல் வேண்டாமையிலான்” என்றும், “பற்றற்றான்” (குறள்) என்றும் திருவள்ளுவர் கூறுவர். செம்பொருள் (குறள் 358) என்பதற்குப் பரிமேலழகர், “தோற்றக்கேடுக ளின்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னை ஒன்றுங் கலத்தலின்மையின் தூயதாய்த்தான் எல்லாவற்றையுங் கலந்துநிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருள் என்றார்” என்பதும், “கருவினாலன்றியே கருவெலா மாயவன், உருவினா லன்றியே யுருவு செய்தான்” (293.3) என்றும், “அவையவைசேர் பயனுறுவாய் அல்ல வுருவாய் நின்றான்” (129:7) என்றும் ஞானசம்பந்தரும் வேறு சான்றோர்களும் கூறுவனவும் ஒப்புநோக்கத் தக்கனவாம்.

  12. போகோன் என்பது தீண்டல் முதலியவற்றோடும் கூட்டப்பட்டது.

  13. ஞாயிற்றின்முன் தாமரை மலர்வது போல முதல்வன் சத்தி சங்கற்பத்தால் படைத்தல் முதலிய தொழில் நிகழ் தலால் அவன்பால் விகாரம் சிறிதும் உண்டாகாமையின் விகற்பம் மேவோன் என்றார்; மேலோன் என்னும் எதிர்மறைவினையின் ஆகாரம் செய்யுளின்கண் ஓகாரமாயிற்று.எல்லாவற்றிற்கும் ஆதாரமாகிய தனக்கு ஓர் ஆதாரம் வேறு இல்லான் என்பதை, தரிப்பது தவிர்த்தோன்” என்றார். தாயுமானார், ஆதாரவாதேய முழுது நீயாதலால் அகிலமீ தென்னையாட்டி யாடல் கண்டவனுநீ ஆடுகின்றவனுநீ” (சச்சி.10) என்பது காண்க.

  14. தன்னையொன்று தாங்கி நிற்பதொழிந்திருப்போன்- உ. வே.

  15. இவ்வாறெல்லாம் அனுபவமுடைய சான்றோர்கள் பலபடியாலும் உரைத்தவற்றை எடுத்தோதினார், முதல்வனைப் பாவனாதீதன் என்றும், மிக்க பாவனை படியாது (ஞானா. 68. 4.5.) என்றும் கூறுவதன் கருத்தை விளக்கி வற்புறுத்தற்கு.

  16. பாவிக்கப்படாத அபாவனென்றல் எற்றிற்கோ- உ. வே.

  17. பாவிக்கப்படானென்னும் வசனம் எத்தாலெனின்- உ. வே.

  18. அருவுருவங் கடந்து நிற்றலாலே- உ. வே.

  19. எனவே அவன் உயிர்களிடையே கலந்துநிற்கும் குறியை யுணர்ந்து அவ்வாறே தாமும் அவன் திருவருளிற் கலந்து நின்றவழிக் காணலாம் என்பதாம்; ஞானசம்பந்தரும், குறியாற் குறி கொண்டவர் போய்க் குறுகும், நெறியான்” (155.6) என்று அறிவுறுத்துமாறறிக.

  20. அத்துவித பாவனைதானும் அவன் திருவருளாலே பெற வேண்டுமேயன்றித் தாமே செய்து கோடற்கும் அமையாமையின், அபாவன் என்று அறைவு வீடா என்றார். “நின்வயின் நினைக்குமா நினைக்கப் பெறுதல், அனைத் தொன்றும், நீயே யருளல் வேண்டும்” (கோயில். நாள் 32.40-1) என்று பட்டினத்தடிகளும், “அவனருளாலே யவன்றாள் வணங்கி”(சிவபுரா. 18) என மணிவாசகரும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” என்று திருநாவுக்கரசரும் அறிவுறுத்துமாறு காண்க. இனிச் சிவாகமங்களும்.

  “உன்மனாந்தம் பரம் ஸூக்ஷ்மஸ்வயாவம் யாவயேத்ஸதா I

  ஸர்வேந்த்ரியமனோதீத மலக்ஷோபாவ வச்யதே II

  பாவேன பாவ்யபாவேன பாவம்க்ருத்வா நிராச்ரயம் I

  ஸர்வோபாதிவிநிர்முக்தம் பாவேன நிராச்ரயம்

  ஸர்வோபாதிவிநிர்முக்தம் பாவேன லயதேபரம் II என்று கூறுகின்றன.

  21. புரவாதெளினதற்- பா.வே. 6. எனைத்து மலர்த்தா- பா. வே. 7. கொண்டி- பா. வே.

  22. மென்றது கேட்டி- பா. வே

  23. கவவ- பா. வே.

  24. னல்லது- பா. வே.

  25. வருமாறாங்கில்- பா. வே.

  26. முதல்வன் வியாபகப் பொருளாதலின், அவன்பால் சமவேதமாய் ஒன்றியிருக்கும் சத்தியும் வியாபகமென்று எல்லா ஆகமங்களும் கூறுதலால், எங்கணும் நன்று நந்நும் எனின் என்றான்: “எத்திற நின்றா னீச னத்திற மவளும் நிற்பள்” (சிவ. சித்தி. 2.75) என்று சான்றோரும் கூறுப. சத்தி எங்கணும் வியாபகமென்பதனைப் பௌட்கரமும்

  “தறுமின் விஸ்பஷ்டசின்மாத்ரோ வ்யாபதத்வாதி தர்மவான் I

  அனன்யோ நின்யஸ்ச தக்சத்தே; ஸ்மவாயாத் சதீததிவ II

  (1.21) என்று கூறுவது காண்க.

  27. இது சில ஏடுகளில் இல்லை- உ. வே.

  28. இருவினை யொப்பும் மலபரிபாகமும் உண்டாயினல்லது சத்திநிபாதம் உண்டாகாதென்று நூல்கள் கூற உரவோர்க்கல்லதை பிறவாதெனின் என்பது மாண வனே ஆசங்கித்துக் கூறும் கூற்றென அறிக. “நாடும் வினை, எல்லையிரண்டு மிடையொப்பிற்- பல்பிறவி, அத்தமதி லன்றோ வளவென்று பார்த்திருந்து, சத்திபதிக்கும் தரம் போற்றி” (போற்றி. 58-9) என்பர் சான்றோர்.

  பௌட்கரமும்-

  “யதான்யத் தர்ம ஸர்வம்ச ஸமந்தஸ்ய வினாதினீ I

  ததாவிஜ்ஞான கைவல்யம் பும்ஸ: ஸ்யாத்தர்ம- நாகன: II

  தர்ம நாசாத் மாஸ்யாபி விபாதே ஸஹதாரிண I

  பதத்யுன்மிலின் சக்தி: ததனிக்ரஹரூபிணீ II

  (4;36-7) என்று கூறுகிறது.

  29. ஒழியாதிருக்குமல்லவோ என்று விண்ணப்பஞ்செய்ய- உ. வே.

  30. அத்தன்மைத்தாகிய கடா- உ. வே.

  31. இவ்வாறு இல்லாத கொள்கை யொன்றை உள்ளதாக மேற்கொண்டு வினாதல் வாதமுறை யன்மையின், அத்தன்மையாகவும் ஒரூகடா உண்டெனில் என்று உரை கூறப்பட்டது.

  32. இது கடாவன்றென மறுத்தவழி மாணாக்கற்கு அறிவு நூலாராய்ச்சிக்கண் ஊக்கம் குன்றுமென்றெண்ணி, அதனை உடன்பட்டு விடையிறுப்பார்போல, சிவசத்தியின் இயல்பைப் பதங்கன் கதிரையும் பங்கயத்தையும் உவமமாக நிறுத்தி விளக்குகின்றார்.

  33. ஈண்டுக் கூறப்படும் உவமமே முதல்வன் முத்தொழில் நிகழுமிடத்துத் தான் விகாரமின்றி யிருத்தற்குக் காட்டப்படுவது; “விகாரங்கள் மருவான் வானின், முந்திரவி யெதிர் முளரியலர்வுறு மொன்றலர் வான் முகையாமொன்றென்று லரு முறையினாமே” (சிவப். 17) என்று உமாபதி சிவனாரும், “பதங்கள் பல்கதிர் பரப்பி விசும்பினி, தியங்குங் காலை யெழுந்தினி தியற்றும், மன்னுயிர்த் தொடக்கம் மார்த்தாண்டற் கின்று” (ஞானா 64: 15-7) என இவ்வாசிரியரும் கூறுதல் காண்க.

  34. யலர்த்தாமை- உ.வே.

  35. சினம் மிக்க வழியே நடுவுநிலை திறம்புதற் கேதுவா மாதலின், உறுசினம் என்று சிறப்பித்தார்; கழிசினமே அரசியற்குக் கேடு தருமென்னுங் கருத்தாற் சான்றோரும் “சினனே காமங் கழிகண்ணோட்டம்” முதலியன “இவ்வுலகத்து அறந்தெரி திகிரிக்கு, வழியடை யாகுந்தீது” (பதிற். 22 : 1-5) என்று கூறுதல் காண்க. இதனை விளக்கி இப்பதிப்பாசிரியர் உரைத்த உரையை ஆண்டுக் காண்க.

  36. யாதேனும் கோபமுண்டாயிற் - உ. வே.

  37. சத்தியிருக்கும்படியை யறிவாயாயின்- உ. வே.

  38. இதனால் பக்குவமுடையார்க்கே சத்திபதிவுண்டாம் என்பது பெறப்படும். பக்குவமாவது இருவினையொப்பும் மலபரிபாகமும் உண்டாதல், இதனை முன்பே, “வல்வினை யெல்லை செல்லாக் காலத்து, ஒல்லென வொப்பவுயர் பெருஞ் சிவனது, சத்தி நிபாதந் தழைப்ப” (ஞானா.8) என்று கூறுதல் காண்க, வினையொத்த வழியும் பக்குவம் இன்றியமையாது என்றற்கே அற்றாக் கோடி யென மாட்டெறிந்தார் என அறிக. பௌட்கரமும்.

  ‘ஸதலாநாம்ச ஸர்வத்ர தர்மஸாம்யம்ந தாரணம் I

  கர்மணோப்யஸ்ய ஸாம்யேபி பக்வேததிரே; பிச II

  தத்ப்ரேத்ய வைச்வரீ சக்தி: உபஸர்பதி தச்சிதே II

  (4: 24, 25) என்று கூறுவது காண்க.

  39. சத்திநிபாதம் பிறந்தவழி ஆன்மாவுக்கு உலக வாழ்வில் வெறுப்பும், வீடுபேற்றின்கண் விருப்பும் உண்டாதலால், அவ்வான்மா வீடு பேற்றுக்குரிய ஞானமுணர்த்தும் ஆசிரியனை நாடும்; அக்காலை ஆசிரியன் இவ்வான்மாவின் நிலைமையை ஓர்ந்து ஞானம் நல்குவன் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

  40. இவ்வுரை சில ஏடுகளில் இல்லை.

  41. இவ்வுரை சில ஏடுகளில் இல்லை.

  42. “வீயாது, உடம்பொடு நின்றவுயிரு மில்லை, மடங்க லுண்மை மாயமோ வன்றே” (புறம் 363) என்றும், “அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி, வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட், போர்ப்புறு முரசங் கறங்க, ஆர்ப்பெழுந் தன்றால் விகம்பினானே” (புறம். 241) என்றும், “இச்சைமற் றாசிரமஞ்செற்றோன் (ஞானா. 68. 19) என்றும் வருவன காண்க.

  43. அவனைப் போனான் வந்தானென்று சொல்லுமாறு- உ. வே.

  44. அவிகாரியாகிய பரமசிவன்- உ. வே.

  45. சொல்லுந்தன்மை போலவும், சொல்லுகின்ற வசனம் போலவும்- உ. வே.

  46. “சத்திநிபாதம் என்னும் சொல்லியல்பு சத்தியினிது வீழ்ச்சியென்றவாறு. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்ற தோரிடைச் சொல். ஓர் அவைக் களத்தின் நடுவே ஒருகல் வந்து வீழ்ந்தால், அவ்வீழ்ச்சி அவ்வகைக்களத்துள்ளாரை ஆண்டுநின்றும் அகல்விக்கும். அதுபோலச் சத்திநிபாதம் நிகழ்ந்த மாத்திரையே, அஃது ஆன்மாவை மனைவி மக்கள் முதலிய உலகத் துழனியின் அச்சம் நிகழ்ந்து அவ்வுலக வாழ்க்கையினின்று வெரீஇப் போந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்வித்தலின், அவ்வொப்புமை தோன்றச் சத்திநிகழ்ச்சி என்னாது சத்திவீழ்ச்சி யென்றோதப்பட்டது” (சிவஞா. பா. 8.1) என்று சிவஞான முனிவர் ஓதுவர்.

  47. இவன் பக்குவத்துக்குப் பொருந்தின பரமசிவனுடைய- என்று உரை வேறுபாடொன்று அச்சுப்பிரதியிற் காணப்படுகிறது.

  48. இங்கே கூறப்படும் இக்கருத்தே,

  தஸ்யாம் பதிதமாத்ராயாம் மலஸ்யாதோ நியாமிகா I

  சக்திர் நிவர்த்ததே தஸ்யாம் நிவ்ருத்தாயாம் மாஹத்மன II

  வைராக்யம் ஜாயதே க்ஷிப்ரம் ஸம்ஸாராத் துகஸாகராத் II

  தித்ருக்ஷா ஜாயதே சம்போ: பாதபங்கஜயோ ரபி II

  கதா த்ரக்ஷ்யாமி தேவேகம் மோக்ஷோஹம் பந்தத: கதா II

  கோவா தர்சயிதா சம்யோ: இதி ஸஞ்ஜாயதே மதி: II

  (4. 38-40) என்று பௌட்கரம் கூறுகிறது.

  49. பொல்லாமையை யறிந்து பயமுடையனாய்ப் பிறவித்துக்கம் - உ. வே.

  50. சென்று சேரும்- உ. வே.

  51. ஆங்கு என்பதனை அசையாகக் கொண்டது அச்சுப்பிரதி.

  52. இதனையே பௌட்கரம்,

  யதான்யத் கர்ம ஸர்வம் ச ஸமம் தஸ்ய விநாசி நீ! I தாத விஜ்ஞனே கைவல்யம் பும்ஸ: ஸ்யாத் தர்ம நாசன: II (4.36) என்றும், கன்ம சமத்துவத்தினல்லது சத்திநிபாதம்

  வருதற்கில்லை யென்பதை உமாபதி சிவனாரும்,

  சக்திநிபாதஸ்ய கர்மநாசத்வே ஸ்ரீதிரப்யஸ் தி தத்ம்ரமாணம்

  (பௌட்க. பாடி 4; 36) என்றும் திருமூலனார், “இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி. குருவென வந்து குணம்பல நீக்கித் தரும்” (திருமந். 1527) என்றும் கூறுப.

  53. கேயல வென்னிற்- பா. வே.

  54. முரண்டக வியைவ- பா. வே.

  55. கொந்தழ லடூஉம்- பா. வே.

  56. வாதபச் சாயை- பா. வே.

  57. பாடுதரு பாயஞ் - பா. வே.

  58. வணை வகையே- பா. வே.

  59. ஞானான் முத்தியும் அஞ்ஞானாற் பந்தமுமாம் என்று செப்பறையேடு பாடவேறுபாடு காட்டுகிறது.

  60. அக்கினியும் போல- பா. வே.

  61. அஞ்ஞானமாவது பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருட்சியாதலாலும், அதனால் விளைவது பிறவி யாதலாலும், ஞானமின்மை பந்த காரணமாயிற்று; “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும், மருளானாம் மாணாப்பிறப்பு” (குறள். 351) என்ப.

  62. கரைகாண் கல்லாக் கற்பனை யளக்கர் என்று தொடங்கும் அகவல் (ஞானா. 46) அஞ்ஞானம் பந்தகாரண மென்றும் ஞானம் அஞ்ஞானத்தைக் கெடுத்து வீடு பேற்றுக்குக் காரணமாம் என்றும் கூறியது; அதனைச் சுட்டி ஈண்டு முன்பே அருளிச் செய்தாய் என்கின்றான். அருளினை யென்று இறந்த காலத்தாற் கூறியதனால் முன்பே என்றான்.

  63. இக்கருத்தையே ஞானசம்பந்தர், “ஊனத்திருணீங்கிட வேண்டில் ஞானப்பொருள் கொண்டடி பேணும்” (38.3) என்று கூறுமாற்றாலறிக.

  64. அசத்துக்கு என்றது வேற்றுமை மயக்கம்; தோன்றுவது ஞான மாதலின், அஃது ஈண்டு வருவிக்கப்

  பட்டது. அசத்தின்கண் ஞானத் தோற்றம் இல்லையென்பதை ஆசிரியர் மெய் கண்டாரும். “உணர்வ தசத்தாத லொன்றுணரா தொன்றை” (சிவ. போ. சூ. 6 அதி 2 வெண்.2) என்று வற்புறுத்துவது காண்க.

  65. அந்த ஞானம் இவன்பக்கல் இல்லையாயின் தோற்றாது- உ. வே.

  66. உணரப்படும் பொருள்வகையால் உணர்வு பலவாதல் பற்றி, உள எனப் பன்மையாற் கூறினார். தம்மையுணர் தலும் தம்மையுடைய தலைவனை யுணர்தலும் முதலிய பலதிறமாய்த் தோன்றுதலால் சான்றோர், “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்” (திரவா. 10.2) என்றும், “வினையா லசத்து விளைதலால் ஞானம், வினைதீரி னன்றி விளையா” (சிவ. போ. சூ. 12.4.2.) வாதலான் என்றும் உரைத்தருளுதல் காண்க.

  67. விருத்தமது என்பதில் அது என்பது சாத்தனவன் வந்தான் என்றாற் போலச் சுட்டு மாத்திரையாய் நின்றது. தருக்க கௌமுதி யும். வர்த்தமானோ விருத்த: ஸ்யாத் ஹேதி: மக்ஷ விபக்ஷயோ: என்பதனால் விருத்தம் முரண்பாடு என்னும் பொருளதாதல் காண்க. இஃது ஏதுப்போலி வகையுள் ஒன்றாகவும் காணப்படுகிறது; “அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்” (மணி. 29.192) என்று வருவது காண்க. விருத்தம் மாறுபாடு; பௌட்கரம் “வ்யாபதோ வ்யாபதோ தேசானவச்தின்னத்எத்வ ஹேதித:

  (VII .53) என்று கூறுவது காண்க.

  68. திருத்தக வென்றது எதிர்மறைக் குறிப்புமொழி; “அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்குமெனின்” (மணி. 29. 103) என்புழிப்போல.

  69. முரண்படுதலும் பிறபொருள்களோடு இயைந்து நிற்றலுமாகிய இருவகை இயல்புடைமையின் அறிவு அறியாமைகளை முரண்தரல் இயைவ இரண்டு என்றார், முரண்பாடுடைய இரண்டு ஒருவழி நில்லாமையை எடுத்துக்காட்டொன்றால் விளக்குவான் “ஆதபம் சாயை போல என்றும், சாயையும் இருள்வடிவிற்றாதலின் இருளைச் சாயையென்றும் கூறினான். “ஒளியிருள் ஒருங்குறாவே” (சிவப். 56) என்று சான்றோரும் கூறுதல் காண்க.

  70. இத்தொடர் சில ஏடுகளில் இல்லை. நிழலும் போலவாதலால்- உ. வே.

  71. தூளியாதல், வெந்து கரிந்து சாம்பராதல். தூளியாக தூளியாய்க் காற்றிற் பறக்குமாறு என்று பொருள் கொள்க.

  72. கோபமுள்ள அக்கினியானதுன- உ. வே.; கொந்தளிக்கும் அக்கினியானது- உ.வே.

  73. அடூஉம் செந்தழல் என்பதைச் செந்தழல் அடூஉம் எனமாற்றி ஆயினும் என்றொரு சொல்வருவித்து உரை கூறும் நயம் ஆராய்ந்து இன்புறத்தக்கது.

  74. அக்கினி வியாபித்திருந்தும்- உ. வே.

  75. கடைதலாகிய உபாயம், விறகினிடத்துள்ள தீயினை வெளிப்படுத்தி அதன் வன்மையும் ஒளியும் பிறவுமாகிய பெருமை பிறங்கச் செய்தல்பற்றி, பீடுதரு உபாயம் என்றார்; தீக்கடைகோலினால் கடையாவழி அதன்கண் மறைந் திருத்தலையும், கடைந்தவழித் தோன்றுதலையும் ஒளவையார், “இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன், கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன்றான் றோன்றும் காலே” (புறம் 315) என்று உரைக்குமாறறிக.

  76. “விறகிற் றீயினன் நன்பாலிற்படு நெய்போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்; உறவுக்கோல் நட்டுணர்வுக் கயிற்றினால், முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே” என்ற செம்மொழியில் ஞானப் பொருளாய முதல்வன் “இலேசாகத் தன்னைத் தோற்றுவியாத” தன்மை புலப்படுமாறு “முறுக வாங்கிக் கடைய” என்று நம் நாவரசப் பெருந்தகை உரைத்த சொல்லுறுதி ஈண்டு ஒப்புநோக்கி இன்புறத்தக்கது.

  77. உண்மை ஞானப்பொருளாகிய இறைவனை இன்றியமையாத உயிர்களென்றற்கு, ஆனா வுயிர் என்றார்; “ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல், ஊனத்திருளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள்போலும்” (69.3) என்று நம் ஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்து மாற்றால் இவ்வின்றியமையாமை துணியப்படும்.

  78. அளவிறந்த- உ. வே.

  79. ஈண்டுக்கூறிய கருத்தனைத்தும் “ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடமொன்று மேலிடிலொன், றொளிக்கு மெனினு மிருளடரா துள்ளுயிர்க்குயிராய்த், தெளிக்கு மறிவு திகழ்ந்து ளதேனும் திரிமலத்தே, குளிக்கு முயிரருள் கூடும்படிக் கொடி கட்டின னே” (1) என்ற கொடிக்கவிக் கண் அமைந்திருப்பது காண்க.

  80. ஞானப்பேற்றுக்குத் தீக்கையுபாயம் இன்றியமை யாமையை, “அடி சேர்ஞான மாசா னருளால் வந்திடுமற் றொன்றாலும் வாராதாகும்” (சிவ. சித்தி. 12.6) என்றும், தீ க்ஷைவ மோசயோத் பாசாத்

  சிவத்வம் சததாத்யணோ: (பௌட். பசு. 47) என்றும் இவ்வாறே சுவாயம்பு வாகமமும் பிறவும் கூறுதல் காண்க.

  81. விரிந்துயர்- பா. வே.

  82. எரியத னூங்கு - பா. வே.

  83. மூலப்பகுதியின் விருத்தியாகிய “முக்குணங்களும் விளங்குதலின்றித் தம்முட் சமமாய் நின்ற அவத்தையில் மூலப் பகுதியும், விளங்கித் தம்முள் சமமாய் நின்ற அவத்தையிற் குணதத்துவமும், அவை சமமாகாது தம்முண்மிக்கும் குறைந்தும் பரிணமித்துநின்ற அவத்தையிற் புத்தி தத்துவ முதலியனவு மாம்” “குண தத்துவத்தினின்றும் சாத்துவிகத்தான் மிக்கும், ஏனையிரண்டு குணங்களாற் குறைந்தும் பரிணமித்துத் தோன்றி” சவிகற்பக்காட்சிக்குக் கருவியாய் வினைகட்குப் பற்றுக்கோடாய் நிற்பது புத்தி தத்துவம்; ஆன்மா பொருளை நிச்சயித் தெழுதற்குக் கருவியாய், “புத்தியினின்றும் இரண்டு குணமுங் குறைந்து இராசத மிக்குந் தோன்றுவது ஆங்காரதத்துவம்; இவ்வாங்காரம் சாத்துவிகம் மிக்கு ஏனையிரண்டுங் குறைந்த கூற்றில் தைசதாங்காரம் எனக் கூறுபட்டு, மனமும் ஞானேந்திரியமும் தோற்றுவிக்கும். எனவே, மூலப் பகுதியினின்று குணமும், அதனினின்று புத்தியும், அதனினின்று ஆங்காரமும், அதனினின்று மனமும் தோன்றுமென்பது பெறப்படுதலின், அதுபற்றி, மனம் தோன்றுதற்கு முதல் மூலப்பகுதி யென்று விளங்குவது கண்டே, இரும்பிர தானத் தெழும் மனத் தத்துவம் என்றார்.

  84. மனத்தத்துவத்தால்- உ. வே.

  85. மூலப்பகுதி தனக்குமேற்பட்டவான சுத்த தத்துவத்துக்கும் அச்சுத்தத்தின் உச்சிக் கண்ண தாகிய சிவதத்துவத்துக்கும் செல்ல முடியாமைபற்றி, மிகுந்துயர் தத்துவ நெறியிற் செல்லா தொழிய என்றார். மூலப்பகுதியே செல்லமாட்டாதெனவே, அதன் காரியமாகிய மனமும் செல்லா தென்பது தானே பெறப்படுதலால், திகழ்தரு தியானம் கூடா தென்றார்.

  86. செல்லமாட்டாது, அப்படியாகலின்- உ. வே.

  87. கூடாமை யுண்டாம்- உ. வே.

  88. சூரியகாந்தக் கல் சூரியனைக் கண்டதும் நெருப்பைக் காலும் என்பதை, திருத்தக்கதேவரும், “சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃ, தாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம்…………மதன் கனன்றிட்டான்” (சீவக. 2208) என்று கூறுவர். “சூரியகாந்தக் கல்லினிடத்தே செய்ய சுடர் தோன்றி யிடச் சோதி தோன்றுமா போல், ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத், துரியனாம் சிவன் தோன்றும்” (சிவ. சித்தி. சூ. 8, 28) என்று அருணந்திசிவனார் கூறுதல் காண்க.

  89. அக்கல்லின் மேலே- உ. வே.

  90. கீழுள்ள தத்துவங்களிலும் பிரகாசமுடையன வாதலால் உ. வே.

  91. அஃதாவது, சூரியன் திருமுன் சூரியகாந்தக்கல் கனன்று ஒளிர்வது போல, மனத்தத்துவமும் சிவத்தின் திருமுன் ஞானவொளி விளங்கித் தோன்றுமாதலின், அவ்விளக்கம் பற்றித் தியானம் கைகூடும் என்றவாறு; “மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே, யூறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி யுள்ளவா காணவந்தருளாய்” (திருவா. 22. 1) என்றும் “மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடி, நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்” (திருமந். 1682) என்றும் சான்றோர் கூறுவர்.

  92. விந்துவை- உ. வே. விந்து ஞானங்களை- உ. வே.

  93. இம்முறைமையால் மனமே தியானத்துக்குக் கருவியென்பதும், அத்தியானத்தின் கண்ணே விந்துநாதங்களைக் கண்டு இன்புறுவது தியானப் பயன் என்பதும் பெற்றாம்; மனம் கருவியாதலை, மனமதுதானே நினையவல்லாருக் கினமெனக் கூறும்” (திருமந். 2609) என்பதனாலும், தியானப்பயனை “உண்ணாடியுள்ளேயொளிபெற நோக்கினாற், கண்ணாடி போலக் கலந்து நின்றானே” (திருமந். 603) என்பதனாலுமறிக. “விந்து என்றது சர்வான்மாக்களுக்கு முண்டாகிய தொழிலை எழுப்புலித்து நிற்கிற கிரியையெனவறிக” என்றும், “நாதமென்றது சருவான் மாக்களுக்கும் அறிவையெழுப்பு வித்து நிற்கிற ஞானம் என வறிக” (சிவப். 21 உரை) மதுரைச் சிவப்பிரகாசர் கூறுவர்.

  94. கழிவறு துன்பங்- பா. வே.

  95. ஓவா முயற்சித் தாவா- பா. வே.

  96. யின் சிலை- பா. வே.

  97. தளர்த லோம்பிய; தளர்த லோங்கிய- பா. வே.

  98. கடிபடு - பா. வே.

  99. தீதகல்- பா. வே.

  100. புறவங்கத்தில் அந்தரங்கம் வரிட்டமானாற் போலச் சதுர்ப் பாதங்களிலே வைத்து இது ஞானபாதமாதலால் அல்லாத பாதங்களினும் இதன் வரிட்டஞ் சாதித்தது- பா. வே.

  101. சரியை முதலியவற்றைச் செய்வோர் பல்வகை விரதங்களாலும் நியமங்களாலும் உண்டி சுருக்கல் புலன் களையடக்குதல் முதலியவற்றால் துன்பம் மிகவுறுதல் பற்றிக் கழி பெருந்துன்பம் கஞல என்றார்; தவஞ் செய்யுமிடத்துக் கழி பெருந்துன்ப முளவாதல் கொண்டே திருவள்ளுவரும் தவத்திற்கு உரு, “உற்ற நோய் நோன்றல்” (குறள். 261) என்று கூறினர். “நோற்பார் சிலர்” (குறள்.270) என்று அவர் கூறுவதும் இக்கருத்தையே குறிப்பது காண்க.

  102. ஒழியாத- உ. வே.

  103. சரியை கிரியை யோகம் என்ற மூன்றும் ஞானப் பேற்றுக்கு வாயிலாதலாலும், அந்த ஞானம் எய்துங்காறும் இம்மூன்றினும் முயறல் இடையறாது வேண்டப்படுவது பற்றி, செய்தி தாவாநோன்பினர் என்றார்; அருணந்தி சிவனார், “சரியை கிரியாயோகஞ் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்” (சிவ. சித். 8-110 என்றார். மெய்கண்டதேவர், “இறப்பில் தவத்தால் மருவுவனாம் ஞானத்தை வந்து” (சிவ. போ. 8, 1, 2) என்று உரைத்தருளுவது கருதற்பாற்று.

  104. ஜ்ஞான மாபாதி விமலம் ஸர்வதா ஸர்வவஸ்துஷூ” என்று கிரணாகமம் கூறுகிறது. சரியை முதலிய நான்கும் உபாயம் உண்மை என இருதிறமாய் இயலும். உபாயத்துள் சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றும்: கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என்றும்; யோகத்திற் சரியை, யோகத்திற் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் என்றும் ஞானத்திற் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத் தில் யோகம்; ஞானத்தின் ஞானம் என்றும் பதினாறு வகையுண்டு, இவற்றால் விளையும் பயன் கூறுவாராய்ச் சிவஞான முனிவர், உபாயச் சரியையிற் சரியை முதல் ஞானத்தில் ஞானமீறாகிய பதினாறுவகையினின்றும் பலவேறு வகைப்பட்டு விரியும் சிவபுண்ணியங்களுக்கெல்லாம் பயன் அவ்வவற்றிற் கேற்பக் காலாக் கினியுருத்திரர் முதல் குணத்துவ மத்தகத்திற் சீகண்ட புவனத்தின் கீழுள்ள உருத்திர ரீறான அவ்வப் புவன பதிக ளுலகத்திற் சாலோக முதலியவற்றைப் பெறுதலாம்” என்பர். (சிவ. பாடி. 8-1)

  105. ஞானம்- உ. வே.

  106. அம்மிக்கல்லைச் சுமந்தோர்க்கு; அம்மியில் கல்லைச் சுமந்து வந்தோர்க்கு- உ. வே.

  107. மாணிக்கமணி கல்லிடைப் பிறக்கும் என்பதைத் திருத்தக்க தேவரும் “கற்பா லுமிழ்ந்த மணியுங் கழுவாது விட்டால் நற்பாலழியும் (சீவக. 4) என்பர்.

  108. அழகுபெற்ற ஒளியான கல்லிடத்தே பிறந்ததாகிய மாணிக்கக் கல்லை- உ. வே.

  109. அழகிய பிரயோசனம்- உ. வே.

  110. மணியின் தோற்றத்துக்குக் காரணமாகிய கல்லிற்கு அம்மணியால் விளையும் பயனோடு இயைபுண்மையின், பொற்பொடு வருபலம் வரூஉம் என்றார்.

  111. பொருவிரி வன்சிலை யென்றது, சிலையின் வன்மை நிகரற்றது என அதன் மிகுதிதோன்ற நின்றது.

  112. உவம னில்லாத- உ. வே.

  113. உடைதல், அழிதற்பொருட்டு; “மன்னுடை வேலினாய்” (சீவக, 1200) என்புழி உடைதல் என்பதற்கு நச்சினார்க்கினியர் “அரசர் கெடுதற்குக் காரண மாகிய வேலினாய்” என்று உரை கூறுவது நோக்கத் தக்கது.

  114. கடி, விளக்கம்; “கடிமார்பன்” (சீவக. 2327) என்பதற்கு நச்சினார்க்கினியர் “பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம்” என்பது காண்க.

  115. குற்றமுடைய மணிகளைக் கொள்ளாராதலின், தீதறு திருமணி எனல் வேண்டிற்று. மணிகளின் குற்றவகையும் பிறவும் சிலப்பதிகார ஊர்காண் காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையிலும், திருவிளையாடல் கல்லாடம் முதலிய நூல்களிலும் காண்க.

  116. மிக்க இயல்பாகிய அழகையுடைத்தாய்- உ. வே.

  117. அகத்தின் மீக்கூர்ந்தவழிப் புறமாய் விடுதலின், புறத்தே உடல் பூரித்துத் தோன்றும் உவகையை, உவகை அகம்மீக்கூர்ந்தன்று என்றார்.

  118. குற்றமற்ற மணி வைத்துப் பதித்த மணிப் பூண் விலை வரம்பின்றியோடும் என்பவாகலின், திருந்திய கோடி எல்லை கூடாது என்றார்; பிறரும், “விலை வரம்பறியா அருவிலை நன்மணி” (பெருங் III - 17-122-3) என்பது காண்க.

  119. புறக்கரணத்தாலே சரியை கிரியை யோகமென்னும் நெறியிலே- உ. வே.

  120. ஈண்டுக் கூறப்படும் உண்மைச் சரியையாதி நெறியிலே நின்றோர். சீகண்ட புவனமுதற் சுத்த வித்தைக்குக் கீழுள்ள அவ்வப்புவன பதிகளிடையே சிவலோகத்துச் சாலோக முதலிய பத முத்திகளைப் பெறுவதற்குச் சமைந்தோர். உண்மைச் சரியையாதி நெறியாவன்: உண்மைச் சரியையாதி நெறியாவன: உண்மைச் சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையின் யோகம். சரியையின் ஞானம்; கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம்; யோகத்திற் சரியை, யோகத்திற்கிரியை, யோகத்தில் யோகம், யோகத்திவ் ஞானம் என்ற பன்னிரண்டுமாம். இவர்கள் பதமுத்திபெறினும் முடிவில் பிறந்த ஞானநெறி நின்று பரமுத்தி எய்துவராவாதலின். இவரினும், பர ஞானத்தாற்பரத்தைத் தரிசித்த ஞானவான்கள் பரமுத்திக்கே உரியராதல்பற்றி, அவர் பெறும்பயன் மிகுதியாதல் கொண்டு மைந்து அமல்பு எய்தும் என்றார். பதமுத்தி எய்தினோர்க்கு, மீட்டுந்தோற்றமுண்டு என்பதை “ஈசன் யோகக்கிரியா சரியையினில் நின்றோர், ஊனமிலா முத்திபதம் பெற்று உலகமெல்லாம் ஒடுங்கும் போது அரன்முன்நிலாது ஒழியின் உற்பவித்து, ஞானநெறி அடைந்தடைவர் சிவனை” (சிவசித். 8.25) என்று சான்றோர் உரைத்தல் காண்க.

  121. உண்மையுணர்ந்த ஞானவான்கள் பெறுவதான வலிமிடைதல் கூடின சத்தி அளவுபடுமதல்ல, காண் எ,று- உ. வே.

  122. அரசனோடு அமைச்சர் புரோகிதர் சூழ இருநது அகக்கருமம் ஆராயுங்கால் உடனிருக்கும் தானைத் தலைவர் போர் நிகழுங்காலத்து அரசற்கு அமைச்சராய் ஆவன கூறுமாற்றால் அவன்பால் நெருங்கிப் பயிலும் சிறப்புடையர்; புறத்தே பல்வகைப் படைகட்கும் தனித்தனித் தலைமை தாங்கும் சாமந்தர் அத்துணைச் சிறப்புறுவதிலர். இதுபற்றியே, அகத்துறைபவர், புறத்துறைபவரிள் போக மேவுதல் தாவார் என்றார். இன், உறழ்ச்சி. இஃது உலகியலில் வைத்துச் சிவானுபவத்துக்கு அந்தரங்கத்துச் சிவ வழிபாடு புரியும் ஞானவான்கள் சிறப்புரிமையுடையராதலை விளக்கியவாறாம்.

  123. இது சில ஏடுகளில் இல்லை.

  124. புறப்பட்டு ஒட்டுஞ் சாமந்தரில்?; புறத்தே உசாவும் மந்திரியினும்- உ. வே.

  125. அளவில்லை- உ. வே.

  126. ஒருவனும் ஒருத்தியும் அந்தரங்கத்திற் கூடிப்பெற்ற இன்பம் சொல்லிறந்து உள்ளத்துணர்வாய் நுகரப்படுமாறு காணப்படுதலால் அதனை இல்லை யென்று கூறலாகாமைபோல, ஞானவான்கள் அந்தரங்கத்தே “உன்னிய கருத்தவிழ உரை குழறி உடல் தளர்ந்து ஓய்ந்தயர்ந்து அவசமாகி,உணர்வரிய பேரின்ப அனுபூதி யுணர்விலே உணர்வ தனைச்” சொற்களாற் சொல்லப்படாமை பற்றி இல்லை யென்றல் கூடாதென்பது இதனால் விளக்கப்பட்டவாறு; ஆகவே, இவர் பெற்ற இன்பமே பேரின்பமாகிய. மோட்ச சித்தி என்பதும் பெறப்படும் இந்நிலையிலிருந்து தாம்பெற்ற இன்பத்தையே திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர், “ஊன்நயந்துருக உவகைகள் தருவார்” என்றும், (77.2) “சொற்றெரியாப் பொருள்” (267-10) என்றும், “வந்த வந்த வாய்மையால் உணர்ந்துரைக்கலாகுமே” (310-7) என்றும் ‘நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக் குணர்வினோடிருப்பர்” (நாவ. 45:7) என்றும் கூறுவனவற்றாலும், “மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல் லென்றாற் சொல்லுமா றெங்ஙனே’ (திருமந். 2944) என்றும், “அற்புதமாகி யனுபோகக் காமம்போற் கற்பனையின்றிக் கலந்து நின்றானே (திருமந். 2943) என்றும் அத்தன் அணைந்திட்டுச்… சொற்பதமானக் கலந்தமை எப்படி யப்படி என்னுமவ்வாறே, (திருமந். 2945) என்றும் கூறுமாற்றாலும் அறிக.

  127. அணைந்தோர் தன்மை- பா. வே.

  128. வறுபகை- பா.வே.

  129. யிடிக்கு- பா. வே.

  130. முதுதிரை- பா. வே.

  131. வித்திய- பா. வே.

  132. பசுபாசங்கள் நித்திய மானமையால் அபேதம் சாதித்தது- உ. வே.

  133. முற்றத்துறந்த முனிவரிடத்தும் ஒரோவழிச் சினம் தோன்றுவது உண்மையின், அதனை அறக்களைவது முத்திப்பேற்றுக்கு இன்றியமையாதென்றற்கு, சினஞ் செலச் சிதைத்து என்றார்; “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கண்மேயுங் காத்த லரிது” (குறள். 29) என்றும், சினம் கெட்டாலன்றி மெய்யுணர்வு பிறவா தென்றற்கு, “காமம் வெகுளி மயக்க மிவை மூன்றன் நாமங் கெடக் கெடும் நோய்” (குறள் 360) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

  134. கோபமாகிய குற்றத்தைக் கெடுத்து - உ. வே.

  135. மாணவன் ஞானம்பெற்று வீடு பெறுதற்பொருட்டு ஆசிரியன் செய்யும் ஒருவகைச் செய்கையேயாதலின், தீக்கையை வினை யென்றும், அவ்வினை ஏனை வினைகள் போலத் தன் பயனை நுகர்விக்கு முகத்தால் மேலும் வினைகளைச் செய்து பிறவிக்கு உட்படுத்தாது. உயிர் நுகர்தற்குரிய வினையனைத்தையும் வறுத்த வித்துப் போல் மேலைக்கு விளைவின்றிக் கெடச்செய்தலின், வல்வினை கெடுக்கும் நல்வினை யென்றும் சிறப்பித்தார். தீக்கை வினையைக் கெடுக்குமென்பதை, “கிரணாகமத்திலும் யாதோரு பிராரத்த கன்மத்தால் அநேகம் பிறவிகளில் ஆன்மாக்களால் சம்பாதிக்கப் பட்ட கன்மமும் வருங் கன்மமும் தீக்கையால் வறுக்கப் பட்டவித்துப் போலத் தடைசெய்யப்பட்டிருக்கிறதோ, அந்தப் பிரார்த்த கன்மம் போகத்தினால் நசிக்கிற தென்று கூறப்பட்டிருக்கின்றது” (தத்து 38. உரை) என்பதனாலறிக.

  136. “சுவாயம்பு ஆகமத்திலும் தீக்கையே பாச விமோசஞ் செய்து ஆன்மாவைச் சிவசம்பந்தமான முத்தியை

  யடையும் படி செய்கிறது எனக் கூறப்பட்டிருக்கின்றது” - தத்துவசங்கிரகம் (தமிழ் பக். 107).

  137. காமாதி ஆறு பகைகளையும் கெடுத்து- உ. வே.

  138. இக்கருத்தே, “அகமனர்ந்த அன்பினராய் அறுபகை செற்றைம் புலனும் அடக்கி ஞானம், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளுறையும் புராணர்” (ஞான. 132-6) என்றும், “மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ள, மறத்துறை பொறுத்தவரருட் கிழமை பெற்றோர், திறத்துள திறத்தினை” (ஞான 166-7) என்றும் வருவனவற்றினும் சிறந்து நிற்றல் காண்க.

  139. தெரிப்பை யுடையோர்க்கல்லது- உ. வே.

  140. “மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே” (சிவபு. 45) என்றும், “கேட்டாரு மறியாதான்”(திருச்சத. 28) எனவரும் திருவாசகங்களைக் காண்க.

  141. வாசாரகித மாகிய- உ. வே.

  142. இறைவன் திருவடி சேர்வோர் அனைவரும் பிறவித் துன்பத்துக் கஞ்சி அது கெட முயன்றோராதலின், மருள் கெடச் சேர்ந்தவர் என்றார்; அஞ்ஞானம் மருள் எனப்பட்டது.

  143. “கெட- இது நிகழா நிற்க இது நிகழ்ந்ததென்னும் பொருள்பட வந்தது” என்ற குறிப்பு ஒரு பிரதியில் காணப்படுகிறது.

  144. சிவத்துவம் என்றது ஈண்டுச் சிவானந்த ஞானவடிவம். திருவடி சேர்வோர் அனைவரும் அன்ன ராதலை, “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” (பெரிய பு. திருநா. 427) என்பதனாலறிக.

  145. காயல்- உப்பங்கழி. வெண்திரள்; உப்பு- வெள்ளுப்பு என்றும் வெண்டிரளுப்பு என்றும் சான்றோர் பயில வழங்கும் வழக்குப்பற்றி வெண்டிரள் என்றொழிந்தார். கடனீரைப் பாய்ச்சி வெயிலிற் புலர்த்து மாற்றால் விளைத்துக் கோடல்பற்றி உப்பினை, வித்தாது விளைத்த வெண்டிரள் எனச் சிறப்பித்தார். “உப்பளத்தடுத்த புற்பலாலங்கள், சடத்தவேனுங் கொடுத்துக்கொள்ளும்” (சங்கற்ப. சங்கிராந்த. மறுப்பு 27, 29) எனச் சான்றோர் கூறுதல் காண்க.

  146. வேறுபாடுண்டோ- உ. வே. வை. - வைக்கோல்

  147. துப்பு- பவனம். பவளம் கீழ்க்கடலிற் கிடைப்பது. தமிழ் நூல்கள் கூறுகின்றன. “குணகடல் துகிரும்” (பட்டி. 189) என்று சான்றோர் கூறுப.

  148. பவளம்படும் சமுத்திரத்தில்- உ. வே.

  149. கடலைச்சேர்ந்த நன்னீர் உப்பு நீராதலை இவர் கூறினாராக அருணந்தி சிவனாரும், “அமலன் அப்பணைந்த உப்பேபோல் அணைந்து (சிவ. சித். 11.12) என்பது காண்க.

  150. வேறுபாடுண்டோ- உ. வே.

  151. வேட்டுவாளிப் பூச்சியையே- உ. வே. வேட்டுவன் என்னும் குளவி ஒரு புழுவைக் கொணர்ந்து ஒரு கூட்டில் அடைத்து, அதனை எப்போதும் கொட்டிக் கொண்டே யிருக்குமென்றும், அதனால் அப்புழு அதனையே நினைந்திருந்து முடிவில் அக்குளவியாகவே மாறிவிடும் என்றும் கூறும் இதனை வட நூலார் பிரமரகீட நியாயம் என்பர். மெய்கண்ட தேவரும், இக்கருத்தை “வேட்டுவனா மப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக் கூட்டானே மண்போற் குளிர்ந்து”(சிவ. போ. சூ. 1.2;4) என்றும் அருணந்தி சிவனார், “மற்றோர் செந்துப் பண்டைய வுருவந்தானே வேட்டுவனாய்ப் பிறக்கும்” (சிவ. சித்.2:43) என்றும் கூறுவர். தம் கொள்கையைச் சாதித்தற்குச் சில சமயவாதிகளும் இதனையே எடுத்துக்காட்டாகக் கொண்டு, “முன்னோன் றனாது முதிரொளி ஞானம், அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்து, வண்டென வுயிரைக் கொண்டிடும் உயிரது, தன்னை நோக்கித் தானது வாகி ஐவகைத்தொழிலும் மெய்வகை யுணர்வும், பிரியாவாறு பெற்றுத், திரியாப் பெரியோர் திரட்சி சேர்ந்திடுமே” என்பர். (சங்கற்ப. சிவ. சம. சங்கற். 19.25).

  152. புழுவினின்றுந் தோன்றிய வேட்டுவற்கும் குளவியாகிய வேட்டுவற்கும் வேறுபாடு இல்லையாதலின், கவர்புக என்றார்: கவர்பு- ஐயுறல்; “சுட்டல் திரிதல் கவர் கோடல்” (மணி 27:22) என்று பிறரும் கூறுதல் காண்க.

  153. ஞானவான்கள் சிவமாந்தன்மை எய்தும் திறத்தை விளக்கற்கு, உப்பளத்துப்பட்டவை உப்பாதலும், கடல் சேர்ந்த நன்னீர் உவர் நீராதலும், புழு வேட்டுவனாதலுமாகிய மூன்று உவமைகளைக் கூறினார்; இதனால் தன் முதல் கெடாமையும் முற்றறிவுப் பேறும் ஞானவடி வுடையராதலும் மூன்றும் முறையே விளங்குதல் காண்க. உப்பளத்துப்பட்ட சிறு மணலும் துரும்பும் தம் இயல்பு. கெடாது வெண்டிரளுப்பாதல் போல, உயிர் சிவமாந்தன்மை எய்திய வழியும் தான் சத்தாய் நிற்பதும், நன்னீர் தன் தன்மை இழந்து கடலின் தன்மை பெறுதல்போல, உயிர் அறிவின் சிறுமை நீங்கிச் சிவத்தின் பேரறிவுபெறுதலும். புழுதன் வடிவு நீங்கி வேட்டுவனாம் உருப்பெறுதல் சிவானந்தம் துய்க்கும் ஞானவடிவு பெறுதலும் இவ்வுவமைகளால் உணரப்படும். இவ்வாறு கொள்ளாவழிச் சிவ சமவாதமாய் முடியும் என அறிக. முத்தி நிலைக்குச் சிவ சமவாதிகள் வேட்டுவனாம் புழுவை உவமை கூறுவர். “நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” (பெரிய. திருநாவுக் 427) என்றவிடத்து இருந்தார் என்பதனால் தன் முதலுண்மையும், சிவானந்த ஞானப்பேற்றால் பேரறிவுடைமையும், ஞானவடிவேயாகி என்றதனால் சிவாகார வடிவும் சான்றோர் குறிக்குமாறு காண்க. காதலிக்கப்பட்ட- உ. வே.

  154. அச்சிவமாந்தன்மை பெறுமதல்லது வேறில்லை, காண் - உ. வே.

  155. வெனை- பா. வே.

  156. கிறையின்றாயின்- பா. வே.

  157. தணிகிளர், தனி வளர்- பா. வே.

  158. பொற்றோட்- பா. வே.

  159. ஞானா 73. 7-8.

  160. மேலே கூறிய எடுத்துக்காட்டுக்களால் சாதித்துக் காட்டும் அளவை நெறியால் முத்தியில் ஆன்மாச் சிவமாந்தன்மையெய்தும் என்று சாதித்த துணிபொருளை ஈண்டுப் பன்னியபனுவல் என்றான்.

  161. சாத்தியம் குற்றமுடைத்தாயிருந்தது- உ. வே.

  162. ஓர் ஆன்மா முன்பே பதித்துவமுடைத்தாயினல்லது அசுத்தமான அவ்வான்மா சுத்தமான பதியாமென்னும் அது எக்காலத்தும் பொருந்தாது- உ. வே.

  163. ஒன்றாயிருப்பதொரு பொருள் தன்னிற் பிரிந்து மறுபடியும் கூடின் ஓன்றாமல்லது, ஒன்றினொன்று வேறாய் இரண்டாயிருப்பவை தம்மிற்கூடினும் ஒன்றாதல் இல்லை என்பது, ஆன்மாவும் சிவமும் ஒன்றாயிருந்து பின்பு ஆன்மாவும் சிவமுமெனப் பிரிந்து நின்று மறுபடியும் அப்பிரிவு நீங்கிக் கூடின் ஒன்றாதல் அமையும்; சிவனும் சீவனும் என இரண்டாய் அனாதியாய் இருப்பனவாதலின், இவை ஒன்றாதல் கூடாதே யென்பது தோன்ற நின்றது. சீவனும் சிவனும் வேறுபட்ட இரண்டு என்றற்கு, அசுத்த மான ஆன்மா என்றும், சுத்தனாகிய சிவன் என்றும் உரை கூறுவதாயிற்று. இது மாயாவாதத்தை உட்கொண்டு கூறியது. “ஒன்றிரண்டாகி யொன்றின் ஒருமையாம் இருமையாகி, ஒன்றிலொன்றழியும் ஒன்றாதென்னின் ஒன்றாகா தீயும், ஒன்றிரும்புழினன்றாம் உயிரினைந் தொழிலும் வேண்டும், ஒன்றி நின்றுணரு முண்மைக் குவமையாணவத்தோ டொன்றே” (87) என்றுசிவப் பிரகாசம் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது.

  164. இஃது அச்சுப்பிரதியில் இல்லை.

  165. சீவன் சிவனாகிய இரண்டும் ஒன்றாம் முறைமையை விளக்கு முகத்தால் தன் கருத்தைத் தெரிவிக்க முயலுகின்றானாகலின், அதற்கேற்ப ஒன்றாம் முறை இருவகைப்படும்; ஒன்று, பகத்துவம் கெட்டுப் பதியாதல்; மற்றொன்று , பதியாகிப் பசுத்துவம் கெடுதல் என வகுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் மேலே விளம்புகின்றான்.

  166. சால்பும் வியப்பும் இயல்புங் குன்றின், “மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல். ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை. எளிய என்னார் தொன்மருங்கறிநர்” (குறிஞ்சி. 15-18) என்று சான்றோரும் கெட்டது ஆதல் கூடாமையை விளக்குமாறு காண்க “கெட்டது அணைவின்றாம்” என்பது சிவஞானசித்தி

  167. சிவத்தையணைந்தொன்றாய் நின்றதுயிர் கெட்டென்னில் கெட்ட தணைவின்றாம்’ நின்றதேற் கேடில்லை அணைந்து கெட்டதென்னில், பொன்றினதேல் முத்தியினைப் பெற்றவரார் புகல் நீ, பொன்றுகையே முத்தியெனில் புருடன் நித்தனன்றாம், ஒன்றியிடும் நீரொடு நீர் சேர்ந்தாற் போல என்னில் ஒரு பொருளாம் அதிபதியோடுயிர் பொருள் ஒன்றன்றே” (சிவ சித்தி 11, 9) என்பர்.

  168. கெட்டபின்பு- உ. வே.

  169. பதித்துவமான பின்பு- உ. வே.

  170. பசுத்துவம் நீங்கலும் பதித்துவம் எய்தலும் ஒரு காலத்து உடனிகழ்ச்சி யென்பார் மொழிந்தவை யிரண்டும் ஓரமைத்தே என்றார்.

  171. “ஒரு முகூர்த்தத்திலே காண்” என்பது செப்பறை யேட்டு உரை வேறுபாடு

  172. பெரிய இருளை- உ. வே.

  173. அக்கினி விளக்கு- எ. வே.

  174. இக்கருத்தைச் சிவஞான முனிவர் “இருணீக்கமும் ஒளி விளக்கமும் உடனிகழ்ச்சியாமாறு போலப் பசுத்துவ நீக்கமும் சிவத்துவ விளக்கமும் இடையீடின்றி “உடனிகழ்வனவாம்” என்பதை மேற்கொண்டு, சிவத்துவ விளக்கமாவது இன்னதென்பது எய்த அருள் விளக்கம் என்றும் கூறுதல் காண்க.

  (சிவ. பாடி. சூ. 11); இவ்வுவமையின் சிறப்பை, “விளக்குப் புகவிருண் மாய்ந்தாங்கொருவன் தவத்தின்முன் னில்லாவாம் பாவம்” (நாலடி. 51) என்று பிறரும் கூறுதல் காண்க.

  175. ஈண்டுக் கூறப்படும் உவமையால் அருள் விளக்கத்தால் ஆன்மாச் சிவத்துவம் பெறும் திறம் விளக்கப் படுகின்றது.

  176. கானலில் நின்ற புன்னை தன் மணத்தால் கடற்புலவு அகற்றும் என்பதைச் சான்றோர் “புலவுற் றிரங்கி யதுநீங்கப் பொழிற்றண்டலையிற் புகுந்துதிர்ந்த, கலவைச் செம்மல் மணங்கமழத் திரையுலாவு கடற் சேர்ப்ப” (சிலப். காணல். 39) என்பதும், “கடலினது புலால் நாற்றமாகிய தீங்கினைப் பூக்களின் மணம் போக்கின” (கலி. நெய் 10 நச். உரை, என்பதும் காண்க.

  177. கழிவெளியில்- உ. வே.

  178. பாச நீக்கமும் அருள் விளக்கமும் உடனிகழப்பெற்ற முத்தர்களை ஈண்டு ஞானவான்கள் என்றும், அவர் வடிவு வேறுபடாதே சிவஞானச் செல்வராய்ச் சிவமாந்தன்மை எய்தும் திறத்தை அளத்திற் பட்ட பொற்கோட்டு உலவையின் வைத்தும் கூறுகின்றார். இனி, அருணந்திசிவனார், “இரும்பைக் காந்தம் வலித்தாற்போல் இயைந்து அங்கு உயிரை, எரி யிரும்பைச் செய்வதுபோல் இவனைத் தானாக்கி, அரும்பித்திந்தனத்தையனல் அழிப்பதுபோல் மலத்தை அறுத்த மலன் அப்பணைந்த உப்பேபோல் அணைந்து, விரும்பிப் பொன்னினைக் குளிகை யொளிப்பது போல் அடக்கி மேளித்துத் தானெல்லாம் வேதிப்பானாகிக், கரும்பைத் தேனைப் பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியை யொத்திருப்பது அந்த முத்தியினிற் கலந்தே” (சிவ. சித். 11-12) என்று கூறுவது காண்க.

  179. துந்தியேறு முறைமை- பா. வே.

  180. பற்று மற்றறுத் ததினூஉங் குற்ற- பா. வே.

  181. செய்கை செய்தல்- பா. வே.

  182. ஞான 74: 11-12

  183. ‘இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடில்லார் பிறப்பிலாப் பெருமானார்” (ஞானசம் 322.7) என்றும். “வான்கெட்டு மாருத மாய்ந்தழனீர் மண்கெடினும். தான் கெட்ட லன்றிச் சலிப்பறியாத் தன்மையன்” (திருவா. தெள்ளே. 17) என்றும் சான்றோர் கூறுதலின், ஈறோடு இயையா இறைவற்கு என்றார்.

  184. அனாதியா யென்னும் இது சில ஏடுகளில் இல்லை.

  185. அத்துவா ஆறாவன: வன்னம், பதம், மந்திரம், கலை தத்துவம், புவனம் என்பனவாம். “இவை ஒரோ வொன்றாகக் கழித்துக் கொண்டு சிவபதத்திற் சேறற்கு வழி போறலின் அத்துவா எனப்பட்டன” வென்றும். “அத்துவாவெனினும் வழியெனினும் ஒக்கும்” என்றும் சிவஞான முனிவர் கூறுவர் (சிவ பாடி. 2-3) பசுத்துவம் எய்திய ஆன்மா, அதுநீங்கிச் சிவபதம் எய்துதற்கு அவை வழியாதலின், எஞ்ஞா என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்கும்செம் பொருளாகிய முதல்வற்கு இவை வேண்டாமையின் இறைவற்கு ஆறாக்கூறிய அத்துவா இயைாய என்றார். ஆறாக் கூறிய அத்துவா என்னும் இஃது, இரட்டுற மொழிதலால், ஆன்மாப் பசுத்துவம்நீங்கிச் சிவத்துவம் எய்துதற்கு வழியாகக் கூறிய அத்துவா என்று பொருள் தந்து நிற்குமாறுங் காண்க.

  186. சம்பிரதாயம்- தீக்கை; “வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்” (ஞானா 8:36) என்று முன்னரும் கூறினார்.

  187. பெறப்படுவது முத்தியாதலின் செயப்படுபொருள் அவாய்நிலையாற் கொள்ளப்பட்டது.

  188. திரோதகம்- மறைப்பு; “அது தான் ஞானதிரோதக மாய் மறைத்துக்கொடு நிற்றலான்” (சிவ. போ. 4:2) என்றாற் போல. திரோபவம்- உ. வே.

  189. கூடுந்திறத்தை அகோரசிவாசாரியார், “எவ்வாறு உலகிலுள்ள வழிகளுள் முறையே மனிதனானவன் ஒரு காலடியால் வரையப்பட்ட இடத்தை விட்டு மறு காலடியால் வரையப்பட்ட இடத்தை அடைந்து, இவ்வாறே மேலுஞ் சென்று கிராமத்தையடைகின்றானோ அவ்வாறே அசுத்த விடயங்களான கலை தத்துவம் புவனம் வன்னம் பதம் மந்திரம் என்னும் இவற்றில் கன்மத்தின் பயனை அனுபவத்திற்காகவும், சுத்த விடயங்களான கலை முதுலியவற்றில் சருவஞ்ஞத் தன்மை முதலியவற்றை அடைவதற்காகவும் தீக்கையில் இவற்றிற்கு விசேடமான சேர்க்கை செய்யப்படுகின்றது” (இரத். 88. உரை) என்று உரைக்கின்றார்,

  190. காசினியாதி தத்துவம் வினைப்பயனை நுகர்ந்து கழித்தற்கு உபகாரமாதலின், காசினியாதி ஆசில் தத்துவம் எனச் சிறப்பித்தார். முன்பு இக்காசினியாதி தத்துவப் படைப்பு ஆன்மாவின் பொருட்டே என்றது (ஞானா 12 6;8) கடைப்பிடிக்க. மிருகேந்திரமும் ‘கார்யம் க்ஷித்யாதி கர்த்தேச: தத்கர்துர் நோப புஜ்யதே! நஸ்வார்த்தமப்யதித் யாவாத் நாநர்த்யம் கர்த்ருகௌரவாத்!! பாரிசேஷ்யாத் பாரர்த்தம்தத் க்ஷேத்ரஜ்: ஸ பரஸ்தயோ:!!

  (6: 2-3) என்று கூறுவது காண்க.

  191. தத்துவம் புவனம் வன்னம் பதம் மந்திர மென்ற ஐந்தும் கலையில் ஒடுங்க, அக்கலை, நிவிர்த்தி பிரதிட்டை வித்தை சாந்தி சாந்தியதீதை என ஐவகைப்பட்டு நிற்கும்; நிற்குமிடத்து நிவர்த்தி கலையில் புவனம் நூற்றெட்டு, தத்துவம், புடவி, வன்னம் ஒன்று, பதம் இருபத்தெட்டு, மந்திரம் இரண்டு; பிரதிட்டா கலையில் புவனம் ஐம்பத்தாறு, தத்துவம் நில மொழிந்த பூதம் நான்கு முதலாக அவ்வியத்த மீறாக இருபத்வம் தொன்று, மந்திரம் இரண்டு; வித்தியா கலையில் தத்துவ்ம புருடன் அராகம் முதலிய ஏழு, புவனம் இருபத்தேழு, வன்னம் ஏழு பதம் இருபது, மந்திரம் இரண்டு; சாந்திகலையில் தத்துவம் சுத்த வித்தை ஈசுரம் சாதாக்கியமென்ற மூன்று, புவனம் பதினெட்டு வன்னம் மூன்று, பதம் பதினொன்று, மந்திரம் இரண்டு; சாந்தியதீத கலையில் தத்துவம் சக்தி சிவமென்ற இரண்டு, புவனம் பதினைந்து, வன்னம் பதினாறு, பதம் ஒன்று, மந்திரம் மூன்று. இவற்றின் விரிவைச் சிவஞானபாடிய (2:23)த்தும், இரத்தினத் திரயம், மிருகேந்திர அத்வப்பிர கரணத்தும், பௌட்கரபசு படலத்தும் கண்டு கொள்க. இவ்வாறு கூறிய கலை ஐந்தினும் ஆன்மா தேகமெடுத்து ஆங்காங்குள்ள புவனங்களில் போகம் புசித்ததாகப் பாவித்து முடிவில் சிவமாந்தன்மை எய்தும் நிலையினை அஃது எய்தியதாகப் பாவித்துச் செய்யும் கிரியைவகை தீக்கையாம் எனவறிக. இதன் இயல்பைச் சிவஞானசித்தி, சிவப்பிரகாசம் முதலிய நூல்களிற் காண்க.

  192. மேன்மேற் றத்துவத்தை யதிட்டியா நின்ற உவமனில்லாத சிவனையொக்க- உ.வே.

  193. ஈண்டுப் பாவனையாற் சிவமாக்கும் இயல்பை ஞானாவதி என்ப“ உய்யும் வகையுவந்து மனோபாவ கத்தான் மலங்கள் ஓட்டுவது ஞானவதி” யென்று சிவார்ச்சனா போதம் கூறுகிறது.

  194. செம்பிற களிம்பு போல உயிர்களைப் பற்றி “மோகஞ் செய்து ஆசை அனுபவத்தில்” தோய்ந்திடச் செய்யும் மலம், அச்செம்பு குளிகையால் பொன்னாகுமிடத்துக் களிம்பு நீங்குதல் போல, உயிர் சிவமாந்தன்மை எய்துமிடத்து மறைப்புச் சத்திநீங்கிக் கெடும் என்றும், செம்பைப் பொன்னாக்குவது போல்வது உயிரைச் சிவமாக்கம் தீக்கையாவது என்றும் கூறுவர்; அதனாற்றான், இவரும்சுற்பம் பூரி சந்திரம் பொருவல் எற்று அற்று இவனும் இறையுறல் என்றார். குளிகை செம்பிற் களிம்பை நீக்கிப் பொன்னாக்குதல் போல, இறைவன் மலம் அகற்றித் தானாக்கித் தன் மலரடிக் கீழ்வைப்பன் என்பது கருத்து.

  195. இவ்வுவமத்தால், தீக்கையின் சிறப்பை வலியுறுத்தினர், அடுத்து வரும் எடுத்துக்காட்டால், சிவமாந்தன்மை யெய்திய ஆன்மாவுக்கு மேலும் பிறவிக்கு ஏதுவாகிய மலகன்மங்களின் தொடர்பு கிடையா தென்பது வற்புறுத்தப்படுகிறது.

  196. வேற்று நிறம் பற்றிய புடவை அதன் மேலும் நிறம் பற்றாமை, “ஆகாதே யுண்டது நீலம் பிறிது” (பழமொழி. 168) என்று பிறரும், “நிலவரை நீல முண்டதும் வெள்ளை நிறமாமே” (ஞானசம் 98:5) என்று ஞானசம்பந்தரும் கூறுதல் காண்க.

  197. பெற்றவனும் சிவனும் அதிசயமான சருவ வியாபியா யிருக்கச் செய்தே- உ. வே.

  198. “முத்தான்மாக்கள் உலகிற்குக் கருத்தாக்களாக ஆகிறதில்லை; சிவனொருவனே உலகிற்குக் கருத்தாவாவான்” (இரத். 258) என்று சான்றோர் கூறுதலால், சருவ வியாபகமா யிருப்பினும் என்று உரை கூறினார்.

  199. அதிசயமாக என்பது முதல் மாத்திரம் என்பது வரை யுள்ள தொடர் சில ஏடுகவில் இல்லை.

  200. சிவதத்துவத்தை அதிட்டித்துக் கொண்டிருக்கும் சிவத்தின் தடத்த நிலை பதியென்றும், சொரூப நிலை சிவம் என்றும் கொண்டு சருவ ஞானோத்தராகமம், சிவத்தின் இயல்பைசிவோ வஸ்து பரஸ்தஸ்மாத் மந்ந்ராதீதோ நிரஞ்ஜன: நிராமயோ நிராதாரோ வர்ணரூப விவர்ஜித:

  (1, 45)என்று கூறுதல் காண்க.

  6. தீக்கடை கோலைக் கொண்டு கடையுமிடத்துக் கடையப் படும் இடத்தல்லது பிறவிடத்தில் தீப்பிறவாமையின், இதல்மே லல்லதை அங்கு எரிகாணாவாறும் என்றார். அதன் உண்மை வெளிப்பட்டு ஒளிருமாற்றா லறியப்படுவது பற்றி, காணாவாறு என்றதற்குப் “பிரகாசியாதவாறுபோல” என உரை கூறப்பட்டது. “யானை தந்தமுளிமர விறகிற், கானவர் பொத்திய ஞெலிதீ” (புறம் 247) என்பதனால், விறகிடத்தே தீக்கடைந்து பெறப்படுமாறு காண்க.

  7.  ஒரு நல்லவையின்கண் சான்றோர் பலர் கூடியிருப்பவும் அவருள்ளும் மிக்குற்ற குணங்களுட் சிறந்தோன் ஒருவனே தலைவனாதல் போல, முத்தான்மாக்கள் கூடியுள்ள முத்தி நிலையில் இறைவன் தலைவனாதல் துணியப்படும் என்றற்கு, குழுவின் உயர்ந்தோன் எனத்தகும் உரையினும் இயையும் என்றார். நல்லவைத்தலைவன்பால் நல்லோர் பலரிடத்தும் காணப்படாத தலைமைப் பண்பொன்று நின்று சிறந்து விளங்குவது போலச் சிவமாந்தன்மை எய்திய முத்தான்மாக்களின் வேறாய் முதல்வன் முதன்மையுற்றுளன் என்பதாம். முத்தி நிலையில் சிவத்துக்கும் சிவமாந்தன்மை எய்திய ஆன்மாவுக்கும் உள்ள வேறு பாட்டை அருணந்தி சிவனார். “உம்பர் பிரான் உற்பத்தியாதிகளுக்குரியன் உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே” (சிவ. சித் 11:10) என்று கூறுதல் காண்க.

  8.  இத்தீக்கை, “நிராதாரம் சாதாரமென்று இருவகைப்படும். அவற்றுள் நிராதாரமாவது விஞ்ஞானகலர் பிரளயாகலருக்குத் தீவிரம் தீவிரதாம் என்னும் இருவகைச் சத்திநிபாதத்தாற் பரமசிவன் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று செய்வதன்றித் தானே முன்னின்று செய்வது; சாதார நீக்வகயாவது சகலருக்கு நிலவுலகத்தில் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று நால்வகைச் சத்திநிபாதத்தாற் செய்வது. அது திருநோக்க முதற் பலவகைப்படும்; அவற்றுட் சிறந்தது ஒளத்திரி தீக்கை. அது சபீசம் நிர்ப்பீசமென்று இருவகைப்பட்டு சாதிகாரை நிரதிகாரை என்று இருவகைப்படும். அவற்றுள் சபீசமாவது சைவா சாரத்தின் வழுவா தொழுகும் ஆற்றலுடையோர்க்குச் சைவாதார கன்மத்தை நிறுத்தி மற்றவற்றைச் சுத்திசெய்வது. நிர்ப்பீச தீக்கையாவது சைவாசாரம் அனுட்டிக்கும் வலியில் லோர்க்குச் சைவாசார கன்மத்தையும் ஓமத்தாற் சுத்திசெய்யுந் தீக்கை, சபீசதீக்கைப் பேறுடையார் சாதகரும் ஆசிரியருமாய் நித்தியத்தும் நைமித்தி கத்தும் காமியத்தும அதிகாரிகளாவராதலின் அவ்வதிகாரத்தைப் பயக்கும் சபீசநிர்வாணமும் அதற்கு அங்கமாகச் செய்யப்படும் சமய விசேடங்களும் சாதிகாரை எனப்படும். நிர்ப்பீச நிர்வாணமுடையார்க்கும் ஏனைச் சமயவிசேட தீக்கையுடையார்க்கும் நித்தியமாத்திரத்தினன்றி நைமித்திகத்தும் காமியத் தும் அதிகாரம் இன்மையின் நிர்ப்பீச நிருவாணமும் ஏனைச்சமய விசேடங்களும்

  நிரதிகாரை எனப்படும். “சமயதீக்கை யாவது மண்டபபூசை செய்து விதிமுறையே மாணாக்கனை வழிபடுவித்துச் சம்பாத வோமத்தாற் சுத்திப்படுத்துவது.” “விசேட தீக்கை யாவது அவ்வாறு சமயதீக்கை செய்து குண்டத்தில் வாகீசவரனையும் வாகீசுவரியையும் ஆவாகித்து மாணாக்கன் ஆன்மாவை வாங்கி வாகீசுவரனால் வாகீசுவரி கருப்ப நாடியிற் செலுத்திக் கருப்பாதான முதலிய கிரி யைகளையும் மூன்று ஆகுதியின் நிரப்பிக் கருமுதிர்ந்து பயந்ததாகப்பாவித்துக்குண்டத்தினின்றும் ஆன்மாவை மீளவாங்கி மாணாக்கன் இதயத்தானத்திலே தாபித்து இவ்வாறு சிவபுத்திரனாகச் செய்வது” “நிர்வாண தீக்கை

  யாவது இவ்வாறு சமயம்விசேடம் இரண்டுஞ்செய் ஆன்மாக்கள் மூன்று திறத்தாற் செய்யுங் கன்மங்கட்கு இடமாகிய அறுவகை அத்துவாக்களின் தன்மைகளும் அவை ஒன்றினொன்று அடங்கும் முறைமையும் அறிந்து மந்திரமுதல் ஐந்தினையும் கலையைந்தினும் பகுத்தடக்கி நிவிர்த்தி முதலிய ஐந்தினையும் ஒவ்வொன்றாகச் சோதித்து அவற்றினின்றும் வாங்கிய மாணாக்கன் ஆன்மாவைப் பிராசாத நெறியானே பரமசிவத்தில் ஒடுக்கி, ஒடுங்கிய வழி, மாணிக்கத்தைச் சார்ந்த படிகவொளி போலத் தற்போதும் அடங்கிப் பரம சிவனுடைய அறுவகைக் குணங்களும் தன்குணமாகத் தன்மாட்டு மிக்குவிளங்கிச் சிவானந்தம் மேலிடும்படி ஓவ்வொரு குணங்களை மும்மூன்று ஆகுதியால் தோற்றுவித்து முப்பொருள்களின் பொது வியல்பு உணர்த்து முகத்தானே மலத்தைநீக்கி உண்மை ஞானம் விளங்கச் செய்வது” - சிவ. பாடியம் சிறப்பு நிவிர்த்தி முதலிய கலைகளில் வைத்து, அதன் கண்ணுள்ள புவனங்களிற் பிறந்து ஆண்டு நுகரக்கடவ போகங்களைப் புசித்ததாகப் பாவித்து, சாந்தியதீதை வரையிற் கொண்டு ஆன்மாவைத் தூய்மை செய்யும் நெறியை அத்துவா மேய மாநெறி என்று மறு படியும் கூறினார், வற்புறுத்தற் பொருட்டு.

  9.  அத்துவாவாகிப் பொருந்திய- உ. வே.

  10. அணைந்தோர் தன்மை- உ. வே.

  11. ஏனாதிவாடி ஏட்டிலும் செப்பறை ஏட்டிலும் இக்கட்டளைக் கலித்துறை காணப்படுகிறது.